Saturday 14 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 4

4. பட்டாம்பூச்சியின் பரிணாம மாற்றம்

பெருமாள்பட்டியின் சிறப்பு என்னவெனில் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாயில் நீர் வற்றியது கிடையாது. அந்தக் கண்மாய் நீரைத்தான் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.  ஓரளவுக்கு நல்ல இடம் தாங்கிய கண்மாயினைத்தான் வெட்டி இருந்தனர். கண்மாய்க்கரை எல்லாம் போட்டு முடித்த சில நாட்களில் நல்ல மழை பெய்ததாகவும் அன்றில் இருந்து இன்றுவரை கண்மாயில் நீர் வற்றியதை எவரும் பார்த்தது இல்லை என்றே சொல்வார்கள்.

கிராமத்துக்கு ஏற்றது போன்ற கோவில். கருங்கல்லினால் ஆன கருவறை, அர்த்தமண்டபம், விமானம், இராஜகோபுரம். இராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் இடைப்பட்ட ஒரு இருபது அடியில் ஒரு மண்டபம். அங்கேதான் அன்னதானம் எல்லாம் வழங்குவார்கள். இந்த பெருமாள் கோவிலில் இன்றும் கூட திருமணம் நடத்திக் கொள்பவர்கள் உண்டு. வசதி வாய்ப்புகள் வந்தபிறகு கல்யாண மண்டபம் என நகரங்கள் தேடிப் பயணப்பட்டு போன பிறகு திருமணம் நடத்துவதில் கோவில்கள் முன்னுரிமை இழந்து போயின.

இருந்தாலும் அவ்வப்போது திருமண வைபவங்கள் காணும் இந்த பெருமாள் கோவிலை குண்டத்தூர் மரிக்கொழுந்து ஸ்தபதியார் தானே முன்னின்று செய்து முடித்து வைத்தார். வசுதேவனின் ஓட்டன் வாமனசித்தன் மரிக்கொழுந்துவிடம் தனது கோவில் ஆசையை சொன்னதும் அதற்கு முதலில் கண்மாய் வெட்ட வேண்டும் என ஆரம்பித்ததுதான் இந்தக் கண்மாய். வறட்சிக் காலங்களில் கூட கண்மாய் வற்றாமல் இருப்பது கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தது உண்டு, அதன்பின்னரே ஊற்றுநீர் குறித்த தகவல் பரப்பப்பட்டது.

பொதுவாக கிராமம் என்றாலே கருப்பசாமி, முனியாண்டி, அய்யனார், காளியம்மன், அரசமரத்து பிள்ளையார் என சாமிகள் இருக்கும். இந்த ஊரில் பெருமாள் கோவிலைத் தவிர வேறு எந்த கோவில்களும் இல்லாமல் போனதற்கு வசுதேவனின் குடும்பமே காரணமாக இருந்தது எனும் பேச்சு இருக்கிறது. இந்த கிராமத்தில் இறந்து போன எவரையும் குலசாமியாக எல்லாம் இங்கே உள்ளவர்கள் கொண்டாடியது இல்லை. வாமனசித்தன் சொன்னதன்பேரில் எல்லாம் பெருமாளுக்கு மட்டுமே சமர்ப்பணம் செய்து கொண்டு இருப்பதாகச் சொல்வார்கள்.

அன்றைய தினங்களில் வீட்டுக்கு குறையாமல் ஐந்து பிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் வசுதேவனின் பரன்பரையில் மூன்று பிள்ளைகள் மேல் இருந்தது இல்லை. அதிலும் ஒருவர் மட்டுமே திருமணம் முடித்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. இது தற்செயலாக நடந்து வருவதா, அல்லது திட்டமிட்டு நடக்கிறதா எனத் தெரியாது. வசுதேவனின் தந்தை குசேலபாகனுடன் உடன்பிறந்த சித்தப்பா பார்த்தன் தனக்கு இருபது வயது இருக்கும்போதே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றவர்தான், அவரோடு எவ்வித தொடர்பும் அதற்குப்பின்னர் இல்லாமல் போனது. இவர்களுது பரன்பரை முன்னால் இருந்தவர்கள் எல்லாம் ஸ்ரீஇராமானுசரிடம் பழக்க வழக்கம் கொண்டு இருந்ததாகப் பேச்சு இன்னமும் கிராமத்தில் இருக்கிறது.

நாராயணி எனும் பெயரைக் கேட்டதும் நாச்சியார் தனது யோசனையில் இருந்து விடுபட்டார்.

''கோதை, இந்த பெயர் எப்படி தேர்ந்து எடுத்த'' நாச்சியார் ஆச்சரியம் கலந்து கேட்டார்.

''அவர்தான் இந்தப் பெயரை எனக்கு முன்னமே சொன்னார், எங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும்னு ஒரு நம்பிக்கை. அவருக்கு அவர் அம்மா மேல நிறைய பிரியம், அவர் அம்மா திரும்ப பிறக்கனும்னு சொல்வார், அதெல்லாம் சாத்தியம் இல்லைன்னாலும் அவரோட ஆசையை சரினு சொல்லுவேன்'' பூங்கோதையின் மீது அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சி அகலவே இல்லை. அந்த அறை பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களால் நிறைந்து இருந்தது.

''இந்த பட்டாம்பூச்சிக்கு உன் மேல என்ன பிரியமோ கோதை, நகராம உட்கார்ந்து இருக்கு. பட்டாம்பூச்சியோட வாழ்நாள் ஒரு வாரத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை இருக்கும். இங்கே இருக்க இந்த பெரிய பட்டாம்பூச்சிகள் நிறைய மாதங்கள் உயிர் வாழும். அவை குளிர் இரத்த வகை, அதனால வெயில் காலத்தில் துடிதுடிப்பா இருக்கும், குளிர் காலம் வந்துட்டா உறைஞ்சி உயிர் போகாம இருக்கிறது எல்லாம் அதிசயம் தான். வெளிச்சூழல் வைச்சிதான் அவை தன்னோட வெப்ப நிலையை சமன்படுத்திக்கும்''

''அப்போ இந்த பட்டாம்பூச்சி எட்டுமாசம் முன்னாடி என் மேல வந்து உட்கார்ந்த ஒன்னாம்மா'' பூங்கோதையின் கேள்விக்கு என்னவென பதில் சொல்வதென தெரியாது புன்னகை புரிந்தார்  நாச்சியார்.

''தெரியலை கோதை, பட்டாம்பூச்சி கதையைச் சொல்றேன். கோதை இப்போ உன்னை மறுபடியும் முதலில் இருந்து இதே வாழ்க்கையை வாழச் சொன்னா இதே போல வாழ்வியானு கேட்டா உன்னால ஆமா, இல்லைனு பதில் சொல்ல முடியும் ஆனா உண்மையில் என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. நம்ம மனிதர்களுக்கு எப்பவுமே கடந்த காலத்தில் என்னவாக நடந்து இருக்கும் எப்படி இருந்து இருக்கும் அப்படினு தெரிஞ்சிக்க ஆசை, அதனால எழுதப்பட்ட பெரும் பழங்கதைகள், சமீபத்திய சிறுகதைகள் என நிறையவே உண்டு.

அதில் ஒன்னுதான் இந்த பட்டாம்பூச்சி கதை. 50மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போய் அப்போ வாழ்ந்த குறுகிய வாழ்நாட்கள் வாழும் டைனோசர்களை சுட்டு தள்ளிட்டு வருவதற்கு ஒரு நிறுவனம் கால இயந்திரம் உருவாக்கி அதில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வழிகாட்டி இரண்டு நபர்கள் அதோடு கதைநாயகன் இன்னும் இரண்டு நபர்கள் போவாங்க. எந்த எந்த டைனோசர்களை கொல்லனும் அப்படினு முன்னமே அந்த நிறுவனம் குறியிட்டு வந்து இருப்பாங்க.

அந்த கதைநாயகன் இப்படி நாம பின்னோக்கி போய்ட்டு திரும்பி வந்தா எல்லாம் அப்படியே இருக்குமானு கேட்பான், அது உறுதி சொல்ல முடியாது, அதே வேளையில் தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யனும் மீறி செயல்படக்கூடாதுனு சொல்வாங்க. எடுத்துக்காட்டா ஒரு எலியை மிதிச்சுக் கொன்னா அதனைச் சுற்றிய ஒரு பரிணாம சூழல் மாறிப்போகும் அதனால சுடுவதை தவிர வேறு எதுவும் பாதை மீறிப் போகக்கூடாதுனு கடுமையான விதிகள் போடப்பட்டு இருக்கும்.

அப்படி போனப்ப பாதை மாறி கதைநாயகன் சேற்றில் மிதிச்சு வந்துருவான். வழிகாட்டி பயங்கரமா கோவப்படுவான். திரும்பி மீண்டும் அதே தற்காலத்திற்கு வந்ததும் முதலில் இருந்ததை விட எல்லாம் மாறி இருக்கும். ஏன் இப்படி ஆயிருச்சின்னு பார்த்தா சேற்றில் மிதிச்சதால அதில் இருந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போய் அவனது காலில் ஒட்டி இருக்கும். அந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போனது மொத்த நிகழ்வுகளையே மாற்றி வைச்சிரும். அவனுக்கு என்ன இதுனு புரியறதுக்கு முன்னாலே அந்த வழிகாட்டி அவனை சுட்டுக் கொன்னுருவான். அந்த பட்டாம்பூச்சி உயிரோடு இருந்து இருந்தா கதைநாயகன் உயிரோட இருந்து இருப்பானு கதை முடியும்''

நாச்சியார் சொல்லி முடித்ததும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் அந்த அறையை விட்டுப் பறந்தோடின. பூங்கோதையின் கன்னம் தொட்டு மீண்டும் தோளில் அமர்ந்து கொண்டது அந்த ஒரே ஒரு பட்டாம்பூச்சி.

''அம்மா'' என கண்கள் கலங்கினாள் பூங்கோதை.

''எனக்குப் பிறகு எனக்கான என் சந்ததி இல்லைனு ஆயிருதல கோதை, அப்படி என் சந்ததி ஒன்னு உருவாகி இருந்தா இந்த உலகத்தில் எத்தனை மாற்றம் உருவாகி இருக்கும்னு சொல்ல முடியாதுல, அதுபோல நிறைய மகான்கள், பெரியோர்கள், அறிவியல் அறிஞர்கள் எல்லாம் பிறக்காமல் போயிருந்தானு யோசிச்சா இந்த உலகத்தைப் பத்தி நம்முடைய பார்வை எப்படி இருக்கும். இப்படித்தான் எங்க குடும்பத்தில ஒரே ஒரு சந்ததி தொடர்ச்சி மட்டுமே இருந்துட்டு வந்து இருக்கு அதனால பெரும் மாற்றம் நிகழாமல் போய் இருக்குமோ''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை அவரது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

(தொடரும்) 

No comments: