Friday 15 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -3

சிங்கப்பூர்!

நாடா? நகரமா?

இந்த நாடு பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் சென்றுப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் அறிய இயலும். சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்று சேர்ந்த போது மணி மாலை 7.  முன்னரே, கார் எடுத்து சிங்கப்பூரில் ஓட்ட வேண்டும் என பதிவு செய்து இருந்தேன். ஏழு நபர்கள் சென்று இருந்தோம். அதில் இருவர் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.  விமான நிலையத்தில் இறங்கியதும் எங்களை வரவேற்க உறவினர் வந்து இருந்தார். அப்போது எனது மொபைல் ஒலிக்க எனக்கு சற்று ஆச்சரியம், பொதுவாக வெளிநாடுகளில் நான் லண்டன் மொபைல் உபயோகிப்பது இல்லை .

கார் கொண்டு வந்து இருக்கிறேன், கீழே நிற்கிறேன் வந்து பெற்றுக் கொள்ளவும் என சொன்னபோது புதிதாக இருந்தது. விமான நிலையத்தில் அவர்களது அலுவலகம் இல்லை என பின்னரே தெரிந்தது. கார் தந்தவர் வழிகாட்டி கொண்டுவர மறந்து போனார். அடக்கடவுளே என்று இருந்தது. உறவினர் உடன் வர காரில் இடம் இல்லை. ஹோட்டல் செல்லும் வழியை PIE CTE havelock road என வழி சொன்னார். வழிகாட்டி இல்லாமல் இரவு எட்டு மணிக்கு அதுவும் புதிய ஊர், தைரியமாகவே வாகனம் எடுத்தேன்.

அட! சாலைகள் அருமை! வாகனங்கள் நிதானம்! அவர் சொன்ன பாதை நினைவில் வைத்து சரியாக ஹோட்டல் வந்து அடைந்தேன். வழிகாட்டி இருந்தாலே சேருமிடம் வந்ததும் சுற்றும் நான் வழிகாட்டி இன்றி சரியாக சேர்ந்தது ஆச்சரியம். இரவு சாப்பாட்டிற்கு முருகன் இட்லிக்கடையை தொடர்பு கொண்டேன். அவர்களோ இன்னும் சிறிது நேரம் கடை மூடிவிடும் என்றார்கள். இரவு ஹோட்டலில் சாப்பிட்டோம். கார் நிறுத்தும் வசதி ஹோட்டலில் இருந்தது.

பண அட்டை ஒன்றை காரில் வைத்துக் கொண்டால் கார் நிறுத்தும் இடம், சில சாலைகள் என பணம் எடுத்துக் கொள்ளும் வசதி. மிகவும் பிடித்து இருந்தது. சாப்பிட்டு முடித்து ஹோட்டலில் பையை திறந்து பார்த்தேன் blog எழுத உதவிய tablet device காணவில்லை. தொலைந்து போனது!!!

(தொடரும்)



Sunday 10 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 2

இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் நடந்தேறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முடிந்து போன கதை என கணக்கு எழுதலாம் என நினைத்தால் சில விசயங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நீ இல்லாமல் இருந்து இருந்தால், நான் இல்லாமல் இருந்து இருந்தால் போன்ற வசனங்களுக்கு குறைவில்லை. முடிந்து போன விசயங்களுக்கு கொண்டாடப்படும் உரிமைகள் என்றுமே மாறப் போவதில்லை.

2012ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து சென்ற பின்னர் நவம்பர் மாதம் மகனுக்கு 2013ல் மிருதங்க அரங்கேற்றம் நடத்த வேண்டும் என சொன்னபோது பயம் நிறைய இருந்தது. மிருதங்க குரு முதலில் வேண்டாம் என சொன்னவர் நவம்பரில் கேட்டபோது சரி என சொன்னதும் அதிக பயம் ஒட்டிக்கொண்டது. ஒரு வருட முயற்சிக்கு ஏழு எட்டு வருட உழைப்பு இருந்தது. மகனும் துணிவாக அரங்கேற்றம் பண்ணுகிறேன் என சொன்னபோது 2013ல் இந்தியாவுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த மிருதங்க அரங்கேற்ற அனுபவம்தனை ஒரு தனி பதிவாக வைத்து விட இருக்கிறேன்

2012 வந்த போது மாமனார் மாமியார் சிங்கப்பூரில் முன்னர் வசித்து இருந்ததால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என் மனைவியின்  ஆசை, ஆனால் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் செல்லவில்லை. இந்த வருடம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என முடிவு செய்து மாமனார் மாமியார் என் அப்பா என அழைத்து செல்ல முடிவு செய்து விமானபயண சீட்டு கேட்டால் அதிக விலை. எப்போதும்  இல்லாமல் எர் இந்தியா பதிவு செய்தோம்

வித்தியாசமான பயண அனுபவம் என சென்னை வந்து இன்று சேர்ந்தோம். ஹோட்டல் பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் போனால் சென்னையில் இருப்பது போல் இல்லை. விமான பயண அனுபவத்தை பின்னர் குறிப்பில் வைக்கிறேன். இப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை சிங்கப்பூரில் இருப்போம்.

(தொடரும்)

Saturday 9 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -1

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இந்தியப் பயணம். ஊர் எப்படி இருக்குமோ? மக்கள் எப்படிப் பழகுவார்களோ என உள்ளூர அச்சம் இருக்கத்தான் செய்கிறது. சென்றமுறை வந்தபோது கோவில் கும்பாபிஷேகத்தில் நாட்கள் செலவழிந்தது. ஒரு பயணக்கட்டுரை எழுதாமல் விட்டுப்போனது அந்த ஒரு முறை மட்டுமே. இம்முறை எவ்வித கட்டுப்பாடுகள் அன்றி பயணம்.

நுனிப்புல் பாகம் இரண்டு அச்சடிக்கப்பட்டு விடும். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. அகநாழிகைப் பதிப்பகம் மூலம் நூல் வெளிவருவது உள்ளூர ஆனந்தம். சென்ற முறை வெளியிடப்பட்ட தொலைக்கப்பட்ட தேடல்கள் போது பலருக்கு நன்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். புத்தக வெளியீடு பின்னர் இந்தியா வந்தபோது கும்பாபிஷேக வேலை காரணமாக எவரையும் சந்திக்க இயலவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு.

ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் நிறைய எழுதினேன். என் எழுத்துக்கு இளமை அடையாளம் தந்தது காதல் வரிகள். நிறைய அறிமுகங்கள். முத்தமிழ்மன்ற உறவுகள் போல பலர் அங்கே. எவரைச் சொல்வது? எவரை விடுப்பது? இந்த இந்திய பயணத்தில் வேறு ஒரு சிறு பயணமும் உண்டு. நான் எப்போதுமே பயணம் தொடங்கும் முன்னர், பயணத்தின் போது எழுதிப் பழகியதில்லை. மொத்தமாக மனதில் வைத்துக்கொண்டு எழுதுவதே வழக்கம். இம்முறை சற்று மாற்றி அமைப்போம்.

நாளை சென்னையில் இருப்பேன்

(தொடரும்)

Friday 1 August 2014

நுனிப்புல் பாகம் 2 முன்னுரை

முன்னுரை

ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்த காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டுப் போகும். ஒரு கதை என்பது நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும் போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையை கதையாக எண்ணக்கூடிய மன நிலையில் நாம் இருக்க இயல்வதில்லை. அது எங்கோ நடந்த, என்றோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மை பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் அந்த கதாப்பாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன.

வாசன் எனும் கதாபாத்திரம் மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் தோன்றியதுதான் என்றாலும் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பு எங்கோ எப்படியோ தோன்றி இருக்க கூடும். இந்த நாவலை எழுதும் போதெல்லாம் எனது கிராமத்து தெருக்கள் என்னுள் நடமாடிக் கொண்டு இருந்தது என்பதை மறுக்க இயலாது. சில அறிவியல் விசயங்கள் எல்லாம் கதையில் எழுதும்போது அவ்வப்போது படித்து அதனால் எழுந்த பாதிப்புதான் இந்த நாவலில் வைக்கப்பட்டு இருக்கிறது, எனக்கென்று என்ன சிந்தனை இருந்துவிடப் போகிறது.

தமிழ்நாட்டில் வாழ்ந்து அந்த தமிழகத்தை கடந்த பதினைந்து ஆண்டுகளாக  பிரிந்த பின்னர் அங்கே உள்ள வாழ்வுமுறை எல்லாம் எனக்கு சற்று அந்நியமாகிப் போனது என்னவோ உண்மை. எனவே கதையில் நான் வாழ்ந்த அந்த இருபத்தி நான்கு வருடங்களின் பாதிப்பு மட்டுமே இருக்க இயலும். இன்றைய சமூகம் எத்தனை மாற்றம் அடைந்து இருக்கிறது என தமிழக்கத்தில் சில வருடங்களுக்கு ஒருமுறை என விடுமுறை காலத்தை கழித்து போகும் எனக்குப் புரியப் போவதில்லை.

கல்லூரி சூழல், மாணவ மாணவியர் பழக்கம் என எல்லாமே இப்போது புதிதாகவே இருக்கும் நிலையில் மாதவி, பாரதி, ரோகினி எல்லாம் சற்று அந்நியப்பட்டு போவார்கள். எத்தனை கதைமாந்தர்கள், அவர்களுக்கென ஒரு குணாதிசயம் உருவாக்கி அவர்களை நடமாட விட்டு அவர்களோடு வாழ்ந்து முடித்த காலங்கள் இப்போது எனக்கு வெகு தொலைவில் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த கதையின் தொடர்ச்சி குறித்து நான் சிந்திக்கவே இல்லை. என்ன எழுத வேண்டும் என்பதை எழுதும்போதே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றே அடுத்த பாகம் வரை நிறுத்தி வைத்து விட்டேன். இந்த நாவல் எழுதும்போது இருந்த மனநிலை வேறு, இப்போதைய மனநிலை வேறு, ஆனால் இறைவன் இறைவனாகவே இருக்கிறான்.

முதல் நாவல் படித்து விட்டு இப்படியா ஒரு நாவலை வெளியிடுவது என எழுந்த குறையைப் போக்க இந்த நாவலின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் திருத்தித் தந்த திரு. என்.சொக்கன் அவர்களுக்கு நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

‘உன்னை என்னுள் உருவாக்கி
என்னை நீதான் உருவாக்கியதாக
இன்னும் நம்பிக் கொண்டு இருக்கும்
மனதுக்கு உண்மை எதுவென
உரைத்து நிற்பாய்

வெ.இராதாகிருஷ்ணன்

இலண்டன் 

Saturday 28 June 2014

அகவாழ்வு கொண்டனன்

புறவாழ்வு என்றும் அகவாழ்வு என்றும் பிரித்தா வைக்கப்பட்டு இருக்கிறது? நான் சில நேரங்களில் மட்டுமல்ல பல நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்றே எனக்கு தெரியாது. சட்டென வந்து விழும் சிந்தனைகளை நான் அலசுவதே இல்லை.

 அந்த அந்த நேரத்தில் ஏதோ ஒன்று தோன்றும் அதை அப்படியே எழுதி வைத்துவிடுவேன். பின்னர் எவரேனும் கேட்டால் மட்டுமே அது குறித்து விளக்கம் தர சிந்திப்பேன். எழுதிய எனக்கு தெரியாத பல அர்த்தங்களை பலர் வந்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

அப்படித்தான் இப்படி எழுதினேன்.

பரபரப்பான உலகத்தில் ஓடித் திரியும் மனிதர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி விரும்புகிறேன். உங்கள் ஆழ்மனதின் ஓசையை கேட்க சற்று நேரம் ஒதுக்குங்கள். 

மேற்சொன்ன விசயத்தில் ஆழ்மனதின் ஓசை என நான் எழுதியது subconscious mind எனும் அர்த்தம் தான். அதாவது தற்போது நாம் அனுபவித்துக் கொண்டு இல்லாத ஒன்றை கூட தனது அனுபவத்தில் இந்த subconscious mind சேகரித்து வைத்து இருக்கும் எனும் நம்பிக்கையே அது. அதாவது இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது.

நிகழ்காலம் பொற்காலம் எனில் 
கடந்தகாலம் என்ன 
கற்காலமா? 

எந்த ஒரு காலமும் நமக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் நிகழ்காலம் என எதிர்காலத்தினை நோக்கி நாம் பயணிப்பது நமக்கு புரியாமல் போய் விடுகிறது. நமது தொலைக்கப்பட்ட தேடல்கள் எல்லாம் இந்த ஆழ்மனதில் அடங்கி இருக்கும். ஆழ்மனதின் ஓசை குறித்து கேட்டவருக்கு அடுத்த வரிகள் இப்படி வந்து விழுகிறது.

நம் ஆழ்மனம் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும், புற வாழ்வில் ஈடுபாடு கொண்ட நாம் அதை நிராகரித்துக் கொண்டே இருப்போம் அக வாழ்வு மறந்து. 

இங்குதான் எனக்கே தெரியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் , அகவாழ்வு மறந்து. அகவாழ்வு என்றால் என்ன எனும் கேள்வி எழுந்தபோது திருதிருவென விழித்தது எனது மனம்.

புற வாழ்வு குறித்த சிந்தனை அதிகம் இருக்கும்போது அகவாழ்வு குறித்து என்ன தெரியும். அக வாழ்வு என்பது இரட்டை வாழ்வா என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை.

அகவாழ்வு என்பது புறவாழ்வு குறித்த சிந்தனை அற்ற ஒன்று 

இவ்வளவுதான் என்னால் யோசிக்க முடிந்தது. புறவாழ்வுதனில் நாம் காணாத ஒன்றை எப்படி அகவாழ்வு தனில் காண இயலும். நிறைய பேர் அக வாழ்வு என்றால் ஏதோ ஆன்மிக சம்பந்தம் உடையது என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

புறத்தே நடக்கும் விசயங்களின் பாதிப்பு அகத்தே நிகழ்ந்தே தீரும். அகத்தே நிகழும் பாதிப்பு புறத்தே பல சமயங்களில் வெளித் தெரிவதில்லை. 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஓரளவுக்குத்தான் சில விசயங்களை மறைத்து வாழ இயலும். களையான முகம், பொலிவான முகம் எல்லாம் அகத்தில் ஏற்படும் சிந்தனைகளின் நீட்சி.

அகவாழ்வு என்றால் என்ன? எங்கேனும் எவரேனும் எழுதி இருப்பார்கள் என திருடத் தொடங்கிய மனதுக்கு தொல்காப்பியர் வந்து சிக்கினார்.

அகவாழ்வு என்பது காதலில் திளைத்து இருப்பது. 
அகவாழ்வு அறம் நிரம்பிய இல்லறவாழ்வு குறித்த ஒன்று. 

இது நான் சொல்ல வந்த பதில் அல்ல. அப்போதைக்கு அந்த கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் சொன்னது. அவ்வளவே. அகத்திணை புறத்திணை என்றே அன்று பிரித்து வைத்து இருக்கிறார்கள். ஏழு வகை அகத்திணை என்றாலும் ஐந்து வகை அகத்திணை மட்டுமே பாடுபொருளில் வைக்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தார்கள். இவை அனைத்துமே கற்பு தனை பறைசாற்றும் திணை என்றே சொன்னார்கள்.

காதலித்து இருப்பது தலைவன் தலைவிக்கு மட்டுமே உண்டான ஒரு பண்பு. அப்படிப்பட்ட இருவருக்கும் உண்டான பண்புகளை அவர்கள் அகத்தில் வைத்து போற்றுவார்கள். அது போலவே இல்லற வாழ்வும். அந்த இல்லற வாழ்வில் வேற்று மனிதர்க்கு இடம் இல்லை.

தமிழில் ஒரு பெரிய கலாச்சாரம் உண்டு.

என் உடம்பை நீ தீண்டினாலும் என் மனசில அவருதான் இருக்கார். அதனால நான் கற்புக்கரசி என சொல்வார்கள். மனதில் நீ வேறொருவரை தீண்டினாலே கற்பை இழந்து விடுவாய் என எச்சரிக்கை செய்வார்கள். இதற்கு பரத்தையர்கள் கூட பத்தினிகள் என பாடும் கூட்டம் இருந்தது உண்டு. உடம்பை மட்டுமே தருகிறேன், மனசை இழப்பதில்லை. தொல்காப்பியர் சொன்ன அகவாழ்வுக்கு இது சரி. கற்பு போற்றுதல் என்பன எல்லாம் சரி. ஆனால் நான் குறிப்பிட்ட அகவாழ்வு என்பது அது அல்ல. நான் குறித்த அகவாழ்வு உள்ளுணர்வு கூட அல்ல. நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வுகளும், மனிதர்களும் இந்த அகவாழ்வில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பேச முற்படுகிறார்கள். நாம் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தற்போதைய புற வாழ்வில் ஈடுபாடு கொண்டு மறந்து செயல்படுகிறோம்.

இந்த ஆழ்மனதின் ஓசையை நேரம் இருக்கும்போது சற்று கேட்டுப்பாருங்கள். அங்கே உங்களுடன் பேச முற்பட்டு பேச இயலாமல் போன ஏதோ ஒரு ஜீவன் துடிதுடித்துக் கொண்டு இருக்கலாம்.

புறவாழ்வின் பாதிப்பே அகவாழ்வு. 
அகவாழ்வின் அர்த்தம் தனை 
புறவாழ்வு புரிந்து கொள்ள விடுவதில்லை. 


Thursday 26 June 2014

எதற்கு பெண் குழந்தை வேண்டும்?

 என் தங்கைக்கு வளைகாப்பு எல்லாம் வெகு விமரிசையாக நடத்தி முடித்தோம். ஓராண்டு முன்னர் திருமணம் முடித்து எங்களை விட்டு சென்றவள் இப்போது எங்களுடன் சில மாதங்கள் தங்கி இருக்கப் போகிறாள் எனும் சந்தோசமே எனக்கு அதிகமாக இருந்தது. அண்ணா அண்ணா என எதற்கெடுத்தாலும் என்னை சுற்றி சுற்றி வருவாள். திருமணம் ஆன பின்னர் வாரம் ஒரு முறை போனில் பேசி விடுவாள் அல்லது நான் பேசி விடுவேன். அவ்வப்போது திருவிழா விசேசங்களில் சந்தித்து கொண்டதுடன் சரி.

நானும் தங்கையும் பேசிக் கொண்டு இருந்தோம்.

''என்ன பிள்ளை எனக்கு பிறக்கும் சொல்லுண்ணா''

''உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்''

''நிசமாவாண்ணா''

''ஆமா, உனக்கு பெண் குழந்தைதான்''

''எப்படிண்ணா இவ்வளவு உறுதியா சொல்ற''

''பிறந்த பிறகு நீயே ஆச்சர்யப்படுவ''

''எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா''

நாங்கள் பேசியது என் அம்மாவுக்கு கேட்டுவிட்டது. 

''ஏன்டா ஆம்பளை புள்ளை பிறக்கும்னு சொல்றதை விட்டுட்டு பொட்ட பிள்ளை பிறக்கும்னு சொல்ற''

''என்னமா பெண் குழந்தைன்னா என்ன, என்னை விட தங்கச்சி நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்தில் இல்லையா''

''அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே அது எல்லாம் உனக்கு என்ன புரியப் போகுது''

''அண்ணா, அம்மா கூட சண்டை போடாதே''

எனக்கும் அம்மாவுக்கும் ஏதேனும் வாக்குவாதம் வந்தால் அண்ணா அம்மா கூட சண்டை போடாதே என்று மட்டுமே என் தங்கை சொல்வாள். நானும் அதற்கு பின்னர் வாய் திறப்பதே இல்லை. அம்மா திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

''வாயில என்ன வார்த்தை வருது, பொம்பள பிள்ளையாம் பொம்பள பிள்ளை. வயித்துல நெருப்பு கட்டிட்டே போராடுற வாழ்க்கை''

அம்மாவின் அந்த வாக்கியத்திற்கு பின்னர் அங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்து வெளியே கிளம்பினேன். வேறு எங்கு போக போகிறேன். எனது காதலி கனகதுர்க்கை தான் எனக்கு எல்லாம்.

''என்ன ஒரு மாதிரி இருக்கே''

''அம்மா இன்னைக்கு திட்டிட்டாங்க''

''என்ன வம்பு இழுத்து வைச்ச''

''என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறக்கும்னு சொன்னேன். அதுக்கு என்னை திட்டினாங்க''

''ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி வைக்க வேண்டியதுதான எதுக்கு பெண் குழந்தைன்னு சொன்ன இல்லைன்னா சொல்லாம இருக்கலாம்''

''நீயே இப்படி பேசற''

''என் அக்காவுக்கு இப்படித்தான் பெண் குழந்தை பிறக்கும்னு நான் சொல்லி வைக்க என் அம்மா என்கிட்டே சரியாவே பேசறதே இல்லை. அதுவும் பெண் குழந்தை பிறந்ததும் கருநாக்கு காரினு என்னை அம்மா திட்டாத நாளே இல்லை. ஆனா என் அக்காவோட மாமியாருக்கு கொள்ளை சந்தோசம். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தா அவங்க குடும்பம் செழிப்பா இருக்கும்னு சொன்னதால அக்காவை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினாங்க. ஆனா என் அம்மாவுக்கு என் மேல இன்னும் வருத்தம் போன பாடில்லை.''

''பெண் குழந்தைதானே குழந்தைகளில் சிறப்பு''

''எல்லா குழந்தைகளும் சிறப்புதான், ஆனா பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் படும் அல்லல்கள் குறித்து அக்கறைப்படும் அம்மாக்கள் பெண் குழந்தை வேண்டாம்னு சொல்லிருவாங்க. மத்தபடி பெண்ணுக்கு பெண் எல்லாம் எதிரி இல்லை. எங்கே தான் பட்ட துயரங்களை தனது மகள், பேத்தி படுவாங்கனு அவங்க கவலை''

''உனக்கு என்ன குழந்தை வேணும்''

''ரெண்டும். பெண் இஷ்டம்''

''ஏன்?''

''அழகு படுத்தலாம். நீ கூட உன் சின்ன வயசு போட்டாவுல தலை சீவி பொட்டு வைச்சி பூ சூடி இருப்ப. எல்லா குழந்தையும் பெண் குழந்தையாக பார்க்கிற மன பக்குவம் தாய் கிட்ட இருந்தாலும் பெண் அப்படின்னா கஷ்டம்னு ஒரு எண்ணம் இருக்கு, கூடவே இருக்க முடியாத துயரம். ஆனாலும் எனக்கு பெண் குழந்தை இஷ்டம்''

''சரி இந்த வரி பாரு. 'நமக்கு பெண் குழந்தை பிறக்கும் என எவராலும் எளிதாக சொல்லிவிட முடியும்' எப்படி இருக்கு? ''

''ம்ம் நல்லா இருக்கு''

''என்ன காரணம் தெரியுமா''

''நாம் இருவரும் ஒரே சிந்தனை கொண்டதால் எனது மரபணு x உனது மரபணு x இணையும் சொல்ற விஷயம் தானே''

''ஆமா, எப்படி கண்டுபிடிச்ச''

''உனக்கு வேற என்னதான் தெரியும்''

''அப்போ ஆண் குழந்தை நமக்கு கிடையாதா''

''கூடலின் போது ஊடலுடன் இருப்போம்''

எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. எப்போதும் என்னை ஏதேனும் சொல்லி சிரிக்க வைத்துவிடுவாள்.

என் தங்கையின் பிரசவ தினம் வந்தது. என் அம்மா என்னை கடுகடுவென பார்த்தார்கள். நான் சொன்னபடியே பெண் குழந்தை பிறந்தது. என் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கொண்டாடினார்கள். என் அம்மா மட்டும் என்னிடம் வந்து கருநாக்கு பயலே என திட்டிவிட்டு போனார்.

''அண்ணா எப்படிண்ணா கரெக்ட்டா சொன்ன''

''அது வந்து இருக்கறதே ரெண்டு குழந்தை. ஒண்ணு பொண்ணு பிறக்கும், இல்லைன்னா ஆணு பிறக்கும்''

''உனக்கு ஏதோ தெரிஞ்சி இருக்குண்ணா''

''சரி என்ன பெயரு மனசில வைச்சிருக்க''

''கனகதுர்க்கை''

''அது என்னோட ஆளு பேரு''

''அதான் அந்த பேரு''

என் தங்கையின் பாசத்தை என்னால் நிறைய புரிந்து கொள்ள முடியும். வீட்டு வேலை என அம்மா தங்கையை மட்டுமே சொன்னாலும் நான் உதவி செய்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். சமையலில் கூட அம்மாவுக்கு நிறைய உதவி செய்வதுண்டு. தங்கை நன்றாக படிக்க வேண்டும் எனும் அக்கறை எனக்கு நிறைய இருந்தது. அப்பா என்னை சத்தம் போட்டதுண்டு ஆனால் தங்கையை ஒருபோதும் கோபித்துக் கொண்டது இல்லை.

அப்பா என்னிடம் ஒருமுறை சொன்னார். ஒரு பெண் குழந்தையை பெத்துக்காம எந்த மனுசனோட வாழ்க்கையும் பூர்த்தி ஆகாதுடா. எனக்கு அது எப்போதுமே விளங்கியது இல்லை. அம்மாவிடம் சென்று நான் பேச்சு கொடுத்தேன்.

''இப்ப என்னம்மா அடுத்தவாட்டி பையனை பெத்து தந்துர போறா''

''பேசாம போயிரு''

''இல்லம்மா அது வந்து''

''ஒரு புள்ளையோட நிப்பாட்டுற வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கடா, என் எரிச்சலை கிளப்பாத''

''அம்மா தங்கச்சிக்கு பெண் குழந்தைதான் வேணுமாம்''

''நீ போறியா இல்லையா''

அம்மாவின் கோபம் அடங்கவே இல்லை. ஒருநாள் நான் அம்மா அப்பா ராமசாமி தாத்தா உடல் நலன் சரியில்லாமல் இருந்ததால் பார்க்க போயிருந்தோம். பேச முடியாமல் பேசினார்.

''எத்தனைஆம்பளை புள்ளை பெத்தேன், ஒன்னே ஒண்ணு பொம்பள புள்ள. இந்த கடைசி காலத்தில அந்த பிள்ளை தான் எனக்கு கஞ்சி ஊத்தி நல்லது கேட்டது பாக்குது''

அவர் வார்த்தை தடுமாறி வந்து விழுந்தது.

''அப்பா, எதுக்கு அதை எல்லாம் நினைக்கறீங்க'' என அவரது மகள் சொன்னபோது எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு நோக்கி நடந்தோம். அம்மா என்னிடம் அன்றிலிருந்து என்னிடம் கோபம் கொள்வதே இல்லை.

நானும் மனதில் உறுதியுடன் கூடலின் போது ஊடலே வேண்டாம் என கனகதுர்க்கையிடம் சொல்லி  வைத்தேன்.



Wednesday 11 June 2014

நுனிப்புல் - அணிந்துரை கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)


நுனிப்புல்” = இஃதொரு இலக்கிய வசவு;
அதுவே இப்படைப்பின் பெயரும் கூட!

இப்படைப்பு மட்டுமல்ல..
உலகின் எல்லாப் படைப்பும் நுனிப்புல் தானோ?
இந்த நாவலின் அடிநாதம் முழுக்க ஊடாடுகிறது, இந்தச் சிந்தனை!

நுனிப்புல் மேயாதே-ன்னு சொல்லுறோம்;
நுனிப்புல் என்று சொன்னாலே.. “அரைகுறை, மேலோட்டமான, ஆழமற்ற, ஆய்வுப் போக்கு இல்லாத” என்ற ஓவியத்தையே, நம் மனம் வரைகிறது.
ஆனா, நுனிப் புல்லின் மேன்மையை நாம் அறிவோமா?

நுனிப்புல்லில் தான் பனித்துளி தூங்குகிறது!
அந்தத் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!

பனித் துளி போல் நம் வாழ்க்கை;
நம் வாழ்க்கையை வாங்கும் ஏதோவொரு இயற்கைச் சக்தி!

நாம் நுனிப்புல்லில் தான் பனிநீராய்த் தூங்கிக் கொண்டு இருக்கிறோம்;
நாம் மட்டுமா? உலகின் படைப்பினங்கள் அனைத்தும்!
இந்த நுனிப்புல் பனித் தூக்கம் = ஞாலத்தின் இரகசியம்!
இனி யாரையேனும், “நுனிப்புல்லன்” என்று சொல்வீர்களா?:)

நுனிப்புல் நாவலின் ஆசிரியர், திரு. இராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி;
அவரும் ஒரு நுனிப்புல்லர் தான்-னு சொன்னால், என்னிடம் அவர் சினந்து கொள்ள மாட்டார்-ன்னு நினைக்கிறேன்:)
நுனிப்புல்லில் பனித்துளியாய், ஞாலத்தை நாவல் வழியே நோக்குகிறார்..

திரு. இராதாகிருஷ்ணன் பற்றி நான் அதிகம் அறியேன்; அவர் ட்விட்டர் வாயிலாக ஓர் அறிமுகம் மட்டுமே!
அதனால் அவர் தனிப்பட்ட நம்பிக்கைகள், சாற்றமுறைகள் பற்றிய முன்முடிவு ஏதுமின்றி இந்த நாவலை வாசித்தேன்; கலக்கியுள்ளார் மனிதர்!

இறைமை-உயிர்மை என்பதை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் மிகவும் குறைவு;
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவற்றுள் சிகரம்!
நுனிப்புல்லின் கதைக்களமும் அத்தகையதே; ஆனால் அத்துணை அடர்த்தி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றாய், பலவாய்…

பெரியவர் விநாயகம், வாசன், பாரதி,
மாதவி, கோதை, பெருமாள், திருமால்..
என்று பல பாத்திரங்கள், நம் அன்றாட வாழ்வில் வலம் வருபவர்கள் தான்!
சிலருக்கு அந்த வலம் குறைவு; சிலருக்கு வலம் கூடுதல்; அவ்வளவே!

கதையினூடே கவிதை சொல்வது என்பது மெய்யியல்/ மீபொருண்மை (Metaphysics) நாவல்களுக்கு, “அல்வா” சாப்பிடுவது போல;
இராதாகிருஷ்ணனும் அதையே செய்கிறார்;

“சுருக்கம்” பற்றிய ஆரம்பக் கவிதையே அசத்தல்!
ஏழு சொற்களில் எழுதப்பட்ட திருக்குறளில்
விவரிக்க முடியாச் சுருக்கம்,
பதினைந்து பிள்ளை கொண்ட குடும்பம், ஒரு பிள்ளையோடு ஒடுங்கியது
நிலத்தின் சுருக்கம்,
மனிதனின் மனம் = எதனின் சுருக்கம்?

தரவு கொண்டு விளக்க முடியாததை, உறவு கொண்டு விளக்கி விடும் கவிதை!
சுந்தரன்-பாரதி காதலும், அப்படியொரு பரிமாணமே, இந்த மெய்யியல் நாவலில்!

நாவலின் ஒரு சிறிய குறை: உரையாடல்கள்!
பலரும் உரையாடிக் கொள்வதே இல்லை! ஆசிரியரே, கதை மாந்தர்கள் வழியாகப் பேசி விடுகிறார்..
அது தான் உண்மை எனினும், அப்படி வெளியில் தெரியக் கூடாது என்பதே ஒரு கதைசொல்லியின் வெற்றி!

கதையின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூடு பிடிக்கிறது!
அதில் உரையாடல்களும் உலா வருகின்றன! இயல்பு நிலை உரையாடல்கள்!

கருவாகி நிக்குற பொண்ணு, வயித்துக்கு, மேல கைய வச்சாப் பொண்ணு, கீழே கைய வச்சா ஆணு”
-போன்ற பாட்டிக் கதைக் குறிப்புக்கள் அறியாமையழகு:)

“Cloning-இல் எந்த Nucleus-ஐ வைக்கிறோமோ, அதே போல் தான் பிறக்கும்!
பெருமாளின் Nucleus பெருமாளாகவே பிறக்கும்”
-போன்றவை நாவலின் ஊடாடு உண்மைகள்!

ஆசிரியர் இராதாகிருஷ்ணன், தன் நொறுங்கிய/ நெருங்கிய தேடல்களையெல்லாம் ஆங்காங்கே தூவுகிறார்;
ஆனால் புல் தூவாமலேயே வளர வல்லது! அதுவே புல்லின் மகிமை!

குளத்தூர் கிராமத்தில் வளரும் இந்த “நுனிப்புல்லை”, நானுமொரு பனிப்புல்லாய் வாழ்த்துகிறேன்!
சிரமம் பாராது, படித்துத் தான் பாருங்களேன்! நுனிப்புல் அழகை உணர்வீர்கள்…

- முருகு பொலிக! அன்புடன்,
Kannabiran Ravi Shankar (KRS)

New York
Jun 9th, 2014


----------------

மிக்க நன்றி தமிழ் பெருந்தகையே 

Tuesday 10 June 2014

பயந்த சுபாவம்

எனக்கு நிறைய கடவுள் பக்தி உண்டு. காலையில் குளித்த பின்னர் திருநீறு அணியாமல் நான் எங்கும் செல்வது இல்லை. மிகவும் பயந்த சுபாவம் எனக்கு உண்டு. ஊருக்குள் குடுகுடுப்பைக்காரர் வந்தாலோ சாட்டையால் தன்னைத்தான் அடித்துக் கொண்டு வருபவர் கண்டாலோ மிகவும் அச்சமாக இருக்கும்.

ஒரு முறை அவளைப் பார்த்தேன். அவளை எனக்குப் பிடித்து போனது. தைரியத்துடன் நீ அழகாக இருக்கிறாய் என சொல்லிவிட்டு என் வீட்டுக்கு ஓடிப்போனேன். மிகவும் பயமாக இருந்தது. என்னடா ஒரு மாதிரியாக இருக்க என அம்மா கேட்டார். ஒன்னுமில்லை என்று சொன்ன என்னைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்க, யாரும் திட்டுனாங்க, என்றார். இல்லைம்மா, ஒரு பெண்ணை அழகாக இருக்கனு சொல்லிட்டு வந்துட்டேன், அதான் பயமா இருக்கு. யாருடா அது, இப்ப அதுக்கு எதுக்கு பயப்படற என்னமோ கையப் பிடிச்சி இழுத்தவன் மாதிரி, ஆமா எங்க பார்த்த  என அம்மா கேட்டார்.

கோடாங்கி தாத்தா தெரு என்றேன். பேய் ஓட்ட வந்த பெண்ணாக இருக்கப் போவுது, வா என் கூட என்றார். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. வேணாம்மா, எதுக்கு பிரச்சினை என்றபோதும் என்னை அம்மா வம்பாக இழுத்துக்கொண்டு போனார். கோடாங்கி தாத்தா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்த அவளை கைகாட்டினேன்.

நீ எந்த ஊரு? யார் மக? என அம்மா கேட்டதும் பழகியவள் போல ஊரு புளியந்தோப்பு சுப்பு சார் மக என்றாள். புதுசா குடி வந்து இருக்கீங்களா? என கேட்டதற்கு இல்லை, என் சித்தி பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க அதான் குறி பார்க்க வந்து இருக்கோம். என்றாள். இத்தனை சகஜமாக பேசுகிறாளே என நினைத்தேன்.

ஓஹோ, யாரையாவது லவ்வு பண்ணுதா உன் சித்தி பொண்ணு என அம்மா கேட்டதும், என்னம்மா இப்படி கேள்வி கேட்குற என நான் சொல்லி முடிக்கும் முன்னரே, ஆமா ஒரு பையனோட சுத்துறா என்றாள் அவள். அதானே பார்த்தேன், அவளை அவனுக்கு கட்டி வைச்சா சரியா போயிரும் அதுக்குப் போயி பேயி பிசாசுனுகிட்டு என்றார் அம்மா. சரி என சொல்லிக்கொண்டு கோடாங்கி தாத்தா வீட்டுக்குள் சென்றாள்.

எவடி அவ சொன்னது? என் பிள்ளைக்கு காதல் கல்யாணம் பண்ணிவைக்க அவ யாரு என்றபடி கோடாங்கி தாத்தா வீட்டினுள் இருந்து அவளது சித்தி கத்தியபடி வந்தார். என் அம்மாவை கைகாட்டினாள் அவள். ஏண்டி என ஆரம்பிக்கும் முன்னர் கொஞ்சம் நிதானமாக யோசிங்க என அவரை வீட்டுக்கு அழைத்தார் என் அம்மா. அவர்கள் அனைவரும் அம்மாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அம்மா அவர்களுடன் நிறைய பேசினார். சம்மதம் சொன்னார்கள். அப்போதுதான் சுப்பு சார் இறந்தது எல்லாம் தெரிந்தது. அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. புளியந்தோப்புக்கு தினமும் செல்வதையும் ஆவலுடன்அவளுடன் பேசுவதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். அவள் ஒருமுறை அவளுக்கும் பேய் பிடிக்கும் என சொன்னது எனக்கு சிரிப்பாக இருந்தது. என்னை ஊரில் ஒருமாதிரியாக பேச ஆரம்பித்து இருந்தார்கள். என்ன  மாப்ளே புளியந்தோப்புல வேலை என நக்கல் பண்ணினார்கள். பயம் இருந்தாலும் வறட்டு தைரியம் என்னை விடாமல் துரத்தியது. அம்மாவும் கேள்வி பட்டார்கள்.

நேத்து எங்க போன என்றபோது அவளை பார்க்க போனேன் என்றேன். அன்பு இருக்குமிடத்தில் பயம் அற்றுப் போகிறது. அந்த நேரம் வீட்டுக்குள் வந்த அப்பா ஓங்கி என் கன்னத்தில் அறைந்தார். தெருப் பொறுக்கித் தனமா பண்ற என்ற வார்த்தைகள்தான் நிறைய வலி வந்தது. அப்பா நிறையவே பயம் காட்டினார். அம்மாவுக்கும் ஒரு அடி விழுந்தது என அம்மா பிற்பாடு சொன்னார். என் எதிரில் அம்மாவை ஒருநாளும் அப்பா அடித்தது இல்லை. இதுவே முதல் அடி என நினைக்கத் தோணியது.

நான் அவளை சென்று பார்ப்பதை தவிர்த்து இருந்தேன். சில நாட்கள் பின்னர் அம்மா எனும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். யாரு என்ன வேணும் என அப்பா குரல் உயர்த்தும் முன்னர் உள்ள வாம்மா, உட்கார் என்றார். புளியந்தோப்பு பெண் என அம்மா அப்பாவிடம் அப்போதுதான் அறிமுகம் பண்ணினார்.

நல்லா இருக்கியாம்மா என்ற அப்பாவின் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்பா வீட்டுக்கு எவர் வந்தாலும் மரியாதை தரும் வழக்கம் கொண்டவர். தவறானவர் எனத் தெரிந்தால் வீட்டுக்கு வெளியில் செமத்தியாக அவருக்கு அடி விழும். அவளுடன் நிறைய பேசினார். சாப்பிட்டு போம்மா என அப்பா சொன்னது கனவோ என்றே நினைத்தேன். அன்று நிறைய சாமி கும்பிட்டேன். அவள் மாலை வரை வீட்டில் இருந்தாள்.

வெளியில் சென்று திரும்பிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன என அம்மாவிடம் விசாரித்தேன். அவளை பெண் பார்க்க வருவதாகவும், நம்மை பெண் பார்க்க வரச் சொல்வதாகவும் சொன்னார். அப்பாவை நினைச்சா பயமா இருக்குடா என்றார். அப்பா வந்த பின்னர் அம்மா மென்று விழுங்கி எல்லாம் சொன்னார். அப்பா சரிம்மா ஆகட்டும் என்றாரே பார்க்கலாம். என்னால் என்னை நம்பவே முடியவில்லை. அந்த சனிக்கிழமை பெண் பார்க்க சென்றோம். மூத்தவ இவ இருக்க இளையவளுக்கு எப்படி கல்யாணம் பண்றதுன்னு இவளுக்கு அவசர கல்யாணம் என்று சொன்னார்கள். எல்லாம் பேசி முடிவானது. அவர்களும் சம்மதம் சொன்னார்கள்.

எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என எப்படி சொல்வது என தெரியாமல் தவித்தேன். என்ன ஒருமாதிரி இருக்க என அம்மா கேட்டபோது கல்யாணம் இப்ப பண்ணனுமா என யோசிப்பதாக சொன்னேன். என்ன என கேட்டார். அதில்லைம்மா, அழகா இருக்கறதை வைச்சி பேசறதை வைச்சி அவசர முடிவுன்னு யோசிக்கிறேன். அதுவும் நாலு காசு இன்னமும் சேர்த்து வைக்கலை அதான் பயமா இருக்கு என்றேன். அதற்குள் மூன்று மாதத்தில் கல்யாணம் என அப்பா நாள் குறித்து வந்தார்.

இதுவே பெரும் குழப்பம் தந்து கொண்டு இருந்தது.அவளிடம் கல்யாணம் வேண்டாம் என சொன்னால் அவளை வேறு எவருக்கேனும் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள் என்பது பயம் தந்து கொண்டு இருந்தது. அன்று இரவு நான் தொலைந்து போனதால் கல்யாணம் நின்று போனதாக கனவு கண்டேன். அதுவே தீர்வா? ஒருமுறை என் சித்தப்பா மகன் இப்படித்தான் தொலைந்து போனார். தேடி சலித்து விட்டோம். பதினைந்து நாட்கள் பின்னர் வீடு சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி சென்றுவிட எப்படியோ தப்பித்து கோவை நகரில் ஹோட்டலில் வேலை பார்த்து வீடு சேர்ந்த கதை திகிலூட்டியது. தனியாய் ஆதரவற்று அல்லல் படுவது துயரம் என்றே அன்று அறிந்தேன். அவளை சந்திக்க நினைத்தேன். என் மனதில் உள்ளதை தயங்கி தயங்கி சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் இல்லாமல் இருப்போம் என்றாள். சரியெனப்பட்டது.

கல்யாணம், பெண் என்றாலே நேர்மறை எண்ணம் கிடையாது போல, அடிமைக்கு வாழ்த்துகள் என்றார்கள். நிறைய அச்சப்பட்டேன். மணநாள் நெருங்கியது. திடீரென அவளது வீட்டில் இருந்து திருமணம் நிறுத்த வேண்டும் என சொன்ன செய்தி அதிர்ச்சி அளித்தது. அப்பா சென்று விசாரித்து வந்தார்கள். நானும் உடன் சென்று இருந்தேன். சித்தியின் பெண் ஓடிப்போன செய்தி அவர்களை நிலைகுலைய செய்தது. அவசரப்பட்டு ஓடிப் போய்ட்டாளே என அவர்கள் அரற்றியது கண்டு அப்பா ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தார். அப்பா இந்த முறை தனது நண்பர்களிடம் எல்லாம் சொல்லி தேடினார். சித்தப்பா பையனை தேடியது விட இப்போது சுலபமாக இருந்தது.

பையனின் வீடு போர்க்கோலம் பூண்டது. பெரும் சண்டை நடந்தேறியது. அப்பா மட்டும் இல்லை என்றால் ஒரு கொலை அன்று விழுந்து இருக்கும். நான் வீட்டுக்குள் பயத்தில் ஒளிந்து கொண்டேன். சாமி காப்பாத்து என வியர்த்துக் கொட்டிக்கொண்டு இருந்தது. வம்பு பண்ணியவர்களை அனாயசமாக அடித்து வீழ்த்தினார். உங்க குடும்பம், எங்க குடும்பம்தான் பிரச்சினை ஊருல இருக்கிற சல்லிப்பயக உள்ள வந்தா நடக்கறது வேற என அப்பாவின் குரலில் அங்கே இருந்தவர்கள் நடுங்கினார். அப்பாவின் நண்பர்கள் அங்கே எப்படி உடனே வந்தார்கள் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

வீட்டுக்குள் ஒளிந்து இருந்த என்னை ஏன்டா அங்க வெட்டு குத்து நடக்குது பொம்பளையாட்டம் உள்ள ஒளிஞ்சி வேடிக்கை பார்க்கிற, உசிரு மேல ஆசை? உன்னை என அறை தரப் போனார். மாமா என அவள் வந்து தடுத்தாள்.தோணுகால் நோக்கி நடந்தோம். அங்கதான் அவங்க இருக்காங்க என்றனர் அப்பாவின் நண்பர்கள். பையனின் குடும்பமும் உடன் வந்தது. அப்பா அவர்களைப் பார்த்து திட்டினார். அப்பாவின் வசவுகள் அவர்களை அழ வைத்தது. காதல்னா தைரியம் தரனும் இப்படி ஓடி ஒளிஞ்சா போதுமா? நானும் தான் அன்னைக்கு காதல் கல்யாணம் பண்ணினேன். அப்பாவின் கதை கேட்டு அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். எனக்கு உள்ளூர பயம் போனதே இல்லை.

எப்படி ஓடினீங்க, பயமா, தைரியமா.என் அப்பா அவனது குடும்பத்தை சம்மதிக்க வைத்தார். இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் நடக்கட்டும் என சொல்லிவிட்டு ஏதாவது தப்பு நடந்துச்சி நடக்கறதே வேற என அப்பாவின் கர்ஜனையை கேட்டு ஊரே நடுங்கியது. அப்பா நடந்த சிங்க நடையில் நான் சிறு எலியாய் தெரிந்தேன். இந்த வீரம் குறித்து அறியத் தொடங்கினேன்.

அப்பா, எப்படி வீரனாக இருப்பது என பயத்துடன் கேட்டேன். புறம் பேசுதல், மற்றவரை மட்டம் தட்டுதல், தவறாக நடத்தல் எல்லாம் செய்யாதே. அதுதான் வீரத்துக்கு முதல் படி. உன்னை உயர்வாக நினை என அப்பா சொன்னது பிடித்து இருந்தது. அப்பாவிடம் நெருங்கி பழக பயமாக இருக்கும். வீரனாக முடிவு எடுத்து அய்யனார், கருப்பசாமி என சாமி கும்பிட ஆரம்பித்தேன். அப்பாவின் வரவு செலவு நோட்டு புத்தகம் பார்த்தபோது அதில் ஒரு வாசகம் அன்று கண்ணில் பட்டது. கோழையாய் இருப்பவனே ஏழை.

ஒருமுறை ஊரில் பிரச்சினை வந்தது. அங்கே தப்பு செய்தவர்களை எல்லாம் புரட்டி எடுத்தேன். பின்னர் தான் அது கனவு என தெரிந்தது. மனம் தைரியம் வேணுமெனில் உடல் தைரியம் அவசியம். உடல் உறுதிபட உள்ளம் உறுதிப்பட்டது. நேர்மையாக் இருந்தேன். ஆமாம் இந்த பயத்துக்கு மரபணு உண்டா என தேடினேன். அவளிடம் கேட்டேன். உண்டு என்றாள். நமக்கு உண்டாகும் பயம் யாவும் இந்த மரபணுக்களின் செயலால் வருவது அதை நமது எண்ணத்தால் மாற்ற இயலும் என்றாள்

உயிரினங்களில் பயம் என்பது பாதுகாப்பு காரணி. தன்னை தற்காத்து கொள்ள பயமே முதல், பின்னர் தைரியம் என அறிந்தேன். பயந்த சுபாவங்கள் உடையவர்கள் வாழ்வில் முன்னேற முடிவதில்லை. ஆனால் இந்த சமூகம் பயத்தினால் ஒடுங்கிப் உள்ளது.

பயத்துடனே தனது குடும்பம் பிள்ளைகள் என வாழும் பெரும்பாலான மக்கள் மத்தியில் என் அப்பா வித்தியாசமாக இருந்தார். பயந்த சுபாவத்தை தொலைக்க ஆரம்பித்து இருந்தேன் அவளை கை  பிடித்ததும்.

Thursday 22 May 2014

இந்த கதை தெரிகிறதா?

பத்தாம் நூற்றாண்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் காம களியாட்டங்களில் தனது மனைவியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தான். இதனால் நாட்டின் மீது அவனால் அக்கறை செலுத்த முடியவில்லை. இதைக் கண்ட அமைச்சர் மன்னன் மீது வெறுப்பு அடைந்தான்.

''மன்னா, உங்களது நடவடிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலை தருகிறது''.

''என்ன அமைச்சரே, திடீரென உயரிய சிந்தனை''.

''மன்னா, நீங்கள் எப்போதும் மகாராணியாருடன் மஞ்சத்தில் பள்ளி கொண்டு இருப்பதால் மக்கள் பஞ்சத்தில் தத்தளிக்கிறார்கள்''

''அமைச்சராகிய நீங்கள் என்ன கிழித்து கொண்டு இருக்கிறீர்கள்?''

''நான் என்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறேன், மன்னன் சொல்லட்டும் சொல்லட்டும் என நண்டு சிண்டுகள் எல்லாம் என்னை ஏளனமிட்டு பேசி தொலைக்கின்றன''

''அமைச்சரே, மகாராணியார் கர்ப்பமாக இருக்கிறார், எனவே எனக்கு அவருடன் இருப்பதுதான் முக்கியம், நாடு அல்ல''

''மன்னா, இது மிகவும் தவறு. உங்களால் முடியாது எனில் நான் அதுவரை மன்னன் பொறுப்பில் இருந்துவிட்டு கவனித்து கொள்கிறேன், எப்போது நாட்டின் மீது அக்கறை கொள்ள முடியுமோ அப்போது வாருங்கள்''

''மன்னர் பதவி மீது ஆசை வந்துவிட்டதா அமைச்சரே''

''இல்லை மன்னா, மக்கள் நலம் தான் நமக்கு முக்கியம்''

''நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது, பஞ்சம் என நீங்கள் பஞ்சப்பாட்டு பாடுவது பதவிக்கு குறி வைப்பது போல் அல்லவா இருக்கிறது''

''எனது அமைச்சர் பதவியை துறந்து செல்வது தவிர வேறு இல்லை, நீங்கள் பள்ளியறை விட்டு வெளியே வருவதே இல்லை, எப்படி நாட்டின் நிலைமை புரியும். நீங்கள் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள், மன்னர் பதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்''

''அமைச்சரே, மன்னன் பதவியை எடுத்துக் கொள்ளும், நானே நாளை அறிவிக்கிறேன்''

''நல்லது மன்னா''

அமைச்சர் தன வீடு செல்கிறார். தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.

''நாதா, நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்''

''நாட்டிற்கே ஆலோசனை சொல்லும் நான் உன் ஆலோசனை கேட்கும் நிலை வந்துவிட்டது, என்ன சொல்''

''அரசாட்சி ஏற்றதும் அந்த காமத்தில் மூழ்கி கிடக்கும் அந்த நயவஞ்சக அரசரை கொன்று விடுங்கள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த பாதகியை நாடு கடத்தி விடுங்கள்''

''உனக்கு எதற்கு இந்த வன்மம்''

''என்னிடம் அந்த மன்னர் பலமுறை தவறாக நடக்க முயன்றார், இதை உங்களிடம் எப்படி சொல்வது என நினைத்து இருந்தேன்''

''உன்னிடமே அப்படி நடந்து கொண்டானா?''

''ஆம்''

அமைச்சர் யோசித்தார், மன்னர் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தனது மனைவிக்கு எப்போதும் மகாராணியாக இருக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே அவள் சொல்படி செய்வோம் என நினைத்தான்.

அமைச்சர் அரசன் ஆனான். அரசரை கொன்றான். மகாராணி நாடு கடத்தப்பட்டார். மகாராணி ஒரு பையன் பெற்று எடுத்தார. அந்த பையனிடம் தனது கதைகள் சொல்லி வளர்த்தார்.

'அம்மா, எப்படியாவது அந்த அமைச்சரை பழி தீர்த்து நாட்டை கைப்பற்றுவேன்'

''ஆனால் உன் அப்பா போல் பெண்ணிடத்தில் மயங்கி இருக்காது இருந்தால் மட்டுமே சாத்தியம்'

''நான் அப்படி செல்ல மாட்டேன், அப்படி சென்றாலும் இந்த அமைச்சரை பழி வாங்காமல் விடமாட்டேன்''

பையன் பல கலைகள் கற்று வளர்ந்தான்.

''அம்மா, இந்த பெண் உனக்கு பிடித்து இருக்கிறதா'

''என்ன காரியம் செய்ய தொடங்கி இருக்கிறாய். உனது அப்பாவின் பாதையை நீயும் தேர்ந்து எடுக்கிறாயா'

'பதில் சொல்ல இயலாது, அந்த அமைச்சர் அழிவது உறுதி'

முதலில் ஒரு பெண், இரண்டாவது ஒரு பெண் என ஏழு பெண்களை அழைத்து வந்து அனைவரையும் மணம் முடித்தான்.

''நீ செய்வது மிகவும் மோசமான காரியம்''

''நான் பெண் பித்தன் இல்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வழியில் உதவியாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் எவ்வித மன வேறுபாடு இல்லை. எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை''

''உனது செயல் அழிவுக்கு தான் மகனே''

''அம்மா, இந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொரு சிற்றரசர்களின் இளவரசிகள். அவர்களை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்தேன், இப்போது புரிகிறதா ராஜதந்திரம்''

''மகனே''

''நாளை போர் நடக்க இருக்கிறது, வாழ்த்தி அனுப்புங்கள்''

தனது தந்தையின் நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடுகிறான்.

''அமைச்சரே''

''நான் மன்னன்''

''என் தந்தைக்கு நீ தான் அமைச்சர்.என்னை எவர் என தெரிகிறதா''

''அன்றே உன்னை நான் கொன்று இருக்க வேண்டும்''

''அது உன் முட்டாள்தனம்''

''என் தந்தையை கொன்ற உன்னை கொல்வது எனக்கு உத்தமம்''

''என்னை ஒன்றும் செய்து விடாதே, நாங்கள் வேறு எங்கேனும் பிழைத்து போகிறோம்''

''நாளை முடிவு சொல்கிறேன்''

தனது குருவை சென்று பார்க்கிறான்

''குருவே வணக்கம்''

''போர் எடுத்து சென்றாயா''

''ஆம்''

''நீ இப்படி நடந்து கொள்வது முறையல்ல, நீ இறைவன் பணி ஆற்றி மகிழ்ந்து இருக்க வேண்டும்''

''அந்த அமைச்சரை பழி வாங்க வேண்டும்''

''கூடாது, நீ பல பெண்களை மணம் முடித்தது எல்லாம் இந்த இறைவன் அடி சேரத்தான், அதற்காகவே நான் எதுவும் உன்னை சொல்ல வில்லை. நீ அரசராக இருந்து கொள் ஆனால் கொலைப்பாதகம் செய்யாதே அன்பை, அமைதியை உலகில் நிலைநாட்டு''

''அப்படியெனில் நான் என்ன செய்ய வேண்டும்''

''ஒரு யோசனை சொல்கிறேன்,கேள்''

''சொல்லுங்கள் குருவே''

''அந்த அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடித்துக் கொள்''

''சரி குருவே''

''அவர்கள் உனக்கு எதிரியாக இருக்கமாட்டார்கள். இப்போது எல்லா ராஜ்ஜியங்களிலும் நீயே அரசர், இளவரசர் எல்லாம். எனவே இறைப்பணி ஆற்று. உலகில் அமைதி ஒன்றே குறிக்கோள். அன்பை நிலைநாட்டிட போராடு''

''அப்படியே ஆகட்டும் குருவே''

அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடிக்கிறான். ரத்தமும், போரும் என கண்ட பூமி அன்றிலிருந்து அமைதி உருவாய் தொடங்கியது.

இந்த கதைக் கருவை திருடிய இடம் நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பொறுத்து ஒன்று நீங்கள் தமிழ்ப் புலமை உடையவர்கள் அல்லது சினிமாப் பைத்தியம்.

Monday 19 May 2014

வானத்தைக் காணோம்

'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.

'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'

'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.

'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'

'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'

'பக்தா, என்ன உளறுகிறாய்?'

'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'

'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'

'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'

'பக்தா, அது வேறு இது வேறு'

'எது வேறு'

'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'

'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கிறது, வானம் பூமிக்கே சொந்தம்'

'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'

'வானத்தைக்  காணோம்'

'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா?'

'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா?'

'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'

'நான் எதற்கு செல்ல வேண்டும்'

'அங்கே வானம் இருக்கும்'

'நமது வானம் அங்கே இருக்குமோ?''

'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'

'எனக்கு புரியும்படி சொல்லுங்கள்'

'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'

'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா?

'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'

'இப்ப என்ன கேட்டுட்டேன்'

'வானத்தைக்  காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'

'சொல்லுங்க சாமி'

'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'

'வட்டமாகவா, நீளமாகவா சாமி'

'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'

'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த  வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'

'பாய் ஒரு பிரபஞ்சம்'

'இல்லை பாய் ஒரு வானம்' 

'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'

'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'

'அந்த வானத்தைக் காணோம் சாமி'

எந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற

வெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து  இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.

வானம் என்றால் என்ன?

'A sky is the region of atmosphere or outer space seen from the earth' 

ஒருவேளை செவ்வாயில் நாம் இருந்தால் 'A sky is the region of atmosphere or outer space seen from the mars' 



Tuesday 13 May 2014

டிவிட்டப் மதுரையில் நானிருந்தேன்

பக்தா, மதுரையில் நடக்கும் டிவிட்டப் விழாவிற்கு கலந்து கொள்ள வில்லையா என்று சாமியார் கேட்டதும் நான் பயந்து போனேன்.

''என்ன சொல்கிறீர்கள் சாமி?''

''ட்விட்டரில் 140 எழுத்துக்குள் எழுதும் கீச்சர்கள் ஒன்று கூடினார்களே, எப்படி இந்த உலகத்தை மேம்படுத்தி செல்வது என, அதில் நீ கலந்து கொள்ளவில்லையா?''

''எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சாமி?''

''நீயும் ஒரு கீச்சர் தானே''

''எப்பொழுது நான் என்னை கீச்சர் என சொன்னேன், நான் உங்கள் பக்தனே இல்லை, இதில் எப்படி கீச்சர் என்பதெல்லாம்?''

''நீ முழு நேர கீச்சர் ஆகிவிட்டாய்?, என்னோடு நீ பேசுவதே இல்லை''

''இங்கே பாருங்கள், என்னை தொல்லை செய்யாதீர்கள், வைகுண்டம் போக வேண்டியதுதானே''

''மானிடர்கள் தங்களில் பொய் உருவம் உருவாக்கிக் கொள்கிறார்கள், அதில் அந்த கீச்சர்கள் மிகவும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது நீ அறிந்ததுதானே''

''எனக்கு அதில் ஆர்வம் இல்லை, எவரோ என நினைத்துக் கொண்டு என்னிடம் வந்து பேசுகிறீர்கள்''

''பக்தா, யாம் உமது சித்து விளையாட்டு எல்லாம் அறிவோம்''

''என்னை நீங்க கலங்க படுத்த நினைத்து வந்து இருக்கிறீர்கள்''

''பக்தா, பொய்யாய் வாழ்வது பெரிய பாவம். நீ வேடம் தரித்து சென்றதை யாம் அறிவோம்''

''என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் கீச்சரும் அல்ல, கோச்சரும் அல்ல''

''பக்தா, இந்த கவிதை உன்னுடையது தானே''

''எந்த கவிதை''

''ஒன்றென கூடி இருக்கும் தமிழே
உலகம் நமதென ஒலிக்கும் தமிழே
நம் சிந்தையால் வளரும் தமிழ்
மகிழ்ந்தது நமது கூட்டம் கண்டு

எழுத்தில் நம்மை கண்டோம்
வருத்தமின்றி ரசித்து மகிழ்ந்தோம்
தமிழால் சாதித்தது நிறைய
சேர்ந்தோமே இன்று மீண்டும் அதை உரைக்க

ஊர் புகழ் உலகப் புகழ்
எல்லாம் தமிழ் தந்தது
எழுத்து கொண்ட பிம்பம்
எல்லாம் முன்னால் நின்றது
தமிழ் வளர்ப்போம், சிறப்போம்''

''சாமி, இது நான் எழுதலை, ஏன் இப்படி''

''பக்தா, இந்த கவிதை நீ எழுதியது, இதை நீ அங்கே பிறிதொருவரை வாசிக்க வைத்து ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்து இருந்தாய், எனக்கு தெரியாதா?''

''உங்கள் கற்பனைக்கு அளவில்லை, நான் எழுதலை, நான் போகவும் இல்லை''

''எத்தனை சிறப்பாக இருந்தது தெரியுமா, ஆடலும், பாடலுமாய் சந்தோசத்தில் திளைத்து இருந்தார்கள், நீயும் தான். நீ அவளைத் தேடித்தான் அங்கே சென்றதும் அறிவேன்''

''போதும் நிறுத்துங்கள், நான் செல்லவே இல்லை''

''நீ இருந்தாய், பெண்கள் பெயரில் எழுதும் கீச்சரில் நீயும் ஒருவன்''

''இல்லவே இல்லை, பழி வேண்டாம்''

''பக்தா, என்னிடம் பொய் சொன்னது போதும். அது நீதான்''

''பெண் வேடமிட்டு எழுதி நான் என்ன சாதிக்கபோகிறேன்''

''பிறரை ஏமாற்றும் நோக்கம் இருக்கிறதே''

''எனக்கு எழுதவே தெரியாது''

''பக்தா, மெச்சினேன் உமது வீர தீரத்தை, நீ அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தாய்''

சட்டென விழித்துப் பார்த்தேன், இருளாக தெரிந்தது. என்னவென எழுந்து எனது மாடி அறையின் சன்னல் திறந்து பார்த்தேன்.

எவரோ ஒருவர் சத்தமாக பேசிய ஊர்ப்புகழ் உலகப்புகழ் எல்லாம் தமிழ் தந்தது என எனது அறையின் உள்ளே பாய்ந்து சென்றது.

மதியம் உறங்காதேனு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா என அம்மா சப்தம் போட்டுக்கொண்டே மாடிக்கு வந்து கொண்டு இருந்தார்.


Monday 28 April 2014

அருள்வாக்கு - அசரீரி

சின்ன சின்ன மழைத் துளிகள் பட்டு மண் மணம் எழுப்பிக் கொண்டு இருந்தது. மண் மணத்தை நுகர்ந்தாவரே நடக்கலானான் குரூரம் எண்ணம் படைத்த கோபாலன். எவரையாவது கவிழ்த்து விடவேண்டும் என்பதே இவனது ஆவல். இருப்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. ஆனால் விளையாட்டுத்தனம் இன்னும் இவனை விட்டு போகவில்லை. நல்ல மாநிறம், நல்ல உயரம், குறுகிய விழிகள், குறுகிய உடல்.

இவனது குணங்களை கண்டு எவருமே இவனுக்கு பொண்ணு தர முன்வருவதே இல்லை. இவனுக்கு கூட ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கேசவன். கேசவன் நல்ல உயரம், கருத்த நிறம். பெரிய விழிகள். சில வருடங்கள் முன்னர் சிரித்த முகத்துடன் வலம் வருவான். கேசவன், கோபாலனை விட மூன்று வயது அதிகம். கடந்த வருடம் திருமணம் ஆகி இருந்தது. நல்ல மனைவி. ஆனால் கேசவன் ஒரு பெண்ணை காதலித்து குடும்ப சூழலால் அந்த பெண்ணை மணம் முடிக்காது போய் அந்த பெண் விஷம் குடித்து இறந்து போனாள் என்றால் எவருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நடந்தது.

கேசவனின் குடும்பத்தில் அம்மா, அப்பா, அவனுக்கு என ஒரு தங்கை. தங்கை மிக நல்ல நிறம். அழகானவர். நன்கு படித்து இருந்தார். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள். அனேகமாக சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்றே நம்பி இருந்தார்கள்.

கேசவனும், கோபாலனும் எப்படி நண்பர்கள் ஆனால் என்பதே ஒரு சுவாரஸ்யம். ஒருமுறை சிறுவயதில் ஆசிரியர் கேசவனை நன்றாக அடித்துவிட அழுதபடி நின்று இருந்தான் கேசவன். எதுக்கு அழற என விசயம் தெரிந்து அந்த ஆசிரியரை அவருக்கே தெரியாமல் கோபாலன் கல்லால் அடித்தது கேசவனுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படித்தான் முதல் பழக்கம். இப்படி ஏதேனும் பிரச்சினை வரும்போதெல்லாம் கோபாலன் கேசவனுக்கு உதவி செய்வதில் குறியாக இருந்தான். அதற்கு காரணம் கேசவனின் தங்கை அவனது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள் என்பதை எல்லாமா எழுதி வைக்க வேண்டும்.

கோபாலனுக்கு கேசவனின் தங்கை வசந்தி மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதை கேசவனின் மீது காட்டி கொண்டு இருந்தான். நண்பன் என கேசவனின் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டான் கோபாலன். இப்படி முன் அறிவிப்பு எல்லாம் எழுதி எதை எதையோ நியாயப்படுத்த வேண்டி இருக்கிறது. சரி கதைக்கு வருவோம். என்னா கதை உலகம்.

''கேசவா, என்ன ஒரு மாதிரியாக இருக்க''

''ஒன்னுமில்லைடா''

''உன்னோட ஒய்ப் உன்னை அடிச்சிட்டாங்களா''

''அது எல்லாம் ஒண்ணுமில்லை''

''உன்னோட தங்கச்சிக்கு நல்ல வரன் அமையலையா''

''தங்கச்சிதான் பிரச்சினை''

''என்ன பிரச்சினை?''

''தங்கச்சிக்கு பிறக்க போற பொண்ணுதான் என்னை கொல்லுமாம்''

''எந்த படுபாவி அப்படி சொன்னது?''

''பனைமரத்து ஜோசியர் அருள்வாக்கு அய்யாவு தான் சொன்னார்''

''அவரை எதுக்கு பாக்க போன''

''நல்ல அருள்வாக்கு சொல்றாருறு சொன்னாங்கனு நான் பார்க்க போனேன், ஆனா இப்படி தலையில இடி விழறமாதிரி பண்ணிட்டார்''

''எத்தனாவது குழந்தை, எப்படி கொல்லும், எதுக்கு கொல்லும், எத்தனை வயசில கொல்லும் இதெல்லாம் விளக்கமா சொன்னாரா?''

''அதெல்லாம் சொல்லலை, ஆனா முத பொண்ணு குழந்தை ஐஞ்சு வயசு ஆனப்பறம் கொல்லுமுனு சொன்னார்''

''பஞ்ச பரதேசி, தன்னோட பொழைப்புக்காக எப்படி எல்லாம் கதைவிட்டு திரியறான் அந்த ஆளு, அவரைப் போய் நீ நம்புறியே''

''இல்லை, அவர் ரொம்ப பேருக்கு எல்லாம் சொல்றதில்லை, குறிப்பிட்ட பேருக்கு சொல்றார் எல்லாம் அப்படியே நடக்குது''

''இப்ப என்ன பண்ணலாம்''

''எங்காவது தனியா போயிரலாம்னு இருக்கேன்''

''நீ எதுக்கு போற, உன் தங்கச்சிய கொன்னு போட்டுருவோமா''

''என்ன சொல்ற?''

''பிரச்சினை, உன்னோட தங்கச்சி பொண்ணு தானே, உன் தங்கச்சிய கொன்னு போட்டா பிரச்சினை முடிஞ்சது''

''ஆனா, எப்படியாவது இது நடந்தே தீரும்னு சொல்லி இருக்கார்''

''அவர் கிடக்கார், ஒன்னு கொன்னு போடுவோம், இல்லை நான் கட்டிக்கிறேன், குழந்தையே பிறக்காம நான் பாத்துகிறேன்''

''உன் புத்திய காட்டுற பாத்தியா. அவளை கொன்னா காலகாலத்திற்கும் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்''

''இங்க பாரு, உன்னை காப்பாத்திக்க இரண்டே வழிதான், என்ன சொல்ற''

''உன்னை நம்பலாமா? ஆனா உனக்கு வீட்டுல பொண்ணு தரமாட்டாங்களே''

''நா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறவா?''

''பேசாம என் தங்கையை குடும்ப கட்டுப்பாடு பண்ண வைச்சிட்டா ஈசியா போயிரும்''

''அவளை கொல்றது ஈசி, ஆனா அவளை குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்றது எல்லாம் கஷ்டம்''

''அவகிட்ட இந்த விசயத்தை சொல்லி என்னை காப்பாதிக்கிரலாமா''

''நாசமா போச்சு, இதெல்லாம் நடக்காது''

''அப்ப என்னதான் பண்றது''

''குழந்தை பிறந்தப்பறம் எங்கனயாவது விட்டுரலாம், இது மூணாவது வழி, அல்லது குழந்தைய கொன்னுரலாம் இது நாலாவது வழி''

''இல்லை, அவ கல்யாணம் பண்ணவ கூடாது''

''சரி பார்ப்போம்''

கோபாலன் வசந்தியை கல்யாணம் பண்ணிக்கொள்வது என நினைத்து இருந்த திட்டம் பாழாகிப் போனது. கேசவன் நிச்சயம் இனி சம்மதிக்கமாட்டான். இந்த விபரத்தை வசந்தியிடம் சென்று சொல்லி வைத்தால் என்ன என யோசித்தான் கோபாலன்.

''வசந்தி, உன்னை உன் அண்ணன் கொல்லப் போறான், உன்னோட முத குழந்தை ஐஞ்சி வயசில உன் அண்ணனை கொல்லுமாம். அய்யாவு சொன்னாராம்''

''நிசமாவா சொல்ற, என் அண்ணன் அப்படி பண்ணாது, நீதான் என்னை மிரட்டுற''

''வேணும்னா அய்யாவு கிட்ட போயி கேளு''

வசந்தி அய்யாவுவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் சொன்ன விசயத்தை தெரிந்து கொண்டாள். வீட்டில் அனைவருக்கும் தெரிந்தது. கேசவனின் மனைவி யாசவி வசந்தியை கெஞ்சி கூத்தாடினாள். அது எல்லாம் புரட்டு என கேசவனின் பெற்றோர் சமாதானம் செய்து பார்த்தார்கள். வசந்தி கடைசியாக திருமணம் பண்ண மாட்டேன், குழந்தை பெற்று கொள்ள மாட்டேன் என உறுதி கொடுத்தாள்.

ஏழரை வருடங்கள் கழிந்தது. வசந்தியின் தோழி மாதவி தனது கணவன் வசந்தராஜ், தன ஐந்து வயது பெண் குழந்தை சுபி உடன் வசந்தி வீட்டிற்கு  எப்போதாவது வருவது போல பிறந்தநாள் அழைப்புக்கு சொல்ல வந்து இருந்தார்கள். வசந்தி திருமணம் முடிக்காமலே இன்னும் இருந்தார்.

''சுபிக்கு ஐஞ்சு வயசு நேத்து முடிஞ்சிருச்சி, அடுத்த வாரம் சனிக்கிழமை பிறந்தநாள், வந்துருடி''

''எப்படி வளர்ந்துட்டா, வந்துருறேன்''

சுபியை கேசவன் தூக்கி வைத்து கொண்டு தனது அறைக்கு சென்று பொருட்கள் காமித்து கொண்டு இருந்தான். கேசவன் அம்மா எல்லோருக்கும் காபி போட்டு வந்து இருந்தார். கேசவனுக்கும் அவனது அறையில் வைத்து சென்று இருந்தார். கேசவன் சுபியை கீழே விட்டுவிட்டு தனது அறைக்கு சென்றான்.

மாதவி, சுபி, வசந்தராஜ் கிளம்பி சென்றார்கள்.

''ஐயோ'' என  மாதவி கத்தினாள்.

எல்லோரும் ஓடிப் போய் பார்த்தார்கள். கேசவன் மரணம் அடைந்து இருந்தான். மாத்திரை பாட்டில் ஒன்று மூடி கழன்று  மேசைக்கு அடியில் கீழே விழுந்து கிடந்தது.

அருள்வாக்கு அய்யாவு சொன்னது சரியாகவே பலித்தது. எல்லோரும் வசந்தியை பார்த்தார்கள். வசந்தி தலையை குனிந்தாள். 

சரி இந்த ஏழரை வருடங்கள் முன்னர் நடந்த கதை ஒன்று சொல்வோம்.

மாதவிக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லை. என்ன பிரச்சினை என அறிந்த போது மாதவியிடம் உருவாகும் கரு முட்டை மிகவும் பலவீனமாக இருந்தது. முதிர்ச்சி அடைய கரு முட்டை மறுத்தன. முதிர்ச்சி அடையாத கரு முட்டைகள் கருத்தரிப்பதில்லை. FSH (follicle stimulating hormone) சிகிச்சை எடுத்த பின்னரும் எதுவும் பலிக்கவில்லை. IVF (in vitro fertilisation) கூட செய்து பார்த்தார்கள். அப்போதுதான் வசந்தியை அணுகினாள் மாதவி.

''வசந்தி, எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?''

''என்ன மாதவி?''

''எனக்கு குழந்தை பாக்கியமே இல்லை, குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு, ரொம்ப முயற்சி பண்ணினோம், ஆனா ஒன்னும் முடியலை. என்னை என் புருஷன் வெறுத்து ஒதுக்கிருவாரோனு பயமா இருக்கு. இன்னொரு முறை முயற்சி பண்ணுவோம், இல்லைன்னா வேறு வழி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்''

''தத்து எடுத்துகிரலாமே''

''நான் பெறணும், அப்பதான் அவர் பாசமா இருப்பார்''

''என்னது இப்படி பேசற''

''என்னோட நிலைமை அப்படி இருக்கு''

மாதவியின் அழுகை வசந்தியை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

''நான் என்ன பண்ணனும்''

''உன்னோட கரு முட்டைகள் தர முடியுமா?, டாக்டர்கிட்ட பேசி இதை வெளிய சொல்லாம பாத்துக்கிறேன்''

''இல்லை, அது வந்து''

''பிளீஸ், முடியாதுன்னு சொல்லாத, நான் செத்துருவேன்''

''கிறுக்கு மாதிரி பேசாத, எனக்கு பிறக்க போற முத பொண்ணு என் அண்ணணனை கொன்னுரும்னு சொல்லி தான் எனக்கு கல்யாணமே பண்ண வைக்க வேணாம்னு வீட்டுல சொல்றாங்க''

''உனக்கு எங்க பிறக்க போது, எனக்கு தானே பிறக்க போகுது, அது எல்லாம் அப்படி நடக்காது, எனக்கு இந்த உதவி செய்டி, உன்னோட உயிர்த்தோழி உயிரோட இருக்க வேணாமா சொல்லுடி''

மாதவியின் அழுகையும் அந்த பேச்சும் வசந்தியின் மதிதனை வேலை செய்யாமல் தடுத்தது. சரி என சம்மதம் தந்தாள்.

வசந்தியின் கரு முட்டை எடுக்கப்பட்டு, வசந்தராஜின் விந்துவுடன் இணைத்து குழந்தை கரு உருவானதும் மாதவியில் கருப்பையில் வைத்து பிறந்தவளே இந்த சுபி என்பது வசந்திக்கும், மாதவிக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும்.

இப்போது வருவோம். நிறைய மருந்து உட்கொண்டதால் கேசவன் உயிர் போனது என மருத்துவ அறிக்கை வந்தது. தற்கொலை என குறித்து வைத்தார்கள். சுபி விபரம் அறியாமல் அவளது வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள்

வசந்திக்கு தன்  குழந்தைதான் தன் அண்ணனை கொன்றது என புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.

(முற்றும்)

Friday 25 April 2014

கலாச்சார சீரழிவு

கிட்டத்தட்ட 23 வருடங்கள் முன்னர் ஒரு கதை எழுதினேன்.

''அண்ணன் தங்கை
உடன் பிறந்தவர்கள்
சிறுவயதில்  பிரிகிறார்கள்.

ஒரு கால கட்டத்தில்
கல்லூரியில் பயில்கிறார்கள்
இருவருக்கும் காதல் வருகிறது

திருமணம் வரை வருகிறார்கள்
உண்மை தெரிய வருகிறது
திருமணத்திற்கு தடை போடபடுகிறது

இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். ''

இதை காந்தியடிகளின் 125வது பிறந்த தினம் என நினைக்கிறேன். அனுப்ப நினைத்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டேன். அப்போது அவர்களுக்குள் காதல் மட்டுமா, களவும் இருந்ததா என்றெல்லாம் விவரிக்கும் தைரியம் இல்லை.

அதற்கு பின்னர் மறுபதிப்பு என ஒரு கதை எழுதி அனுப்பி ஆறுதல் பரிசு கிடைத்தது. வசன கவிதையில் எழுதி இருந்தேன்.

எப்போது அண்ணன் தங்கை கதையை எழுதி தூக்கி குப்பையில் போட்டேனோ அடுத்த வருடமே  அது போன்ற கதை படிக்க நேர்ந்தது. நொந்து கொண்டேன்.

திடீரென ஒரு கதை சிந்தனை.

அன்னை மகன்.
மகன் சிறுவயதில் தொலைந்து போகிறான்

இன்னுமொரு மகள் பிறக்கிறாள்
மகள் பிறந்த சில வருடம்
கணவன் இறந்து போகிறார்.

தொலைந்த மகனை
பதினெட்டு வயதில் காண்கிறாள் அன்னை

இருவரும் காதல் கொள்கிறார்கள்
தாய் மகன் என தெரியாமல்.

தாய் மீது மகன் காதல் கொள்வதை கூட கலாச்சார சீரழிவு என்றே சமூகம் கருதும்.

காதலை காமத்துடன் இணைத்து பார்த்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்க இயலும். கதை முடிகிறது. இதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிட்டு போகிறேன். 

Wednesday 2 April 2014

காதலே இல்லைன்னு சொன்னா

அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.
ஒருவழியாய் தைரியம் வரவழைத்து 'உன்னை எனக்குப் பிடிச்சி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன்' என சொன்னதும் 'செருப்பு பிஞ்சிரும்' என திட்டிவிட்டு போய்விட்டாள்.

எனக்கு அவமானமாக இருந்தது. அவளை பின் தொடர்ந்துசெல்ல என் மனம் இடம் தரவில்லை. வாழ்வது வீண் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். வீட்டில் சொல்லவும் தயக்கம்.

ஒருநாள் எதேச்சையாக அவளைப்  பார்த்தேன். பார்த்த மறுகணம் தலைகுனிந்தே இடம் அகன்றேன். இப்படியாக எனது காதல் தத்தளித்தது. அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வர சொன்னேன். அம்மா பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.

வாழ்வா சாவா என போராடிக் கொண்டு இருந்தேன். வாழ்வது என முடிவு எடுத்தேன். 

சாமியார் ஆகிவிட்டேன். 

Wednesday 26 March 2014

அறிவுகெட்ட

உன்னை நான் காதலிச்சேன்.
என்னை நீ காதலிச்ச.
எனக்குப் பிடிச்சது
உனக்குப் பிடிச்சது.
கல்யாணம் பண்ணிக்கலாம்னு
திட்டம் போட்டோம்.
நீயும்தான் சரின்னு சொன்ன.

அடி பாதகத்தி
காதலுல வந்த சின்ன சின்ன
சண்டைகள் எல்லாம்
அன்பின் தடயம்னு
நானும்தான் நம்பி இருந்தேன்
உன்னோட கோவத்தை எல்லாம்
பாசம்னு கதை படிச்சேன்

போராடி வீட்டுல வாங்கிய
சம்மதம் வைச்சி
போட்டேன் மூணு முடிச்சி
நம்ம சந்தோசத்துக்கு
பெரிய வலை விரிச்சி
நீயும்தான் கழுத்து நீட்டின

என்னைவிட நீ பெரிய படிப்பு
என்னைவிட நீ பெரிய பதவி
என்னைவிட நீ பேரழகி
எப்பவுமே பேதம் பாக்கலையே
இதையெல்லாம் என்கிட்டே
ஒருபோதும் நீ கேட்கலையே

ஆத்தாடி நீயும் என்
ஆசைநாயகி ஆன பின்னே
எல்லாமும் வித்தியாசம் ஆகுமா
இதையே ஒரு காரணம்
என நீ சொன்னா தகுமா

உன்னோட சேவகனா
நான் கிடக்கேன்
என்னை நீயும்
கை வுட்ராதே
கைகட்டி நானும் நிக்கிறேன்
உன் கண் பார்வையில்
இருந்து என்னை ஒதுக்காதே
பலமுறை கேட்டாலும்
படுபாவி உன் காது செவிடா

பாவ புண்ணியம் பாக்காம
கோர்ட் வாசப்படி
மிதிக்க வைச்சே
உன்னை கொடுமை
படுத்துறேனு கொடி பிடிச்ச
படிப்பு, பதவின்னு
சொல்லி வைச்ச

சண்டாள பயபுள்ளைக
உண்மை தெரியாம
நீதி சொன்னாக
இதை சரித்திரத்தில
தப்பாக குறிச்சி வைப்பாங்களே

எல்லாம் இந்த
அறிவுகெட்ட





Friday 14 March 2014

அவள் என்னை ஒதுக்கினாள்

என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என தெரியாது. நான், என் மாமா மகள், என் மனைவி, என்னுடன் வேலை பார்த்த பெண் அப்புறம் புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண் என மூன்று வருடங்கள் முன்னர் ஒரு சின்ன கதை சொல்லி இருந்தேன். அந்த கதைக்கு அப்புறம் என்னைப் பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏதும் வரவில்லை. ஆனால் இப்போது ஒரே ஒரு தடவை மட்டும் பேசிவிட்டு சென்று விடலாம் என இருக்கிறேன். மீண்டும் எப்போது நான் வருவேன் என எனக்குத் தெரியாது. இனிமேல் இது குறித்து நான் உங்களிடம் சொல்லாமலே போகலாம்.

கல்யாணம் ஆகி நான்கே வருடங்கள் தான் ஆகி இருந்தது. ஒரு மகள் பிறந்து ஓராண்டு முடிந்து இருந்தது. புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண்ணின் மீதான காதல் துளிர் விட்டதும் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் காதலை உணர்ந்து இருந்தேன். அன்று இரவு மனைவியிடம் எனக்கு நேர்ந்து இருக்கும் விஷயத்தை சொன்னதும் நீங்கள் நம்பினால் நம்புங்கள், கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து எனது தலையில் ஓங்கி அடித்து விட்டாள். எனக்கு வலி பொறுக்க இயலவில்லை. தலை புடைத்து வீங்கி நின்றது.

'ஏன்டா, கட்டின பொண்டாட்டி நான் இருக்க இன்னொருத்தி மேல காதல்னு சூடு சொரணை இல்லாம அதுவும் என்கிட்டே வந்து சொல்வ' அதுதான் முதல் தடவை என் மனைவி என் மீது இத்தனை அளவுக்கு அதிகமான அகங்காரம் கொண்டது.

அன்று இரவு முழுவதும் விசும்பிக் கொண்டு இருந்தாள். 'எடுபட்ட பயலே, இனிமே எவளைப் பத்தியாவது பேசின உன்னை கொலை பண்ண கூட தயங்கமாட்டேன். உன்னை நம்பி தனிக்குடித்தனம் வந்தேன் பாரு, அது என் தப்பு தான். நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாரிச்சு தனிச்சி வாழுறேன் பாரு' என்று அந்த விசும்பலின் ஊடே சொல்லிக் கொண்டு இருந்தவள் எப்போது தூங்கினாள் எனத் தெரியாது. காலையில் அவளைப் பார்த்தபோது அவளது கண்கள் எல்லாம் வீங்கி இருந்தது. கொஞ்சமும் கோபம் குறையாமல் இருந்தாள். நான் என் தலை வீக்கம் குறையட்டும் என மூன்று நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்தேன். எத்தனையோ சமாதானம் பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவள் கொஞ்சமும் கேட்பதாக இல்லை.

கொஞ்சம் வீக்கம் அன்றே குறைந்துவிட்டது. கடைக்கு சென்று சாப்பிடலாம்  வா என அழைத்தேன். 'ஏன் அவளுக எவளாச்சும் அங்க வரேன்னு சொல்லி இருக்காளுகளா' என்று அவளே அவர்களை பற்றி பேசினாள். நான் இல்லை என்று சொல்லிவிட்டு அதிகம் பேசவில்லை. இங்க பாரு, நீயில்லாம எனக்கு வேறு யாரும் இல்லை. ஏதோ புத்தி கொஞ்சம் புரண்டு போச்சு, இனிமே இப்படி நடக்கமாட்டேன் என்று இத்தோடு ஆயிரம் தடவை மேல் சொல்லி இருப்பேன்.

'உன்னை நம்பி எப்படி இருக்கிறது, அன்னைக்கே அந்த சிறுக்கி வீட்டுக்கு வந்தப்ப காலை வெட்டி அனுப்பி இருக்கணும். நீ எவளோடையும் போயிர கூடாதேனுதான் நான் உன்னோட உறவு வைக்க சம்மதிச்சேன். ஆனா நீ இப்ப காதல்னு சொல்லிட்டு கண்டவளோட அலைய ஆசைப்படற. உனக்கு இனிமே என்னோட உறவு கிடையாது, ஒட்டும் கிடையாது. அப்படி உனக்கு சுகம் தேவைப்பட்டுச்சினா அதான் இருக்காளுக அந்த ரெண்டு பேரு, அவள்கிட்ட போ' இப்படி எல்லாம் வார்த்தைகளை அவள் உதிர்த்து கொட்டுவாள் என ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை. அவளின் கோபம் தணியும் என்றே பார்த்தேன். ஆனால் வாரம் ஆகியது. கோபத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு சின்ன விசயத்துக்கு இத்தனை தண்டனையா என என்னை நானே நொந்து கொண்டேன். ஒரு மாதம் கடந்து போனது. அவள் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்தாள். அவளை கல்யாணம் கட்டியபோது எப்படி என்னை பிரமச்சரியம் அனுபவிக்க வைத்தாளோ அதைப்போலவே இப்போதும் என்னை அனுபவிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இந்த சூழல் காரணமாக நான் பக்கத்து அலுவலக பெண்ணை மட்டுமல்ல எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதை தவிர்த்து இருந்தேன்.

எனக்கு வேலை கிடைச்சிருக்கு. உன் அம்மாகிட்ட பேசினேன், அவங்க வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க, என்னோட அம்மாவும் அப்பாவும் நம்மளோட தங்கி இருப்பாங்க என சொன்னதும் எனக்கு மறுத்து பேச மனம் வரவில்லை. உன் விருப்பப்படியே செய் என சொல்லிவிட்டு வேலைக்கு செல்வது வீட்டுக்கு வருவது மகளுடன் கொஞ்சி விளையாடுவது என்று இருந்தேன். அவள் முகம் கொடுத்து கூட பேச மறுத்தாள். நம்பிக்கை போய்விட்டது என்றால் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து கொண்டு இருந்தேன்.

அன்று அலுவலகத்திற்கு என்னுடன் முன்னால் வேலை பார்த்த பெண் வந்து இருந்தாள். வீட்டில் உள்ள பிரச்சினையை சொன்னேன். அவளை விவாகரத்து பண்ணிட்டு என்னோட வந்துரு, எதுக்கு இப்படி உன்னோட இளமை காலத்தை வீண் பண்ற, உன்னை நான் நல்லா பாத்துப்பேன் என்று காதல் மொழி பேசினாள். அதில் நான் கரைந்துவிடாது இருந்தேன். இல்லை இனிமே என்னோட நீ பேசாத, என்னை பார்க்க வராதே அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது. நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என சொன்னதும் அலுவலகத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அவளது காலில் இருந்த செருப்பை கழட்டி எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 'சீ நீயெல்லாம் ஒரு நண்பன்னு பேச வந்தேன் பாரு, உன் பொண்டாட்டிக்கு பதிலா என்னை உன் பொண்டாட்டியாக்க எத்தனை கேவலமா பேசுவ என சொல்லிவிட்டு போய்விட்டாள். நான் குற்றுயிராய் நின்று இருந்தேன். நடந்தது வேறு என அங்கிருப்பவர்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. எல்லோரும் என்னை கேவலமாக பார்ப்பது போன்று தோன்றியது. அடுத்த இரண்டு வாரங்களில் நான் வேறு வேலை மாறி இருந்தேன்.

எனது மனைவியும் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், என் மாமியார், மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன்னால் சிரித்து பேசுவது போல நடிப்பாள், ஆனால் தூங்க செல்லும்போது மகளை எங்கள் இருவருக்கும் இடையில் தூங்க வைத்தே தூங்குவாள். தாம்பத்யம் என்பதை மறந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது. இந்த காம இச்சையை எத்தனை சாதுர்யமாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறாள் என என்னால் கொஞ்சம் கூட நம்ப இயலவில்லை. நானும் அவளின் உணர்வுகளை மதித்து அதிகம் தொந்தரவு தராமல் இருந்தேன்.

ஆனால் ஓர் இரவு என்னால் பொறுத்து கொள்ள இயலாமல் அவளிடம் கெஞ்சினேன். இதுவரை என்னால் எந்த பிரச்சினையும் இல்லை என மன்றாடி அவளுடன் உறவு கொண்டேன். அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். விருப்பம் இல்லையா என்றே கேட்டு வைக்க, உனக்கு சுகம் கிடைச்சா போதும்ல என சொல்லிவிட்டு என் வாய் அடைத்தாள். எப்படி இப்படி காம இச்சை இன்றி இவள் போக கூடும்.

ஒரு மருத்துவரை அணுகினேன். மொத்தமாக அனைத்து கதையையும் கூறி முடித்ததும் அடுத்த வாரம் வா  என சொல்லி அனுப்பினார். எனக்கு காம இச்சை தோன்றும்போது அவளை பணிய வைத்தேன். அவளும் எவ்வித உணர்வு இன்றி சரி என்றே இணைந்தாள். எனக்கு இந்த பிரச்சினைக்கு முன்னால் அவள் நடந்து கொண்ட விதமும், இப்போது நடந்து கொண்டு இருக்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது. அடுத்த வாரம் சென்றபோது என்ன நடந்தது என கேட்டார். சொன்னேன். சில மாதங்கள் பின்னர் அழைத்தார், சென்றேன். ஒருமுறை கூட அவளாக காம இச்சை கொண்டு என்னை அணுகவில்லை என சொன்னேன். உங்ககிட்ட சில விசயங்கள் பேசணும் என மாலை பூங்காவிற்கு வர சொன்னார். சென்றேன்.

'உங்க மேல உங்க மனைவிக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை இனிமே வருமான்னு சொல்லவும் முடியாது. அவங்களுக்கு காம இச்சை இருந்தாலும் அதை தீர்த்துக்கொள்ள நீங்கதான் வழி. ஆனாலும் அந்த காம இச்சையை எளிதாக நீங்கள் நடந்து கொண்ட நம்பிக்கை துரோகத்தை நினைச்சி அவங்களால கட்டுபடுத்திக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் உங்களை அவங்க இழக்கவும் விரும்பலை, அதனால நீங்க விரும்பற நேரம் எல்லாம் உங்களோட ஆசையை பூர்த்தி செஞ்சா போதும்னு இந்த விசயத்தில நடந்துக்கிறாங்க. நீங்க உங்க காம இச்சையை குறைக்கணும், அவங்களே உங்களை விரும்பி வரணும். அதுக்கு இன்னைக்குல இருந்து அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க. குறைவில்லாத அன்பு, எந்த விசயத்துக்கும் சத்தம் போடாம இருப்பது மாதிரி நீங்க நடந்துக்கோங்க. இதுதான் நீங்க கடைபிடிக்க வேண்டியது. காமம் அல்லாத காதலை நீங்க அவங்ககிட்ட தந்தால் ஒழிய உங்களால உங்க மனைவியை நீங்க திரும்ப பெற இயலாது.

பெரும்பாலான ஆண்கள் தங்களோட காம இச்சை தீர்ந்தா போதும்னு நடந்துக்குவாங்க, மனைவியோட மனசை அவங்க புரிஞ்சிக்கிறதே இல்லை. மனைவி உறவுக்கு சம்மதிக்கிறானு எல்லாம் நல்லா இருக்குணு நம்பி வாழ்க்கையை ஒரு ஏமாத்தமா நடத்துறது இந்த உலகத்தில் வாடிக்கை. ஆனா நீங்க அப்படி வாழ வேண்டாம்னு சொல்றேன். அன்னியோனியம் அப்படிங்கிறது இரண்டு மனசு சேர்ந்து வரது. அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் தாசி முறை, விபச்சாரம் எல்லாம் ஒரு ஆணுக்கு காம இச்சை தீர்க்கும் வழின்னு வைச்சிட்டாங்க. பெண்ணுக்கு காம இச்சை இல்லாமலா இருக்கும். இதுவே நீங்க உங்க மனைவிக்கு முன்னால வேற யாருகிட்டயாவது உறவு வைச்சீங்களா, இல்லையே. எப்படி அப்போ கட்டுபாடா இருக்க முடிஞ்சது.

பாலினத்தை தீர்மானிக்கிற குரோமசோம்கள் முதற்கொண்டு காம இச்சையை தீர்மானிக்கிற ஹார்மோன்கள் இருப்பதாகவே அறிவியல் உலகம் நம்புறது. பாலின ஹார்மோன்கள் பெண்கள் பருவம் அடையறப்ப பிட்யூட்டரி சுரப்பி  மூலம் இந்த இரண்டு Luteinising Hormone (LH) and Follicle Stimulating Hormone (FSH)  சுரக்கிறது.  கருமுட்டை உற்பத்தி பண்ற இடத்தில் இருந்து  oestrogen and progesterone சுரக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பெண் என்பவளோட உடலில் எல்லா மாற்றங்களும் உருவாகிறது. மார்பகங்கள் வளர்ச்சி முதற்கொண்டு, மாதவிடாய் காலங்கள் எல்லாம்  இந்த நிலைக்கு அப்புறம்தான். இதே மாதிரி ஆண்களிலும் LH, FSH சுரக்கிறது. ஆனால் விரைப்பையில் இருந்து testosterone சுரப்பதன் மூலம் தான் ஒரு ஆண், ஆண் தன்மையை பெறுகிறான். மீசை வளர்ச்சி முதற்கொண்டு. இந்த testosterone பெண்களிலும் எட்டு மடங்கு ஆணை விட குறைவாகவே சுரக்கிறது.

எல்லா விலங்கினங்களும் தாங்கள் உறவு கொள்ள தயாராக இருக்கிறோம் அப்படின்னு ஒரு குறிப்பு உணர்த்தும். அதைப்போலவே மனிதர்கள் உணர்த்துவாங்க. பொதுவா பெண்கள் மாதவிடாய் தொடங்கிய காலத்தில் இருந்து பதினாலாவது நாள் கருமுட்டை வெளியேறும். அந்த கருமுட்டை வெளியேறும் ஆறு நாட்கள் முன்னர், ஆறு நாட்கள் பின்னர் வரை அவர்களுக்குள் காம இச்சை அதிகமாக இருக்கும். அப்போது அவர்களின் நடவடிக்கை எல்லாம் கவனித்தால் ஒரு மாற்றம் இருக்கும் என்றே சில ஆராய்ச்சி முடிவுகளில் சொல்றாங்க. அதே வேளையில் இப்படி கருமுட்டை வெளியாகும் தருணத்தை வைத்து ஒரு பெண்ணின் காம இச்சையை கணிப்பது தவறுன்னு சொல்றாங்க. இப்படி ஆய்வக முடிவுகள் எல்லாம் வைத்து ஒரு உறவின் காம இச்சையை தீர்மானிக்ககூடாதுன்னு சொல்வாங்க. இப்போ உங்க வாழ்க்கையே ஒரு உதாரணம். உங்க மனைவிக்கு காம இச்சை குறைந்து போனதற்கு காரணம் அவங்களோட ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை. நீங்கதான்.

இப்படித்தான் 66 தம்பதிகளை தேர்ந்தெடுத்து பெண்களிடம் அவங்க ஆண்கள் கிட்ட என்ன பிடிக்கும்னும் இன்னொருத்தர் கிட்ட என்ன பிடிக்கும்னு கருமுட்டை வெளியாகும் தருணம் , கருமுட்டை வெளியாகாத தருணங்களில் ஒருவரோட அறிவு, புகைப்படம், மேலும் சில உடல் வடிவமைப்புகள் கொடுத்தாங்க. அதாவது ஒரு பெண் 66 ஆண்களை பார்த்து எப்படி நினைக்கிறாங்கன்னு சொல்லணும். நம்ம ஊருனா என்ன பொழப்புன்னு சொல்லிட்டு போயிருவாங்க. ஆனா அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொன்னதுன்னா எந்த பெண்ணும் ஒரு ஆணின் அறிவு குறித்து காம இச்சை கொள்வதில்லை. மாறாக ஆணின் தோற்றத்தை கொண்டு காம இச்சை இந்த கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இருந்ததுன்னு கண்டுபிடிச்சாங்க. இதே மாதிரி வேறொரு ஆராய்ச்சியில் பெண் தான் கருமுட்டை வெளியாகும் தருணத்தில் கொஞ்ச நாள் உறவுக்கு ஏற்ற கொஞ்சம் கரடு முரடான தசைப்பிடிப்புள்ள ஆணையும், கருமுட்டை வெளியாகத தருணத்தில் அன்பு உள்ள ஆணை நெடுநாள் அவர்களுடன்  இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதா சொல்றாங்க. அதாவது காம இச்சை அற்று.

இப்ப பெண்கள் கரு தடுப்பு மாத்திரைகள் உட்கொண்டால் இந்த கருமுட்டை வெளியாகும் உணர்வுகள் எல்லாம் மறைந்து போனதா சொன்னாங்க. ஆனால் ஆண்களுக்கு இது போன்ற ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை என்றாலும் வயது ஆக ஆக testosterone அளவு குறைய அவர்களின் காம இச்சை குறையும்னு சொன்னாங்க. காம இச்சை அற்ற ஆண்கள் உண்டு என்பது அவங்களோட எண்ணம்.

இந்த மொத்த ஆராய்ச்சி தப்புன்னு சொல்லி கருமுட்டை உருவாகும் தருணத்தில் பெண்கள் நன்றாக ஆடை உடுத்துவார்கள் என்றெல்லாம் சொன்னாங்க. கிராமப்புறம் எல்லாம் இதை சொன்னா ச்சீ கருமம் என்றே போயிருவாங்க. இதில் கலாச்சாரம் எல்லாம் நிறைய பங்கு பெறுது. தங்களோட ஆசைகளை மனதில் அடக்கி கொள்ளும் பெண்களே அதிகம்.

ஒரு பெண் கோபமாக அழுது கொண்டு தலைவலியுடன் இருக்கும்போது காம இச்சையை நினைத்துக்கூட மாட்டார். பெரும்பாலான பெண்கள் இந்த காம இச்சை குறைவிற்கு அவர்களது ஹார்மோன்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆனா நிறைய பேருக்கு இந்த ஹார்மோன்கள் பத்தி எல்லாம் தெரியாது கூட.

யாரிடமாவது நீங்க போய் எப்ப காம இச்சையுடன் கவர்ச்சியா உணருறீங்கனு  கேட்டா அவங்களால உறுதியா சொல்ல முடியாது. ஒரு ஆணின் அல்லது பெண்ணின் இன உறுப்பில் ஏற்படும் எழுச்சிக்கும், உச்ச நிலைக்கும் காம இச்சைக்கும் வேறுபாடு உண்டு. அதாவது சுய இன்பம் மூலம் ஒரு பெண்ணோ ஆணோ தனது உச்சத்தை அடைந்து கொள்ளலாம், ஆனால் இன்னொருவருடன் உடல் உறவு கொள்ளும் காம இச்சை என்பது அத்தனை எளிதாக தோன்றுவது இல்லை. காம இச்சையே இல்லாத ஆணோ, பெண்ணோ எப்படி காம இச்சைக்கு உட்படுத்துவது என்பது குறித்து மருத்துவ உலகம் அதிக செலவு செய்யவில்லை. வயாகரா மாத்திரை ஆணின் இன உறுப்பின் எழுச்சிக்காக உருவாக்கப்பட்டது, காம இச்சைக்கு என்று இல்லை.

oestrogen காம இச்சையை அதிகரிக்காது காம இச்சையை ஆண் பெண் இருவருக்கும் அதிகரிக்க செய்வது testosterone என முப்பது ஆண்டுக முன்னர் ஒரு பெண் சொன்னாங்க. கடந்த 40 வருடம் பெண்ணுக்கு testosterone கொடுத்து காம இச்சை அதிகரிக்குமா என பார்த்தபோது அந்த பெண்ணின் இன உறுப்பி மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. காம இச்சை மாறாது இருந்தது.

இந்த காம இச்சை அதிகரிப்பது நமது எண்ணம் சார்ந்தது என கூறி இருக்காங்க. ஒரு பெண் தாய் ஆனபின்னர் காம இச்சை குறையும், இப்படி நிறைய காரணம்  இருக்கிறது. ஆகவே நான் உங்ககிட்ட் கேட்டுக்கிறது என்னன்னா நீங்க அன்பும் பாசமும் நிறைந்த கணவனாய் உங்க மனைவியின் உணர்வினை புரிந்தவராய் இருக்க வேண்டும்.

டாக்டர் பேசியதை கேட்டபின்னர் நான் வெகுவாக மாறி இருந்தேன். நீங்க நம்பினா நம்புங்க மூன்று மாதம் பின்னர் என் மனைவி என் மீது பிரியம் அதிக காட்டினார். இனி பிரியம் அகன்றுவிடாது இருக்க பாசத்துடன் இருந்தேன்.

முற்றும். 

Monday 3 March 2014

தாலேலோ ஆண்டாள்

அடேங்கப்பா ஆண்டாள் - 5

விஷ்ணுசித்தர் வில்லிபுத்தூரில் முகுந்த பட்டருக்கும், பத்மவல்லி அம்மையாருக்கும் பிறந்த ஐந்தாவது புதல்வர். முகுந்த பட்டரும், பத்மவல்லி அம்மையாரும் வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்தார்கள். வேத விற்பன்னராக முகுந்தபட்டார் திகழ்ந்தார்.

விஷ்ணு சித்தரை ஒரு அந்தணர் போலவே வளர்த்தது முகுந்தபட்டர்தான். மற்ற குழந்தைகள் பற்றி எங்கேனும் குறிப்பு இருக்கிறதா, என்ன ஆனார்கள் என்பது குறித்த ஆராய்ச்சி இங்கே அவசியமற்று போகிறது. விஷ்ணுசித்தர் தன்னை ஒரு வைஷ்ணவராய் உருவகித்து பரமனுக்கு கைங்கர்யம் செய்வதில் நாட்டம் கொண்டு வந்தார். எந்தவகையான கைங்கர்யம் சிறப்பு என நினைத்தபோது மாலைகள் அணிவித்து மகிழ்ந்திருப்பது என எண்ணினார் விஷ்ணுசித்தர்.

ஒரு பூந்தோட்டம் அமைத்திட பெரும்பாடுபட்டு குளங்கள் எல்லாம் உருவாக்கி நந்தவனம் உருவாக்கினார். அங்கே எல்லா பூக்களும் பூத்து குலுங்கின. துளசி, தாமரை, முல்லை, மல்லிகை அழகு சேர்த்தன. அம்மலர் வாசனையை தான் நுகரக்கூடாது என நாசிகளை துணிகளால் மூடி மாலையாக்கி வடப்பெருங்கோவிலுடையானுக்கு சமர்ப்பித்து வந்தார்.

பாண்டிய நாட்டின் அரசன் வல்லபதேவன் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என ஒரு அந்தணரை சந்தித்ததால் உண்டான சிந்தனையில் வித்வான்களைத் திரட்டிட பறை அறிவித்து பெரும் பொருளை ஒரு வஸ்திரத்தில் கட்டி பொற்கிழியை ஒரு தோரணத்தில் தொங்கவிடப்பட்டது. எவர் மறுமையில் பேரின்பம் பெற இம்மையில் வழி சொல்கிறார்களோ அவர்கள் பொற்கிழி எடுத்துச் செல்லாமல் என அறிவித்தான்.

அன்றைய காலத்தில் புலவர்களுக்கு வேத விற்பன்னர்களுக்கு எப்போதும் ஒருவித போட்டி இருந்து கொண்டே இருப்பதாகவே வரலாறு குறிக்கிறது. முகுந்தபட்டர் விஷ்ணு சித்தருக்கு வேத சாஸ்திரங்கள் கற்று தந்து இருக்கக்கூடும், ஆனால் வேத சாஸ்திரங்கள் மூலம் இறைவனுக்கு கைங்கர்யம் செய்யாமல் மாலைகள் மூலம் மட்டுமே செய்துவந்தவர் விஷ்ணுசித்தர்.

பாண்டிய மன்னன் அறிவித்தமை கண்டு விஷ்ணுசித்தர் நிச்சயம் நினைத்து இருக்கக்கூடும். தந்தை கற்று தந்த கல்வி மனதில் ஓடியிருக்கும். ஆனால் இறைவனே விஷ்ணுசித்தரின் கனவில் வந்து பொற்கிழி அறுத்து வரும்படி சொல்லப்பட்டு இருக்கிறது. விஷ்ணுசித்தர் இறைவன் தம்மை வைத்து காரியம் நடத்த இருக்கிறார் எனும் உறுதி கொண்டு மதுரைக்கு கிளம்புகிறார்.

விஷ்ணுசித்தர் குறித்து வல்லபதேவன் தனது அவையில் இருந்த அந்தணர் செல்வநம்பிகள் மூலம் அறிந்து  இருந்தான். இப்போது வெறும் மாலைகள் மட்டுமே அணிவித்த ஒரு அந்தணர் ஒரே நாளில் பாண்டித்யம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். சாஸ்திரங்கள் தெரியாத ஒருவரை இந்த அவையில் அனுமதிப்பது தவறு என்றே மற்ற அந்தணர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இறைவன் அருளிச்செய்த சாஸ்திரங்களை விஷ்ணுசித்தர் சொல்லி முடிக்கிறார். நாராயணனே பரம்பொருள் என்பதாக அது அமைகிறது.

விஷ்ணுசித்தர் பட்டர்பிரான் என அழைக்கப்பட தருணம் அது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடிய பட்டர்பிரான் பரம்பொருளால் பெரியாழ்வார் என அழைக்கபட்டார் என்கிறது சேதி. இப்படி வாழ்ந்து வந்த பெரியாழ்வார் கண்ணனை தன்னை ஒரு யசோதாவாக பாவித்து பல பாடல்கள் இயற்றினார்.

தன்னை அன்னையாக வர்ணித்த பெரியாழ்வார் துளசி செடிக்கு அடியில் ஐந்து வயது குழந்தையாய் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள். கண்ணனை குழந்தையாக, தன்னை தாயாக பாவித்து வர்ணிக்கும் பெரியாழ்வார் கண்டு ஆண்டாள் தனது காதலனாக கண்ணனை சித்தரித்தாள். சின்ன குழந்தையாய் ஆண்டாள். ஆண்டாள் வளர வளர அவள் கண்ணனும் வளர்கிறான் என்றே மனதில் பாடம் கொண்டாள்.

ஆண்டாள் செய்கை கண்டு பெரியாழ்வார் இப்படித்தான் பாடி வைக்கிறார்.

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள்
மால் உருகின்றாளே

பெரியாழ்வார் போலவே ஆண்டாளும் பாடி முடித்து இருப்பாள். 'வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்' என்பார் பெரியாழ்வார். 'பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை' 'புதுவையர்கோன் விட்டு சித்தன்கோதை' என்பார் ஆண்டாள்.

தாலேலோ ஆண்டாள், இளம் பிராயத்தில் அப்படியே உள்வாங்கி உன்னையே மாற்றிக் கொண்டாய்

(தொடரும்)

Sunday 2 March 2014

காதல் மட்டும்

                                                  காதல் மட்டும் - சிறுகதை

                                                   வெ.இராதாகிருஷ்ணன்

இந்த வாழ்வு நமக்காக என்ன வைத்து இருக்கிறது எனத் தெரியாது. ஆனால் பல மகிழ்ச்சியானத் தருணங்களும், மறக்க இயலாத நினைவுகளும் நம்முடனே வந்து சேர்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மனதுக்குப் பிடித்துப் போன சுபாவைப் பற்றி முன்னரே நிறைய அறிந்து வைத்திருந்தேன். சுபாவிடம் காதலைச் சொல்லும் அளவுக்கு அத்தனை தைரியம் அப்போது இருந்தது இல்லை. அவள் வேறு கல்லூரி நான் வேறு கல்லூரி ஆனபிறகும் மனதில் அவளது எண்ணமாகவே இருந்தது. பருவத்தில் வரும் காதல் போல மாறிவிடும் என்று பார்த்தால் அவள் மீதான காதல் தொடர்ந்தபடியே இருந்தது.

ஒருமுறை அவளைச் சந்தித்தபோது நான் என்ன படிக்கிறேன் என்ன செய்கிறேன் என மிகவும் ஆர்வமாகக் கேட்டாள். ஒருவேளை அவளும் என்னைக் காதலித்துக் கொண்டு இருக்கக்கூடும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்போதும் கேட்கவும் இல்லை. அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் சென்றபிறகு ஒருமுறை அவளைப் பார்த்தேன். அப்போதும் அவள் குறித்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் இருப்பது கண்டு நானே என் மனதை எண்ணி வியந்தேன்.

அப்போது நான் சேர்ந்த வேலை குறித்துச் சொன்னேன். அவளோ தற்போது தான் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் எனச் சொன்னாள். சூழல் சரியானப்பிறகு வேலைக்குப் போ எனச் சொல்லிவிட்டு வந்தேன். என்றோ பார்க்கிற முறையில் கூட சில சொற்களை மட்டுமே பேசிவிட்டு வந்தது எனக்குப் புரியாமல் இருந்தது. அப்போதுதான் வீட்டில் என் அம்மா என்னிடம் எனக்குப் பெண் பார்ப்பதாகச் சொன்னார். நான் அவசரம் அவசரமாக மறுத்துவிட்டு சுபாவை காதலிப்பதாகச் சொன்னேன். வீட்டில் அன்று பெரியப் பிரச்சினை ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்கக் கூடாது என அடுத்த வாரமே சுபாவைச் சந்தித்தேன்.

''சுபா உன்னை நான் நிறைய வருசமா காதலிக்கிறேன் ஆனா உன்கிட்ட சொல்ல தைரியம் வந்தது இல்லை, என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா''

''தீபக் உன்னை எனக்கும் நிறையப் பிடிக்கும், ஆனால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது வேணும்ன்னா காதலிக்கலாம்''

சுபா சொன்னதை நினைத்து நினைத்து எனக்கு அன்று உறக்கமே இல்லை. காதலின் அடுத்த நிலை கல்யாணம் என்றுதானே சொல்லப்பட்டு இருக்கிறது. காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனில் கல்யாணம் பண்ணிக்கொண்டு காதலிக்கலாம் என்று அவளிடம் சொல்ல வேண்டும் என மனம் நினைத்தது. எதற்கு இப்படி சட்டென திருமணமே வேண்டாம் என சொன்னாள் என்பது குழப்பமாக இருந்தது. சில நாட்கள் போகட்டும் என இருந்தேன்.

திடீரென ஒருநாள் சுபாவை பெண் பார்க்க போவோம் அவளுக்குத் தகவல் சொல்லிரு என வீட்டில் சொன்னதும் அவள் சொன்ன விசயத்தைச் சொன்னதும் வீட்டில் கோபம் கொண்டார்கள். நாம போய் பேசுவோம் இல்லைன்னா உனக்கு வேறு பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் என உறுதியாகச் சொன்னார்கள்.

சுபாவின் வீட்டிற்கு பெண் பார்க்கச் சென்றோம். சுபா எவ்வித கோபமும் இல்லாமல் மெல்லிய குரலில் சொன்னாள்.

''நானும் தீபக்கும் காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் பண்ணிக்கிற மாட்டேன், இப்படியே காதலித்தபடியே இருப்பேன்''

அவ்வளவுதான், என் அப்பா கடுமையாகச் சத்தம் போட்டார்.

''அடுத்த சந்ததினு இல்லாம ஆயிரும் இந்தப் புள்ளையை இங்கேயே தலைமுழுகிட்டு வா'' விறுவிறுவென வெளியேறினார்.

''எங்களை மன்னிச்சிருங்க'' என நானே மன்னிப்பு கேட்டேன்.

''நாங்க எவ்வளவு சொன்னாலும் அவ கேட்கமாட்டேங்கிறா. கல்யாணம் பிடிக்காதுனு ஒரேயடியா சொல்றா நாங்க என்ன பண்ணட்டும்'' சுபாவின் தந்தையின் குரல் உடைந்து போயிருந்தது.

வேறு வேலை தேடிக்கொண்டு அதைக் காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியேறியபோது சுபாவை சென்று அழைத்தேன். அவள் வர மறுத்தாள். சுபாவுடன் இருந்த தொடர்புக்கு சற்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால் மனதில் அவளது எண்ணங்களே இருந்தது. வேறொரு பெண்ணை நினைத்துப் பார்ப்பது என்பது அனலில் பட்ட புழு போல மனம் துடித்தது. காலம்தான் எத்தனை வேகமாகச் செல்லக் கூடியது. ஒரு வருடத்திற்குள் தங்கையின் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அதற்காகவே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சுபாவை சந்தித்து பேசியபோது அவள் மனதில் எவ்வித மாற்றமும் இல்லை.

''சுபா என்னைத்தான் நீ நினைச்சிட்டு இருக்கியா''

''நீ என்னைய நினைச்சிட்டு இருக்கிறப்ப நான் உன்னை நினைச்சிட்டு இருக்க மாட்டேனா''

''கல்யாணம் பண்ணிப்போம் சுபா, என் தங்கை லதாவுக்கு கல்யாணம் பண்ற இடத்தில ஒரு வரன் இருக்கு அதை எனக்கு முடிக்கலாம்னு பார்க்கிறாங்க''

''நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கோ தீபக், வாய்ப்பைத் தவற விட்டுறாத''

அவளது சொற்கள் என்னைச் சீண்டுவது போல இருந்தது.

''உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லைன்னா இப்படியே இருக்கிறேன்''

''காதலிச்சிக்கிட்டே''

சிரித்தாள். அவளையும் விட்டு விலக இயலாமல் வேறொன்றை கைப்பற்ற மனம் இல்லாமல் தவித்தேன். அவளது உறுதி என்னை வியப்படையச் செய்தது. மறுபடியும் என்னோடு வருமாறு அழைத்தேன். அதற்கும் சம்மதிக்க மறுத்தாள்.

தங்கையின் வளைகாப்பு வந்தது. அப்போது ஊருக்கு சென்றபோது அவள் ஒரு வேலையில் சேர்ந்து இருப்பதாகச் சொன்னாள்.

''இப்போதாவது சொல் சுபா''

''தெய்வீகம்னா என்ன தீபக்''

''தெரியல, நீயே சொல்''

''சாத்திரம், சடங்கு, வழிபாடு எனும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாத தூய்மை, உண்மைதான் என்னைப் பொருத்தவரை தெய்வீகம்''

''அதுக்கென்ன, அதுக்கு ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லனும்''

''சாத்திரம் சடங்குகளில் விருப்பம் இல்லை''

''சரி சேர்ந்து வாழ்வோம்''

''காதலித்தால் சேர்ந்து வாழனும்னு இருக்கா என்ன''

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சென்றுவிட்டேன். வாரம் ஒருமுறை சுபா மறுக்காமல் என்னை அழைத்துவிடுவாள். நானும் அவளை அழைத்துப் பேசுவது உண்டு. கல்யாணம் என்ற பேச்சை நான் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.

தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தபோது, அவனுக்கு மொட்டை எடுக்கும் போது என ஊருக்கு வந்து போனேன். நான் சுபா என்ன முடிவு எடுக்கிறாளோ அதுவே என் முடிவு எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன். சுபா குறித்து என் பெற்றோர்கள் எதுவும் தவறுதலாகப் பேசாது இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

சுபாவின் வீட்டிற்குச் சென்று என் தங்கையின் கணவர் வீட்டார் சென்று  மிரட்டவும் அவளது பெற்றோர்களை வேறு வீடு பார்க்கச் சொல்லி வீட்டின் உரிமையாளர் சொன்னதும் எனக்கு சுபா தகவல் சொன்னாள். நான் உடனே அவள் வேலை புரியும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டினை வாங்க ஏற்பாடு செய்து அவர்களை அங்கே குடியமர்த்தினேன். அப்போது கூட அவள் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும் நான் இந்த உதவியை ஏற்றுக்கொள் உனக்கு யாரும் தொல்லை தரமாட்டார்கள் என உறுதி சொன்னேன். அப்போது கூட என்னைத் திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் எனும் மனமாற்றம் அவளுக்கு ஏற்படவில்லை.

எனது தங்கை கணவர் வீட்டில் இனிமேல் சுபாவிற்குத் தொல்லை தந்தால் நானே காவல் நிலையத்தில் புகார் தருவேன் என மிரட்டி வைத்தேன். இனிமேல் உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என தங்கை சொற்களை அள்ளி வீசினாள். எங்களுக்கு வயது முப்பத்தி மூன்று ஆனது. சுபாவின் பெற்றோர்கள் சுபாவை எவ்வித வறுபுறுத்தலும் பண்ணாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த வருடமே என் அம்மா நோய்வாய்ப்பட்டது கண்டு ஊருக்கு ஓடோடி வந்தேன்.

''நான் சாகுறதுக்கு முன்னே கல்யாணம் பண்ணிக்கோப்பா, இல்லைன்னாலும் பரவாயில்லை நீங்க மகிழ்ச்சியா இருந்தா போதும்''

அந்தச் சொற்கள் என்னைக் கலங்க வைத்தது. சுபாவின் வீட்டை நோக்கிச் சென்றேன். அவளது தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

''சுபா உன் அப்பா, என் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிப்போம்''

''தீபக் காதலிச்சிட்டே இருப்போம், கல்யாணம் மட்டும் வேண்டாம்'' அவளது விழிகளும் கலங்கி இருந்தது.

சுபாவின் அம்மாதான் சொன்னார்.

''தம்பி அவதான் இப்படி இருக்கிறானா நீங்க ஏன் உங்க வாழ்க்கையை வீணாக்கனும் பேசாம ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா இருங்க''

எத்தனை எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. மனதில் சுபா நிறைந்து இருந்தாள்.

''சுபாதான் என்னுடைய மகிழ்ச்சி'' சொல்லிவிட்டு நடந்தேன். கலங்கிய விழிகளின் ஊடே சுபாவின் இதழ்களில் புன்னகை நிறைந்து இருந்தது. சுபாவுக்கு வீடு வாங்கித் தந்த விசயம் தெரிந்து தங்கை என்னுடன் ஏகத்துக்குச் சண்டை போட்டாள்.

''பெத்த தாய் உசிர விட உன்னோட காதல் பெரிசா ஒரு கல்யாணத்தை பண்ணித்தொலை''

அச்சிறு பெண்ணின் சொற்கள் என்னை அதிர்வுறச் செய்தன.

''அன்னைக்கு உறவு வேணாம்னு சொன்ன, இன்னைக்கு என் வீடு உனக்குச் சொந்தமா''

முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

''அம்மாவின் கைகளைப் பிடித்தபடி என்னை மன்னிச்சிருமா'' என்றேன்.

''நீ என்ன தப்பு பண்ணின, காதலிச்சிட்டுதான இருக்க உன் மேல, அந்தப் பொண்ணு மேல கோபம் எல்லாம் இல்லைப்பா, தங்கமான பொண்ணுப்பா ஏனோ அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை'' அம்மாவின் அந்த மனமாறுதல் என்னை என்னவோ செய்தது. அன்று இரவே அம்மா இறந்து போனார்.

சுபா கதறி அழுத காட்சி என்னை என்னவோ செய்தது. ஈமகாரியங்கள் முடித்த பின்னர் வேலைக்குச்  செல்ல கிளம்பினேன். அப்பா என்னுடன் வர மறுத்தார். தங்கையிடம் அப்பாவை அழைத்து போகச்  சொன்னேன். அங்க என்ன வாழுது என்றாள். அம்மாவின் நகைகள், புடவைகள் எல்லாம் என் தங்கைக்கு என ஆனது. அப்பாவை அழைத்துச் செல்ல தங்கை மறுத்த கணத்தில் அப்பா உடன் செல்ல மறுத்தார். சுபாவும் அங்குதான் நின்று கொண்டு இருந்தாள்.

''டேய் பெத்தது நீங்க உங்க வழினு போயீட்டீங்க, பெறாத மகளா எங்களை கண்ணுக்குள்ள வைச்சி பாத்துக்குச்சி'' சுபாவை கைகாட்டி குலுங்கி குலுங்கி அழுதார். எனக்கு அப்போது சுர் என தைத்தது. வலித்தது.

சுபா வேறொரு அறை சென்று மிச்சம் அழுதாள்.

அவளைத் தேற்றிட நன்றி சொல்லிட எங்கே சொற்கள் தேடுவேன். பார்த்துக்கோ சுபா என வேலைக்குச் சென்றேன். இனம் புரியாத வலி. 

மேலாளரிடம் வேலையை ராஜினாமா செய்வதாக சொன்னேன். அவர் என்னை சத்தம் போட்டதில் மொத்த அலுவல சுவர்களும் விரிபட்டன. முகத்தில் முழிக்காதே என சொன்ன சொற்களில் சட்டென எழுந்தேன். வீடு வந்தேன்.

ஊருக்குத் திரும்பி வந்து அப்பாவுடன் அன்றுதான் மனம்விட்டு பேசினேன். அப்பாவுடன் தங்கி அங்கேயே வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். அவருக்குப் பணிவிடை செய்வது நிறைவாக இருந்தது. அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் அப்பா. எங்களை விட்டுட்டு நீ அப்படி போயிருக்கக் கூடாதுப்பா எனவும் ஊடே சொல்லிக் கொள்வார். 

பிரம்மச்சரியம் என்பது தவம். 
எவ்வித கறையின்றி 
நான் வாழ்வதற்கு நீ துணை. 
உன்னை முதிர்கன்னி என்றே பிறர் 
சொன்னாலும் காதல் இளமை நீ 

சுபாவை நினைத்து கவிதை என எதையோ மனதில் உளறினேன். 

சுபாவின் அப்பாவின் நிலைமை மோசமாகியது. மருத்துவ பலனின்றி மற்றொரு உயிர் போனது. சுபா மனம் மாறவே இல்லை, நானும் மனம் மாறிக் கொள்ளவில்லை. 

சுபா தனது வேலையை விட்டுவிட்டு அவளது அம்மாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை பார்க்க இருப்பதாகச் சொன்னாள். எனக்கும் சரி என்றானது. அந்த வீட்டை தங்கையின் பெயருக்கு எழுதித் தந்தேன். தங்கை, என்னை மன்னிச்சிருண்ணா என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வீடு கிடைத்த நிம்மதி. 

சில மாதங்கள் கழித்து சுபாவை குழந்தைகள் காப்பகத்தில் பார்க்கச் சென்றேன். துள்ளித்திரிந்த குழந்தைகள் பார்த்து சொன்னேன். 

''இந்நேரம் நமக்கும் இப்படி குழந்தைகள் இருக்கும்ல சுபா''

''காதல் மட்டும்'' சிரித்தாள். 

''தாய்மை என்பது ஒரு பெண்மையின் அடையாளம். அந்த தாய்மை உணர்வு வேண்டாமா சுபா'' 

சின்னக் குழந்தையை அள்ளியணைத்தாள். நானொரு காதல் அன்னை என்றாள். 

விக்கித்து நின்றேன். மற்றொரு குழந்தையை அள்ளியணைத்தேன் நான். எங்கெங்கோ சென்று நிராதவற்ற  குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறாள். அவளது பணி பெரியது. சில வருடங்களில் அவளது அம்மாவும் இறந்து போனார். வாழ்க்கை வேகமாக நகரத் தொடங்கியது. ஐம்பதைத்  தொட்டு இருந்தோம். அப்பா தள்ளாடியபடி இருந்தார். இன்னும் ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆனா ஒன்னு நான் உன் அம்மாவை எப்படி அடம் பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேனோ அதைப்போல நீயும் அந்தப்பொண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சி நின்னுட்ட என்றார். வலியில் கூட அவருக்குள் ஏதோ ஒருவித மகிழ்ச்சி.

ஒருநாள் குழந்தைகள் காப்பகம் சென்று அவளிடம் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.

''பிரம்மச்சரிய வாழ்க்கை எதற்கு'' 

''கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று வாழ்ந்து பின்னர் தனித்து விடப்படுவது கொடுமை தீபக்'' 

எனக்கு அதன் பொருள் புரிந்தது. 

''இது மானுட வாழ்க்கை அல்லவே. காதல் புரிந்து கல்யாணம் பண்ணி இல்லறமே நல்லறம் சுபா'' 

''அது சாதாரண மனிதர்கள் செய்வது. உனக்கு அதில் உடன்பாடு இல்லை'' அழுத்தமாகச்  சொன்னாள். 

''என்ன சுபா, இத்தனை வருடங்கள் காதல் மட்டும் எனச் சொல்லிட்டே இருந்த எதற்கு இத்தனைப் பிடிவாதம் இப்போவாச்சும் சொல்லு''

''மனசுக்குப் பிடிச்சவங்க நிறைய. காதலானது கல்யாணம் எனும் சடங்குக்கு உட்பட்டால் களங்கம் தீபக்.  கலவியில் ஈடுபட்டு சுகித்திருப்பது காதல் இல்லை. இனப்பெருக்கம் செய்யப் பிறந்த பிறவிகள் இல்லை நாம். காதல் மட்டும் புரிந்திடவே நாம்''

''இப்படியே அனைவரும் நினைச்சா இந்த பூமி என்ன ஆகும்'' 

என் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள் . நான் அதில் கலங்கி இருந்தேன். 

''இவ்வுலகம் எப்படி உருவாச்சி தீபக்'' 

அம்மா என ஓடிவந்து ஒரு குழந்தை சுபாவின் கழுத்தை அணைத்து பின்னால் வந்து கட்டிக்கொண்டது. 

அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்தாள். 

''என்னம்மா''

''சாமி கும்பிட வாம்மா''

நானும் சுபாவுடன் சென்றேன்.

''என்ன கும்பிட்ட சுபா''

''இந்த அண்டப் பெருவெளியில் கடவுள் ஒரு புதிர். உயிர் இன்னொரு புதிர். கும்பிட எதுவும் இல்லை''

''இந்த உலகம் கடவுள் படைத்தது என் புரிதல்''

சிரித்தாள். 

''என்ன''

''என்னை இப்பவும் நீ இரசிக்கிறல'' 

''இத்தனை வருடங்கள் இதேதான்''

அதற்கு பின்னர் சுபா சொன்ன விசயம் கேட்டு அதிர்ந்தேன். அப்படி நடக்க சாத்தியமில்லை என்றுதான் எனக்குத் தோனியது. ஒரு செல் உயிரி சரி. எப்படி இப்படி அவள் சிந்தித்தாள்? பல செல்கள் கொண்ட உயிரி தானாக பல்கி பெருகும் காலநிலை ஒன்று வரும் எனவும் அங்கே காதல் மட்டும் நிறைந்து இருக்கும் எனவும் எப்படி அவளால் யோசிக்க முடிந்தது.

''சுபா புரியலை''

''பல செல்கள் உயிரியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பருவகாலத்தில் உடலில் இருந்து உதிர்ந்து புதிய அதேபோல உயிரிகள் தோன்றும் தீபக்''

''விதை இல்லாத மரம் சாத்தியமில்லை'' 

''தண்டு வெட்டி மரம் வளரும்'' 

''நினைச்சேப் பார்க்க முடியலை சுபா''

''இனப்பெருக்கத்தில் இரண்டு வகை எப்போதுமே இருக்கு, எப்போ காதல் மட்டும்னு ஆகுதோ அப்போ நான் சொன்னது நடக்கும், மனுசங்க கல்யாணம் குழந்தைகள்னு விருப்பம் கொள்ளாத காலம்னு ஒன்னு உருவாகும் அப்போ நான் சொன்ன ஸ்டெம் செல்கள் குழந்தைகள் உருவாகும்''

அவளது சிந்தனை என்னவோ செய்தது. சில வருடங்கள் கழித்து அப்பா இறந்து போனார்.  மணமுடிக்காமல் காலம் காதலினால் மட்டுமே கடந்தது.

''ஏதேனும் வருத்தம் இருக்கா தீபக்''

''காதல் மட்டும்''

உடலைவிட்டு உயிர் பிரியும் காலம் நெருங்கியது. சுபா ஆவலோடு தழுதழுத்த குரலில் சொன்னாள். 

''இதோ அறிவியல் கண்டுபிடித்துவிட்டது, பல செல்கள் உயிரி தானாக பல்கும், பரிணாமத்தில் ஒரு மாற்றம் நிகழும். இனப்பெருக்க உறுப்புகளற்ற உயிரிகள் தோன்றும்''

''இல்லை சுபா, அப்படியே நிகழ்வுகள் உண்டானாலும் இந்த உலகம் இப்படியே இருந்தால் தான் நல்லது. காதல் புரிவது அதிசயம். அதிலும் காதலுக்கு மட்டுமே வாழ்வது ஆச்சரியம்''

மலர்ந்த முகத்துடன் கண்கள் மூடினாள். அவளது விழிப்பார்வையில் இனி நான் விழமாட்டேன் என எண்ணியபோது என் கண்கள் மூடியது. காதல் மட்டும்.