Sunday 8 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 2

2. பட்டாம்பூச்சி

உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை மாலை ஐந்தரைமணி வரை மூடி வைத்து விடுவார்கள். வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பூஜைகள் என ஆரம்பிப்பது என வழக்கம். இரவு எட்டு மணிக்கு எல்லாம் கோவில் நடை சாத்தப்பட்டு விடும்.

எல்லா நாட்கள் மாலையிலும் ஏதேனும் ஒரு உணவுப்பொருள் தயார் செய்து வருவோர் போவோர்க்கு எல்லாம் தருவது வழக்கம். சுதாமன் பட்டர் இதனை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என சொன்னார் ஆனால் அது சாத்தியப்படவே இல்லை. சனிக்கிழமை மட்டும் பொங்கல் சுண்டல் என நின்று போனது. பரந்தாமன் வந்த பிறகு இதை அறிந்து இருந்தான். பூங்கோதை வந்த பிறகுதான் தினமும் அன்னம் இடும் பணி தொடங்கியது. கிராமத்தில் இருந்து நாச்சியார் வந்து உதவி செய்து விட்டுப் போவார், பல சமயங்களில் பரந்தாமன் சமைப்பதும் உண்டு.

'சாமி கும்பிட வராங்களோ இல்லையோ, வயிறு நிறைய சாப்பிட்டுட்டுப்  போகட்டும்' என சுதாமன்  பட்டர் அடிக்கடி சொல்வது உண்டு. அன்னம் இடுதல் என்பது பெரிய சேவை. இதனால் சுற்றி இருக்கும் ஊரில் இருந்து பலர் மாலையில் வந்து போவார்கள்.

''கோதை நீ ஓய்வு எடுத்துக்கோ, நானே இன்னைக்கு அன்னம் தயார் பண்ணிருறேன்''

பரந்தாமன் நன்றாகச் சமைக்கக்கூடியவன். பெருமாளுக்கு நெய்வேத்யம் எல்லாம் அவனே தயார் செய்வான்.

''ஒன்னும் இல்லை, நானே செய்றேன்''

''வேணாம் கோதை, நீ சொன்னமாதிரி பிள்ளையா இருந்தா நல்லா இருப்பு கொள்ளட்டும்''

''கோதை''

நாச்சியார் வந்து இருந்தார். நாச்சியார்க்கு வயது அறுபது ஆகிறது. திருமணம் எதுவும் பண்ணாமல் பெருமாளே தன் வாழ்வு என இருந்து கொண்டவர். சில முடிவுகள் எதனால் எடுக்கப்படுகிறது என்பது அந்த முடிவுகளை எடுப்பவர் மட்டுமே மிகவும் தெளிவாகவோ அல்லது குழப்பமாகவோ அறிந்து வைத்துக் கொள்கிறார்கள். நாச்சியார்க்கு இந்த உலகம் குறித்த அறிவு என்பது நிறையவே உண்டு.

''வாங்கம்மா'' பரந்தாமன் வீட்டுக்குள் அவரை அழைத்து வந்தான். பூங்கோதையின் முகத்தைப் பார்த்தார் நாச்சியார்.

''என்னது முகத்தில மாத்தம் தெரியுது'' என்றவர் பூங்கோதையின் நாடி பிடித்து பார்த்துவிட்டு முகம் மலர்ச்சியுடன் சொன்னார்.

''நீ அம்மா ஆகப்போற கோதை''

பரந்தாமன் மனம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. பெருமாளே என வேண்டிக் கொண்டான். பூங்கோதையின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

''உனக்கு நான் துணையா இருக்கேன் கோதை, இந்த முறை நிச்சயம் நல்லபடியா நீ குழந்தை பெத்துருவ''

''எனக்காக வேண்டிக்கோங்கம்மா'' என பூங்கோதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. சில முறை இப்படி கருத்தரித்து கரு எதுவும் தங்காமல் போன துயரம் அனுபவம் கொண்டவள் பூங்கோதை. மருத்துவர்கள் உன் உடம்பு கருத்தரிச்சி அதை வைச்சிருக்க சக்தி இல்லை எனச் சொன்னது உண்டு.

''கவலைப்படாத கோதை'' என ஒரு தாயின் பரிவோடு சொன்னார் நாச்சியார்.

அப்போது ஒரு பட்டாம்பூச்சி பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. நாச்சியார் மெதுவாக புன்னகை புரிந்தார்.

''பட்டாம்பூச்சி பத்தி ஒரு சொல்வழக்கு உண்டு கோதை. மகிழ்ச்சின்றது ஒரு பட்டாம்பூச்சி போல, அதை யாரும் விரட்டிப் பிடிக்க போனா கையில் அகப்படாமல் பறந்து போகும். அதே வேளையில் நாம பேசாம அது பறப்பது இருப்பதுனு பார்த்துட்டு இருந்தா நம்மேல வந்து தானா உட்காரும், அப்படித்தான் இப்போ உன்மேல உட்கார்ந்து இருக்கு, பட்டாம்பூச்சியும், மகிழ்ச்சியும்''

பட்டாம்பூச்சி சிலமுறை பூங்கோதையை சுற்றி வலம் வந்துவிட்டு பறந்து போனது. மனிதர்களோடு இந்த பறவைகள், பூச்சிகள் இனம் எல்லாம் ஒருவித பரிவோடுதான் இருக்கின்றன.

காலம் கடந்து கொண்டு இருந்தது. பூங்கோதையின் மீது அதிக கவனமும் அக்கறையும் கொண்டான் பரந்தாமன். நாச்சியார் துணைக்கு வந்து போனார். இத்தனை வருடங்கள் காத்து இருந்தாலும் தான் தாயாகப்போகும் நிம்மதி பூங்கோதையின் மனம் எல்லாம் நிறைந்து இருந்தது.

எட்டாவது மாதம் ஆகி இருந்தது. ஒரு நாள் பட்டாம்பூச்சி பத்தி ஒரு கதை சொல்றேன் என்றார் நாச்சியார்.

''பட்டாம்பூச்சி பத்தி எதுக்கும்மா'' என்றார் பூங்கோதை.

''ஆண்டாளோட இடது தோளில் இருக்கும் கிளி, மீனாட்சியின் வலது தோளில் இருக்கும் கிளி பத்தி உனக்குத் தெரியுமா கோதை, அது போல உன் இடது தோளில் வந்து உட்கார்ந்துட்டுப் போச்சே பட்டாம்பூச்சி, நீ எத்தனை வருசம் இந்த ஊர்ல இருக்க என்னைக்காச்சும் உன் மேல பட்டாம்பூச்சி உட்கார்ந்துட்டு போயிருக்கா, நானும் இந்த ஊருல அறுபது வருசமா இருக்கேன், என் மேலே எப்பவாச்சும், இல்லையே''

''கிளி கதை என்னம்மா''

''பட்டாம்பூச்சி கதை சொல்றேன், கேளு''

''எங்கே இதை எல்லாம் படிப்பீங்க''

''பெருமாள்தான் என்னோட அறிவு எல்லாம், அவனோட படைப்புகளை பத்தி தெரிஞ்சிக்கிறது எல்லாம் பேரின்பம் கோதை''

அப்போது ஒரு பட்டாம்பூச்சி பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. பூங்கோதையின் உடல் சிலிர்த்தது.

(தொடரும்)

No comments: