Saturday 14 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 3

3. நாராயணி

நாச்சியார். வசுதேவனின் தங்கை. பெருமாள்பட்டியில் இருந்து முதல் பட்டதாரியாக விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். வசுதேவன் தனக்குப் படிப்பு ஏறவில்லை என விவசாயம் மட்டுமே தனக்குப் போதும் என இருந்து கொண்டார். வசுதேவனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதே தனது பெற்றோர்களை இழந்தார். நாச்சியாருக்கு எல்லாமே வசுதேவன் என ஆனது. அந்த ஊரில் வசுதேவனின் தாத்தாவின் தாத்தா கட்டியதுதான் பெருமாள் கோவில். இப்பிணைப்பின் காரணமாகவோ என்னவோ நாச்சியாருக்கு பெருமாள் மீது நிறைய பிடித்தம் ஆனது.

நாச்சியார் தான் படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என பாப்பநாயக்கன்பட்டியில் சென்று பள்ளியில் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது வழக்கம். அதோடு பெருமாள்பட்டியில் உள்ள பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித்தருவதும் உண்டு. இதற்கு எல்லாம் பணமாகப் பெற்றுக் கொள்ளக்கூடாது என ஒரு சேவையாகவே செய்து வந்தார். அதைத் தவிர்த்த நேரங்களில் எல்லாம் விவசாயம், பெருமாள்தான் அவரது கனவும், வாழ்வும். இப்படிப்பட்ட சேவை மனமோ என்னவோ திருமண வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நாச்சியாரின் மனம் ஈடுபடவே இல்லை.

வசுதேவன் பல வருடங்கள் காத்து இருந்து, தங்கையின் மனம் மாறாது என அறிந்த பிறகு தான் ஒரு திருமணம் பண்ணிக்கொண்டார். மணப்பெண் கோமதி உள்ளூர் மற்றும் அதிகம் படிக்கவில்லை என்பதாலும், நாச்சியார் நல்ல பழக்கம் என்பதாலும் நாச்சியார் அந்த வீட்டின் இளவரசியாகவும் பின்னர் மகாராணியாகவும் வலம் வந்தார், வருகிறார். வசுதேவனுக்கு 23 வயதில் யசோதை எனும் ஒரு பெண் பிள்ளை மட்டுமே. படிப்பில், விளையாட்டில் மிகவும் சுட்டி. யசோதை மதுரை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவப் படிப்புதனை முடித்து இருந்தார். யசோதைக்கு பாப்பநாயக்கன்பட்டி அறிவியல் வாத்தியார் மாணிக்கவாசகரின் மகன் சுந்தரவேலன் மீதான காதல் பாப்பநாயக்கன்பட்டி பள்ளியில் மலர்ந்த ஒன்று அது மதுரை மருத்துவ கல்லூரி வரை வளர்ந்து இருந்தது. இவர்களின் காதல் குறித்து வசுதேவனும் அறிந்தது இல்லை, மாணிக்கவாசகரும் அறிந்தது இல்லை. தனது காதல் நிறைவேற தனது அத்தை நாச்சியாரை நிறையவே நம்பி இருந்தார் யசோதை.

தனது இடது தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சியை கூர்ந்து கவனித்தாள் பூங்கோதை. அது பூங்கோதையைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தது. அதனுடைய வண்ணம் பேரழகாக இருந்தது. இந்த உலகில் எதையும் எட்டி நின்று பார்த்துக் கொண்டால் மட்டுமே பேரழகாக தெரியும், அருகில் சென்றால் பேரழகு மறைந்து போகும் எனும் ஒரு சிறு வழக்கம் உண்டு, ஆனால் பேரின்பம் கொண்ட மனதுக்கு தொலைவிலும் சரி, அருகிலும் சரி பேரழகாக மட்டுமே தெரியும்.

''கோதை, இந்த பட்டாம்பூச்சி இப்போ எதுக்கு வந்து உன்மேல உட்கார்ந்து இருக்கு, நான் சொல்ற கதையை கேட்கவா'' எனச் சிரித்தார் நாச்சியார்.

''தெரியலைம்மா, கதை கேட்கனும்னு வந்து இருக்குமோ, கதையைச் சொல்லுங்கம்மா''

பட்டாம்பூச்சி பறந்து போய்விடக்கூடாது என ஆடாமல், அசையாமல் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. இந்த உலகில் நடனம் என ஆடுவதற்கு நடராசர் பெரும் பெயர் பெற்றவர். ஆனால் அவரே கயிலையில் இருந்து வந்து கண்ணனின் நடனம் காண வந்ததாக பேரழகு மிக்க கற்பனை. அந்தளவுக்கு அருமையான நடனம் ஆடும் வல்லமை கண்ணனுக்கு உண்டு, அவன் ஆடி வந்தால் இந்த உலகம் எல்லாம் ஆடும் எனவே கண்ணனை ஆடாமல், அசங்காமல் வா கண்ணா என அவன் மீதான காதலை வெளிப்படுத்தும் கவித்துவம் பேரழகு. அதே சூழலை பூங்கோதை பட்டாம்பூச்சிக்காக செய்து கொண்டு இருந்தாள்.

''இந்த பட்டாம்பூச்சி உருமாற்றம்தனை கொள்ள பல வருடங்கள் எடுத்துக்கிறது இல்லை. இந்த உலகில் உள்ள உயிரினம் எல்லாம் வெவ்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தவை என்பதற்கு இந்த பட்டாம்பூச்சி எடுத்துக்காட்டு. டைனோசர் காலத்து பட்டாம்பூச்சி, அப்போ உண்டான வெகு மோசமான கால சூழலில் டைனோசர் அழிந்து போனாலும் அழியாம இருந்து கொண்டது இந்த பட்டாம்பூச்சி''

நாச்சியார் சொன்ன விசயத்தைக் கேட்ட பூங்கோதை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

''இத்தனை வருசமாகவா இருக்கு இந்த பட்டாம்பூச்சி''

''ஆமா கோதை, பட்டாம்பூச்சிகள் எல்லாம் பூக்கள் உள்ள தாவரங்கள் வரும் முன்னமே இந்த உலகில் வந்த ஒன்று. நீ கவனிச்சிப் பார்த்தா நல்ல இலைகளைத் தேடித் தேடிப் போய் முட்டை இடும். அந்த முட்டையில் இருந்து வெளி வரும் இலார்வா, அதன் பின்னான பூச்சி எல்லாம் இலையை மட்டுமே உணவாகக் கொள்ளும். அதற்குப் பிறகு பட்டாம்பூச்சி உருவமாற்றம்தான் பூக்களில் போய் உணவு கொள்ளும் வழியை கற்றுத் தந்தது''

நாச்சியார் சொன்னதும் பட்டாம்பூச்சி சட்டென பூங்கோதையின் இடது தோளில் இருந்து பறந்து போனது. தன்னை கொஞ்சம் அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டாள் பூங்கோதை. அடுத்து சில நிமிடங்களில் நிறைய பட்டாம்பூச்சிகள் அந்த அறையை பேரழகாக மாற்றிக் கொண்டு இருந்தது.

''உங்க கதையைக் கேட்க எல்லோரையும் கூட்டி வந்து இருக்கும்போலம்மா'' என்றாள் பூங்கோதை.

''கோதை, எனக்கு நிறைய ஆச்சரியமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியலை, உனக்குப் பெண் குழந்தை பிறந்தா என்ன பெரு வைப்ப கோதை''

நாச்சியார் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அதே பட்டாம்பூச்சி மட்டும் பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. ஓரிடத்தில் அமராமல் பல பட்டாம்பூச்சிகள் அந்த அறையில் பறந்து கொண்டு இருந்தன.

நாச்சியார் தான் பட்டாம்பூச்சிகள் பற்றி மேலும் சொல்வதா, வேண்டாமா என யோசனையில் மூழ்கினார்.

''நாராயணி'' என்றாள் பூங்கோதை.

(தொடரும்)

No comments: