Thursday 17 November 2011

மனைவியின் மயோர்கா - 2

மயோர்கா வரைபடங்களை ஹோட்டல் வரவேற்பாளரிடம் பெற்றுக்கொண்டு கார் பற்றி விசாரித்தோம். எல்லா இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் கார் மிகவும் அவசியமாக தென்பட்டது. இஷ்டத்திற்கு எங்கே வேண்டுமெனிலும் செல்லலாம், எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை போன்ற வசதிகள் இருப்பதால் கார் எடுப்பது சரியென பட்டது. அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பாளர் அதெல்லாம் தைரியமாக கார் ஓட்டலாம் என நம்பிக்கை தந்தார். சரியென மிக குறைந்த நாள் வாடகையில் மூன்று நாட்கள்  பியட் கார் ஒன்றை பதிவு செய்தோம். மறு தினம் காலையில் ஒன்பது மணிக்கு வந்து கார் பெற்று கொள்ள சொன்னார்கள். ஹோட்டலுக்கு கார் வந்துவிடும் எனும் நம்பிக்கையில் அன்றே மதிய வேளையில் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தே நாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

வெளியில் செல்லும் முன்னர் ஹோட்டலையும் அதன் வெளிப்புறத்தையும் நோட்டம் இட்டோம். ஹோட்டல் பின்புறம் நீச்சல் குளம் ஒன்று உண்டு. அந்த நீச்சல் குளம் தாண்டி சின்ன கடற்கரை ஒரு இரு நூறு மீட்டர் தொலைவு உண்டு. அதற்கு பின்னர் கடல். நீச்சல் குளம்தனை தாண்டி கடற்கரை அடைந்ததும் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்து மேல் உள்ளாடை இல்லாமல், மேலாடை இல்லாமல் மார்பகங்கள் வெளித் தெரிய வானம் பார்த்து படுத்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஒரு இளம் வயது பெண்ணை கண்டதும் திடுக் என்று இருந்தது. மணலோடு மணல் நிறத்தில் தான் அந்த மங்கை இருந்தார். ஆங்காங்கே சிலர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.  இனி அங்கே நிற்பது முறையில்லை என நகர்ந்தோம்.

மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என பத்து நிமிடத்தில் அங்கிருந்து நடந்து ஒரு இத்தாலியன் ஹோட்டல் அடைந்தோம், அவர்கள் பரிமாறிய உணவு நன்றாகவே இருந்தது. அங்கிருந்து நடந்து செல்ல மற்றொரு கடற்கரை. எங்கு பார்த்தாலும் அரை குறை ஆடைகளோடு உல்லாசமாக மனிதர்கள். சாலையில் கூட வெறும் உள்ளாடைகளுடன் சுற்றி திரிந்த ஆண்களும் பெண்களும். 'நல்ல காட்சி உங்களுக்கு' என மனைவி கிண்டல் செய்தார். இது போலிருக்க நமக்கு இத்தனை தைரியம் வராது என சொல்லிக்கொண்டு நாங்கள் அணிந்திருந்த முழு ஜீன்ஸ், டி-சர்ட் போட்டிருந்ததை சுட்டி காட்டினேன்.

மனிதர்கள் ஆடை இல்லாமல் திரிந்தாலும் அவை காம உணர்வுகளை தூண்டுவதில்லை என்பதை மயோர்கா காட்டி கொண்டிருந்தது. இந்த விசயங்களை எல்லாம் எழுத்தில் நேரடியாய் வைக்கும் போது வக்கிரம் நிறைந்த பார்வை என்றே பார்க்கப்படுகிறது. இலைமறை காயாக சொல்லும்போது, உவமைகளையும், உவமானங்களையும் வைத்து விவரிக்கும்போது அவை இலக்கியம் என சிலாகிக்கப் படுகிறது. நிர்வாணம், நிர்வானம், நேசிக்க தெரிந்த கண்களுக்கு  காமமாக தெரிவதில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் முழு நிர்வாணம் அனுமதிக்கப்படுவதில்லை. மானம், அவமானம் என்றெல்லாம் இந்த நிர்வாணம் பிரித்து பார்க்கப்படுகிறது. மார்பக புற்று நோயை பற்றிய விழிப்புணர்வுக்கு பிரா இல்லாமல் வெறும் மார்பகங்களோடு நின்று உணர்த்திய பெண்களும் சரி, சில விசயங்களுக்கு நிர்வாணமாக கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிக்காட்டும் போதும் சரி, நிர்வாணம் காமத்தின் வெளிப்பாடு அல்ல என்பது புரியும். அதே வேளையில் வெட்கம் இருக்கும் இடத்தில் நிர்வாணத்திற்கு இடமில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, அந்த வெயிலில் அங்கிருந்து நடந்தே இடங்கள் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

 நிறைய கடைகள் இருந்தன. வெயிலின் கொடுமை தாங்காமல், மகன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என விரும்பியதால் இரண்டு மணி நேரத்தில் திரும்பினோம். நீச்சல் குளத்தில் நாங்கள் சென்று விளையாட மனைவி வெட்கப்பட்டு கொண்டு  வர மறுத்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

மாலை நேரம் மீண்டும் நடந்தே இடங்கள் சுற்றினோம், ஓரிடத்தில் ஹோட்டல் செல்லும் வழி தெரியாமல் அங்கிருப்பவர்களிடம் பாதை கேட்க ஸ்பானிஸில் பேசினார்கள். ஆங்கிலத்தில் பேச மறுத்தார்களா அல்லது தெரியாதா என தெரியவில்லை. நாங்கள் ஒன்று கேட்க அவர்கள் ஒன்று சொன்னார்கள். நாங்கள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை, அவர்கள் சொன்னது எங்களுக்கு விளங்கவே இல்லை. மொழி தெரியாமல் ஒரு இடத்தில் வாழ்வது அத்தனை சௌகரியமில்லை. நாங்களாகவே நடந்து பிரதான சாலையை கண்டுபிடித்தோம். அங்கிருந்து ஹோட்டல் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

இரவு ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சாப்பிட அமர்ந்தவுடன், ஏன்டா சாப்பிட வந்தோம் என்றாகிவிட்டது. ஒரு தட்டு சோறுடன் பாத்தி கட்டி சாம்பார் ஊத்தி சாப்பிட்டு பழகி போன எனக்கு இரண்டு கத்தரிக்காய், ஒரு காளான், இரண்டு காரட் என வந்து வைக்க அட பாவிகளா என்றுதான் சொல்ல தோணியது. பஃபே முறை இருந்ததால் அங்கே இருந்த ரொட்டி வகைகளை எடுத்து சமாளித்தோம். எப்படியாவது நல்ல கடை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆவல் பிறந்தது. இரவு அந்த ஹோட்டலில் ஒருவர் பாடினார். தேநீர் அருந்தி கொண்டு இரவு பன்னிரண்டு வரை புரியாத மொழி எனினும் பாடலை ரசித்தோம்.

உறங்க செல்லும் முன்னர் கார் ஓட்டி விடுவீர்களா? என மனைவி கேட்டார். அதெல்லாம் ஓட்டிவிடலாம் என சொல்லிவிட்டு,  மனைவியின் இரவு நேர கேள்வியினால் கார் எப்படி ஓட்டுவது என்பது குறித்தான சிந்தனையை மன திரையில் ஓட்டினேன். வலது பக்கம் சென்றால் எப்படி திரும்ப வேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் என்பது குறித்து மனதில் ஓட்டி பழகினேன். ஓரளவு நம்பிக்கை பிறந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கார் வந்து இருக்கிறது, வாருங்கள் என தொலைபேசியில் அழைத்தார் வரவேற்பாளர். நான் மட்டும் போய் கார் சாவியை வாங்கி வருகிறேன், தயாராக  இருங்கள் என மனைவி, மகனிடம் சொல்லிவிட்டு சில படிவங்களை எடுத்து கொண்டு கீழே வந்தேன்.

கார் காணவில்லை. ஒருவர் வாருங்கள் என என்னை அழைத்தார். என்னோடு மேலும் சிலர் வந்தார்கள். எங்கே கார் என கேட்டேன்? இதோ இந்த காரில் ஏறுங்கள் என அனைவரையும் சொன்னார். அப்பொழுதுதான் புரிந்தது, கார் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது என்பது. எனக்கு புரிந்த வேளையில் அவரே சொன்னார். கார் வேறு இடத்தில் இருந்து நான் எடுத்து வரவேண்டுமென. அட ராமா என எனக்கு ஆகிப் போனது. அப்பொழுதுதான் எனது செல்பேசி என்னிடம் இல்லை என புரிந்தது. மனைவியிடமும், மகனிடமும் தகவல் சொல்ல வழியில்லை. வேறு வழியின்றி காரில் ஏறி அமர்ந்தேன். சற்று இடைவெளியின் போது ஒரு சுற்றுப் பாதை என வந்து கொண்டே இருந்தது. எப்படி செல்கிறார் என கவனமாக பார்த்து கொண்டே வந்தேன். ஒவ்வொரு சாலை பெயரை மனதில் பதித்தேன். ஒரு சுற்றுப் பாதை வழியாக சென்று கார் இருக்கும் இடம் அடைந்தேன். வந்தவர்களில் எவரும் ஆங்கிலேயர்கள் இல்லை. ஒவ்வொருவரும் பதிவு செய்து கார் எடுத்து கொண்டு சென்றார்கள்.

எனது சுற்று வந்தது. வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அதை ஆங்கிலத்தில் மாற்றி அமைத்து தந்தார்கள். மிகவும் பழைய கார். அங்கங்கே சின்ன சின்ன அடி வாங்கி இருந்தது. சுட்டி காட்டினேன், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள். சரியென காரில் ஏறி அமர்ந்தேன். சரியாக ஹோட்டல் சென்று விடுவோமா என அச்சம் வந்து சேர்ந்தது. காரை சிறிது தூரம் செலுத்த கண்ணாடியில் ஒட்டப்பட்ட வழிகாட்டி கீழே விழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து அது மாறி இருந்தது. அதை எப்படி சரி செய்வது என புரியாமல் வழிகாட்டி இல்லாமல் மெதுவாக காரை செலுத்த ஆரம்பித்தேன்.

இடது, வலது, மறுபடியும் வலது என பாதையை நினைவுபடுத்தி சுற்றுப்பாதை வந்தேன்.  மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது  கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.

அன்று எடுத்த சில புகைப்படங்கள்.

மயோர்கா இயற்கை காட்சிகள் நிறைந்தே தென்பட்டது. கடற்கரைகள், மலைகள் என அற்புதம். அழகிய மரங்களும், வரிசையாய் நிறுத்தப்பட்ட கார்களும்.


தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம், நீச்சல் குளமும், அதைத் தாண்டி கடலும்.




நீச்சல் குளத்தில் முன்னர் இருந்த நாற்காலிகள்.


ஹோட்டலின் உட்புறத்தில் ஒரு பகுதி.


இரவில் மயோர்கா.


(தொடரும்)

4 comments:

கோவி.கண்ணன் said...

//மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.//

அப்பறம்.......நல்ல ட்விஸ்ட் :)

Radhakrishnan said...

மிக்க நன்றி கோவியாரே. விரைவில் தொடர்கிறேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நிர்வாணம் பற்றிய உங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறேன். இடம் பொருள் ஏவல் மாறும் பொழுது நம் எண்ணமும் பார்வையும் கூட மாறிப்போகிறது. மணல் வண்ணத்தில் அம்மங்கையும் எனக்கு ரம்யமான ஓவியமாகத் கண் முன் விரிந்தனர்.

கார் விவரிப்பும் புகைப்படமும் ரசிக்க வைத்தன.

Radhakrishnan said...

மிகவும் சரியே. மிக்க நன்றி சகோதரி