Sunday 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12

12. கண்ணி நுண் சிறுத்தாம்பு

பாமா சனிக்கிழமை காலையிலேயே பெருமாள்பட்டி நோக்கி பயணம் ஆனாள். மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை அபாயகரமானது என இந்த உலகம் நிறைய அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை பொய்க்காது எனச் சொல்லவும் சில மனிதர்கள் எடுத்துக்காட்டாக இருந்து கொள்கின்றனர். செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பாமா.

இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பாமா நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நாச்சியார் தன்மீது கொண்ட பிரியம் ஒன்றே அவளது இந்த திடீர் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. இதற்கு முன்னர் குற்றாலம் சென்று இருக்கிறாள் மற்றபடி இந்த பெருமாள்பட்டி எல்லாம் அவள் கேள்விப்படாத ஊர். பேருந்தின் வேகத்தை அவளது பறக்கும் தலைமுடி காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு கூடிய சிறு தூறல்.

திருமங்கலம் தாண்டியதும் மனதில் நாச்சியாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். செங்கோட்டை செல்லும் வழியில் திரும்பிய பேருந்து குண்டத்தூர் வந்ததும் இறங்கிக் கொண்டாள். அங்கே இருந்து பெருமாள்பட்டிக்கு நடக்கத்  தொடங்கினாள்.

முன்பின் அறியாத ஊர், அறியாத மக்கள் வழி கேட்டதும் சரியாகத் திசையை காண்பித்தார்கள். சிறு தூறல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென யோசனை செய்து உடனே செய்யும் மனிதர்கள் ஒருவகை. யோசித்துக் கொண்டே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் மனிதர்கள் மற்றொரு வகை.

பெருமாள்பட்டி என காட்டிய வழிகாட்டி அவள் சரியான பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. அவள் செல்லும் வழியில் தோட்டத்தில் வேலை பார்க்கும் மனிதர்கள் தென்பட்டார்கள். வழியில் கண்ட ஒருவயதான பெண்மணி பாமாவை வழி மறித்து விசாரணை செய்தார்.

''யாரு நீ, யாரைப் பார்க்கப் போற, ஊருக்குப் புதுசா இருக்க''

எவர் எனத் தெரியாத ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதா என யோசிக்காமல் பாமா தெளிவாகவே சொன்னாள்.

''பெருமாள்பட்டியில நாச்சியார் அம்மாவை பார்க்கப் போயிட்டு இருக்கேன், என் பேரு பாமா, ஊர் மதுரை, அவங்க மதுரைக்கு வந்தப்ப பார்த்தேன்''

''சொந்தமா''

''இல்லை''

''சரி சரி போய்ப் பாரு, நானும் அந்த ஊருதான், ஆனா இன்னைக்கு வர நான் ஸ்ரீரங்கம் போயிட்டு அடுத்த வருசம் இதே நாளில வருவேன், கொஞ்ச நேரத்தில வந்து பெருமாளைக் கும்பிட்டுட்டு கிளம்பிருவேன்'' எனக் கூறிக்கொண்டே நிற்காமல் நடந்து போனார்.

ஆச்சரியமாக அவர் போகும் பாதையைப் பார்த்தவள் சிறிது தூரம் நடந்ததும் பெருமாள் கோவிலின் கோபுரம் தென்பட்டது. நேராக பெருமாள் கோவிலுக்குச் சென்றாள். அவளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வு ஊறிக்கொண்டு இருந்தது. தான் நெற்றியில் வைத்து இருந்த ஒரு கோடு போன்ற நீண்ட சிவப்பு பொட்டும் அதன் கீழ் வைத்து இருந்த பிறை வடிவ வெள்ளைப் பொட்டும்  என அவள் பெருமாள் மீது கொண்டு இருந்த பிரியம் வெளிப்பட்டுத் தெரிந்தது.

கருவறை முன் நின்று தாயாரோடு இருந்த பெருமாளை பார்த்த வண்ணம் நின்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் நிறைந்தது. பல்லாண்டு பல்லாண்டு பாடியபடியே பரந்தாமன் தீபாராதனை காட்டினான். அந்தப் பாடலே பாமாவுக்குள் இக்கண்ணீர் வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. துளசி நீர் கொடுத்தான் பரந்தாமன். எவரேனும் புதிதாக வந்தால் யார் எவர் என விசாரிப்பது பரந்தாமன் வழக்கம். பாமாவிடமும் அப்படியே விசாரித்தான்.

''எந்த ஊர்ல இருந்து வரீங்க, உங்களை இதுக்கு முன்னம் பார்த்தது இல்லையே''

''மதுரை''

துளசிச் செடியின் இலைகள் என சில பாமாவுக்குத் தந்தான்.

''இந்தக் கோவில் மனசுக்கு நிறையப் பிடிச்சி இருக்கு, ஆளுக வரமாட்டாங்களா''

''வரப்போ வருவாங்க''

கோவிலைச் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் பாமா.

அவள் வழியில் கண்ட வயதான பெண்மணி கோவிலுக்குள் வந்தவர் பாமா அமர்ந்து இருப்பதைக் கண்டு நேரடியாக அவளிடம் வந்தார்.

''நாச்சியாரைப் பார்க்க வந்தேனு சொன்ன, இந்த நாச்சியாரைத்தான் பார்க்க வந்தியா, '' எனச் சொல்லிக்கொண்டே பாமாவின் அருகில் அமர்ந்தார்.

''இல்லை, கோவில் தெரிஞ்சது அதான் சேவிச்சிட்டுப் பிறகு போய் அவங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன்''

''உன்கிட்ட ஒன்னு கேட்கனும், கேட்கட்டுமா''

''ம்ம் கேளுங்க''

''செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும், சொல்லு'' என்றார்.

பாமா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். இது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கேட்டது. இதை ஏன் தன்னிடம் இவர் கேட்கிறார் எனத் திகைத்தாள்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்ற பாமாவின் குரல் எத்தனை இனிமை மிக்கது என வாக்கியங்களில் விவரிக்க இயலாது.

''ஆழ்வார் பத்தி தெரிஞ்சி வைச்சி இருக்க, பெருமாள்ன்னா அத்தனை விருப்பமோ''

''ம்ம் நிறைய''

''உனக்குப் பிடிச்ச ஆழ்வார் பாசுரம் சொல்லு''

''நிறைய இருக்கு, எதைச் சொல்றதுனு தெரியலைங்க''

''ஏதாவது ஒன்னு''

''கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே''

''நம்மாழ்வார் உனக்கு நிறையப் பிடிக்கும் போல'' என்றவர் எழுந்து போனார். பாமாவின் இடது தோளின் மீது ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.

(தொடரும்)

No comments: