Thursday 8 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 1

நான் முதன் முதலாக கல்லூரியில் சேர சென்றபோது எனது கண்ணில் ஒரு பெண் தென்பட்டாள். எத்தனையோ பேர் நடமாடிக் கொண்டிருக்க அவள் மட்டுமே எனது கண்ணில் பட்டாள். ஆனால் அவளிடம் எப்படி பேசுவது என்று ஒரு தயக்கம் மனதில் நிழல் ஆடியது. அருகில் அம்மாவும், அப்பாவும் வேறு இருந்தார்கள். 'கண்ணு எங்கே போகுது?' அம்மா என்னை பார்த்து கேட்டுவிட்டார். 'எங்கேயும் போகலை' என வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன். 'ஒழுங்கா படி' என அம்மா அன்பு உத்தரவு போட்டார்.

எத்தனையோ சினிமாவைப் பார்த்து பார்த்து இந்த பார்வை எல்லாம் பழகி போய் இருந்தது. கல்லூரியின் முதல் நாள் வகுப்பு. அதே வகுப்பில் அன்று பார்த்த பெண் வந்து அமர்ந்தாள். எனக்கு மனதில் துள்ளல் அதிகம் ஆகியது. அவளையே பார்த்து கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்க்க வேண்டும் எனும் நோக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் கழுதை என்னை பார்க்கவே இல்லை. கழுதை என்றால் அழகு என்று தமிழில் அர்த்தம் என எவரோ சொன்னது பிற்பாடுதான் தெரிந்தது.

என்னை நோக்கி வகுப்பு ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டார் என்பதே எனது பக்கத்தில் இருந்த மாணவன் சொல்லித்தான் தெரியும். நானும் சினிமாவில் நடிக்கும் ஹீரோ போல ஆகிவிட்டேன் என நினைக்கும்போது மனதில் வெட்கத்தை விட கர்வம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலேயே வகுப்பை விட்டு வெளியேற்றபட்டேன். கால் கடுக்க வகுப்பின் வெளியில் நின்று கொண்டிருந்தேன். அவள் முகம் தெரியவில்லை. இங்கும் அங்கும் அலைந்து பார்த்தேன், ஆனால் அவள் அமர்ந்து இருந்த இடம் கண்ணுக்கு தென்படவில்லை. ஏகலைவன் போல ஆகிவிட்டேன். வெளியில் நின்று பாடத்தை கற்று கொள்ளலாம் என பாடத்தை கேட்க ஆரம்பித்துவிட்டேன். அம்மா வேறு சொன்னது அடிவயிற்றில் புளியை கரைத்தது, அமிலத்தை வயிற்றில் வளர்த்தது.

அந்த வகுப்பு முடிந்ததும் வெளியில் வந்த ஆசிரியர் என்னை முறைத்து பார்த்துவிட்டு 'உள்ளே போ மூதேவி, இனிமே இப்படி நடந்துகிட்ட உங்க அப்பாவை கூப்பிட்டு வர வேண்டி இருக்கும்' என்றார். ஆனால் அவர் எவர் பெயரையும் அழைத்து பதிவு செய்யவே இல்லை. அப்பாவா, ரொம்ப வசதியாக போய்விட்டதே என நினைத்து கொண்டேன். அம்மா என்றால் அவ்வளவுதான். நான் தொலைந்தேன். இப்படி மனதில் சின்ன பயம் ஒட்டி கொண்டாலும் இதுபோன்ற திரில்லான விசயங்களை செய்ய ஒரு தில் வேண்டும்.

வகுப்புக்குள் சென்றதும் எல்லோரும் என்னை பார்த்து கெக்கே பிக்கே என சிரித்தார்கள். நானும் அவர்களுடன் சிரித்து வைத்தேன். மானம், ரோசம் இருப்பவர்களுக்குத்தான் சுர்ரென்று கோபம் வரும். எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் மட்டும் சிரிக்காமல் இருந்தாள். அடுத்த பாட வகுப்புகளில் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். என்ன பாடம் நடத்தினார்கள் என எனக்கு தெரியாது ஆனால் மதியம் எனது நோட்டினை பார்த்தபோது அவளது அழகிய முகத்தை படங்களாக வரைந்து வைத்து இருந்தேன். கல்லூரி என நினைத்தால் இது ஒரு பள்ளிக்கூடம் போல் அல்லவா இருக்கிறது என மனதில் நொந்து கொண்டேன், ஆனால் எவருமே வரவு பதிவு செய்ய பெயரை கூப்பிடவே இல்லை. அவள் பெயர் தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது.

மதிய உணவு வேளை வந்தது. 'உன்கிட்ட பேசணும்' என்றாள் அந்த பெண். மனதில் திக்கென்று இருந்தது. எத்தனையோ கவிதைகளை யோசித்து வைத்தேன். ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும் நினைவில் நின்றது. கல்லூரியில் நான் கற்றது கல்வி அல்ல, காதல்.

'எதுக்கு என்னை பார்த்துக்கிட்டே இருக்க' என்றாள். 'நான் உன்னைத்தான் பார்த்துக்கிட்டே இருந்தேன்னு உனக்கு எப்படி தெரியும், அப்படின்னா வேற எங்கயோ பார்க்கிற மாதிரி நீ என்னை பார்த்துகிட்டே இருந்தியா' என்றேன். 'இங்க பாரு, தேவையில்லாம பிரச்சினை பண்ணாத, நான் அப்பப்ப பார்க்கறப்ப என்னையவே பார்த்துட்டே இருந்த, பொய் சொல்லாத' என்றாள்.

திக்கென்று இருந்த மனம் திண்டாட தொடங்கியது. 'இனிமே உன்னை பார்க்கலை' என சொல்லிவிட்டு சாப்பிட சென்றேன். நாங்கள் இருவரும் பேசிய வார்த்தைகளில் அன்னியோன்யம் தெரிந்தது. நான் அவளை நீங்க என்றோ அவள் என்னை நீங்க என்றோ சொல்லவே இல்லை.

தனியாக இருந்த ஒரு மரத்தின் கீழே நான் தனியாக சென்று சாப்பிட அமர்ந்ததும் 'என்ன சாப்பாடு' என்றே அவள் வந்து அருகில் அமர்ந்தாள். 'முட்டை, கருவாடு குழம்பு உள்ள சாப்பாடு' என காட்டினேன். அவளும் சிக்கன் சாப்பாடு என காட்டினாள். காலையிலேயே சிக்கன் எல்லாம் உன் வீட்டுல சமைப்பாங்களா' என பெரிய கேள்வியை கேட்டு வைத்தேன். சமைக்க கூடாதா? என ஒரு சிக்கன் துண்டை எனக்கு வைத்தாள். 'உன்னை நான் பார்க்கறதை நீ தப்பா எடுத்துக்கலையே' என்றேன். 'அதைப் பத்தி எல்லாம் பேசாத, சாப்பிடு என்றாள். 'என்னிடம் இருந்த முட்டையை பாதியாக வெட்டி அவளுக்கு தந்தேன்'

'உன் பேரு என்ன?' என்றாள்.

என் பேரு முருகேசு என்றேன். நட்டு கழண்ட கேசு அப்படின்னு வைச்சி இருக்கலாம் என சிரித்தாள்.

'உன் பேரு என்ன' என்றேன்.

'சோகேசு' என்றாள். நான் சிரித்துவிட்டேன், எனக்கு புரை ஏறியது.

(தொடரும்)

2 comments:

அருள் said...

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

Radhakrishnan said...

:)