Tuesday 20 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 6

வந்த அழுகையை அடக்கிக்கொண்டு 'சார்' என்றேன் மீண்டும். என்ன என்பது போல் அவரது பார்வை சிவந்து இருந்தது. 'சார் நம்ம உயிரை நாமளே எடுத்துகிரதுக்கு எந்த உரிமையும் இல்லை' என்றேன். 'ம்ம்' என்றார். 'வலி பொறுக்க முடியாம இப்படி ஒரு வழி தேடிக்கிறது தப்புதானே சார்' என்றேன். 'ம்ம்' என்றார். வேறு எதுவும் பேசவில்லை. எனக்கு வேறு எதுவும் பேசத் தோணவில்லை. அன்று இரவு தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தேன். என் அப்பாவும் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் மட்டும் தூங்கியது போலவே தெரியவில்லை.

காலை எழுந்ததும் அவர் குளித்து தயாரானார். நாங்கள் எங்களது வீட்டில் சென்று குளிக்கலாம் என நினைத்து கொண்டு அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். சரி என ஒரு பெட்டியுடன் எங்களுடன் வந்தார். வீட்டில் அம்மாவும், காயத்ரியும் அவளது அக்காவும் எழுந்து இருந்தார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறை தினமாக இருந்தது அசௌகரியத்தில் சற்று சௌகரியமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவர் காயத்ரியையும், அவரது அக்கா சுபலட்சுமியையும் பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் வந்ததும் வாங்க, வக்கீல் ராமலிங்கத்தை பார்க்கனும் என்றார். நான் புரியாமல் அங்கேயே நின்றேன்.


எனது அப்பா குளித்து முடித்து இருந்தார். நான் அவசர அவசரமாக குளித்தேன். நான் குளித்து வெளியே வருமுன் அவர்கள்  அனைவரும் அங்கே இல்லை. எனது அம்மா மட்டும் இருந்தார். 'எங்கேம்மா அவங்க' என்றேன். வக்கீலைப் பார்க்க போய் இருக்காங்க, உங்க அப்பாவும் கூட போய் இருக்கார். ரொம்ப பாவம் கதிரேசு அந்த பொண்ணுங்க என்றார் அம்மா. 'என்னம்மா என்றேன்' ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை, காலையில சாப்பிடறதுக்கு முன்னால இப்படி அவசரமா கிளம்பி போய்டாங்க. வா நீயாவது வந்து சாப்பிடு என்றார் அம்மா. 


வக்கீல் ராமலிங்கம் எங்க இருக்காருன்னு தெரியுமாம்மா என்றேன். எத்தனை ராமலிங்கம் இருப்பாங்களோ என்றார் அம்மா. என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் இருந்தது. அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தேன், அதை வீட்டிலேயே விட்டு போய் இருந்தார். இனி அவர்கள் வரும் வரை காத்து இருக்கவா வேண்டும் என அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு அக்கம் பக்கத்தில் கேட்கலாம் என கிளம்பினேன். வீட்டுல இரு முருகேசு, எங்க போகப் போற, வந்ததும் பேசலாம் என சொன்னார் அம்மா. அம்மாவின் வார்த்தையை மீறுவதற்கு பயமாக இருந்தது. ஒருவேளை நான் வெளியே செல்ல, அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், நினைக்கவே ஈரல், இதயம் எல்லாம் நடுங்கியது. 


'அம்மா, அவர் சாகப்போறதா சொல்லி இருந்தாரும்மா' என்றேன் நான். அம்மா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். அவர் காயத்ரியோட அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி சாகப்போறதா சொன்னாரும்மா என்றேன் மீண்டும். 'என்னடா பைத்தியகார முடிவா இருக்கு, இந்த பொண்ணுகளை நம்மளை அதுக்குதான் பார்த்துக்க சொன்னாரா. உங்க அப்பாவும் கூட போய் இருக்காரே. உங்க அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கவே போதும் போதும்னு ஆயிருச்சி. இதுல இவர் இப்படி பண்ணிட்டா நம்ம மேல கொலை குத்தம் வந்துறப்போகுது' என்றார் அம்மா. அம்மாவின் பயம் எனது பயத்துடன் தொற்றியது. 


'சத்தியம், நேர்மை, உண்மை, நீதி, தர்மம் எல்லாம் இந்த உலகத்துல இன்னும் இருக்காம்மா' என்றேன். 'அதெல்லாம் எப்பவுமே உலகத்துல இருந்தது இல்லைடா முருகேசு, அவங்க அவங்க வசதிக்கேற்ப அதது மாறும்' என்றார். நான் அம்மாவிடம் பேசிய பொய்கள் என்னை அரித்தன. 'அப்படின்னா நீ நேர்மையா இருந்தது இல்லையாம்மா' என்றேன் நான். அம்மா என்னையவே பார்த்தார். 'இல்லைடா முருகேசு' என்றார். 'ஏன்மா உண்மைய பேசினா நேர்மை தானே' என்றேன் நான். 'பெரிய பெரிய விசயம் எல்லாம் கேட்கற, நம்ம வீட்டுல இருக்கற புத்தகங்களை படி, ஓரளவுக்கு எல்லாம் புரியும்' என்றார். 


மாடி அறைக்கு சென்றேன். புத்தகங்களை தள்ளி தள்ளி பார்த்தேன். தற்கொலையும், விரும்பி சாதலும் என்றொரு புத்தகம் இருந்தது. எடுத்து புரட்டினேன். 'வலி, வேதனை, அவமானங்கள் தாங்க இயலாமல், இதன் காரணமாக வாழப் பிடிக்காமல் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவல நிலையை மனிதர்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்' என ஓரிடத்தில் எழுதி இருந்தது. 'ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்தல் என்பது கொடிய செயலாகும், ஆனால் யூதனசியா எனப்படும் முறையில் வலி வேதனை உள்ளவர்களின் வாழ்க்கையை மருத்துவர்களே முடித்து வைக்கலாம் எனும் நிலை சில நாடுகளில் நிலவி வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். உண்ணாவிரதம் மூலம் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்வது கூட அறிவற்ற செயலாகும். உண்ணாவிரதத்தின் மூலம் அடையும் சாவுக்கும், தற்கொலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு எனினும் இறுதியில் தன்னை தானே மாய்த்தல் என்பது தவறு. கொத்து கொத்தாக மனிதர்கள் போரில் கொல்லப்படுவதும், ஒரு இனம், ஒரு மதம் பிடிக்காமல் அதை சேர்ந்தவர்களை உயிர் துறக்க செய்வதும் கருணை கொலை என்றே கருத சொல்வது மடமையாகும்'.

இதை எல்லாம் வாசித்து கொண்டிருக்கும்போதே நாம் நமது உடலை முறையாக பேணி காக்காமல் நோய் வாய்ப்பட்டு இறப்பது கூட ஒருவகையில் உண்ணாவிரதம் போன்ற சாவுதான் என எண்ணத் தோணியது. அந்த புத்தகத்தில் ஆழ்ந்து படித்தேன். அவ்வப்போது அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என கீழே சென்று பார்த்து வந்தேன். 'ஓரிடத்தில உட்கார்ந்து படி என அம்மா சொன்னதும், கீழேயே அமர்ந்து படித்தேன். புத்தகத்தில் இறுதியாக 'இந்த புத்தகம் ஒரு மரத்தின் மரணத்தில் ஜனித்திருக்கிறது' என்று முடித்து இருந்தது. எனக்கு அந்த வரிகள் விளங்கவே இல்லை. அம்மாவிடம் கேட்டேன்.

'எல்லாம் கர்ம வினை' என்றார் அம்மா. 'கர்ம வினை அப்படின்னா என்னம்மா' என்றேன். 'நாம செய்ற செயல் பொறுத்தே அதனோட வினை இருக்கும்' என்றார். 'புரியலைம்மா' என்றேன். அந்த புத்தகம் உருவாக காகிதம் வேணும். அந்த காகிதத்துக்கு ஒரு மரம் வெட்டப்பட்டு இருக்கும்'. காகிதம் தேவை இல்லைன்னா, அந்த மரம் காகிதத்துக்காக வெட்டப்பட்டு இருக்காது' என்றார்.

'அப்படின்னா காயத்ரியோட அப்பா சத்தியம் செய்து தராம இருந்து இருந்தா தன்னோட சாவு பத்தி நினைச்சி இருக்க மாட்டாரா' என்றேன் நான். 'தெரியலை முருகேசு' என்றார் என் அம்மா. 'எதுக்கு தெரியலை' என்றேன் நான். 'ஒருவேளை அவரோட மனைவி மேல இருக்கற பாசத்தால,  அவரோட மனைவி இல்லாத உலகம் நமக்கு எதுக்குன்னு நினைக்கலாம்' என்றார். 'அப்படியும் இருக்காங்களா' என்றேன் நான்.

'எப்படியும் இருப்பாங்க' என்றார் என் அம்மா! மதிய வேளை நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் இன்னும் காணவில்லை. புத்தகம் எனது நேரங்களை தின்று முடித்து இருந்தது. ஒரு மணி நேரம் பின்னர் அவர்கள் அனைவரும் வந்தார்கள். 'இதை பத்திரமா வீட்டில் வை' என அப்பா எனது அம்மாவிடம் தந்தார். பின்னால் ஒரு வாகனம் பல பொருட்களுடன் வந்து இறங்கியது! எனக்குள் அதிர்ச்சி மின்னலாக இறங்கியது.

(தொடரும்)


1 comment:

ஆர்வா said...

பெண்கள்’ன்னாலே பல சமயம் ப்ராப்ளம்தானே...


நட்புடன்
கவிதை காதலன்