Saturday 21 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 8

8. காதல் ஒரு கொடை

யசோதை செல்லும் முன்னர் நாச்சியார் யார் எனப் பார்க்கச் சென்றார். சுந்தரவேலனைப் பார்த்த கணம் அவருக்கு அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. நாச்சியாரை அங்கே சற்றும் எதிர்பார்க்காத சுந்தரவேலன் உடனடியாக சுதாரித்துக் கொண்டு நிலைமையை சாதாரண நிலைக்கு கொண்டு வர முயற்சிஸ் செய்தான்.

''அம்மா, எப்போ வந்தீங்க''

''வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுதுப்பா, உள்ளே வா''

''யசோதை இருக்காளா?''

சுந்தரவேலன் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே யசோதை அங்கு வந்து நின்றாள். முகம் சற்று வியர்த்து இருந்தது. இந்த உலகில் மனிதர்கள் தாங்கள் இயல்பாகச் செய்யும் விசயங்களைக் கூட இந்தச் சமூகத்தின் சொற்களுக்கு அச்சம் கொண்டு தாங்கள் தவறு இழைப்பது போல எண்ணிக் கொள்கின்றனர்.

எப்போது ஒன்றை நாம் பிறரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்கிறோமோ அப்போது நாம் தவறு செய்வது போலவே உணர்கிறோம். நமது விருப்பங்கள் பல இப்படிப்பட்ட ஒரு மறைப்பு தன்மை கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் செய்யும் இயல்பான விசயங்கள் நமக்கு அச்ச உணர்வை கொண்டு வந்து சேர்க்கின்றன.

வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது எனும் சொல் வழக்கு நாம் ஒன்றை அச்சத்தோடு அணுகும் போது அது காமம் ஒத்த நிகழ்வு போன்றே இருக்கிறது. பெரும்பாலும் காமம் குறித்த நிகழ்வுகளை நாம் மறைத்தே செய்ய முயல்கிறோம். காமுறுதல் என்பது இயல்பான நிகழ்வு. இதை ஆண்டாள் வெட்ட வெளிச்சமாகவே சொல்லி இருப்பாள். அப்படி சொன்னவள் மீதான சமூக கண்ணோட்டம் பல்வேறு நிலைகளை கொண்டு இருக்கிறது, அதனை பக்தி இலக்கியம் என்றும் காதல் பக்தி என பிரித்துக் கொள்கிறோம்.

எப்போது ஒரு சமூக அச்சம் தொற்றிக் கொள்ளுமோ அப்போது நமது வயிற்றுக்குச் செல்லும் இரத்தம் குறைந்து அந்த இரத்தம் திசுக்களுக்குச் சென்று ஒருவித படபடப்பை உண்டாக்கி பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடவென அடிப்பது போன்று அடித்துக் கொள்ளும். இப்படி திசுக்களுக்குச் செல்லும் இரத்தம் திசுக்களுக்கு நிறைய ஆக்சிஜன் தேவைப்படும் என இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கி அதற்கென சுரப்பிகள் அட்ரீனலின் எனப்படும் சுரப்பியை சுரக்கின்றன. இப்படியான பட்டாம்பூச்சி வயிற்றில் பறந்து கொள்வது என்பது ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நிகழ்வது இல்லை.

''வா வேலா'' சொற்கள் சற்று குழறியபடியே வந்து விழுந்தன. தனது ஆசைகளை எப்போதும் நிறைவேற்றித் தரும் நாச்சியார் அவளுக்குள் சிறிது தைரியத்தைத் தந்து கொண்டு இருந்தாள்.

சுந்தரவேலன் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.

''அத்தை, நானும் வேலனும் காதலிக்கிறோம். அப்பா அம்மா என்ன சொல்வாங்கனு தெரியலை, வேலனும் பயப்படுறான்''

நாச்சியார் என்ன ஏது எனக் கேட்கும் முன்னர் விசயத்தை அவருக்குச் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வம் யசோதைக்கு இருந்தது, பயம் வெளித்தெரியக்கூடாது என எண்ணி படபடவென சொல்லி முடித்தாள்.

நாச்சியார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

''நல்ல விசயம்தானே யசோ. நான் பெருமாள் மேல வைச்சிருக்கிற காதல் போல உன்னோடது ஒரு மானுடக் காதல். காதலிக்கிறது ஒரு கொடை. அன்பை பரிமாறுதல் போல பேரழகான விசயம் எதுவும் இல்லை யசோ. அதோட மாணிக்கவாசகர் ஒன்னும் இதுக்கு மறுப்பு சொல்லமாட்டாரே. என் அண்ணன், அண்ணிகிட்ட நான் பேசிக்கிறேன் அவங்க எதுக்கு மறுப்பு சொல்லப்போறாங்க. எதுக்கு தப்பு பண்றது போல நினைக்கிற''

''அதில்லைங்க அத்தை, ஊருல மத்தவங்களும் ஏத்துக்கிறனுமே, அதை நினைச்சி வீட்டுல மறுப்பு சொல்வாங்களோனு பயமா இருக்கு''

''பயப்படாதே யசோ, உன்னோட விருப்பத்தை நான் நிறைவேத்துறேன்''

இந்த உலகில் சாய்ந்து கொள்ள ஒரு தோள், நம்பிக்கை தளர்கின்ற போதெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் ஒரு உறவு என இதெல்லாம் அமைந்து விடுவது என்பது பெரும் வரம்.

சுந்தரவேலன் நாச்சியாரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினான். நம்மை புரிந்து கொள்ளும் நபர் நமக்கு எல்லாமும் ஆவது என்பதும் வரமே.

''நான் வந்த விசயமே, இந்த வாரம் புதன்கிழமை சாயந்திரம் அங்கங்கள் வளர்ச்சி குறித்த ஒரு நிகழ்வு பத்தி சொல்லி இருந்தேன் நீ எதுவும் முடிவு சொல்லாமயே இருந்த, அதுக்கு நீ வரியானு கேட்டுட்டு போக வந்தேன்''

சுந்தரவேலன் சொன்னதும் கட்டாயம் வரேன் என்றாள் யசோதை. நாச்சியார் ஆவலுடன் நானும் வரலாமா எனக் கேட்டு வைத்தார். மூவரும் அந்த நிகழ்வுக்குச் செல்வது குறித்து முடிவானது. பட்டாம்பூச்சி குறித்து நாச்சியார் சுந்தரவேலனுக்கும் சொல்லி வைத்தார்.

நமக்கு வியப்பு தரும் விசயங்களை இந்த உலகோடு பகிர்ந்து கொள்ளும் போது நமக்குள் ஒருவித மகிழ்ச்சி உண்டாகிறது. அதோடு வியப்பு தரும் விசயங்களை கேட்பதற்கென்றே சிலர் நமக்கு வாய்ப்பது எல்லாம் பேரின்பம்.

''நான் தங்கி இருக்க வீட்டுல உள்ளபொண்ணு வண்ணத்துப் பூச்சிக நிறைய வளர்க்கிறா''

நாச்சியாரின் உலகம் பட்டாம்பூச்சிகளால் வண்ணமயமாக நிறைக்கப்பட்டு கொண்டு இருந்தது.

(தொடரும்) 

No comments: