Thursday 22 August 2013

சூரியனின் வெகு அருகில் கோள்கள்

சாப்பிட்டுட்டு அப்புறமா போய் தூங்கு என அம்மா சொன்னதையும் கேட்காமல் தூங்க சென்றுவிட்டேன். சொன்னா கேட்கமாட்டியா என அம்மா வந்து மீண்டும் எழுப்பி நான் சாப்பிட்ட பின்னரே என்னை உறங்க அனுப்பினார்.

நல்ல அசதியாக இருந்தது. மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. பார்த்தால் சாமியார் வந்து அருகில் நின்று கொண்டிருந்தார்.

''பக்தா, உடல் அலுப்போ''

''என்ன சாமி, இந்த நேரத்தில் வந்து எழுப்புகிறீர்கள்''

''என்னை கண்டால் உனக்கு வெறுப்பு வருமே, வரவில்லையா''

''இல்லை சாமி, அப்படி எல்லாம் வெறுப்பு இல்லை, நீங்கள் வராமல் இருப்பதே எனக்கு சங்கடமாக இருக்கிறது''

''பக்தா, நீ பூமி பற்றி அறிந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது''

''சாமி, சொல்லுங்கள்''

''ஒரு சூரிய குடும்பம் உருவாக பல பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உருவான சூரிய குடும்பங்களில் இருக்கும் ஆற்றல் மீண்டும் மீண்டும் சூரிய குடும்பங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றன. அப்படி உருவாகும் சூரிய குடும்பங்களில் உள்ள கோள்கள் சூரியனுக்கு வெகு அருகாமையில் இருப்பது இல்லை. கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பது போல இந்த கோள்கள் சற்று தள்ளியே அமைந்து விடுவதுண்டு. இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

சூரியனை அனைத்து கோள்களும் சுற்றி வரும் என்பது நீ அறிந்தது தான். அதுவும் அருகில் இருக்கும் கோள்கள் மிகவும் வேகமாக சுற்றும் தன்மை கொண்டது. இதன் காரணமாக அவை சூரியனின் இழுப்புகள் சென்று விடுவது இல்லை.

ஆனால் சில கோள்கள் மிக மிக அருகாமையில் அதுவும் நான்கு மணி நேரத்தில் சூரியனை சுற்றிவிடும் அளவுக்கு உள்ள கோள்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. இத்தனை அருகாமையில் சென்றால் சூரியன் தனது வெப்ப அலைகள் மூலம் கோள்களை பிரித்து மேய்ந்துவிடும். அந்த கோள்கள் அழிந்தே போய்விடும். ஆனால் அப்படி அழிவுக்கு உட்படாத இந்த கோள்கள் இருப்பது ஒரு அதிசயத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

சூரியனை சுற்ற நமது பூமி எடுத்துக் கொள்வதோ 365 நாட்கள்.  சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் எடுத்து கொள்ளும் நாட்கள் 88. ஆனால் நான்கு மணி நேரம் என்பது நினைத்து கூட பார்க்க இயலா ஒன்று.

இப்படி இருக்கும் கோள்கள் இரும்பு தாதுக்களால் மட்டுமே ஆனதாக கூட இருக்கும் என யூகம் சொல்கிறார்கள். இவர்களின் கணக்கீட்டு படி பூமி செல்லும் வேகம் வினாடிக்கு 30கிலோமீட்டர், இந்த கோள்கள் ஒரு வினாடிக்கு 250கிலோமீட்டர் வேகம். அப்படி பார்த்தால் எட்டு மடங்கு குறைந்து, குறைந்தது நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து  நாட்கள் ஆகும். ஆனால் நான்கே மணி நேரத்தில் சுற்றுவது என்பது சுற்றும் அளவை கூட குறித்ததாக இருக்கலாம். பக்தா...

''என்ன சொன்னீங்க சாமி''

''சூரியனை வெகு வேகமாக சுற்ற கூடிய கோள்கள் உண்டு''

''அதனால என்ன சாமி''

''பக்தா, அப்படிப்பட்ட கோள்களில் உயிரினங்கள் வாழ சாத்தியம் இல்லை''

''அதனால என்ன சாமி''

''பக்தா, ஒரு அறிவுக்கு எட்ட வேண்டிய விசயம்''

''தண்ணீர் இல்லாத கோள்களில் கூட உயிரினம் வாழலாம், அந்த சூரியனில் கூட உயிரினம் வாழலாம் சாமி''

''பக்தா, உளறலை நிறுத்து''

''அப்படி அப்படியே உயிரினங்களை இந்த பூமியில் படைத்த இறைவனால் இது எல்லாம் சாத்தியமே''

''அவசியம் இல்லை பக்தா''

''அப்படி எனில், இது போன்று வெகு அருகாமையில் இருக்கும் கோள்கள் பற்றிய அறிவு கூட எனக்கு அவசியம் இல்லை சாமி''

''இந்த உலகில் எண்ணற்ற விசயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன, அதை அறிந்து கொள்வதில் என்ன சிரமம்''

''தெரிந்து என்ன செய்ய சாமி''

''ஊருக்கெல்லாம் சொல், இந்த பிரபஞ்சம் மிக அதிசயம் என சொல்''

''சொல்லி''

''உன்னிடம் பேசியது வீணோ''

''இதேதானே சாமி, ஊருக்கு சொன்னாலும் நடக்கும்''

திடீரென சாமியார் மறைந்துவிட்டார். என் மீது கோபமோ என நினைத்துப் பார்கையில் காலை சூரியன் கன்னத்தை தழுவிக் கொண்டிருந்தான். மீண்டும் அதே வேலை, அதே வாழ்க்கை. அம்மாவோ, அப்பவோ எழுப்பும் முன்னர் நானே எழுந்து ஓடினேன். 

3 comments:

காமக்கிழத்தன் said...

அறிவியல் செய்திகளைச் சுவையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

தொடர்க.

indrayavanam.blogspot.com said...

மிக அருமையான பதிவு நன்றி

Radhakrishnan said...

இருவருக்கும் நன்றி.