Wednesday 26 February 2014

நுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா

மதிப்புரை 

நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.

இயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்துஅறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.

அறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .

பெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.

பெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும்குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல்தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.

ஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி  பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .

நுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது!.

நன்றி


எஸ். ஐஸ்வர்யா

மிக்க நன்றி ஐஸ்வர்யா .

Tuesday 25 February 2014

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - பாபிலோன் ஓரினச்சேர்க்கை

எகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.

ஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.

பாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.


                                                            படம் நன்றி: விக்கிபீடியா

இந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.

பாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.

வணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.

ஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.

பாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

சுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு  நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி  கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.

இந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

சாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

                                படம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா

ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள்  லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.

பலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.

இதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.

உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும். 

பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்

(தொடரும்)

Monday 24 February 2014

கதிர்வேலனின் வில்லாவில் பிரியாணி

சினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.

இது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட  நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு திரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.

அப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.

மசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.

இப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.

இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ  செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம். 

Thursday 20 February 2014

காமத்தின் மீதேறி

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான்  ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின்  நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது. 

ஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின்  சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது. 

அப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது. 

கண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை  என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு. 

தனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. 

ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு. 

குறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும். 

இது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல்  இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது. 

திருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை 
அடைத்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
வலி தான். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை
திறந்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
சுகம் தான். 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''  இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு  மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது. 

விபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது  விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது. 

மேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது. 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' 

இவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான். 

உலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு. 

காமத்தின் மீதேறி
பணம் பண்ணும் 
கயமைத்தனம் சமூகத்தில் 
புரியவொண்ணா செயல் 
காமத்தின் மீதேறி 
இளம் பிஞ்சுகளை 
இயந்திர பொருளாக்கி 
பெண் இனத்தை 
பேதலிக்க செய்யும் 
கொடிய சமூகம் 

நிகழ்ச்சி முடிவடைகிறது. 

காமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும். 

Wednesday 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்) 

Friday 14 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 3

உண்மையிலேயே ஆண்டாள் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கானு தெரியலைங்க. ஆனால் ஆண்டாள் பற்றி விஜயபாஸ்கர பட்டர் எழுதின புத்தகத்தில் இருந்து ஏராளாமான விஷயங்கள் ஆண்டாள் பற்றி தெரிஞ்சிக்கிரலாம்.

அந்த புத்தகத்தில் ஒவ்வொரு நாச்சியார் திருமொழி எழுதின காரணத்தை சொல்லி இருப்பாங்க. இப்படியா ஒரு பெண் தன்னை அலைக்கழித்து கொள்வார் என்றே எனக்கு தோணியது. எல்லாம் இந்த பெரியாழ்வார் பண்ணின வேலை. சும்மா இருக்காம எப்ப பார்த்தாலும் கண்ணன் கண்ணன் சொல்லி சொல்லியே ஆண்டாளை இப்படி பண்ணிட்டாரு.

ஆண்டாள் அப்படின்னு பேரு கூட பெரியாழ்வார் கொடுத்ததுதான். இந்த பெரியாழ்வார் பத்தின கதை, ஆண்டாள் பத்தின விபரங்கள் எல்லாம் அப்புறம் பாக்கலாம்.

இந்த ஆண்டாள் எதுக்கு இப்படி எழுதினாள் அப்படின்னு நான் நினைச்சிட்டே இருப்பேன். அந்த பாட்டு இப்போ இங்கே.

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தெனொல்லை விதிக்கிற்றியே

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மேலிருக்கும் பாடல் எல்லாமே முதல் திருமொழி. இப்போ இதுக்கு இந்த மூணு பாட்டு தேர்ந்தெடுத்தேன் தெரியுமா, எல்லாம் காரணமாகத்தான். எங்க கிராமத்தில எல்லாம் தாய்ப்பால் அப்படின்னு சொல்வாங்க. முலைப்பால் அப்படின்னு ஒருத்தரும் சொல்லமாட்டாங்க. இப்ப எல்லாம் இந்த தாய்ப்பால் விஷயம் எல்லாம் விளம்பரம் பண்ணிற மாதிரி ஆகிப்போச்சு. இந்த தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கடத்தப்படற விஷயம் எல்லாம் அறிவியல் இப்போ சொன்னதுதான். ஆனா இது எல்லா பாலூட்டி ஜீவராசிகளும் வழக்கம் போல செய்வதுதான்.

இந்த பெண்ணின் அங்கம் ஒரு கவர்ச்சி என்ற விதத்தில் மாறிப்போனது நமது துரதிர்ஷ்டம். பாரதியார் கூட கச்சணிந்த கொங்கை மாந்தர் என எழுதினார். அதைவிட அபிராமி பட்டர் ஒருபடி மேலே போய் எழுதி இருப்பார். அவரை பிறகு பார்ப்போம். பைத்தியமாடா உங்களுக்கு என்று இவர்களை ஏசி விடத்தோணுமா, தோணாது. ஆனால் இதை எல்லாம் ஒரு இலக்கியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். இந்த வரிகளை படிக்கும்போது ஒருத்தரும் தவறான எண்ணங்களை மனதில் கொண்டு வரமாட்டார்கள், காரணம் என்ன தெரியுமா. அதுதான் அடேங்கப்பா என பிரமிக்க வைக்கும் எழுத்துகளின் ஆளுமை. பெண்களை இப்படித்தான் வர்ணிக்கவேண்டும்  என்பதல்ல. அது காதலின் உச்சகட்டம், கலையுணர்வில் காமம் தெரிவதில்லை என்பதற்கே கல்லில் எல்லாம் நிர்வாண கோலங்களை செதுக்கி வைத்தார்கள். உணர்வில் மறைத்தும், உணர்வற்ற ஒன்றில் வெளிப்படுத்தியும் காட்டியது அன்றைய கலை.

இன்றைக்கு வேண்டாம், எல்லாமே வக்ர துண்டாய தீமஹி என ஆகிவிட்டது. தனது எண்ணத்தை ஆண்டாள் வெளிப்படுத்தினாள், அதைத் தேடிப் படித்து அவள் இப்படி எழுதிவிட்டாள் என சொல்வது நமது குற்றம். கெட்ட நோக்கத்தில் இப்போது சொல்லிவிட்டு ஆண்டாள் மட்டும் எழுதலாமா என்றால் நம்மால் ஆண்டாள் போல் பக்தியை வெளிக்காட்ட முடியுமா என்ன. நினைத்த போதெல்லாம் காதலன், காதலி மாற்றும் நமது சமூகத்திற்கு ஆண்டாள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த ஆண்டாள் எதற்கு இப்படி எழுதினாள். தனது மார்பகங்கள் குறித்து எழுதவேண்டிய நிர்பந்தம் ஆண்டாளுக்கு வந்தது என்ன காரணம். ஒரு பெண் தனது காதலை இத்தனை வெளிப்படையாகவா சொல்ல இயலும். அதுவும் அந்த மன்மதனிடம் மன்றாடினாள். தான் ஒரு பெண் என்பதையும் அந்த எம்பெருமானுக்கே என்னை கொடுத்தேன் என்பதையும் காதலால் கசிந்துருகி சொன்னாள். இதில் எவ்வித விரசமும் இல்லை. எங்கள் கிராமமும், எங்கள் கிராமத்து அம்மாக்கள் எல்லாம் மிகவும் சகஜமாகவே பேசுவார்கள். ஆனால் இன்றைய நாகரிகம் எல்லாம் மூடித்தொலைத்து காமம் என ஆக்கிவிட்டது. அதுசரி ஆண்டாள் எதற்கு சொல்ல வேண்டும் இதோ அவள் எழுத காரணமான காட்சி.


திருப்பாவை ஒன்றில் இப்படித்தான் பாடினாள்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்


அடேங்கப்பா ஆண்டாள். நீ தைரியமானவள். நான் மிகவும் கோழை.

(தொடரும்)

Thursday 13 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 2

ஸ்ரீவில்லிபுத்தூர் அப்படினாலே எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா. ஐயோ எப்படி இருக்கும் தெரியுமா. அப்படியே மொத்தமா வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கேன். எங்க ஊருல ஒரு ஹெல்ப்பர் மாமா இருந்தாங்க, அவரோட பையன் ஸ்ரீதர். ஸ்ரீதர் என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன். இன்னமும் என் மேல மாறாத பாசம் வைச்சிருக்கிறவன். சின்ன வயசுல நிறைய புத்தகங்கள் வாசிப்பான். புத்தகத்தை கூட பத்து பைசா, பதினைஞ்சி பைசான்னு வாடகைக்கு தருவான். எங்க ஊருல இருந்து மல்லாங்கிணறுக்கு மாறி போனாங்க. ஆனாலும் ஊருக்கு வந்தா என்னை பாக்காம போகமாட்டான். நான்தான் ரொம்பவே ஒதுங்கி போயிட்டேன். இந்த வாட்டி தேடி வந்து பாத்துட்டு போனான். சந்தோசமாகவே இருந்தது. 

அப்புறம் அவங்க அருப்புகோட்டை போய்ட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல கொஞ்ச வருஷம் இருந்தாங்க. என்னை அங்க வந்து சில நாள்கள் இருக்க சொன்னாங்க. நானும் விடுமுறைக்கு  அங்க போயி ரெண்டோ மூணோ நாட்கள் தங்கி இருந்தேன். மலைகள் அது இதுன்னு இருந்தது. கோவிலுக்கு எல்லாம் போனேன். அங்கே ஆண்டாள் முகம் பாக்கிற கிணறு எல்லாம் காட்டினாங்க. நான் கூட ஆண்டாளோட முகம் எங்கனயாச்சும் ஒட்டிக்கிடாக்கானு பாத்தேன். சும்மா சொல்லலைங்க, எனக்கு ஆண்டாள் அப்படினா அத்தனை இஷ்டம். 

அப்புறம் எப்போ ஸ்ரீவில்லிப்புத்தூர் போனேன்னு எனக்கு தெரியாது. மறந்து போயிட்டேன். சமீபத்துல சில வருடங்கள் முன்னர்  நுனிப்புல் புத்தக விஷயமா நண்பர் ரத்தினகிரியை சிவகாசியில பார்த்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போனேன். அங்கே அனந்தசயன பட்டர் எனக்கு நிறைய கதைகள் சொன்னாரு. அதை வைச்சித்தான் நுனிப்புல் இரண்டாம் பாகத்தில் சில கதைகளை கலந்துவிட்டேன். எனக்கு அவருகிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருந்தது. 

எப்படி திருவில்லிபுத்தூர் உருவானது முதற்கொண்டு அந்த கதைகள் இருந்தது. எனக்கு பெரியாழ்வார் வம்சாவழி இருக்காங்களான்னு தேடிப் பார்க்கணும் போல இப்போ இருக்கு. ஆனால் அப்போ எதுவுமே எனக்கு கேட்க தோணலையே. அப்போதான் எனக்கு இந்த பெரியாழ்வார்தான் ஸ்ரீ ஆண்டாள் மாதிரி தன்னை உருவகிச்சி எழுதினாரு அப்படின்னு ஒருத்தர் சேதி சொன்னார். உடனே எனக்கு வந்த வாசகம் தான். ''உண்மையை யார் உண்மையாக இருக்க விட்டது'' அப்படின்னு. இதை முத்தமிழ்மன்றத்தில பார்த்த மணிப்பாண்டினு ஒரு நண்பர் இது ஞான வாக்கு அப்படினு சொன்னார். ஐயோ இது கோப வாக்கு அப்படின்னு மனசுல சொல்லிக்கிட்டேன். ஆமா எதுக்கு பெரியாழ்வார் தன்னை ஆண்டாள் மாதிரி வேஷம் போட்டு பண்ணனும். அவருக்கு வேறு வேலை இல்ல. அன்னைக்கி சொன்னவர்கிட்ட பதிலே பேசாம சிரிச்சிட்டே போய்ட்டேன். 

இந்த ஆண்டாள் யாரு பெத்த புள்ளையோ. என்னை எங்க ஊருல ஒருத்தர் 'உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினாங்க'னு சொன்னதும் ஓனு அழுதுட்டே போய் என்னை தவிட்டுக்கா வாங்கினீங்கனு அம்மாகிட்ட சின்ன வயசில கேட்டு இருக்கேன். அது கிண்டலுக்கு சொல்றதுன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. எங்கம்மா சொன்னப்பறம் தான் படுபாவி பசங்க இப்படி கூட பண்ணுவாங்க என நினைச்சேன். அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்திச்சி. இதைக்கூட எங்கேயாச்சும் சொல்லி வைச்சிருப்பேன். 

என்னோட சின்னம்மா அவங்களுக்கு ஆண் வாரிசு இல்லைன்னு என்னை தத்து எடுத்துகிறேன்னு சொன்னப்ப எங்க அப்பா திட்டி விட்டுட்டாராம். அப்படி ஒரு புள்ளைய எப்படி தர முடியும்னு. இப்ப கூட என் சின்னமாவை நினச்சா கஷ்டமா இருக்கும். என்னைய வேணும்னு கேட்டு இருக்காங்களே.ஆனா எல்லா அக்காக்களும் நல்ல முறையில திருமணம் முடிச்சி எல்லாருமே நல்லா இருக்காங்க. ஆண் வாரிசு, பெண் வாரிசு எல்லாம் ஒன்னுதேன். நாங்க வீட்டுல சின்னம்மா, பெரியம்மா எல்லாம் கூப்பிட மாட்டோம், எல்லோருமே அம்மாதான். 

அதிருக்கட்டும், அம்மா அப்பா தெரியாத ஆண்டாள் துளசி செடிக்கு கீழே கிடந்ததை பார்த்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் அப்படின்னு சொல்லுது ஆண்டாள் வரலாறு. அதாவது அந்த மகாலட்சுமியே அவதாரமாக வந்ததா நம்மளை எல்லாம் நினைக்க சொல்லுது வரலாறு. ஆனா நான் அப்படி நினைக்கலைங்க. என் ஆண்டாள் எவராலோ கைவிடப்பட்டவர். இந்த ஆண்டாளை இப்படி தன்னந்தனியா போட்டுட்டு போன பெற்றோர்களை நினைச்சா பரிதாபமாகவே இருக்கும். எப்படி ஒரு அற்புதத்தை தொலைத்துவிட்டார்கள்னு. இல்லைன்னா பெரியாழ்வாருக்கு பெயர் போகுமா. 

இப்போ பெரியாழ்வார் வீட்டில வளரும் ஆண்டாளுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் அது பெரியாழ்வாரின் பக்தி அப்புறம் இந்த நாராயணன். சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடும் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் பாடுற பாட்டு, நாராயணன் பத்தின அன்பு எல்லாம் சொல்ல சொல்ல தனக்குள்ளே ஆசைய ஆண்டாள் வளர்த்துக்காம என்ன பண்ணுவா. 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறாயிரம் அப்படின்னு சொன்னா எனக்கே சில்லுனு இருக்கே, எப்படி இருந்து இருக்கும் இந்த ஆண்டாளுக்கு. ஆண்டாள் போல இருந்த தோழிகள் எல்லாம் எதுக்கு ஆண்டாள் மாதிரி பாடலை. அதுதான் கொடுப்பினை. சரி, நான் சமீபத்தில ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போனேனா, அந்த ஆண்டாள் பார்த்தேனா. சின்ன பொண் போல என் கண்ணுக்கு தெரிஞ்சிதுங்க, பாத்துட்டே இருந்தேனா, கண்ணீர் கோத்திருச்சி. என்ன ஆச்சின்னு மனைவி கேட்டாங்க. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேன். 

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். அடேங்கப்பா ஆண்டாள். எப்படி இப்படி உன்னால் நினைக்க முடிந்ததுன்னு அப்ப நினைச்சப்ப வந்த கண்ணீர் அது. 

இப்ப கூட எங்கயாச்சும் உட்காந்து ஆண்டாள் பத்தி நினைச்சா கண்ணீர் கோத்துக்கும். என்னை பொருத்தவரை ஆண்டாள் ஒரு கற்பனை உலகத்தை தனக்கு உருவாக்கிகிட்டானுதான் தோணும். 

இந்த ஆண்டாள் நாச்சியார் திருமொழிக்கு காரணமே, திருப்பாவை கேட்டும் மனம் இரங்காத நாராயணன் தான் காரணம்னு சொல்வாங்க. ஒருவேளை இந்த நாராயணன் ஆண்டாள் இப்படி எல்லாம் பாடட்டும்னு நினைச்சி இருப்பாரோ. 

அனங்கதேவன் யாரு தெரியுமாங்க! சிவனால் உடல் எரிக்கப்பட்ட மன்மதன். அடேங்கப்பா ஆண்டாள். 

(தொடரும்) 

Wednesday 12 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 1

ஒரு கற்பனையான வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். ஒரு பயலும் நம்மை என்ன ஏதுன்னு கேட்கமுடியாது.நம்ம இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு போயிரலாம். ஆனா அந்த கற்பனையை வெளியில் சொன்னா காறி துப்புவாங்கே என்னமோ கற்பனையே பண்ணாதவங்க மாதிரி. ஆனா இந்த ஆண்டாள் இருக்காளே ஆண்டாள் அதுதான் வில்லிப்புத்தூர் கோதை, தன்னோட கற்பனைகளை எல்லாம் வெளியில் அள்ளி கொட்டிட்டா. கொஞ்சம் கூட அவள் யோசிச்ச மாதிரியே தெரியலை.

அவள் விதிக்கிற்றியே அப்படின்னு சொல்றப்ப நான் விக்கித்துப் போனேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் திருப்பாவை மட்டும் தான். அப்போ அப்போ வாரணமாயிரம் சூழ வலம் வந்து கேட்டு இருக்கேன். கற்பூரம் நாறுமோ கேட்டு இருக்கேன். ஆனா முழுசா நான் நாச்சியார் திருமொழி படிச்சது இல்லை. வில்லிப்புத்தூர்காரர் ஒருத்தர் என்கிட்டே நாச்சியார் வரலாறு கொடுத்தாரு அதுல இந்த நாச்சியார் திருமொழி இருக்கு. அவர் கொடுத்து ஐஞ்சு வருஷம் மேல இருக்கும். அப்போ அப்போ எடுத்து பாத்துட்டு வைச்சிருவேன். எனக்கு எங்கே இலக்கியம் படிக்கிற அளவுக்கு அறிவு இருக்கு.

பொதுவாகவே எனக்கு இந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் அப்புறம் தமிழ் இலக்கியங்கள் மேல ஒரு ஆசை உண்டு. சாகும் முன்னர் நானும் ஒரு வியாசர், வால்மீகி ஆகணும்னு சின்ன வயசுல மனசுல நினைச்சிப்பேன். இப்ப கூட இந்த ஆராய்ச்சி எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எல்லா இலக்கியம் எடுத்து படிக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். ஆனாலும் கம்பராமாயணம், ஸ்ரீமத்பாகவதம் எல்லாம் எடுத்துப் புரட்டி பார்த்துட்டு வைச்சிருவேன். ஏகப்பட்ட வேலைகளுக்கு இடையில் இது எப்படின்னு ஒரு மலைப்பு வந்து சேரும்.

நேத்து ஒரு இரவு பத்து மணி இருக்கும். திடீருன்னு ஆண்டாளோட நாச்சியார் திருமொழி யூட்யூப்ல தூங்கிட்டே கேட்க ஆரம்பிச்சேன். இதுமாதிரி பல தடவை நாலாயிர திவ்விய பிரபந்தம் கேட்க நினைச்சி பத்து நிமிசத்தில மனைவிகிட்ட திட்டு வாங்கி நிப்பாட்டி இருக்கேன். ஆனா நேத்து அத்தனை பாட்டையும் கேட்டு முடிச்சிட்டேன். அடேங்கப்பா ஆண்டாள் அப்படின்னு தோணிச்சி. எனக்கு ஆண்டாள் காலத்தில வாழ்ந்து இருக்கணும்னு தோணிச்சி. ஆண்டாள் தோழிகள் கூட பேசி இருக்கணும்னு தோணிச்சி. எதுக்கு ஆண்டாள் இப்படி நினைச்சா, யாரு ஆண்டாளுக்கு இப்படி ஒரு எண்ணத்தை  வரவைச்சதுனு எனக்கு தெரிஞ்சிக்க ஆசை. அதனாலதான் என்னோட நாவலில் குட்டி சுபாவை உருவாக்கினேன். அவள் ஆண்டாள் மீரா போல ஆகணும்னு ஆசை படுற மாதிரி வைச்சேன். எனக்கு இந்த நுனிப்புல் நாவலை திரும்ப எழுதனும்னு ரொம்பவே ஆசை. ஆனா நான் பண்ணிக்கிட்டு திரியற வேலையில இதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு.

இப்படி நேரம் இல்லை இல்லைன்னு சொல்றியே, விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டுப் போ அப்படின்னு மனசு கூட சொல்லும். ஆனா விருப்பம் நிறையவே இருக்கு. இதைவிட பெரிய கொடுமை, ஒரு பண்டிதர் சொன்னாரு, ஆண்டாள் ரங்கனை நினைச்சி பாடலை, வேறொரு காதல்னு சொன்னப்ப எனக்கு பிரமை பிடிச்ச மாதிரி ஆயிருச்சி. ரெண்டுநாள் சோறு தண்ணி இறங்கல. எப்படி அவதூறு பேசறீங்கனு அந்த பண்டிதர்கிட்ட மனசில இருந்ததை எல்லாம் கொட்டி வைச்சேன். அந்த பண்டிதரை வெறுப்பேத்திட்டேனு கூட நான் உணரலை. உண்மையிலே எனக்கு அன்னைக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சி. இதுல என்ன பெரிய கொடுமைனா அந்த பண்டிதருக்கு இந்த ஆண்டாளை ரொம்பவே பிடிக்கும். இதுநாள் வரை நான் அப்படி நடந்ததே இல்லை.

என் ஆண்டாள், என் ஆண்டாள் அப்படின்னு ரொம்பவே ஆண்டாளை நேசிச்சிட்டு இருந்து இருக்கேன். இல்லைன்னா திருப்பாவையை சின்ன வயசுல மனப்பாடம் பண்ணி தினமும் பாடி இருப்பேனா. எங்க வீட்டுல என் அக்காக்கள் பல பேருக்கு நாச்சியார் பேரு தான், இப்ப சில வருஷம் முன்  பிறந்த என் அண்ணனோட பெண் குழந்தைக்கு கூட நாச்சியார் தான். நான் கூட நாவலில நாச்சியார்னு ஒரு பகுதி வைச்சி இருந்தேன். நாவலிலே அது ஒண்ணுதாண்டா நல்லா இருக்குனு என்னோட ஒரு அக்கா கோதை நாச்சியார் சொன்னப்ப மனசுக்கு சந்தோசமாகவே இருந்துச்சி.

எனக்கு ஆண்டாள்னா ரொம்பவே இஷ்டம், இல்லைன்னா ஆண்டாளுக்கு கல்யாணம்னு ஒரு சிறுகதை எழுதி இருப்பேனா. அந்த கதையில் வர பொண்ணு சனிக்கிழமை சனிக்கிழமை கல்யாண கனவு காண்பா. நான் அந்த கதையில சொல்ல வந்ததே இந்த ஆண்டாள் தான், ஆனா cystic fibrosis பத்தி அப்போ படிச்சிட்டு இருந்தேனா அதை அப்படியே கதையில இடைச்செருகல் பண்ணிட்டு இந்த வில்லிபுத்தூர் ஆண்டாளை அப்படியே ஒதுக்கி வைச்சிட்டேன்.

என்கிட்டே என்ன குறைன்னா, எதுவுமே முழுசா தெரியாது. எல்லாம் செவி வழி கேட்டதுதான். உண்மையிலே எனக்கு அறிவு கம்மிதான். ஆனா யாரும் நம்பறதே இல்லை. தன்னடக்கம், புலனடக்கம்னு சொல்லிட்டு போவாங்க. போங்கப்பு எனக்கென்ன. எனக்கு இந்த இலக்கியத்துல இருக்கிற பிரச்சினை மொழி பிரச்சினை.

ஒருத்தர் என்ன எழுதுறாரு என்ன சொல்ல வராருருனு என்னால புரிஞ்சிக்க முடியறது இல்ல. நானே ஒரு அர்த்தம் வைச்சிட்டு போயிருவேன். அது தப்போ சரியோ யாருக்கு கஷ்டம். எனக்குதானே. என்னோட மாமா மகன் வீட்டுல தமிழ் அகராதி வைச்சிருந்தான். நான் அப்பப்போ எடுத்து பார்ப்பேன். ஆனா அதை கூடவே கொண்டு வந்து இருக்கணும். ஆத்தி, ஆண்டாள் என்ன என்ன எழுதி இருக்கா. வார்த்தை தேனாமிர்தம் மாதிரி இருக்கு ஆனா எப்படி அர்த்தப்படுத்தி படிக்கிறதுன்னு எனக்கு தெரியலை.

ஏண்டி ஆண்டாள், உன் காதல் நிறைவேற ரங்கன் கிட்ட கேட்காம அந்த மன்மதன் கிட்ட, காம தேவன் கிட்ட எதுக்குடி கேட்டனு எனக்கு கேட்கணும் போல இருக்கு. போயும் போயும் அந்த மன்மதன்கிட்டவா மன்றாடனும். ஆனா காதலுக்கு மன்மதன் தான் தலைவனாம். ஆண்டாள் தப்பு செய்வாளோ! அனங்கதேவா அப்படின்னு ஆண்டாள் சொல்வா, அடேங்கப்பா!

காதலர்கள் தினம் கொண்டாடுறவங்க எதுக்கும் ஆண்டாள் பாசுரம் எடுத்து படிங்க.

(தொடரும்) 

Wednesday 5 February 2014

அங்கன எதுக்கு போன

ஸ்ரீராம் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். அவனைக் கண்டால் சிறு வயதில் இருந்தே பயந்து ஒதுங்கி விடுவேன். அவனை ஊரில் திமிர் பிடிச்சவன் என்றே சொல்வார்கள். நல்ல உயரமாக கருகரு முடியுடன் வாட்டசாட்டமாக இருப்பான். நானோ சோப்ளாங்கி போல இருப்பேன். என்னை கிண்டல் பண்ணாத நாளே அவனுக்கு கிடையாது. அவனிடம் எல்லா கெட்டப் பழக்கங்கள் இருந்தது. பிறரிடம் வம்பு இழுப்பதே அவனது வழக்கம். சண்டியர், வில்லங்கம் என்றே அவனை ஊரில் அழைப்பார்கள். அதனால் அவனுடன் எவரும் அத்தனை எளிதாக பழகமாட்டார்கள். அவனுக்கு பயந்தே ஊரில் பலரும் தவறு செய்ய யோசிப்பார்கள். அவன் கண்ணில் பட்டுவிட்டால் நிறைய பொய்கள் சேர்த்து ஊர் எல்லாம் சொல்லித் திரிவான். .

எப்படியோ இத்தனை வருடங்களாக அவனோடு ஒட்டுதல் உறவு எதுவும் இல்லை என்றாகிவிட்டது. இனியும் இப்படியே கழிந்தால் போதும் என்றே இருப்பேன்.

ஆனால் அன்று  ஸ்ரீராம் என்னை வந்து அழைப்பான் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அழைத்துவிட்டானே என அவனுடன் செல்ல முடிவு செய்தேன். கையில் ஒரு தூக்குவாளி வைத்து இருந்தான். என்ன என கேட்டேன். பேசாம என் கூட வாடா என சொல்லிவிட்டான்.

சரியென அவனுடன் நடந்து போகையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

''இன்னொரு நாளைக்கு போகலாம்''

''பேசாம கூட வா, இல்லைன்னா உனக்கும் அந்த பொண்ணுக்கும் இருக்க லிங்க்க ஊரு போறா சொல்லிருவேன்''

''எந்த பொண்ணு, என்ன பேசுற''

''அதுதான் அந்த பிரபாவதி''

அவன் அவ்வாறு சொல்லியதும் எனக்கு மழைத்துளிகள் விட அதிக வியர்வைத் துளிகள் பூத்தது. எனக்கும் பிரபாவுக்கும் தெரிந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும், நான் சொல்லவே இல்லையே என நினைத்தேன்.

''எனக்கும் அவளுக்கும் என்ன லிங்க்கு''

''நீயும் அவளும் காதலிக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, அவளே வந்து சொல்லிட்டா''

''பொய் சொல்லாத''

''டேய் நான் அவகிட்ட என்னோட காதலை சொன்னேன், அதுக்கு உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டா, போனா போறான்னு விட்டுட்டேன். நீ என்னடா மழுப்பற''

''உன்கிட்ட தப்பிக்கிறதுக்கு அப்படி சொல்லி இருப்பா''

சற்றும் எதிர்பார்க்கும் முன்னர் என்னை ஓங்கி அறைவிட்டான் ஸ்ரீராம். நானும் யோசிக்காமல் பதிலுக்கு ஒரு அறை விட்டேன். இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டோம். நல்லவேளை எவரும் அவ்வழி வரவில்லை. முடிவில் அவனே ஜெயித்தான். எனது குரல்வளையை பிடித்து நெருக்கிட ஆமா ஆமா என என்றதும் விட்டான்.

''ஒழுங்கா கூட வாடா ''

கழுத்து வலியுடன் அவனுடன் நடந்தேன். ஒரு பனை மரத்துக்கு பக்கத்தில் சென்று நின்றான்.

''கீழேயே நில்லுடா''

சரசரவென பனைமரத்தில் ஏறினான். நொங்குகள் பறித்தான். கீழே போட்டான். மடமடவென கீழே இறங்கினான். ஒவ்வொன்றாக உடைத்து தூக்குவாளியில் ஊற்றினான். நிறைய சுண்ணாம்பு சேர்த்தான்.

''குடிடா''

''வேண்டாம்''

''பிரபாவதி பத்தி சொல்லிருவேன்''

''நீயே குடி, எனக்கு பழக்கம் இல்லை'

''வெண்ணைக்கு காதல் பழக்கமோ''

குடிடா என காலால் எட்டி உதைத்தான்.

''யாராவது வந்துருவாங்க''

''இந்த நேரத்தில எவனும் வரமாட்டான், ஒழுங்கா குடிச்சி தொலைடா''

''முடியாது''

சொல்லிட்டு ஓட்டம் எடுத்தேன். என்னை விரட்டிக்கொண்டு வந்தான். கல்லால் அடித்தான். வலியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் பயந்து போனார்கள். ஸ்ரீராம் பற்றி சொன்னேன். பனைமரம் சென்ற விஷயம் சொல்லி முடித்தேன்.

''அங்கன எதுக்கு போன''

''நான் பிரபாவதியை காதலிக்கிறேன்''


Thursday 30 January 2014

மனநிலை பாதிப்பும் மானசீக குருவும்

''ஒவ்வொரு மனிதரும் பைத்தியக்காரர்கள், ஏதேனும் ஒன்றிற்கு தம்மை அடிமையாக்கி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும்போது ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கிறார்கள். இந்த சூழலில் இருந்தாலும் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், இல்லாதபட்சத்தில் மன அழுத்தத்தில் உட்பட்டு தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார்கள், அல்லது நடைபிணமாக வாழ்ந்து வாழ்க்கையை கழிப்பார்கள்''

வாசித்து முடித்துவுடன் எனக்கு வியர்த்துக் கொட்டியது. நான் கூட பைத்தியகாரனா? என யோசித்துக் கொண்டிருந்தேன்.

''பக்தா, என்ன யோசனையில் அமர்ந்து இருக்கிறாய்?''

சாமியார் வருவார் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. வைகுண்டம் போகிறேன் என்றல்லவா சொன்னார். இப்போது இங்கே வந்து நிற்கிறாரே என குழப்பத்துடன் அவரை நோக்கினேன்.

''என்ன பக்தா, ஆச்சரியமாக பார்க்கிறாய்?''

''நீங்கள் வைகுண்டம் போகவில்லை?, எதற்கு திரும்பி வந்தீர்கள்''

''நீயில்லாமல் நான் மட்டும் எப்படி போவது பக்தா, அதனால் எனது திட்டத்தை நான் கைவிட்டுவிட்டேன்''

''மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''என்ன பக்தா, இப்படி ஒரு கேள்வியை என்னை நோக்கி கேட்கிறாய், நான் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் சாமியாராக இருக்கிறேன் என நினைக்கிறாயா?''

''இல்லையில்லை, மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''மனநிலை என்றால் என்ன பக்தா?''

''உங்களிடம் கேள்வி கேட்டால் என்னிடம் கேள்வி கேளுங்கள், எனக்குத் தெரியாமல் தானே உங்களிடம் கேட்கிறேன்''

''நன்றாக யோசனை செய் பக்தா, மனநிலை என்றால் என்ன?''

''நமது எண்ணங்கள்?''

''அதேதான் பக்தா. எண்ணங்களே மனநிலை. ஒரு விஷயத்தை குறித்து நீ என்ன நினைக்கிறாய், எப்படி உணர்கிறாய், எவ்வாறு செயல்படுகிறாய் என்பதே மனநிலை. இந்த மனநிலை பிறர் நம்மை கண்காணிக்கும் போதும், கண்காணிக்காதபோதும் வெவ்வேறாக இருக்கும். அப்படி உனது மனநிலையை நீ நன்றாக புரிந்து கொண்டால் உனது செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வாறு கட்டுப்பாட்டில் இல்லாதபோது மனநிலை பிறழ்வு நடைபெறும். இதைத்தான் மனநிலை பாதிப்பு என்கிறார்கள்''

''அப்படியெனில் எல்லாருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்களா? இப்போதுதான் ஒரு பத்தி படித்தேன். மனிதர்கள் அனைவரும் பைத்தியகாரர்கள் என்று எழுதி இருந்தது''

''பக்தா, நீ பைத்தியகாரனா?''

''என்ன பேச்சு பேசுறீங்க, என்னை எதற்கு பைத்தியகாரன் என்று சொல்றீங்க''

''கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல் பக்தா''

''இல்லை, நான் பைத்தியகாரன் இல்லை''

''அதெப்படி உனக்குத் தெரியும். உன்னையறியாமல் நீ ஏதேனும் விஷயத்திற்கு அடிமையாகி இருக்கிறாயா என்று யோசனை செய்து பார்''

''இல்லை, அப்படி ஏதுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன்''

''சாப்பாட்டுக்கு அடிமையானவர்கள் உண்டு, காமத்திற்கு அடிமையானவர்கள் உண்டு, கற்பனை உலகத்தில் சஞ்சாரிப்பவர்கள் உண்டு, சினிமா, இசை, காதல் கல்வி அரசியல், பணம், நிலம், புகழ், பதவி போதை, என பல விசயங்களுக்கு அடிமையானவர்கள் உண்டு. அதில் நீ ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்''

''இல்லை, நான் எதற்கும் அடிமை இல்லை. நீங்கள கூட இறைவனுக்கு அடிமை, ஆனால் நான் இறைவனுக்கு கூட அடிமை இல்லை''

''என்ன பக்தா, பேச்சுவாக்கில் என்னை இறைவன் அடிமை என்று சொல்லிவிட்டாய்''

''ஆம், நீங்கள் இறைவன் பற்றி அதிகம் பேசுகிறீர்கள், இறைவனே நல்வழிபடுத்துவான் என புலம்பித் தள்ளி இருக்கிறீர்கள். நீங்கள் இதை மறுக்க இயலுமா''

''அப்படியே ஆகட்டும் பக்தா, ஆனால் இப்படிப்பட்ட அடிமைகள் எல்லாம் மனநிலை பாதிப்புக்கு நேரடியாக உட்படுவதில்லை. மன அழுத்தத்தில் இவர்கள் நிலை சென்று முடியும். இவர்களுக்கு தகுந்த அன்பும், ஆதரவும் தரும் பட்சத்தில் இவர்களால் இந்த நிலையில் இருந்து மீண்டு வர இயலும். அதற்கு இவர்களுக்கு மானசீக குரு ஒருவர் வேண்டும்''

''யார் அந்த மானசீக குரு''

''அவர்களேதான் மானசீக குரு, அனைவரும் சிந்திக்கும் அறிவுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒரு தவறான விசயம் செய்யும் முன்னர் அது தவறு என மனம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தவறினை தவறியும் செய்யக்கூடாது என அவர்கள் திடமான மனதுடன் இருக்க வேண்டும். எப்படி ஒரு தவறு செய்து பிடிபட்டால் அவர்களின் நிலை கவலைக்குரியதாக மாறுமோ, அதுபோல பிடிபடாத நிலை இருப்பினும் தவறு செய்ய கூடாது''

''விளையாட்டாக செய்யலாமே''

''அப்படித்தான் பலரும் நடந்து கொள்கிறார்கள். விளையாட்டு புத்தி என்பது ''விநாச காலே விபரீத புத்தி'' என்பது போன்றது. ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும் பக்தா, இஷ்டத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை''

''எதற்கு இப்படி அறிவுரை அள்ளி கொட்டுகிறீர்கள்''

''மானசீக குரு எவர் என்று கேட்டாய் அல்லவா, அவரவரே அவரவருக்கு மானசீக குரு. ஒரு ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதுடன் அவரது பணி  முடிவடைந்துவிடும், அதற்கடுத்து நீயாகவே உனக்கு கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு குரு, நீதான் உனக்கு மானசீக குரு''

சாமியார் பேசியதை கண்டு அவரிடம் நான் வாசித்த தாளினை காட்டினேன்.  கலகலவென சிரித்தார்.

''யார்  இப்படி எழுதியது தெரியுமா பக்தா''

''தெரியாது. வெல்லக்கட்டி வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அங்கு இந்த காகிதம் கிடைத்தது, எடுத்து வந்துவிட்டேன்''

''அதை எழுதியது நான் தான் பக்தா''

''நீங்களா''

''ஆம்''

''ஏனிப்படி எழுதினீர்கள்''

''பல வருடங்கள் முன்னர் இருந்த அந்த மனநிலையைத் தான் சென்று கேட்கவேண்டும்', இப்போது எனக்குத் தெரியாது''

பைத்தியகார சாமியார் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

''மனநிலை பாதிப்பு குறித்து சொல்லுங்க''

''மனநிலை பாதிக்கப்பட்டதால் நான் சாமியாரா''

''திரும்பவும் கேட்காதீர்கள், சொல்லுங்க''

''ஒரு மனிதர் நான் மேல் சொன்ன பல விசயங்களுக்கு அடிமையாதல் போல மனநிலையானது குறிப்பிட்ட விசயங்களால் மாறுபாடு அடையும். மனநிலை பாதிப்பு நமது உடல், மூளை சம்பந்தப்பட்டதாகவே அமைந்துவிடுகிறது.

1. பயத்தால் வரும் மனநிலை பாதிப்பு. சிறு குழந்தைகளிடம் ஏற்படும் இந்த பாதிப்பு காலகாலத்திற்கு மாறாது. பயத்தைப் போக்கிட மனநிலை சீராகும்.
2. உணர்ச்சி வசப்படுதல் மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. இதை மூட் ஸ்விங் என சொல்வார்கள்
3. நம்பிக்கையால், அந்த நம்பிக்கை தொலையும் கணத்தில் வரும் மனநிலை பாதிப்பு. காதல், கல்யாணம் நட்பு போன்ற நம்பிக்கை விசயத்தில் ஏமாற்றம் நிகழும்பட்சத்தில் இந்த மனநிலை பாதிப்பு ஏற்படும். கவனத்துடன் கையாள வேண்டிய விஷயம் இது பக்தா. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது, அதனால் புதுக் கண்ணாடி அவசியம் போன்ற நிலை ஏற்படும்.
4. மொழி, நடக்கும் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை மூலம் மனபாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது''

''இறைவன் நம்பிக்கையை விட்டுட்டீங்களே, ஜோசியம் நம்பிக்கை எல்லாம் சொல்லலை''

''பக்தா, குறுக்கே பேசாதே, ஜோசியம், இறைவன் எல்லாம் நடக்கும், நடக்காது என்கிற நிலையை மக்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் அதை எல்லாம் இங்கே இழுக்காதே''

''ஆமாம், அதுவே ஒரு மனநிலை பாதிப்புதானே''

''பக்தா, எனது சாபத்திற்கு ஆளாகாதே''

''சரி, தொடருங்கள்''

''5. மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் மனநிலை பாதிக்கப்படுபவர்கள் உண்டு. அவர்களுக்கு மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து தேற்ற முடியும், ஆனால் ஒரு விஷயம் வரம்பு மீறிப் போய்விட்டால் மருத்துவமுறை கை கொடுக்காது.
6. சிலர் மனநிலை பாதிக்கப்படுவதால் சாப்பிடும் முறையில் கூட வேறுபாடு கொள்வார்கள். ஒல்லியாக இருந்து கொண்டே குண்டாக இருப்பதாக நினைப்பார்கள். அதனால் சரியாக சாப்பிடாமல் உடற்பயிற்சி என உயிரை கொல்லும் அளவுக்கு செல்வார்கள். தன்னை தானே அதிகம் வெறுத்து ஒதுக்குவார்கள். இதைப்போலவே காம உணர்வு மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. காமுகர்களாக பலர் மாறுவதற்கு அதுவே காரணம். இவர்கள் பலர் இருக்கும்போதே யாரும் நம்மை பார்க்கவில்லை என தறிகெட்டு நடந்து கொள்வார்கள்.
7. சிலருக்கு தூக்கமே வராது. இது கூட மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுதான் பக்தா''

''கனவு கூட மனநிலை பாதிப்பு தானா''

''என்ன பக்தா, நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாய். கனவு மனநிலையை சரி செய்யும் ஒரு காரணி''

''சரி சரி தொடருங்கள்''

8. தன்னைத் தானே மறப்பது கூட ஒருவகை மனநிலை பாதிப்புதான். குறிப்பட்ட விசயங்கள் மறந்து போவதும் இதில் அடங்கும். சமூகத்திற்கு எதிராக நடந்து கொள்வது கூட ஒரு வகை மனநிலை பாதிப்புதான்''

''அரசியல்வாதிகள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா''

''பக்தா, உனக்கு ஒருமுறை சொன்னால் போதாதா, எதற்கு இப்படி குறுக்கீடு செய்கிறாய்''

''சரி சரி சரி தொடருங்கள்''

9. அதிர்ச்சி அடையாதே, இப்படி சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பின் சாராம்சம்தான். இதை ஆங்கிலத்தில் பெர்சானலிட்டி டிஸ்ஆர்டர், ஒழுங்கற்ற நடத்தை  என சொல்வார்கள்.

''இறைவன் எப்படி உலகை படைத்தான், இவ்வுலகம் எப்படி தோன்றியது போன்ற சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பு என சொல்வது நகைப்புக்குரியது''

''பக்தா, நீ ஒழுங்கற்ற மனநிலையில் இருக்கிறாய். உரிய சந்தேகங்கள் சரி, ஆனால் அனாவசியமான சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்றே சொன்னேன். கணவன் மனைவியின் நடத்தையினை சந்தேகம் கொள்வது, பெற்றோர் பிள்ளை, மாமியார் மருமகள் போன்ற உறவு முறை சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் அடிச்சுவடுகள்''

இந்த மனநிலை பாதிப்பு மரபணுக்கள், பரிணாம வளர்ச்சிகள் என அடிப்படையில் வந்தவை. மனநிலையோடு மனநிலை பாதிப்பும் உடன் தொடர்பவை, அதனால்தான் மானசீக குரு அவசியம்''

''எனக்கு நீங்கள் மானசீக குருவாக இருக்கலாமே''

''உன்னை எப்படி திருத்துவது என தெரியவில்லை பக்தா, நீ ஆறறிவுடன் படைக்கப்பட்டு இருக்கிறாய், உன்னை வழிநடத்தவோ, நீ ஒருவரை பின்பற்றி நடக்கவோ அவசியமே இல்லை. நீயே உனக்கு மானசீக குரு. எந்த உயிர்களுக்கும் வஞ்சம் இழைக்காதே. நல்ல சிந்தனையுடன் இருந்தாய் எனில் உனது மனநிலை சந்தோசமாகவே இருக்கும். எந்த சங்கடங்களும் இல்லை''

''நான் குறுக்கீடு செய்ததால் சில நல்ல விசயங்கள் தெரிய வந்தது''

''நல்லது பக்தா, அடுத்தவரை துன்புறுத்தி பார்ப்பது மனநிலை பாதிப்பின் உச்சகட்டம்''

''எந்திரிப்பா, மணி பத்து ஆகுது, சனிக்கிழமைன்னா இப்படியா தூங்குவ''

அம்மாவின் குரலில் நான் மனநிலை பாதிப்பில் இருந்து விடுபட்டு இருந்தேன்.


Mental Disorders are often associated with how we perceive things in the world - Radhakrishnan

Wednesday 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம். 

Tuesday 28 January 2014

தேடிக்கொண்ட விசயங்கள் - 6

பகுதி 5 இங்கே 

ஒரு மனிதருக்குள் நோய் ஏற்படுத்துவதற்கு இந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஏற்படுத்தாத நோய்கள் மரபியல் வாயிலாக ஏற்படும் நோய்களாக அமைந்துவிடுகின்றன. நம்மில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருந்தாலும் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்ட பாக்டீரியாக்களை வைரஸ்களை 'pathogens' என்றே அழைக்கிறார்கள்.

எப்படி இந்த பாக்டீரியாக்கள் நம்மில் நோயை ஏற்படுத்துகின்றன. நமது உடல் தாமாகவே எதிர்ப்பு சக்தி கொண்டு அமைந்துவிடுகிறது. அந்த எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை வெள்ளை அணுக்கள். வெள்ளை அணுக்கள் வெளிப்படுத்தும் 'antibody' இந்த பாக்டீரியாக்களில் உள்ள 'antigen' தனை மிகவும் சரியாக கண்டுபிடித்து பாக்டீரியாக்களை செயல் இழக்க செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்த antibody கள் பலவகைப்படும்.

நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இரண்டு வகைப்படும். அது 'granules' கொண்டவை, அல்லாதவை. 'granules' கொண்டவை நியூட்ரோபில், ஈசொனோபில், பெசோபில் எனப்படும். 'granules' அல்லாதவை லிம்பொசைட், மோனோசைட் எனப்படும். இந்த லிம்பொசைட் எங்கு உற்பத்தி ஆகிறது என்பதை பொருத்து அவை டி லிம்பொசைட், பி லிம்பொசைட் எனப்படும். டி என்றால் தைமஸ் சுரப்பியில் இருந்து தோன்றியவை. பி லிம்பொசைட் என்பது எலும்பு மஜ்ஜையில் இருந்து தோன்றியவை. இந்த பி லிம்பொசைட் தான் இந்த 'antibody' யை உருவாக்கும் வல்லமை கொண்டவை. இருப்பினும் டி லிம்பொசைட் இதற்கு அவசியம்.

இந்த antibody Y வடிவில் இருக்கும்.


















நமது உடம்பில் நடந்து கொண்டிருக்கும் இந்த செயல்பாடுகள் குறித்து எல்லாம் நாம் அதிகமாக சிந்திக்க முடிவதில்லை. இந்த படத்தில் குறிப்பிட்டது போல கீழே இருப்பது நீளமான சங்கிலி, மேலே இருப்பது சின்ன சங்கிலிகள். குறிப்பிட்ட இணைப்பு அல்லது பிணைப்பு இடமானது ஒவ்வொரு antigen க்கு வேறுபாடு அடைய செய்யும், அதனால் தான் எண்ணற்ற பாக்டீரியா, வைரஸ் மாற்றம் கொண்டாலும் அதற்கேற்ப ஒரு antibody தனை பிளாஸ்மா செல்கள் உருவாக்கி கொள்ளும் தன்மை உடையதாகவே இருக்கிறது.

இந்த antibody  புரதம் மற்றும் கார்பொஹைட்ரெட் இணைத்து கிளைக்கொபுரொட்டீன் எனும் வகையை சார்ந்தது. நமது உடலில் அல்புமின், குலொபுலின் என புரதங்கள் இருக்கின்றன். இந்த antibody யானது  immunoglobulin வகையை சார்ந்தது. இவை ஐந்து வகைப்படும். IgA, IgD, IgE, IgM மற்றும்  IgG. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல்பாடுகள் கொண்டவை.

(தொடரும்) 

Friday 24 January 2014

ஜீரோ எழுத்து - 9 (கருந்துளை)

கருந்துளை, கருங்குழி எப்படி வேண்டுமெனினும் தமிழ்படுத்தி கொள்ளுங்கள். இந்த கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை ஒளியை கூட வெளிவிடாமல் தன்னுள் உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையது என்றே முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். கிட்டத்தட்ட இருநூற்றி முப்பது  வருடங்களுக்கு முன்னர் உருவான சிந்தனை இது. அதிக ஈர்ப்புவிசை கொண்ட நிறை பொருள் ஒளியை வெளிவிடாது என்றே சிந்தனை எழுந்தது. இது கிட்டத்தட்ட் ஐம்பது வருடங்கள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நியூட்ரான் நட்சத்திரங்களே இந்த ஒப்புதலுக்கு முதற்காரணம். 

நமது சூரியனைவிட பன்மடங்கு பெரிதான நட்சத்திரங்களே இந்த கருந்துளை ஏற்பட காரணம் ஆகிறது. ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை இரண்டு வகையாக முடித்துக் கொள்ளும். நமது சூரியன் போல அளவு இருந்தால் இறுதியில் ஒன்றுமற்றதாகவே மாறிவிடும். எப்படி ஒரு விறகை எரித்து முடித்திட ஜூவாலை தோன்றி மறைந்தபின்னர் தகதகவேனும் சிவப்பாக மாறி இறுதியில் சாம்பலாக மாறி கடைசியில் கருப்பாக மறைந்துவிடுமோ அதைப்போலவே நமது சூரியன் போன்ற அளவுடைய நட்சத்திரங்கள் ஆகும் என்பது அறிவியல் குறிப்பு. 

அதே வேளையில் பெரிய அளவுடைய நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு உள்ளே இருக்கும் அளப்பரிய ஆற்றல் மூலம் மற்றொரு சூரிய குடும்பத்தை உருவாக்கும், அப்படி உருவாக்காத நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறி பின்னர் கருந்துளையாக மாறிவிடும் என்பது அறிவியல் குறிப்பு. 

எப்படி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. இருட்டினை எப்படி கண்டு கொள்வது. ஒளிதனை இருட்டில் பாய்ச்சினால் அந்த இருள் ஒளியாகும், ஆனால் ஒளியை தன்னுள் உட்கிரகித்துக் கொள்ளும் இருளை எப்படி கண்டு கொள்வது. எந்த ஒரு பொருளும் தன்னை சுற்றியுள்ள பொருள் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தும் தன்மை உடையது, அதன் அளவீடு குறைந்ததாக இருக்கலாம், அதைப்போலவே இந்த கருந்துளை தன்னை சுற்றி உள்ளவைகள் மீது ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதாவது இந்த கருந்துளையை தாண்டி செல்லும் எந்த ஒரு பொருளும் பெரும் ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தி நகர்ந்தது. அதாவது தனக்குள் இருக்கும் ஆற்றல் மூலம் இந்த நட்சத்திரங்கள் மீது ஒளி பாய்ச்சியது. அதைவைத்துதான் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. 

நியூட்டனின் கொள்கையான ஈர்ப்புவிசை ஒளியின் வேகத்தில் மாறுபாட்டினை உண்டு பண்ணும் என்பதே இந்த கருந்துளைக்கு அடிப்படை தத்துவம். சுப்பிரமணியம் சந்திரசேகரின் சூரிய நிறை குறித்தும், எப்படி ஒரு நட்சத்திரம் உருக்குலைந்து கருந்துளையாக மாறும் என்பது குறித்தும் இப்போதைக்கு சற்று தள்ளி வைப்போம். 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வேகமாக சுழலக்கூடிய, அதிக காந்த தன்மை கொண்ட நியூட்ரான் நட்சத்திரம் வெளிப்படுத்திய கதிரியக்கத்தை பூமியில் இருந்து காண முடிந்தது. இவை பல்சார் எனப்பட்டன. இந்த கருந்துளைகள் நிறை, மின்னேற்றம், சுழல் உந்தம் போன்றவை பொருத்து அமைகின்றன. 

வெறும் நிறை அடிப்படையிலும் இந்த கருந்துளைகள் அமையும். சமீபத்தில் இந்த கருந்துளை பற்றி ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. 

(தொடரும்) 

Thursday 23 January 2014

இவர்கள் எல்லாம் பெண்களா?

எல்லா பெண்களும் கல்வி, கலவி, காமம், காதல், கல்யாணம், விபச்சாரம் என தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படையாக பேசிவிட்டால் இந்த தமிழகம் தாங்காது. நாகரிகம்  மாறிவரும் வேளையில், கலாச்சாரம், பண்பாடு என இவற்றில் வளர்ந்துவிட்டதால் பல பெண்கள் இவைகளை உதாசீனம் செய்வதோடு உள்ளுக்குள் வேதனை கொள்கிறார்கள். அதையும் தாண்டி தங்கள் மனக் குமுறல்களை வெளிச் சொன்னால் இவர்களுக்கு பெண்ணியவாதி என பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, கற்பு, அடக்கம், ஒடுக்கம் என எல்லா குட்டிச்சுவரகளையும் பெண்கள் மீது கட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

வரம்பு மீறி வாழும் பெண்களுக்கு ஆண்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமெனில் மணந்து வாழலாம் எனும் போது, ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமெனிலும் மணந்து வாழ சமூகம் அங்கீகரிப்பது இல்லை. எந்த ஒரு ஆணும் அதற்கு சம்மதம் சொல்வது இல்லை. எனக்கு இரண்டு புருசர்கள் என எந்த பெண்ணும் சொல்லிக்கொண்டதாக தெரியவில்லை. கேட்டால் சமூக இழிவாம்.

சுதந்திரமாக வாழ எத்தனிக்கும் பெண்களை நோக்கி எழுப்பப்படும் ஒரே கேள்வி இவர்கள் எல்லாம் பெண்களா என்பதுவே! ஆம், தனது சுதந்திரம் பறிபோவதை எதிர்த்து, தனது உரிமைகளுக்கு போராடும் பெண்கள் பெண்கள் தான்.

காமம், கலவி இதில்தான் பல பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைக்கு என தனது சொந்த அபிலாசைகளை தூக்கி எறிந்தவர்கள் இவ்வுலகில் எத்தனை பேர். '' தூக்கி பரண் மேல போட்டாச்சு''

நிற்க.

ஒரு ஊருல சரஸ்வதின்னு ஒரு பெண். இருபத்தியொரு வயசான அந்த பொண்ணு  அந்த ஊருல இருக்கற ஹோட்டலுல வேலைப் பாத்துச்சு. ஹோட்டலு ஒன்னும் பெருசு இல்லை. கூரை மேய்ஞ்ச ஹோட்டல் தான். ஆமை வடை, உளுந்த வடை, போண்டா, இட்லி, தோசை, பூரி சாப்பாடு வகையறாதான் கிடைக்கும். புரோட்டா எல்லாம் இல்ல. கிரைண்டர் இல்லாத காலம் அது. இந்த பொம்பளை தான் எல்லாத்துக்கும் மாவாட்டணும். அந்த கடையில ஒரு பெரிசு டீ, காபி போட்டு கொடுப்பாரு.

இந்த பொண்ணு  ராத்திரி ஆனதும் 'சரக்கு' அடிக்கப் போகும். அது ஊருக்கேத் தெரியும். கம்மாய் ஓரத்தில 'சாராயம்' கொண்டு வந்து விப்பாய்ங்க. ஒரே ஒரு டம்ளர்தான் சரக்கு அடிக்கும். வாய்க்கு வந்தது எல்லாம் திட்டும். அதனால ஒரு பைய அந்த பொண்ணை  தப்பான நோக்கத்தில நெருங்க முடியாது. என்ன சரசுன்னு சொன்னா போதும், போடா பொசக்கட்ட பயலேன்னு சொல்லும். ஹோட்டலுக்கு வரவங்ககிட்ட மட்டும் நல்லா சிரிச்சு பேசும்.

அந்த பெரியவருக்கு குடும்பம் இருந்துச்சு. ஹோட்டலுல நல்ல வியாபாரம் நடக்கும். பக்கத்து ஊரில இருந்து ஆளுக வந்து சாப்பிட்டு போகும், உள்ளூர்காரங்க கொஞ்ச பேருதான் வாங்கி சாப்பிடுவாங்கே.சரக்கு அடிக்குதாம் சரசுனு கேலி பேசுவாங்கே.  இந்த சரசுக்கு ரொம்ப சம்பளம் எல்லாம் கிடையாது. சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் இலவசம். அந்த பெரிசு இந்த சரசுவை வைச்சிருக்கிறதா ஊரே பேசும், ஆனா பெரிசோட வீடு மட்டும் அப்படி பேசாது. இன்னும் என்ன என்னமோ பேசுவாங்கே, எழுதவே கை கூசுது. தட்டிக்கேட்டா மாட்டிக்கிட்டியானு வம்பு அளப்பாங்கே. எதையும் சரசு கண்டுக்காது. எங்கையா இவளைப் பிடிச்சி வந்தனு கேட்டா, அனாதையா கிடந்தா, கூப்பிட்டு வந்தேன்னு சொல்வாரு பெரிசு.

சரசுக்கு கல்யாணம் காட்சி பண்ணி வைக்க பெரிசு நினைச்சாலும் ஒரு பயலும் கட்டிக்க வரலை. சரசு போட்ட கண்டிசன் தான் காரணம். இந்த ஹோட்டலு, சரக்கு குடிக்கிறதை விடச் சொல்றவன், பொம்பளை சுகம் தேடுறவன் எல்லாம் வரக்கூடாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிருச்சி. பெரிசு ஒருநா செத்துப் போனாரு.

பெரிசோட குடும்பம் இந்த ஹோட்டலை மூட நினைச்சிச்சு. சரசு தான் நான் தனியா நடத்துறேனு சொல்லி  அடம்பிடிச்சி நடத்துச்சு. சிரிச்ச முகம் மாறாம இருக்கும். ஒரு பையலையும் கிட்டக்க அண்டவிடலை. சரசு ஹோட்டல் வாடகை பணம் மட்டுமே பெரிசு குடும்பத்துகிட்ட கொடுக்கும். மத்ததெல்லாம் சரசுகிட்ட இருந்துச்சு. கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்கலை சரசு.

முப்பது  வருசமா நாயா பேயா உழைச்சிச்சி. சரக்கு குடிக்கிறத நிறுத்தலை. இருமல் வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில படுத்துருச்சு. ஒரே நாள் தான். சரசு அன்னைக்கே கண்ணை மூடிருச்சி. சரசு செத்துப் போன விஷயம் கேள்விப்பட்டு திமுதிமுன்னு ரொம்ப பேரு வந்துட்டாங்க. அதுல ஊர்க்காரங்களுக்கு தெரியாத சின்ன சிறுசுக ஒரு பத்து பேரு மாப்பிள்ளையும் பொண்ணுமா, குழந்தையோட ஆத்தா ஆத்தா சொல்லாம போயிட்டியே ஆத்தான்னு அழுதுட்டு நின்னாங்க.

யாருன்னு விசாரிச்சப்ப, இந்த ஆத்தாதான் எங்களை வளர்த்தாங்கனு  கல்யாணம் பண்ணி வைச்சாங்கன்னு பத்து பொட்ட்பிள்ளைக சொல்ல ஊரே வாயடைச்சி நின்னுருச்சி.

ஒரு குடும்பத்தை கட்டி பிள்ளைகளை பெத்து அனாதையா போற பொணத்துக்கு மத்தியில சரசோட இறுதி சடங்கு பெருசா நடந்துச்சி. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி சரசுக்கு ஒரு கோவில் கட்டி வைச்சாங்க அந்த பிள்ளைக.

அந்த பிள்ளைக வாரம் தவறாம வந்து கும்பிட்டு போறாங்க!

ஊர்க்காரங்களும் தான் போடுற பொங்கச் சோறு திங்கிறாங்கே. மானங்கெட்ட பயலுக.

Tuesday 21 January 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22

அப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.

''எங்க முருகேசு போய்ட்டு வர''

அப்பாவின் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.

''சொல்லு முருகேசு''

மின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.

''முருகேசு, எழுந்திருப்பா''

வழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.

''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''

''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''

''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''

போர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.

''நில்லு முருகேஷா''

''என்னம்மா''

''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''

''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''

வேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.

''காயத்தை காட்டுடா''

''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''

காயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.

''கொசு கடி  தான்''

தயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.

''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''

''சாரை பாத்துட்டு போவோம்'

''போலீசுல சொல்வோம்''

எதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.

''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''

''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''உள்ளே வாங்க''

ஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.

''ரொம்ப வெட்கையா இருக்கு''

''காத்தாடி ஓடுதே''

''அது பழசு''

''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''

''அது எல்லாம் உனக்கு எதுக்கு''

''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''

நிறையவே யோசித்தார்.

''அது வந்து...''

''என்ன சார்''

''நேரமாகுது, கிளம்புங்க''

''முருகேசு, வா கிளம்பலாம்''

வேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

கோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.

''கோரன் வீட்டுக்கா''

''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''

கோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா  இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.

''என்னடா சத்தம் போடுற''

''பூச்சி கடிச்சது சார்''

''போய் டாக்டரை பாரு''

ஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.

''கோரன்''

என்னை பார்த்தவன் திடுக்கிட்டான்.

''எதுக்கு இவரை தேடி வந்த''

''உனக்கு தேவை இல்லாத விஷயம்'

''கொல்ல வந்தியா''

''ஆமா''

''ஏன்''

''முருகேசு நீ தலையிடாத''

வேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.

(தொடரும்)





 

பதிப்பகங்களும் புத்தகங்களும்

இன்றைய காலகட்டத்தில் எழுதுவது என்பது எல்லோராலும் பொதுவெளியில் எழுதும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கணினி மற்றும் தமிழ் அச்சு தெரிந்து இருந்தால் போதும், உள்ளக்கிடக்கை எல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடலாம்.

எனக்கு ஓரளவிற்கு தமிழில் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறுவயதில் இருந்தே தமிழ் படிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. எழுத்தாளர்கள் புத்தகங்கள் அவ்வளவாக படிக்கவில்லையெனினும் தினமலர், வாரமலர், குடும்பமலர், குமுதம், ஆனந்தவிகடன், தமிழ் கோனார் உரை, திரைப்பட பாடல்கள், அசோகமித்திரனின் கதைகள்  என தமிழ் படித்தது உண்டு. கடை எனும் ஒரு நாவல் படித்த நினைவு இருக்கிறது. நான் கல்கத்தாவில் படித்தபோது நண்பர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து நிறைய தமிழ் புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள். அதேபோல அங்கே உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து நிறைய ஆங்கில புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள் . நான் அதிகம் படித்தது கவியரசு கண்ணதாசனின் புத்தகங்கள் என சொல்லலாம் மற்றபடி பாடபுத்தகங்கள் மட்டுமே. இதனால் நான் நாவல் எழுத தொடங்கியபோது பாட புத்தகங்களில் உள்ள கருத்துகளை கையாண்டேன்.

பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, மோகமுள்  என பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. இந்த கதைகளை எல்லாம் நான் படித்தது இல்லை. சாண்டில்யன், தி.ஜானகிராமன், கல்கி என பல பெயர்கள் அவர்கள் மூலம் எனக்கு பரிச்சயம். என்னை மிகவும் பாதித்த மலையாள மொழி பெயர்ப்பு கதை உண்டு, இன்னமும் கதை கரு மனதில் நிழலாடுகிறது, ஆனால் தலைப்பு மறந்து போய்விட்டது.

இந்த இணையம் இல்லாது இருந்து இருந்தால் நான் நாவல், கதை எல்லாம் எழுதி இருப்பேனா என்பது கேள்விக்குறிதான். முத்தமிழ்மன்றம் போட்ட விதை நுனிப்புல் இரண்டு பாகங்களும். இப்படியே கவிதைகள், சிறுகதைகள் என முத்தமிழ்மன்றம் தந்த உற்சாகம் மடமடவென எழுத வைத்தது. இன்று எத்தனையோ கதைகள் எழுதியாகிவிட்டது. ஆனால் வெளியிட்டது மூன்றே நூல்கள்.

நாவல் வெளியிட நான் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் எல்லாம் கைகளை விரித்தன. அதனால் முத்தமிழ்மன்ற பதிப்பகம் என சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டேன். அதற்கடுத்து வெளிவந்த கவிதை தொகுப்பு, கதை தொகுப்பு எல்லாம் சொந்த செலவுதான். பதிப்பாளர்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இதுவரை சம்பந்தபட்ட பதிப்பாளார்கள் புத்தகங்கள் குறித்து ஒரு விஷயமும் தெரிவிக்கவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. புத்தகம் அச்சிட்டு தந்தார்களே அதுவே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. அவர்களிடம் புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிடுங்கள், எவரேனும் என்ன விலைக்கு கேட்கிறார்களோ கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, ஒரே அறையை அலங்கரிக்கும் அந்த புத்தகங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு அறையை அலங்கரிக்கட்டுமே. எழுதுவது எனது தொழில் அல்ல, இதன் மூலம் நான் சம்பாதிக்க இருப்பது என்று எதுவும் இல்லை. புத்தகத்திற்காக சிறு பணம் ஒதுக்கி அதை வெளியிடுவதுடன் எனது பணி முடிவடைகிறது.

இப்படி நான் எழுதி சொந்த காசு செலவு பண்ணியும் புத்தகம் வெளியிட பதிப்பகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஒரு சிறந்த பதிப்பகம் கிடைக்க வேண்டுமெனில் கதை சிறப்பாக இருக்க வேண்டும், அதுவும் மக்கள் அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது காலக்கொடுமை.

நுனிப்புல் பாகம் 2 வெளியிட வேண்டும். நண்பர் சொக்கன் இதை தனி நூலாகவே கொண்டு வரலாம் என்றார். தலைப்பு கூட நெகாதம் என்றே வைக்கலாம் என யோசிக்கிறேன். எவரேனும் இந்த நூலை, தனி  நூலாகாவோ (நெகாதம் தலைப்புடன்) , தொடர் நூலாகவோ (நுனிப்புல் தலைப்புடன்)  பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட முன்வருமாயின் தொடர்பு கொள்ளுங்கள் என்பதை தவிர வேறு என்ன கேட்டுவிட முடியும். 

Thursday 16 January 2014

நீங்க எந்த ராசி?

''டேய், போயி அந்த பெரியவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திரு, உன் கல்யாணத்துல எந்த தடையும் வந்திரக்கூடாது பாரு''

''என்னம்மா நீ ரொம்ப தொனதொனத்துட்டே இருக்கே, நானும் ஸ்ரீயும் கல்யாணம் பண்ணப்போறோம், நீ என்னமோ ஆசிர்வாதம் அது இதுன்னுட்டு இருக்க''

''அதுக்கில்லைடா, ஸ்ரீ குடும்பத்தில தகராறு பண்றதா நீதானே சொன்ன, அப்பா வேற ரொம்ப கவலையா இருக்காருடா. சொன்னா கேளுடா''

ராம் 23 வயதான நல்ல உயரமான கருப்பு வண்ண இளைஞன். சமீப ஆறு மாத காலமாக தன்னுடன் வேலை பார்த்து வரும் 21 வயதான சற்றே உயரமான சிவப்பு வண்ண ஸ்திரீயான ஸ்ரீயை காதலித்து வருகிறான். இந்த காதல் விவகாரம் நேற்றுதான் ஸ்ரீ வீட்டுக்கும், ராம் வீட்டுக்கும் தெரிந்தது. ராம் பெற்றோர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். இந்த எதிர்ப்பு விவகாரத்தை ராம், தனது அம்மாவிடம் சொல்ல அம்மா அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து வர சொன்னார்கள். ராம் செல்லமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

''யாரும்மா அந்த பெரியவரு, அவர் என்ன சித்தரா, ஸ்ரீயோட அப்பா அம்மா மனசை மாத்துறதுக்கு. சும்மா கிடம்மா, நானே எப்படி கல்யாணம் பண்ணலாம்னு யோசனையில இருக்கேன்''

''டேய், அவரை பாத்துட்டா, தடைபட்ட கல்யாணம் எல்லாம் நடக்குதாம்டா. அதோட இல்லை கல்யாணம் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாம். நம்ம கோமதி பாட்டி கூட வந்து சொல்லிட்டு போனாங்க''

''அப்படினா விவகாரத்து பண்றவங்களை அவரை பார்க்க சொல்ல வேண்டியதுதானே, சேர்ந்து வாழுவாங்கள''

''அப்படியும் நடந்து இருக்காம்டா, சொன்னா கேளுடா. ஸ்ரீ நம்பர் இருக்காடா''

''எதுக்கு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சனிக்கிழமை அன்னைக்கு போறேன், என்னை நிம்மதியா போய் தூங்கவிடு''

''நம்பர் தாடா, எதுக்கும் வைச்சிக்கிறேன்''

''இந்தாம்மா''

ராம் உறங்க சென்றதும் ஸ்ரீக்கு போன் செய்தார்.

''ஸ்ரீ, நான் ராம் அம்மா பேசறேன்''

''சொல்லுங்க, இருங்க மாடிக்கு போய்க்கிறேன்''

சிறிது இடைவெளிக்குப் பின்னர்

''ம்ம் சொல்லுங்க''

''ஏன்மா, என் பையனை நீ காதலிக்கிறியாமே, உங்க வீட்டுல பிரச்சினையாமே, ராம் சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தான்''

''ஆமாம், வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்க முடிவுல மாத்தமில்லை, உங்களுக்கு சம்மதம் தானே''

''சம்மதம் தான், நீ எதுக்கும் எங்க ஊருக்கு வெளில ஒரு குடிசையில பெரியவர் ஒருத்தர் இருக்காரு, ராசிசாமினு கேட்டா சொல்வாங்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா எந்த பிரச்சினையும் வராது''

''ம்ம்''

''மறந்துராதம்மா''

''ம், மறக்கலை''

ராம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த நாள் ஸ்ரீ, ராசிசாமியை தேடி வந்துவிட்டாள்.

''வணக்கம் சாமி''

''ம்ம்''

''என்னோட கல்யாணத்துல பிரச்சினை, அதை நீங்க தீர்த்து வைக்கனும்''

''ம்ம் உன்னோட பேரு, ராசி என்னம்மா?''

''ஸ்ரீ, மகரம்''

''என்ன நட்சத்திரம்?''

''திருவோணம்''

''எந்த மாசத்தில் பிறந்த?''

''மே  7''

''பையனோட பேரு, ராசி?''

''ராம், மீனம்''

''பையனோட நட்சத்திரம்?''

''ரேவதி''

''எந்த மாசத்தில் பிறந்தார்?''

''ஜனவரி 11''

''எல்லாம் துல்லியமா வைச்சிருக்கியே''

''காதலிக்க ஆரம்பிச்சதும், ராசி பொருத்தம் பாத்துட்டேன்''

''இது ஜாதகப்படி சரி. எதுக்குனா இது சந்திர ராசி. ஜாதகத்தில எங்க சந்திரன் இருக்கோ அதுதான் ராசி. ஆனா பெரும்பாலான இணையதளங்களில் பிறந்த மாசம் வைச்சிதான் கணக்கு பண்ணுவாங்க. அது சூரிய ராசி. ஆங்கில மாச பிறப்பு படி நீ ரிஷபம், அவர் மகரம். இந்த ராசிக்கான நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ராசி மட்டுமே பாக்கனும், அப்படி பாக்கப்போனா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. தாராளாம கல்யாணம் பண்ணலாம்''

''சரிங்க சாமி, தட்சிணை எவ்வளவு?''

''அந்த பணத்தை அப்படியே போறப்ப அநாதை பிள்ளைகளுக்கு சோறு வாங்கி கொடுத்துட்டு போ''

ஸ்ரீ, ராமிடம் உற்சாகமாக விஷயத்தை சொன்னாள்.

''அந்த பெரியவர் மாத்தி சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பியா''

''மனசுக்கு கஷ்டமா இருந்து இருக்கும்''

''சரி, வேலைக்கு வந்து சேரு''

ஸ்ரீ தனது அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''சரி கவலைப்படாதே, உன் அப்பாகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி வைக்கிறேன்''

ஸ்ரீ, ராமிடம் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''நான் சொன்னேன் பார்த்தியா, அதுதான் அந்த பெரியவரோட மகிமை''

''தேங்க்ஸ்த்தை''

ஸ்ரீ வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ராம் சில தினங்கள் பின்னர் பெரியவரை சந்திக்க சென்றான்.

''எப்படி உங்களால் இந்த கல்யாணம் எளிதாக சாத்தியம் ஆச்சு?''

''என் மேல மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கை. நான் சொன்னா நல்லா நடக்கும்னு நினைக்கிறாங்க. இந்த நம்பிக்கையை ஸ்ரீக்கு கொடுத்து அது ஸ்ரீ பெற்றோருக்கு போய் சேர்ந்தது. அவங்க அவங்க மேல நம்பிக்கையை வரவைக்கிறதுதான் என்னோட வேலை. மத்தபடி ராசி, ரோசி எல்லாம் ரெண்டாம் பட்சம். பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்னைக்குமே பஸ்பம்தான்''

''ரொம்ப நன்றிங்க''

''இந்த நம்பிக்கை விஷயத்தை ஒரு நாப்பது வருஷம் முன்னாடி நான் என்னோட சுமதிக்கு சொல்லி இருந்தா இந்த ராசி கருமாந்திரம் எங்களை பிரிச்சி இருந்து இருக்காது''

ராமின் சந்தோசத்தில் சின்னதாய் வலி ஒன்று வேகமாக ஊடுருவி போனது. 

Tuesday 14 January 2014

நுனிப்புல் வாழ்த்துரை - என். சொக்கன்

வாழ்த்துரை

நாவல்களில் பலவகை. அறிவியல், ஆராய்ச்சிக் கருத்துகளை அதனுள் தோய்த்துத் தருவது சமீபத்தில் புகழ் பெற்று வரும் தனி வகை.

ஆகவே, நண்பர் ராதாகிருஷ்ணன் அதைப் பின்பற்றி ஒரு நாவல் எழுதிவிட்டார் என்று எண்ணிவிடவேண்டாம். அவர் இந்நாவலையும் அதன் முந்தின பாகமாக அமையும் பிறிதொரு நாவலையும் எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்விதத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதே உண்மை.

இவ்வகை நாவல்களில் ஒரு சின்ன பிரச்னை, இவற்றில் கருத்து அதிகரித்துவிட்டால் கதைச் சுவை தீர்ந்துவிடும், நாவல் நொண்டியடிக்கும், சரி என்று கதை சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டால் கருத்து நீர்த்துவிடும், வாசகனுக்கு எதுவும் சென்று சேராது.

இவ்விரு வட்டங்களிலும் சிக்கிக்கொள்ளாமல், மிக நேர்த்தியாகத் தன் கதையைக் கொண்டுசென்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அவரே மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் என்பதால், இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும் எல்லாருக்கும் புரியும்படியும் உள்ளன. குறிப்பாக, அந்தத் துறைப் பின்னணியே இல்லாத வாசகர்களுக்கும்!

கதை பாணி என்று பார்க்கும்போது, ராதாகிருஷ்ணனுக்குக் கல்கி ஆதர்ஷம் என்று ஊகிக்கிறேன். அவரது நாவல்களைப்போலவே பாத்திரங்கள் அறிமுகம், கொக்கிகள், தகவல் பரிமாற்றங்கள், முக்கியமாக, எல்லாரும் நல்லவர்கள். மனத்துக்கு மிகவும் ஆசுவாசமளிக்கும் விஷயம் இது!

கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதை. ஆகவே, பல பழக்க வழக்கங்களை நுட்பமாகக் காட்டுகிறார். குறிப்பாக, விருந்தினர்களை உபசரிக்கும் விதம், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பு, மன உளவியல் போன்றவை!

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல தளங்களில் விரிந்து செல்லும் ராதாகிருஷ்ணனின் எழுத்துகள் எண்ணற்ற வாசகர்கள் மனத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். எல்லாவிதமான எழுத்துகளிலும் அவர் கால் பதிக்கக் கோருகிறேன். நன்றி!


என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

சொக்கன் அவர்களுக்கு மிக்க நன்றி. 

Friday 10 January 2014

வைகுண்டமும் பெருவெடிப்பு கொள்கையும்

ஒரு புத்தகம் கொண்டு வந்து இதைப் படி என அம்மா கொடுத்துவிட்டு போனார். இந்த இரவு நேரத்தில் தூங்குவதை விட்டுவிட்டு எவரேனும் புத்தகம் படிப்பார்களா என்றே அந்த புத்தகம் பார்த்தேன்.  அந்த புத்தகத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. எவரேனும் தலைப்பு இல்லாமல் ஒரு புத்தகம் எழுதுவார்களா? அந்த புத்தகத்தினை எழுதியவர் பெயர் கூட இல்லை. முன் அட்டை, பின் அட்டை வெறுமையாக இருந்தது. உள்ளே எடுத்த எடுப்பில் வைகுண்டத்தில் நாராயணன் வாசம் செய்கிறான் என்றே வரி ஆரம்பித்து இருந்தது. பதிப்பகம், விலை என இத்யாதிகளும் இல்லை. ஆயிரத்து எட்டு பக்கங்கள். தலைக்கு அடியில் வைத்து பார்த்தேன். மெத்தென்று இருந்தது. 

''பக்தா, நல்ல தூக்கமோ''

இந்த வார்த்தைகளை நான் வெகு நாட்களாக கேட்டு இருக்கவில்லை. திடீரென எதற்கு சாமியார் வந்து இருக்கிறார் என்றே ஆச்சர்யத்துடன் அவரை வரவேற்றேன். அங்கிருந்த ஒரு நாற்காலி ஒன்றை அவருக்கு போட்டுவிட்டு கீழே நான் அமர்ந்து கொண்டேன். 

''என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்''

''நான் வைகுண்டம் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன், அதுதான் நீயும் வருகிறாயா என்று அழைத்து போகவே வந்தேன்'' 

''எங்கே, ஸ்ரீரங்கமா?''

''அது பூலோக வைகுண்டம், நான் உன்னை அழைப்பது நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு பக்தா''

''என்ன உளறுகிறீர்கள், அந்த வைகுண்டம் எங்கே இருக்கிறது, அது ஒரு கற்பனையான உலகம்''

''பக்தா, இந்த உலகம் எப்படி தோன்றியது''

''பெரு வெடிப்பு கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்தே எல்லாம் தொடங்கின, அதற்கு முன்னர் எதுவும் இல்லை''

''எந்த பாட புத்தகத்தில் படித்தாய் பக்தா, கடவுள் இவ்வுலகை படைத்தார் என்றதும், கடவுளை யார் படைத்தார் என கேட்கும் நீயா, அந்த புள்ளிக்கு முன்னர் எதுவும் இல்லை என சொல்வது''

''நான் எப்போது கடவுளை யார் படைத்தார் என கேட்டேன், இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தெரிந்த கடவுளுக்கு தன்னை படைக்கத் தெரியாதா?''

''பக்தா, சரி மனம் மாறிவிட்டாய் போலிருக்கிறது, வா வைகுண்டம் போகலாம்''

''இல்லாத ஒரு இடத்திற்கு எல்லாம் என்னால் வர இயலாது, அதுவும் அது எங்கு இருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது''

''பக்தா, வைகுண்டம் அழைக்கும் தொலைவில் உள்ளது என்பதுதான் கதை, ஆனால் உண்மையான வைகுண்டம் இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி உள்ளது''

''இது யுனிவர்ஸ்''

''அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது மல்டிவர்ஸ்''

''மல்டிப்ளக்ஸ் மாதிரி பேசறீங்க, என்னால் உங்களுடன் வர இயலாது''

''நாராயணன் இந்த வைகுண்டத்தில் வாசம் செய்கிறார். அந்த வைகுண்டத்திற்கு ஆத்மாக்கள் செல்லும். உடலை இங்கே கிடத்திவிட்டு ஆத்மா அங்கே வாசம் செய்யும். அதற்கு நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும். நீ நற்காரியங்கள் புரிந்து இருக்கிறாயா''

''எதற்கு இப்போது இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள்''

''வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த சொர்க்கவாசல் எனும் பிரபஞ்சத்தை தாண்டி செல்லும் கதவு திறக்கும், நான் தயார் ஆகிவிட்டேன், அதுதான் உன்னை உடன் அழைத்து செல்ல வந்தேன்''

''நான் வரவில்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்''

''அந்த வைகுண்டம் சென்றுவிட்டால் ஆத்மா திரும்பி வர இயலாது, அந்த நாராயணனுடன் ஐக்கியம் ஆகிவிடும். அப்படி செல்ல இயலாத ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் சிக்குண்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன''

''எனக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாது''

''வானம் ஏறி வைகுண்டம் போக நான் வழி சொல்கிறேன்''

''வேண்டாம்''

''சரி பக்தா, இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவான இந்த உலகம் முடிவில் என்னவாகும்''

''அப்படியே உறைநிலை அடையும்''

''அதுதான் இல்லை, இந்த உலகம் மீண்டும் ஒரு புதிய தொடக்கம் தொடங்கும், இப்படித்தான் இவ்வுலகை படைக்க பிரம்மன், நாராயணன் அமர்ந்து இருக்கும் தாமரை மலரில் சென்று இடம் கேட்பார். ஒரு இயக்கம் முடிந்து, மறு இயக்கம் தொடரும்போது அழித்தலில் இருந்து கொண்டே ஆக்கம் செய்ய இயலாது என்பதை அறிந்த பிரம்மன், நாராயணனிடம் உதவி கோருகிறார். நாராயணன் தனது இருப்பிடம் வருமாறு வைகுண்டத்திற்கு பிரம்மனை வரவழைக்கிறார். பிரம்மன் இப்படித்தான் ஒவ்வொரு யுகம் படைக்கிறார். அதுபோலவே இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவாகும் இந்த பிரபஞ்சமும் இதே மாற்றங்களை கொண்டு அமையும்''

''இந்த பிரபஞ்சம் வைகுண்டத்தில் இருந்து உருவாக்கப்படுவதா, பெருவெடிப்பு கொள்கையா''

''வைகுண்டத்தில் இருந்து நடத்தப்படும் பெருவெடிப்பு கொள்கையும் அதைத் தொடர்ந்த விரிவாக்கமுமே பக்தா, இப்போது வருகிறாயா''

''இல்லை, அழைத்த தூரத்தில்தான் வைகுண்டம் இருக்கும் கதை எனக்குப் போதும்''

''பக்தா, அது ஒரு முட்டாள் அரசரை, ஒரு அறிவாளி மடக்கியது, ஆனால் நாராயணன் ஒளியை விட வேகமாக செல்லக்கூடியவர். இந்த பிரபஞ்சத்தில் அப்பாற்பட்டு இருக்கும் வைகுண்டத்தில் இருந்தே நமது தேவைகளை அவர் அறிய இயலும், அந்த தேவைகளை நிறைவேற்ற அவர் தேரில் வர வேண்டியது இல்லை. எனவே வைகுண்டம் அருகில் எல்லாம் இல்லை''

''ஒளியை விட வேகமாகவா''

''ஆம், இந்த பிரபஞ்சத்தில் பார்க்கும் ஒளி என்றோ வெளியிடப்பட்டது, அது நமக்கு வர பல்லாயிரம் வருடங்கள் ஆகும், ஆனால் நாராயணன் அப்படி அல்ல''

''அப்படிப்பட்ட வைகுண்டம் அடைய பல்லாயிரம் வருடங்கள் ஆகுமே''

''நமது உடலை கிடத்திவிட்டு ஆத்மா ஒளியை விட வேகமாக நாராயணன் நோக்கி செல்லும், சில வினாடிகளில் சென்று அடையும். வருகிறாயா''

''கிருஷ்ணர் தேர் மற்றும் உடலுடன் சென்றதாக தானே மகாபாரதம் குறிக்கிறது''

''கிருஷ்ணரின் உடல் இந்த பஞ்சபூதங்களால் ஆனது அல்ல. தேர் கூட இங்கிருக்கும் பொருளால் ஆனது அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் வைகுண்டத்தில் பஞ்ச பூதங்களே இல்லை. அங்கிருக்கும் நிலை வேறு, ஆமாம் கிருஷ்ணர் கதை சொன்னாயே, ராமர் கதை தெரியுமா''

''ராமர் என்ன செய்தார்''

''அப்படி கேள் பக்தா, ராமர், தனது மக்கள் அனைவருடன் வைகுண்டம் சென்றார், ஆனால் கிருஷ்ணர் தனது குலம் அழிந்து தான் மட்டுமே சென்றார்''

''அப்படியெனில் நீங்கள் மட்டுமே செல்லுங்கள், நான் வாழும் வரை பூலோக வைகுண்டம் சென்று வருகிறேன் அது போதும்''

எந்திருப்பா, படிக்க புத்தகம் கொடுத்தா தலைக்கு வைச்சா படுப்பே, சீக்கிரமா குளிச்சிட்டு வா கோவிலுக்கு போகலாம், இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, ஏழு மணிக்கு சொர்க்கவாசல் திறந்திரும். 

சாமியார் சொன்ன சொர்க்கவாசல், வைகுண்டம் விட இந்த கோவில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசி எல்லாம் மிகவும் சுகம். எப்படியும் பிரசாதம் தருவார்கள். வேகமாக எழுந்து குளிக்க ஓடினேன். 

Wednesday 1 January 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2014

தவறான தகவலை சுமந்து திரியும்
வருட எண்கள்.

உலகம் தோன்றிய முதல் தினம்
இதில் கணக்கில் இல்லை.

தோன்றா பெருமையினை வைத்து சொன்ன
வருடாந்திர கணக்கு.

எல்லா வருடங்களுக்கும் பன்னிரண்டு மாதங்கள்
மட்டுமே வாழ்க்கை.

பன்னிரண்டு முறை மாத பிரசவம்
கொள்ளும் வருடம்.

சென்ற வருடத்தில் விதைத்த விதை
இவ்வருடத்தில் அறுவடைக்கு தயாராகலாம்.

வழக்கம் போலவே எல்லாரும்
வேண்டி செல்கின்றனர்
புது வருடம் புதியவை தர வேண்டுமென -
தாங்கள் பழையவர்கள் என்பதை மறந்து.