Sunday 21 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 7

பகுதி - 6  

7 வஞ்சகர்கள் நிறைந்த உலகம்

பெரியவரிடம் வாசன் சாரங்கனிடம் சென்று எதுவும் விசாரிக்க வேண்டாம் என சொன்னான். பெரியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வேண்டாம் என சம்மதம் சொல்லிவிட்டார். முத்துராசு தான் இந்த உலகம் வஞ்சகர்களால் நிறைந்தது என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். பெரியவர் சற்று அதட்டியதும் அமைதி ஆனார்.

இந்த உலகம் வஞ்சகர்களால் மட்டுமே நிறைந்தது என குறிப்பிட இயலாது. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள தனது சந்ததிகள் நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட நலன் என்று ஒன்று இல்லாமல் இல்லை.

பெரியவர் வாசனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். வாசன் நாம் எதுவும் தவறு செய்யவில்லை என சொன்னபோது முத்துராசு அவர்களை அடித்து விரட்டியது அபாயகரமானது என்றே குறிப்பிட்டார்.

வாசன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மாதவி வாசனிடம் பேசினாள்.

''மாமா நீங்க பாதுகாப்பாக இருங்க, எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு தெரியாது''

''என்ன சொல்ற மாதவி''

''உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு மாமா''

''மாதவி...''

''நீங்க வீட்டுல இருங்க, இன்னைக்கு எங்கையும் போக வேணாம்''

''ம்ம் சரி மாதவி, எந்த வீட்டில் இருந்தாலும் சரிதானே''

''ம்ம்''

முத்துராசுவிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல் தான் தோட்டம் செல்வதாக சென்றார். வாசன் சற்று கோபமாக சொன்னதும் சரி தம்பி நான் வீடு போறேன் என போனவர் வாசன் சற்று மறைந்ததும் தோட்டம் நோக்கி சென்றார். வாசன் நேராக கேசவன் வீட்டிற்குப் போனான்.

''எப்படி இருக்க பூங்கோதை''

''நல்லா இருக்கேண்ணா''

''பையனுங்க என்ன பண்றாங்க''

''இப்போதான் தூங்கினாங்க''

''கேசவன் எங்க''

''மாரிமுத்து தோட்டம் போறேன்னு போனார்ணா, நான் போய் காபி கொண்டு வரேன்ணா''

''வேணாம் பூங்கோதை, நெகாதம் செடி வாடிப்போனது பத்திக் கேள்விப்பட்டதான''

''ஆமாணா, ரோகிணி  கூட போன் பண்ணிக் கேட்டா. எனக்கும் ஆச்சரியமா இருக்குணா''

''மேற்கொண்டு படிக்கலையா பூங்கோதை''

''இல்லைணா, இவங்களை வளர்த்துப் பெரியவங்க ஆக்கணும், பெருமாள் தாத்தா அவரோட முந்தைய நினைவுகளோட இருப்பாராண்ணா''

''உனக்கு குழந்தைகளில ஏதேனும் வித்தியாசம் தெரியுதா பூங்கோதை''

''அண்ணா ஒரு நிமிஷம் காபி போட்டு வரேன். மோராவது குடிங்க''

''ம்ம்''

வாசன் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்தான். அதில் இரு குழந்தை விழித்துப் பார்த்தது. அதே பெருமாள் தாத்தாவின் கண்கள். இரண்டு கைகளையும் வாசனை நோக்கி நீட்டியது. வாசன் கைகளை நீட்டினான். அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. வாசன் விடுவிக்க முயன்றான். குழந்தை சிரித்தது. வாசன் ஆச்சரியம் அடைந்தான். பூங்கோதை அங்கே வந்து கொண்டு இருந்தாள். குழந்தை கைகளை விடுத்து கண்ணை மூடியது.

''காபி''

''பூங்கோதை, நீ இந்த குழந்தைகளில் எதுவுமே வித்தியாசம் பார்க்கலையா''

''இல்லண்ணா''

''பெருமாள் தாத்தா...''

''என்னண்ணா, நீங்க எதுவும் பார்த்தீங்களா''

''என்னோட கையை இறுகப் பிடிச்சான்''

''அண்ணா''

''பூங்கோதை, பெருமாள் தாத்தா கரு தான் இரண்டாக பிரிந்து இரட்டை குழந்தையாகப் பிறந்து இருக்கு, உனக்கும் கேசவனுக்கும் உருவான கரு எதுவும் இல்லை''

''அண்ணா, டாக்டர் விஷ்ணுப்பிரியன் அப்படி சொன்னாரா''

''மாதவிதான் சொன்னா''

வாசன் மாதவிக்கு போன்  பண்ணி அங்கு என்ன நடந்தது என சொல்லிக்கொண்டு இருந்தபோது கேசவன் வீட்டிற்குள் வந்தான்.

''மாப்பிள்ளை நீ இங்கதான் இருக்கியா''

''என்னாச்சு''

''முத்துராசுவை மூணு பேரு வெட்டிக்கொல்ல வந்தானுங்க, மாரிமுத்து நான், வீரப்பசாமி, வேல்முருகன் எல்லாம் அந்த நேரத்தில நம்ம பெரியவர் தோட்டம் வழியா வந்தோம். பெரிய கலவரம் ஆகிருச்சி. அடிச்சி அவனுகளை போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுப் போயிட்டு இருக்கோம். நீ வீட்டுக்குப் போயிட்டன்னு ராசு மாமா சொன்னார். கொஞ்சம் பணம் எடுக்கத்தான் வந்தேன், நீ இங்கேயே இரு. உன்னை கொல்லத்தான்  வந்து இருக்கானுங்க மாப்பிள்ளை''

''நானும் வரேன்''

''சொன்னா கேளு மாப்பிளை''

வாசனுக்கு வியர்த்துக் கொட்டியது. யார் இந்த மனிதர்கள். முத்துராசு சொன்னது போல வஞ்சம் நிறைந்த மனிதர்கள். முத்துராசு எதற்கு தோட்டம் போனார் என்றே வாசன் யோசித்தான். வாசன் தனது வீடு நோக்கி நடந்தான்.

கேசவனும் பிறரும் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தார்கள். அவர்களை விசாரித்தபோது சாரங்கன்  பெயரைச் சொன்னார்கள். பெரியவர் மிகவும் கோபம் கொண்டவர் ஆனார். சாரங்கனுக்கு அழைத்து பேசியபோது விநாயகம் நீ தேவையில்லாம பேசறதை நிறுத்து எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

காவல் அதிகாரிகள் சாரங்கன் வீடு சென்றார்கள். சாரங்கனிடம் விசாரித்தபோது தான் அவ்வாறு செய்ய சொல்லவில்லை என அடம்பிடித்தார். அவர்கள் தப்பிக்க தன்னை சொல்வதாக சொன்னார். காவல் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துவிட்டு திரும்பினார்கள்.

''சாரங்கா, என்ன இது''

''நான் நிலம் விலை பேச சொன்னேன். ஆனா கொல்ல  சொல்லலை''

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இன்றி வீடு திரும்பினார். இரவெல்லாம் பெரியவருக்கு யோசனையாக இருந்தது.

குழந்தைப் பிடித்த தனது கைகளைப் பார்த்துக் கொண்டான் வாசன்

(தொடரும்)


Sunday 14 June 2015

நமது திண்ணை ஜூன் மாத இணைய சிற்றிதழ்

விளம்பரம் இல்லை என்றால் ஒரு பொருளைப் பற்றிய விசயம் அறிந்து கொள்ள இயலாது என்பதுதான் இந்த உலகம் அறிந்த உண்மை. விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் பல விசயங்கள் மக்களைச்  சென்று அடையவில்லை. அதே விளம்பரங்கள் மக்களை வெறுப்பேற்று விடுகின்றன.

நமது திண்ணை இந்த ஜூன் மாத சிற்றிதழ் விளம்பரமே இல்லாமல் வெளிவந்தது. இன்றைய காலத்தில் போராட்டங்கள் விளம்பர யுக்தியாக மாறி வருகிறது. வளர்ந்து வரும் இணைய இதழுக்கு போதிய ஆதரவு மிகவும் அவசியம், அப்படி இல்லாதபட்சத்தில் ஒருவித வெறுமை தோன்றும்.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் மிகவும் அருமையாக இருக்கிறது. ஒரு பிராமணன் சாதி இல்லை என்று சொன்னால் சாதிக்கு எதிராகப் போராடினால் அவரை சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடாது என்பதுதான் இந்த தொடர் மூலம் நான் உணர்ந்து கொண்டது. நிறைய விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த தொடர் அமைவது மிகவும் சிறப்பு.

ஒரு சிறிய பறவை குறித்த பாடல் பரவசம் உமாகிரிஷ் அவர்களின் பார்வையில் மிகவும் பரவசமாக இருக்கிறது இந்த பாடல் எனது விருப்பப்பாடலும் கூட. பொதுவாக கவிஞர்கள்  என்ன மனநிலையில் எதை கற்பனை பண்ணி எழுதுவார்கள் என தெரியாதபோது இதுபோன்று விளக்கம் சொல்லும் பார்வை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது, இதை இசைக்கும் சேர்த்துக் குறிப்பிடலாம்.

நிஷா அவர்களின் வெட்கம் மற்றும் மரணம் கவிதை ஒரு பெண்ணின் மனநிலையை வெகு சிறப்பாக விவரிக்கிறது. வார்த்தைகள் மிகவும் சரளமாக வந்து இருப்பதே நமக்கு பயணம் செய்ய ஏதுவாக  இருக்கிறது.

நச்சுனு சிரிங்க என்பதை நச்சுனு சிந்திக்க எனும் வகையில் அமைந்து இருக்கிறது. அதுவும் சதுரம் வட்டம் குறித்து திட்டுவது வெகு சிறப்பு. ஒவ்வொரு போட்டோக்களும் ஒரு கதை சொல்லும் வண்ணம் அமைந்து இருக்கிறது. எனது போட்டோ வரவில்லையே என ஆதங்கப்படும் அளவுக்கு இந்த பகுதி அமைந்து இருப்பது வெகு சிறப்பு.

கனல் கத்தியின் பச்சை உலகம் அருமை. ட்விட்டரில் எழுதப்படும் ஒவ்வொருவரின் எழுத்தை சிறப்பிக்கும் வண்ணம் இங்கு சேர்க்கப்பட்டு அழகுப் பார்க்கப்படுகிறது. ஓவியம் இன்னும் சிறப்பாக இந்த இதழில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை நல்லதொரு நாவல் என நம்பிக்கை கொண்டு வாங்கலாம். கார்த்திக் அவர்களின் இந்த நூல் குறித்த விமர்சனம் சிறப்பு. குருடன் பார்த்த யானை. நல்ல உவமை.

ஸ்ரீ அவர்களின் கோடைகால வெயிலும் ஆரோக்கியமும் கட்டுரை மிகவும் அவசியமான ஒன்று. மிகவும் பயனுள்ள கட்டுரை. இவர் ஒரு மருத்துவர் என்பதால் இந்த நமது திண்ணை சிற்றிதழில் மருத்துவ குறிப்புகள் நோய் குறிப்புகள் குறித்து தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். நமது இணைய இதழின் ஆசிரியர் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

திண்ணைப் பாடகர் இன்னும் கேட்கவில்லை. மழலைப் பட்டாளங்கள் வெகு சிறப்பு. வழக்கம் போல நண்பர் ரவி அவர்களின் கொத்தவரைக்காய் புதுவிதம். சமைத்தால்தானே இது எல்லாம் தெரியும். டெல்லி கணேஷ் பற்றிய பல விபரங்கள் சிறப்பாகவே இருந்தது. ஆன்டீராய்ட் பற்றிய நாகராஜ் அவர்களின் குறிப்புகள் பலருக்கு உதவும். இறுதியில் ஆசிரியரின் சுருளிராஜன் பற்றிய தகவல்கள்.

இம்முறை சில பிரச்சினைகளைத் தாண்டி வெளிவந்து இருக்கிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இன்னும் பல அரிய  விசயங்களுடன் இந்த நமது திண்ணை இதழ் சிறப்பாகத் தொடர வேண்டும்.

நன்றி.

Thursday 11 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 6

நுனிப்புல் பாகம் 3 - 5

6. இருவழிப் பாதை

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும். இறப்பு என்று ஒன்று இருந்தால் பிறப்பு ஒன்று இருக்கும். ஆனால் இதுவரை எவரது இறப்புமே மீண்டும் ஒரு  பிறப்பாக வந்தது என நிரூபிக்கப்படவில்லை. தனது முன் ஜென்ம வினை என்று சொல்கிறார்கள், தான் முன் ஜென்மத்தில் இது போன்று இருந்ததாக ஒரு சிலர் குறிப்பிட்டு இருப்பதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை.

பாரதி வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். இந்த திருமாலுக்கு எப்படி முக்காலமும் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனை அவளில் ஓடிக்கொண்டு இருந்தது. கிருத்திகா உடன் வந்தால் நன்றாகவே இருக்கும் என எண்ணினாள். ஒரு முறை வாசன் கூட மாதவி முக்காலமும் அறிந்தவள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறாள். இதை எல்லாம் மாதவியிடத்து  கேட்டு ஊர்ஜிதம் பண்ணிட தோணவில்லை.

சாத்திரம்பட்டிக்குச்  சென்றபோது நாச்சியார் அம்மாள் முன்னமே வந்து இருக்கலாமே மாதவி என்று சொன்னபோது பாரதிக்குப் புரியாமல் தான் இருந்தது. அதுகுறித்து இதுவரை என்ன ஏது  என விசாரிக்கத் தோணவில்லை.

மாதவியை அழைத்துப் பேசலாம் என எண்ணினாள், அதற்குள் பாரதியின் போன்  ஒலித்தது. நாம் எவரை மனதார நினைக்கிறோமோ அவர் நமக்கு உடனடியாக ஏதேனும் ஒரு ரூபத்தில் காட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் தான். போனினை  எடுத்தாள்.

''என்ன பாரதி, என்னைப் பத்தி நினைச்சிட்டு இருந்தியா?, எதையும் நிறைய யோசிக்காத, சுந்தரன் எப்படி இருக்கான்''

''மாதவி, உன்னைப்பத்தி நினைச்சிட்டு இருந்தேனு எப்படி உனக்குத் தெரியும்''

''ஒரு யூகத்தில் சொன்னதுதான், உண்மையிலேயே என்னைப் பத்திதான் நினைச்சிட்டு இருந்தியா, இல்லை திருமால் பத்தி கூடவா?''

''மாதவி, உனக்கு முக்காலமும் தெரியுமா''

''எக்காலமும் எனக்குத் தெரியாது பாரதி, சும்மா வாசன் மாமாதான் எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு இருப்பாரு. அப்படித்  தெரிஞ்சி இருந்தா எதுக்கு நான் மெடிசின் படிக்கப் போறேன். பேசாம ஒரு ஜோசியம் பார்க்கிற வேலையை எடுத்து இருக்கமாட்டேன். உட்கார்ந்த இடத்திலேயே நல்ல சம்பளம். யாரோ பிரச்சினைக்கு ஏதோ  ஒரு பரிகாரம். எந்தக் கவலையும் இல்லை பாரு. அப்படியே மாதவியம்மன் அப்படின்னு ஒரு சின்ன கோவில் கட்டி ஊரு உலகம் எல்லாம் தெரிஞ்சிருக்கமாட்டேன்''

''மாதவி, நீ கிண்டல் பண்றேன்னு தெரியுது, ஆனா அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு கஷ்டம். ஒருவேளை யாருமே ஜோசியம் பார்க்க வரலைன்னா, சாமி கும்பிட வரலைன்னா உன்னோட நிலை கஷ்டம்தானே.''

''எல்லாம் எனக்குத் தெரிஞ்சி இருக்கறப்ப அப்படி ஒரு கஷ்டம் ஏன்  வரும், சொல்லு பாரதி''

''மாதவி, உனக்கு இந்த உலகத்தில் நடக்கிறது நடந்தது நடக்கப்போறது எல்லாம் தெரியுமா''

''எதுவுமே தெரியாது பாரதி. சும்மா எதேச்சையா போன்  பண்ணினேன் அதுவும் நீ சுந்தரன் விஷயம் சொன்னதில் இருந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அவன் உன்னை கேலி கிண்டல் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு''

''பார்த்தியா, உனக்கு எல்லாம் தெரியும். அவன் என்னை கேலி கிண்டல் பண்ணினான்''

''அவன்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ ஒண்ணும்  அவனை  சொல்லாத''

''மாதவி, சாத்திரம்பட்டி பத்தி கொஞ்சம் சொல்றியா''

''எனக்கு என்ன தெரியும், நீயும்தான் கூட வந்த, உனக்கு விஷயம் தெரியுமா நம்ம ஊருல அதான் எங்க குளத்தூர்ல சின்னப் பிரச்சினை. ரெண்டு பேரை அடிச்சிட்டாங்க. எனக்கு என்னமோ அது பெரிய கலவரத்தில போய்  முடியும்னு தோணுது. வாசன் மாமாகிட்ட எச்சரிச்சி வைக்கணும்''

''யாரு சொன்னாங்க இதை''

''என்னோட அம்மாதான்''

''பொய் எல்லாம் பேசுவியா மாதவி''

''தாராளமா  பேசுவேன், பொய் தேவையெனில் உண்மையாகும். சுந்தரன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ திருமாலைப் பார்க்கறப்போ கூட கிருத்திகா இல்லைன்னா அருண் இவங்களோட போ. அவரு இந்தவாட்டி உக்கிரமான நிலையில் இருப்பார். சாந்தரூபம்னு நினைச்சியில! அப்புறம் முக்கியமான ஒண்ணு சும்மா ஆர் என் ஏ னு  இருக்காம  ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி நிறைய படி''

''எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சி. வாசன் சொன்னது மாதிரி உனக்கு எல்லாமே தெரியும். நீ தெரியாத மாதிரி நடிக்கிற. திருமால் ஐயா உக்கிரமான நிலை அப்படின்னு உனக்கு எப்படித் தெரியும். அவர் மட்டும் அப்படி இருக்கட்டும். ஆமா அது எப்படி நீ இது படினு  சொல்ற''

''மறந்துட்டியா, நீதான் ஆர் என் ஏ  உலகம் எல்லாம் சொல்லி இருக்க. நீ போய்ட்டு வந்துட்டு பேசு''

''ம்ம்''

இந்த மாதவி புரியாத புதிராக தென்பட்டாள். சாதாரணமாகவே தென்படும் இவளில் எப்படி இத்தனை ஆற்றல் இருக்க இயலும். அதுவும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி சொல்கிறாள். ஆர் என் ஏ தன்னை டி என் ஏ வாக மாற்றும் வல்லமை இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ்க்கு உண்டு. ஒற்றையாகவோ, இரட்டையாகவோ மாற்றி வைக்கும். இந்த வினையூக்கி மட்டும் இல்லையெனில் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் உருவாகி இருக்கவே இருக்காது.

வாசனின் வைரஸ் கவிதைப் போல இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் தான் உயிரின் மூலமாக இருக்கக் கூடுமோ. முதலில் ஆர் என் ஏ  உருவாகி  அதில் இருந்து டி என் ஏ உருவாகி பின்னர் டி என் ஏ  மூலம் ஆர் என் ஏ உருவாக்கி இந்த உயிரினங்கள் இருந்து இருக்குமோ.

பாரதியை நட்சத்திரங்களை எண்ண  விடாமல் யோசனை பண்ண வைத்துவிட்டாள்  மாதவி. இந்த உலகில் எதுவுமே முன்னோக்கி சென்றது பின்னோக்கி வராது என பாரதி நினைக்கும்போதே கடல் அலைகள் பற்றிய எண்ணம் வந்து சேர்ந்தது.

கிருத்திகாவிடம் மீண்டும் போன்  பண்ணி கேட்டபோது திருமாலைப் பார்க்க உடன் வருகிறேன் என்று சொன்னாள். அன்று இரவு அம்மாவிடம் அப்பாவிடம் சொன்னபோது எதுக்கும் அருண் நீயும் போயிட்டு வா என்று சொன்னார்கள். அருண் மறுபதில் சொல்லாமல் சரி என்றான். பாரதிக்கு சற்று பயமாக இருந்தது. கிருத்திகா வருகிறாள் என்று சொன்னதும்தான் அருண் நான் எதுக்கு என ஒதுங்கிக் கொண்டான்.

இந்த மாதவி பற்றி அறிய தேவகிதான் சரியான வழி என பாரதி யோசித்துக் கொண்டே அன்று உறங்கினாள். கனவில் மாதவிதான் பலமுறை வந்து போனாள். என்றுமே கனவில் வராத மாதவி இன்று மட்டும் ஏன்  என்றே உறக்கத்தின் ஊடே விழித்த வண்ணம் இருந்தாள் . திருமால் ஐயாவைப் பார்த்துதான் ஆக வேண்டுமா எனும் எண்ணம் வேறு வந்து சேர்ந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணவும்  செய்தாள்.

ஒரு வார்த்தை கூட தன்னிடம் மாதவி கனவில் பேசவில்லை என்று எண்ணினாள்  பாரதி. கிருத்திகாவும் பாரதியும் திருமாலைச் சந்திக்கப் போனார்கள்.

முதலில் வந்தபோது என்ன நிலையோ அதே நிலை. திருமால் வருவார் என வீட்டின் வெளியில் இம்முறை காத்து இருந்தார்கள்.

(தொடரும்)




Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Wednesday 3 June 2015

தமிழ் மின்னிதழ் - 2 லீனா மணிமேகலை ஆண்டாளின் தோழிகள்

கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் இங்கே கவிதை என எழுதப்பட்டு இருக்கும் பகுதியில் சென்று பார்த்தால் நான் சொல்வதன் உண்மை என்னவென அறிந்து கொள்வீர்கள். கவிதை எனக்கு எழுதத் தெரியாது என தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவர் சொன்னதால் வெறும் வார்த்தைகள் என தலைப்பிட்டே கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் கவிதைகளைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா என்றுத் தெரியாமல் பல கவிதைகளைப் போற்றி பாராட்டி வருகிறேன். இந்த தமிழ் மின்னிதழில் லீனா மணிமேகலை கவிதைகள் என சில வாசித்தேன். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். கேள்விப்பட்டதோடு அப்படியே இருக்கட்டும். சர்ச்ச்சைக்குரியவர்கள் இவ்வுலகில் அதிகம் கவனம் ஈர்த்துவிடுகிறார்கள். பிறர் சொல்லத் தயங்குவதை சொல்பவர்கள் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள்.

10. லீனா மணிமேகலை கவிதைகள்

நட்சத்திர தூசி.

நீ எனக்கு யாரடா! இந்த கவிதையை எப்படி வேண்டுமெனினும் சிலாகித்துக் கொள்ளுங்கள். ஒரு அன்னியோன்யமான அன்பை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திரைச்சீலை அன்பை விலக்குவதில்லை. கவிதைத்துவம் என்பது இதுதான். வார்த்தைகளில் காட்சி அமைப்பு ஏற்படுத்தி விடுவது.

அடுத்து இதுவும் ஒரு நிலை சொல்லிச் செல்கிறது. இடைவெளி குறித்தும் ஆயுள் ஒரு இரண்டக  நிலை. திரையரங்கு இருளில் இருந்து காட்சிப்படுத்தபடுகிறது. பூச்சியின் ரீங்காரம் என திரை இரைச்சல் என நிறைய யோசித்தோ யோசிக்காமலோ கவிதை வரிகள் வந்து விடுகின்றன.

11. குவியொளி - மகி

ஒரு விஷயத்தை ஒரு வார்த்தையில் சொல்ல இயலும். ஒரு வாக்கியமாக சொல்ல இயலும். ஒரு கதையாக சொல்ல இயலும். ஆத்திசூடி எழுதப்பட்ட வரலாறு சுவாரஸ்யம். அதுபோல ஒரு வாக்கியமாக பல குவிந்து இங்கே ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. உடன்பாடு, உடன்படு.

12. ச. முத்துவேல் கவிதைகள்

இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன. இரும்புக்கரம் என்பது ஒரு ஆதிக்க சக்தியின் வெறியாட்டத்தை கவிதை விளக்கம் சொல்கிறது. சில வரிகள் அதன் வீரியத்தை உணர்த்தும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. காதலிப்பது சற்று வித்தியாச கோணம். கலவி உரையாடல்கள் சற்று வித்தியாசம்தான். தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பினும் நல்ல கவிதைதான்.

13. மணிவண்ணன் - சமூகப் புரட்சியின் கலைஞன்  முரளிகண்ணன்

ஒருவரைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எனக்கேட்டால் இப்படித்தான் எழுத வேண்டும் என இந்த கட்டுரையை தைரியமாகக் குறிப்பிடலாம். இத்தனை விரிவாக இத்தனைத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதற்கு நன்றிகள். எனக்கு மணிவண்ணன் அவர்களை மிகவும் பிடிக்கும். அமைதிப்படை படம் பார்த்தபோது வியந்தது உண்டு. எனக்கு ஒரு படைப்பாளியாக அவர் இருந்து இருக்க வேண்டும் என்றே எண்ணியது உண்டு. அவரின் அரசியல் நிலைப்பாடு, எண்ணம் என பல விசயங்கள் அறிய முடிந்தது.

14. நிழலோவியம் - புதியவன்

ரசித்து மகிழலாம். தெளிவாக இருக்கிறது.

15. அப்பா - செந்தில்சிபி

அப்பாவுக்கு நான் எதுவுமே செய்யலை. கொள்ளி  மட்டும் தான் வைச்சேன். அப்பா பற்றி எழுதிக் கொண்டே இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அழகிய உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார். அவரது வாழ்க்கையை சொன்னதில் இருந்து செந்தில் சார் வாழ்வும் அறிய முடிகிறது. மிகவும் நேசித்த பதிவு.

16. ராஜா சந்திரசேகர் கவிதைகள்.

கவிதை என்றால் இவரது கவிதைதான் அதி அற்புதம் என சொல்லலாம். எழுத்தாளர் நர்சிம் அவர்கள் குறிப்பிட்ட கவிஞர் இவர்தான் என்றே நினைக்கிறேன். இவரது கவிதைகள் பல வாசித்து இருக்கிறேன். தீட்டப்பட்ட வைரம் போல ஜொலி ஜொலிக்கும். முதல் கவிதை ஒரு நிமிடம் நம்மை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்யும். ஏம்மா இப்படி செஞ்சிட்ட? பிரமாதம் குறுங்கவிதைகள்.

17. நா ராஜூ கவிதைகள்

வார்த்தைகளுடன் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்து இருந்தது. சில வார்த்தைகள் இலக்கியத்தன்மையைத் தந்துவிடும் வல்லமை கொண்டவை. தமிழுக்கு உண்டான சிறப்பு. இவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளை கண்டு கொண்டது போல் இருந்தது.

18. ஆண்டாளின் தோழிகள் - சங்கர் கிருஷ்ணன்.

பிரமாதம். திருப்பாவை குறித்து எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார். ஏதோ  பாடல் என்று நான் இருக்க ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார். நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய பார்வை வெகு சிறப்பு. நிறைய ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த பதிவு இது.

(தொடரும்)

நுனிப்புல் பாகம் 3 - 5

பகுதி - 4

5. வாசனின் விவசாயம் 

வாசன் பெரியவரை சந்திக்கச்  சென்றான். அவரிடம் சாத்திரம்பட்டி பற்றி கேட்டுக்கொள்ள அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதை கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். பெரியவரின் வீட்டில் வேறு இருவர் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே செல்வதா, வேண்டாமா என முடிவு செய்வதற்குள் பெரியவர் வாசனை அழைத்தார். 

''வாசா உள்ளே வாப்பா''

அழைத்தபின்னர் செல்லாமல் இருப்பது சரியில்லை என உள்ளே சென்றான் வாசன். அங்கிருந்த அந்த வேறு இரண்டு  நபர்கள் வாசன் அப்படிங்கிறது நீதானா என்பது போல பார்த்தார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் வாசன் அமர்ந்தான். 

''தம்பி, என்ன வேலை பார்க்கிறீங்க''

நல்ல முறுக்கலான மீசை வைத்து பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்ட நடுத்தர வயது மிக்க ஒருவர் கேட்டார். 

''விவசாயம் பார்க்கிறேன்''

''விவசாயமா, தம்பிக்கு படிப்பு ஏறலையோ?''

அந்த கேள்வியை வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புன்முறுவல் செய்தான். அதற்குள் பெரியவர் குறுக்கிட்டார். 

''ரொம்ப நல்லா படிக்கிற பையன், பன்னிரண்டாவதுல கூட ஆயிரத்து நூறு மார்க்கு. விவசாயம் மட்டுமே பார்ப்பேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டார்''

''யாருயா இவனுக்கு பொண்ணு கொடுப்பா''

மெல்லிய தேகம் கொண்ட சற்றே வயதான மற்றொரு நபர் சொன்னதைக் கேட்டு வாசன் மேலும் சிரித்துக் கொண்டான். 

''பொண்ணு எல்லாம் நிச்சயம் பண்ற அளவுல இருக்கு. அதுவும் டாக்டர் படிக்கிற பொண்ணு'' 

பெரியவர் சொன்னதும்தான் தாமதம் இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

''பொருந்தாத மாட்டைப் பூட்டினா வெள்ளாமை வீடு வந்து சேராது. படிக்காத இவனுக்கு டாக்டர் பொண்ணு, அந்த பொண்ணு கொடுக்கிற இளிச்சவாயன் யாருன்னு பார்க்கணுமே''

சிரிப்பை நிறுத்தி இப்படி உதிர்த்த வார்த்தைகள் அவரைப்போலவே சற்று முரட்டுத்தனமாக இருந்தது. 

''இந்த ஊரில ஒரு டிராக்டர் காணோம், எல்லாம் மாட்டு உழவுதானா, மாட்டுப்பயக  இருக்கிற ஊருல மாடுதான் உழவு போல''

அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

''ஐயா, நான் கிளம்புறேன், பிறகு பேசலாம்''

வாசன் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்னர் பெரியவர் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியேப் போகச் சொன்னார். 

''தராதரம் தெரியாம உங்களை இங்க உட்கார வைச்சிப் பேசினேனே அது என்னோட தப்பு. இந்த வாசன் தான் ஊர்த்தலைவர். நீங்க என்ன வியாபாரம் பார்க்க நினைச்சாலும் இவரோட அனுமதி இல்லாம பண்ணக்கூடாது. உங்க புத்தி எல்லாம் சரியில்லை. கிளம்புங்க''

பெரியவரின் சற்று கோபமான குரல் கண்டு அவர்கள் ஏதும் திடுக்கிடவில்லை. 

''அப்படி யாரு இருக்கானு கேட்கத்தான் கேட்டோம். இவர் இப்படியே விவசாயம் பண்ணினா டாக்டர் பொண்ணு விவசாயம் பார்க்குமா, இல்லை இவரோட பிள்ளைகதான்  விவசாயம் பாக்குமா. டாக்டர் பிள்ளைக மாடு மேய்க்கிறத உங்க ஊருல ஏத்துக்குவாங்கள. ரொம்ப கோபபட்டு பேசுறீரு. ஏன்டா வாசு நீ இத்தனை மார்க்கு வாங்கி ஒரு டாக்டர், எஞ்சின்னீர் படிக்காம இப்படி வேகாத  வெயிலுல விவசாயம் பாக்கற, உனக்கு புத்தி ஏதும் கழண்டு கீழ விழுந்துருச்சா, ஒரு அம்பது ஏக்கர் நிலத்தை இந்த ஊருல வளைச்சி போட்டுரலாம்னு தான் வந்தோம். நீ அனுமதி கொடுக்கலன்னா என்ன ஊருல இருக்கவங்ககிட்ட பேசி வாங்கிக்கிறோம்''

பெரியவர் எழுந்தார். 

''இங்க யாரும் உங்களுக்கு நிலம் தர மாட்டாங்க, நீங்க கிளம்பிப் போகலாம்''

''உங்களைப் பார்க்கச் சொன்னாங்கனு வந்தா, மரியாதை இல்லாமல் நடந்துக்கிறீரு. இதே ஊருக்குள்ள  நாங்க வரத்தான் போறோம். உங்களை என்ன பண்றோம்னு பாரு. வாடா போலாம்''

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்கள். வாசன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான். 

''உங்களுக்கு என்னப்  பிரச்சினை''

''ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னப் போல முட்டாப்பயக எல்லாம் விவசாயம் பாக்கத்தான் லாயக்கு. நீ எல்லாம் எப்படிடா ஊர்த்தலைவர் ஆன. உனக்குப் படிப்பு வரலைதானே. ஆயிரம் இரண்டாயிரம் மார்க்குன்னு பொய் சொல்றியா''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கே வர அவர்கள் பேசியது அவர் காதில் விழ சரியாக இருந்தது. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அடி அடித்தார். வாசன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. என்ன ஏது  என விசாரிக்காமல் அவர்கள் இருவரையும் பலமாகத் தாக்கினார்கள். வாசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

''இவனுங்க ஊர் ஊராப் போய்  ஆளை ஏமாத்துற கூட்டம், திருட்டுப் பயல்க''

''என்ன அண்ணே சொல்றீங்க''

''டேய் அவனுகளை அந்த மரத்தில கட்டிப்போடு, தோலை உரிச்சிருறேன். இவனுக பத்தி உனக்குத் தெரியாது. இவனுக கூட்டம் பெரிசு''

சத்தம் கேட்டு பெரியவர் வெளியே வந்துப் பார்த்தார். 

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, யார் இப்படி இவங்களை அடிச்சது. முத்துராசு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி வைச்சிருக்க''

''ஐயா, இவனுக பொல்லாதவனுக. ஊருக்குள்ள குடியேறி அந்த ஊரையே உலையில் போட்டுருவானுக''

''அப்படி எங்க நடந்திச்சி. உனக்கு எப்படி விபரம் தெரியும்''

''நீங்க சாரங்கன் கிட்ட பேசிப் பாருங்க ஐயா''

''அவன்கிட்டயா?''

''ஆமாயா, சாரங்கனை கூப்பிட்டு பேசுங்க''

முத்துராசு சொன்னது கேட்டு பெரியவர் குழப்பம் கொண்டார். அதற்குள் வாசன் அவர்கள் இருவரிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான். 

''எங்களை அடிச்ச இந்த ஊரை கொளுத்தாம விடமாட்டோம்'' என வலியின் ஊடே அவர்கள் பேசியது முத்துராசுவிற்கு பெரும் எரிச்சல் உண்டாக்கியது. அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து முரட்டுத்தோற்றம் கொண்டவரின் வாயில் சரியாக எறிந்தார். வாசன் அதிர்ச்சி அடைந்தான். 

''அண்ணே, போலிஸ் கேஸ் ஆகிரப்போதுண்ணே, விடுண்ணே''

''ராசு, என்ன பழக்கம் இது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. நாங்க எல்லாம் இங்க நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா'' பெரியவர் சற்று கோபமாகவே கண்டித்தார். 

''ஐயா, நீங்க இப்படி வரவங்க எல்லாரையும் மன்னிச்சி அனுப்புங்க, அவனுக இப்படியே வந்து வந்து போகட்டும். அன்னைக்கு அப்படித்தான் திருட வந்தவங்களை மன்னிச்சி அனுப்பினீங்க''

''ராசு''

பெரியவர் சப்தம் இட்டதும் முத்துராசு அமைதி ஆனார். 

''இங்க நடந்தது எல்லாம் உங்களை எச்சரிக்கத்தான். மற்றபடி உங்க மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. ராசு, இவங்களை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ''

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். வாசன் தான் அவர்களை அழைத்துச் செல்வதாக அவர்களை அழைத்தான். அவர்கள் தாங்களாகவே செல்வதாக தடுமாறிச் சென்றார்கள். கூட்டம் அங்கிருந்து கலைந்தது. 

முத்துராசு தோட்டம் செல்வதாக கூறிக்கொண்டு அவர்களை வேறு வழி சென்று மடக்கினார். 

''பழி வாங்கணும்னு  இந்தப் பக்கம் இனிமே வந்த, நான் என்ன பண்ணுவேன்னு இப்ப காட்டினது விட பலமடங்கு இருக்கும். நீ நாராயணபுரத்தில பண்ணினது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. சாரங்கன்கிட்ட சொல்லி வை. உன் கூட்டத்து ஆளுக எவனாச்சும் இந்த ஊருல குடி இருக்க வந்து குடி கெடுக்க நினைச்சான், நான் மனுசனா இருக்கமாட்டேன்''

எதுவும் சொல்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். 

வாசன் தன்  தோட்ட  வேலைகள் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். வாசனுக்கு விவசாயம் பார்ப்பது அத்தனை தவறான காரியமா என யோசிக்க வேண்டும் போல் இருந்தது. என் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பார்களா? இந்த சுந்தரன் விவசாயம் பார்க்காமல் வெளியூர் போய் விட்டானே. மாதவி எதற்கு மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். 

ஊரில் விவசாயம் பார்த்த கொஞ்சம் சிலரில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களாகவே  அவனுக்குத் தெரிந்து கொண்டு இருந்தது. கிராமங்கள் விவசாயம் நம்பி இருக்கிறது. விவசாயம் மழையை நம்பி இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை எழுப்ப, வீடுகள் கட்டி விற்க ஒரு கூட்டம் இன்று அடி வாங்கியவர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறது. 

முத்தையா தனது நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு தனது பிள்ளைகளிடம் சென்று இருக்கப்போவதாக நேற்றுதான் மந்தையில் கூறிக்கொண்டு இருந்தார். இவரிடம் அதிகம் பணம் கொடுத்து அந்த நிலத்தை இவர்கள் கையகப்படுத்திக் கொண்டால் என்ன ஆவது என வாசன் யோசித்தான். அடிபட்டு போனவர்கள் நிச்சயம் திரும்புவார்கள். 

''என்ன யோசனை, மந்தையில் இன்னைக்கு என்ன பெரிய கலாட்டாவா. அந்த முத்துராசு கையை வைச்சிட்டு சும்மா இருக்கமாட்டானா''

தனது அப்பாவின் குரல் கேட்டு எழுந்தான் வாசன். 

''கிராமத்து நிலத்தை வாங்கி, அதில வீடு கட்டுற கூட்டம் பிரச்சினைப்பா''

''நானும் இப்பதான் கேள்விபடறேன். நீ அதை நினைச்சி வருத்தப்படாதே''

அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் வாசனுக்கு இதமாக இருந்தன. அப்போது முத்துராசு வாசனை அழைக்க வந்தார். 

''வாசா, வா நாம போய்  அந்த சாரங்கனை என்ன ஏதுனு  விசாரிச்சிட்டு வருவோம்''

''இப்ப வேணாம்ணே, அவர்தானு  நமக்கு எப்படி தெரியும்''

''சொன்னாக் கேளு, பெரியவர்தான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னார்''

வாசனுக்கு சாரங்கனை சந்திக்கப் போவதா வேண்டாமா என யோசனையாக இருந்தது. 

(தொடரும்) 




Sunday 24 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா

7. இந்து அடையாளமிலி - ரோஸாவசந்த் ( கருத்து)

பல விசயங்களை அலசி ஆராய்ந்து இருக்கும் கட்டுரை என்றால் மிகையாகாது. இணைய பரபரப்பு என்று தொடங்கி நாவல், இந்து, இந்துத்வா என பயணித்தபோது எனக்கு சற்று குழப்பம் நேர்ந்தது உண்மை. எப்போது ஒருவர் தெளிவு இல்லையோ அப்போது ஒருவர் குழப்பம் அடைவார். எனக்கு இந்த கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தத் தெளிவு இல்லை என்பதால் எனக்கு குழப்பம் நேர்ந்தது உண்மை. கட்டுரையை இரண்டு முறை வாசித்தபின்னர் ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது. மாதொரு பாகன் நாவல் குறித்தும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், அதன் பின்னணி அலசி இருக்கிறது. சாதியம் குறித்த விசயங்களை திரைப்படம், படைப்புகள் எப்படி கையாண்டன என்பது என்னைப்போன்று  அறியாமையில் இருப்போருக்கு  வைக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு படைப்பை எப்படி எல்லாம் சாதகமானவர்கள், பாதகமானவர்கள் கையாள்வார்கள் என்பது இந்த மாதொருபாகன் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தனில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் காலப்போக்கில் இதை எல்லாம் மறந்து போவார்கள். அப்படி ஒரு பரபரப்பு என்பது கால காலத்திற்கும் நிலைத்து நிற்காவண்ணம் இயங்குவதுதான் ஊடகத்துறை. இந்துத்வர்கள், யார் இவர்கள், எப்படி இந்த விஷயத்தை நோக்கிச்  சென்றார்கள் எனத் தொடங்கி இந்து, காந்தி என பெரும் சுற்று சுற்று வந்து இருக்கிறது இந்த கட்டுரை.

இந்துத்வா என்றால் என்ன? எனக்கு இதுபற்றி தெரியாது என்பதால் சற்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்துத்வா என்ற வார்த்தை 1923ம் ஆண்டு விநாயக் தாமோதர் சவார்கர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 1989ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கையாக எடுத்துக்கொள்ள , விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாம் இதை முன்னிறுத்தி செயல்பட்டன.

According to the Oxford English Dictionary, Hindutva is an ideology seeking to establish the hegemony of Hindus and the Hindu way of life. According to theEncyclopedia Britannica, "Hindutva ('Hindu-ness'), [is] an ideology that sought to define Indian culture in terms of Hindu values". (விக்கிப்பீடியா) 

மேற்குறிப்பிட்ட விஷயத்தை மொழிப்பெயர்ப்பு செய்தால் இந்து யார் எனும் கேள்வி வரும்? இந்து என்றால் என்ன? இந்துக்களின் மதிப்பு என்ன? Hindu as one who was born of Hindu parents and regarded India as his motherland as well as holy land. (விக்கிப்பீடியா) 

இப்போது எனக்கு எனது தாத்தாவிற்கு தாத்தா அதற்கு முன்னர் இருந்த தாத்தா பாட்டி எல்லாம் இந்துக்களாக இருந்தார்களா எனும் கேள்வி எழுகிறது. எனது சந்தத்தி இந்தியாவை விட்டு வெளியேறியதால் அவர்கள் தாய்நாடு வேறு என்பதால் இந்து எனும் அடையாளம் இழந்து விடுகிறார்களா? எதுவும் எனக்குத் தெரியாது. இந்துத்வா என்றால் ஒரே குலம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அதாவது சமஸ்கிருத கலாச்சாரம். அப்படிப்  பார்த்தால் இந்தியாவின் நிலை என்ன ஆவது. இந்த கட்டுரை இந்துத்துவம் பற்றி நிறைய எழுத்தாளர்களின் நிலை, மற்றும் ஒரு நாவல் குறித்து எழும் சூழல் விவரிக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கருத்து சமூக கருத்தாக முடியாது. அதே வேளையில் தனிப்பட்ட மனிதனின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் எனில் அது சமூக கருத்து ஆகும்.

எந்த ஒரு இந்துவும் தன்னை இந்துத்வா என அடையாளம் காட்டிக்கொள்ள அச்சம் கொள்வார். இதற்கு காரணம் இந்துத்வா தன்னை முன்னிறுத்தும் விசயம். ஒரு இந்து எப்படி இருப்பார் என மகாத்மா காந்தி குறித்து எழுதியதைப் படிக்கும்போது எதற்கு கோட்சே ஒரு இந்துத்வா என புரியமுடிகிறது.

மனிதர்களில் இரண்டு வகை ஒன்று மிதவாதிகள், மற்றொன்று தீவிரவாதிகள். மதவாதிகள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே வலம் வருகிறார்கள். இந்த கட்டுரையில் சொல்லப்படும் இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு எனும் கருத்து பலருக்கு ஏற்புடையதே. ஒரு இந்து என்பவர் பிறரை துன்புறுத்தமாட்டார் என்பது பொது கருத்து . ஆனால் ஒரு இந்துத்வா இந்துவை கூட துன்புறுத்த தயங்கமாட்டார். 

இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய  மக்கள் கூட்டம் , திைாதிராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இது சற்று ஆச்சரியமான வாக்கியம். தான் ஒரு இந்து என்பதால் பிறரை சகித்துக்கொள்ளும் தன்மை உண்டு, மேலும் தனது மதத்தை முன்னிறுத்தி எந்த ஒரு இந்துவும் நடப்பது இல்லை. சாதியின் அடிப்படையில் செயல்படும்போது அங்கே இந்து என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இந்து அடையாளமிலி என இந்த கட்டுரை எழுப்பிய சிந்தனைகளுக்கு கட்டுரையாளர் ரோஸாவசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. 

8. லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை - லேகா இராமசுப்ரமணியன் (விமர்சனம்)

ஒரு நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும் என இந்த விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. தீவிர சிந்தனை கண்மூடித்தனத்தை எதிர்க்கும் என்பதான வாசகம் போற்றத்தக்கது. அந்த தீவிர சிந்தனை மதம் எனும் போர்வையில் நிகழும் போது  மதம் ஒரு கண்மூடித்தனம் என்ற நிலை உண்டாகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எழுத்தாளர் நிச்சயம் அதன் வலியை மிகவும் திறமையாக சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதே இந்த நாவல் குறித்த விமர்சனம் மூலம் அறிய முடிகிறது.  எப்படி அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்க்கின்றன என்பது பலரும் உணர்ந்த ஒன்றுதான். நாவல் குறித்து ஆவல் எழுப்பியமைக்கு லேகா அவர்களுக்கு மிக்க நன்றி. 

9. அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது - தமிழில் எம். ரிஷான் ஷெரீப் (மொழிப்பெயர்ப்பு)

சினுவா ஆச்சிபி என்பவரின் சிறுகதையை மொழிபெயர்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. சினுவா பற்றிய குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. வித்தியாசமான சிறுகதை. படித்த மனிதன் ஒருவன் இவ்வாறென ஒன்றை ஏன்  செய்தான்? இந்த கேள்விக்கு பல நிகழ்வுகளை வைத்து கேட்டுக்கொள்ளலாம். 

இப்படியாக வெகுசிறப்பாக பல விசயங்களை கொண்டுள்ள தமிழ் மின்னிதழ், தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட விஷயம் ஆண்டாள். அடுத்துப் பார்க்கலாம். 

(தொடரும்) 

Friday 22 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 4

 பகுதி - 3 

4. பாரதியின் கனவு

மறுநாள் காலை பாரதியைப் பார்த்து சுந்தரன் என்னோட காதலை உனக்குத்தான் புரியக்கூடிய சக்தி இல்லை என  சொல்லி சிரித்தான். பாரதி சுந்தரனை நோக்கி முறைத்தாள்.

''என்ன முறைக்கிற, உன்னைவிட ஒரு நல்ல பொண்ணுதான் என்னை காதலிக்கிறா, டாக்டருக்குப் படிக்கிறோம்னு உனக்கு தலைக்கனம், உன் திமிரு எல்லாம் வேற எங்காச்சும் வைச்சிக்கோ''

''சுந்தரா, நான் உன்னை எதுவும் சொன்னேனா, நீ யாரையாவது காதலி எனக்கென்ன. எனக்கு உன்னை காதலிக்க மனசு இல்லை அவ்வளவுதான். உனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கானுட்டு என்னை நீ இப்படி பேசறத நிறுத்து''

''சும்மா அழாத, உனக்கு அந்த வாசனும் கிடைக்க மாட்டான். அவனுக்கு மாதவியை பேசி முடிச்சிட்டாங்க''

சுந்தரன் சொல்லி முடிக்கும் முன்னர் அவனது பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

''என்ன வாய் ரொம்ப பேசுதே, எங்கப்பா உனக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னுட்டு நீ துள்ளுற, ஒழுங்கா இரு இல்லை வேலை இடத்தில இருந்து தூக்கிருவேன். நீ எதுக்கு பாரதி இவன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க''

அருண் அங்கு வந்து நிற்பான் என்று சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தான் சுந்தரன்.

''அண்ணா, நீ அப்பா கிட்ட சொல்லி எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாவம் அவன்''

''சரி பாரதி''

பாரதி தனது தோழி கிருத்திகாவைச்  சந்திக்கச் சென்றாள்.

''என்னய்யா ஒருமாதிரி சோகமா இருக்க''

''ஒண்ணுமில்லை கிருத்தி''

''மறைக்காம சொல்லுய்யா''

''சுந்தரன் என்னை இன்னைக்கு வம்புக்கு இழுத்தான்''

''காதல் பண்ண ஆரம்பிசிட்டான்ல, இனி அவன் அப்படித்தான்.

''உன்னோட சொந்தக்கார பொண்ணுதான  அந்த பிரபா''

''தூரத்து சொந்தம்தான், சரிய்யா, உன்னோட ஜெனிடிக்ஸ் கனவு எல்லாம் எப்படி இருக்குய்யா, எதுவுமே நீ இதுவரைக்கும் சொன்னது இல்லையே''

''புதுசா ஒரு எண்ணம் இருக்கு கிருத்தி''

''சொல்லுய்யா''

''ஆர்என்ஏ மட்டுமே உள்ள ஒரு மனிதரை உண்டு பண்ணனும், டிஎன்ஏ இல்லாம சர்வைவ் பண்றமாதிரி செட் பண்ணனும்''

''என்னய்யா நீயும் நல்லா கதை சொல்ற, எந்த இங்க்லீஸ் படம் பார்த்த''

''கிருத்தி, நான் திருமால் அவரைப் போய் நாளைக்குப்  பார்க்கப் போறேன். அவருக்கு பல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கு. நீயும் வரியா''

''நான் வரலைய்யா, நீ மட்டும் போய்ட்டு வந்துரு. இன்னைக்கு ஏதாவது  படம் பார்க்கப் போகலாம்''

''இல்லை கிருத்தி, நான் இந்த ஆர் என் ஏ  பத்தி இங்க உட்காந்து எழுதலாம்னு வந்தேன், உனக்கு ஒண்ணும்  பிரச்சினை இல்லையே''

வாம்மா பாரதி என்றவாறு கிருத்திகா அம்மா வந்தார். கிருத்திகா, பாரதிக்கு குடிக்க ஏதவாது கொடுத்தியா என்றபடி உள்ளே சென்றவர் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வந்தவர் எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் என வைத்தார்.

''என்ன பாரதி அம்மா, அப்பா அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா, அடிக்கடி இந்தப் பக்கம் உன்னைக் காணோமே''

''எல்லோரும் நல்லா இருக்காங்க, கொஞ்சம் வேலை''

''சரி பேசிட்டு இருங்க''

கிருத்திகா அம்மா சென்றதும் பாரதி ஆர்என்ஏ குறித்து குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

'வினையூக்கிகள் மட்டுமே வேதிவினையில் ஈடுபடும் என அறிந்த உலகத்திற்கு இந்த ஆர் என் ஏக்கள்  வினையூக்கிகளாக செயல்படும் என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வினையூக்கிகள் புரதத்தினால் ஆனவை. புரதம் எப்படி மடங்கி உருவாகிறதோ அதைப்பொருத்தே ஒரு வினையூக்கி உண்டாகும். மேலும் இந்த வினையூக்கி குறிப்பிட்ட வேதிவினையில் மட்டுமே பங்கு கொள்ளும்.

இந்த வினையூக்கித் தன்மை கொண்ட ஆர்என்ஏக்கள் ரைம்போசைம் எனப்படும். இது நமது செல்லில் உள்ள ரைபோசோம்  அல்ல.  இப்படி புரதம் உண்டாகும் முன்னரே இந்த ஆர்என்ஏக்கள் ஒரு வேதிவினையை எதற்கு உண்டு பண்ணி இருக்கக்கூடாது எனும் சிந்தனை செய்யாத மக்கள் இல்லை. இதனால் ஆர்என்ஏ  தான் இந்த உலகில் உயிர்கள் உண்டாக காரணம் என எண்ணுபவர்கள் உண்டு'

''என்னய்யா பயங்கரமா குறிப்பு எடுத்துட்டு இருக்கப் போல''

கிருத்திகாவின் குறுக்கீடு கண்டு பாரதி நிமிர்ந்தாள்.

''நீ எழுதுய்யா, தொந்தரவு பண்ணிட்டேனோ?''

''இல்லை கிருத்தி, இந்த ஆர்என்ஏ  உலகம் அதிசய உலகம் போல தெரியுது''

''எனக்கு இந்த உலகம் போதும், என்னை அதில் இழுக்காதே''

''சரி, ஒரே ஒரு விஷயம் கேளு. இந்த ஆர் என் ஏ  தான் இந்த உலக உயிர்களுக்கு காரணம்''

''அப்படின்னா கடவுள்''

''அது வாசன் கிட்டதான் கேட்கணும்''

''வாசனுக்கு கடவுள், உனக்கு ஆர் என் ஏ''

''அப்படியே வைச்சிக்கோ, சரி கொஞ்சம் இரு''

கிருத்திகாவை பாதியில் நிறுத்திவிட்டு மேலும் சில வரிகள் பாரதி எழுத ஆரம்பித்தாள்.

'புரதம் உண்டாக்கும் வேதிவினையை இன்றளவில் இந்த ஆர் என் ஏக்கள் மட்டுமே நமது செல்லில் உள்ள ரைபோசொமில் செயல்படுத்துகின்றன. இந்த ஆர் என் ஏக்கள் ஸ்திரத்தன்மை அற்றவைகள் என்பதாலும், இவைகளால் எல்லா வேதிவினையை ஊக்குவிக்க முயலாது என்பதாலும் நாளடைவில் இந்த ஆர் என் ஏக்களை புறம் தள்ளிவிட்டு புரதம் முக்கிய வினையூக்கியாக செயல்படத் தொடங்கியது.

இந்த ஆர் என் ஏக்கள் டி என் ஏக்களில் இருந்து தற்போது உருவாகி அவை கரு உறையை விட்டு வெளியேறி இந்த புரதம்தனை உருவாக்குகிறது எனும்போது இந்த ஆர் என் ஏக்கள் தான் டி என் ஏக்கள் உருவாக காரணம் என்பதும் அறிய முடிகிறது. இந்த உலகம் ஆர் என் ஏ  உலகம் என்பதில் மறு கருத்து இல்லை'

''பாரதி, நாம வெளியில் போகலாமாய்யா?''

''கிருத்தி, இப்போதான் கொஞ்சம் எழுதி இருக்கேன், அதுக்குள்ளே வெளியில் போகணும்னு சொல்ற''

''உனக்கு இப்படி ஏதாவது கிடைச்சிருது, எனக்கு என்ன இருக்கு சொல்லுய்யா. ஜாலியா வெளியில் போய்ட்டு அப்புறம் வந்து எழுதலாம்''

''இனி நீ சொன்னால் கேட்கமாட்ட, சரி வா போகலாம்''

இருவரும் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் கூட வந்து இருக்கமாட்டார்கள். அவர்கள் எதிரில் சுந்தரனும், பிரபாவும் வந்தனர். இதை பாரதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

''கிருத்தி, நாம திரும்பிப் போய்ருவோம்''

''எதுக்குய்யா பயப்படற?''

''யார் வராங்க பாரு''

''நம்ம பிரபா, சுந்தரன்யா''

''சொன்னா கேளு கிருத்தி''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சுந்தரன் வெகுவேகமாக இவர்களை நோக்கி வந்தான். பிரபாவும் உடன் வந்தாள் .

''பாரதி, இதுதான் பிரபா. உன்னை விட அழகு''

''சுந்தரா, என்ன பேச்சு பேசுற'' கிருத்திகா சற்று கடுமையாகவே சொன்னாள்.

''சொன்னதுல என்ன தப்பு, பாரதிக்கு தான் ஒரு பெரிய அழகினு நினைப்பு''

பிரபா இடைமறித்து ''சுந்தரா, நீ இப்படி எல்லாம் பேசின அப்புறம் நான் உன் கூட பழகுறதை நிறுத்திறுவேன்'' என்றதும் சுந்தரன் நிலைமையை புரிந்துகொண்டு  அங்கிருந்து நகர்ந்தான். பிரபா இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

''நீ சொன்னா கேட்டியா கிருத்தி''

''என்னய்யா அவன் இப்படி இருக்கான், அவனுக்குப் போய்  நான் உதவினேன் பாரு''

''விடு கிருத்தி, அவனுக்கு நான் அவனோட காதலை ஏத்துக்கலைன்னு மன வருத்தம். அவனுக்கு இது ஒரு காயம் மாதிரி இருக்கும். என்னோட கனவு இப்படி காதல் பண்றது இல்லை கிருத்தி. எனக்கு இந்த ஆர் என் ஏ  உலகம் தான் உலகம்''

''ஆர் என் ஏவை  கொஞ்சம் விட்டுத் தள்ளுயா''

''நாளைக்கு நிசமாவே நீ திருமால் பார்க்க வரலையா''

''ஏன்யா இப்படி உங்க கிராமத்து ஆட்கள் முக்கியம்னு இருக்க, அந்த திருமால் என்ன உனக்கு சொந்தமாய்யா. பெருமாள் தாத்தானு  சொல்ற, கொஞ்சம் யூத் மாதிரி பிகேவ் பண்ணுய்யா''

''எல்லாம் சொந்தம்தான்''

''எப்படி''

''நாளைக்கு வா சொல்றேன்''

''ம்ம் சரிய்யா''

விரைவாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் பாரதி குறியாக இருந்தாள். கிருத்திகாவும் பாரதிக்கு ஏற்றபடி ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினார்கள்.

விவசாய நிலங்களில் வீடு கட்டுவது போல இந்த பூமியில் பல மாற்றங்கள் எப்படி வெளி கண்ணுக்கு புலப்படுகிறதோ அது போல நமது உடலில் நடந்த அல்லது உடல் உருவாகும் முன்னர் உள்ளே நடந்த விஷயங்களை குறித்து வைக்காமல் போனாலும் இப்படித்தான் என ஒரு தீர்மானத்திற்கு வர முடிகிறது. அப்படித்தான் பாரதியும் ஆர் என் ஏவில் மூழ்கிக் கொண்டு இருந்தாள்.

(தொடரும்)


Friday 15 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பசி, உறக்கம் எல்லாம் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உறக்கம் பசி தொலைத்து எல்லாம் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்தது இல்லை. எத்தனை சுவாரஷ்யமாக இருந்தாலும் முழுவதும் முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. விருப்பப்பட்டு நேரம் இருப்பின் அதன் மூலம் செய்வதுதான் வழக்கம். ஒரு புத்தகம் தந்தால் அதை வாசிக்க பல மாதங்கள் ஆகி இருக்கிறது.

இந்த தமிழ் மின்னிதழ் -2 மிகவும் சிறப்பாகவே வந்து இருக்கிறது. இத்தனை சிரமம் எடுத்து ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அடுத்தமுறை புதிதாக ஒரு படைப்பினை எழுதி அதை அனுப்பி எனது படைப்பின் திறனை பரிசோதித்துக் கொள்ளலாமா என்றே எண்ணி இருக்கிறேன். பல எழுத்துத் திறமை உள்ளவர்களைத் தாண்டிச் செல்வது சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எழுத்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படித்தான் முதலில் புனைவு, கவிதை என வாசித்துவிட்டு வேறு பக்கம் திரும்பலாம் என எண்ணி எல்லா புனைவுகளும், கவிதைகளும் வாசித்து முடித்தேன். அதற்குப்பின்னர் இங்கொன்று அங்கொன்று என வாசித்து இந்து இந்துத்தவா என்றெல்லாம் படித்து திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் எழுத்து உலகில் நான் இழந்து கொண்டு இருப்பது நிறையவே என மனதுக்குத் தெரிகிறது. எனக்கு இவரப் பற்றி அறிந்து கொண்டதே இல்லை. இவரது குரல் ஒன்றை ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட அதை திரு. வைரமுத்து, திரு சரவணகார்த்திகேயன் என குழம்பியது உண்டு. அத்தனை அற்புதமான குரல். அழுத்தம் திருத்தமாக இருந்தது. ஒற்றுப்பிழை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு இந்த பிரச்சினை உண்டு. சரிசெய்ய நன்னூல் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான் வாசிப்பு என்றால் நிறைய தூரம் என ஆகிவிட்டது.

இணையப் பழங்குடிகள் என்ற ஆசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் முன்னரே நண்பர் சுதாகர் என்ன சார் ஒரு பொண்ணு தெருவில நடமாட முடியல. போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறாங்க என்று சொன்னபோது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறைக்கு மட்டுமே சென்று வருவது என்பதால் எனக்கு இது அவ்வளவாக தெரியாது. அதே ஏழு எட்டு வருடங்கள் முன்னர் எனக்கு நகைச்சுவை எஸ்எம்எஸ் என எனது அண்ணன் மகன் அனுப்பிக்கொண்டு இருந்தான். எப்படி இப்படி எல்லாம் என்றேன், சித்தப்பா வேண்டுமெனில் பல படங்கள் கூட உண்டு என சிரித்தான். எதுவும் அனுப்பாதே என்றேன். நிறுத்திவிட்டான். இன்று எனது நண்பன் ஒருவன் என்னை வாட்சாப் குழுமத்தில் இணைத்து இருக்கிறான். நிறுத்தாமல் ஏதோ  ஏதோ  பகிர்ந்து கொள்கிறார்கள். அதை எல்லாம் படிக்க கேட்க எனக்கு நேரமே இருப்பது இல்லை. நண்பன் என்பதற்காக சகித்துக் கொண்டு அந்த குழுமத்தில் இருக்கிறேன். அவ்வளவே.

நான் தமிழகத்தில் இருந்தவரை இணையம் ஒன்றும் அத்தனை பிரபலமாக ஏன் கணினி கூட அத்தனை இல்லை. நான் லண்டன் வந்தபின்னர்தான் முதன் முதல் மொபைல் போன்  வாங்கினேன். ஆனால் இந்த நாட்டிற்கு வந்தபிறகுதான் இணைய உலகமே அறிமுகம். அது எத்தனை ஆபத்தானவை என்பது குறித்து ஆசிரியர் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் ஒருவரை வஞ்சம் தீர்க்க இவன் இவளோடு இருக்கிறாள் என்பது போல பெயர்கள் இணைத்து ஊர் பொதுச் சுவற்றில் எழுதி வைப்பார்கள். அது அந்த ஊர் வழி செல்பவர்க்கு மட்டுமே தெரியும். இன்றைய காலத்தில் எள்ளி நகையாடும், வஞ்சம் தீர்க்கும் உலகம் ஒருபடி மேலே சென்று விட்டது.

1. ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்'' - யுவன் சந்திரசேகர் (நேர்காணல்)

இந்த இதழின் ஆசிரியர் நேர்காணல் எடுக்கச் செல்லும் முன்னர் அனைத்து நூல்களை வாசித்துச் சென்றார் எனச் சொல்ல இயலாது. நூல்களை வாசித்த காரணமே இவரை சந்திக்கச் சென்று இருக்கிறார் என்றே புரிய முடிகிறது. எப்படி குரல் எனக்குள் ஒரு சலனம் உண்டாக்கியதோ அதைப்போல் இவரது நேர்காணல் என்னுள் சலனம் உண்டாக்கியது. எனக்கும் ஒரு தண்டபாணி இப்போது இல்லமால் போனது குறித்து யோசிக்கிறேன். எனது முதல் நாவலுக்கு திரு ரத்தினகிரி, திருமதி பத்மஜா இருந்தார்கள். எப்படி எழுத்துகள் மட்டுமே எனக்குப் போதும் இந்த அரசியல் சினிமா எல்லாம் அவசியம் இல்லை ஒதுங்கி ஒரு படைப்பாளர் இருக்க இயலும் என்பதை இவரது நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிறைய வாசித்து இருக்கிறார், நிறைய எழுத்தாளர்கள் மூலம் இவருக்குப் பழக்கம் இருக்கிறது. நமது நூல் குறித்து நாம் பேசுவது கூட கூச்சம் தரும்.

ஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படைப்பு என ஒரு எழுத்தாளர் பயணம் அமையும். அவரது அப்பா குறித்து படித்தபோது பிரமிப்பாக இருந்தது. பலகாலங்கள் அவரது தந்தை வாழ்ந்து இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எழாமல் இல்லை. இவருடைய நாவல்கள், சிறுகதை தொகுதிகள், கவிதைகள் என படித்துவிடலாம் என்றே இருக்கிறேன். ஏனோ என்னை அறியாமல் என்னுள் வாசம் செய்கிறார். எந்த ஒரு எழுத்தளாரும் என்னைப் பாதித்தது இல்லை, எல்லாம் எழுத்துதானே என்று சர்வ சாதாரணமாக கடந்து சென்று இருக்கிறேன். ஒரு எழுத்தாளரோ அல்லது எவரோ அவர்தம் நடவடிக்கைகளே என்னைப் பாதிக்கின்றன. இவர் கவிதைகள் எழுதுவேன் என்றும் கவிஞர் யுவன் என அழைக்கப்படுவேன் என்றும் சொன்னபோது என்னை நான் பார்த்துக் கொண்டேன்.

முன்னர் குறிப்பிட்டு இருந்தேனே எத்தனை சுவாரஸ்யம் இருந்தாலும் தள்ளி வைத்துவிடுவேன் என, என்னால் அப்படி தள்ளி வைக்க இயலாத ஒரு வாசிப்பு என்று சொல்லலாம். இந்த இதழின் ஆசிரியரின் கேள்விகள் இவரது மனதில் ஒரு பெரும் நீரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சலனமின்றி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி பயணித்து இருக்கிறார். மொழிப்பெயர்ப்பு நாவல்கள் கூட இருக்கும் போல. ஒரு தமிழ் எழுத்து உலகத்தில் நிச்சயம் சர்ச்சைகளில்  சிக்காத எழுத்தாளர் என்றே நினைக்கிறேன். இல்லையெனில் எங்கோ இருக்கும் எனக்கு இவரது பெயர் இன்னும் அறிமுகம் ஆகாதது ஆச்சரியம்.

ஒவ்வொருவரும் இவரது நேர்காணலைப் படித்து விடமாட்டார்களா என்றே எனக்குள் தோன்றுகிறது. சின்ன சின்ன சிந்தனைகளே ஒரு நாவல் வடிவம் எடுக்கின்றன. எனக்கு திருமதி புஷ்பலதா அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு படைப்பை எழுதி வைத்துவிட்டு அதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் பின்னர் படிக்கும்போது எப்படி இருக்கிறது எனப்பார்க்க வேண்டும், அப்போது அதில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யலாம் என்று சொன்னது உண்டு. அதைப்போலவே இவரது கருத்துகளில் அந்த எண்ணம் மிளிர்கிறது. இவரது படைப்புகள் குறித்தேப் பயணம் நமக்கு சலிப்பில்லாத ஒன்று. இவரது எழுதியதைப் பற்றி எழுத நினைத்தால் ஆனந்தமாகவே இருக்கும்.

அந்தரத்தில் இருக்கும் தனியன் நான் என சொல்லி இருக்கிறார். இல்லை ஐயா, உங்களை பல தண்டபாணிகள் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு புத்துணர்வு தரும் உங்கள் நேர்காணல் என்று சொல்லி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

1. யாத்திரை - சௌம்யா (கவிதை)

இவரது எழுத்துகளில் உள்ள எளிமை எனக்குப் பிடித்த ஒன்று. என்னைப் பொருத்தவரை ஒரு படைப்பு என்பது எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த கவிதை அமைந்து இருக்கிறது. ஒரு மரணம் அடைந்த பின்னர் அந்த உடலில் உலவும் ஆன்மாவின் கூற்றாக அமைகிறது கவிதை. உடலை விட்டுப் பிரிந்தபின்னர் என்னவெல்லாம் செய்யத் துடிப்போம் எனும் பார்வையில் அமைந்து பாவப்பட்ட உடல் எரிக்கப்பட்டதாக அமைகிறது. மிகவும் அருமையான கவிதை.

2. அமில மழை - சொரூபா (புனைவு)

இந்த சிறுகதையைப் படித்தபோது ஒரு ஆணின் மனநிலை, ஒரு பெண்ணின் மனநிலை நமது ஊரில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பெண், ஆனால் சகித்துக் கொள்ள இயலாத ஆண். இந்த சிறுகதையில் 'ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சி பேசிக்கிறதாலெல்லாம் ஹெச் ஐ வி வராதாம்'' என முடியும். ஹரிக்கு உரைத்து இருக்கும்.

ஒரு சிறுகதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்திய சிறுகதை இது. இந்த கதையில் வரும் போதைப்பழக்கம், ஊசி ஏற்றுவது போன்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதன் மூலம் கதை நாயகன் எப்படிபட்டவன் என்று ஓரளவுக்குத்  தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் கடைசி வரிதான் கதைக்கான களம். ஹெச்ஐவி குறித்த ஒரு சம்பவம் உண்மையில் கண்டு இருக்கிறேன். இதன்  முழு விபரம் எழுதாமல் தவிர்க்கிறேன். ஒருவருக்கு மதுரையில் ஊசி ஏற்றியதன் மூலம் ஹெச்ஐவி வந்தது உண்டு. மிகவும் ஒழுக்கமானவர். ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட சுத்தமில்லை என்று எண்ணியவருக்கு அப்படி வந்தது தான் இன்னும் ஆச்சரியம். எத்தனை அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒரு உயிர் என்றோ போய்  இருக்கும், நல்லவேளை மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த சிறுகதையில்  CD4 பற்றி எழுதியதோடு ஒரு பெண்ணின் மனநிலை எல்லாம் விளக்கப்பட்டு  இருக்கிறது.

கதை மாந்தர்களுடன் பேச்சு, பழக்கம் என முதலில் ஆரம்பித்தே அத்தனை இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான சிறுகதை.

3. பூமிகாவுக்கு உதவிய பூ - என் சொக்கன், என் நங்கை என் மங்கை (புனைவு)

மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் சிறுவயதில் இங்கு குழந்தைகள் படிக்கும் புத்தகத்தில் உள்ள கதையைப் போன்று ஒரு உணர்வு தந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதைகளில் சிறுவர்கள் லாஜிக் பார்ப்பார்கள் என்பதால் கதை முடியும்போதும் ஒரு லாஜிக்குடன் முடிந்து இருந்தது. குச்சிகளால் கட்டப்பட்ட தெப்பம் என வெகு சிறப்பு.

4. அன்று - நவினன் (புனைவு)

மிகவும் அருமையான சிறுகதை. ஒரு சிறுகதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார். இந்த கதையில் கடைசியில் முடியும் வரிகள்தான் கதைக்கான ஆதாரம் சொல்லிச் செல்லும். கதைநாயகன் எப்படிப்பட்டவன் என்று மிகவும் அருமையாகச்  சொல்லப்பட்டு இருக்கிறது. எதற்கு ஜெயிலுக்குச் சென்றான் என்பதற்கான பதில் அங்கே உண்டு. ஒரு சிறுகதையில் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அந்த சிறுகதையின் அர்த்தம் புரியும்.

5. மொழி - செல்வராஜ் ஜெகதீசன் (புனைவு)

இந்த சிறுகதையை வாசிக்கும்போது நானும் எனது குடும்பத்தாரும் லண்டன் சரவணபவனில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. இந்த சிறுகதையில் மொழி குறித்த அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என எனக்கு மிகவும் நெருங்கிய உணர்வினை அழகாக விவரித்துச் சென்ற அருமையான கதை.

இது போன்று பல சூழலை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாயின் மொழியோடு கதை முடிகிறது. பல மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் தான் எனினும் அதற்கான ஈடுபாடு சிறுவர்களிடம் நம்மிடம் வரும்படியாக இருக்க வேண்டும். என்ன சொல்லித்தருகிறார்கள் என தமிழ் வெறுத்த குழந்தைகள் அதிகம். மொழி நேசிப்புக்குரியது.

6. அவரன்றி யாரறிவார்? - கர்ணா சக்தி ( அனுபவம்)

இசையை இசையை கற்றவர்தான் ஆராதிக்க முடியும் என்றில்லை. ஒரு இசை நம்மில் எத்தனை சுதந்திரமாக நம்மை வசியப்படுத்துகிறது என்றே அருமையாக அனுபவித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அதைப்போல பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலும்.

இசை நம்மை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டது. இசைஞானியின் இசை குறித்து நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கலைநயம், அபிநயம் போல இசைநயம் இந்த அனுபவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆம், இளையராஜாவன்றி யாரறிவார்?

அடுத்து...

ஒரு குழப்பத்தைப்  படித்தேன் என்றால் மிகையாகாது, ஆனால் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் தெளிந்து கொண்டேனா என்பதை எப்படியும் அது குறித்து எழுதும்போது மீண்டும் வாசிப்பேன் எனவே நிச்சயம் அறிந்து கொள்வேன். அப்படி என்னதான் அப்படியொரு விஷயத்தை தமிழ் மின்னிதழில் படித்தேன்?

(தொடரும்)

Thursday 14 May 2015

நுனிப்புல் பாகம் 3 -3

பகுதி -2 

3. பழியும் நிவராணமும்

''ஐயா, உங்ககிட்ட ஒரு விசயம் கேட்கலாமா''

வாசன் என்ன கேட்கபோகிறான் என்பதை யோசித்த விநாயகம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சரி கேள் என்றே சொன்னார்.

''உங்களுக்கும் நாச்சியார் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்''

''வாசன், எனக்கு என்ன சொல்றதுனு  தெரியலை, அது ஒரு நிறைவேறாத காதல்''

''நீங்க காதலிச்சீங்களா''

''என்ன வாசன், காதல் வரக்கூடாதா?''

''இல்லை ஐயா, எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் அதான் கேட்டேன்''

''நீயும் மாதவியும் நேசிக்கிற மாதிரி எங்க நேசிப்பு இருந்து இருந்தால் எங்களுக்குப் பிரச்சினை வந்து இருக்காது, நான் சைவம், நாச்சியார் வைணவம். இது ஒரு தடையாக இருக்கும்னு நான் அப்ப எதிர்பார்க்கலை''

''ஐயா, ஆனா நீங்க இந்த நெகாதம் செடி, பெருமாள் கோவில் எல்லாம் ஒரு வைணவம் பின்பற்றிய முறைதானே. அதுவும் உங்கள் கனவில் நாராயணன் வந்து சொன்னதாகதானே இந்த புத்தகம் எல்லாம் சொன்னீங்க. உங்களை சைவம்னு யாருமே சொன்னது இல்லையே''

''என் பேரு மட்டும் தான் நான் மாற்றலை வாசன், மற்றபடி நான் எல்லாம் வைணவத்துக்கு முழுசா மாறிட்டேன். அதுக்கு காரணம் நாச்சியார் தான்''

பெரியவரின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. ஒரு இளமைக்கால சரித்திரத்தை ஒவ்வொரு கிராமங்களும் தாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நிராகரிக்கப்பட்ட கனவுகள். பழமையில் ஊறிப்போன மனிதர்கள் என இன்னும் ஆங்காங்கே கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைய தலைமுறைக்கு புரியாத ஒரு வாழ்க்கை ஒன்றை கிராமம் முழுவதும் இன்னும் வெறுத்து ஒதுக்கிவிடவில்லை.

''உங்க சொந்த ஊரு சாத்திரம்பட்டிதானா ஐயா''

''ஆமாம் வாசன், எங்க குடும்பம் மட்டும்தான் சைவம். மற்ற எல்லாருமே வைணவம். எங்க குடும்பம் அங்கே எப்படி போனாங்கனு  நானும் என்னோட அப்பா அம்மாகிட்ட கேட்டது இல்லை. எங்க சொந்தகாரங்க யார் எவர்னு  எனக்குத் தெரியாது. அந்த ஊர்க்காரங்க மட்டுமே சொந்தம்னு  நினைச்சப்பதான் இந்த நாச்சியார் பழக்கம் ஆனா. இப்ப இதுக்கு மேல வேண்டாமே''

குரல் தழுதழுத்தது. காதலித்தவரிடம் காதலின் வலி பற்றி கேட்டு அறிந்து கொள்ள முடியாது. காதலின் வலி என்பது என்றுமே ஆற்ற இயலாத ஒரு துயரம். வாழ்வின் அடிப்படை என்னவெனில் காதல் தோற்ற பின்னர் வேறு ஒரு பெண்ணை அல்லது ஆணினை கல்யாணம் பண்ணி வாழ்வது சகஜம். அப்படி இல்லாதபட்சத்தில் மரணம் எனும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். காதலுக்கு என கல்யாணம் பண்ணாமல் வாழ்வது மிகவும் அரிது.

''ஐயா''

''என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுப்பா''

வாசன் பெரியவரிடம் சரி என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். எவருமே சொல்லாத விசயம் இது. இந்த ஊரில் எவருமே எதையும் பெரியவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறந்து போன பெருமாள் தாத்தாவுக்கும், சென்னையில் இருக்கும் திருமாலுக்கும் பெரியவர் பற்றி தெரிந்து இருக்கிறது. ஆனால் மாதவி பற்றி சாத்திரம்பட்டியில் சொன்னார்களே. அதுவும் கொஞ்ச வருஷம் முன்னால நீ வந்துருக்கக் கூடாதாம்மா என்று அந்த நாச்சியார் அம்மாள் எதற்கு மாதவியிடம் சொல்லி இருக்க வேண்டும். வாசன் நிறைய யோசிக்கலானான்.

அன்று இரவே மாதவிக்கு அழைப்பு விடுத்தான்.

''மாதவி, உனக்கு பெரியவர் விநாயகம் பற்றி தெரிஞ்சதை சொல்லு''

''என்ன மாமா, உருகும் உயிர் கதை சொல்ல சொல்றீங்களா?''

''மாதவி, நான் சீரியசா கேட்கிறேன். அவரும் நாச்சியார் அம்மாவும் காதலிச்சாங்கனு  பெரியவர் சொன்னார்''

மாதவி மறுமுனையில் எதுவும் பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர் மாதவியே  தொடர்ந்தாள்.

''மாமா, நான் அடுத்தவாட்டி ஊருக்கு வரப்ப எல்லாம் விபரமா சொல்றேன். பெரியவரை அந்த ஊரில இருந்து விரட்டி விட்டுட்டாங்க. அவர் குளத்தூர் வந்துட்டார். அதுக்கு காரணம் பெருமாள் தாத்தா. சாரங்கன் ஐயா கொஞ்சம் உதவினார்''

''உனக்கு எப்படித் தெரியும் மாதவி, என்னைக்காச்சும் நீ இதுபத்தி என்கிட்டே பேசி இருக்கியா''

''மாமா நான் யாருகிட்டயும் எதுவும் பேசிக்கிறல, ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோங்க, உங்ககிட்ட இது எல்லாம் சொல்ல வேணாம்னு நினைக்கல. யாராச்சும் பெரியவர் பத்தி ஊருக்குள்ள எதுவும் பேசுறாங்களா, நாம எல்லாம் அவர் ஊருக்கு வந்தப்பறம் பிறந்தவங்க மாமா. நான் எழுதின கதையே இப்போதான மாமா படிச்சீங்க''

''சரி மாதவி, நீ ஊருக்கு வந்தப்பறம் சொல்லு. படிப்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு''

''பரவாயில்லை மாமா, என்னோட ஆராய்ச்சி சம்பந்தமா ஒரு புது மேடம் கிட்ட உதவி கேட்டு இருக்கேன், சரினு  சொல்லி இருக்காங்க. இந்த பெரியவர் விஷயத்தை குழப்பிக்க வேண்டாம். பாரதி போன்  பண்ணினாள். சுந்தரன் அங்க வேலைப் பார்க்கிற இடத்தில ஒரு பொண்ணை  காதலிக்கிறானாம். ஏன்  மாமா உங்க குடும்பம் காதல் குடும்பமா?''

''மாதவி, என்ன சொல்ற நீ. அவன் திருந்தவே மாட்டான். போனவாட்டி பிரச்சினைனு  ஊருக்கு வந்தான். இப்ப மறுபடியும் என்ன இது. நான் அவனுக்கு போன்  பண்றேன்''

''ஐயோ மாமா, வேண்டாம். நான் உங்ககிட்ட தகவலாத்தான் சொன்னேன். நம்ம ஊருக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டா. அந்த குட்டிப் பையன்களைப் போய்  பார்த்தீங்களா?''

''பார்த்தேன் மாதவி''

''உங்களுக்கு வியர்த்துக் கொட்டி இருக்குமே''

''மாதவி''

''சும்மா சொன்னேன் மாமா. ஊருக்கு வரப்ப பேசறேன். எதுவும் முக்கியம்னா போன்  பண்ணுங்க''

''உனக்கு எல்லா விஷயங்களும்  முன்கூட்டியே தெரியுமா மாதவி''

''ஒண்ணுமே தெரியாது மாமா, சரி வைச்சிடுறேன்''

வாசனுக்கு மாதவி பற்றி அன்றுதான் யோசனை வந்தது. ஒருவேளை இவளுக்கு எல்லாம் தெரியுமோ. அப்படியே தெரிந்தாலும் முன்கூட்டி நடப்பதை எப்படி சொல்ல இயலும். எனக்கு வியர்த்தது அவளுக்கு எப்படித்  தெரியும். யூகித்து இருப்பாளோ?

வாசன் வீட்டின் மாடியில் மயங்கி விழுந்தான். தற்செயலாக அங்கு வந்து அவன் அம்மா தரையில் விழுந்து கிடந்த வாசனை எழுப்பிவிட்டார். வாசன் முழித்துப்  பார்த்தவன் அம்மா பெரியவர் பத்தி ஏதாவது பழைய வாழ்க்கை தெரியுமா என்றான். எதுவும் தெரியாதுப்பா என்றார். வாசன் அதுக்கு மேல் கேட்பது முறையில்லை என தவிர்த்தான்.

சாத்திரம்பட்டிக்குள் ஒரு சோகம் ஒளிந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


Monday 11 May 2015

திருச்சிக்கோர் வாழ்த்து - மெகா டிவிட்டப்



ஶ்ரீரங்கத்து அரங்கனே 
உன் தரிசனம் கண்டு 
பாடுகிறேன் தமிழில் வாழ்த்துப்பா 
காவிரியாற்றின் அருகில் 
நீ கொண்ட கோலம் 
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு 
பிடித்துப் போனது
இதோ இங்கே குழுமி இருக்கும் 
இவர்கள் கொண்ட தமிழ் கோலம்
எனக்கு மிகவும் பிடித்துப் போனது

பொன்மலை உச்சிமலைக்கோட்டை
கொள்ளிடம் என்றே இயற்கை எழில் 
கொஞ்சும் திருச்சி கொண்ட குதூகலம்

சமயபுரத்து மாரி அம்மனும் 
உறையூர் வெக்காளியம்மனும்
சுற்றி காத்திருக்கும் ஊரும் இது 
பள்ளிவாசல் தேவலாயம் கல்லூரிகள்
பள்ளிகள் என சிறந்த 
பேருவகை கொள்ளும் ஊரும் இது 

காவிரியும் கல்லணையும் 
களித்து சொன்ன பெருமை இன்று
எழுத்துக்களால் எண்ணங்களால்
மீண்டும் சங்கமித்து மகிழ்ந்தோம் நன்று

திருவானைக்கோவில் பெயர் கொண்டு
யானை புகாவண்ணம் கோவில் உண்டு 
சேவலும் சாமியாகும் பஞ்சவர்ணமாய்
எறும்பீஸ்வரர் அருளால் திருவெறும்பூர்
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
இனிய தமிழ் கொண்டு 
நேசித்து இருக்கச் சொன்ன
வள்ளுவ ஔவையும் உண்டு

மாம்பழசாலையும் வயலூர் முருகனும்
திருபட்டூர் பிரம்மனும் அமைதியே
உருவான சிவனது திருநெடுங்குளமும்
சோழப்பேரரசின் உறையூர் தலைநகரமும்
சுற்றியே அமைந்த திருச்சி சொல்லும்
மக்களின் உழைப்பின் உன்னதமும்
நமது தமிழின் வியத்தகு மேன்மையும்

முக்கொம்பு பூங்காவும் மறைகதை பேசும்
குணம் தவறினால் இருக்கிறது குணசீலம் 
இரவிலும் வெப்பக்கதிர்வீச்சு இங்கே 
தமிழால் இளங்காற்று வீசுகிறது இன்று

சரித்திரத்தில் இது திருசிபுரம் 
நாம் கூடிய கூட்டத்தால் எழுச்சிபுரம்
ஶ்ரீரங்கத்து அரங்கனே 
என்வாழ்த்து கேட்டு
சயனநிலை கலைத்து 
எம்மோடு தமிழ் பருகு.

வாழிய நண்பர்கள்
வாழிய தமிழ்ப்பற்று 

கவிதையை வடிவமைத்து தந்த Mr K K Gire அவர்களுக்கும், கவிதையை வாசித்த திரு பாண்டித்துரை அவர்களுக்கும் மிக்க  நன்றி

Tuesday 5 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 2

நுனிப்புல் பாகம் 3 - 1

2. சுந்தரனின் இரண்டாவது காதல்

சுந்தரன் இன்று தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரபாவிடம் தனது விருப்பத்தைச் சொல்லிவிடலாம் என தீர்மானம் கொண்டான். பிரபா குறித்து ஓரளவுக்குத் தகவல்கள் சேர்த்து வைத்து இருந்தான். பிரபா சம்மதம் சொல்லிவிட்டால் பிரச்சினை இருக்காது என்றே திட்டமிட்டான். பாரதியுடன் நேர்ந்தது போலத் தனக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் சற்று பதட்டம் இருக்கத்தான் செய்தது. வாசனின் கவிதைப் புத்தகம்தனை தேடினான். அதில் இருக்கும் சில கவிதைகளை மனப்பாடம் செய்து கொண்டான்.

சேகர், அருண் வரும் முன்னரே வேலைக்குச்  சென்று சேர்ந்தான் சுந்தரன். பிரபாவும் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தாள். பிரபா, மாநிறம். நடுத்தர உயரம். இங்கு வேலைக்குச்  சேர்ந்து ஆறு மாதங்களே ஆகிறது. எல்லோரிடம் நன்றாக பழகும் குணம்.

எப்போது பிரபாவிடம் பேசும் தருணம் கிடைக்கும் என சுந்தரன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். மனம் வேலையில் ஒட்டவில்லை. அருண் கூட இரண்டு முறை சுந்தரனை வந்து சத்தம் போட்டுச் சென்றான். மதிய வேளையில்தான் நேரமே கிடைத்தது. எப்படியும் சொல்லிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் பிரபாவை நோக்கிச் சென்றான் சுந்தரன்.

''பிரபா, உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்''

''என்ன திடீருனு''

''நீ யாரையாச்சும் காதலிக்கிறியா''

''இல்லை, எதுக்கு இந்த கேள்வி. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன், உன்னோட பார்வை சரியில்லையே''

''உன்னை யாரும் காதலிக்கிறாங்களா''

''எனக்கு எப்படித்  தெரியும், இதுவரைக்கும் யாருக்கும் சொல்ல தைரியம் இருந்தது இல்லை, ஆமா என்ன இன்னைக்குப் பேச்சு ஒருமாதிரியா இருக்கு''

''உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை நான் காதலிக்கலாமா?''

இதைக் கேட்டதும் பிரபா குலுங்கி குலுங்கிச் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற?''

''காதலிச்சிக்கோ, யாரு வேணாம்னு சொன்னாங்க''

''உனக்காக இந்த கவிதையை யோசிச்சி வைச்சேன், நீ கேளு''

''கவிதை எழுதுவியா, சொல்லு கேட்கலாம்''

''நான் மட்டும் இருந்தேன்
உலகம் வெறுத்தது
நீ என் உடன் வந்தாய்
உலகம் இனித்தது''

''நீதான் எழுதினியா?''

''ஆமாம், இன்னொரு கவிதை கேளு''

''சொல்லு''

''பொய் உரைக்க வருவதில்லை
ஐயம் உள்ளத்தில் எழுவதில்லை
உன்னுடன் பேசுவதாலே''

''நிசமாவே நீதான் எழுதினியா''

''இதோ இதுவும்
வலி வந்ததும் உன்னை மட்டும் நினைத்தேன்
வந்த வழி நோக்கியே வலியும்  சென்றதே''

''வாசன் அப்படின்னு ஒரு கவிஞர் உனக்குத் தெரியுமா?''

''யார் வாசன்?, என்ன கவிஞர்?''

''நீ சொன்ன கவிதை எல்லாம் நான் கவிதைப் புத்தகத்தில் படிச்சி இருக்கேன். என் வீட்டுல இந்த புத்தகம் இருக்கு. கிருத்திகா என்னோட சொந்தம்தான். தமிழரசி என்னோட அத்தை. இவங்களை உனக்குத் தெரியாதுன்னு சொல்லாதே. அவங்களோட எங்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபம், அதான் அவங்க யாரு நாங்க யாருனு இருக்கோம், ஆனா கிருத்திகா, பாரதி எல்லாம் என்னோட பேசுவாங்க. உன்னோட பார்வையை வைச்சி நான் உன்னை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினப்ப நீ யாரு, பாரதி யாரு, இந்த கம்பெனி முதலாளி யாருனு எல்லாம் எனக்குத் தெரியும். உன்னை திட்டிகிட்டே இருப்பாரே அருண் அவர் கூட யாருனு தெரியும்''

''பிரபா அது வந்து''

''பொய் உரைக்க வருவதில்லை அதை நீ சொல்லி இருக்கக்கூடாது, உனக்கு பாரதியோட லவ் பெயிலியர், இப்போ என்கிட்டே முயற்சி பண்ற. என்கிட்டே பெயிலியர் ஆயிருச்சினா அடுத்து யாரு''

''இல்லை பிரபா, உன்னை எனக்கு நிறையப் பிடிச்சி இருக்கு''

''எதுக்கு இப்படி காதலிக்கத் துடிக்கிற''

''காதலிக்காம கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்காது''

''யார் சொன்னா''

''எனக்குத் தெரியும், நானாத்தான் சொல்றேன்''

''சுந்தரா அங்கே என்ன பேசிட்டு இருக்க, மணி என்ன ஆகுது. பிரபா அவனோட உனக்கு என்ன பேச்சு''

அருண் அவர்களை நோக்கி கத்தியபடியே வந்தான். சுந்தரன் பிரபாவிடம் சொல்லிவிடாதே என கண்களால் கெஞ்சினான்.

''இல்லை சார், சில புரோசெசிங் எல்லாம் இன்னைக்குள்ள பண்றதைப் பத்தி சொல்லிட்டு இருந்தார்''

''சுந்தரா, ஒழுங்கா வேலையை மட்டும் பாரு. நீ எனக்கு நிறைய உதவியா இருக்கிறனுதான் இன்னும் இங்கு இருக்க. வேலை இடத்தில இப்படி வெட்டியா நின்னு பேசிட்டு இருந்த குளத்தூருக்கு பெட்டியை கட்டு''

''வேலை பத்திதான் பேசிட்டு இருந்தேன்''

''போ, எதிர்த்துப் பேசாத''

சுந்தரனை  இது போல பலமுறை அருண் அவமானபடுத்திக்கொண்டே இருந்து வருகிறான். தனது தங்கையை காதலித்தான் என்கிற ஒருவித மன எரிச்சல் அவனுடன் இருந்து கொண்டே இருந்தது. வேறு வழியின்றி இதை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருப்பது சுந்தரனுக்கு பழகிவிட்டது. வாசனின் கவிதைகள் இத்தனை தூரம் பிறர் தெரிந்து இருப்பார்கள் என சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலை வேலையை முடித்து கிளம்பும்போது சேகர் வந்து சுந்தரனை வீட்டுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார். சுந்தரன் தான் ஓரிடம் செல்ல இருப்பதாக சொல்லி பிறகு வருகிறேன் என சொல்லி அனுப்பினான். அருண் சுந்தரனை முறைத்துப் பார்த்துவிட்டு 'வேகாம வீடு வந்து சேரு' என எச்சரித்துச் சென்றான்.

வீட்டிற்கு கிளம்பிய பிரபா சுந்தரனிடம் வந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார்கள். இவர்கள் இருவரும் இப்படி சேர்ந்து செல்வது இன்றுதான் முதல்முறை.

''சுந்தரா, சொந்தமா ஒரு கவிதை எழுதி எனக்குத்  தா, இப்படி அடுத்தவங்க கவிதையைத் திருடாதே. உன்னை அருண் சார் எப்படி அவமானப்படுத்துறார், உனக்கு வேற வேலை இந்த ஊரில கிடைக்காதா?''

''இல்லை பிரபா, வேற எங்கயாச்சும் வேலைக்குப் போனா ஊருல திட்டுவாங்க, அதுக்கு இவர்கிட்ட திட்டு வாங்கிட்டுப் போயிரலாம். உன்னை நான் காதலிக்கலாமா''

''இனிமே திட்டு வாங்காம இருக்கப்பாரு. வாரத்தில மூணு நாளு திட்டு வாங்கிருற''

''என்மேல இருக்கப் பிரியத்திலதான நீ அருண் கிட்ட சொல்லலை''

''பாவமா இருந்துச்சி, அதனால்தான் சொல்லலை, சரி நீயா யோசிச்சி ஒரு கவிதை இப்போ சொல்லு''

''சூரியன் ஒளி  தொலைத்தாலும்
உனது ஒளி
ஒருபோதும் என்னுள் தொலையாதே

நிலவு சுற்றுப்பாதை
மறந்தாலும்
உன்னை பின்தொடரும்
பாதை எனக்கு மறக்காதே

கொடுங்கனவு ஒன்றில்
நீ வந்து நின்றதும்
மகிழ்கனவாக மாறுதே

என் அழகு பன்மடங்கு
கூடிவிடும்
என் உலகு சிறந்து
மலர்ந்து விடும்
நீ மட்டும் காண்பதாலே

என் மதியும் மயங்கும்
வான் மதியும் தயங்கும்
உன் அழகை காண்பதாலே''

சுந்தரன் மடமடவென சொல்லி முடித்தான். பிரபா குலுங்கி குலுங்கி மீண்டும் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற பிரபா''

''மறுபடியும் வாசன் கவிதைகளா''

''உனக்கு எப்படி இத்தனை ஞாபகமா தெரியும்''

''அப்போ அப்போ எடுத்துப் படிப்பேன், இதுமாதிரி நிறைய கவிதைகள் மனசுல பதிந்து இருக்கு. எல்லோரும் சொல்றதுதானே''

''என்னை உனக்குப் பிடிச்சி இருக்கா''

''காதலில் தோத்து இருக்க, அதனோட வலி உனக்குத் தெரியும். அதனால என்னை நீ ஏமாத்தமாட்டனு நம்பலாம்''

''அப்படின்னா என்னை நீ காதலிப்பியா''

''நீதான் என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டியே''

''உனக்கு கவிதைப் பிடிக்குமா''

''ஆமாம்.

சாப்பிட்டு முடித்து இருந்தேன்,
மீண்டும் பசித்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்
நீ இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை என''

''சூப்பர் சூப்பர்''

''இதுவும் வாசன் எழுதின கவிதைதான். நான் ஒண்ணும்  எழுதலை. இந்த கவிதையை மனப்பாடம் பண்ணலையா''

''பிரபா உங்க வீட்டுல நீ ஒரே பொண்ணுதான. உனக்கு அப்பா இல்லைதானே. உங்க அம்மா கூட பள்ளிக்கூட டீச்சர்''

''நான் யாரு என்ன பண்றேன் எங்க குடும்பம் எப்படி அப்படின்னு ஊரெல்லாம் விசாரிச்சி இருக்கப்போல''

''உங்க சொந்தம் பந்தம் எல்லாம் விசாரிக்கலை. உங்க வீடு பக்கம் கூட நிறையவாட்டி வந்து இருக்கேன்''

''கள்ளத்தனம் உன்கிட்ட நிறைய இருக்கு''

''இல்லை, உன் மேல இருக்கிற அக்கறைதான்''

''பார்க்கலாம் எப்பவுமே இருக்குமான்னு''

இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். பிரபாவுடன் அவளது வீடு வரை வந்து விட்டுவிட்டே தனது வீடு நோக்கிச் சென்றான் சுந்தரன். அன்று இரவு சாப்பிட அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். சேகர் சுந்தரனை நோக்கி கேட்டார்.

''பிரபாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''

''எந்த சம்பந்தமும் இல்லை''

''சுந்தரா, என்கிட்டே நீ எதையும் மறைக்க நினைக்காதே, உண்மையை சொல்லு. என்னை நம்பித்தான் உன்னை உங்க அப்பா அம்மா இங்கே அனுப்பி இருக்காங்க''

''எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரை பிடிச்சி இருக்கு''

''அப்பா இவனை நம்ம வீட்டை விட்டு வெளியேப் போகச்  சொல்லுங்க. இவனால நமக்குப் பிரச்சினைதான்''

அருண் சற்று கோபத்துடன் சொன்னான். பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

''இரு அருண். நீ இவனை இனிமே வேலை இடத்தில திட்டுறதை குறை. எத்தனை தடவை சொல்றது. சுந்தரா, நீ வேலை இடத்தில் வேலையில்  கவனமா இரு. நான் பிரபா அம்மாகிட்ட பேசுறேன். எதுவும் பிரச்சினை வராமல் இருக்கணும்''

''நான் எதுவும் பிரச்சினை பண்ணமாட்டேன்''

''அப்பா, என்ன நீங்க. இவனை...''

''அருண். நீ தலையிடாதே''

சுந்தரனுக்கு அன்று நிம்மதியாக இருந்தது. தன்னை சேகர் ஐயா புரிந்து இருக்கிறார் எனும்போது சற்று ஆறுதலாக இருந்தது, இல்லையெனில் இந்த அருண் பெரிய பிரச்சினை பண்ணி இருப்பான். தன்னை நிராகரித்த பாரதிக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும், அவளுக்குள் ஒரு வலி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தானே அமைதியாக இருந்தாள்  என சுந்தரன் நினைத்தான்.

சுந்தரன் வாசனின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினான்.

'எல்லாம் சொல்லிவிட்டாயா என்றாள்
ஆம் என்றேன்.
இனி நீ சொல்ல ஒன்றும் இல்லைதானே? என்றாள்.
உன்னை காதலிக்கிறேன் என்றேன்.
வெட்கித்  தலை குனிந்தாள்'

(தொடரும்)





Sunday 3 May 2015

நமது திண்ணை - சிற்றிதழ் வடிவமைப்பு

பொதுவாக ஒரு புத்தகமோ, மாத இதழோ, வார இதழோ அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. கைக்கு அடக்கமாகவும், தூக்குவதற்கு ஏதுவாகவும்  இருப்பவை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் இப்போது இணையத்தில் வெளியிடும் வகையில் புத்தகங்கள் எல்லாம் வந்துவிட்ட சூழலில் கருப்பு வெள்ளை என பழைய முறையை பின்பற்றியே வெளியிடுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மெனக்கெட்டு வண்ணம் மாற்றி செயல்படுவது அவசியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இணையதளத்தை பார்த்தோம் எனில் படிப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் ஒவ்வொரு பக்கமும் சிறப்பாக செய்து இருப்பார்கள். அதற்கு அவர்கள் செலவிடும் நேரம் அந்த வடிவமைப்புக்கு உரிய சிந்தனை என உடன் இருந்து பார்த்து இருப்பதால் பிரமிப்பு ஏற்பட்டது உண்டு.

மிகவும் சரியாக வண்ணக்கலவை, அந்த இணையதளம் என்ன சொல்ல வருகிறது என்பதை வெளிக்காட்டும் பாங்கு என இருக்க வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இணைய இதழாக வெளிவரும் நமது திண்ணை சிற்றிதழில் முயற்சித்தால் என்ன என திரு அல்  அமீன் அவர்களின் சிந்தனை ஒரு செயல்பாட்டாக மாறி இருக்கிறது. இதழ்களின் வடிவமைப்பு பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தாலும் இந்த இதழின் வடிவமைப்பு குறித்து சற்று பார்ப்போம். அதாவது வடிவமைப்பு மெருகேற்றினால் இந்த சிற்றிதழின் அளவு அதிகமாகும் அபாயம் இருக்கிறது. அப்படி அளவு அதிகமாகும்போது தரவிறக்கம் செய்ய அல்லது பிறருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப சிரமம் உண்டாகும்.

சரி வடிவமைப்புக்கு செல்வோம். முதல் பக்கம் அத்தனைத் தெளிவாக இல்லை. சமீபத்தில் மறைந்த திரு ஜெயகாந்தன் அவர்களின் படத்தை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. நான் 50% அளவில் தான் பார்க்கிறேன் ஆனால் தெளிவு இல்லை. மொபைல் மூலம் செய்வதாலோ அல்லது பெறப்பட்ட படம் அத்தனை தெளிவான ஒன்று என இல்லாததாலோ அத்தனை சிறப்பாக வரவில்லை. சற்று கவனம் செலுத்தலாம். பளிச்சென மனம் ஒட்ட  வேண்டும்.

இரண்டாவது பக்கம் சற்று நன்றாக இருக்கிறது. மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்டு வரவேற்பு இதழ் போல உள்ளது. அடுத்த பக்கம் அதே பிரச்சினை. பின்புறத்தில் என்ன இருக்கிறது (பெண் முகம்) என தெளிவாகத் தெரியவில்லை. கவிதை சோகத்தைத் தாங்கி இருப்பதால் பின்புறம் சோகமாக இருக்கட்டும் என விட்டுவிட்டார்.

அடுத்து வருகிறது எனது கதை. இங்கே தான் வண்ணமயமாக்கல் தொடங்குகிறது. கருப்பாக இருந்தபோது இல்லாத தெளிவு வண்ணத்தில் தெளிவாக இருக்கிறது. எனது கதைக்கு நான் எந்த ஒரு யோசனையும் அவரிடத்து சொல்லவில்லை. எனக்கு இந்த பின்புற படம் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. எத்தனைப் பொருத்தம். எழுத்தும் வண்ணம் கொண்டு இருப்பது படிப்பதற்கு இடைஞ்சலே இல்லை. எனது கதை என்பதால் எனக்கே ஒரு தனி கர்வம் தந்தது என்றால் மிகையாகாது.

அடுத்து அடுத்த பக்கங்கள்  மிகவும் ஜொலிக்கின்றன. நல்ல வண்ண நிறங்களுடன் கூடிய நகைச்சுவை பக்கம். நினைவலைகள் பசுமையாக இல்லாது இருப்பதை காட்டும் வண்ணம் என பக்கவாட்டில் ஒரு வண்ணம் என நன்றாகவே இருக்கிறது. அடுத்த பக்கத்தில் மரத்தின் கீழ் உள்ள ஒரு சிறுவனின் ஓவிய அமைப்பு என வண்ணங்கள் தெளித்து சிறப்பித்துவிட்டார். திருப்பூர் என்பதற்கு திரைப்படத்தில் வருவது போல பெயர்ப்பலகை மற்றும் பின்னணியில் ஒரு வாகனம் என சிறப்பாகவே இருக்கிறது. வண்ணம் நமக்கு எரிச்சல் தரவே இல்லை.

அக்ஷய திரிதி முதல் பக்கம் கருப்பு பின்புலம் சரியில்லை. தங்க நாணயங்கள் சரியாக தெரியவில்லை. இனி வரும் இதழில் இந்த சாம்பல், கருப்பு வண்ணங்களை பின்புறத்தில் இருக்குமாறு உள்ளதை தவிர்க்கலாம். அடுத்த பக்கம் மீண்டும் அருமையாக வந்து இருக்கிறது. பஜ்ஜி ரொட்டி எல்லாம் நன்றாகவே இருக்கிறது. திரு அல் அமீன் அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. கிளிக்ஸ் பை மீ பக்கமும் நன்றாகவே இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் பக்கங்கள் மிகவும் அருமை. இப்படிப்பட்ட ஒரு தெளிவான படத்தை முதல் பக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களுக்கு அலங்கரித்து  இருக்கலாம்.எனக்கு வண்ண வண்ண எழுத்துகள் மிகவும் பிடிக்கும். சலிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பின்புறத்தில் ராமானுஜர் இருப்பது வெகு சிறப்பு. திண்ணை பாடகி பக்கமும் அருமையாகவே இருக்கிறது.

பாடல் பரவசம் பின்புறம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெண், மாட்டுவண்டி, நிலம் என சிறப்பு படுத்தி இருக்கிறார். கருத்தம்மா என தெரிகிறது. நல்லதொரு முயற்சி. மழலையர் மன்றம் பின்புறம் நன்றாக இருக்கிறது என்றாலும் புத்தகங்கள் பற்றிய பக்கங்களில் அத்தனைத் தெளிவு இல்லை. ஆனால் வடிவமைப்பு வெகு சிறப்பு. மேடைப்பேச்சு பக்கங்கள் வடிவமைப்பு சிறப்பு. கடைசிப் பக்கத்தில் வாலி நன்றாகத் தெரிகிறது.

வண்ணமயமான இந்த சிற்றிதழ் மொத்தத்தில் 88 சதவிகிதம் வடிவமைப்பு வெகு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இது எத்தனை கடினம் என்பதை உழைப்பவரிடத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நான் இதை எழுத எடுத்தக்கொண்ட நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இதை வடிவமைக்க எத்தனை மணி நேரங்கள் செலவிட்டு இருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஒவ்வொரு வரிகளுக்கும் வண்ணம் கொடுத்து பின்புறம் அந்த எழுத்துகளை பாதிக்காது இருக்கும் வண்ணம் வடிவமைத்து ஏதோ  ஒரு இணைய இதழ் வெளியிட்டோம் என இல்லாமல் இத்தனை சிறப்பாக செய்து இருக்கும் திரு அல்  அமீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இங்கே எழுதப்பட்டவை எனது பார்வையில் தென்பட்ட சிறு சிறு குறைகள்தானே  தவிர உங்கள் உழைப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட இயலாது. ஒரு படைப்பினை வெளியிட்டு அதற்கு கிடைக்கும் பாராட்டோ, திட்டோ அது நமக்கானது என எண்ணும்  மனநிலை எனக்கு இருப்பது போல உங்களுக்கும் இருப்பது அறிவேன்.

நமது திண்ணை தமிழில் ஒரு அற்புத இணைய சிற்றிதழ் என கூறிக்கொண்டு ஆசிரியர் திரு ஆந்தைகண்ணன் மற்றும் திரு அல்  அமீன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.