Thursday 29 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7

வேனில் இருந்து பொருட்களை இறக்கி எங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்தார்கள். 'அப்பா என்ன நடக்கிறது' என்று கேட்டேன். அவருக்கு இறக்கிற எல்லா சொத்துகளையும் இந்த இருவரின் பெயரில் எழுதி வைத்து விட்டார் என்றார் அப்பா. அதற்குள்ளாகவா, என்றேன். ஆமாம் என்றார். அப்படியெனில் அவர் சாக முடிவு செய்துவிட்டாரா என்றேன் கலக்கத்துடன். தெரியவில்லை என சொல்லிவிட்டு வேன் டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். காயத்ரி கலக்கத்துடன் இருந்தாள். எதற்கு இந்த கல்லூரிக்கு செல்லவேண்டும், எத்தனையோ பேர் இருக்க காயத்ரி எதற்கு கண்ணில் பட வேண்டும், என்னுடன் பேச வேண்டும், பழக வேண்டும், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் 'என்ன யோசனை முருகேசு' என்றார் அம்மா. மற்ற அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.

'நான் இமயமலைக்கு போகப் போறேன், என்னோட வியாபாரம், இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் தேவேந்திரன் பாத்துகிறேனு சொல்லிட்டார்' என்றார் காயத்ரியின் அப்பா. எனது அப்பாவின் பெயரை சொன்னதும் எனக்கு திடுக்கென இருந்தது. எனது அப்பாவுக்கு என்ன தெரியும் வியாபாரம், விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை உடையவர். கடையில் ஐந்து ரூபாய் பொருள் என்றால் ஆறு ரூபாய் கொடுத்து வியாபாரம் நல்லா பெருகட்டும் என சொல்லிவிட்டு வரக்கூடியவர். இதுவரை எந்த பொருளுக்கும் பேரம் பேசியது இல்லை. இதனால் அம்மா அதிக கோபம் கொள்வது உண்டு. இவர் எப்படி வியாபாரம் செய்வார். கறாராக இல்லாதபட்சத்தில் வியாபாரம் எல்லாம் வீண் என நினைத்து கொண்டு 'சார், எங்க அப்பாவுக்கு வியாபாரம் பண்ண தெரியாது, நீங்க இரண்டு மாசத்தில திரும்பி வரப்ப எல்லாம் தொலைஞ்சி போயிருக்கும்' என்றேன்.

'நான் இரண்டு மாசத்தில திரும்ப வரப்போறதில, திரும்பி வர சில வருசங்கள் ஆகும், எனக்கு இந்த வியாபாரம் திரும்பவும் வேணாம்' என்றார் அவர். 'முருகேசு செத்த இப்படி வா' என அம்மா அழைத்தார். 'நீ பேசாம இரு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்' என்றார் அம்மா. 'என்னம்மா சொல்ற, இதெல்லாம் அப்பாவுக்கு சரிபட்டு வராது, காயத்ரியின் அக்காவை கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும், எதுக்கும்மா, வீண் சிரமம்' என்றேன். 'சார் நீங்க யோசிச்சி பேசுங்க, இதோ இந்த ரெண்டு பேரு உங்களை நம்பி வந்தவங்க' என்றேன். 'உங்க அப்பா எல்லாம் பாத்துக்குவார்' என்றார் அவர். 'ஒருவேளை எங்க அம்மா செத்து போய், எங்க அப்பாவும் சாக முடிவு பண்ணிட்டா, நாங்க மூணு பேரு எந்த தெருவுல போய் நிற்கிறது' என்றேன். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி என் வாயில் இருந்து வந்தது என யோசித்து முடிக்கும் முன்னர் 'என்ன பேச்சு பேசற நீ, அவரே மனசு உடைஞ்சு போயிருக்கார், அபசகுனமா பேசிட்டு' என அம்மா சில தினங்கள் பின்னர் என் மீது கோபம் கொண்டார். 'அப்படி எதுவும் நடக்காது' என்றார் அப்பா.

'சரி நான் கிளம்புறேன்' என்றார் அவர். இரண்டு பெண்களும் அமைதியாகவே இருந்தார்கள். 'காயத்ரி உங்க அப்பாவை எங்கயும் போக வேணாம்னு சொல்லு' என்றேன். காயத்ரி கலங்கிய கண்களுடன் 'அவர் கேட்கமாட்டார்; எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டார்' என்றாள். 'சார், நீங்க போக கூடாது சார்' என்றேன். எனது வயதுக்கு மீறிய வார்த்தைகளா, நிலையின் தன்மையை உணர்ந்து வந்ததா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. 'முருகேசு நீ போய் வேலைய பாரு' என அம்மா அதட்டினார். நண்பன் வீட்டிற்கு செல்வதாக  பொய் சொல்லி சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, எனது தொப்பி ஒன்றையும், கண்ணாடி ஒன்றையும் மறைத்து எடுத்து கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். உண்மை மட்டுமே பேச சொன்ன காயத்ரி நினைவில் அப்போது இல்லை. காயத்ரியின் அப்பா வெளியேறும் வரை ஓரிடத்தில் மறைந்து இருந்து காத்து இருந்தேன். அவர் வந்ததும், அவரை பின்தொடர்ந்து சென்றேன். கையில் சின்னதாய் பெட்டி. பேருந்து நிலையத்தில் நின்றார்.


அவர் ஏறிய பேருந்தில் நானும் ஏறினேன். எந்த இறக்கம் என எப்படி தெரிந்து கொள்வது என தெரியாமல் பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் கேட்டு டிக்கட் வாங்கினேன். அவர் இறங்கிய இறக்கத்தில் நானும் இறங்கி பின் தொடர்ந்தேன். இமயமலை செல்வதாய் சொன்னவர் இங்கே எதற்கு இறங்கினார் என புரியாமல் இருந்தது. சில தெருக்கள் தாண்டி ஒரு வீட்டிற்கு முன்னர் நின்றார். வீட்டின் கதவு திறந்தது.  உள்ளே சென்றார். எத்தனை மணி நேரம் இப்படியே காத்து இருப்பது என சுற்றும் முற்றும் பார்த்தேன். துப்பறியும் சிம்பு போல் ஆகிவிட்டேனே என மனம் கிடந்து அடித்து கொண்டது. அந்த வீட்டினை நோட்டம் விட்டு கொண்டே இருந்தேன். அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணுடன் காயத்ரியின் அப்பா வெளியே வந்தார். அந்த பெண்ணின் கையில் பெட்டி. இருவரும் பேசாமல் நடந்து நான் இருக்கும் இடம் தாண்டி சென்றார்கள். அவர்களை பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பெங்களூர் செல்லும் வாகனத்தில் ஏறினார்கள். என்னால் அதற்கு மேல் பொறுத்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நானும் ஏறி 'சார் இந்த வாகனம் இமயமலை போகாது' என்றேன். 'யார் நீ' என்றார். தொப்பி, கண்ணாடியுடன் யாராய் இருந்தா என்ன என்றேன். கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் பெண்கள் மத்தியில் மற்றொரு பெண்ணின் கணவனை கூட கணவனே கண் கண்ட தெய்வம் என நினைக்கும் பெண்கள் இருப்பார்களோ என அச்சம் தவிர்த்து தகராறு பண்ணுவதாகவே முடிவு செய்து இனி இவரை சும்மா விடக்கூடாது என நினைத்தேன். 'நீங்க இப்போ வீட்டுக்கு திரும்பலை, போலீசுல சொல்வேன்' என்றேன். வியாபாரியாச்சே அவர். அந்த பெண் 'இந்த சனியனை அடிச்சி விரட்டுங்க' என்றாள்.

நடத்துனரிடம் அவர் புகார் செய்ய, நடத்துனர் என்னை பேருந்தில் இருந்து கீழே வலுக்கட்டாயமாக தள்ளினார். கோபம் கொப்பளித்தது. அந்த நேரம் பார்த்து ஒரு போலிஸ்காரர் வந்தார். அவரிடம் சுருக்கமாக விபரம் சொன்னேன் என்பதைவிட ஒரு பெரிய பொய் சொன்னேன். ஒருவர் தனது மனைவியை கொலைசெய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போக இந்த பேரில் ஏறி அமர்ந்து இருக்கிறார் என்றேன். வந்து போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன் கொடு என சொல்லிவிட்டு போய்விட்டார். தொப்பி, கண்ணாடி கழற்றி மறைத்தேன். பெங்களூர் வாகனம் கிளம்பியது. ஒரு கல்லை எடுத்து அவர் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி எறிந்தேன். நான் எடுத்த வேகம், எறிந்த வேகம். எதுவுமே தெரியாதது போல மக்களுடன் மக்களாய் கலந்தேன். பேருந்தின் சத்தத்தையும் தாண்டி 'ஆ' எனும் அலறல் சத்தம் கேட்டது. பேருந்திற்கு எந்த சேதமும் இல்லை என்பதுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. பேருந்து நின்றது. பயமற்ற நிலை என்னுள் பரவி இருந்தது. ஒரு கடையில் சென்று நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் நபராக மாறி இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின்னர் பேருந்தில் இருந்து தலையில் கட்டுடன் அவரை இருவர் சேர்ந்து இறக்கினார்கள். அந்த பெண்ணும் உடன் இறங்கினாள். நிலைமை விபரீதம் ஆகி கொண்டு இருப்பது தெரிந்தது. பேருந்து கிளம்பியது.

நான் அருகில் சென்று பார்த்தேன்.  அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். முழித்தவர் விழித்தார். மீண்டும் கண்களை மூடினார். மீண்டும் விழித்தார். அங்கே சுற்றி இருந்தவர்கள் 'ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க' என்றார்கள். கைத்தாங்கலாக பற்றி கொண்டு ஒரு ஆட்டோவில் அவரை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றேன். தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். ஆஸ்பத்திரி வந்து இறங்கியதும் நீதான தகராறு பண்ணின பையன் என்றார் அந்த பெண். கல்லெடுத்து அடிச்சதும் நான் தான் என்றேன். பயந்து போனார்.

(தொடரும்)


3 comments:

ராஜ நடராஜன் said...

தலைப்பை பார்த்து வந்தால் நிறைய பேன் பெருமாள் பெண்கள் கதை சொல்லுவீங்க போல தெரியுதே:)

முந்தைய கதைகளையும் படித்தால்தான் கருத்து சொல்ல முடியும்.அதனால் வந்ததற்கு ஒரு கதை சொல்லி விட்டுப் போகிறேன்.பேனை பெருமாள் ஆக்கிற பழமொழி ரொம்ப சீரியசான ஒன்று என்பது தெரியாமல் முன்பு வவ்வாலிடம் பேன் பெருமாள் பற்றி பின்னூட்டத்தில் சொன்னதை பதிவர் சார்வாகனிடமும் போய் பேன் பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு கொண்டதாக ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

எனக்கென்னமோ பேன்,பெருமாள்,பரிணாமத்துக்கு தொடர்பு உள்ளதாக நினைக்கிறேன்.இப்ப உங்க பதிவில் பெண்களையும் சேர்த்திருப்பதால் பேன் ரகசியம் இன்னும் ஆராய்ச்சிக்குரியதென நினைக்கிறேன்:)

இராஜராஜேஸ்வரி said...

தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். /

விறுவிறுப்பான நடை..

Unknown said...

மிக இடைவெளிக்கு பின்னர் உங்கள் வலைப்பூவுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி..