Sunday 6 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 4

GATE - இந்த தேர்வில் தேர்வாக அனைத்து ஆசிரியர்களின் சிறப்பான பாடம் நடத்தும் முறையே உதவியது எனலாம், குறிப்பாக ஹபீப் மற்றும் பிரகாஷ். அதிகபட்ச கேள்விகள் இதில் இருந்துதான் வந்தது. GATE -ல் 84.7 percentile 234 வது இடம் எடுத்து தேறினேன். 1400 பேர் எழுதி இருந்தார்கள்.

பீகார் மற்றும் கல்கத்தாவில் இருந்து வாய்ப்பு வந்தது. இரண்டும் 10 நாட்கள் என்ற வித்தியாசத்தில் இருந்ததால் இரண்டும் செல்ல வேண்டியது என முடிவு எடுத்தாலும் கல்கத்தாவில்தான் எனது மனம் நின்றது. அப்பொழுது செல்லும் முன்னர் எனது தாயிடம் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை வாழ்ந்துவிட்ட நீங்கள் உலகினைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? இதுதான் அந்த கேள்வி. உலகில் ஒன்றுமே இல்லை இதுதான் எனது தாய் தந்த பதில். ஒரு மாபெரும் ஆசிரியராக எனது தாய் எனது கண்ணிற்கு தெரிந்தார். அவர் 3 வது வரை படித்து இருந்தார். ஐந்தாவது வரை படித்து இருந்தால் ஆசிரியராகி இருப்பார். படிக்க முடியாததன் காரணம் இளம் வயதில் அவர் அவரது தாயை இழந்தது. மக்களைப் பெற்ற மகராசி என பெயர் பெற்றவர். பொறுமையின் சிகரமாக போற்றப்படுபவர். எனக்கு அவரது பதிலில் வாழ்க்கையின் முக்கியமான விசயம் புரிந்து போனது.

ஜதாவ்பூர் பல்கலைகழகம் கல்கத்தா.

பீகாரில் தோல்வி அடைந்து கல்கத்தாவில் மருந்தியல் நுண்ணுயிர்கள் பிரிவினை எடுத்தேன். பின்னர் நான் கேட்ட pharmaceutical chemistry கிடைத்தது ஆனால் நான் மாற்ற வேண்டாம் என முடிவுக்கு காரணமானவர் சுஜாதா கோஷ் டஷ்டிதார் என்னும் ஆசிரியை.

சுஜாதா : இவர்தான் எனது முதுநிலை மருந்தியல் படிப்பின் supervisor. பொதுவாக ஆறு மாதம் செய்ய வேண்டிய ஆய்வகப்பணியினை 18 மாதங்கள் செய்ய வைத்தவர். கல்லூரி தொடங்கிய தினம் அன்று முதல் முடிக்கும் வரை ஆய்வகத்தில் வேலை பார்த்தேன். ஆராய்ச்சியில் எனக்கு இருந்த ஈடுபாடு அதிகமானதற்கு காரணம் இவர்தான். சிறந்த ஆராய்ச்சி செய்ய உதவியவர். அதிக கோபம் வரும். நன்றாக பாடம் நடத்துவார். இதே நுண்ணுயிர் பிரிவில் உள்ள மற்றொரு ஆசிரியர் புகைத்துக் கொண்டே பாடம் நடத்துவார். மிக மிக வித்தியாசமாக உணர்ந்தேன், ஆசிரியர்களிடம் நெருங்கிய நட்பு இங்குதான் ஏற்பட்டது.

பயோகெமிஸ்ட்ரி மற்றும் பார்மகாலஜி இரண்டும் எனது துணைப்பாடங்கள். இதில் பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் 5 முறை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மிக சிறப்பாக பாடம் நடத்துவார். பார்மகாலஜி ஆசிரியர் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துவார். நல்ல திறமையானவர். மேலும் சில பாட ஆசிரியர்கள் முதுநிலை தானே என விடாமல் சிரத்தையுடன் பாடம் நடத்துவார்கள். பாட வகுப்பில் அமர்ந்த காலங்கள் விட ஆய்வகத்தில் செலவிட்ட காலங்கள் இங்கு அதிகம்.

சுஜாதா அவர்களிடம் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டு டில்லி சென்றேன். டில்லியில் AIMS ல் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு தந்தார் ஒரு ஆசிரியர். சில மாதங்கள் இருந்துவிட்டு நானே ஆசிரியராக மாறினேன். இலண்டன் சென்ற பின்னர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் எனது கொள்கையில் பிடிப்புடன் முதன் முதலில் அமலா எனனும் ஆசிரியை சந்திக்கச் சென்றேன்.

அவர்தான் மாணவர்கள் நலன் பேணுபவராக அந்த தருணத்தில் இருந்தார். அவரிடம் இருந்த புரொஜெக்ட்ஸ்களை காட்டினார். இதில் உனக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்றார். ஒரு நிமிடம் யோசித்தேன். அப்படி ஒரு நிமிட சிந்தனையில் வந்து விழுந்ததுதான் அந்த புரொஜெக்ட். எந்த நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தேன் எந்த நம்பிக்கையில் அவர் என்னிடம் கொடுத்தார் என்பது தெரியாது. பதினைந்து நாட்கள் இருந்த பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பண நிதிக்கு விண்ணப்பம் பண்ண வைத்து வெற்றி பெற வைத்து எனது ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். இவர் ஒரு perfectionist. இவர் தந்த ஊக்கம் வார்த்தையில் சொல்லி வைக்க இயலாது. எனது மேல் கொண்ட நம்பிக்கையில் எனக்கு இவர் மற்றொரு ஆசிரியரை துணை மேலாளாராக வைத்துக் கொள்ள வேண்டி அறிமுகப்படுத்தினார். நான் எடுத்துக் கொண்ட புரொஜக்ட், ஒரு வருடத்தில் கிடைத்த ஆய்வு வெற்றியின் காரணமாக ஒரு நிறுவனம் மொத்தமாக நிதி உதவி செய்தது. ஆராய்ச்சி என்றால் இவரைப் போல் செய்ய வேண்டும் என எனக்கு வழி காட்டியவர் இந்த ஆசிரியை. இரு வாரத்திற்கு ஒரு முறை என அனைத்து ஆய்வக முடிவுகளை முகம் கோணாமல் சரி பார்ப்பார். இரண்டரை வருட காலங்களே நான் முடித்து இருந்த வேலையில் அதே ஆய்வகத்தில் அந்த நிறுவனம் என்னை பணியாளானாக ஏற்றுக் கொண்டது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றது இன்னமும் மறக்க முடியாத நினைவு.

இவர் நான் தீஸிஸ் முடிக்கும் முன்னர் அமெரிக்காவிற்கு மாற்றம் ஆகிச் சென்றார் இருப்பினும் நான் வெற்றிகரமாக முடிக்க எல்லா உதவிகளும் செய்தார், இனியும் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு பக்கபலமாக தற்போது இருந்துவரும் மூன்று ஆசிரியர்கள் பற்றி ஒரே வார்த்தை சாதனையாளர்கள். எனது மாணவர்கள் என்னை எப்படி ஆசிரியராக பார்த்தார்கள் என்பதற்காக அந்த ஒரு வருடம் ஆசிரியர் பணி முடித்து நான் லண்டன் வந்தபோது மூன்று பரிசு தந்தார்கள். அதனை பின்னர் குறிப்பிடுகிறேன்.

இப்படி கல்லூரியிலும் பள்ளியிலும் ஆசிரியர்களாக இருந்த இவர்கள் என்னை எத்தனையோ மெருகேற்றி இருக்கிறார்கள், இது தவிர வெளி உலக வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் மற்றும் இயற்கை விசயங்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சொல்லித்தர வேண்டும் என சொல்லித்தரமாட்டார்கள். இவர்களிடம் இருந்து நாமாக கற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயனும் பண்பும். இந்த தருணத்தில் நான் விளையாடி மகிழும் பகவான் நாராயணனையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். இந்த பகவான் நாராயணன் யார் என்பதை நிச்சயம் நுனிப்புல்லில் எழுதி விடுவேன் என்ற அளவு கடந்த எண்ணம் உண்டு.

முத்தமிழ்மன்ற பள்ளியில், இப்போது வலைப்பூக்களில் எனது ஆசானாக/ஆசிரியர்களாக இருப்பவர்கள் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. ஒரு சில ஆசிரியர்கள் பற்றி குறிப்பிடாமல் விட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுவார்கள்.

என்னுடைய ஆசிரியர்கள் - 3

உத்தங்குடி கே எம் மருந்தாக்கியல் கல்லூரி (தமிழ்நாடு எம் ஜி ஆர் பல்கலைகழகம்)

டாக்டர் ரவீந்திரன் : இவர்தான் நான் மருந்தாக்கியல் படிக்க வழி வகுத்தவர். எனது இளைய அக்காவின் திருமணம் மே மாதம் நடந்தது. அப்பொழுது எனது நிலையை அறிந்த எனது பாவா, அவருக்குத் தெரிந்த டாக்டர் ரவீந்திரன் என்பவர் கே எம் மருந்தாக்கியல் கல்லூரியில் முன்பு anatomy physiology யில் வேலை பார்த்தார், எனவே அவரிடம் கேட்கலாம் என சென்று எனது மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் காட்டி அந்த கல்லூரியில் ஒரு இடம் வாங்கித் தந்தார். இதில் என்னவென்றால் மொத்தமே தமிழகத்தில் ஐந்து இளநிலை மருந்தாக்கியல் கல்லூரிகள் மட்டுமே அப்பொழுது இருந்தது. diploma மருந்தாக்கியல் படிப்பு மதுரை மருத்துவ கல்லூரியில் கிடைத்தும் மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் சேர்ந்தேன். இதே படிப்பை ஊட்டியில் பணம் கட்டி படிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாமென மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் மிகவும் குறைவாக பணம் கட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது இப்படியெல்லாம் படிக்கத்தான் வேண்டுமா? என என்னுள் எழுந்த கேள்விக்கு தேவை இல்லை என்ற பதில் வந்து இருக்குமானால் பின்வருவனவற்றை எழுத வாய்ப்பின்றி போயிருந்திருக்கும்.

கல்லூரியின் முதல் வருடத்தில் சைமன் என்ற மருத்துவர் அனாடமி சொல்லித் தருவார். இவரிடம் நான் கற்றுக்கொண்டது, முன் அறிவிப்பு இல்லாமலே ஆச்சரியப்படுத்தும் வகையில் திடீரென தேர்வு வைப்பார். அமைதியாக பேசுவார். மிக அழகாக இருக்கும் சொல்லாடல். இதுவரை தமிழில் படித்துவிட்டு ஆங்கில உலகத்தில் எனக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. ஒரு முறை ஆய்வுக்கூடத்தில் cover slip என வரும் அதற்கு பதிலாக cover sleep என நோட்டில் எழுதி திருத்த கொடுத்துவிட்டேன். இதனை பார்த்து எனக்கு இவர் ஒரு அடி கொடுத்தார். அந்த நோட்டு இன்னும் எனது வீட்டில் இருக்கிறது, சிரிப்பாக இருக்கும்!

மற்றுமொரு மருத்துவர் சுற்றுப்புற சுகாதரம் பற்றி பேசி நாமே நமக்கு எவ்வளவு கெடுதல்களை செய்கிறோம் என அருமையாக பாடம் எடுப்பார். இவரது வகுப்பு மிகவும் நன்றாக இருக்கும். எனது கல்லூரியில் எனது படிப்பு வருடத்தில் இரண்டே மாணவிகள் தான், மீதம் 48 பேர் மாணவர்கள்.

இராமமூர்த்தி; இவர் inorganic chemistry எடுப்பார். நான் புத்தகம் வாங்கியதே இல்லை. இவர் வகுப்பில் சொல்வதை நோட்டில் எழுதி அதை அப்படியே மனனம் செய்து தேர்வு எழுதுவோம். இவர் தேர்வு அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். MCQ வினாத்தாள்களின் பதில்கள் a or b or c or d என்பதில் முப்பது கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்கும் எனவே முதல் தேர்வில் இதை கண்டுபிடித்த நாங்கள் அப்படியே பதில் எழுதப் பழகிக் கொண்டோம். ஒருவன் ஒருமுறை 0 வாங்கினான் பி பதிலாக அ போட்டதுதான் காரணம். இவரது வகுப்பு கலை கட்டும். இவர்தான் மூன்றாம் வருடத்தில் business management சொல்லித் தந்தார்.

physical chemistry இவருடைய வகுப்பு மிகவும் அமைதியாக இருக்கும். சிறப்பாக இருக்கும். organic chemistry நந்தகுமார் இரண்டாம் வருடமும் இவரே. இவர் மிகச் சிறந்த ஆசிரியர். எளிதாகப் புரியும். இரண்டாம் வருட இறுதி தேர்வில் செய்முறை பயிற்சியில் எனது titration reading தவறாக வந்தது என lab technician மாற்றச் சொல்லி நான் மாற்றியதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி என்னை கரையேற்றியவர். இவர் மட்டும் அன்று மிகவும் கடுமையாக நடந்து இருந்தால் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து இருப்பேன்.

statistics ஒரு ஆசிரியை. ஒரு வகுப்பு மட்டுமே வாரத்திற்கு. நன்றாக திட்டுவார்கள். எனது நண்பன் ஒருவன் இந்த ஆசிரியை வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான் ஆதலால் ஒரு முறை அவனை வகுப்பறையை விட்டே வெளியேப் போகச் சொல்லிவிட்டார்கள், எனக்கோ பயமாக இருந்தது. அவன் அருகில்தான் நான் அமர்ந்து இருப்பேன். இறுதிவரை எதுவும் அவ்வாறு நடக்கவில்லை.

விஜயா ஆசிரியை : இவர்கள்தான் இரண்டாம் வருடத்திலும் நான்காம் வருடத்திலும் preparative மற்றும் industrial pharmacy எடுத்தார்கள். சாக்பீஸ் எல்லாம் எறிவார்கள். கோபம் கோபமாக வரும் இவர்களுக்கு. இறுதியாண்டில் விபத்துக்கு உள்ளானார்கள், சிறிதுகாலம் பின்னர் சரியாகியது. இவரிடம்தான் நான் எனது மூன்று மாத புரொஜக்ட் செய்தேன் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார். கோபம் வந்தாலும் குரல் சாந்தமாக இருக்கும்.

biochemistry and biotechnology ஆசிரியர் இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர், தாராளமாக மதிப்பெண்கள் வழங்குவார். இவரது வகுப்பு கலகலப்பாக இருக்கும். இரண்டாம் வருடம் நான்காம் வருடம் இவர்தான்.

நர்மதா ஆசிரியை : இவர்களுக்கு அதிகமாக கோபம் வரும். வகுப்பில் சத்தம் கேட்டால் அவ்வளவுதான். மூன்றாம் வருடத்திலும் இவர் பாடம் எடுத்தார். எனக்கு meal maker எனும் சோயாவை அறிமுகப்படுத்தியவர். ஒரு மனிதனாக வாழ வேண்டும் என சொன்னவர். நெற்றியில் B.Pharmacy என ஒட்டிக் கொண்டு திரிவதற்கா இங்கு படிக்கிறீர்கள் என சொன்னவர்., என்னுள் ஒரு மாற்றம் நிகழ்த்தியவர் எனலாம்.

pharmacognosy இது தாவரங்களை பற்றிய மருந்தாக்கியல் படிப்பு. இந்த ஆசிரியரைக் கண்டால் அனைவரும் பயப்படுவோம். தேர்வுக்கு நுழைவுத்தாள் இவரிடம் இருந்துதான் பெற வேண்டும். எனவே மிகவும் பய பக்தியுடன் இவரது வகுப்பில் இருப்போம். கண்டிப்பானவர்

pharmaceutical technology இதை எடுத்தவர் படிப்பு மற்றும் அல்லாது பல்வேறு youth club களில் இணைய வைத்து வாழ்க்கைப்பாடம் சொல்லித் தந்தவர். என்னுள் இருந்த சமூக சிந்தனைக்கு வித்திட்டவர் எனலாம்.

pharmacology ஆசிரியர் இவர் சத்தம் போட்டு பாடம் எடுப்பார். எனது நண்பர்கள் இவர் தங்கி இருந்த வீட்டினில் அருகில் தங்கி இருந்தனர் அப்பொழுது இவர் சத்தம் போட்டு மனனம் செய்வது கேட்குமாம். இவரது குறிப்புகளை வைத்தே படிப்பதுண்டு. சுருக்கமாக தருவார். மூன்றாம் வருட ஆசிரியர்.

medicinal chemistry ஹபீப் , அனைத்து மாணவர்களின் கவனம் ஈர்த்தவர். வெகு திறமையான ஆசிரியர். synthesis எல்லாம் ஒரு பார்வை கூட புத்தகம் பார்க்காமல் எழுதுவார். அதிசயமாக இருக்கும் எனக்கு. இவருக்கும் கோபம் வரும்.

analyitcal chemistry பிரகாஷ் இவரை பார்மஹோப்பியா என அழைப்பது உண்டு. அனைத்து விவரங்களும் அறிந்து வைத்து இருப்பார். மென்மையான குரல். பல விசயங்கள் கற்றுக் கொண்டது உண்டு. சிரித்துக் கொண்டே இருப்பார். என்னை வெகுவாக இவர் பாராட்டுவது உண்டு. viva வில் 25/25 மதிப்பெண்கள் எனக்கு கிடைத்துவிடும்.

principal இவர் சிரித்த முகத்துடன் இருப்பார். இரண்டாம் வருடத்தில் பெரிய பிரச்சினை வந்துவிட்டது. வெளியில் தங்கியிருந்த எனது நண்பர்கள் இறுதியாண்டு கேள்வித்தாளை இரகசியமாக பெற்றுவிட்டனர். விடுதியில் இருந்த நானும் எனது நண்பனும் அதை வாங்கிட மறுக்க, விடுதியில் இருந்த வேறு சில நண்பர்கள் அவர்களது நலனை கருத்தில் கொள்ளுமாறு கூறி எங்களை சம்மதிக்க வைத்தனர், அவர்களுக்கு பதில் தயாரித்து தந்தோம். இது மாபெரும் தவறு என தெரிந்தும் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஆனால் இரண்டே இரண்டு நண்பர்கள் மட்டும் எங்களுக்காக ஆறு மாதம் படிப்பை இழக்க வேண்டியதாகிவிட்டது அவர்கள் தான் இந்த கேள்வித்தாள்கள் பெற்று வந்தார்கள் என்பதற்காக. அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். இவர் பாடம் நடத்த வருவார் சிரிப்பாக இருக்கும்.

விடுதி காப்பாளார் இவர் உடற்பயிற்சி ஆசிரியர் கூட. dignity என வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார். ஒருமுறை எனது நண்பர்கள் முதல்வருடத்தில் ஆவி அழைத்து யார் முதல் மதிப்பெண்கள் எடுப்பார் என கேட்க அந்த ஆவி டம்ளர் நகற்றி என் பெயரை காட்டியதாம். நான் இரவு 10 மணிக்கு தூங்கிவிடுவது வழக்கம். இது அறிந்த அவர் அதில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரையும் அன்றிரவே வெளியேறச் சொல்லிவிட்டார். எனக்கு காலையில் தான் தெரியும். பெற்றோர்கள் வந்த பின்னர் அனுமதித்தார், எனது நண்பர்கள் இரண்டாம் வருடத்தில் விடுதியை புறக்கணிக்க காரணமானவர். நான் இறுதியாண்டில் வெளியேறினேன். சுதந்திரம் இல்லாத படிப்பு ஒரு படிப்பு அல்ல என உணர வைத்த விடுதி அது.

இப்படி என்னை மருந்தாக்கியல் வல்லுநராக்க மாபெரும் உதவிகள் புரிந்த இந்த ஆசிரியர்களின் பணி மிகவும் மகத்தானது. வணங்கி மகிழ்கிறேன். நான்காம் வருடத்தில் GATE என்னும் அகில இந்திய தேர்வு வந்தது. இந்த நேரத்தில்தான் இலண்டனில் இருந்து மாப்பிள்ளை பார்க்க வந்தனர்.

என்னுடைய ஆசிரியர்கள் - 2

எப்படி எங்களை எல்லாம் மறந்தாய் என விளையாட்டு ஆசிரியரும், ஓவிய ஆசிரியரும் கேட்பது நினைவில் வந்தது. எனக்கும் விளையாட்டுக்கும் சற்று தொலைவு. எனக்கு வலது கை, சிறு வயதில் உடைந்து போய் திரும்பவும் ஒட்ட வைக்கப்பட்டதால் வேகமாக எறிவதோ எடை அதிகமுள்ள பொருட்களை தூக்குவதோ சற்று சிரமம். அதுபோல் ஒரு முறை மரத்தின் கிளையினை பிடித்து pull ups செய்ய வேண்டிய நிர்பந்தம். விளையாட்டு ஆசிரியர் நான் பல முறை முயன்று 0 எடுத்ததை சிரித்தவாறே உனக்கு 1 போட்டு வைக்கிறேன் என செல்லமாக பிரம்பால் ஒரு அடி போட்டார். என்னை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க செய்ய வேண்டும் என பலமுறை முயன்று தோற்றுப் போனார் இருந்தாலும் உடற்பயிற்சி தேர்வு எழுதுவதில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுவேன். அன்பாக இருப்பார், நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்.

ஓவிய ஆசிரியர்; சுப்பு ஆசிரியர். இவரை மனதில் வைத்தே நுனிப்புல்லில் ஓவிய ஆசிரியர் பார்த்தால் ஒரு மதிப்பெண் கூட குறைக்க மாட்டார் என்பது போல் எழுதி இருக்கிறேன். இவரிடம் நான் அதிக மதிப்பெண்கள் வாங்கியது 6/10. அநாயசயமாக படம் வரைவார். இவரின் ஓவியங்கள் உண்மையிலே பேசும். அந்த கருநிறப் பலகையில் வண்ணம் கொண்டு பூசிவிட்டார் என்றால் போதும் அத்தனை சிறப்பாக இருக்கும், ஏனோ எனக்கு தான் இன்னமும் வரைவதில் ஈடுபாடு இல்லை.

தலைமை ஆசிரியர் சீனிவாசன் குறிப்பிட்டு இருக்கிறேன் இவர் பாடம் எடுத்ததில்லை. பிரம்பால் அடி வாங்கி இருக்கிறேன். இவர் எட்டாவது படித்தபோது விலகியவுடன் புது தலைமை ஆசிரியர் வந்தார். அவ்வளவு அமைதி. பாடம் எல்லாம் எங்களுக்கு எடுத்தார். எம்டன் வருது என அந்த கால நினைவுகளையெல்லாம் பகிர்ந்து கொள்வார். அதிர்ந்து பேச மாட்டார். இவரது காலகட்டத்தில் பள்ளி மிகவும் சிறப்பு பெற்றது எனலாம். ஆசிரியர்களை நான் மறந்து போயிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கவும். இங்கு குறிப்பிட்ட ஆசிரியர்களின் பெயர்கள் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் பெயர்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னை ஒரு மாணவனாக உருவாக்கியதில் இவர்களது பங்கு பெரும் மகத்தானது. என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன்.

அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி

ஜெரால்டு ; எனக்கு இவர் பாடம் சொல்லித்தந்தது இல்லை. எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கு இவர் ஒரு காரணம். எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு எனக்கு கணித பிரிவு தரமுடியாது என மறுத்துவிட்டார். எனது அண்ணன் இந்த பள்ளியில் ஆறாவது இருந்தில் படித்து வந்தார் எனினும் எனக்கு கணித பிரிவு முடியவே முடியாது என மறுக்க நான் மல்லாங்கிணருக்கு திரும்பலாமா என யோசித்த வேளையில் எனது தந்தை இங்கேயே சேர்ந்து அறிவியல் பிரிவு படி என சொல்லியதும் அறிவியல் பிரிவு எடுத்துப் படித்தேன். முதல் மாதத் தேர்வில் முதல் மாணவனாக வந்ததும், ஜெரால்டு விடுதியின் காப்பாளாராகவும் இருந்தார், எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு கணித பிரிவு தராததுக்காக ஜெரால்டு வருத்தம் தெரிவித்தார். இவர் வேதியியல் பாடத்தில் வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரை பார்க்கிறேன் அதே புன்னகை. ஆனால் மிகவும் கண்டிப்பானவர். இவரைக் கண்டு நடுங்குவார்கள்.

இரத்தினசபாபதி தமிழ் ஆசிரியர்: இவரைப் பற்றியும் நுனிப்புல்லில் குறிப்பிட்டு இருக்கிறேன் நூறு நாள் கற்ற கல்வி ஆறுநாள் விடப்போம் என சொல்லி தந்தவர். தமிழ் ஆசிரியர். இவரது சொல்லித்தரும் விதம் அனைவரையும் கவரும். தமிழ் நேசிக்க எனக்கு மேலும் வழிகாட்டியவர்.

எனக்கு இயற்பியல் கற்றுத் தந்த ஆசிரியர் பால சுப்ரமணியம். சிரித்த முகத்துடன் இவர் சொல்லித் தரும் பாங்கு அருமையாக இருக்கும். இவரது திறமையை பள்ளி வெகுவாக பாராட்டும். ஆனால் எனக்கு கிடைத்த வேதியியல் ஆசிரியர் வயதானவர் தலைமை ஆசிரியராக இருந்தார் அனைத்தும் அவரது விரல் நுனியில் இருக்கும் எனினும் எங்களையே படிக்கச் சொல்வார். ஆங்கில ஆசிரியர் எப்பொழுதும் வெத்திலை போட்டுக் கொண்டு ஆங்கிலம் சொல்லித் தருவார். நான் எனது படித்த காலங்களில் எப்பொழுதுமே தேர்வில் தோற்றது இல்லை, மாதத் தேர்வில் கூட.ஆனால் ஆங்கிலத்தில் எப்பொழுதுமே 60 சதவிகிதம் தான்.

விலங்கியல் சொல்லித்தந்த ஆசிரியர் என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு ஒருமுறை உடல்நலம் சரியில்லை என்றதும் அவரது மதத்தின் முறைப்படி மருத்துவரை நாடாது நலமாகி வந்தார், இது என்னை பயங்கரமாக சிந்திக்க வைத்தது! இவர் மருத்துவரிடமே சென்றது இல்லையாம்!

தாவரவியல் சொல்லித்தந்த ஆசிரியை (இது மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளி) எளிதாக சொல்லித்தருவார்கள், மிகவும் எளிதாகப்புரியும். எனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய பாடம் இந்த தாவரவியல். இதில் நான் எடுத்தது 121/200. இத்தனைக்கும் தாவரவியல் இறுதி தேர்வில் நான்கு நாட்கள் விடுமுறை வேறு. எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் குறைந்தேன் என எனக்கு தெரியாது! அந்த பள்ளியில் அறிவியல் பிரிவில் முதல் மாணவனாக வந்தேன் 938 மதிப்பெண்கள். எனக்கு அடுத்து வந்த மாணவன் 937. அவனும் தாவரவியலில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். இப்பொழுது அந்த தொழிற்கல்வி ஆசிரியரின் சாபம் பலித்தது! நுழைவுத்தேர்வில் நான் எடுத்தது 37/50. பி எஸ் ஸி எல்லாம் படிக்க முடியாது, படித்தால் மருத்துவத் துறை சம்பந்தபட்டதுதான் படிப்பேன் என எந்த ஒரு கல்லூரிக்கும் நான் விண்ணப்பிக்கவில்லை, ஒரே ஒரு கல்லூரி தவிர அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுர்வைசியா கல்லூரி. வேதியியல் படிக்க இடம் கிடைத்தது. நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு பக்கபலமாக இருந்த எனது தந்தையை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எனக்கு தந்த ஊக்கமும் அன்பும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவர் மாந்தோப்பு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். எனக்கு வீட்டில் எப்பொழுதும் படிக்க சொல்லித் தந்தது இல்லை. நானாக படித்துவிடுவேன். எனது விசயத்தில் குறுக்கிட்டதும் இல்லை. முழு சுதந்திரம் உடையவனாகவே வாழ்ந்து வந்தேன். எனக்காக அவர் இந்த அருப்புக்கோட்டை பள்ளிக்கு முதன்முதலில் விடுதியில் தங்கி படிக்கச்சென்றபோது பெட்டியை தூக்கி வந்த நிகழ்வு இப்பொழுதும் எனக்கு அழுகையை கொண்டு வரும். என்ன தவம் செய்தேன்! ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் என்னுடன் இருந்து எனக்கு செய்த உதவி ஒரு தந்தையின் கடமை என நான் சொல்வேனானால் என்னைப் போல் ஒரு முட்டாள் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.

Saturday 5 September 2009

அன்புள்ள காதலிக்கு,

நான் எழுதிய
காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
அவை கானல் வரிகளானால்
அதை எழுதிய
எனது கைகள் என்னவாகும்?

தேனைப் பெற்றது மலரின் குற்றமா?
அதை நுகரவந்த வண்டின் குற்றமா?
இல்லை இல்லை
அதை வளர்த்த நிலத்தின் குற்றம்.

உன்னை நினைக்க
மனதில் இடம் இருக்கிறது
உன்னை மணக்க
சட்டமும் இடம் கொடுக்கிறது
ஆனால்...
மாலையோடு நான் வந்தால்
மயான வாசலில்
நிற்க வேண்டுமாம், காற்றில்லாமல்
நான் சொல்லவில்லை
அன்பே!
உன் தந்தை சொன்னார்

உன் தந்தையின் முடிவு
என் வாழ்வின் முடிவாகுமா?
நீ
வந்தால் எரிகிறேன்!
அல்லால் புதைகிறேன்!
நாட்கள் வித்தியாசமாகலாம்
அதுபற்றி
நான் சிந்திக்க வேண்டியதில்லை!

கடற்கரைக்கு நம் கால்கள்
நடக்கவில்லை
கவலை அலையை கடக்கத்தான்
நாம் நீந்த வேண்டும்
சுண்டலுக்கு கை நீட்டி நாம்
சுட்டுக் கொள்ளவில்லை
சுடுகாட்டிற்குப் போகும் முன்
இணைய வேண்டும்!

வீட்டிற்கு நீ ஒரு பெண்தான் என்றாலும்
வீணாக நம் வசந்தத்தை கெடுப்பானேன்
மனம் ஊனமாய் பிறந்திருந்தால்
மங்கையே
உன் தந்தை யோசிக்கலாம்
என்நிலையை நான்
மீண்டும் கூறி
உன்னை ஏன் வதைப்பானேன்
வதைபட்டு வதைபட்டு
வாழ்க்கைக்கு சிதை வைப்பானேன்

காலத்தின் கோலம்
''கலப்பு மணத்திற்கு
கை நிறைய காசு''
நான் கொடுக்கவில்லை
அரசாங்கம் அவிழ்க்கிறது

உன் மனதால் என்னை எண்ணி
உயிரெல்லாம் ஓட்டம் விட்டு
என்னைப் பிரியச் சொன்னால்
எப்படி முடியும் உன்னால்
ஏன் விளங்கவில்லை அவர்களுக்கு!
''கல்யாணம்'' என்று கூறி
''கருமாதி'' வைப்பதற்கு
உன் தந்தைக்கு வழி வைத்து விடாதே!

பாவ செயல்களை
காலம் எப்படி சகித்துக் கொள்கிறதோ
காதலே
நீயும் அவற்றை சகித்துக் கொள்
வேண்டிய மட்டும் எடுத்துக் கூறி
விடைபெற்று வா
விழலுக்கு இறைக்கும் தண்ணீராகிப் போனால்
''விடுதலை'' என
விபத்தில் சிக்கிக் கொள்ளாதே
ஆறுமட்டும் அங்கேயே இரு
அப்பொழுதுதான் நம் காதலுக்கு
அர்த்தம் விளங்கும்

உடலுக்கு ஒப்பந்தம் என்றால்
உடனடியாக கிளம்பி வா
உயிருக்கு ஒப்பந்தம் என்றால்
அங்கேயே ''உலை'' வைத்துக் கொள்
இரண்டிற்கும் ஒப்பந்தம் என்றால்
இரண்டாண்டுகள் பொறுத்திரு
வாழ்வினை சீராக்க
வளமையை நான்
எதிர்பார்க்க வேண்டியுள்ளது

கண்களால்தான் பேசினோம்
ஆனால்
''காதலுக்கு கண் இல்லை''
என்கிறார்களே
கவனமாய் இரு
எனக்குச் சொந்தம் இருந்திருந்தால்
என்நிலை இன்று என் கதியோ?
கடவுளின் செயல்
அக்கவலை இல்லை எனக்கு!

முறையாக வந்து கேட்டால்
''முறை'' பார்த்து
அனுப்பி விடுவார்
முடியும் மட்டும் வருகிறேன்
நடுத்தர வர்க்கத்திற்கு
படகை நடுக்கடலில்
தனியாய் விட்டபாடுதான்!

சாதி பார்த்து
மணம் புரிய வேண்டுமாம்
சாதகம் பார்த்து
வழி பார்க்க வேண்டுமாம்
இவையன்றி
விழிபார்த்தது தவறா?

சாத்திர சம்பிரதாயங்களை
குறை சொல்லவில்லை
அவை சாத்தானாக உள்ளதே என
குறைபட்டுக் கொள்கிறேன்

இணையாத காதலுக்குத்தான்
இவ்வுலகில் மதிப்பு
அதற்காக நாம்
இணையாது போனால்
என்ன நியாயம்?
கடமைகளைச் சரியாய் செய்து வா
உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்!

தந்தையின் மனநிலைக்கு
ஏற்றவாறு தென்றலே
நடந்து கொள்
அதற்காக
இரவை பகலாக்கிக் கொள்ளாதே

முடியும் என்றிரு
நன்றாக உறங்கு
என்றாலும் ஒன்றரை மணிநேரம்தான்
உண்மையான உறக்கம்
அந்த ஒன்றரை மணி நேரத்தையும்
வருத்திவிடாதே

காலம் மாறிவிட்டதை
நான் சொல்லியா
உனக்குத் தெரிய வேண்டும்
காலைச் செய்திகளைப் பார்த்தால்
கண் முன்னால்
அனைத்தும் விளங்கும்
தொலைக்காட்சியைப் பார்
அதன் தொல்லைக்கும் முன்னால்
உன் தொல்லைகள்
ஒன்றும் பெரிதல்ல

ஆகாயத்தைப் பார்த்து
அடைய முடியவில்லையே
என ஆத்திரப்படுவதை விட
பூமியிலாவது நிற்கிறோமே
என பெருமைப்பட்டுக் கொள்!

பெண்கள் முன்னேற்ற சங்கம்
என்றும்
மகளிர் சங்கம்
என்றும்
இந்த மதி கெட்ட உலகில்
பலவும் வைத்து
போராடுவதைப் பார்
அந்நிலையை
உருவாக்கியது யார்?

நானும் கேட்டிருக்கிறேன்
வாழ்வின் கொடுமைக்கு
வரதட்சினை மட்டும்
காரணமல்ல
அதையும் மீறிய
அடிப்படை பிரச்சினைகள்
என்பதை!
நீயும் சங்கம் வளர்த்து
பங்கம் ஏற்படாமல்
பார்த்துக் கொள்

இந்த காதல் வரிகள்
உனக்கு மனமகிழ்ச்சி
ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்!

என்னைக் காணாத உனக்கு
இது ஓர் ஆறுதலாக இருக்கட்டும்
இது உன் தந்தையின்
போனால் கூட
எனக்கு ஒருவகையில் சந்தோசமே!
ஆனால்
நீ அதற்கு வழிவிடாதே

இன்னும் ஓரிரு வருடங்களில்
உன்னைக் காண வருவேன்
அதுவரையில்
எரிகின்ற தீபமாய்
சுடர்விட்டு இரு!

வெப்பத்திற்கு இங்கு
விளக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது
அங்கே குளிருக்கு விளக்கம்
சொல்ல வேண்டி இருக்கும்
இங்கே வெள்ளத்திற்கு
விளக்கம் சொல்ல வேண்டியிருந்தால்
அங்கே பஞ்சத்திற்கு
பதில் சொல்ல வேண்டியிருக்கும்
நாட்டின் இரு பக்கங்கள்
வாழ்வின் நிலையை
விளக்கி வைக்கும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
அதன் நிலைமையை
உணர்த்தி நிற்கும்

கவலை வந்தால்
அழுது விடு! முடியும் மட்டும்
அழுது விடு
மன உறுதியை
ஏற்படுத்திக் கொள்

இயற்கையின் மேல்
காதலை வளர்த்துக் கொண்டால்
இன்பமாய் இருக்கும்
அவ்வின்பத்தை உனக்குச் சொன்னால்
புரியாது
நீயும் நேசித்துப் பார்
பாசப்பட்டு இருப்பதை
புரிந்து கொள்வாய்

இரத்தத்தின் அளவை
கவனித்துக் கொள்
எண்ணங்கள் பாயும் முறையில்தான்
நமது இயக்கமும் உள்ளது
என்பதையும் உணர்ந்து கொள்

உலகவிசயங்கள் பலவும்
உனது காதுகளில்
கண்களில் பட்டிருக்கும்
சிந்தனை செய்து பார்
அவை உன்னை
கொஞ்சம் அமைதியாய்
இருக்க வழி செய்யும்

கனவுகளுடன் வாழாதே
அவை உன்னை
கணக்கில்லா துன்பத்தில் ஆழ்த்தும்

மாளிகையை கற்பனை செய்து
குடிசையையாவது கட்ட
முயல வேண்டும்! ஏன்
அந்த மாளிகையையே
கட்டிவிட வேண்டும்
வைராக்கியம் உள்ளவரை
வையத்தில் துன்பம் இல்லை
போராடத் துணிந்தவனுக்கு
போர்க்களம்தான் சரியான இடம்
புரிந்து கொள்

பண்பாடு சீரழிந்தால்
இந்த பாரதம்
பண்படாது என்பது
உனக்குத் தெரியும்
இப்பொழுது என்ன
பாரதம் பண்பட்டா
இருக்கிறது என்று
நீ கேட்பது புரிகிறது

உயிர் அலைகள்
உன்னை வந்து
மோதும் போது
என்னை மட்டும்
மோதாமல் இருக்குமா என்ன?

உன் நிலையை உணர்கிறேன்
ஜீன்களின் சாரம்சம் பற்றி
நீ படித்திருப்பாய்
அவைகளை இப்பொழுது
நாடி பிடித்து கொண்டிருக்கிறார்கள்

அதன் நாடி பிடிபட்டு
போனால்
நமது குழந்தைகளின்
எதிர்காலம் பொற்காலம்தான்

என்னே! எந்தன் அவசரம்
காதலுக்கு வழி கிடைக்காத போது
''பிறக்கும் முன் பேர்'' வைத்த
கதையாகி விட்டது
ஆனால் ஒன்று நிச்சயம்
சூரியன் மறைந்தால் தான்
நட்சத்திங்கள் தெரியும்
உன்னை மணந்தால் தான்
வாழ்வின் அர்த்தம் புரியும்

என்னிடம் பலர் கேட்டார்கள்
''காதல்'' ''காதல்'' ''காதல்''
என்கிறீரே
அதன் அர்த்தம் தெரியுமா என்று
நான் வள்ளுவனை
கை காட்டினேன்
கம்பனை எடுத்துரைத்தேன்
பாரதியை படித்துக் காட்டினேன்
அரபுவையும் இந்தியாவையும்
இணைத்துக் காட்டினேன்
இறுதியில்
உன்னையும் என்னையும்
சேர்த்துக் காட்டினேன்

எனக்கு நேரம் போவதே
தெரியவில்லை
காரணம் கேட்டால்
உந்தன் காதலும்
தமிழ்க் காதலும்
என்று விளக்குவேன்

இந்த காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
நம் வாழ்வின் வரிகள்
வசந்தம் வரும்.

Friday 4 September 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2

ரகுராமன் வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

''போய் பொழப்பப் பார்க்க வழியப் பாரு, எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டனுட்டு''

''சொல்லுங்க பாட்டி''

''போறியா என்னடா, வந்துட்டான்''

பாட்டி எரிச்சலில் இருந்தார். ரகுராமன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். தாத்தாவிடம் கேட்டான் ரகுராமன்.

''நம்ம நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடினவங்க உண்டு பண்ணின கட்சி, அந்த கட்சிக்கு ஓட்டுப் போடாம வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறது?''

''ஆனா இப்போ அந்த காங்கிரஸ் இல்லையே தாத்தா, இப்போ இருக்கிறது இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியோட கொள்கை என்ன தாத்தா?''

''உனக்கு என்ன வேணும் இப்போ, நானே உன் பாட்டி என்கிட்ட கோவிச்சிக்கிட்டு அப்படி ஓரமாப் போய் உட்கார்ந்திட்டானு கவலையா உட்கார்ந்திருக்கேன், போய் ரங்கசாமி கடையில எங்க ரெண்டு பேருக்கும் வடை வாங்கிட்டு வா''

''காங்கிரஸ் கட்சி கொள்கை என்னனு சொல்லுங்க தாத்தா, போய் வாங்கியாரேன்''

''அது அ.தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, போடா, வாங்கிட்டு வெரசா வாடா''

ரகுராமன் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு ரங்கசாமி கடையில் வடை வாங்குவதற்காக நின்றான். விவசாயம் பார்த்துக் கொண்டும், கிரிக்கெட் விளையாடித் திரியும் அழகர்பாண்டி ரகுராமனிடம் சொன்னான்.

''ஏலே ரகு, நீ என்னமோ கட்சி ஆரம்பிக்கப் போறீயாம்மே, எனக்கு ஒரு பதவி இருக்குல, நம்ம டீமுக்கு கேப்டன் பதவியே வேணாம்பா, கட்சிக்கு தலைவரு போஸ்டு வேணாம்னு சொல்லுவியல''

''சும்மா இருடா அழபா, பழனி பத்த வைச்சிட்டானுக்கும்''

''உடனே ஆரம்பி, இந்த கேப்டன் கட்சியை விட நிறைய ஓட்டு வாங்கி நாமதான் பெரிய கட்சினு சொல்லிக்குவோம், என்ன சொல்ற? அதில்லாம எவன் எவனோ கட்சினு ஒரு கொடியை வைச்சிட்டு அதை கிழிக்கப் போறேனு, இதை கிழிக்கப் போறேனு வாய் கிழியாத குறையா பேசறான், நாம் என்ன அவன் பேசறதையெல்லாம் கேட்டுட்டு இருக்கோம், நம்ம பொழப்ப நாம பார்க்கறதில்லையா. அதிருக்கட்டும், நாளைக்கு நீ மேட்சுக்கு வரலியனு வைச்சிக்கோ, வத்தனாங்குண்டுகாரங்கே நம்மளை ஒரு வழி பண்ணிருவானுங்க''

''எல்லோரும் என்னையவே பார்க்கறாங்கடா, அடக்கி வாசிடா, கருமம், கருமம்''

''தலைவா''

கடையின் பின்புறம் மறைந்திருந்த பழனிச்சாமி ரகுராமனின் காலில் சடாரென ஓடி வந்து விழுந்தான். ரகுராமன் திடுக்கிட்டான்.

''என்ன நக்கலா?''

''நீ கட்சி ஆரம்பிக்கிற தலைவா, நாங்க உன்கூட இருக்கோம் தலைவா, டேய் அழபா, கட்சியை நாளைக்கு வத்தனாங்குண்டுல வச்சி ஆரம்பிச்சிரலாம்டா''

ரகுராமன் கோபத்துடன் பேசாமல் இருக்குமாறு அவர்களை சத்தம் போட்டான். கடைக்காரர் ரங்கசாமி கட்டிக்கொடுத்த வடையை வாங்கிக் கொண்டான்.

''தம்பி நீ இந்த வெட்டிப் பயலுகளோட சேந்து வீணாப் பூராதே''

''யோவ் ரங்கு, சாமியாப் போயிருவ, யாரை வெட்டிப்பயகனு சொல்ற, தரிசு நிலத்தை வெளச்சல் நிலமா மாத்தினவங்க நாங்க, என்னடா அழபா''

''விடுறா, விடுறா, காபி போட்டு ஆத்திக்கிட்டு இருக்காரு, மூஞ்சியில ஊத்தினாலும் ஊத்திருவாரு, விவரங்கெட்ட மனுசன்''

''டேய் இப்படியே அலம்பல் பண்ணி அந்த தம்பியக் கெடுத்து குட்டிச்சுவராக்கிராதீங்கடா''

ரகுராமன் கடையை விட்டு நடக்கத் தொடங்கினான். பழனிச்சாமி ரகு பின்னால் ஓடினான்.

''ரகு என்னடா பேசாமப் போய்கிட்டு இருக்க, அவரு அப்படித்தான் டா''

''இது அப்படியே என் அப்பாகிட்ட போகும், அவரு ஏகத்துக்கும் கவலைப் படுவாரு, சும்மா வாயை வச்சிட்டு இருக்கமாட்டியா, விளையாடப் போங்க, நா சாயந்திரமா வரேன்''

தாத்தாவிடம் சென்று வடைப் பொட்டலத்தைத் தந்தான் ரகுராமன். பாட்டி சமாதானமாகி இருந்தார்.

''அடுத்த வருசம் எந்த கட்சிக்குத் தாத்தா ஓட்டுப் போடுவீங்க''

''எப்பவும் போலத்தான்''

பதிலைக் கேட்கப் பிடிக்காமல், ரகுராமன் ஊர் தலைவர் ராமசுப்புவினை சென்றுப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவராக இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டான்.

''இந்த பஞ்சாயத்துத் தலைவராகிறதுக்கு நான் பட்டபாடு இருக்கே, என்னத்த சொல்றது, ஊருலயே ஒத்துமையா இருக்க மாட்றானுங்க, அந்த கட்சி இந்த கட்சினு நீ வேற சாதி, நான் வேற சாதினு ஒரே அடிதடி. நீயும் தானப் பாத்துக்கிட்டு இருக்க. போட்டி பொறாமைனு ஏண்டா பொது வாழ்க்கைக்கு வந்தோம்னு இருக்கு இப்போ, எல்லோரும் கூடி என்னை இதுல இழுத்து விட்டுட்டாங்க, இனி ஒதுங்கிப் போக முடியாது, ஏன் இவ்வள அக்கறையா கேட்கற''

''அடுத்த வருசம் நடக்கப் போற தேர்தலுல ஓட்டுப் போடனும் அதான் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறதுனு முடிவு பண்ணலாம்னு கேட்டேன்''

''என்ன இதுக்குப் போய் ஒரு வருசம் முன்னமே யோசிக்கிற, நம்ம கட்சிக்கு கண்ணை மூடிட்டு ஓட்டுப் போடு, நம்ம கட்சியில உன்னை உறுப்பினராச் சேர்த்துவிடுறேன்''

''வேணாம்''

ரகுராமன் கிரிக்கெட் விளையாடும் மைதானத்துக்குச் சென்றான்.

''பழனியண்ணன் சொல்லுச்சு, நெசமாவே கட்சி ஆரம்பிக்கப் போறியாண்ணே''

இடது கை ஆட்டக்காரன் சுப்பிரமணி அப்பாவியாய் கேட்டான். ரகுராமன் ஒரு கட்சி ஆரம்பித்தால்தான் என்ன என அசட்டுத்தனமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உடனடியாக செயல்படத் துணிந்து விடுகிறோம், ஆனால் மொத்த மக்களின் ஒட்டு மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏன் தயங்கி பின்னடைகிறோம்?

(தொடரும்)

என்னுடைய ஆசிரியர்கள் - 1

மேலத்துலுக்கன்குளம் நடுநிலைப் பள்ளி

அரை வகுப்பு - ஐந்தாம் வகுப்பு வரை.

திருமதி. தவமணி, திருமதி. லீலாவதி மற்றும் திருமதி. தனலட்சுமி. இந்த மூன்று ஆசிரியைகளும் எனக்கு அத்தை முறை. இவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். நன்றாக சொல்லித் தருவார்கள். மற்றபடி குறிப்பிடும்படியாக எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இவர்களுடைய மகன்கள் (என்னை விட வயது மூத்தவர்கள்) எனக்கு நல்ல பழக்கம் என்பதால் இவர்கள் வீடு சென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என பிற்காலங்களில் செய்து இருக்கிறேன். இவர்களை டீச்சர் என அழைப்பதா அத்தை என அழைப்பதா என பல முறை அவர்கள் வீடு சென்றபோது குழம்பியது உண்டு. வணக்கத்திற்குரியவர்கள். மூன்றாம் வகுப்பு வரை இவர்கள் தான்.

நான்காவது வகுப்பில் மல்லாங்கிணர் சீனி வாத்தியார். இவர் பதில் புத்தகம் தந்து வினாக்களுக்கு பதில் எழுத சொன்னதாக எனக்கு ஞாபகம். அடிக்கமாட்டார். சிவப்பாக ஒற்றை இராமம் போட்டு வருவார். சிரித்த முகத்துடனே இருப்பார்.

ஐந்தாவது வகுப்பில் வத்தனாங்குண்டு வாத்தியாருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். என்னை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். நுனிப்புல்லில் இவரை மனதில் வைத்து ஒரு ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளேன். திறமையாக பாடம் நடத்துவார். அடிக்க மாட்டார். நான் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியது இல்லை, ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் இராஜ்ஜியம்தான். ஆறாவது வகுப்புக்கு இந்த பள்ளிவிட்டு வேறு பள்ளி செல்ல நாங்கள் (4 நண்பர்கள்) முடிவெடுத்த போது பள்ளித் தலைமையாசிரியர் முதற்கொண்டு மிகவும் வருத்தப்பட்டார்கள். இப்படி நல்லா படிக்கிறவங்க எல்லாம் எட்டு வரைக்கும் இங்கு படிக்கலாம்தானே என சொன்னது, தலைமை ஆசிரியர் நடராஜன் அறை எனக்கு இன்னமும் நினைவில் வந்து போகும். ஆறாவது வகுப்பு ஆசிரியர் ஏழாவது வகுப்பு ஆசிரியர் எங்களுக்கு அவ்வப்போது பாடம் நடத்துவது உண்டு. ஏழாவது வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயப்படுவோம். என்னை செதுக்கியதில் பெரும் பங்கு பெற்றவர்கள்.

மல்லாங்கிணர் மேல்நிலைப் பள்ளி

ஆறாவது வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

அறிவியல் ஆசிரியை : எனது குரல் வளம் (பாடல் குரல் வளம் அல்ல) கேட்டு எப்படி கணீருன்னு ஒன்று இரண்டு சொல்றான் என பாராட்டியவர். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக சொல்லித் தருவார். இவரின் மகள் உமா மகேஸ்வரி எங்கள் வகுப்பில்தான் படித்தார். இவர் மாணவ மாணவியர்களை அடிப்பது உண்டு. நானும் வாங்கி இருப்பேன்.

கணித ஆசிரியை : மென்மையான குரலில் பாடம் எடுப்பார்கள். இவர்கள் நான் எட்டாவது படிக்கும்போது உடல் நல குறைவால் பணியை விட்டுவிட்டார்கள். திறமையான ஆசிரியை.

தமிழ் ஆசிரியை : எனது தமிழுக்கு வித்திட்டவர். இவரிடம் மதிப்பெண்கள் வாங்குவது கடினம் ஆனால் நான் 85க்கு குறையாமல் வாங்கி விடுவேன். என் மேல் அலாதிப் பிரியம் இவருக்கு. அடித்ததே இல்லை, ஆனால் அதிக கோபம் வரும். பாட்டு போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் தந்தவர். தமிழ் அருமையாக சொல்லித்தருவார்.

பாட்டு ஆசிரியை : எட்டாவது வகுப்பில் பாடச் சொல்லும்போது 'சலங்கையிட்டால் மாது' எனும் பாடலை பாடி கரகோசம் பெற்றேன். இப்பொழுது எனது ஆய்வகத்தில் நானாக பாடிக்கொண்டு இருந்தால் 'terrible voice' என எனது ஆய்வக நண்பர்கள் சொல்லும்போது சிரிப்பாக இருக்கும். கோபம் அதிகமாக வரும் இவருக்கு.

தொழிற்கல்வி ஆசிரியை : பாடம் எதுவும் எடுத்ததில்லை. பள்ளியில் உள்ள தாவரங்கள் பராமரிப்போம், நன்றாக அடி விழும். யாரும் ஓடியாடி வேலை செய்யமாட்டார்கள்.

ஆங்கில ஆசிரியர்: 'close the door' என ஒருமுறை ஆய்வாளர்கள் வந்த பொழுது என்னை அழைத்துச் சொல்ல திருதிருவென முழித்தேன். அப்பொழுது ஒரு மாணவி எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு கைத்தட்டல் பெற்றார். நல்லாவே ஆங்கிலம் கற்று இருக்கிறேன்.
நன்றாக திட்டுவார். அடியும் விழும்.

அறிவியல் ஆசிரியர் : மிகவும் சிரிப்பாக பாடம் நடத்துவார். இவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சேர்ந்ததெல்லாம் சிவலிங்கம், வாய்ச்சதெல்லாம் வைத்தியலிங்கம் என்பார். ஏலே என ஒரு அடி தருவார் சரியாக பதில் சொல்லாவிட்டால்.

வரலாறு ஆசிரியர் : மாடு மேய்க்கறவனெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்துருக்கான் என எங்களை மிரளச் செய்தவர். ஆங்கில பாடமும் ஒன்பதாவதில் இவர் தான். அடி இடியெனெ விழும். முதுகை பதம் பார்ப்பார்.

கணித ஆசிரியர் : முதலில் சீனிவாசன் ஆசிரியர் பத்தாவதில் பாதியில் இவர் சென்ற பின்னர் மொட்டையாண்டி ஆசிரியர் வந்தார். சீனிவாசன் ஆசிரியரை இழந்த கவலையில் இருக்க தனது அதிரடியால் எங்கள் மனம் கவர்ந்தவர் இவர். சீனிவாசன் ஆசிரியர் எனது பெயரை rathakrishnan என்பதை radhakrishnan என மாற்றியவர், பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் என ஆருடம் சொன்னவர். 8ம் வகுப்பில் இருந்து நான் தான் பள்ளியில் முதல் மாணவன். காரணம் ஏழாவதில் பள்ளியை விட்டுச் சென்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி. இந்த ஆசிரியர் என்னை ஒருமுறை inland letter வாங்கி வா என சொன்னதும் முதலில் inland letter வாங்கி பின்னர் பாதியிலே மனது மாறியவனாக திரும்பவும் சென்று வேறு கடிதம் வாங்கி தந்து திட்டு வாங்கி ஒழுங்கான கடிதம் கடைசியில் வாங்கி தந்தேன்.

மொட்டையாண்டி ஆசிரியர் கணிதத்தில் 100/100 வாங்க வேண்டும் என என்னிடம் தலையில் ஓங்கி அடித்து சொல்லியும் என்னால் 98 தான் வாங்க முடிந்தது. இரண்டு மார்க்குல போய்ருச்சே என என்னிடம் மதிப்பெண்கள் வாங்கிய தினம் அன்று வருத்தப்பட்டார். நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்தும் எனது மொத்த மதிப்பெண்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே இதனை இந்த பள்ளியில் எழுதி வைத்து விடுவார்களே என வருத்தத்தில் இருந்தேன் நான் எடுத்த மதிப்பெண்கள் 359. பள்ளியில் பெயர் எழுதப்பட்டதை பெருமையாக படம் பிடித்து வைத்து இருக்கிறேன்.

எட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் அப்புறம் வீடு சென்று விடுவேன். இப்படி சில தினங்கள் நடந்ததும் என்ன இவனை காணோம் என திருமதி. சுப்புலட்சுமி அறிவியல் ஆசிரியை கண்டுபிடித்து பன்னிரண்டாவது சொல்லித்தரும் தமிழ் ஆசிரியரிடம் சொல்லி காலையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கடவுள் வாழ்த்து பாடும் முன்னர் எனது கன்னத்தை பிடித்து திருகி இப்படியெல்லாம் பண்ணுவியா என என்னை திட்டியதும் , 'நல்லா படிக்கிறவன் ஆனா என்னான்னு தெரியல' என அந்த ஆசிரியை சொன்னதும் என்னால் மறக்க முடியாத நினைவுகள். என்னை புடம் போட்டவர்கள் அந்த இரண்டு ஆசிரியர்களும்.

ஒரு முறை எனது அக்காவின் திருமணத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாத தேர்வினை பொருட்படுத்தாமல் மூன்று நாட்கள் சென்ற போது இயற்பியல் ஆசிரியர் (எனது அண்ணனின் நண்பர்) பளார் என அறைந்து படிப்பு முக்கியம்னு தெரியாம எதுக்குடா நீ படிக்க வர என சொன்னது இன்னும் மறக்க முடியாது. பன்னிரண்டாவது வரை இருந்ததால் சிறப்பு பிரிவு ஆசிரியர்கள் அவ்வப்பொழுது வந்து எங்களுக்கு பாடம் எடுப்பது வழக்கம். வேதியியல் ஆசிரியர் இன்னமும் மனதில் நிற்கிறார். சிரித்த முகத்துடன் சொல்லித்தந்த விதம் மறக்க முடியாதது.

பத்தாம் வகுப்பு முடித்து செல்லும்போது அந்தப் பள்ளியில் கணிதப் பிரிவு இல்லாததால் கணிதப் பிரிவு வேண்டி அருப்புக்கோட்டை எஸ் பி கே செல்ல முடிவு எடுத்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.

(தொடரும்)

Thursday 3 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3

கதையும், ஆன்மிகமும், கவிதையும் என்னை நேசித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவியல் என்னை பயமுறுத்துகிறது.

ஒரு விசயம் என்னை மிகவும் பாடுபடுத்தியது. ஒரு பகவத் கீதை தந்த கிருஷ்ணரோ (கடவுளின் அவதாரமாகத் தன்னை சொல்லிக் கொண்டவர்) பைபிள் தந்த இயேசுவோ (கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர்) குர்-ஆனை தந்த நபிகள் (இறைத் தூதராக தன்னை காட்டிக் கொண்டவர்), இவர்களுக்கெல்லாம் இந்த அணுக்களை பற்றி, விதிகளைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லாமல் போனதா, இல்லை பொருள்கள் எல்லாம் ஆன்மிகத்திற்கு எதிர் என விட்டு விட்டார்களா? மனித குல நெறிமுறைகளைப் பற்றித்தானே அவை அதிகம் பேசுகின்றன, ஆனால் இப்போது இவர்கள் எழுதியதை விஞ்ஞானத்தோடு ஒப்புமைப்படுத்தி பேசும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

டால்டனும், ரூதர்ஃபோர்டும், மேன்டலீவும் எதற்கு கடவுள் தந்தது என அவர்கள் கண்டதைச் சொல்லவில்லை? தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள்? அப்படியென்றால் அவர்கள்? வினாக்களுடன் அறிவியல் பயணிக்கிறது.

டால்டனுக்கு ஒரு அதிசயம் அவரது மனதில் நிகழ்ந்தது. இந்த அணுக்கள் இருப்பதை அவருக்குள் ஏதோ ஒன்று உணர்த்த அணுக்கொள்கையை முதலில் சொல்லியதோடு அணுவை பிளக்கலாம் என கூறிவிட்டார். ஆனால் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என நமது வேதங்கள் பல வருடங்களுக்கு முன்னமே தெரிந்து வைத்து இருந்தது? இந்த அறிவியல் நுட்பம் எல்லாம் ஐந்நூறு வருடங்களுக்குள் நிகழ்ந்தவைகள்தான் எனலாம். நாற்பதாயிரம் வருடங்கள் முன்னர் இருந்த அட்லாண்டிஸ் நாகரீகம் பற்றியெல்லாம் சொல்வார்கள். அது குறித்த ஆராய்ச்சி அவசியமில்லை.

எலக்ட்ரான் புரோட்டான் எல்லாம் 18ம் நூற்றாண்டுகளில்தான் வெளிச் சொல்லப்பட்டன. இதற்கு முன்னர் இருந்தவைகள்தானே இவை. உலகம் தோன்றி பில்லியன் வருடங்களில் இந்த 200 வருடங்கள் பெரும் சோதனைக் காலங்கள், சாதனைக் காலங்கள் எனலாம். டார்வின் கூட இந்த 18ம் நூற்றாண்டின் சொந்தக்காரர். ஆக நமது அறிவு விழித்துக் கொண்டது இந்த 200 வருடங்களில்தானா? இல்லை, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 16ம் நூற்றாண்டும் கண்ணுக்குத் தெரியும். கலிலியோ... இன்னும் பின்னோக்கிப் போனால் உலகம் தோன்றிய அந்த பில்லியன் வருடங்களும் தெரிந்தாலும் தெரியும்?

ஆனால் வேதியியலின் வித்து டால்டன் எனும் அற்புத மனிதனே. ரூதர்ஃபோர்டின் அணுக்கொள்கை இவரிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டது. ரூதர்ஃபோர்டு கூற்றுப்படி வேகமாக எலக்ட்ரான்கள் புரோட்டானை சுற்றும் எனில் நாளடைவில் எலக்ட்ரான் சக்தியிழந்து வலுவிழந்து விடும், எனவே அது தவறு எனச் சொல்லி எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் போது மட்டுமே சக்தி இழப்போ, ஏற்போ நடைபெறுகிறது, ஒரே நிலையில் இருக்கும்போது எந்த மாற்றமும் அடைவதில்லை ஆதலால் அந்த எலக்ட்ரான் புரோட்டானுக்குள் சென்று விழச் சாத்தியமில்லை எனச் சொன்னவர் போஹ்ர்.

இவர்கள் தாங்கள் கண்டது தவறாக இருக்கும் எனச் சொல்லாமல் விட்டார்களா? இல்லை மறைத்து வைத்தார்களா? என்ன கண்டார்களோ அதை அப்படியேச் சொன்னார்கள். சொன்னது தவறு என பின்னால் வந்த வல்லுநர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு. அறிவியலுக்கு தவறோ, சரியோ நிரூபிக்கச் சாத்தியக் கூறுகள் தேவை, அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது ஒரு கொள்கையாக மட்டுமே கருதப்படும். ஆனால் ஆன்மிகத்திற்கு? எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான்.

(தொடரும்)

Wednesday 2 September 2009

சனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா?

என்ன சொல்வது? எவ்வளவு தூரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என முன்னேறினாலும், நாடுவிட்டு நாடு போனாலும் இந்த தின பலன்கள், வார பலன்கள், மாத பலன்கள் ஆண்டு பலன்கள் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான். அதுவும் குருப்பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றின் முக்கியத்துவம் குறித்து தனிப் புத்தகங்கள் இருக்கக் கூடும்.

இதில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை விட அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் எனப் படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமே உண்டு. நமது ராசியைப் போலவே உலகில் எத்தனையோ பேர்கள் இருக்க, அத்தனை பேரும் ஒரே மாதிரி வாழ்க்கை வாழாமல் இருப்பது தெரிந்தும் வாசிப்பது என்பதை மட்டும் விடத் தோணுவதில்லை. அதுவும் எழுதியதை வாசித்துவிட்டு அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டே இருப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

விளையாட்டுச் செய்திகள் படித்துவிட்டு கண்கள் நோக்குவது என்னவோ இன்றைய பலன்கள் செய்தியைத்தான். செய்தியில் உண்மையில்லாமலும் இருக்கக் கூடும். மேலும் ஒரு நண்பர் சொன்னது என்னவெனில் எந்த ராசி எனத் தெரியாமலே ஒரு ராசியை எடுத்துக்கொண்டு இதுதான் நம் ராசி எனப் படித்தாலும் கூட சரியாகவே இருக்குமாம். ஆனால் ராசி தெரிந்த காரணத்தினால் பிற ராசிகளைப் படிக்கும்போது அப்படி எனக்குத் தோன்றவில்லை. மனைவியின் ராசிக்குத் தவிர பிற ராசிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் படிப்பதில் ஒரு பிடிப்பும் இருப்பதில்லை, இருப்பினும் எழுதியவரின் மனநிலை என்ன என அறிந்து கொள்ள அனைத்து ராசிகளையும் ஒரு கண்ணோட்டம் விடுவதுண்டு.

இப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்தபோது பல ராசிகளுக்கு ஒட்டுமொத்தமாக சரியில்லை எனும் வகையில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அடடா, எழுதுபவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் எல்லாமே நன்றாக நடக்கும் என எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு ஒருவித மன சந்தோசம் ஏற்படுமே என்றுதான் தோணியது. வேறு எவரேனும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றுப் பார்த்தால் ஆம் ஒருவர் எழுதி இருந்தார், சனி சங்கடம் தருவார் என பயப்பட வேண்டாம் எனும் தொனியில் அனைத்து ராசிகளுக்கும் அமைந்து இருந்தது. எப்படியிருப்பினும் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதிகமே.

'மடியில் கனமிருந்தால் வழியில் பயம்' என சொல்வார்கள், அதுபோல நாம் முறையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இடப்பெயர்ச்சியாளர்களால் எதுவும் நேராதுதான், ஆனால் முறையான வாழ்க்கையையா நாம் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கணப் பொழுது யோசித்தால் இந்த இடப்பெயர்ச்சியாளர்கள் இடம்பெயராமலே இன்னலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான். இப்போ சொல்லுங்க, சனிப்பெயர்ச்சி பலன் படிச்சாத்தான் பயம் வருமா?

ஆவலுடன் ராசிகளைப் படிக்க நினைத்து இருப்பீர்கள், அதனால் நான் விரும்பிப்படிக்கும் மாத ராசி பலன்களின் இணைப்பு இதோ. இவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும், மாதம் ஒரு முறை மறக்காமல் படித்துவிடுவது உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

எல்லாம் தெரிந்தது போல்

எல்லாம் தெரிந்ததுபோல் இருக்கிறது
மது அருந்தும் பழக்கத்தால்
கல்லீரல் கரைபட்டு போகும்
இதயம் இடியென துடிக்கும்
புகை பிடித்து பார்ப்பதால்
நுரையீரல் விரைத்து நோகும்
உதடு மட்டுமின்றி
ரத்தம் கூட தன் நிறம் மாற்றும்
அளவுக்கும் நேரத்திருக்கும்
உட்படாத உணவு
அடிவயிறை அரித்து பார்க்கும்
கவனமின்றி போயின்
கலை இழந்த கண்களும்
வழுவிழந்த பல்லும் எலும்பும் மிச்சம்
தண்ணீர் இல்லா சிறுநீரகம்
பிணைய கைதியாய்
நல் எண்ணம் இல்லையேல்
மூளை முரண்டு பிடிக்கும்
மனம் மரத்து போகும்
உண்மை ஒழுக்கம் இல்லா வாழ்க்கை
கற்பில்லாத காதல்
உயிரை உருக்குலைய செய்யும்
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது.

ஆசைப்படு அவதிப்படாதே
ஆசை துன்பம் தருமெனில்
துயரபடாமல் உயரம் ஏது?
கர்வப்படு கருணை இழக்காதே
பொறாமைப்படு பொசுங்கிப் போகாதே
இரக்கபடு இழந்து நிற்காதே
கோபப்படு கொன்று விடாதே
காதலிக்க கற்று கொள்
கரைந்து போகாதே
சாந்தமாக இரு செத்து போகாதே
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது
எவையும்
செயல்படுத்த முடியாமல்
புதைந்துபோய் கிடக்கிறது.

Sunday 30 August 2009

இலங்கை மாநகரம்

இதிகாச காலத்திலேயே
இன்னலுக்கு உட்பட்ட நகரம்
நாட்கள் பறந்த பின்னரும்
தொடரும் இன்னல்கள்

நிறமெல்லாம் ஒன்று தான்
நிலமெல்லாம் ஒன்று தான்
வினையேன் வந்து தொலைந்தது
வேறுபட்ட மொழி கொண்டதாலா
வேற்றுமை கண்ட இனத்தினாலா
புத்தர் தந்த எண்ணத்தில்
அன்பும் கருனையும்
தொலைந்து போனதாலா
கண்ணீர் விட்டு கதறுகின்றேன்
காக்கும் கடவுள் அவதரிப்பாராக.

தென்றல் சுதந்திரமாய்
உலாவிடும் தூய நகரம்
தீங்கினை நினையாது
தென்னை காய்த்து குலுங்கும்
கடலின் அலைகள் முத்தமிட்டு
கரையினை கட்டி தழுவிடும்
காதலர்களின் தலைநகரம்

புன்னகை சிந்தி
விருந்தோம்பலின் வெளிச்சமாய்
விளங்கிடும் புண்ணிய நகரம்
எல்லாம் கனவாய் இருக்கிறது
நேற்றைய தினமெல்லாம்
கனவாய் போகுமெனில்
இன்றைய தினமும்
இந்நகரத்தில் கனவாய் போகாதா

பூஞ்சோலையாய் இருந்த பூமியில்
பூக்களை கருக செய்வதும்
உரிமையுள்ள பங்கினை வேண்டி
உரக்க குரல் தரும்
உணர்வுகளை உரைய வைப்பதும்
கல்லிலும் மண்ணிலும் கட்டி புரண்டு
நிலவின் நிழலில்
கதைகள் கதைத்து
கனவெல்லாம் வளர்த்து
வாழ்ந்த நல்ல உள்ளங்களை
செந்நீர் வடிக்க செய்வதும்
இருக்கும் இனிய இடம் விட்டு
இன்னல் தரும் இடம் நோக்கி
விடை காணும் மனிதருக்கு
இது விதியா
அறிவில்லார் தரும் நீதியா.

அமைதி ஒரு நாள் வரும்
ஆயுதம் ஏந்தி
அவதியுரும் நாள் தொலையும்
அன்புடன் கதைத்து
ஆராத துயரம் தீரும்
கண்கள் காணும் வேற்றுமை
கடலில் கரைந்து போகும்

கரும்புகையில்லா வானத்தில்
மேகங்கள் கவிதை பாடி செல்லும்
மரத்தின் கிளையில் கனிகள்
பறவைகளுக்கு காத்து நிற்கும்
வளரும் பயிர்களுக்கு
வீரமிக்க செயல்கள் சொல்லி
வலிமையை கற்பிக்கும்
வாழ்வு நோக்கி
இன்னலையெல்லம் தாங்கி நின்று
இன்பத்தை இரு கைகளால்
அணைக்க வேண்டி
கண்ணீர் துடைக்க வழியின்றி
கலங்கி நிற்கும்
இலங்கை மாநகரம்
அமைதியின் வழியில்
சிறந்து விளங்கும்
உயிர் பெற்றதின் அர்த்தம் விளங்கும்.

------
எழுதிய ஆண்டு 2006!!!

Saturday 29 August 2009

கடவுளோடு காதல்

என்னில் முதன் முதலாய் காதல் உன்னோடு
பச்சிளம் குழந்தையாய் பால்மணம் மாறாத காதல்
பருவம் வந்தபின்னும் மாறவில்லை
உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்

நான் பாமாலை சூட்டும் போதெல்லாம்
வாய் திறந்து நீ பாராட்டியது இல்லை
மலர் எடுத்துச் சூடும் போதெல்லாம்
மறுத்து ஒதுக்குவதில்லை நீ
உன்மீது எனக்கு மனம் மாறா காதல்

பால் கொண்டும் நெய் கொண்டும்
அமிர்தம் கொண்டும்
அபிஷேகம் செய்தபோதெல்லாம்
அதனை நீ ருசித்ததும் இல்லை
மெய்மறந்து ரசித்ததும் இல்லை
அன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்

உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு
ஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி
என் தீராத காதல் சொல்கிறேன்
ஏற்றுக் கொள்வாய் எம்பெருமானே

உன்னைத் தனி அறையில் பூட்டிவைத்து
யான் உறங்கச் செல்லும்போதெல்லாம்
என்னை நீ ஆட்கொள்ளமாட்டாயோ
என்னும் அளவில்லாத காதல் உன்னோடு
பரபிரம்மமே உனக்கு பணிவிடை செய்ய
எந்தன் காதலை ஏற்றுக்கொள்
இனி ஒரு பிறவியும் வேண்டிலேன்!

Friday 28 August 2009

கடவுள்

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பிறந்ததினால் நன்றி கூற
தலைமுடி காணிக்கை
கடவுள் பழக்கம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்
சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

கோவில்களின் வேலைப்பாடுகள் மத்தியில்
கையெடுத்து கும்பிட வைக்கும்
சிலையாய் கடவுள்

கடவுள் காட்சி தருகிறார்
மனிதர் காட்டும் வித்தைகள்

எங்கும் தேடாதே
ஒளிந்திருக்கும் உன்னில் கடவுள்
சொற்பொழிவாளரின் சொல்வன்மை

எல்லாம் கடந்து உள்ளவன்
எல்லை இல்லாதவன்
தவத்தினால் வருகை தந்தவன்
வரம் எல்லாம் அள்ளி தந்தவன்
வெறும் காட்சிகளாய் கதைகளாய் இன்று

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது
கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.

Thursday 27 August 2009

திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்!

பன்னிரண்டு வயதில் எங்கள் கிராமத்தில் அமர்ந்து எழுதப்பட்ட ஒரு கதை. நானும் எனது மாமா மகனும் அந்த கதையை எட்டு காட்சிகளுடன் எழுதினோம். கதையின் தலைப்பு மறந்துவிட்டது. திரைப்பட இயக்குநர் திரு.கே.பாலசந்தர் அவர்களுக்கு அனுப்பலாம் என முடிவு செய்தோம். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டோம். இப்பொழுது அந்த கதை எங்கே போனது எனத் தெரியாது.

எனது மாமா மகனுக்கு இசைத்துறையில் மிகவும் ஆர்வம். கவிதைகளும் நன்றாக எழுதுவான். திரைப்படத் துறையில் சேர வேண்டும் எனும் ஆர்வம் அவனுக்கு இருந்தது. எனக்கு ஒரு பாடலாசிரியாராக வேண்டும் எனும் எண்ணம் இருந்தது.

எனது அண்ணன் கிராமத்தில் இருக்கும் சாவடி எனப்படும் ஒரு இடத்தில் வேஷ்டியைக் கட்டித் தொங்கவிட்டு ஃபிலிம் ரோல் மூலம் படம் காட்டியதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மிகவும் வித்தியாசமாக நால்வர் சேர்ந்து ஒரு கதையை எழுதி பேசி டேப்பில் பதிவு செய்து பலருக்குப் போட்டுக் காட்டினோம். பொறுமையாகக் கேட்டவர்கள் 'மிகவும் நன்றாக இருக்கிறதே' எனப் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதனை உற்சாகமாக எடுத்துக் கொண்டு 'ஜெராகாரா புரொடக்ஸன்ஸ்' என நாங்களாகவே பெயர் சூட்டினோம். நால்வரின் பெயரில் முதல் எழுத்து மட்டும் கொண்டது அது. அந்த பெயர் மூலர் ஒரு கதையை வெளியிடுவதாக ஊரில் கைப்பட எழுதிய சின்ன சின்ன போஸ்டர் ஒட்டினோம். ஆவலுடன் பலரும் வந்தார்கள். நன்றாக இருந்தது எனவும் சொன்னார்கள்.

இப்படியே திரைப்படத் துறையில் எப்படியாவது காலடி பதித்திட வேண்டும் எனும் ஆவலில் திரைப்பட இயக்குநர் திரு.ஆபாவாணன் அவர்களுக்கு ஆறு பாடல்களை எழுதி அனுப்பினோம். அதில் நடிகர் திரு.விஜயகாந்த் அவர்கள் எனக்கு மாமா, மற்ற மூவருக்கும் சித்தப்பா என அறிமுகப்படுத்தி எனது மாமா மகன் எழுதிட அனுப்பினோம். பதிலே வந்தபாடில்லை.

படிப்பு விசயமாக அவரவர் நாங்கள் பிரிந்து சென்றிட புரொடக்ஸன்ஸ் பண்ணாமலேயே முடங்கிப் போனது. நான் வாடாமலர் எனும் கதையை எழுதினேன். அதனை தையல் தைப்பவரிடம் கொடுத்துப் படித்து கருத்துச் சொல்லக் கேட்டதும், அவரும் ஆவலுடன் வாங்கினார். இரண்டு வாரம் கழித்துச் சென்று கேட்டதும் பேப்பர் நன்றாக இருந்தது, அதனால் அதை துணி அளவுக்கு வெட்ட உபயோகப்படுத்திக் கொண்டேன் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. வயது மூத்தவர் என்பதால் எந்தவொரு பதிலும் பேசாமல் வந்துவிட்டேன். நகல் எடுக்கும் வழக்கமில்லாததால் ஒரு கதை காணாமலேப் போனது. சில நாட்கள் பின்னர் அவராகவே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். துணி உருவாக்கும் அவருக்கு ஒரு கதைப் படைப்பு பெரிதாகத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

நான் எழுதித் தந்ததை மேடையில் பேசி முதல் பரிசு வென்றான் நண்பன். கல்லூரியில் கவிஞனாகப் பார்க்கப்பட்டேன். ஆனால் அதெல்லாம் எத்தனை பொய் என்பது பலரின் படைப்புகளை இப்போதுப் பார்க்கும்போதும் சரி, எனது கவிதைகள், கவிதைகளே அல்ல என விமர்சனம் செய்த ஒரு இலக்கிய ஆர்வலரின் விமர்சனம் உண்மை தெரியவைத்தது. இப்போது கவிதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரட்டும் எனும் ஆர்வம் தான்.

நான் இலண்டன் வந்தபின்னர் எனது மாமா மகன் திரைப்படத் துறையில் சேர்ந்திட முயற்சி எடுத்து பின்னர் சரிவராது என கணினித் துறையில் படித்து முன்னேறி பட்டம் பெற்று லண்டன் வந்துவிட்டான். சில வருடங்கள் முன்னர் திரு.விஜயகாந்த் எனது சகோதரர் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் அவரைப் பார்க்கச் சென்று இருந்தோம். அமைதியே உருவாக இருந்த அவ்விடத்தில் நான் எப்போதும் போல் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். அப்பொழுது திரு. விஜயகாந்திடம் சின்ன வயது சம்பவங்களைச் சொன்னேன். அது குப்பையில போய் இருக்கும் என்றார் சிரித்துக் கொண்டே. அது சரிதான். நல்ல வேளை, பாடல்கள் வெளியாகி குப்பைக்குப் போகவில்லை.

இப்படியாக திரைப்படத் துறையில் வாய்ப்புத் தேடாமலே எனது சிறுவயது மற்றொரு கனவான ஆராய்ச்சியில் என்னைச் சேர்த்துக் கொண்டேன். ஒருவேளை திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால் சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு 'எப்படி இப்படியெல்லாம் வீணாக பணத்தைச் செலவழித்து மோசமாக படம் எடுக்கிறார்களோ' எனக் குறைபட்டுக் கொண்டது போல இல்லாமல் தரமிக்க படங்கள் எடுத்திருப்பேனா என எனக்குத் தெரியாது. பழைய பாடல்களை போலவே அர்த்தம் பொதிந்த புது பாடல்கள் என பாராட்டும்படி பாடல்கள் எழுதி இருப்பேனா எனவும் தெரியாது.

ஆனால் ஒன்று, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்துத் துறையில், ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்பு கண்டு நானே குறைபட்டுக் கொள்கிறேன் என்பதுதான் உண்மை.

நுனிப்புல் பாகம் - 1 (2)


வாசன் வீட்டின் வாசலில் ஏறியதும், ‘’என்னப்பா இவ்வளவு நேரமா? பொழுது சாயும் முன்னே வீடு வர்ரதுதானே?’’ என தாய் ராமம்மாள் வாசனை செல்லமாக கடிந்து கொன்டு, வந்ததும் வராததுமா கதை சொல்லப் போறேன்னு போகாத, சாப்பிட்டுப் போ என வார்த்தைகள் வீசினார். வாசன் நேசித்தான். ‘’சரிம்மா’’ என்றவாறே ‘’அப்பா இன்னும் வரலையாம்மா’’ என கேட்டான் வாசன். ‘’வரலைப்பா’’ என்றாள் தாய். பதிலில் ஒருவிதமன சலிப்பு தென்பட்டது.


வாசனின் தாய் 3ம் வகுப்பு வரைதான் படித்து இருந்தார். தோட்டத்து வேலை மற்றும் வீட்டு வேலையென வாழ்க்கையில் தன்னை ஒடுக்கிக் கொண்டவர். முதல் வாசன், இரண்டாவது தேவகி.

வாசன் சுருக்கம் பற்றிய கவிதை வாசிக்கலானான்.


"
ஏழு வார்த்தைகளில்

எழுதபட்ட ஒவ்வொரு திருக்குறளில்

கருத்துக்கள் பரந்துகிடக்கும்

விவரிக்கமுடியாத சுருக்கம்

நடந்து செல்லும் தூரம்

அடையும் காலம் விட

பரந்து செல்லும் தூரம்

அடையும் காலம்

விவேக விஞ்ஞானத்தின் சுருக்கம்

ஒரு மைல் கல் தொலைவில்

கத்தியும் செல்லாத சப்தம்

கடல் தாண்டி சென்றடையும்

கண்ணுக்கு உட்படாத சுருக்கம்

இலக்கணம் தாங்கிய

மரபு கவிதை

கருத்துக்கள் தாங்கிய

புதுக்கவிதை போய்

வந்த ஹைக்கூ

வார்த்தைகளின் சுருக்கம்

பதினைந்து பிள்ளைகள்

கொண்ட குடும்பம்

ஒரு பிள்ளையொடு ஒடுங்கிபோனது

நிலத்தின் சுருக்கம்

அட விரிந்து பரந்த உள்ளம்

கொண்ட மனிதன் மனது

எதனின் சுருக்கம்?"


‘’
கவிதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டியா’’ என அம்மா அவனை சாப்பிட வரச் சொன்னார்.


வாசனின் தந்தை வியாபரம் செய்பவர். 5வது வரை படித்து இருந்தார். தோட்டத்தில் விளையும் காய்கறி பொருட்கள் காலை மாலை என பக்கத்து கிராமத்து, நகரத்து கடைகளுக்கு விற்பனை செய்பவர். அவர் பலரை அறிந்து வைத்து இருந்ததால் வாசனை அவர் வியாபாரத்திற்கு ஒருபோதும் அனுப்புவது இல்லை. தந்தையின் பெயர் ராமமூர்த்தி.


'நான் அப்பா வந்ததும் வந்து சாப்பிட்டுக்கிறேன்மா' என வெளியே நடந்தான் வாசன். அம்மா வார்த்தைகளை இறைந்தார் 'கேளுப்பா' இது தாய், 'வரேன்மா' இது வாசன். வாசனுக்கு இன்னும் பெரியவரின் வாசகம் பெரும் யோசனையாக இருந்தது. வாசன் குழந்தைகளுக்கு ஒரு சின்ன கதை சொன்னான். கவிதையின் விரிவாக்கம் அது. மனிதாபிமானம் என்ற சொல்லின் விதை அன்று குழந்தைகளின் நெஞ்சில் விதைக்கப்பட்டது.


‘’
என்னம்மா வாசன் கதை சொல்லிட்டு இனியும் வரலையா’’ என்றவாறே ராமமூர்த்தி வீட்டினில் நுழைந்தார். வாசன் வீடு நுழையும் போதெல்லாம் ராமமூர்த்தி காத்து இருப்பதில்லை. ராமமூர்த்தி வீடு நுழையும் போதெல்லாம் வாசன் வீட்டில் இருப்பதில்லை. இது அவர்களிடையே ஒரு மாலை நேர ஒப்பந்தமாக இருக்கும்.


‘’
வரேன்னு சொல்லிட்டு சாப்பிடாம கூட வெளியில போனான், இன்னைக்கு தோட்டத்திலே இருந்து தாமதமாகத்தான் வந்தான். அது சரி, என்னங்க இன்னைக்கு வியாபரம் எப்படி’’ என்றவளிடம், ‘’இன்னைக்கு நல்ல வியாபரம்தான்’’ என கூறி பணத்தை எடுத்துப் பத்திரபடுத்தச் சொன்னதுடன் கிணற்று அடிக்கு முகம் அலம்ப சென்றார்.


வாசனின் வீடு ஊருக்கு தெற்கே இருந்தது. கிழக்கு பார்த்த வாசல். சின்னதாய் வரவேற்பு அறை. பெரியதாய் ஒரு அறை. தனித் தனி அறைகளாய் பூஜை அறை ஒன்று, சமையல் அறை ஒன்று. மாடியில் மூன்று அறைகள். வீட்டின் பின்புறம் சின்னதாய் தோட்டம். ஒரு கிணறு. வாசன் தினமும் காலையில் கிணற்றில் தன் முகம் பார்க்கும் வழக்கம் உண்டு. சலனமில்லாத நீரினை ரசிக்க ஆரம்பித்து இரவு தூங்கும்முன் வரை அமைதியினை ரசிக்க நினைப்பவன்.


வாசன் வந்தான். ‘’அப்பா இப்பதான் வந்தீர்களா, சாப்பிடலாம்பா’’ என்றான் வாசன். உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும்போது ராமமூர்த்தி எப்போதும் பேசுவதில்லை. என்ன தேவையோ அதை கேட்கவே பேசுவார், மற்றபடி விவாதங்களில் ஈடுபட விரும்புவதில்லை. வாசன் இதை நன்கு அறிவான். உண்டு முடித்ததும் ‘’அப்பா வினாயகம் பெரியவர் நம்ம தோட்டத்தை விலைக்கு கேட்டார் அதாவது கரிசல எடுத்துக்கிட்டு அதே அளவுக்கு செவல எடுத்துக்க சம்மதமான்னு சொன்னார்’’. ராமமூர்த்தி தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் முன்னர் தன் மகன் பேச்சைக் கேட்டதும் இவை இரண்டையும் எப்படி ஜீரணிப்பது என அயர்வுற்றார்.


‘’
வாசா நீ என்ன பதில் சொன்ன’’ என கேட்டார். தன்னை கலந்து ஆலோசித்து முடிவுதனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினாரோ என்னவோ உணராமல் தன் மகனைக் கேட்டார். ‘’நான் உங்களைக் கேட்டு சொல்றதா சொல்லியிருக்கேன்பா' என அவனது தந்தையின் முக்கியத்துவம் சொன்னான் வாசன்.


‘’
நான் கேள்விபட்டேன் அவரு அங்கு இருக்கிற நிலத்தை எல்லாம் விலைக்கோ இல்லை மாற்றுக்கோ கேட்டுக்கிட்டு இருக்காருனு’’ என்றார் தந்தை. ‘’அவரும் கணேசன் நிலத்தை மாத்திட்டேன்னு சொன்னாருப்பா. என்ன விசயத்திற்கு இப்படி செய்றீங்கனு கேட்டேன் ஒண்ணும் பதில் இல்லை, நாளைக்கு பேசுவோம்னு போய்ட்டார். நம்ம வடக்கு நிலம் ஒட்டி இருக்க காசி நிலம் கூட தர சம்மதம்னு சொல்லிட்டதா சொன்னார்’’ வாசன் வாக்கியம் நீண்டு கொண்டே போனது. வாசன் கூறிய விசயத்தில் இருந்து இந்த நிலத்தை விற்றுவிடுவோம் என சொல்லாமல் சொல்லும் வாசகம் போல் இருந்தது.


‘’
அதான் எனக்கும் புரியலப்பா, ஏகப்பட்ட நிலம் வைச்சிருக்கார், எதுக்கு கரிசல் நிலம் வேணும்னு கேட்கிறார்னு தெரியல விவரம் சொன்னாலாவது சரி செவல் கிடைக்குதுனு விடலாம். சரி பேசிப்பாரு’’ என நிலமாற்றம்தனை சம்மதம் தந்து விட்டது போல கூறினார். ‘’என்ன சொல்றீங்க, இதே பூமியில விளையற விளைச்சல் செவல்ல விளையுமா, இது தனிமதிப்புனு சொல்வீங்களே’’ என குறுக்கே பேசிய தாய் நிலம் மாற சம்மதிக்கமாட்டாள் எனப்பட்டது வாசனுக்கு.


‘’
யோசிக்க வேண்டிய விசயம்தான் ஆனா நிலத்துக்கு நிலம் பணமும் தந்தா வேணாம்னு சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். உழைக்கிற உழைப்பை உண்மையாகவும் உறுதியாகவும் உழைச்சா பலைவனத்துல கூட பசுமை புரட்சி செய்யலாம்’’ என்றார் தந்தை.


‘’அப்படின்னா பெரியவர்கிட்ட நாளைக்கு பேசி எல்லாம் முடிச்சிருவோம்' என மகன் கூறியதை தந்தை ஆமோதிப்பதுக் கண்டு தாய் சின்னக் கோபம் கொண்டார். ‘’என்னங்க சிலருக்கு, அவரு கேட்டாருன்னு பணம் அதிகம் வாங்கி நிலமாத்துரது சரியில்லை, என்னதான் இருந்தாலும் அது நாம பாடுபடுற பூமி’’ தாய் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.


சிலருக்கு சில விசயங்கள் சரியோ தவறோப் பிடித்து விடுகிறது, மாற்றங்கள் அவசியம் எல்லை என பழைய விசயங்களில் ஊறிப்போய் புதிய விசயம் திணிக்கப்படுவதை அறவே வெறுக்கிறார்கள். இதன் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


‘’
வாசா உன் அம்மாவை நீ சம்மதிக்க வை அப்புறம் இது பத்தி பேசலாம்’’ தன்னால் பேசுவதில் ஒரு உபயோகம் இல்லை, மனைவியையும் பேசிப் புரிய வைத்து ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணமில்லாதவராக அவரது பேச்சு இருந்தது. தாய் யோசிக்கலானார்.