Friday 27 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11

11. உயிர்களின் பேரன்பு

நாச்சியார், யசோதையிடம் பெரியவர்கள் பேசி முடிக்கும்வரை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார். பொதுவாகவே பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கும் அளவிற்கு இப்போதைய இளம் வயதுக்காரர்களுக்கு பொறுமை இல்லை, ஆனால் அறிவு நிறைய இருக்கிறதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.

''கவலைப்படாதீங்க அத்தை, அதெல்லாம் கவனமா இருப்பேன்''

யசோதையின் உறுதியாகத்தான் தென்பட்டாள். நாச்சியார் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. உறவுகளை உடைத்து தனக்கென ஒரு வாழ்வு வாழ்வது என்பது இப்போதெல்லாம் எளிதாக நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.

''யசோ, பாமாவை ஒரு எட்டுப் பார்த்துட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கு, நீ என்கூட வர முடியுமா''

''அவ வீட்டில இருக்காளோ என்னவோ, என்னங்க அத்தை, பாமா மேல இத்தனை கரிசனம்''

''பேசின அந்த கொஞ்ச நேரத்தில மனசுக்கு நெருக்கமா உணர வைச்சிட்டா, விவசாயப் படிப்புதான் படிக்கிறா அவளுக்கு நம்ம ஊரு பிடிச்சி நம்ம ஊரிலேயே இருந்துட்டா விவசாயம் சம்பந்தமா நிறைய பண்ணலாம் அவ மனசுல என்ன இருக்கோ''

''அதை நீங்க கேட்கலையா அத்தை''

''உடனே எப்படி கேட்க முடியும், பட்டாம்பூச்சி பத்தி பேசவே சரியாப் போச்சு, அப்புறம் யோசிச்சிப் பார்க்கிறப்ப இப்படியெல்லாம் தோனுது''

''உங்களுக்குப் பையன் இருந்தா இந்நேரம் பாமாவே உங்க மருமகளா வந்து இருப்பா, இல்லையா அத்தை''

நாச்சியார் மிகவும் அமைதியானார். இந்த உலகில் திருமணம் பண்ணாமல் வாழ்தல் என்பது சற்று சிரமமான ஒன்றுதான். கல்யாணம் பண்ணலையா எனக் கேட்டே கல்யாணம் பண்ண வைத்து விடுவார்கள். அப்படியும் வேறு காரணங்கள் சொல்லி கல்யாணம் கட்டாமல் போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கல்யாணம் என்பது நடக்காமலே போய்விடும். கால சூழல் பலரை திருமண வாழ்வில் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது. நாச்சியார் போன்றோர் திருமணமே வேண்டாம் என சிறு வயதில் இருந்தே இருந்து விடுகிறார்கள். இதற்கு உடல்ரீதியான, மனரீதியான விளக்கங்கள் எனப் பல இருந்தாலும் அவரவரைப் பொருத்தே எல்லாம் அமைகிறது.

''என்னங்க அத்தை, பதில் காணோம்''

''நடக்காத கதையைப் பேசிப் பயன் இல்லைதானே யசோ, நான் மட்டும் பாமாவை பாத்துட்டு ஊருக்குப் போறேன்''

''சரிங்க அத்தை, பத்திரமா போய்ட்டு வாங்க''

நாச்சியார் பாமாவின் முகவரியை சரியாக கண்டுபிடித்து அவளது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். பாமாவின் அம்மா ருக்மணிதான் வந்தார்.

''பாமா இருக்காங்களா''

''உள்ளே வாங்க, ஏன் வெளியே நின்னுட்டீங்க, அவ வர சாயந்திரம் அஞ்சு மணி ஆகிரும்''

''ஊருக்குப் போகனும், நாச்சியார் வந்தேனு பாமாகிட்ட சொல்லிருங்க''

''ம்ம், சொல்றேங்க''

நாச்சியார் பெருமாள்பட்டி வந்து சேர்ந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்.

''வாங்கம்மா, போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா, பாப்பாத்தி என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க''

''ம்ம், தூத்துக்குடிக்கு போகனும், கொஞ்ச நாள் ஆகட்டும், அந்த பட்டாம்பூச்சி முட்டை எப்படி இருக்கு, வா பாக்கலாம்''

''முட்டையில் இருந்து சின்ன கம்பளிப்பூச்சி மாதிரி வந்து துளசி இலையை சாப்பிட ஆரம்பிச்சிருச்சிம்மா, அவர் செடியைப் பிடுங்கிப் போட்டுரலாம்னு சொன்னார், நான்தான் பாவம் இருக்கட்டும்னு சின்ன வேலி கூட போட்டு வைச்சிருக்கேன்மா''

பூங்கோதையை தனது இடுப்பைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வந்து காட்டினாள். சிறு பூச்சி ஒன்று துளசி இலைகளைத் தின்று கொண்டிருந்தது.

''கோதை, எந்த ஒரு உயிருக்கும் நீ தீங்கு பண்ணக்கூடாதுனு நினைக்கிற பாரு அந்த நல்ல மனசுக்கு என்னோட நன்றி, அந்த பட்டாம்பூச்சி எதுவும் வந்துச்சா''

''தினமும் காலையில இந்த துளசி இலை பக்கத்தில வந்து துளசி இலையை பறந்தபடியே பார்க்கும் அப்புறம் என் மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகும்''

''கோதை இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கும், சில உயிர்கள் நம் மேல நிறைய நேசம் வைச்சிருக்கும், அது போல சில உயிர்கள் மேல நாம நேசம் வைச்சிருப்போம், இந்த பட்டாம்பூச்சிக்கு உன்னை நிறையவே பிடிச்சி இருக்கு''

''ஆமாம்மா அதான் அவர் சொன்னப்ப கூட எனக்கு அதை கலைச்சி விட மனசு வரலை, நம்ம குழந்தை வளருற மாதிரி அது வளர்ந்து வருது''

''பட்டாம்பூச்சியா வர இன்னும் மூணு வாரம் ஆகும், உனக்கும் குழந்தை பிறந்துரும், நீ செக்கப் பண்ணவே போகலையே கோதை, இப்ப இருக்க உலகம் மருந்து, மாத்திரை, ஸ்கேன் அப்படினு போகுது, உனக்குத் தோனலையா, பிள்ளையாவது ஆஸ்பத்திரில போய் பெத்துக்கோ, கிராமம்தானு நீபாட்டுக்கு அந்தக் காலத்தில மாதிரி வீட்டில பெத்துக்காத''

''சரிம்மா, அவரும் அதான் சொல்லிட்டு இருக்காரு, ரொம்ப வருசம் கழிச்சி உண்டானதால எதுவும் பாக்க வேணாம்னு அப்படியே இருந்துட்டேன்''

''என்ன கோதை சின்ன குடை மாதிரி மேல கட்டி இருக்க, மழை வந்து ஏதாவது பண்ணிரும்னா, தனக்கு என்ன என்ன பாதுகாப்பு பண்ணனுமோ அதை இயற்கை மூலமாவே உயிர்கள் பண்ணிக்கிரும்''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை மெல்லிய புன்னகை செய்தாள். தான் தாய் ஆகப்போகிறோம் எனும் ஒரு பேராவல் இந்த உலக உயிர்கள் மீது எல்லாம் தாய்மையை காட்டத்துவங்குமோ எனத் தெரியாது. பூங்கோதை காட்டத்துவங்கி இருந்தாள்.

நாச்சியார் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பரந்தாமனிடம் சொன்னார்.

''இந்தக் கோவில் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாம்ல பரந்தாமா''

''அம்மா நல்ல யோசனை, அய்யாகிட்ட கேட்டுப் பாருங்க, வேணாம்னா சொல்லப் போறாரு''

''நிறைய யோசிக்கிறாரு''

''இன்னொருதடவை முயற்சி பண்ணிப் பாருங்கம்மா''

சரி என சொல்லிவிட்டு அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்து இருந்தார் நாச்சியார். கோவிலுக்கு வந்து செல்வோர் இவரையும் வணங்கிச் சென்றார்கள். மனிதர்கள் பிறர் போற்றும்படி வாழ்தல் பெரும் தவம்.

பாமா, நாச்சியார் வந்த விசயத்தை தனது அம்மா மூலம் அறிந்து கொண்டாள். தன்னைத் தேடி வந்தவரை சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டானது. வருகின்ற சனிக்கிழமை பெருமாள்பட்டிக்கு போய் வர அனுமதி கேட்டதும் அவளது அம்மா எதுவும் மறுக்காமல் அனுமதி தந்தார்.

நம்மை புரிந்து கொள்வதோடு, நமது எண்ணங்களுக்கு இடையூறுகள் தராத உறவுகள் அமைவது பேரின்பம்.

(தொடரும்)

No comments: