Tuesday 13 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 4

காலையில் விழித்து எழுந்ததும் மீண்டும் போர்வைக்குள் முடங்கி கொள்ள வேண்டும் போல்தான் இருந்தது. ஆனாலும் அம்மாவுக்கு உதவியாய் இருந்திட வேகமாக எழுந்தேன். அம்மா இன்னமும் எழுந்திருக்கவில்லை. வீடெல்லாம் கூட்டி, வாசற்படியை கூட்டினேன். வாசலில் தண்ணீர் தெளித்தேன். அந்த சுகமான காற்று இதமாகத்தான் இருந்தது. அழுக்காக இருந்த ஆடைகள் எல்லாம் வேகமாக அலசி காயப்போட்டேன். பின்னர் வேகமாக குளித்துவிட்டு வீட்டில் இருந்த சாமி அறைக்கு சென்றேன். ஒரு வித்தியாசமான உணர்வு மனதில் சில்லிட்டு போனது. அங்கே அப்படியே அமர்ந்துவிட்டேன். அம்மா வந்து அழைத்த பின்னர் தான் நான் இவ்வுலக்கு மீண்டும் வந்தேன்.

'முருகேசு, நீதானா? இல்லைன்னா அந்த காயத்ரியே உன் ரூபத்தில இங்க வந்துட்டாளா' என்றார். அந்த கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. 'நான் தான் மா' என சொல்லிவிட்டு சாமி அறையை விட்டு எழுந்தேன். 'என்னைக்குமில்லாத திருநாளா ரொம்ப வேலை செஞ்சிருக்கியே, ரொம்ப சந்தோசமா இருக்குடா' என அம்மா சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு நிமிட மாற்றம் என்றெல்லாம் சொல்வார்கள், ஒரு நாள் மாற்றம், மூன்று நாள் மாற்றம், ஒரு மாத மாற்றம், ஒரு வருட மாற்றம் என்றெல்லாம் சொல்வார்கள். மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம். ஓரிடத்தில் நிலையாய் மனம் நிற்காதாம். இதைத்தான் மனித மனம் குரங்கு என்றும் பழைய குருடி கதவை திறடி என்றெல்லாம் எழுதி வைத்து இருப்பதாக படித்து இருந்தேன். எனது இந்த மாற்றம் எத்தனை நாளைக்கோ என மனம் கணக்கு போட்டு கொண்டு இருந்தது. வாழ்நாள் வரை இப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை நினைக்கும்போது எதற்கு என்னாலும் முடியாது என நம்பிக்கை வந்தது. பாட புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தேன். அம்மா குளித்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்கள்.

'அம்மா நான் சமைக்க உதவி செய்யட்டுமா' என காய்கறிகள் எடுத்து நறுக்க தொடங்கினேன். அம்மா என்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தார். இன்னிக்கு சைவ சாப்பாடு போதும், முட்டை கூட வேண்டாம் என்றேன். அம்மா அசைவம் மிக அரிதாகவே சாப்பிடுவார்கள். எனக்காக, என் அப்பாவுக்காக சமைப்பதோடு சரி. 'முருகேசு நீ போய் படி, நான் செஞ்சிக்கிறேன்' என்றார்கள். அம்மாவை அமர வைத்து சமைத்து பசியாற்ற வைக்க வேண்டும் என எந்த ஒரு பிள்ளையும் நினைத்து இருக்குமா என தெரியவில்லை. வயதான காலத்தில் கூட அம்மாவின் உழைப்பில் பிள்ளை அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதைத்தான் கண்டிருக்கிறேன். இத்தனை நாள் நான் கூட அப்படித்தான் இருந்தேன். முதன் முதலில் இன்றுதான் சமையல் செய்ய அம்மாவிடம் கற்று கொண்டேன். அம்மா கண்களால் ஒவ்வொன்றாக அளந்தது கண்டு பிரமிப்பாக இருந்தது.

சமையல் செய்து கொண்டிருந்தபோதே ருசி பாரு என கொடுத்தார்கள். எல்லாம் மிக மிக ருசியாக இருந்தது. அம்மா அத்தனை சுவை என்றேன். தானாக உழைத்து அதன் மூலம் வரும் சுகம் என்றுமே அலாதி என்றார் அம்மா. அம்மா நிறைய புத்தகங்கள் வாசிப்பார். வீட்டு வேலை முடிந்ததும் தையல் வேலை செய்வார். மதிய வேளையில் இரண்டு மூன்று மணி நேரம் புத்தகங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி விடுவார். அம்மாவுக்காகவே அப்பா ஒரு தனி புத்தக அறை வீட்டில் ஒதுக்கி தந்து இருந்தார். அம்மா தான் அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறோம், தனக்கு சம உரிமை வீட்டில் இல்லை என்றெல்லாம் சத்தம் போட்டது இல்லை. அப்பாவிடம் சத்தம் போட்டால், எங்களிடம் சத்தம் போட்டால் எங்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை அம்மா என்னை சத்தம் போடவே இல்லை.

'அம்மா என்னை நீ திட்டவே இல்லையே' என்றேன். 'முருகேசு நான் திட்டனும்னு நினைச்சா திட்டுறேன்' என்றார். நான் நடந்து கொள்ளும் முறையில் அம்மாவை மிகவும் சந்தோசமாக வைத்து கொள்ளலாம் என்று நினைத்தபோது அளவிலாத சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியது. அன்று காலையில் நாங்கள் மூவரும் சாப்பிட அமர்ந்தபோது என்னைப்பற்றி அம்மா அப்பாவிடம் மிகவும் பெருமையாக பேசினார். அதைகேட்ட எனது அப்பா நானும் முருகேசு மாதிரி ஆயிருறேன் என சிரித்தார். உங்களுக்கு இன்னொரு காயத்ரியா கிடைக்கபோறா என அம்மா சொன்னதும் நானும் சிரித்து கொண்டேன்.

எத்தனை சுகமான வாழ்க்கை இது. கல்லூரிக்கு கிளம்பினேன். மறக்காமல் அக்கா கல்யாணத்தில் எடுத்த போட்டோ ஒன்றை எடுத்து கொண்டேன். காயத்ரியை எங்க பார்க்கலாம் என கேட்டு வா என அம்மா சொல்லி அனுப்பினார். ஆனால் அன்று காயத்ரி கல்லூரிக்கு வரவில்லை. மனதில் இனம் புரியாத கவலை ஒட்டிக்கொண்டது. காயத்ரியை பற்றி எப்படி விசாரிப்பது என புரியவில்லை. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு காயத்ரியின் முகவரியை கல்லூரியில் வாங்கினேன். தரமாட்டேன் என முதலில் அடம்பிடித்தவர்கள் பின்னர் கொடுத்தார்கள்.

அந்த மதிய உணவு இடைவேளையில் காயத்ரியின் வீட்டிற்கு சென்றேன். வீட்டின் கதவை தட்டியதும் காயத்ரி வந்துதான் கதவைத் திறந்தாள். 'காயத்ரி என்ன ஆச்சு' என்றேன். 'உள்ளே வா முருகேசு' என அழைத்து சென்றாள். 'அம்மாவுக்கு சுகமில்லை, அதுதான் லீவு போட்டுட்டேன்' என்றாள். என்னைப் பார்த்த காயத்ரியின் அம்மா படுக்கையில் இருந்து எழுந்தார். 'நீங்க படுத்துக்கோங்க அம்மா' என்றேன். 'அம்மாவுக்கு என்ன ஆச்சு, அப்பா எங்கே காயத்ரி' என்றேன். 'அம்மாவுக்கு ஆஸ்த்மா பிரச்சினை, அப்பா பிசினஸ் விசயமா முந்தாநாள் வெளியூர் போனார், வர இரண்டு மூணு நாள் ஆகும், அக்காவுக்கு வேலை இடத்தில லீவு கிடைக்கலை. நேத்து நைட்டு ஆஸ்த்மா கொஞ்சம் சிவியர் ஆயிருச்சி' என்றாள். 'டாக்டர்கிட்ட போகலையா' என்றேன். 'அக்கா வந்ததும் போகணும்' என்றாள். 'அம்மாவை கூப்பிட்டு இப்பவே போவோம்' என்றேன் நான். 'இருக்கட்டும் தம்பி, பிறகு போயிக்கிறோம்' என எழுந்து அமர்ந்தவாறே காயத்ரியின் அம்மா சொன்னார். ஆனால் எனது மனம் கேட்கவில்லை.

அம்மாவுக்கு தொலைபேசி போட்டு முகவரி தந்தேன். அம்மா அடுத்த பதினைந்து நிமிடத்தில் அங்கு வந்தார்கள். 'நீங்க காலேஜுக்கு போங்க' நான் பார்த்துக்கிறேன் என்றார் அம்மா. காயத்ரிக்கு அவளது அம்மாவை விட்டு வர மனம் வரவில்லை. அவள் மிகவும் பயந்து போயிருந்தது அவளது முகத்தில் தெரிந்தது. நான் மட்டும் கலூரிக்கு திரும்பினேன். முதல் பாடம் நடந்து அரைமணி நேரம் ஆன போதிலும் அந்த பாட வகுப்பு ஆசிரியர் உள்ளே அனுமதித்தார். அப்போது ஒரு வாசகம் சொன்னார்.

முப்பது நிமிடம் பாடம் போய்விட்டதே என கவலைப்படுவதை விட இதோ இவனைப்போல பதினைந்து பாடத்தை கற்று கொள்ள ஆர்வம் வேண்டும், ஆனால் இன்று அடுத்த வகுப்பையும் நான் தான் எடுக்க போகிறேன், அதனால் இவன் ஒரு மணி நேர படிப்பை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றார்.  வாழ்க்கையை எப்படி எல்லாம் நோக்கலாம் என அவர் சொன்னதில் இருந்து புரிந்தது. நான் 'லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும் சார்' என எழுந்து நின்றேன். 'நீ சரியான காரணத்துக்காக லேட்டாக வந்தால் அதற்கு எதற்கு மன்னிப்பு' என அவர் சொன்னதும் வாழ்க்கையில் அடுத்த பாடம் புரிந்தது. 'ஒருவேளை நீ இன்று வராமலே போய் இருந்தால் உனக்குள் ஆர்வம் இருந்தால் எப்படியும் இன்று நான் நடத்திய பாடத்தை உன்னால் கற்று கொள்ள முடியும்' என சொல்லியவர் பாடத்தை தொடர்ந்தார். கல்லூரிகளில் எல்லாம் அனைத்து பாடங்களும் தமிழில் இல்லாமல் இருப்பது சௌகரியமா, அசௌகரியமா என தெரியவில்லை. தமிழில் அத்தனை அழகாக பேசிய அந்த ஆசிரியர் ஆங்கிலத்திலும் அருமையாக பாடம் நடத்த தொடங்கினார்.


'Courtship behaviour in animals results in mating to end up in reproduction. It can be either simple or complex. In simple courtship behaviour, animals may use small number of chemical, visual and/or auditory stimuli. In complex courtship behaviour, it may be involved with two or more individuals that can use several modes of communication.


This courtship behaviour by animals is mainly used to attract a mate. Some use odorous substances such as pheromones, some may dance, so on. This behaviour is also used by the animal species to avoid interbreeding with other species. They use instinct power to achieve this'

அவர் இந்த வரிகளை சொன்னதும் நான் பாடத்தின் குறுக்கே கேள்வி கேட்க கையை உயர்த்தினேன்.

'என்னப்பா சொல்லு' என தமிழில் சொன்னார்.  பாடத்தை ஆங்கிலத்தில் நடத்துவதும் அவர் சாதாரணமாக பேசும் பொது தமிழில் பேசுவதும் எனக்கு பிடித்து இருந்தது. இருப்பினும் நான் தமிழில் கேட்பதா, ஆங்கிலத்தில் கேட்பதா என புரியாமல் தமிழிலேயே கேட்டேன்.

விலங்கினங்கள் என்றால் மனிதர்களையும் குறிக்கும் அல்லவா? அப்படி என்றால் மனிதர்களும், தான் ஒரு துணையை தேடுவது தங்களது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா? என்றேன். எனது கேள்வி அவரை சில நிமிடங்கள் யோசிக்க வைத்தது.

'Yes absolutely Murugeshu. However we human don't follow our instinct nowadays, although we have common drives and same goals like other animals, we have been moulded by cultural context and we rather follow our customs.

எனது பெயரை சொன்னதும் நான் அதிர்ந்தேன். என்னை எங்கு பார்த்தார், எப்படி எனது பெயர் இவருக்கு தெரியும் என யோசித்து கொண்டிருந்த போதே  'thank you sir' என சொல்லிவிட்டு அமர்ந்தேன். அன்று அவர் நடத்திய பாடம் எல்லாம் எப்படி விலங்கினங்கள், தாவரங்கள் இந்த பூமியில் வாழ வகை செய்து கொண்டன என விவரித்தார். எனக்கு அந்த ஆசிரியரை பிடித்து போனது.

பாடங்களின் ஊடே காயத்ரியின் அம்மாவை பற்றிய நினைவுகள் வந்து போனது. என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாதபோது நான் இப்படியா இருந்தேன் என நினைக்கும்போது அழுகை வந்தது. மாலை வேளையில் காயத்ரியின் வீட்டை அடைந்தேன். அம்மா அங்குதான் இருந்தார். காயத்ரியின் அக்காவும் வந்து இருந்தார். காயத்ரியின் அம்மா மிகவும் தளர்ச்சியாக காணப்பட்டார்.

'என்னம்மா சொன்னாங்க' என்றேன். 'பயப்படும்படியா ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்கபா' என்றார். அவர்களுக்கு தைரியம் கொடுத்துவிட்டு நாங்கள் வீட்டை விட்டு கிளம்பி போகையில் எனது அம்மாவின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டு கண்ணீர் விட்டாள் காயத்ரி.

'எதுனாலும் எனக்கு ஒரு போன் போடும்மா, கவலைப்படாதே. நான் காலையில வரேன்' என்றார். என் அம்மாவை கடவுள் என்றே அவர்கள் நினைத்து கொண்டிருக்க கூடும். எனது கண்கள் கலங்கியது. எவரேனும் உதவி என கேட்டு வந்துவிட்டால் அம்மா அடுத்த நிமிடம் என்று கூட பார்க்கமாட்டார். உடனடியாக செய்துவிடுவார். வேறு சாக்கு போக்கு எல்லாம் சொல்வது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் எங்கள் காலனி பகுதியில் இருப்பவர்கள் அம்மாவை 'நிஜ காயத்ரியே இங்க வந்து அவதரிச்சி இருக்கு என்பார்கள்' நாங்கள் ஆறு வருடங்கள் முன்னர் வேறொரு ஊரில் இருந்த போதும் அம்மா இப்படித்தான். அம்மாவின் மீது நான் எரிந்து விழுவேன். உனக்கென கவலை வந்துச்சி என்பேன். யார் எக்கேடு கேட்டு போனால் என்ன என சொல்வேன். அம்மா எப்போதும் ஒன்றே ஒன்றுதான் சொல்வார். 'சாமி இப்போவெல்லாம் இங்கே வராதுடா. நாம தான் சாமியா இருந்து ஒருத்தரை ஒருத்தர் காப்பத்தனும்' என்பார்.

ஒரு ஆட்டோவை பிடித்தோம். 'காயத்ரியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்குடா' என அம்மா சொன்னதும், அம்மாவின் தோள்களில் சாய்ந்தேன்.

(தொடரும்)

2 comments:

பனிமலர் said...

எழுத்தில் ஓட்டம் இருக்கும் அளவிற்கு வளைவுகளிலும் நெருக்கத்தை தெரிவிக்கும் இடங்களிலும் தெளிவு இல்லை. இயல்பாக எழுதுங்கள், தெளிவாக வரும். இயல்பாக இல்லை என்றது எனது கருத்து.

மற்றபடி செய்திகள் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

எழுதப்பட்ட எழுத்து இயல்பாக இல்லை என்பதை ஏற்றுகொள்கிறேன். எப்போது இயல்பான நிலைக்கு இந்த எழுத்து மாறுகிறதோ அப்போது தெளிவு பிறந்துவிடும் என்பதையும் அறிகிறேன். தங்களின் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி பனிமலர்.