Wednesday 17 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 32


கதிரேசன் அடுத்தநாள் காலையில் அவசரம் அவசரமாக கிளம்பினான். மதியம் வீடு திரும்புவதாக ஈஸ்வரியிடம் கூறிவிட்டு வைஷ்ணவியைச் சந்திக்கச் சென்றான். வைஷ்ணவி கதிரேசனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 


''என்ன விசயமா பேசனும், சொல்லு'' என்றான் கதிரேசன். 


''நேத்து ஈஸ்வரிகிட்ட பேசினப்ப அவகிட்ட ஒருவித பயம் தெரிஞ்சது. நீ அவளை விட்டுட்டுப் போயிருவனு நினைக்க ஆரம்பிச்சிட்டா. அதனால அவளுக்குனு ஒரு குழந்தைப் பொறந்துட்டா அந்த பிடிமானத்தோட நீயும் கூடவே இருப்பனு நினைக்கிறா. நீ கொஞ்சம் உன்னோட சிவன் பக்தியை தள்ளி வைக்கக் கூடாதா'' என்றாள் வைஷ்ணவி.


''நம்மைப் பத்தி நாம பிறருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டிருக்கத் தேவையில்லை. நம்மளைப் புரிஞ்சவங்களுக்கு விளக்கம் அவசியமில்லை, நம்மளைப் புரியாதவங்களுக்கு நாம சொல்றது நம்பும்படியா இருக்கப் போறதில்லை, சிவன் பக்தியை தள்ளி வைக்கச் சொல்றதைத்தான் முக்கியமான விசயம்னு ஈஸ்வரிகிட்ட சொன்னியா?'' என்றான் கதிரேசன். 


''இல்லை, மதுசூதனன் பத்தி பேசனும், ஆனா அதுக்கு முன்னால இந்த விசயத்தையும் பேசலாம்னு நினைச்சேன். நீ ஈஸ்வரியை விட்டு பிரியமாட்டியில்ல'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன பேச்சு இது, பிரிஞ்சிப் போறதுக்கா அவளைக் கல்யாணம் பண்ணினேன், ஏன் இப்படி ஒரு நினைப்பு வருது உங்க இரண்டு பேருக்கும். அவளையும் பிரியமாட்டேன், உன்னையும் பிரியமாட்டேன்'' என்றான் கதிரேசன். 


''பட்டினத்தார், அருணகிரிநாதர், திருநீலகண்டர், திருஞானசம்பந்தர்னு ஏதேதோ பேசுறா ஈஸ்வரி'' என்றாள் வைஷ்ணவி. ''அவ படிச்சது அப்படி, அவ என்னைவிட்டுப் பிரியாம இருந்தாலே போதும்'' என்றான் கதிரேசன். மதுசூதனன் பற்றி கேட்டான்.  தனது செயல்களே ஈஸ்வரியின் இந்த மனநிலைக்கு காரணம் என அறிந்து கொண்டான். அவள் தன்னிடம் சொல்ல இயலாமல் தவிப்பதை நினைக்கும்போது கதிரேசனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. 


மதுசூதனன் திருமணம் சில பிரச்சினைகளால் தடைப்பட்டுப் போனதாகவும், அவனது செய்கையால் அவனது பெற்றோர்கள் பெரும் அவமானத்துக்கு உள்ளானார்கள் என அறிந்து கொண்டதாக கூறியவள், அவனுக்கு ஏதேனும் வகையில் உதவி செய்ய வேண்டும் என கதிரேசனிடம் கூறினாள் வைஷ்ணவி. அதைக் கேட்ட கதிரேசன் ''இதெல்லாம் எப்பொழுது நடந்தது, எப்படி இவ்விசயம் தெரிய வந்தது, இன்னும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா, மிகவும் தெளிவானவளாக அல்லவா நீ இருந்தாய் ஏன் மனம் இப்படி அலைபாய்கிறது'' எனக் கேட்டான் கதிரேசன். 


''நீ மட்டும் ஈஸ்வரியை திருமணம் செய்துகிட்டு  இன்னமும் சிவனையே நினைச்சிட்டு இருக்கலையா? '' என்றாள் வைஷ்ணவி. ''அது வேற   , இது வேற. இந்நேரம் அவன் திருமணம் செஞ்சி இருந்தா என்ன செய்து இருப்ப?'' என்றான் கதிரேசன். ''நினைப்பு இருந்திருக்கும்'' என்றாள் வைஷ்ணவி. ''தெளிவா பேசிய நீயா இப்படி குழம்புறது, உனக்கு தகவல் சொன்னது யார்?'' எனக்கேட்டான் மீண்டும். ''மதுசூதனனின் நண்பன்தான் பேசினான்'' என்றாள் வைஷ்ணவி. ''நீ அவனை மறக்க மாட்டாயா?'' என்றான் கதிரேசன். ''நீ சிவனை மறக்கமாட்டாயா?'' என்றாள் வைஷ்ணவி. ''நீ விசயம் கேள்விபட்டதும் அவன்கிட்ட நேரடியா பேசியிருக்கனும்'' என்றான் கதிரேசன். ''முயற்சி பண்ணினேன், ஆனா அவன் எடுக்கலை'' என்றாள் வைஷ்ணவி. 


''கொஞ்சம் இரு'' என சொல்லிவிட்டு மதுசூதனனுக்கு உடனே அழைப்பு விடுத்தான் கதிரேசன். எதிர்முனையில் ஒரு பெண் குரல் கேட்டது. ''யார் பேசறது'' என்றது குரல். ''கதிரேசன் பேசறேன், மதுசூதனனோட நண்பன், இது மதுசூதனனோட நம்பர் தானே, நீங்க யாரு'' என்றான் கதிரேசன். ''அவர் வெளியேப் போயிருக்கார், இப்ப வந்துருவார், நான் அவரோட மனைவி பேசறேன், வந்ததும் சொல்றேன்'' என இணைப்பைத் துண்டித்தாள். கதிரேசன் மிகவும் கோபமானான். ''வைஷ்ணவி அவன் உன்னோட வாழ்க்கையில விளையாடறான், நீ இப்படி ஏமாளியா இருக்காதே. அவன் கல்யாணம் எல்லாம் நல்லாவே நடந்துருச்சி''. 


சிறிது நேரத்தில் கதிரேசனை அழைத்தான் மதுசூதனன். ''எதுக்குடா போன் பண்ணின, என் கல்யாணம் நின்னுப்போச்சுனு கேள்விப்பட்டு என்னை அவளோட சேர்த்து வைக்க முயற்சி பண்றியா. அவளோட கல்யாணம் தான் இனிமே ஒவ்வொருதடவையும் நிற்கும். நீ அவளை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் உண்டு. அவளைப் புரிஞ்சிக்கிட்ட சிவனாச்சே நீ'' என சொல்லி பயங்கரமாக சிரித்தான் மதுசூதனன். கதிரேசன் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. ''நீ தானே அவளை வேணாம்னு ஒதுக்கின, இப்போ ஏன் அவளுக்கு தொந்தரவு தர. இப்ப கூட உனக்கு உதவனும்னு நினைக்கிறா, அவகிட்ட பேசு'' என்றான் கதிரேசன். 


''உங்ககிட்ட எனக்கு என்னடாப் பேச்சு, வடிகட்டின முட்டாள்டா நீ'' என சொல்லிவிட்டு வைத்தான் மதுசூதனன். கதிரேசனுக்கு கோபம் அதிகமானது. வைஷ்ணவி கதிரேசன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். கதிரேசன் ஆறுதல் சொன்னான். ''நீ கவலைப்படாதே, நாங்க எல்லாம் இருக்கோம்'' என வைஷ்ணவியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்தான். கதிரேசன் பூஜை அறைக்குள் நுழைந்தான்.


''காதலில் கேடும் உளதோ கண்டறியேன் பெருமானே
காதலும் காத்தே நிற்கும் உண்மையோ
ஒருமுறை காதல் வயப்பட்டுப் போய்விடின் மறந்தே
மறுமுறை காதல்வருமோ சொல்சிவனே''


(தொடரும்)

Friday 12 November 2010

மனித உரிமைகள் எனும் அக்கப்போர்

இது ஒரு கேடு கெட்ட சமூகம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த கேடு கெட்ட சமூகத்தில் நாமும் ஒரு அங்கம் என்பதை மறுக்க வேண்டும் என்பது நிச்சயம் இல்லை.

ஒரு வீடு வாங்குவது என்பது எத்தனை பெரிய விசயம்? வீட்டினை கட்டிப் பார், கல்யாணம் பண்ணி பார் என்பது நமது ஊருக்கு பொருந்தும். ஆனால் லண்டன் போன்ற நகரங்களில் கட்டப்பட்ட வீடுகள் வாங்குவதே பெரிய விசயம்.

சொந்த பணத்தில் வீடு வாங்குவது என்பது பத்து சதவிகித மக்களால் முடியும். மீதி எல்லாம் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குபவர்கள்தான். அப்படித்தான் ஒருவர் வீடு வாங்கி அந்த வீட்டினை புதுபித்து கொண்டிருந்தார்.

வீட்டினை புதுப்பித்து கொண்டிருக்கும்போது அங்கேயா தங்க முடியும். தான் இருந்த வாடகை வீட்டினில் இருந்து கொண்டு புதிய வீட்டு வேலையை செய்து வந்தார். இங்கே வீடு வேலை செப்பனிடுபவர்கள் தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்து முடித்தோமா என இருக்க மாட்டார்கள். அங்கொரு வீடு, இங்கொரு வீடு என பல வீடுகளை செப்பனிட்டு கொண்டிருப்பார்கள். அவ்வாறு இருக்கும்போது இவரது வீடு பல நாட்களாக வேலை செய்யாமல் இருந்தது.

இந்த சமயம் பார்த்து அந்த வீட்டிற்குள் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த வீடு இல்லாத நபர்கள் உள்ளே சென்று குடியேறி விட்டார்கள். விசயம் அறிந்த நபர் திடுக்கிட்டு போனார். காவல் அதிகாரிகளுக்கு விபரம் தெரிவித்ததும் வந்தார்கள். அவர்களை வெளியேற்ற மனு ஒன்று பெற்றாக வேண்டும் என சொன்னார்கள்.

இப்படி முறையின்றி குடியேறும் நிகழ்ச்சி அவ்வப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு குடியேறியவர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் எதுவும் செய்ய கூடாது, அதற்கான உரிமை கிடையாது. சட்டமே எல்லாம் செய்யும். அந்த முறையில்லா சட்டம் என்ன சொல்கிறது என்றால் வீட்டை உடைத்து செல்பவர்களை ஒன்றும் செய்யாதாம். ஏனெனில் மனித உரிமை பிரச்சினையாம்.

இந்த நாட்டில் இருக்கும் சட்டங்கள் குறித்து ஒரு சின்ன கதை ஒன்றை முன்னரே எழுதி இருந்தேன். ஒரு ஒழுங்கு முறை வேண்டும், அதற்காக அளவற்ற ஒழுங்கு முறையா?

மனித உரிமைகள் என்கிற போர்வையில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என அனைவரையும் வேடிக்கை பார்க்கும் அவலம் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மனித உரிமைகள் என்றால் என்ன? புரியாத விசயங்களில் இதுவும் ஒன்றாகி போனதுதான் அவலம்.

கதை இங்கே.

வரதனின் சட்டம்

வரதன் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டால் எனும் பகுதியில் நான்கு மாதங்கள் சுயமாக ஒரு சின்ன கடை வைத்து பிழைப்பினைத் தொடங்கி இருந்தான். அவனது கடைக்குள் வருவோரில் சிலர் சில பொருட்களை எடுத்துவிட்டு பணம் தராமல் ஓடிச் செல்வதை கண்டு மிகவும் கோபமுற்றான். அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க இயலாமல் உள்ளதை தொலைத்துவிடுவோம் என கடையிலே இருந்து கொள்வான். காவல் அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

வரதனின் நேர்மையான குணமும், கடைக்கு வருவோரிடம் பேசும் நல்ல பண்பும் அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருந்தது. மேலும் நியாய விலைக்கே பொருட்களை விற்று நல்ல பெயர் சம்பாதித்து இருந்தான் வரதன். ஆனால் திருடர்களின் அட்டூழியத்தை அவனால் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஏழை நாடான இந்தியாவில் கூட இப்படி பொருட்கள் களவாடிச் செல்பவர்கள் இல்லையே என நினைத்து வேதனையுற்றான். 

கடையில் வருவோரிடம் ஆலோசனை கேட்டான். அவர்களால் தகுந்த பதிலைச் சொல்ல முடியவில்லை எனினும், ஒரு காவலாளி வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னார்கள். ஆனால் வரதனுக்கு காவலாளி எல்லாம் வைத்து சம்பளம் தந்து கட்டுபடியாகும் எனத் தோணவில்லை. அசைபட கருவி நிறுவியும் எந்த பலனும் இல்லை.

ஒருமுறை இப்படி திருடிச் சென்ற சிறுவனை பிடித்துவிட்டான் வரதன். அவனிடம் நல்லபடியாய் புத்திமதி கூறி, வேண்டுமெனில் பணம் கொடுத்து வாங்கிப்போ இப்படி தூக்கிச் செல்லாதே என சொன்னதும் அந்த சிறுவன் பொருளை வரதனின் முகத்தில் எறிந்துவிட்டு தகாத வார்த்தையால் திட்டிவிட்டு ஓடினான். வரதனுக்கு கோபம் அதி பயங்கரமாக வந்தது. ஆனால் துரத்திச் செல்லாமல் விட்டுவிட்டான். என்ன நாடு இது, ஒரு ஒழுங்கு, ஒழுக்கம் எல்லாம் இல்லை. இச்சின்னஞ்சிறு வயதிலே இப்படிச் செய்தால் இந்த நாட்டின் எதிர்காலம் என்னாவது என மனதுக்குள் அச்சம் கொண்டான். இந்தியாவிலோ வறுமையின் கொடுமை தாங்காமல் ஹோட்டல்களிலும், தொழிற்சாலைகளிலும் வெயில் மழை என பொருட்படுத்தாது வேலை செய்யும் சிறுவர்களை நினைத்த போது இங்கிருக்கும் சிறுவர்களின் நடத்தை மேல் அதிக கோபம் வந்தது. ஏன் இந்த நாட்டிற்கு வந்தோம் என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிட்டான் வரதன். 

உதவித்தொகை என அரசிடம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருப்பவர்கள் தனது கடையில் பொருள் திருடிச் சென்றதையும் கண்டிருக்கிறான். சமூக நலன் பாதுகாவலர்கள் என சுற்றிச் சுற்றி வரும் காவல் அதிகாரிகளிடம் சொல்லியும் எவ்வித பயனில்லை. 

ஒருமுறை நாளிதழைப் பார்க்கையில் அதில் ஒரு முதலாளியின் வீட்டில் திருட நுழைந்தவனை அந்த முதலாளி சுட்டுவிட்டார். அதற்கு சட்டம் முதலாளியை தண்டித்து இருந்தது. திருடனை ஒன்றும் செய்யவில்லை. திருட வந்தவனை ஏன் நீ தடுக்கிறாய் என்றுதான் கேட்டது. இதனைப் படித்ததும் கொதித்துப் போனான் வரதன். மனதில் ஒரு முடிவு செய்தான். இந்த கேடு கெட்ட சட்டத்திற்கு ஒரு பாடம் புகட்டுவது என தீர்மானித்தான். 

கடையில் ஒரு சின்ன கத்தியை எடுத்து வைத்துக்கொண்டான். இந்த கத்தியானது அட்டை பெட்டிகளை திறக்க அவன் பயன்படுத்துவதுண்டு. ஒரு வாலிபன் உள்ளே வந்தபோதே சந்தேகம் கொண்டான் வரதன். அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தான். வரதன் நினைத்தது போல விலையுயர்ந்த பொருளைத் தூக்கிக் கொண்ட ஓட எத்தனித்தான் அவன். ஒரே பாய்ச்சலாக கடையின் கதவு முன்னால் நின்றான் வரதன். ஓட இருந்தவன் வரதனை தள்ளிவிட்டு அடித்துவிட்ட ஓட நினைக்கையில் முகத்தில் கத்தியால் கீறல் போட்டான் வரதன். அந்த வாலிபன் வலியால் துடிதுடித்து பொருளை கீழே போட்டுவிட்டு ஓடினான்.

வரதன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வரதனின் வக்கீல் வரதன் தன்னையும், தனது வியாபாரத்தையும் காப்பாற்றிக்கொள்ளவே அவ்வாறு செய்தான் என வாதிட்டார். அங்கிருந்த மக்களும் வரதன் மேல் வழக்குப் பதிவு செய்தது முட்டாள்தனம் என சொன்னார்கள். இந்த வேளையில் கடையில் திருடிய வாலிபன் தன்மேல்தான் தவறு இருக்கிறது, வரதன் மேல் இல்லை என நீதிபதிக்கு கடிதம் எழுதினான். இதையெல்லாம் விசாரித்த நீதிபதி வரதனை விடுதலை செய்தார், ஆனால் இது சட்டத்திற்கு மீறிய குற்றம் என கண்டிக்கவும் செய்தார். 

மனித உரிமை என கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் உங்கள் நாட்டில் ஏன் மனிதர்களாக கணக்கில் வைக்கிறீர்கள் என சத்தம்போட்டுச் சொன்னான் வரதன். நீதிபதி வரதன் சொன்னதை வெகுவேகமாக எழுதிக்கொண்டிருந்தார். அதுதானே மனித உரிமைச் சட்டம் மனிதர்களுக்கு மட்டுமே! மனிதர்கள் யார் என்பதை வரையறுக்குமா இந்தச் சட்டம்?.

Thursday 11 November 2010

சிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)

பயணம் என்றால் பெரும்பாலோனோருக்கு கொள்ளை பிரியம். எனது தந்தை ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க மாட்டார். ஆசிரியராக வேலை புரிந்தபோது அவர் சைக்கிளில்தான் வேலைக்கு செல்வார். அதனால் எண்பது வயதாகியும் கூட திடகாத்திரமாகவே இருக்கிறார். அவ்வபோது அவர் இறந்து போவதாக எனக்கு கெட்ட கனவு வந்து தொலைக்கும். அப்பொழுதெல்லாம் மனம் திடுக்கிட்டு எழும். சில நாட்கள் எல்லாம் கவலைகள் மனதை கொத்தி பிடுங்கும். எங்களை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க சொல்லும் அவரை நினைக்கும்போது பல நேரங்களில் மனது கவலைப்படும். உடல்நலனை பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டோமே என தோன்றும்.

அந்த சைக்கிள் பயணம் மட்டுமின்றி நடை பயணமும் அதிகம் மேற்கொண்டவர். ஓய்வு காலங்களில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதவர். வாகனம் வாங்கி தருகிறோம், அதில் சென்று வாருங்கள் என வாகனமும் வாங்கி தந்த பின்னரும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் என பல நேரங்களில் பேருந்தில் பயணம் புரிபவர். லண்டன், அமெரிக்கா என வருடம் இருமுறை பயணம் மேற்கொள்வார். வீட்டினில் தங்கவே மாட்டார். காலை எழுந்ததும் பூங்கா செல்கிறேன் என நடை பயணமும், மாலை வேறொரு பூங்கா செல்கிறேன் என நடை பயணமும் என அவரது வாழ்க்கை பயணங்களில் தான் மிகவும் அதிகமாக கழிந்து இருக்கிறது.

சில இடங்களுக்கு சென்றதுமே அலுப்பு தட்டி விடும் பலருக்கு. எப்படி அலைவது என அங்கலாய்ப்போர் பலர். எனது தந்தையை பார்த்தால் எப்படி இப்படி இவரால் அலைய முடிகிறது என ஆச்சர்யம் எழத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பயணம் மேற்கொண்ட அவரிடம் அவரது பயணம் பற்றி ஒருநாளேனும் ஒருநாள் அமர்ந்து கேட்டுவிடத்தான் ஆசை. நான் பல இடங்கள் பயணம் செய்தது உண்டு. அதை இணையதளங்களில் எழுதிய பின்னர் எழுத்தில் வைத்தது உண்டு. ஆனால் எத்தனை சுவராஸ்யமாக எழுதினேன் என எனக்கு தெரியாது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விதத்தில் ஒரு பயண கட்டுரை படித்தேன் சில ஆண்டுகள் முன்னர். அந்த பயண கட்டுரை படித்ததும், அந்த இடத்தினை சென்று பார்க்கும் ஆவல் மேலிட்டது. அடுத்த வருடமே பயணம் மேற்கொண்டோம்.

இவர் குழுமத்தில் முன்னர் எழுதினாலும், வலைப்பூவில் என்னைப் போலவே எழுதிய பல விசயங்களை சேகரித்து வருகிறார். இவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவரது மற்ற கட்டுரைகளும் குறைந்தவைகள் அல்ல. நிச்சயம் பல விசயங்களை இவரது பதிவின் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

அவருக்கு சிறந்த பதிவர் விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் வேறு யாருமல்ல மின்மினிபூச்சிகள் வலைப்பூவின் சொந்தக்காரரான ஷக்திப்ரபா. அவர் எழுதிய பயணக் கட்டுரை தங்கள் பார்வைக்கு.

திருவண்ணாமலை பற்றிய அற்புதமான பயணக் கட்டுரை.

1



3

4

5

Wednesday 10 November 2010

நுனிப்புல் பாகம் 2 நிறைவு பகுதி.

27. கனியும் குழந்தையும்

பாரதியின் அழுகைக்கு அர்த்தம் தெரியாமலேதான் இருந்தது. வாசனும் மாதவியும் பாரதியினை சமாதனப்படுத்தினார்கள். நாச்சியார் பாரதியினை அமரச் சொன்னார். மாதவி வாசனிடம் நாம் ஊரைச் சென்று பார்த்து வரலாம் என அழைத்தாள். வாசன் பாரதியை அங்கே தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் பாரதியையும் அழைத்தான். ஆனால் பாரதி தான் இங்கேயே இருப்பதாக கூறி அமர்ந்துவிட்டாள். 

இருவரும் சாத்திரம்பட்டியின் தெருக்களில் நடக்க ஆரம்பித்தார்கள். மிகவும் குறைந்தபட்ச வீடுகளே இருந்தன. தெருக்கள் மிகவும் சுத்தமாக இருந்தது. கிராமத்துக்கென ஒரே ஒரு கோவில் மட்டுமே இருந்தது. அந்த கோவிலுக்கு வைகுண்டநாதர் திருக்கோவில் என பெயரிட்டு இருந்தார்கள். ஊரைச் சுற்றி பெரிய வேலி அமைத்து இருந்தார்கள். வழியில் சென்றவர்கள் இவர்களைப் பார்த்து வெளியூரா எனக் கேட்டுவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்கள். மந்தையில் இப்போது இவர்களை வரவேற்ற ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. 

அவரிடம் வாசன் 'இந்த ஊருக்குப் பஸ் எல்லாம் வராதா' என்றான். 'பஸ் எல்லாம் எதுக்கு, நீங்க எப்படி வந்தீங்க' என்றார். 'ஊரில ரொம்ப பேரு இல்லையே' என்றான். 'தோட்டம் காடுகளில இருப்பாங்க' என்றார். 'படிக்கிறதுக்கு ஸ்கூல்' எனக் கேட்டபோது 'படிச்சி என்னத்த சாதிச்சிட்டீங்க, சம்பாத்தியத்தைப் பெரிசா நினைச்சி சாத்திரத்தை, கட்டுப்பாட்டை, ஒற்றுமையை, அன்பை தூக்கிப் போட்டுட்டீங்க' என்றார். 

'
வெளியூருக்கு எல்லாம் போய் வேலைப் பார்க்கமாட்டாங்களா?' என்றான் வாசன். 'வெளியூர் போனா இரண்டு மூணு நாளுல திரும்பனும் இல்லைன்னா போனதோட அப்படியே இருக்கனும். திரும்பி வந்தா விரட்டி விட்டுருவோம். இந்த மண்ணு காப்பாத்தாதுனு போனவங்கதானே அப்படியே போகட்டும்!' என்றார். 'கல்யாணம் பண்ணிட்டுப் போறவங்க' என்றான் வாசன். 'அவங்க வரலாம், போகலாம்!' என்றவரிடம் இவ்வளவு கட்டுப்பாடா? என்றான் வாசன். 'நிறையவே கட்டுப்பாடு இருக்கு' என்றார். 'ம்ம் நீங்க இந்த ஊர்த்தலைவரா' என்றான். 'நான் ஊர்க்காவல் காரன். ஊர்த்தலைவரைப் பாருங்க உங்களுக்கு இன்னும் சிலது சொல்வாரு, அதை நான் சொல்லக்கூடாது, அவர் நான் எதுவும் சொன்னேனா எனக் கேட்டா நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் சொல்லுங்க' என்றார். மாதவி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் 'யாரும் தட்டிக்கேட்கறது இல்லையா' என்றார். 'தட்டி வைச்சிருவோம்' என்றார் அவர். 

கிராமத்தலைவர் கோதண்டராமன் வீட்டினைக் காட்டிவிட்டு சென்று விட்டார். கோதண்டராமனுக்கு வயது அறுபது இருக்கும். இந்த இருவரையும் பார்த்து 'உங்களை மாதிரி இந்த ஊரில யாராவது சேர்ந்து திரிஞ்சா அடுத்த நிமிசமே ஊரைவிட்டு விரட்டிருவோம்' என்றார். வாசன் அதற்கு 'இவள் என் தாய்மாமன் மகள்' என்றான். 'யாரா இருந்தா என்ன, இந்த ஊருக்குக் கட்டுப்பாடுனு ஒண்ணு இருக்கு. நீங்க இங்க தங்குறமாதிரி இருந்தா இப்பவே சொல்லிருரேன் பொழுது சாயுறதுக்குள்ள ஊரைக் காலி பண்ணுங்க' என்றார். 

பெருமாள் தாத்தாவின் முப்பாட்டன்கள் பற்றி வாசன் சொன்னான். 'அதான் அவர் இங்கே வந்திருந்தாரே, இங்கே தங்கவிடாம விரட்டி அடிச்சிட்டோமே' என்றார். மாதவி குறுக்கிட்டு 'அவராத்தான் போயிருக்கார்' என்றாள். மாதவியை கோதண்டராமன் முறைத்தார். தனக்கு வேலை இருக்கிறது என கிளம்பினார்.

நாச்சியார் வீட்டிற்கு வந்தார்கள். 'வாங்கப்பா சாப்பிட போகலாம்' என நாச்சியார் மூவரையும் அழைத்துக்கொண்டு அச்சுதன் வீட்டிற்குச் சென்றார். அச்சுதன் அமைதியாகவே இருந்தார். மூவரும் சாப்பிட்டுவிட்டு அனந்தன் வீட்டிற்குச் சென்றார்கள். 'திருமால் இனி ஊருக்குள்ளேயே வரமுடியாதா' என்றான் வாசன். 'யார் என்ன சொன்னாங்க' என்றார் அனந்தன். வாசன் சொன்னதைக் கேட்டு அனந்தன் சிரித்தார். 'திருமால் வரலாம் போகலாம்' என்றார். 'இந்த ஊர் ரொம்ப வித்தியாசமா இருக்கு' என்றான் வாசன். 'பழைய விசயங்களிலே ஊறிப்போனவங்க மட்டும்தான் இங்கே இருக்க முடியும். ரொம்ப பேரு ஊரைவிட்டுப் போயிட்டாங்க, கொஞ்ச குடும்பங்கள்தான் இங்கே இருக்கு' என்றார். 'குளத்தூருக்கு வாங்க' என சொன்னான் வாசன். 'காலம் வரட்டும்' என்றார் அனந்தன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். 

வழியில் செல்லும்போது பாரதி எதுவுமே பேசாமல் வந்தாள். மாதவி, நாச்சியார் எதுவும் சொன்னார்களா என கேட்டபோது ம்ம் சொன்னார்கள் என்றார். இவங்கதான் உங்க சொந்தக்காரங்க என்றாள் மாதவி. எப்படி சொந்தமாகும் மாதவி என்று மட்டும் கூறிவிட்டு மேற்கொண்டு பாரதி பேசவில்லை. வாசன் இதில் தலையிடவில்லை. 

நாராயணபுரத்தில் தேவகியை அழைத்துக்கொண்டு குளத்தூர் வந்தடைந்தார்கள். தேவகி கிருஷ்ணதேவியைப் பார்க்க இயலவில்லை என கூறினாள். குளத்தூர் அடைந்ததும் பாரதி வீட்டில் சென்று பெரியவரிடம் பெரியப்பா என அழத்தொடங்கிவிட்டாள். 

பாரதி, நீ நாச்சியாரைப் பார்த்தியாம்மா? என்றார் பெரியவர். 'ஆமாம் பெரியப்பா, பார்த்தேன், உங்களைப் போலவே அவங்களும் கல்யாணமேப் பண்ணிக்காம வாழறாங்க'. 'ம்ம் கேள்விப்பட்டேன்மா'. 'பெரியப்பா நீங்க அவங்களைப் போய் பாருங்க' என்றாள் பாரதி. 'ம்ம்' என்றார் பெரியவர்.

மறுதினம் காலையில் வாசன் சோலையரசபுரத்தில் சோதிட சாஸ்திரி நம்பெருமாளைக் காணச் சென்றான், ஆனால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக சொன்னார்கள். வாசனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. அடுத்த தினங்களில் பாரதியும் கிருத்திகாவும் சென்னைக்கு கிளம்பினார்கள். பாரதி மரபியலில் கவனம் செலுத்த முடியாது போனாள். அதே வேளையில் ஒவ்வொரு நாளும் பெரியவரின் மனம் தனது கடந்தகாலத்தை அதிகமாகவே நினைக்க ஆரம்பித்தது. ஆனால் சாத்திரம்பட்டிக்குச் செல்ல மனம் இடம்தரவில்லை. பெரியவரை வாசன் ஒருமுறை அழைத்துப் பார்த்தான். ஆனால் முடியாது என கூறிவிட்டார். விடுமுறைக்கு வந்த மாதவியும் தேவகியும் விடுமுறை முடிந்து கிளம்பினார்கள். . பூங்கோதையும் ரோகிணியும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்கள்.

நாட்கள் ஓடின. ஊரில் நல்ல மழை பெய்து இருந்ததால் விவசாயம் மிகவும் செழிப்பாக இருந்தது. வாசன் வழக்கம்போல கதைகள் சொன்னான். சுமதி எப்போதும் போல் பள்ளிக்குச் சென்றாலும் திருவில்லிபுத்தூர் செல்வதையே தனது குறிக்கோளாய் கொண்டிருந்தாள். பூங்கோதைக்கு வளைகாப்பு குளத்தூரிலேதான் நடந்தது, இங்கேயேதான் இருப்பேன் என சொல்லியதன் காரணமாக அவளது பெற்றோர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. 

ஒவ்வொரு நெகாதம் செடியிலும் மூன்றே மூன்று காய்கள் மட்டுமே வந்தது. பல நாட்கள் பின்னர் நெகாதம் செடியில் காய்கள் கனியாக மாறியது. பெரியவரின் மனம் மிகவும் சந்தோசமாக இருந்தது. கனிகளையெல்லாம் ஒருநாள் காலையில் பறித்தார்கள். கனிகள் பறிக்கப்பட்ட அன்று மாலையே அனைத்துச் செடிகளும் வாடிப்போயின. செடிகள் வாடியதைக் கண்டதும் வாசன் பெரும் கலக்கம் அடைந்தான். ஒரு கனியை உடைத்துப் பார்த்தபோது ஐந்து விதைகள் இருந்தது. மற்றொரு கனியை உடைத்துப் பார்த்தபோது எட்டு விதைகள் மட்டுமே இருந்தது. மற்றொரு கனியில் விதைகளே இல்லை. வாசன் அந்த கனிகளை யாரையும் சாப்பிட அனுமதிக்கவில்லை. வாசன் தானே முன்நின்று அனைத்து கனிகளிலிருந்தும் விதைகளை சேகரிப்பதாக பெரியவரிடம் சொன்னான். 

அன்றே மாலையோடு மாலையாக அனைத்துச் செடிகளும் நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டன. அவைகளை பத்திரமாக பெரியவரின் வீட்டில் சேர்த்தான் வாசன். செடிகள் வாடியது கண்டு ரோகிணி மிகவும் யோசிக்கலானாள். அப்பொழுதே ரோகிணி பெரியவரிடம் சென்று ஆய்வகம் குறித்து மீண்டும் பேசினாள். அந்த நிமிடமே பெரியவர் ஆய்வகத்தையும் ஆஸ்ரமத்தையும் வாசனிடம் கட்டச் சொல்லி உத்தரவு போட்டார். ஆஸ்ரமம் நாளாகட்டும் என்றான் வாசன். ஆனால் பெரியவர் உடனே செய்யுமாறு சொன்னார். 

அன்று இரவே வலியின் காரணமாக பூங்கோதை நாணல்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். வாசன் கேசவனுடன் மருத்துவமனைக்குச் சென்று இருந்தான். உறவினர்களும் சென்று இருந்தார்கள். பூங்கோதையின் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி இருந்தார்கள். செடியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த கேசவன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். மருத்துவர்கள் பூங்கோதையை ஒரு அறைக்குள் அவசர அவசரமாக தள்ளு கட்டிலில் வைத்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தை அழும் சப்தம் கேட்டது. ஒரே ஒரு அழுகை சப்தம் மட்டுமே கேட்டது. 

அறையின் வெளியில் இருந்தவர்கள் பதட்டமடைந்தார்கள். மாப்பிள்ளை என் பூங்கோதை என்று கேசவன் வாசனின் தோள்மேல் சாய்ந்தான். வாசன் தைரியம் சொன்னான். மருத்துவர் அறையினில் இருந்து வெளியில் வந்தார். 

இவர்கள் கேட்கும் முன்னரே சுகப்பிரசவம்தான், இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு, தாயும் குழந்தைகளும் நலமாக இருக்காங்க, கொஞ்ச நேரத்துக்குப்பறம் நீங்கப் போய் பாருங்க என்று சொல்லிவிட்டு நடந்தார். கேசவன் மனம் சந்தோசத்தில் துள்ளியது. செடி தந்த பயம் தற்போது அறவே நீங்கியது. அனைவரும் அளவிலா சந்தோசம் அடைந்தார்கள். 

என்ன குழந்தைகளுனு சொல்லாம போய்ட்டாரே என அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு நினைவு வந்தது. அதற்குப்பெண் வந்த நர்ஸ் உள்ளே வாங்க இரட்டைப் பையன்க என சொல்லி அழைத்தார். மொத்தமாக அனைவரும் செல்லாமல் ஒருசிலர் மட்டுமே சென்றனர். 

பூங்கோதை என கேசவன் பூங்கோதையின் நெற்றியைத் தடவினான். சிரித்த முகத்துடன் கேசவனைப் பூங்கோதைப் பார்த்தாள். வயதான பாட்டி ஒருவர் நர்ஸிடம் ஒரே ஒரு அழுகை சத்தம்தான் கேட்டது எனக்கேட்டார். ம்ம் முதல்ல வந்த பையன் சிரிச்சமுகத்தோட வந்தான் அதோ அதுதான் முத பையன். நாங்க தட்டி தட்டி பார்த்தோம் அழலை. இரண்டாவது பையன்தான் அழுதான் அதுதான் இரண்டாவது பையன். அழனுமே எனப் பாட்டி முதல் குழந்தையைப் பார்த்தார். சிரித்த முகத்துடனே இருந்தது. பாட்டி குழந்தையின் கையை கிள்ளினார். ங என சத்தம் எழுப்பிவிட்டு மீண்டும் சிரித்தமுகம் காட்டியது அந்த குழந்தை. பாட்டி கையெடுத்து வணங்கினார். 

வாசன் குழந்தையைப் பார்க்க வந்தான். முதல் குழந்தை கண்கள் விழித்துப் பார்த்தது. தீட்சண்யமான கண்கள். பெருமாள் தாத்தாவோ என மனம் சொல்லியது. குழந்தை கண்கள் மூடி திறந்தது. வாசன் கைகள் தொட்டு வணங்கினான். பக்கத்து குழந்தையைப் பார்த்தான். கண்கள் விழித்துப் பார்த்தது. தீட்சண்யமான கண்கள். வாசன் மனம் நடுங்கியது. இரண்டு குழந்தைகளில் அத்தனை வித்தியாசம் பார்க்க இயலவில்லை. ஒரே மாதிரியாகவே இருந்தது. குழந்தையின் கைகள் தொட்டான், கண்கள் மூடி திறந்தது. அம்மா என சத்தம் போட வேண்டும் போலிருந்தது வாசனுக்கு. 

அந்த அறையைவிட்டு வெளியேறினான் வாசன். உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தான். கேசவனும் மற்றவர்களும் ஊருக்குக் கிளம்பினார்கள். பூங்கோதைக்குத் துணையாய் இருவர் மட்டும் தங்கினார்கள். வாசன் அவர்களுடன் வீடு வந்து சேர்ந்தான். 

விஷ்ணுப்பிரியனின் திட்டம் கேசவனுக்கும் பூங்கோதைக்கும் குழந்தையை உண்டாக்க வைப்பது. மாதவி வரைந்த படத்தை வைத்து சுபா அப்படித்தானே சொன்னார். திருமலையில் திருமால் சிரித்ததன் அர்த்தம், பெருமாள் தாத்தாவின் ஆசை வாசனின் மனதை என்னவோ செய்தது. ஒரே பெருமாள் உருவாக்க முனைந்ததில் இருவர் எப்படி உருவானார்கள் என வாசன் நினைக்கும்போதே மயக்கம் வரும்போல் இருந்தது. 

விஷ்ணுப்பிரியன் தனக்குச் சொல்லித்தந்த மரபியல் தத்துவம் ஞாபகத்துக்கு வந்தது. கருவானது உருவானபின்னர் அந்த கரு சிலவேளையில் இரண்டாக பிரிந்து இரண்டு கருக்களாக உருவாகும், அப்படி உருவாகினால் அது ஒரேமாதிரியான இரட்டைக்குழந்தைகளாக ஒரே மூலக்கருவிலிருந்து உருவாகும் எனவும், சில நேரங்களில் ஒரு விந்து ஒரு அண்ட செல்லுடனும், மற்றொரு விந்து மற்றொரு அண்ட செல்லுடன் இணைந்து இரண்டு வெவ்வேறு கருக்களாக உருவாகும்போது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு மூலக்கருவிலிருந்து பிறக்கும். அப்படியெனில் விஷ்ணுப்பிரியன் வைத்த ஒரே கரு இரண்டாகப் பிரிந்ததா? என எண்ணினான் வாசன். எந்த ஒரு பிரச்சினையில்லாமல் இரண்டு குழந்தைகளும் நன்றாக வளரவேண்டும் என வேண்டிக்கொண்டான். 

மருத்துவமனையில் இருந்து தாயும் சேய்களும் ஊருக்கு வந்தார்கள். திருமலையில் இருந்தும் பலர் வந்திருந்தனர். விஷ்ணுப்பிரியனும் வந்திருந்தார். 

குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா வைத்தனர். குழந்தைகள் பிறந்தபின்னர் பூங்கோதை வாசனிடம் பெயர் கேட்டிருந்தாள். வாசன் முதல் குழந்தைக்கு அஷ்டவதன் எனவும் இரண்டாவது குழந்தைக்கு ஐவரதன் எனவும் பெயரிடச் சொன்னான். அதையே மனதில் வைத்துக்கொண்ட பூங்கோதை கேசவனிடம் சொல்ல கேசவனும் சரியென சொன்னான். அந்த பெயரையே குழந்தைகளுக்கு வைத்தார்கள். 

அந்தவாரமே நெகாதம் விதைகளை நிலத்தில் விதைத்தார்கள். ரோகிணி நெகாதம் செடியினை வெட்டி நடச்சொன்னாள். அந்த பணியும் நடந்தேறியது. ஆய்வகம் கட்ட வேண்டி ஆயத்தங்கள் நடந்தது. ஆஸ்ரம பணியும் தொடங்கியது. மாதங்கள் ஓடின. வாசனால் ஊரைவிட்டு எங்குமே செல்ல இயலவில்லை. திருமால் சென்னைக்கு அழைத்து இருந்ததற்கு கூட செல்ல இயலாமல் இருந்தது. பெரியவர் சாத்திரம்பட்டி செல்லாமல் தட்டி கழித்தார். சாத்திரம்பட்டியிலிருந்து எவருமே வரவில்லை. குழந்தைகள் சாதாரண குழந்தைகளாகவே நன்றாக வளர்ந்தனர். பூங்கோதை பெருமகிழ்ச்சியில் இருந்தாள். 

ஆய்வகமும் ஆஸ்ரமமும் கட்டப்பட்டது. நெகாதம் விதைகள் மீண்டும் செடிகளாகி காய்கள் வரத் தொடங்கி இருந்தது. காய்கள் வர விதை எடுத்தக் காலகட்டமே நட்டுவைக்கப்பட்ட செடிகளும் எடுத்துக்கொண்டது குறித்து ரோகிணி ஆச்சர்யம் கொண்டாள். 

குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. இன்னும் மூன்று மாதத்தில் நெகாதம் செடியில் கனிகள் எல்லாம் வரும். மேலும் விதைகள் அதிகமாகவே கிடைக்கும். இம்முறை விநாயகம் வாங்கிய நிலங்கள் அனைத்திலும் நெகாதம் செடியை வளர்க்கலாம். அதனால் மற்ற விவசாயத்தை ஓரிரு மாதங்களுக்குள் முடித்துக்கொள்வதாக பெரியவர் சொன்னார். வளரும் இந்த செடியில் ஒரு சிறுபகுதியை ஆராய்ச்சிக்காக ரோகிணி எடுத்துக்கொள்ள பெரியவர் அனுமதி தந்து இருந்தார். 

மாதவி மூளை பற்றிய ஆராய்ச்சிக்காக சென்னையில் இருக்கும் திறமை வாய்ந்த மருத்துவர் ஒருவரின் தொடர்பினை பெற்றாள். பாரதி மரபியல் குறித்து மீண்டும் எழுதத் தொடங்கி இருந்தாள். அடுத்த வருடத்தில் இவர்களது மருத்துவபடிப்பு முடிந்துவிடும். இவர்கள் இருவரும் தங்களது விருப்பத்தில் வெற்றி பெறுவார்களா என்பது பின்னரே தெரியும். 

ஆஸ்ரமத்தில் குழந்தைகள் வந்து இணைவார்களா என்பதும், ரோகிணியின் ஆய்வு வெற்றிபெறுமா என்பது பின்னரே தெரியும். குளத்தூர் பெரிய எதிர்பார்ப்பை தனக்குள் மிக ஆழமாகவே விதைக்கத் தொடங்கியது. 

(
வளரும்)

நுனிப்புல் பாகம் - 3 இனி ஆக்ஸ்ட் 2012 ல் தொடரும். 

Tuesday 9 November 2010

கம்யூனிசமும் கருவாடும் - 6

கம்யூனிசமும் கருவாடும் 1

கம்யூனிசமும் கருவாடும் 2

கம்யூனிசமும் கருவாடும் 3

கம்யூனிசமும் கருவாடும் 4

கம்யூனிசமும் கருவாடும் 5

ஜெர்மன் மொழி கற்று கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் உண்டு. ஜெர்மன் மொழியில் பல விசேசங்கள் உண்டு என எனது கற்பனை அவ்வப்போது சொல்லிக்கொள்ளும். இப்படி ஒன்றை குறித்த கற்பனையானது உண்மைதனை ஒழித்துவிடும் அளவுக்கு வீரியம் மிக்கது என்பதை எவர் அறிவர்? ஆனால் கற்பனைகளில் உலகம் சஞ்சாரம் செய்வது உலகம் தோன்றிய முதல் நாளில் இருந்து இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை என ஒரு விசயம் குறிப்பிடப்பட்டாலும் கற்பனை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கம்யூனிசம் சித்தாந்தம் முதலில் ஜெர்மன் மொழியில் தான் வெளியிடப்பட்டது. மொழி பெயர்ப்பு என வரும்போது மூல நூலின் ஜீவன் தொலைந்து விடுவதாகவே கருதுவேன். இதன் காரணமாக மொழி பெயர்ப்பு நூல்களை படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம் என்னிடம் இருப்பதில்லை. மேலும் ஒரு விசயத்தை அப்படியே மொழி பெயர்ப்பதை காட்டிலும் சொல்லப்பட்ட விசயத்தை புரிந்து கொண்டு அவரவர் சிந்தனையின் பொருட்டு எழுதும் விசயங்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை இந்த கம்யூனிச சித்தாந்தத்தில் கைகொள்வது சரியாகுமா என தெரியாது எனினும் மொழிபெயர்ப்பு என்கிற அஸ்திரத்தின் மூலம் மார்க்சும், இங்கெல்சும் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை திரித்து விடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருக்கிறது. ஏதேனும் இந்த கட்டுரையில் தவறு நீங்கள் கண்டால் அது எனது தவறுதானே அன்றி நிச்சயம் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் அவர்களின் தவறு அல்ல என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன்.

முகவுரை

பொதுவாகவே முகவுரை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் சொல்ல வரும் விசயத்தின் முழு சாராம்சத்தையும் சில வரிகளில் சொல்லி முடித்து விட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடு தேவையில்லை எனினும் முகவுரை ஒரு குறிக்கோளினை தெள்ள தெளிவாக புரியும் வண்ணம் அமைந்துவிடுதல் மிகவும் சிறப்பு. அப்படித்தான் இங்க்கேல்சும், மார்க்சும் தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.

'ஒரு பூதம் மொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. அது கம்யூனிசம் எனும் பூதம். இந்த பூதத்தை முறியடித்து விட பழைய ஐரோப்பா மொத்த சக்திகளை தெய்வீக உடன்பாடு என சேர்ந்துள்ளது. அவை போப், ட்சார் , மேட்டேர்நிச், கிசாட், பிரான்சு பழமைவாதிகள், ஜெர்மன் காவல் மற்றும் உளவாளிகள்.'


பதவியில் இருக்க கூடியவர்கள் அவர்களுக்கு எதிர் அணியில் இருப்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என குற்றம் சுமத்தாமல் இருப்பது எதற்கு? கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகள் என சொல்வதையும், கம்யூனிஸ்ட்களின் எதிரிகளை எதிர்க்கும் நிலை எதிர் அணியில் இல்லாமலிருப்பது எதற்கு?.


இந்த விசயங்களிலிருந்து , இரண்டு விசயங்கள் புலப்படுகிறது


1. கம்யூனிசம் ஒரு சக்தி என்பதை அனைத்து ஐரோப்பிய சக்திகளும் அங்கீகரித்து உள்ளது 


2. கம்யூனிஸ்ட்கள் தங்களது எண்ணங்களை, குறிக்கோளினை, செயல்பாடுகளை உலகின் கவனத்திற்கு கொண்டு வருவது இதுதான் சிறந்த நேரம். சின்னஞ்சிறு கதை கொண்ட கம்யூனிச பூதத்தின் சித்தாந்தம் அந்த அமைப்பு பற்றி சந்திக்கும் தருணம் இது' 


 யார் இந்த ட்சார், மேட்டேர்நிச்,  கிசாட் .

 ட்சார் எனப்படுவர் கிறிஸ்துவம் அல்லாத ஆளுமைவாதிகள். இவர்கள் பல்கேரியா, போலந்து, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளில் அரசு அமைத்து கொண்டு ராஜ பரம்பரையாக வாழ்பவர்கள். இவர்கள் கம்யூனிசத்துக்கு கட்டாயம் எதிரியாகத்தானே இருக்க இயலும்! இந்த வார்த்தை கூட சீசர் எனப்படும் பேரரசர் பெயரிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மேட்டேர்நிச் என்பவர் ஆஸ்திரியாவில் வாழ்ந்த ஒரு அரசர். அவர் ஒரு ராஜதந்திரி என அழைக்கப்பட்டவர். நெப்போலியனுடன் இணக்கம் கொண்டிருந்தவர். இவர் கம்யூனிசத்துக்கு எதிரானவர் என குறிப்பிட காரணம் இவரின் ராஜ தந்திர செயல்கள். ஆனால் இந்த கம்யூனிச சித்தாந்தம் வெளியிடப்பட்ட ஆண்டு ஆஸ்திரிய போராளிகளால் அரசவையினை துறக்க வேண்டி வந்தது.

கிசாட் பிரான்சு நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர். மிகவும் திறமை வாயந்தவர் எனினும் இவரது செயல்பாடுகள் மக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்த முகவுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது என்னவெனில் அரச பரம்பரை மற்றும் தனி மனித ஆட்சி என்பது முற்றிலும் ஒழித்திட கம்யூனிசம் வழி செய்யும் என்பதுதான்.

ஆனால் நடந்தது என்ன? கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடத்தினார்கள்  ஸ்டாலின் மற்றும் மாவோ ஜேடாங் போன்ற மாபெரும் தலைவர்கள் என போற்றப்படுபவர்கள். ஸ்டாலின் என்பவரால் கம்யூனிசம் நிச்சயமாக ஒரு பெரும் சக்தி என நினைத்து கொண்டிருந்தோருக்கு அவரது அடக்குமுறை செயல்பாட்டினை அப்படியே செயல்படுத்துவது என்பது குதிரை கொம்பாகத்தான் இருந்தது. ஸ்டாலின் இல்லையென்றால் ரஷ்யா சின்னாபின்னமாகி என்றோ போயிருக்கும் என்போர் உளர்.

உணவுக்கே தட்டழியும் மனிதர்களிடம் உணவுக்கு வழி செய்ய காட்டப்படும் வழிகள் எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொண்டு செய்வார்கள். அடிமைகளாக வாழ பழகி கொண்ட மக்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அன்றைய ரஷ்யா இருந்தது. அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். மாபெரும் வெற்றி பெற்ற ஸ்டாலினை பார்த்து சூடு போட்ட நாடுகள் பல உண்டு. ஆனால் என்னவொரு துரதிர்ஷ்டம், தழும்புகள் மட்டுமே பிறநாடுகளுக்கு மிச்சம். அந்த தழும்பு இப்போது ரஷ்யாவுக்கும் சொந்தம் எனும்போது வருத்தம் மேலிடத்தான் செய்கிறது.

அடுத்து முதல் அத்தியாயம் தொழிலாளிகளும், முதலாளிகளும்.  மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் எதற்கு அவசியம் என்பதற்கான விசயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் எழுதியதாக இருக்கும். கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படை விசயமாகவே இந்த அத்தியாயம் பார்க்கப்படுகிறது.

(தொடரும்)

நுனிப்புல் (பாகம் 2) 26

25. சாத்திரம்பட்டி ஒரு சரித்திரம்

அன்று இரவே வாசனிடம் மாதவி சாத்திரம்பட்டி செல்வது குறித்துக் கேட்டாள். வாசன் ஆவலுடன் சரியென சொன்னான். மாதவி பாரதிக்கு தகவல் தெரிவித்தாள். பாரதி பெரியவரிடம் சொன்னபோது அங்கெல்லாம் எதுக்கும்மா என்றார். மாதவி அழைத்தாள் என சொன்னவள் வாசன் செல்கிறான் எனச் சொன்னதும் ம்ம் சரிம்மா, வாசன் கூடவே இருந்து, கவனமா போய்ட்டு வாம்மா என்று மட்டும் சொன்னார். அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தவர் நாராயணா உன்னோட வேலையை நான் நல்லாதானே செஞ்சேன், செடியெல்லாம் நல்லாதானே வருது என மனதில் சொல்லிக்கொண்டு கண்கள் கலங்கினார். 

பாரதியிடம், கிருத்திகா தன்னை பூங்கோதை வரச்சொன்னதாகவும் அதனால் அவளுடன் இருக்கப்போவதாக கூறிவிட்டாள். மாதவி, தேவகியை நாராயணபுரத்தில் தங்கிக்கொள்ளச் சொன்னவள் அங்கே கிருஷ்ணதேவி என்பவரைப் பார்க்குமாறு கூறினாள். தாங்கள் திரும்பி வரும்போது தேவகியை உடன் அழைத்துச் செல்வதாக சொன்னதும் தேவகி சரியென சொன்னாள்.

அடுத்தநாள் காலையில் நால்வரும் கிளம்பினார்கள். நாராயணபுரத்தில் கல்லூரி தோழி பிரேமாவின் வீட்டிற்குச் சென்றார்கள். ஏழ்மை நிலையில் இருக்கும் பிரேமா குடும்பத்தினர் சற்றும் இவர்களை எதிர்பார்க்கவில்லை. எனினும் வீட்டில் நல்ல வரவேற்பு தந்தார்கள். தேவகி மட்டும் நாராயணபுரத்தில் தங்கிக்கொண்டாள். மூவர் மட்டும் சாத்திரம்பட்டிக்குக் கிளம்பினார்கள். மாதவியிடம் பிரேமா குடும்பத்தினருக்கு உதவக்கூடாதா என வாசன் கேட்டான். கல்லூரியில் அவளுக்குப் படிக்க உதவியாக இருக்கிறோம் மாமா என்று மட்டுமே முடித்துக்கொண்டாள் மாதவி. பாரதி அமைதியாகவே வந்தாள். 

பேருந்து பிடித்து ஒரு மிகச்சிறிய நகரத்தை அடைந்தபோது மணி காலை பத்தாகி இருந்தது. அங்கே சாத்திரம்பட்டி பற்றி கேட்டபோது ஒரு பாதையை காட்டி ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும், பேருந்து வசதி கிடையாது என சொன்னார்கள். அங்கே இருந்த மிதி வண்டிக்கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டபோது அந்த மிதிவண்டிக்கடைக்காரர் வாசன் மற்றும் இருவரையும் பார்த்துவிட்டு இரண்டு மிதிவண்டிகள் தந்தார். தம்பி இதுதான் என்னோட பிழைப்பு என சொல்லிக்கொண்டு பெயரை எழுதிக்கொண்டார். மிதிவண்டிகளைப் பத்திரமா கொண்டு வந்துருவோம் என வாசன் அவருக்கு நம்பிக்கை வருமாறு சொன்னான். 

நான் மாமா கூட வரேன், நீ சைக்கிள் ஓட்டிட்டு வா பாரதிஎன கண்சிமிட்டிக் கொண்டே சொன்னாள் மாதவி. மாதவி எனக்கு சைக்கிள் மறந்துப் போச்சு, ஹோண்டா வாடகைக்கு கிடைச்சா வாசன் பார்த்துட்டு வரட்டும்என்றாள் பாரதி. நீங்க இரண்டு பேரும் அந்த சைக்கிளுல வாங்கஎன்றான் வாசன். மாமா நீங்க பாரதியை உட்கார வைச்சிட்டு வாங்கஎன்ற மாதவியைப் பார்த்து நான் உன்னோட வரேன் மாதவிஎன்றாள் பாரதி. 

இல்லை இல்லை நீ மாமா கூட வா ப்ளீஸ், எனக்கும் சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாகுது, பேலன்ஸ் தவறி கீழே விழுந்துட்டா பிரச்சினைஎன்றாள் மாதவி. அவர்கள் பேசிக்கொண்டே நிற்பதைப் பார்த்தவர்களில் ஒருவர் 'என்னம்மா உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதா' எனச் சிரித்தார். ம்ம் தெரியாது நீங்க வேணும்னா ஓட்டிட்டு வரீங்களாஎன்றாள் மாதவி. எனக்கு வேலை இருக்கும்மாஎன கேட்டவர் நிற்காமல் சென்றுவிட்டார். 

கடைசியில் பாரதி வாசனுடன் செல்வது என முடிவானது. மாதவி சைக்கிளை நன்றாகவே ஓட்டினாள். மாதவி நீ நல்லாத்தானே சைக்கிள் ஓட்டுறேஎன்றாள் பாரதி. மாமாவை நான் ஒருதரம் சைக்கிள் போட்டியிலே ஜெயிச்சிருக்கேன் பாரதி, நீதான் சைக்கிள் பழக வானு சொன்னா வீட்டுக்குள்ள ஓடிப்போயிருவ, நீச்சலாவது தெரியுமா பாரதிஎன்றாள் மாதவி. 

மாமா என்ன பேசாம வரீங்க

சாத்திரம்பட்டிக்கு போகனும்னு உனக்கு எதுக்கு தோணிச்சி?’ என்றான் வாசன். பாரதிதான் போகலாம்னு சொன்னா, அவளோட சொந்தக்காரங்களைப் பார்க்கனுமாம்' என்றாள் மாதவி. 

எங்க சொந்தக்காரங்களா?’ பாரதி புரியாமல் கேட்டாள். வெயில் அடித்ததால் அனைவருக்கும் வியர்க்க ஆரம்பித்தது. சற்று தொலைவு சென்றதும் பாரதி நீ என் சைக்கிளுல வா, மாமா கஷ்டப்படறார்என மாதவி சொன்னாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை, பாரதி என்கூடவே வரட்டும், பாரதி நீ மாறி உட்கார நினைச்சா உட்கார்ந்துக்கோ’ என்றான் வாசன்.  ‘பேலன்ஸ் தவறாதுல்ல மாதவிஎன்றாள் பாரதி சிரித்தவாறு. 'அதெல்லாம் தவறாது' மாதவி சொன்னதும் பாரதி மாறிக்கொண்டாள். என்னோட சொந்தக்காரங்க யாரு?’ என்றாள் பாரதி. 'அங்கே போனதும் சொல்றேன்' என மாதவி சொன்னாள். 

சாத்திரம்பட்டிக்குள் சென்றார்கள். இவர்கள் மூவரையும் அந்த ஊரில் இருந்த மந்தையில் இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஒருவர் இவர்களை நோக்கி வந்தார். வாங்க, எங்கிருந்து வரீங்க, யாரைப் பார்க்கனும்? என்றார். பாரதியும் மாதவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க வாசன் அச்சுதன் அவரைப் பார்க்கனும்என்றான். ஓ ஜோசியம் பார்க்க வந்திருக்கீங்களா அவர் பார்க்கறதை நிறுத்தி பல வருசங்கள் ஆச்சு. இந்த ஊரில அவங்க அண்ணன் அனந்தன் அப்படிங்கிறவரும் இருக்கார் அவரும் ஜோசியம் பார்க்கறது இல்லை. ம்ம் நீங்க எதுக்கும் இப்படியே கொஞ்ச தூரம் போனா கடவுட்துறை அப்படிங்கிற ஊரு வரும் அங்கே நம்பெருமாள்னு ஒருத்தர் பார்ப்பார் அங்கே போங்கஎன்றதும் நாங்க ஜோசியம் பார்க்க வரலை, அச்சுதனைப் பார்க்கனும்என முடித்தான் வாசன். 

மூவரும், அச்சுதன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அச்சுதன் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயதானவராக காணப்பட்டார். வீட்டில் இருந்த படங்களைப் பார்த்தபோது அவருக்கு குழந்தைகள் இருப்பது தெரிந்து கொள்ள முடிந்தது. அச்சுதன் இவர்களை அழைத்து உள்ளே அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்களுக்கு சாப்பாடு தயார் செய்யுமாறு கூறியவர் தானே எழுந்து சென்று மோர் ஊற்றிக்கொண்டு வந்து தந்தார். முதல்ல குடிங்க அப்புறம் பேசுவோம் என சொன்னார். 

மோர் குடித்தப் பின்னர் வாசன் பேசினான். இவதான் சோலையரசபுரம் குளத்தூர் மாதவிஎன்றான் வாசன். அச்சுதன் கைகள் எடுத்து வணங்கினார். மாதவி, அச்சுதன் வணங்கியதைக் கண்டு தானும் வணங்கினாள். 

இவளுக்குத்தான் நீங்க கடைசியா ஜாதகம் எழுதினீங்கஎன்றான் வாசன். அப்படின்னா நீ வாசன் தானேஎன்றார் அவர். வாசன் ம்என்றான். அனந்தன் என்னோட அண்ணன், அவர் கடைசியா உன்னோட ஜாதகத்தை எழுதினார்என்றார் மேலும். இப்போ அவர் எங்கே இருக்கார்?’ என்றான் வாசன். இங்கிருந்து மூணாவது வீடுஎன்றார். பாரதி அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தாள். 

குளத்தூர் பெருமாள் தாத்தா இறந்துட்டார், கேள்விப்பட்டீங்களாஎன்றான் வாசன். யாரும் தகவல் சொல்லலையே, அந்த விநாயகம் கூட தகவல் சொல்ல மறந்துட்டாரோ, அவர் இந்த ஊருக்கு வரட்டும், அன்னைக்குத்தான் இருக்குஎன்றார். நீங்களாவது குளத்தூர் வந்துருக்கலாமேஎன்றான் வாசன். நாங்க குளத்தூர் வரதா, அவர் இங்கே வரதா, வாசன் இந்த பொண்ணு யாரு, விநாயகத்தோட தம்பி பொண்ணாஎன்றார் அச்சுதன். பாரதி வேகமாக ஆம் என்பது போல் தலையாட்டினார். மாதவி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். 

பெரியவருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்என்றான் வாசன். அச்சுதன் கோபம் கொள்வதைக் கண்டான் வாசன். மாதவி உங்க மக இப்போ எங்கே இருக்காங்கஎன்றாள். ஏம்மா எனக்கு மக இருக்கா அப்படிங்கிறது கூட தெரிஞ்சிருக்கு, எங்கே இருக்கானு தெரியாதாஎன்றார் அவர். போட்டோவுல பார்த்தேன்என சுவரில் மாட்டியிருந்த படத்தைக் காட்டி மனதுக்குள் பெருமூச்சு விட்டாள் மாதவி. அவ இப்போ குடும்பத்தோட நாராயணபுரத்துலதான் இருக்காஎனச் சொன்னவர் வாசனிடம் திரும்பினார். யார் யாருக்கு சம்பந்தம்னு நீ கேட்டியில்லஎன்றார். ம்என்றான் வாசன். எழுந்திருச்சி வா காட்டுரேன்என எழுந்தார். அலமேலு, இப்போ வந்துருரோம்என வெளியேறினார். மாதவி வாசனிடம் என்ன மாமா, பிரச்சினை புரியாம இப்படி பண்றீங்கஎன்றாள். என்ன பிரச்சினை?’ என்றான் வாசன். மாதவிஎன அச்சுதன் சற்று கோபத்துடனே மாதவியின் பெயரை சொல்லித் திரும்பினார். மாதவி தலையை குனிந்தாள். பேசாம வாஎன்றார். பயமா இருக்கு வாசன்என்றாள் பாரதி. 

அந்தத் தெருவின் கடைக்கோடிக்கு வந்தார் அச்சுதன். நாச்சியார், நாச்சியார்என ஒரு வீட்டின் வெளியில் இருந்து சத்தமிட்டார். உள்ளே இருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னண்ணேஎன வந்தவர் இவர்களை நோக்கி வணங்கியவாறே உள்ளே வாங்கப்பா என்றார். போங்க உள்ளேஎன்றார் அச்சுதன். 

வீட்டில் உள்ளே நுழைந்ததும் பெரியவர் விநாயகம்  இளைஞராக இருந்தபோது எடுத்த படம் சுவரில் மாட்டப்பட்டு இருந்ததைக் கண்டான் வாசன். பாரதி அந்த படத்தைக் கண்டு பெரியப்பாஎன்றாள். ம்ம் உன்னோட பெரியப்பாதான் அதுஎன்றார் கோபமாக அச்சுதன். அனந்தன் அப்போது மெதுவாக வீட்டின் உள்ளே நுழைந்தார். தம்பி, குளத்தூரில இருந்து வந்துட்டாங்களாஎன்றார் அனந்தன். விநாயகம் வரலை, வாசனும் மாதவியும் வந்திருக்காங்கஎன்றார் அச்சுதன். கூட யாருஎன்றார் அனந்தன். விநாயகத்தோட தம்பி பொண்ணு பாரதிஎன்றார் அச்சுதன். திருமால் கடிதம் போட்டிருந்தான் பாரதிஎன்றார் அனந்தன். 

அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்த வாசன் சென்னையில இருக்கிற திருமாலாஎன்றான். வாசன், உனக்குத் தெரியாதா? அவருக்கு எத்தனை திருமால் இருக்க முடியும்என்றார் அச்சுதன். பாரதி மாதவியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். பயப்படாதே பாரதி, தைரியமா இருஎன்றாள் மாதவி. எல்லோரும் உட்காருங்கஎன போர்வையை விரித்தார் அனந்தன். 

இந்தாங்கப்பா குடிங்கஎன சர்பத் கலக்கிக் கொண்டு வந்து தந்தார் நாச்சியார். வேண்டாம் அம்மா, நாங்க இப்போதான் மாமா வீட்டில மோர் குடிச்சோம்என்றாள் மாதவி. வாசன் மாதவியை நோக்கி மாமா வீடா என்பது போல் பார்த்தான். குடிங்கனு அன்பா கொடுக்கிறாங்க, ஏன் வேணாம்னு சொல்றீங்கஎன்றார் அச்சுதன். பாரதி வேகமாக வாங்கிக்கொண்டாள். வாசனும் வாங்கிக்கொண்டான். மாதவி வேண்டாம் என மறுத்தாள். பிடிவாதம் பண்றியா மாதவிஎன்றார் அச்சுதன். இப்போதானே குடிச்சேன், திரும்பிக் குடிக்கச் சொன்னா எப்படிஎன்றாள் மாதவி. 

இதேதான் இதேதான் இருபத்தி ஐஞ்சி வருசமா சொல்றாஎன அச்சுதன் சுவரில் தனது கையை அறைந்தார். அதைப் பார்த்த பாரதி தனது கையில் இருந்த டம்ளரை நழுவவிட்டாள். சர்பத் எல்லாம் கொட்டியது. பரவாயில்லைப்பா நான் துடைச்சிருரேன், இந்தாப்பா இந்த சர்பத்தை குடிப்பாஎன நாச்சியார் பாரதியிடம் தந்தார். தம்பி என்ன இது, நம்மளைப் பார்க்க வந்தவங்ககிட்ட இப்படியா நடந்துக்குறதுஎன்றார் அனந்தன்.

வாசன், நம்பெருமாள் சொல்லிதானே இங்கே வந்துருக்கேஎன்றார் அச்சுதன் மிகவும் வேகமாய். ஆமா அவர் சொல்லிதான் தெரியும், ஆனா இவங்க தான் இன்னைக்குப் போகலாம்னு சொன்னாங்க, இல்லைண்ணா நானும் பெரியவரும் ஒருநாள் வரதா இருந்தோம்என்றான் வாசன். போ அதை முதல்லச் செய், உடனே அவரைக் கூட்டிட்டு வாஎன்றார் அச்சுதன். தம்பி, திருமால் கிட்டதான் திருமலையில வைச்சி பேசியிருக்காரே விநாயகம், பின்ன ஏன் அவர் இங்க வரனும்னு நினைக்கிறேஎன்றார் அனந்தன். திருமால் போட்ட கடிதத்த வைச்சி எல்லாம் சொல்லமுடியாது, அவர் இங்கே நேரா வரனும்என்றார் அச்சுதன். இருபத்தி அஞ்சி வருசமா வராதவர் இனிமே வந்து என்ன செய்யப் போறஎன அனந்தன் சொன்னதும் நாச்சியார் கண்கள் கலங்கியது. நாச்சியார் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாதவி, அம்மா என நாச்சியார் கைகளைப் பிடித்தாள். முன்னமே வந்துருக்கக் கூடாதா மாதவிஎன நாச்சியார் மாதவியிடம் சொன்னார். மாதவிக்கு கஷ்டமாக இருந்தது. வாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாரதி தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். பாரதியை பேசுமாறு சைகை காட்டினாள் மாதவி. 

பெரியப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்என்றாள் பாரதி. புரியலை உனக்கு, உன் அப்பா சேகர் சொல்லலையாஎன அச்சுதன் பாரதியிடம் கோபமாக சொன்னார். அண்ணா, அந்த பொண்ணு மேல ஏன் கோபப்படறண்ணாஎன்றார் நாச்சியார். சொல்லுங்க அச்சுதன் சார், உங்களுக்கும் எங்களுக்கும் அப்படி என்னதான் சம்பந்தம்?’ என்றாள் பாரதி மிகவும் தைரியமாய். 

பாரதி உனக்கு இவ்வளவு தைரியமா?’ என்றார் அச்சுதன். பாரதி பேசாம இருஎன்றான் வாசன். இருங்க வாசன், எனக்குத் தெரிஞ்சாகனும் இவர் ஏன் இவ்வளவு கோபமா இருக்காருண்ணு, என் பெரியப்பா இவங்களுக்கு என்ன செஞ்சார்னு, சொல்லுங்க சார்என்றாள் பாரதி. குரலில் கலக்கம் தெரிந்தது. தம்பி நீ நடந்துக்கிறது முறையில்லைஎன அச்சுதனிடம் அனந்தன் சொல்லியபடி அவர்கள் மூவரையும் சாப்பிட அச்சுதன் வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு அச்சுதனனை அழைத்துக்கொண்டு வெளியேறினார். நாச்சியார் கலங்கிய கண்களுடன் பாரதியினை வணங்கினார். அவதான் சாத்திரம்பட்டி போகலாம்னு சொன்னாம்மாஎன்றாள் மாதவி. நாச்சியார் பாரதியின் கைகளைப் பிடித்தார். பாரதி அழுதுவிட்டாள். 

(
தொடரும்)