Tuesday 8 November 2011

வேணாம்னா விட்டுருங்க அணுத்தொல்லையை

கூடங்குளத்தில் வேகமாக பயன்பாட்டுக்கு உட்படுத்தவிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஒரு சாரார் போராட்டம் நடத்தி வருவது வியப்புக்குரியது அல்ல. இதற்கு முக்கிய காரணம் பயம். 

இந்த திட்டம் ராசீவ் காந்தியால ஆரம்பிக்க பட்டது. சோவியத் யூனியன்ல பிரச்சினை வராம இருந்து இருந்தா இந்நேரம் கூடங்குளம்  சூப்பரா வேலை செஞ்சிட்டு இருந்துருக்கும். காலம் கடந்ததால் இந்த கூப்பாடுகள். அதைவிட முக்கியமான ஒன்னு என்னன்னா யுரேனியம் நம்ம நாட்டுல குறைந்த அளவுலதான் கிடைக்குதாம். நாம பல நாடுகள்கிட்ட ஒப்பந்தம் போட்டு இறக்குமதி செய்றம். அதுக்கு எத்தனை கோடி செலவோ? இப்படி கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி 14000  கோடி ரூபாய்ல 2001  ல ஒரு ஒப்பந்தம் போட்டு அப்படி இப்படின்னு கூடங்குளம் அணுமின் நிலையத்த ஆரம்பிக்கிற நேரத்தை பார்த்து சிவ பூஜையில புகுந்த கரடி மாதிரி ஜப்பான் நாட்டுல நடந்த துயர செய்தி லேசு பாசா இருந்த போராட்டத்துக்கு ரொம்ப வசதியா போச்சு. 

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை அப்படின்னு அஞ்சாங்கிளாசுல படிச்சது எல்லோருக்கும் நினைவில இருக்கும் போல. அதுவும் இந்த ஜப்பான் நாட்டுல நடந்த பெரும் துயரத்திற்கு அப்பால உலக நாடுகளே ஒரு நிமிஷம் நமக்கு அணு உலை எல்லாம் தேவையான்னு ஒரு மாநாடு போட்டுகிட்டாங்க அவங்க அவங்க ஊருல. 

எப்படித்தான் இருந்தாலும் துணிஞ்சவனுக்கு துக்கமில்லை அப்படின்னு 1986ல  தற்போதைய உக்ரைன், அன்றைய சோவியத் யூனியன்,  நாட்டுல நடந்த பெரும் அணு உலை விபத்து நடந்தப்பறம் கூட உலகத்துக்காரங்க எதையும் நிறுத்தி வைக்கலையே. இது ஒரு செயற்கை விபத்து. இதனால பாதிக்கப்பட்டவங்க ரொம்ப பேரு. இந்த பூமி எப்பவும் அழிவை எதுத்துதான் போராடுதுன்னு பாதிக்கப்பட்டவங்களுக்காக துக்கம் அனுசரிச்சிட்டு அடுத்த வேலைய அந்த ஊரு மக்கள் கவனிக்க போய்ட்டாங்க. இந்த விபத்தினால சோவியத் யூனியனோட மொத்த பொருளாதாரமே ஆட்டம் கண்டுருச்சி. இந்த  விபத்தினால வந்த அழிவை சரி செய்ய கோடி கோடியா ரூபில்ஸ் செலவாகிப் போச்சு.   ஆனா ஜப்பான் நாட்டுல நடந்த இந்த அணு உலை விபத்து இயற்கை சீற்றத்தினால வந்தது. அங்க கசிஞ்ச கதிரியக்கம் அயர்லாந்து நாட்டுல ரெகார்ட் ஆச்சு அப்படின்னு பேசிகிட்டாங்க. காலம் போகப் போக நம்ம மனுஷ சாதி பல விசயங்களை மறந்துரும். இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி பாருங்க, புது அணுமின் நிலையத்தை ஜப்பான் நாட்டுக்காரங்க கட்ட ஆரம்பிச்சிருவாங்க, அதுவும் எப்படி தெரியுமா? எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் நொட்டமுடியாதபடி. அது அவங்களோட போராட்ட குணம். 

நமக்கும் போராட்ட குணம் இருக்கு. உங்களுக்கென்ன தெரியாதா? போராடுவோம், போராடுவோம் அணு உலையை எதிர்த்து போராடுவோம். வைக்காதே வைக்காதே எங்கள் உயிருக்கு உலையை வைக்காதே. போராடுவோம் போராடுவோம் ஊழலை எதிர்த்து போராடுவோம் அப்படின்னு கத்து கத்துனு கத்திட்டு இந்த அரசாங்க பலத்துக்கு முன்னால கடைசியில பம்மிட்டு போறவங்கதான் முக்காவாசி நம்ம ஊருக்காரங்க. 'ஏலே ஒழுங்கா உண்ணாவிரதத்தை நிறுத்திட்டு ஓடிப்போயிரு, சாலைய மறிக்கிறது, கட்டவிடாம தடுக்கிறது அப்படின்னு ஆட்டம் கிட்டம் போட்ட குண்டர் தடுப்பு சட்டம், தீயவர் தடுப்பு சட்டம், அணு உலை அக்கிரமர்கள் சட்டம் அப்படி இப்படி ஆரம்பிச்சி உள்ள போட்டுருவோம்'   என மிரட்டி அடக்கிருவாங்கே. இந்த போராட்டம் இங்க மட்டும் இல்லைங்க, மும்பைக்கு பக்கத்துல ஜைடாபூர் அங்கிர ஊருல புதுசா ஒரு அணு மின் நிலையம் கட்டப்போறத எதிர்த்து அங்க வாழற மக்கள் போராடிகிட்டு இருக்காங்க. பத்தாயிரம் பேரு தங்களுடைய இடம், காடு எல்லாத்தையும் இந்த திட்டத்துக்காக இழக்கனுமாம். மீனவர்கள் தங்களோட மீன் பிடிப்புக்கு பாதிப்பு வரும்னு ஒரே எதிர்ப்பு. மேற்கு வங்காள அரசு 'போங்கடா நீங்களும் உங்க அணுத் தொல்லையும்' அப்படின்னு ஹரிபூர்ல கட்ட கூடாதுன்னு விரட்டி அடிச்சிட்டாங்க. 

அப்துல்கலாம் கனவு காண சொன்னாரு, அது ரொம்ப பேருக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சி. ஹையா ஐயா சொல்லிட்டாரு அப்படினுட்டு ரொம்ப பேரு கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப ஐயாவும் தன்னோட பங்குக்கு இப்படியெல்லாம் எதிர்க்காதீங்க, விளைவுகள் நினைத்தால் விளைச்சல பார்க்க முடியுமா அப்படிங்கிற ரேஞ்சுக்கு சொல்லிட்டாரு. அதனால ரொம்ப பேரு இந்த போராட்டத்தை கைவிட்டுரலாம்னு யோசனையில இருப்பாய்ங்க அப்படினுட்டு ரொம்ப பேரு அப்துல்கலாம் சொல்றதை கேட்காதீங்க அப்படிங்கிற அளவுக்கு போராட்டத்தை தீவிரபடுத்தி இருக்காங்க. 

நம்ம மக்களோட பயம் நியாயம்தானே. ஒழுங்கா ரோடு போட தெரியாதவங்க கிட்ட போய் இந்த அணு உலைய கொடுத்தா குரங்கு கையில பூமாலை கொடுத்த கதை மாதிரி ஆகிப்போயிரும். போபால் கதை எல்லாம் நமக்கு மறந்து போச்சா. அது மறந்துருக்கும், நமக்கு கோபால் கோபால் அப்படிங்கிற வசனம் தான் நியாபகத்துல இருக்கும். நம்ம நாட்டுல இதுவரைக்கும் ஆறு தடவை இந்த அணு உலை சிறு விபத்து நடந்துருக்கு. இதெல்லாம் சின்ன சின்ன விபத்துதான் அப்படின்னு ஒதுக்கி வைக்க முடியாது. அதே நேரத்துல ஒரு விசயத்தை செஞ்சா ஆயிரத்தெட்டு பிரச்சினை வரும், பிரச்சினைய நினைச்சா வாழ முடியுமாலே. பிரச்சினை வரத்தான் செய்யும்னு சொல்றியள, ஏலே பிரச்சினைக்கு என்ன சொலுசண் வைச்சிருக்க,  ஒழுங்கா சேப்ட்டி பண்ணிகிட்டா எங்களுக்கு என்ன பிரச்சினை. அதை சொல்லுவே அப்படிங்கிற மக்களோட கோரிக்கை நியாயம் தானே. ஆனால் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடிமா என அரசுதனை கேட்டால் அவர்கள் என்ன சித்திரகுப்தர்களையா மந்திரிசபையில் உட்கார வைத்து இருக்கிறார்கள், கணக்குகளை எல்லாம் மாற்றி எழுத. 

மின்சாரம் எப்படி தயாரிக்கிறது அப்படிங்கிறதை பத்தியும், இந்த அணு உலை எப்படி செயல்படுது, வேறு மாற்று வழிகள் என்ன எனபதையும், ஐசொடோப்கள், புளுடோனியம், யுரேனியம் அதனோட 'பாதி வாழ்க்கை காலம்' (4600 மில்லியன் வருடங்கள் அல்லது 4.6  பில்லியன் வருடங்கள் யுரேனியம் பாதியா குறைய), ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்கள் பத்தின தகவல்களை, இதனால் ஏற்படும் விளைவுகளை இன்னொரு பதிவுல விளக்கமா பார்ப்போம். அப்பத்தான் நம்மவங்களோட பயம் நியாயமா இல்லையா அப்படின்னு தெரியும். 


சரி அதெல்லாம் இருக்கட்டும் என்னதான் முடிவு. 

அணு உலை வேணுங்கிறவங்க தமிழ்நாட்டுல வாழட்டும். 'அணு உலை வேணாம்னு நினைச்சீங்கன்னா, உங்க போராட்டம் ஜெயிக்காதுன்னு ஆகிப்போச்சுனா ஒரே வழி இருக்கிறது. தமிழகத்தை விட்டு மட்டுமில்லை, இந்தியாவை விட்டே ஓடிப்போயிருங்க அப்படின்னு கூட நாலு ஐஞ்சு பேரு அறிவுரை சொல்லலாம். எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டே அவதிபட்டுட்டு அங்கேயே இருங்க. 

மத்தவங்க சொல்றது இருக்கட்டும், நான் என்ன சொல்ல வரேன்னா 'ஊருல மின் பற்றாக்குறை ரொம்ப ஜாஸ்தி. இதுக்கு உற்பத்தி அளவு குறைச்சல் மட்டுமில்லை காரணம். நாம அளவோட மின்சாரத்தை உபயோகம் செய்றது இல்ல. புது வீடு, புது ஏசி, புது சலவை மெசினு, புது மோட்டாரு அப்படின்னு சகல வசதிகளையும் பெருக்கி வைச்சிட்டு நைட்டுல தூங்கறப்ப கூட லைட்ட போட்டு தூங்குறது, நல்ல மழை பெய்யும் ஆனாலும் வாய்க்காலுல தண்ணி விடறது, வக்காளி பொதுக்கூட்டம் போட்டாலும் சரி, ஒரு படம் ரிலீசானாலும் சரி, பொண்ணு வயசுக்கு வந்துட்டாலும் சரி, மாப்பிளைக்கு கல்யாணம் வைச்சாலும் சரி, அம்மனுக்கு தெருவெல்லாம் தேரு இழுத்தாலும் சரி, நட்டு வைச்சிருக்கிற அத்தனை போஸ்ட்ல இருந்தும் கரண்ட களவாடறது, குளிர்காலத்துல ஏசி தியேட்டுர்ல போய் உட்கார்ந்துட்டு ஏசிய போட சொல்லி அலம்பல் பண்றது, அல்லாப்பயகளும் தூங்கனப்புறம் கூட விளம்பர தட்டிக்கு லைட்டு கனக்சன் கொடுக்குறது   இப்படி சகட்டு மேனிக்கு நாம மின்சாரத்தை வேஸ்ட் பண்றத நிறுத்தறதுக்கு ஒரு போராட்டம் நடத்தனும். ஜெயராம் ரமேஷும், கோபால கிருஷ்ணனும், யாரு இவங்க அப்படின்னு கேட்டு தொலைசிராதீங்க, தங்களோட வாய்ச காட்டட்டும். நாமளும் வாய்ச மட்டும் காட்டாம உடனே வெட்டியா ஓடிட்டு இருக்கிற அத்தனை எலேக்டரிகளை நிறுத்துவோம். 

5 comments:

rajamelaiyur said...

நல்ல சொல்லுங்க ...

Sundararajan P said...

நல்ல கட்டுரை. என் பேஸ்புக் சுவரில் இணைத்துள்ளேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ராஜபாட்டை மற்றும் வழக்கறிஞர் அவர்களே. தங்கள் பேஸ்புக்கில் இணைத்தமைக்கு மீண்டும் நன்றி.

கோவி.கண்ணன் said...

// வக்காளி பொதுக்கூட்டம் போட்டாலும் சரி, ஒரு படம் ரிலீசானாலும் சரி, பொண்ணு வயசுக்கு வந்துட்டாலும் சரி, மாப்பிளைக்கு கல்யாணம் வைச்சாலும் சரி//

சத்தமாகவே சிரிச்சேன். ஒரே நேரத்தில் எப்படித்தான் லண்டனிலும் தமிழகத்திலும் வாழுகிறீர்களோ.

:)

Radhakrishnan said...

ஹா ஹா! தமிழ் மட்டும் மறந்து போயிருந்தால் தமிழகத்தை மறந்து போயிருந்திருப்பேன்.

இருபத்தி நான்கு வருட வாழ்க்கை அத்தனை எளிதாக தொலைந்து போவது இல்லைதானே கோவியாரே.