Saturday, 25 April 2015

இறைவனும் இறை உணர்வும் - 5 (From Man to God - Mrs Sushima Shekar)

பகுதி - 4    From Man to God My Father's Spiritual Journey - Mrs Sushima Shekar

நாம் உலகில் எவர் எவருடன் தொடர்பு கொள்கிறோம் என்பது நமது செயல்பாடுகள், நடவடிக்கைகள் பொருத்து அமைகிறது. நான் இணைய உலகில் எழுத வராமல் இருந்து இருந்தால் பலருடைய அறிமுகம் எனக்கு கிடைத்து இருக்காது. எனது உலகம் மிகவும் சிறியது. எனக்கு இறைவன் பிடிக்கும். அதற்காக இறை மறுப்பு கொள்கையாளர்களை எல்லாம் நான் வெறுப்பது இல்லை. அவரவருக்கு அவரவர் அறிவு.

இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் அதிகம் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை இன்னும் மீண்டும் தொடரவில்லை. திடீரென ஒருமுறை புத்தகம் பற்றி சுசீமா அம்மா அவர்கள் நண்பர் ரவியுடன் பேசுகையில் என்ன புத்தகம் எங்கு கிடைக்கும் என்றேன். அந்த புத்தகம் அன்புக்காக வழங்கப்படுவது, விற்பனைக்கு அல்ல எப்படி உங்களிடம் சேர்ப்பது என்றார். அப்போது அர்ச்சகர் ஒருவர் ஊரில் இருந்ததால் அவரிடம் தரச்சொல்லி இருந்தேன். அவரும் புத்தகத்தை என்னிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

இறைவன் உணர்வு என்பது உண்மைக்கு நெருக்கமானது அதை நீங்கள் உணரும் வரை இறைவன் பற்றிய கேள்விக்குறி இருக்கும் என்றே பலர் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இறைவன் உணர்வு இதுவரை வந்தது இல்லை என மிகவும் தெளிவுபடுத்திவிட்டேன், ஆனால் அடுத்தவர்கள் கொண்டுள்ள இறைவன் உணர்வு குறித்து நான் ஒருபோதும் கேலி செய்வது இல்லை, மாறாக எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு இல்லை என்றே கருதுவது உண்டு. இந்த நூல் ஒரு தந்தையின் இறைவன் உணர்வு பற்றி அதுவும் எனக்கு மிகவும் நெருக்கமான ஓம் நமோ நாராயணா என்று சொல்லிச் சென்றது எனக்குள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.

சுசீமா அம்மா அவர்கள் சொன்னதுபோல எவர் ஒன்றை உணர இயலுமோ அவரால் மட்டுமே மற்றவரின் உணர்வுகளை உணர இயலும். பிறரின் நலனுக்கு பாடுபடும் எந்த ஒரு மனிதரும் போற்றப்பட வேண்டியவர் என்பதில் மறு கருத்து இல்லை. தனது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்த சுசீமா அம்மா அவர்களின் தந்தை எப்படி எல்லாம் பிறருக்காக வேண்டினார் அவருள் உணர்ந்த இறைவன் எப்படி என மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலைப் படிக்கும்போது எனது தந்தை நினைவுக்கு வந்தார்.

எங்கள் வீட்டில் எவருக்கேனும் ஏதேனும் நோய் வந்தால் கூட சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் திருநீறு வைத்துவிடுவார். நான் திருநீறு வைக்காமல் வீட்டைவிட்டு எங்கும் செல்வதில்லை. பின்னர் குங்குமம் வைக்க ஆரம்பித்து இருந்தேன். தினமும் இரவில் சாமி கும்பிடும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. என் தந்தை சமீபத்தில் கீழே விழுந்து நடக்க முடியாமல் போனபோது அவரை பார்க்க சென்று இருந்தேன். எனக்கு அழுகை வந்ததை நிறுத்த இயலவில்லை. ஆனால் என் தந்தைக்கோ என்னைப் பார்த்ததில் சந்தோசம். நடந்திருவேன்  என நம்பிக்கை சொன்னவர் இரண்டே வாரங்களில் நடந்தார். எனக்கோ இன்னும் ஆச்சரியம். கடவுள் பற்றி அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும் ஏமாற்றுத்தனம் என் தந்தைக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது. இப்படி வாழ்வில் எப்போதும் எவர் உதவி இன்றி வாழப் பழகிய என் தந்தை சில வாரங்கள் பிறரை நம்ப வேண்டி இருக்கிறதே என மனதளவில் குற்ற உணர்வு கொண்டார் என்றே அறிந்தேன். வயது 86. தனது குடும்பமே முன்னுரிமை என்பதில் என் தந்தை முழு உறுதியாக இருந்தார்.

இந்த நூல் படிக்கும்போது ஒரு பார்கின்சன் நோய் மூலம் பாதிக்கப்பட்ட சுசீமா அம்மாவின் தந்தையின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனால் அவரது மன உறுதி பிறருக்கு வேண்டும் அந்த குணம் வியப்பில் ஆழ்த்தியது. அவரது உண்மையான உழைப்பு தன்னை ஏமாற்றியவர்களை மன்னிக்கும் மனப்பாங்கு என அவரது தெய்வீகத் தன்மையை நூல் முழுவதும் அறிந்து கொள்ளலாம். அவரது இறுதி மரண நிகழ்வு ஒரு நிமிடம் என்னை உலுக்கியது. எனது அன்னை இறந்தபோது அவரது பிள்ளைகள் நாங்கள் எவருமே அருகில் இல்லை. ஆனால்  இறக்கும் நாள் அன்று எல்லோர் கனவிலும் என் அன்னை வந்தார் என்றே எல்லோரும் சொன்னார்கள். எனக்கும் ஆச்சரியம். என் அம்மா இறந்துவிட்டார்கள் என அதிகாலை நான்கு மணிக்கு தூக்கத்தில் நினைக்கிறேன். ஆறு மணிக்கு செய்தி வந்துவிட்டது. என் அம்மாவின் மரணம் குறித்து எண்ணும் போதெல்லாம் எனக்கு அரங்கனின் மீது ஒரு கேள்வி எழும். அது இருக்கட்டும்.

இன்றைய காலத்தில் இந்த இறைவன், இறைவன் உணர்வு எல்லாம் ஒரு கேலிப் பொருளாகவே ஒரு பிரிவினரால் பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் ஏமாற்றுத்தனம். சில ஏமாற்றுக்காரர்களினால் பல உண்மையானவர்களின் மனம் புண்படத்தான் செய்கிறது. எனது சிந்தனைகள் பலரை புண்படுத்தி இருக்கிறது. நான் விமர்சிக்காத பகவத் கீதையா? வள்ளலாரா? மதங்களா? இறைத்தூதர்களா? மகான்களா? அது என் மற்றொரு சிந்தனையின் கோணம். விமர்சிப்பது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் எது எத்தகைய விமர்சனம் எனும் பக்குவம் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் சொன்னார் என ஒரு மனிதன் சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. இறைவனின் அவதாரங்கள் என சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. அந்த கேள்விகளை எல்லாம் என்னால் எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அவை கேள்விகள், அதற்கான விடைகளை  நானே உருவாக்கி அவையெல்லாம் பித்தலாட்டங்கள் என எப்போது நான் முடிவு செய்கிறேனோ அப்போதே எனது அறியாமை அங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அடுத்தவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை நான் உணராத காரணத்தின் மூலம்  புறந்தள்ளுவது என்றான பின்னர் அங்கே உண்மை எனக்கு தெரியாமல் போய்விடுகிறது.

இந்த நூலினைப் படிப்பவர்கள் அதே இறைவன் உணர்வில் பயணிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் படித்ததும் இந்த இறைவனின் உணர்வுக்குத் தொடர்பு உடையவர்கள் நிச்சயம் உணர்வார்கள். எனக்குள் அந்த சலனத்தை இந்த நூல் ஏற்படுத்திச்  சென்றது என்னவோ உண்மை.

இப்போது கூட ஓம் நமோ நாராயணா எனும் மந்திரம் ஒலிக்க  பூஜை அறையில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இறை உணர்வு அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. தெய்வீகம் என்பதை மத சடங்குகளுடன் இணைத்து விடாதீர்கள்.

வெகு சிறப்பாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்தனை படித்தபோது படித்து முடித்த பின்னர் சுசீமா அம்மாவின் தந்தையுடன் பயணித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. எனது அன்புகளும் நன்றிகளும் அம்மா.

புத்தகம் வேண்டுவோர் twitter-ல்  @amas32 அம்மாவிடம் கேளுங்கள்.

Friday, 3 April 2015

நமது திண்ணை ஏப்ரல் மாத இணைய சிற்றிதழ்

நமது திண்ணை  (இணைப்பு) மூன்றாவது மாத இணைய சிற்றிதழ் இன்று வெளியிடப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை ஆசிரியர் மனமுவந்து தெரிவித்து இருக்கிறார். ஒரு இணைய சிற்றிதழ் மூலம்  சிறப்பான படைப்புகளை கொண்டு வருவது அந்த இணைய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் குழுவுக்கு மட்டுமல்ல அதில் எழுதுபவர்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர் தனது பார்வையில் இதை  மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.  மேலும் தமிழ் எழுதுபவர்களை இது உற்சாகம் கொள்ளச் செய்யும். தமிழ் கீச்சர்கள் சந்திக்க இருக்கும் விழா ஒன்று குறித்த அறிவிப்பு இதில் இருப்பது ஆச்சரியம் அடையச் செய்தது. உண்மையிலேயே இந்த இணைய சிற்றிதழ் தமிழ் எழுத்துக்காக பெரும் பங்காற்ற இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆசிரியருக்கு பாராட்டுகள்.

தமிழ் கீச்சர்கள் பற்றி நான் விரிவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. என்னால் புரிய முடியாத ஓர் உலகம் அங்கு உண்டு. அந்த உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த இணைய சிற்றிதழ் காட்டும் உலகம் எனக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அதில் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன்.  இந்த சிற்றிதழின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வெயில் காலத்தை குறிப்பிடும் வண்ணம் குளிர்ச்சியான பழ வகை, நொங்கு போன்றவைகளை கொண்டு மிகவும் அழகாக சிந்தித்து இருக்கிறார்கள். சிற்றிதழுக்கென உருவாக்கப்பட்ட வடிவம் சிறப்பு. அருமையாக வடிவமைப்பு செய்து வரும் நண்பர் அல் அமீன் அவர்களுக்கு பாராட்டுகள். எப்படி எல்லாம் இந்த இணைய சிற்றிதழ் உருவாகிறது அதற்கான பின்னணி என்ன என்பதை அறியும் போது  பிரமிப்புதான்.

முதலில் நாம் காண இருப்பது சுஷீமாசேகர் அம்மாவின் 'குகன்' எனக்கு இந்த குகன் பற்றி முன்னரே அறிந்து இருந்தாலும் பல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும் அதற்கு மிக்க நன்றி அம்மா. மொத்தமாக ஒரு கதை படிப்பது என்பது வேறு. அதில் ஒரு கதாபாத்திரம் குறித்து படிப்பது வேறு. ஒரு படகோட்டிக்கு குகப் பெருமாள் எனும் பட்டமெல்லாம் அன்பினால் மட்டுமே சாத்தியம் என்பதை திருக்குறள் மூலம் ஆரம்பித்து வால்மீகி சொல்லாத விசயங்களை கம்பர் சொன்னார் என முடித்தபோது அருமை என சொல்லாமல் எவரும் இருக்கமாட்டார். குகன் பற்றிய வர்ணனை கம்பர் பார்வையில் இருந்து அம்மாவின் பார்வை அருமை. நீங்கள் என்றுமே பார்க்காத ஒருவர் மீது பிறர் சொல்வதைக் கேட்டு அன்பு கொள்வீர்களேயானால் நீங்களும் குகப் பெருமாள் தான். அடடா! இன்றுதான் திருமங்கையாழ்வார் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அதே திருமங்கையாழ்வார் குறிப்பிட்டு ஒரு பாசுரம். என்ன தவம் செய்தனை! இந்த உலகம் கொஞ்சம் விசித்திரமானது, நாம் புரிந்து கொண்டால் விசாலமானது. குகனின் பண்பு நலன்கள், பரதனிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதெலாம் படிக்க படிக்க நமக்கே அப்படி இருக்க ஓர் ஆசை வரும். பாராட்டுகள். இன்னும் பல அதிசய மனிதர்களை இந்த சிற்றிதழ் காட்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்து விருதுநகர். எனது தந்தை நடந்து சென்று படித்த ஊர். எனது கைராசி மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி இருக்கும் ஊர். சிறுவயதில் கை முறிந்து லைசாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர். என் அம்மா, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்த ஊர். திரைப்படம் பார்த்துவிட்டு நாங்கள் தொலைந்து போனதாக பிறரை எண்ண வைத்த ஊர். இப்படிப்பட்ட எங்கள் பக்கத்து ஊரை செல்வி. நந்தினி எங்கள் ஊர் என எழுதி இருக்கும் விதம் என்னை அந்த ஊருக்கே மீண்டும் அழைத்துச்  சென்றது. எத்தனை நினைவுகளை இந்த பதிவு கீறிவிட்டது என எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

 எனது முதல் நாவலில் இந்த மாரியம்மன் கோவிலை மனதில் வைத்தே எழுதினேன். என் பேரு எப்படி இந்த சாமிக்கு தெரியும் என்பது கதைநாயகனின் கேள்வி. கதைநாயகி சொல்வாள், அணுவுக்கும் அணு கூட அந்த சாமிக்கு தெரியும் என்பது போல ஒரு காட்சி. அப்படி பட்ட அந்த கோவில் சிறப்பு என அந்த பங்குனி மாதம் விழாவை குறிப்பிட்டது நாங்கள் மாட்டுவண்டியில், ட்ராக்டரில் சென்ற காலங்களை நினைவில் கொண்டு வந்துவிட்டது. இதை நாங்கள் அஞ்சாம் திருநாள் என்றே அழைப்போம். நான் சிறுவயதில் சென்றதால் அவர் குறிப்பிட்டது போல காதல் மங்கையர்களை கண்டது இல்லை. அப்போது எல்லோரும் அக்காக்களாக கண்ணுக்குத் தெரிந்து இருப்பார்கள். பொருட்காட்சி என்றால் மதுரை தான் என்றாலும் இங்கேயும் இந்த விழாவினை முன்னிட்டு விருதுநகர் ஜொலிக்கும் என்பது கண்ணில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

கல்வி. இவர் விருதுநகர் பற்றி எழுதி இருக்கிறார் என்று சொன்னபோது நிச்சயம் கல்வி பற்றி இருக்கும் என்றே எண்ணினேன். ஆமாம், அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. நான் படித்த காலத்தில் கூட கல்வியில் முதலிடம், இப்போதும் தான். எங்கள் கரிசல் மண் அப்படி. விழுந்து விழுந்து படிப்போம். கல்வி காலங்களை கொண்டு வந்து காட்டியதற்கு மீண்டும் நன்றி. விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போடு செல்லக்கண்ணு என பாடும் அளவுக்கு பெருமிதம் உள்ள ஊர் என சொல்லிவிட்டார். ஆமாம், எங்கள் ஊர் வியாபார ஸ்தலம் கூட அதுதான். விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் முதற்கொண்டு. கல்வித்தந்தை காமராஜர் என ஒரு குறிப்பு போதும் ஓராயிரம் கட்டுரைகள் எழுதலாம் என மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டார்.

அதானே, எங்கே புரோட்டா இல்லாமல் போகுமா? அதுவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நான் எண்ணெய் புரோட்டா வாரம் ஒருமுறை சாப்பிட்டு விடுவேன். மதுரை புரோட்டா தினமும் படித்த காலத்தில் சாப்பிட்டது உண்டு. என்னதான் மதுரை புரோட்டா என்றாலும் அவர் சொன்னது போல விருதுநகர் விருதுநகர் தான். பங்குனி திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தது அன்பின் வெளிப்பாடு. திருமணம் ஆகாதவர்களை அழைக்கிறார் என நீங்கள புரிந்துகொண்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. அருமையான எழுத்துங்க, பாராட்டுகள். நந்தினி என்றால் தமிழ் ட்விட்டர் ட்ரென்ட் செட்டர் என்ற ஒரு பெயர் உண்டு. அதை இங்கும் நிரூபித்துவிட்டீர்கள். அவரது கள்ளம் அற்ற உள்ளம் போலவே அன்பு சிறப்பினை சொல்லி இருக்கிறார். சிறப்பு பார்வை சரிதானா என நந்தினிதான் இனி சொல்லவேண்டும்.

களவு போகும் உழவு எனும் கவிதை - ரிஸ்வான். உழவுத்தொழில் நசிந்து வருகிறது. ஏன்  இப்படி இருக்கிறீர்கள் என சமூக அக்கறை சொல்லும் அருமையான கவிதை. உழைப்பை நம்பி கலப்பை சுமந்து என தொடங்கி ஓர் உழவன் மண்ணில் விதையாவான், அவள் மனைவி விதையாவள் என்பது எத்தனை வலி தரும் என அந்த மண்ணில் வசிப்பவரை கேட்டுப்பாருங்கள். அந்த வலியை  வார்த்தைகளால் உணர வைத்துவிட்டார்.

நச்சுனு சிரிங்க. எல்லாமே சிறப்பாக சிரிக்க வைக்கும் ரகம் தான். எத்தனை நகைச்சுவை மிக்க மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சாமி சத்தியமா என்பது நல்ல விழிப்புணர்வு கதை. விஜய் என்பவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் இப்படி திருந்திவிட்டால் இந்த உலகம் எப்படி சிறப்பாக இருக்கும். ஒருவர் திருந்த ஒரு சிறு பொறி போதும். அந்த பொறி எப்படி பற்றிக்கொள்கிறது என அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். பொன்ராம்  அவர்களின் நீரின்றி அமையா உடம்பு அருமையான பதிவு. தண்ணீர் சிகிச்சை முறை என்ற ஒன்று உள்ளது. முறையாக எல்லாம் செய்துவர எல்லாம் சிறப்பாக இருக்கும், நல்ல தகவல்கள் கொண்ட பகுதி. இன்னும் பல விசயங்கள் எழுதி இருக்கலாமோ என தோணியது. நற்பணி தொடரட்டும். ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள் சிந்திக்கும் வண்ணம் ஆங்காங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

கவிஞர் இளந்தென்றல் திரவியம் அவர்களின் அழகிய அழுத்தமான பலகாரக் கிழவி  முக்கு கவிதை. ஒரு கவிஞரின் கவித்தன்மைக்கு ஒரு சில வரிகள் போதும். அந்த கடைசி வரிகள்தான் பலரது மூக்கை உடைக்கும் வரிகள். இன்றுவரை பிள்ளைகள் ஏதும் பெறாத எந்த பெண்ணும் பலகாரக் கிழவியாய் வந்தது இல்லை. எங்கள் ஊர் அரசுப்பள்ளியினை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள் சார். அட்டகாசம். பாராட்டுகள். அடுத்து சத்யா அவர்களின் அவள். ஆஹா அவள் உங்கள் கைகளில் அழகாகவே தவழ்ந்து இருக்கிறாள். கவிதையில் காதல் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

கீர்த்திவாசன் மற்றும் சக்திவேல் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த சிற்றிதழில் முடிந்த மட்டும் தமிழ் தலைப்பு இருப்பது நலம் என்பது எனது எண்ணம். பழமொழியும் அர்த்தங்களும் எழுதுவது எவர் எனத் தெரியவில்லை. மிகவும் சிறப்பு. போக்கத்தவன், வக்கத்தவன் என்பதான எனது அர்த்தம் வேறாக இருந்தது. ஆனால் உண்மை அர்த்தம் இப்போதே கண்டு கொண்டேன். நன்றி. வழக்கம்போல விடுகதைகள் பதில் சில தெரிந்தது. அதோடு மஹியின் பாராமுகம், பாலைவனம் ஒரு நல்ல கவிதை. பெண்கள் இதுபோன்ற கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட கவிதைகள் தான் பலரால் எழுதப்படுகின்றன. நானும் ஒன்பது வருடங்களாக பார்க்கிறேன், புரட்சி கவிதாயினிகளை காண இயலவில்லை. ஏதேனும் சொன்னால் எழுத வருவதுதானே வரும் என ஹூம் என சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

மாறா மரபு. நான் இந்த தொடர்கதை குறித்து என்ன சொல்வது. ட்விட்டரில் கதை சொல்வது எனது வழக்கம். கதைசொல்லி என பட்டம் கொடுத்து திருமதி.மீனம்மாகயல் தந்த பரிசுதான் நான் எனது பெயர் கொண்டு இந்த வலைப்பூவில் அலங்கரித்து வைத்து இருப்பது. 'சிறந்த கதை சொல்லி' அல்ல. 'கதைசொல்லி', அவ்வளவுதான். ஒரு கதையை எந்த முகாந்திரம் இல்லாமல் தொடங்குவேன். ஒரே ஒரு வரி கதைக்கான கரு. அப்படியே அதை ஒரு நாடகத்தொடர் போல வளர்த்து செல்வேன். அப்படி ட்விட்டரில் எழுத ஆரம்பித்த கதை இது. திடீரென நிறுத்தி நாளைத் தொடரலாம் என இருந்தபோது நண்பர் அல் அமீன் கேட்டதும் மறுக்க மனம் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் எவரேனும் திட்டினால் நிறுத்திக்கொள்ளும் உரிமையும், கதையில் மாற்றம் செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்றேன். ஆனால் அவர் தைரியம் தந்த காரணமே இந்த கதை இந்த சிற்றிதழில். நன்றி சார். கதை தலைப்பு என்ன எனக் கேட்டார். உடனே மாறா மரபு என  சொன்னதுதான், தலைப்பு.  இந்த கதையை தொடர்கதையாக வெளியிடுவோம் என நண்பர் அல் அமீன் அவர்கள் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. என்னவொரு நம்பிக்கை! ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட எழுதுபவருக்கு என்ன சுதந்திரம் வேண்டும்? இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது ஆங்கில இதழில் எனது எழுத்து வந்தது இல்லை. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தந்த அவருக்கும் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் எழுத்துக்கான பெரும் பாக்கியம் அது.

ஆஹா பிரமாதம் குழந்தைகள் படம். அதுவும் மாஸ்டர் கானபிரபா அவர்களின் எழுத்தும், சுஷீமா அம்மாவின் எழுத்தும் என்னவொரு பொருத்தம். மனதை கொள்ளைகொண்டன எழுத்தும் குழந்தைகளும். கருப்பையா அவர்களின் வாசிப்பு அனுபவம் கேள்விபட்டது உண்டு. அவர் ஒரு அற்புத கவிஞர். அவருக்குள் ஒரு அற்புத எழுத்தாளர் இருக்கிறார். அவர் பார்வையில் சுமித்ரா எனும் நாவல் குறித்த அவரது அனுபவம் நம்மை அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் வண்ணம் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். அருமைங்க. பாராட்டுகள். அதுவும் நூல் விமர்சனம் முடிக்கும்போது எழுதப்பட்ட வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சிந்தனை போல உள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். சுமித்ரா ஒரு பிரமிப்பு.

சாப்பாடு பக்கம். நளபாகம் ரவி அவர்களின் அக்கி ரொட்டி தயாரிப்பு. பெயரே வித்தியாசம். சப்பாத்தி போல ஆனால் இது சப்பாத்தி அல்ல என அழகாக சொல்லி இருக்கிறார். மைதா மாவு இல்லாதபோது இந்த அரிசி மாவு கொண்டு அக்கி ரொட்டி செய்து மனம் மகிழுங்கள். பாடல் பரவசம் மூலம் நம்மை பரவசபடுத்தி இருப்பவர் செல்வி.உமாகிருஷ். எடுத்துக்கொண்ட பாடல் வெகு சிறப்பு. மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த ரஜினி. நான் இப்படி எல்லாம் ரசித்தது இல்லை. எனக்கு ரஜினி திரையில் இருந்தால் போதும், ரஜினியாகவே நான் உணர்வேன். இவரது எழுத்து வாசித்த பின்னர் ரஜினியை யோசித்துப் பார்த்தேன். பிரமாதம். வரிகள், இசை சிலாகித்த விஷயம் சரி.

ஒரு கவிஞர் என்ன மனோபாவத்தில் எழுதினார் என்பது கவிஞருக்கே வெளிச்சம். அவர் குறிப்பிட்டது போல பாடியதில் தவறு சாத்தியம்தான். ஆனால் இது ஒரு கவிஞரின் எழுத்து என வரும்போது நினைத்தாயோ என்பதை விட நிலைத்தாயோ ஒரு படி மேல்தான். அப்படித்தான் புரிந்து கொண்டேன் என்கிறார். அதுதான் சரி. மறப்பேனா என்ற ஒரு மன நிலையில் நீ நிலைத்துவிட்டாயா? என்ன ஒரு அக்கிரமம் என்பது போல அந்த வரியை எடுத்துக்கொள்ளலாம். அட! இத்தனை தூரம் வரிகள் சிலாகிப்பார்களா என ஆச்சரியமூட்டும் விசயங்கள்.

தேசிய விருது குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி. இறுதியாக ஆசிரியரின் தெரிந்த பிரபலங்கள் தெரியாத உண்மைகள். சந்திரபாபு, நான் ரசித்த ஒரு அற்புத கலைஞன். பல தகவல்கள் அறிய முடிந்தது.

ஆக மொத்தத்தில் இந்த சிற்றிதழ் ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. எல்லோர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இணைய சிற்றிதழ். நமது எழுத்தை எப்போது இந்த சிற்றிதழ் ஏற்றுக்கொள்ளும் என பலரை எண்ண வைத்து இருப்பது  இந்த சிற்றிதழ் பெற்றுவிட்ட மாபெரும் பெருமை. சிறந்த வடிவமைப்பு, நல்ல கருத்துகள் தாங்கி வந்து இருக்கிறது என்றே சொல்லி மகிழ்வர். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தினைத் தாண்டி பாருங்கள். பிரமிக்க வைத்து இருக்கிறார் நண்பர் அல்  அமீன்.

அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

'தமிழ் வளர்த்த நமது மண்ணை 
தமிழ் கொண்டு சிறக்க 
வைப்பது நமது திண்ணை' 

நன்றி 

Thursday, 2 April 2015

வாடினேன் வாடிவருந்தினேன்

'பக்தா'

'வாருங்கள் சாமி, வந்து அமருங்கள், நான் வெகுவாக திருந்திவிட்டேன், இப்போது எல்லாம் எவருடனும் நான் அதிகம் பழகுவது இல்லை. என் வேலை உண்டு நான் உண்டு என இருக்கிறேன். மனமும் நிம்மதியாக இருக்கிறது. அன்று நீங்கள் சொன்னபிறகுதான் என்னுள் இத்தனை மாற்றம்'

'பக்தா'

'ஆமாம் சாமி, நான் இப்போது எல்லாம் எல்லா நேரங்களிலும் நாலாயிர திவ்விய பிரபந்தங்கள் மட்டுமே கேட்கிறேன். அதிலும் திருமங்கையாழ்வாரின் பாடல் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம் சாமி. அதிலும் முதற்பாடல் தொடங்குகிறதே எத்தனை பேரானந்தம்'

'பக்தா'

'மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி 
தன்னாகித் தன்னினருள் செய்யும் தலைவன் 
மின்னோர் முகில்சேர் திருவேங்கடம் மேய 
என்னானை யென்னப்பன் என்னெஞ் சிலுளானே 

இந்த பாடல் எத்தகைய தன்மை கொண்டது பார்த்தீர்களா சாமி. ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு வாழ்க்கையெல்லாம் அழிந்து போனதே என்று அழுந்தி அழுது ஓம் நமோ நாராயணா எனும் நாமம் கண்டு கொண்ட பின்னர் எத்தகைய சிந்தனை வந்து இருக்கிறது. அதைப்போலவே எனக்கும் இந்த காதல், கல்யாணம் எல்லாம் வேண்டாம் என முடிவு எடுத்து உங்களைப் போல நானும் ஒரு சாமியாராக மாறலாம் என முடிவு எடுத்துவிட்டேன் சாமி. என்னை நீங்கள் தான் உங்கள் சிஷ்யராக ஏற்றுக்கொண்டு எம்மை ஒரு 'சின்ன சாமியாக' மாற்ற வேண்டும்.

'பக்தா'

'உண்மையிலேயே சொல்கிறேன் சாமி. என் மனம் இத்தனை நாளாக அந்த பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை காதலித்து களித்து  இருந்தேன். நீங்கள சென்ற முறை சொன்னபோது கூட நான் உங்களை மிகவும் வெறுத்தேன். ஆனால் நீங்கள் சொன்னது எத்தனை உண்மை என புரிந்து கொண்டேன். இறைவன் புகழ் பாடியவர்களில் சிலர் எப்படி பெண்பித்து பிடித்து வாழ்வை சீரழித்தார்கள் என உங்களுக்கு நான் சொல்லியா தெரியவேண்டும், நீங்கள் சாமியாராக மாறியது பலன் உணர்ந்தேன்'

'பக்தா'

'பாருங்கள் சாமி, எப்படி எழுதி இருக்கிறார் என.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம் 

ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர்ப்பணைமுலை துணையா 
பாவியெனுணரா தெத்தனை பகலும் பழுதுபோயோழிந்து போயின நாள்கள் 
தூவிசேரன்னம் துணையோடும் புணரும் சூழ்புனற்குடந்தையே தொழுது என் 
நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

 இப்படி எவராவது இன்று எழுதிவிட முடியுமா? சொல்லுங்கள் சாமி. தான் எப்படி எல்லாம் பெண்கள் மீது  மோகம் பிடித்து அலைந்தேன் என எப்படி சாமி இவரால் இப்படி சொல்ல முடிந்தது. எனக்கு இந்த இருபத்தி இரண்டு வயதில் இந்த ஞானம் வர இவரே காரணம். அவளை எண்ணி எண்ணி அவள் பின்னால் நான் அலைந்து திரிந்தேன். அவளிடம் காதல் சொல்லி, அவளும் காதல் ஏற்று இருக்கும்பட்சத்தில் நீங்கள் வந்து சொன்னீர்கள். இவரது பாடல்கள் படித்த பின்னரே நல்லவேளை இந்த சம்சார உலகில்  சிக்கிவிடாமல் தப்பிக்க வழி செய்து கொண்டேன். என்னை அழைத்து செல்லுங்கள் சாமி, உங்கள் குருகுலத்தில் தங்கிவிடுகிறேன்'

'பக்தா'

'உங்களை எப்படி எல்லாம் வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைத் தேடி தேடி வந்து கொண்டே இருந்தீர்கள். ஒருமுறை வைகுண்டம் கூட அழைத்தீர்கள் நான் தான் மறுத்துவிட்டேன். இப்போது எங்கே வேண்டுமெனினும் அழைத்துச் செல்லுங்கள் சாமி'

'பக்தா'

'சாமி, என்னை நீங்கள் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீர்களே, நீங்கள் பேசுங்கள் சாமி'

'பக்தா'

'சொல்லுங்கள் சாமி'

'எனக்கு அடுத்த மாதம் திருமணம், நானும் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன் பார்

நாராயணா நரனே உன்னை பின்பற்றி பின்பற்றி பலவும் கண்டேன் 
பாராயணம் செய்து கொண்ட புண்ணியம் எனக்குப் பின் எவர் உன்னை 
ஆராதனை என்போல் பண்ணக்கூடும் என்றே அவளோடு கலவி கொண்டு 
சேராதனை சென்று அடைய கண்டுகொண்டேன் அவளது நாமம்

உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா பக்தா. சம்சாரத்தில் இருப்பவர் சாமியாராக மாறுவதும், சாமியாராக இருப்பவர் சம்சார உலகில் செல்வது இவ்வுலக இயல்பு. மறக்காமல் வந்துவிடு'

'ஐயோ சாமி'

என்னடா ஆச்சு, தூக்கத்தில இப்படி ஐயோ சாமின்னு கத்துற, மணி பாரு எட்டு ஆகுது. எப்ப பாரு அந்த சாமியாரு கனவு கண்டுகிட்டு, புலம்பிகிட்டு. ரெண்டு தடவை சுபா போன்  பண்ணிட்டா, நீ கிளம்பிட்டியா, இல்லையானு. சீக்கிரம் கிளம்பி அவளை கூப்பிட்டு வேலைக்குப் போகற வழியைப் பாரு. அடுத்த மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க பேசி வைச்சிருக்கோம்.

இனி எப்படி அம்மாவிடம் சொல்வது, நான் சாமியாராகப் போக இருக்கும் கனவு வந்தது என்று. எப்படி அந்த திருமங்கையாழ்வார் இப்படி மாறி இருப்பார் என நினைத்து அம்மாவிடம் கேட்டேன்.

'ஏன்மா ஒருத்தர் பெண் மீது ஆசை கொண்டு பின்னர் கடவுளே வழினு எதுக்குமா போவாங்க'

'ம்ம்ம்ம் அது அந்த பொண்ணு கொடுக்கிற டார்ச்சர் தாங்காமாதான் அப்படி போவாங்க, போயி கிளம்பற வழியைப் பாரு'

அம்மா சொன்னது உண்மையாய் இருக்குமோ?!








Tuesday, 17 March 2015

மிட்டாய் பொண்ணு

தினந்தோறும் தவறாமல் பள்ளிக்கு செல்லும் முன்னர் அந்த கடை முன் வந்து நின்றுவிடுவாள். கடைக்காரர் முகம் சுளிக்காமல் ஒரு மிட்டாய் கொடுப்பார். இப்படி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுத்தா எப்படிபா வியாபாரம் பண்ணுவ என கேட்டால் வேற யாரும் வந்து நிக்கிறத பாத்த என கடைக்காரர் சிரிப்பார். அவள் ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் சென்றபோது மாமா எனக்கு தினமும் மிட்டாய் தந்தால் படிச்சி எல்லா காசு தரேன் என சொன்னதற்காக கடைக்காரர் தருவது என எண்ணுவது தவறுதான்.

அவளுக்கு அந்த மிட்டாய் ஒரு ஆனந்தமும் உற்சாகமும் தந்து கொண்டிருந்தது. மாதக்கடைசியில் 15ரூபாய் ஆயிருச்சி மாமா என்றபோது இதைப்போய் கணக்கு வைத்து இருக்கிறாளே என கடைக்காரர் ஆச்சரியம் அடைந்தது என்னவோ உண்மை. சரிம்மா, நல்லா படி என்பதான பதில் அவளுக்கு சந்தோசம் தந்தது.

225 சதுர அடியில் ஒரே ஒரு அரை கொண்ட மணல், கல் கொண்டு கட்டப்பட்ட கூரை வீடுதான் அவள் வீடு. விறகு அடுப்பு. கயிறு கட்டில் ஒன்று. மர  அலமாரி ஒன்று. தாத்தா பாட்டி படங்களோடு கருமாரி அம்மன் படம் மாட்டிய மேற்கு சுவர். அவள் இவர்களை வணங்காமல் பள்ளி செல்வதில்லை. விவசாய கூலி தொழில்.

ஒன்பது மணி வரை படிப்பாள். வரவு செலவு என அவள் கணக்கு எழுதுவாள். பெற்ற பிள்ளையின் அறிவு கண்டு கொண்ட அலுப்பு எல்லாம் ஓடிவிடும். தட்டாங்கல்  பிடித்தமான ஒரு விளையாட்டு. அம்மாவோடு சிறிது நேரம் விளையாடுவாள். அப்பாவோடு கதை பேசுவாள். வயசுக்கு வந்துட்டா சொந்தக்காரங்களுக்கு சொல்லணுமே என்ற அம்மா சொன்ன வாக்கியம் ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை. எனக்கொண்ணும் செய்ய வேணாம்மா என்ற அவள் வார்த்தை அம்மாவுக்கு வலித்தது. சின்னபிள்ளையாய் பேசாம இரு என்ற அம்மாவின் அதட்டல் அவள் அமைதி அடிய போதுமானதாக இருந்தது.

ஆறாம் வகுப்புக்கு நடந்தே பக்கத்து ஊர் செல்ல வேண்டி இருந்தது. அதே மிட்டாய் தினம் வாங்கிச்  செல்வாள். அவள் கடன் கணக்கு 185 ரூபாய் ஆகி இருந்தது. இதுவரை அம்மா அப்பாவின் கடன் ரூ 5645.25 அக்கி இருந்தது. தனக்கென தம்பி தங்கை இல்லாத குறையை அந்த ஊரில் இருந்த சிறுவர் சிறுமிகள் தீர்த்து வைப்பதாகவே எண்ணுவாள். அவளது அறிவுதனை பள்ளி மெச்சியது. அவளுக்கு இருந்த உதவி குணம் அதிசயிக்க வேண்டிய ஒன்று. தான் கொண்டு வரும் உணவை பள்ளியின் வெளி வாசலில் அமர்ந்து இருக்கும் பாட்டிக்குத் தருவாள்.

முதல்நாள் அந்த பாட்டியை மதியம் பார்த்தபோது அவள் உள்ளத்தில் ஏதோ  ஒன்று தோணியது. சாப்பாடு வேணுமா பாட்டி என்றபோது ஆம் என தலையசைத்த பாட்டிக்கு சோறு தருவது தவறு இல்லை என ஆசிரியரின் அனுமதி பெற்றே தந்து வந்தாள். பாட்டி சாப்பிட்டதும் போய்விடுவார். இப்படியாய் அவள் செய்யும் உதவிகள் பல.

பெரிய பெண் ஆன பின்னர் மிட்டாய் பழக்கத்தை அவள் கைவிடவில்லை. அவள் நன்றாக படித்து பத்தாவதில் நிறைய மதிப்பெண்கள் பெற்றதை ஊரே கொண்டாடியது. பன்னிரண்டு வரை அதே பள்ளி. மாமா இனி எனக்கு மிட்டாய் வேண்டாம் இதோட ரூபாய் 1150 ஆயிருச்சி. பன்னிரண்டு முடிச்சப்பறம் மேற்கொண்டு படிக்க உதவி செய்வீங்களா? அவளது கேள்விக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன்மா, நல்லா படி என்று சொன்னபோது மிட்டாயை விட அதிகம் இனித்தது. பெற்றோரின் கடன் ரூ 854.35 என வந்து நின்றது.

அடுத்த நாள் அந்த கடையை கடக்கும்போது அவளை அறியாமல் அங்கு நின்றாள். காசு கணக்கு வைக்க வேணாம் என கடைக்காரர் மிட்டாய் காட்டியபோது வேணாம் என அவள் மறுக்கவில்லை. கணக்கு வைச்சிக்கிறேன் மாமா என வாங்கிக்கொண்டு நடந்தாள். ஏழு கழுதை வயசு ஆகி போச்சு இன்னும் மிட்டாய் சாப்பிடுது என அங்கிருந்தவர் சொன்னது அவளுக்குள் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை. அந்த மிட்டாய் அவளுக்கான உற்சாகமும் ஆனந்தமும்.

எத்தனயோ பேர் எதுக்குடி அந்த மிட்டாய் தினமும் வாங்கி சாப்பிடுற என கேட்கும்போதெல்லாம் பிடிச்சிருக்கு என்றே சொல்வாள். நீங்களும் வாங்கி சாப்பிடுங்க என பலரிடம் சொன்னாலும் எவரும் தினம் வாங்கி சாப்பிடும் வழக்கம் கொண்டு இருக்கவில்லை. பதினோராவது முடித்து பன்னிரண்டில் அடிஎடுத்து வைக்கும்போதுதான் அவளுக்குள் காதல் உணர்வினை ஒருவன் விதைத்து இருந்தான். அவளுக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. அவனுக்கும் அவளை பிடித்து இருந்தது.

முதன் முதலில் காக்கா கடி கடித்து ஆளுக்கு பாதி மிட்டாயை பகிர்ந்தபோது இதைப்போய் எப்படி சாப்பிடற என அவன் துப்பிவிட்டான். தனக்குப் பிடித்த மிட்டாயை துப்பிவிட்டானே என அவன் மீது கோபம் எல்லாம் அவள் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்து இருக்கிறது என்றே நகர்ந்துவிட்டாள். பன்னிரண்டில் காதலும் படிப்பும் என இறுதி தேர்வு வந்தது. மிகவும் அருமையாகவே எழுதினாள்.

என்னை மறந்துராதே என்ற அவனின் கெஞ்சல் அவளுக்குள் நிறைந்து இருந்தது. பெற்றோரின் கடன் எல்லாம் முடிந்து ரூ 1000 சேமிக்க தொடங்கி இருந்தார்கள். இவளது கடன் ரூ 1520ல் வந்து நின்றது. தேர்வு முடிவு கண்டு மீண்டும் ஊரே கொண்டாடியது. ஆவலுடன் படித்த பல பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்களே எடுத்தார்கள். அவளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வந்தது.

பணத்திற்காக கடைக்காரரிடம் சென்று நின்றபோது எவ்வளவு வேணும் என்று கேட்க ரூ 30000 மாமா என்று அவள் சொன்னதும் சரி வந்து வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார். வீட்டில் எதுக்கு அவ்வளவு பணம் என்று கேட்டு வைத்தார்கள். போயிட்டு வர முடியாதா, அங்கேயே தங்கிதான் படிக்கணுமா என்ற அம்மா அப்பாவின் கேள்விக்கு ரொம்ப கஷ்டம் என்று சொன்னதும் சரி என்றார்கள்.

அவளும் படித்தாள். அவளது கடன் வருடம் வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. கடைக்காரர் ஐந்து வருடங்களுக்கும் பணம் தந்தார். அவளது தந்தை கூலித்தொழில் விட்டுவிட்டு வேறு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று மாதம் ரூ 2000, 3000 என கொண்டு வர கடைக்காரருக்கு கொஞ்சம் கொஞ்சம் கட்டினார்கள். மருத்துவ படிப்பு முடிந்தபோது அவளது கடன் ரூ 1,15,250.40 என்று இருந்தது. இந்த ஐந்து வருடங்கள் மிட்டாய் இல்லாத வருடங்கள் என சொல்ல முடியாது. மொத்தமாக வாங்கி வைத்து ஒரே ஒரு மிட்டாய் தினம் சாப்பிட்டு வரத்தான் செய்தாள்.

பன்னிரண்டாவது படித்தபோது காதல் கொண்ட பையன் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் வீடு வசதி பார்த்து வேண்டாம் என சென்று விட்டார்கள். அந்த பையன் எவ்வளவோ சொல்லியும் அவனின் பெற்றோர் கேட்கவில்லை. நான் வேலைக்கு சென்று சம்பாதிப்பேன் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர்கள் கேட்பதாக இல்லை. அவன் அவனின் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்வேன் என சொன்னதும் வேறு வழியின்றி சரி என்றார்கள்.

மாமா, கல்யாண செலவுக்கு பணம் வேண்டும் என்று நிற்க எவ்வளவு வேணும் என்றார். ஒரு ஐந்து லட்சம் வேணும் மாமா என்றதும் சரி வந்து வாங்கிக் கொள் என்றார். கடைக்காரர் தான் இவளுக்கு பணம்தருவது தனது மனைவிக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொண்டார். அவளது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடித்த கையேடு வேலைக்கும் சென்றாள். கடைக்காரர் அவளது திருமணத்திற்கு நிறைய மிட்டாய்கள் கொண்டு வந்து பரிசாக தந்தார். அவளுக்கோ அத்தனை சந்தோசம்.

அவனிடம் தனது மிட்டாய் கதை எல்லாம் சொன்னாள். அவன் அவனின் பெற்றோர்களிடம் சொல்லி அத்தனை பணத்தையும் கடைக்காரரிடம் கொண்டு வந்து கட்டினான். மாமா, இவர் எதுவும் கடன் இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார், ஆனா அந்த மிட்டாய் கணக்கு மட்டும் நான் தரேன் என்றாள். என்னம்மா, இன்னுமா அதை கணக்கு வைச்சிருக்க என்றார். உனக்கு நான் எவ்வளவு வேணுமினாலும் செய்யலாம்மா, நீ என்னோட குல தெய்வம் என்ற கடைக்காரர் சொன்னது அவளுக்கு புரியவில்லை. என்ன மாமா குல தெய்வம்னு சொல்றீங்க என்றாள். அது அப்படித்தாம்மா, மறக்காம உனக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுமா என்றார். சரி மாமா என்றாள்.

அவளது பெற்றோரை தங்களோடு வந்து இருக்கச் சொன்னான் அவன். அவர்களோ அந்த கூரை வீடு, வேலை என விட்டுவர மறுத்தார்கள். காலம் நகன்றது. மிட்டாயை நிறுத்தியபாடில்லை. ஒரு பையன், ஒரு பொண்ணு என அவள் தாயானாள். குழந்தைகளுக்கு பத்து வயது மேல் ஆனது.

ஒருமுறை அவனும் அவளும் வீதி வழியே சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் ஒருவன் வம்பு செய்து கொண்டு இருந்தான். அதை கண்டு அவள் அங்க பாருங்க ஒருத்தன் வம்பு பண்றான். நீ பேசமா வா, எல்லோரும் பேசாமத்தான போறாங்க என்றபோதும் என்னங்க அந்த பொண்ணை  அடிக்கிறாங்க, வாங்க என்னன்னு பார்ப்போம். சொன்னா கேளு வேணாம். என்னவாச்சும் பண்ணிட்டு போறாங்க. அவளுக்கு மனம் கேட்பதாக இல்லை.

என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசறீங்க என அவனை இழுத்துக்கொண்டு அங்கே சென்றாள். அவர்களுக்கான வாக்குவாதம்தனை நிறுத்த சொன்னாள். அங்கிருந்தவனோ அவளை தகாத வார்த்தையால் திட்டினான். ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிறியே அறிவில்லை என அவள் திட்ட அங்கிருந்தவன் கோபம் ஆனான். தன்னிடம் இருந்த ஆயுதம் கொண்டு அவளை தாக்கினான். அங்கிருந்தவனை அவளது கணவன் தடுக்க போக அவளது கணவனுக்கும் அடி விழுந்தது. இருவருக்கும் சரமாரியாக அடி விழுந்தது.

அதற்குள் அங்கிருந்தவர்கள் கூடிட அங்கிருந்தவன் ஓடினான். அந்த பெண்ணிடம் கேட்க அவன் தன காதலன் எனவும் தனக்கு இடைஞ்சல் தந்ததாக கூறினாள். இவர்கள் வராவிட்டால் அவளது காதலன் அவளைக் கொன்று இருக்கக்கூடும் என்று சொன்னாள்.

அடிபட்ட காயத்திற்காக அவள் அவளது கணவன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். எவருக்கோ உதவி செய்யப் போய்  இப்படி ஆகிவிட்டதே என அவளது கணவன் நான் சொல்ல சொல்ல கேட்காம பாரு என்றான். ஒவ்வொருத்தரும் இப்படி ஒதுங்கி போறதால பெண்ணின் மீதான தாக்குதல் அதிகம் ஆகுது என்றாள். காயத்திற்கு மருந்து எல்லாம் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு இப்படி ஆனதை ஊரில் கேள்விப்பட்டு அவளது பெற்றோர் கடைக்காரர் எல்லாம் வந்தார்கள்.

இந்தம்மா மிட்டாய் என்று தர மாமா மறக்காம கொண்டு வந்துட்டீங்க என்று சொல்ல அங்கு எல்லோரும் சிரித்தார்கள். மம்மி யூ ஆர் த மிட்டாய் பொண்ணு என அவளது மகள் சொல்லி சொல்லி சிரித்தாள். (முற்றும்)

------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதையை இந்த மிட்டாய் பொண்ணு இறந்து போவதாக சோகமாக முடிக்க நினைத்தேன். அது உண்மை நிகழ்வை எழுதுவது போல ஆகிவிடும் என்பதால் தவிர்த்தேன்.  இந்த கதையில் சொல்லப்பட்ட எல்லாமே கற்பனைதான். ஆனால் கடைசியில் நடந்த விஷயம் சற்று உண்மையானது. எவரோ வாக்குவதம்தனில் ஈடுபட தனது கணவனுடன் சென்றபோது எனக்கென செல்லாமல் அவர்களுக்குள் சண்டையை விலக்கி விட சென்று அந்த கொடூரனால் தாக்கப்பட்டு உயிர் இழந்த ஒரு பெண்ணின் நிகழ்வு தான் இந்த கதையை எழுத வைத்தது. அந்த பெண்ணின் கணவனுக்கும் நிறைய காயங்கள்.

வேடிக்கைப் பார்ப்பது நல்லது என இந்த சமூகம் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இது போன்ற வீரம் நிறைந்த பெண்மணிகள் இந்த உலகிற்கு வேண்டும். அப்போதுதான் கயவர்கள் கட்டுக்குள் இருப்பார்கள். அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, 14 March 2015

நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழ் ஒரு பார்வை

மின்னிதழ் நமது திண்ணை இங்கே

எனக்கு தமிழ் தாங்கி வரும் இதழ்களில் ஆர்வம் எப்போதோ முற்றிலும் குறைந்து போனது. குமுதம், ஆனந்தவிகடன் எல்லாம் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கேனும் தமிழ் இதழ் வாசிக்க கிடைத்தால் உள்ளே சினிமா சினிமா மட்டுமே. அதை குறை கூறவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்ற இதழ்கள் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தவறான விண்ணப்பம் ஆகும்.

திரு. அல் அமீன் அவர்கள் இந்த நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழை எனது பார்வைக்கு கொண்டு வந்தார். அவருக்கு நன்றி. இது ஒரு மாத மின்னிதழ். சிற்றிதழ் என்பதால் மிக மிக குறைவான பக்கங்கள் எனினும் நல்ல விசயங்கள் உள்ளடக்கி இருந்தது. 17 பக்கங்கள் கொண்ட முதல் இதழ் பிப்ரவரியில் வெளிவந்து இருக்கிறது. 21 பக்கங்கள் கொண்ட அடுத்த இதழ் மார்ச் மாதம் வெளிவந்து இருக்கிறது. முதல் இதழில் மாதம் குறிப்பிடவில்லை. 

முதலில் என்ன இருக்கிறது எப்படி இருந்தது என பார்த்துவிடும் முன்னர் இந்த மின்னிதழின் ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன் முயற்சியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அவரது உரையில் தமிழை வளர்க்கும் ஆர்வம், தமிழ் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் என குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு உறுதுணையாக இந்த மின்னிதழை சிறப்பாக வடிவைமக்க உதவிய நண்பர் திரு அல் அமீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

முதல் இதழின் அட்டை பக்கத்தில் பல முகங்கள் தென்படுகின்றன. அதில் எனக்குத் தெரிந்த முகங்கள் பலர் இருந்தார்கள். இதழின் உள்ளே பல படங்கள் இருக்கின்றன. அவை ஏனோ தெளிவின்றி காணப்படுகிறது. இரண்டாவது இதழில் உள்ளிருக்கும் படங்களில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என சொல்லலாம். இரண்டாவது இதழின் அட்டைப்படத்தில் தமிழர் விளையாட்டு குறித்து காணப்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் நாங்கள் புளியம்பழ முத்துக்கள் வைத்து தான் விளையாடி இருக்கிறோம். தாயம் விளையாடுவதற்கு கூட ஒரு பக்கம் உரசப்பட்ட முத்துகள் உபயோகித்து இருக்கிறோம். சோசியர் உபயோகிக்கும் முத்துகள் பல்லாங்குழியில் இருப்பது ஆச்சரியம். அட்டைப்பட வடிவமைப்பை சற்று மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதைப்போல 'நமது திண்ணை' என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எல்லா இதழிலும் ஒரே மாதிரியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். திண்ணை என்பதற்கு ஆசிரியர் தந்த விளக்கம் சரிதான். திண்ணை ஒரு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் இடம். எங்கள் கிராம வீட்டில் திண்ணை இருந்தது. இப்போது அது மூடப்பட்டு எவரும் அமர இயலா வண்ணம் இருப்பது வருத்தம் தரக்கூடியது.

முதலில் சுஷீமா அம்மாவின் என் பார்வையில் திரௌபதி. இவரது எழுத்து மிகவும் எளிமையாக அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். ஒரு பெண்ணின் பெருமையை சொல்லும் எழுத்து என சொல்லலாம். சீதை, அகலிகை, மன்டோதரி, தாரை பற்றி குறிப்பிட்டு திரௌபதி பெருமை சிறப்புதான் என எண்ண வைக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறார். பெண் அடிமை என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டது என அன்றே ஒரு பெண்ணின் திறமையை போற்றி இருக்கிறார்கள், வெற்றி பெற்று இருக்கிறார் என தெளிவாக சொல்லி இருக்கிறார். அடுத்த இதழில் எடுத்துக்கொண்ட என் பார்வையில் அனுமன். மிகவும் அருமையாக இருந்தது. பொக்கிஷம் போல போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகம் மற்றும் எழுத்து. எங்கிருந்தோ வந்து குரங்கு ராமர் கதை கேட்கும் விஷயம்  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வணங்கியது போல நிற்கும் அனுமன். பிரமாதம். உங்கள் எழுத்துகளில் எப்போதும் அன்பு இருக்கும். திருக்குறள், கம்ப ராமாயணம் என அருமை. ஆன்மிகம் குறித்த எனது குறுக்குசால் எண்ணங்களை கைவிட வேண்டும் என எண்ண  வைத்துவிட்ட உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்.

அடுத்ததாக 'நளபாகம்' நண்பர் ரவி. இவரது சிந்தனை கண்டு வியப்பது உண்டு. அதுவும் மகளே என அனு, நிவேதி, கோதை, ரேணுகா, நிலாமகள் போன்ற சக பெண் ட்விட்டர்களை இவர்கள் அழைக்கும்போது நிறைய ஆச்சரியம் அடைவது உண்டு. எத்தனை உரிமையாக பழகும் எண்ணம். அதுவும் இவரது நளபாகம் அனைவரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. சமையல் செய்ய இவரது இணையதளம் எனக்கும் உதவியது என்று சொல்வதில் மகிழ்ச்சிதான். முதல் இதழில் மைசூர் பாகு. அடுத்த இதழில் கைமா இட்லி. மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். படித்ததும் சமைக்க வேண்டும் என எண்ணம் வரும்படி இருக்கிறது. பாராட்டுகள்.

செல்வி. உமாகிரிஷ் அவர்களை புரட்சி பெண்மணி என்றே சொல்லலாம். சமூக ஆர்வலர். இசைப்பிரியை. இவர் சென்ற வருடம் இளையராஜா இசைக்குழு நிகழ்வுக்கு சென்று வந்து எழுதிய கட்டுரையில் நம்மையும் அங்கே அழைத்து சென்றுவிட்டார். அதுபோல இவர் முதல் இதழில் குறிப்பிட்ட பாடல் பரவசம் அபாரம். இசை, பாடும் விதம், பாடல் வரிகள், பாடியவர் நளினம் என அற்புதமான விவரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் கூட. இரண்டாவது இதழில் பாடல் கேள்விபட்டது இல்லை. அதற்காக இசை சண்டை எல்லாம் செய்து விடாதீர்கள். ஆனால்  அந்த பாடல் மூலம் எழுந்த எண்ணங்கள் என அவர் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அருமை. பனை ஓலை கொண்டு பதநீர் குடித்தது உண்டு. குருத்தோலை என்றெல்லாம் நான் கேள்விபட்டது கிடையாது. பல விசயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள்.

கவிதை என இரண்டு இதழிலும் எடுத்தவுடன் தொடங்குகிறது. முதல் இதழில் ரிஸ்வான் அவர்களின் புதிய வரவு கவிதை. குழந்தைகளின் வலி சொல்லும் கவிதை. தாயின் உருவம் வரைதல், பாலூட்டி செல்தல் என பல வரிகளில் நம்மை மனம் வலிக்க செய்து புதிய வரவுதனை குப்பை தொட்டியில் எதிர்பார்க்கிறேன் என முடிப்பது சமூக அவலம் மாறவில்லை என்பதை குறிப்பிடுகிறது. அடுத்த இதழில் மிஸ்டர்.ஒயிட் என்பவரின் நண்பேன்டா கவிதை பாடல் வரிகளை போல வாசித்து செல்லும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்த வரிகள் சொல்லும் நிகழ்வில் இருந்து இருப்பார்கள். இருவருக்கும் பாராட்டுகள்.

அடுத்து நகைச்சுவை, சிரிங்க நல்லா சிரிங்க. எனக்கு நகைச்சுவை என்று சொன்னதும் திருமதி ஜனனி என நினைக்கிறேன். அவர்கள் சொன்ன 'மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான்' என்பதுதான் எனக்கு நினைவுக்கு வரும். திரு முருகன் மற்றும் திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை அருமை. திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். எவரேனும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்து யாரோடது என கேட்டால் திரு. செந்தில்குமார் என சொல்லிவிடலாம். அதற்காக என்னை பரிசோதிக்க வந்துவிடாதீர்கள். திரு முருகன் வித்தியாசமான சிந்தனையாளர்.

திக் திக் திக் எனும் கதை ஒரு கனவுதான் என எண்ணும்படியாக  மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சம்பத். சுதா ஆனந்த் அவர்களின் ஹைக்கூ அருமை. விடுகதை என இரண்டு இதழ்களிலும் உள்ளது. மிகவும் நல்ல முயற்சி. திரு விவேக் மற்றும் திரு சுரேஷ் அவர்களின் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் என இரண்டு இதழ்களில் வெளிவந்து இருக்கும் விசயங்கள் அந்த செல்பேசி பயன்பாட்டாளருக்கு நன்மை தரும். ஜப்பான் திரு ரகு அவர்களின் புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. எப்போதும் போல திரு பரணி அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமை. மின்னிதழில் சற்று தெளிவாக வந்தால் நல்லது. இரண்டாவது இதழில் திரு ராஜா முகம்மது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் திரு தினகர் அவர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்போது இந்த புகைப்படங்கள் ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன எனும் ஆராய்ச்சியை இப்போதைக்கு தள்ளி வைப்போம். பொதுவாக புகைப்படங்கள், ஓவியங்கள் தங்களுக்குள் ஒரு பெரும் கதையை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். எதையோ எடுக்கிறோம், எதையோ வரைகிறோம் என்பதல்ல. அதற்காக பின்னணி குறித்து ஒரு கதையே எழுதலாம். வாழ்த்துகள்.

மருத்துவர் நேரம் என டாக்டர் வந்தனா அவர்களின் சர்க்கரை நோய் பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பயனுள்ள விசயங்கள் இருந்தது. அடுத்த இதழில் பல் மருத்துவர் டாக்டர் ரியாஸ் அகமது அவர்களின் பற்சொத்தை மிகவும் சிறப்பும் பயன்படும் வண்ணம் இருந்தது. இந்த சர்க்கரை வியாதி மற்றும் பல்லுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு விசயங்களை அடுத்து அடுத்து இதழில் கொண்டு வந்தது வெகு சிறப்பு. வாழ்த்துகள்.

முதல் இதழில் திரு கவுண்டமணி, இரண்டாவது இதழில் திரு எம் ஆர் ராதா குறித்து பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை ஆசிரியர் அவர்களே எழுதி இருக்கிறார்கள். அப்படியே தமிழ் புலவர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்கள் என குறிப்புகள் இருப்பது கூட நன்றாக இருக்கும். நூல் விமர்சனம் இரண்டவாது இதழில் உள்ளது, வெகு சிறப்பாக பிறர் நூலை வாங்கும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. எழுத்தாளர் முத்தலிப் அவர்களுக்கு பாராட்டுகள். திரு சாத்தூரான் அவர்களின் பாட்டி கதை இவ்வுலகில் அன்பு எப்படி இருக்கிறது, எப்படி மனிதர் கஷ்டம் கொள்கிறார்கள் என அறிய முடிந்த அழகிய பதிவு. நிறைய அனுபவங்கள் கொண்டவரும் இயற்கையை நேசிப்பவரும் ஆவார். அருமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வித்தியாசம். என்ன காரணத்திற்கு சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின்னணி என்ன என அலசிப்பார்க்கும் பழமொழிகள் குறித்த எண்ணங்கள் அருமை. திரு பாலகணேஷ் அவர்களின் புதிர் சிறப்பு. மேலும் ஆங்காங்கே டவிட்கள் மின்னுகின்றன. முன்னரே படித்து இருந்தாலும் இதழில் படிக்கும்போது அதற்குரிய சிறப்பே தனிதான்.

ஒரே வரியில் விமர்சனம் - நமது திண்ணையில் வெட்டிக்கதைகள் பேசப்படுவதில்லை.

ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன், வடிவமைப்பாளர் திரு அல் அமீன் அவர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி. 


Tuesday, 3 March 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - 37

''நில்லுடா''

''எமது வேகத்துக்கு உம்மால் ஈடுகொடுக்க இயலாது அடியாரே''

கதிரேசன் ஒரு கல்லை எடுத்து மதுசூதனன் மீது எறிந்தான். அந்த கல் மதுசூதனின் முதுகில் பட்டது. ஆ எனும் அலறல் ஒலி  கேட்கும் என நினைத்த கதிரேசன் சற்றே ஏமாந்தான். திரும்பிய மதுசூதனன் கதிரேசனை நோக்கியபடி வந்தான்.

''இந்தா கல், எமது தலையில் ஓங்கி அடித்துவிடும், எதற்கு என் மீது உமக்கு இத்தனை வன்மம், நீவிர்  எமது அடியார். இவ்வுலகில் எல்லோரும் எம் அடியார்கள்''

''மதுசூதனா, உனது புத்தி பேதலித்து போய்விட்டதா''

''யாம் திரிகோடன், எம்மை இனி திரிகோடன்  என்றே அழைக்கவும்''

''ஒரு பெண்ணை காதலிச்சி, ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இப்படி அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா, நீயெல்லாம் படிச்சி பட்டம் வாங்கி என்னடா பிரயோசனம். நீ உன்னை ஒரு சாமியார் மாதிரி நினைச்சிகிட்டு பண்ற அலப்பறை  உனக்கே நல்லா இருக்காடா, உன்னை எப்போ சந்திச்சேனோ எதுக்கு சந்திச்சேனோ. இனியாவது திருந்துடா, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ருக்மணிக்கு வாழ்க்கைக் கொடுடா. நானும் இப்படி சிவன் சிவன் இருக்க மாட்டேன்டா. சொன்னா கேளுடா''

''அடியாரே, பேசி முடித்தாகிவிட்டதா? யாம் மாபெரும் மாற்றம் எம்மில் கொண்டோம். இனி எமது வாழ்வில் கல்யாணம், காதல் என்பதற்கு இடம் கிடையாது. எம்மை சாமியார் என்றா அழைத்தீர். யாம் அடியார்க்கெல்லாம் அடியார். எமது அடியார்களாகிய உமக்கு யாமே இனி ஒரு அடியார்''

''மதுசூதனா, என்னடா இப்படி மாத்தி மாத்திப் பேசற''

''எம்மை திரிகோடன்  என அழைத்துப் பழகவும், இன்றுடன் எமது சிவன் சொற்பொழிவு முடித்துவிட்டு நாளை யாம் பௌத்தம் பேச இருக்கிறோம்''

''மதுசூதனா, மதி கெட்டவனே. எக்கேடு கேட்டுப் போ'' என சொல்லிவிட்டு கதிரேசன் வீடு திரும்பினான். மதுசூதனனின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ருக்மிணி கடும் கோபம் கொண்டவளாகத் தென்பட்டாள்.

''இனி அவனைத் திருத்த முடியாது. திரிகோடனாம்''

அன்று இரவு சொற்பொழிவு ஆரம்பித்தது.

''தாங்க இயலாத சோகம் நம்மைத் தாக்கும்போது நம்மால் பேசவும் இயலாது, எழுதவும் இயலாது. அனால் யாம் அப்படி அல்லன். எத்தனை சோகம் எனினும் எமக்கு இறைவனின் புகழ் பாடுவது மட்டுமே. நாளை முதல் யாம் பௌத்தம் தழுவ இருக்கிறோம். எமது பெயர் திரிகோடன். இங்கே ஒரு இடம் அமைத்து அங்கே பௌத்தம் பரப்ப ஆரம்பிப்போம். எம்மை நீவீர் தொடர்வீரா''

மதுசூதனின் பேச்சு பலரை ஆச்சரியம் உண்டு பண்ணியது. கூட்டத்தில் இருந்த ஒருவர் 'இவனை இன்னைக்குத் தீர்த்துரனும்ல, இல்லைன்னா நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிருவான்ல' என்றார்.

''எம்மை பின் தொடர்வீரா, மாட்டீரா?''

''நாங்கள் சிவன் பக்தர்கள், எங்களால் உங்களை பின் தொடர முடியாது''

''உங்களுக்கு அடியாராக நான் இருக்கிறேன். அடியார்க்கெல்லாம் அடியாராக நான் வருகிறேன். எம்மை பின் தொடருங்கள்''

கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்தார்கள். பெரும் சலசலப்பு உண்டானது. இதுதான் சமயம் என இருவர் மதுசூதனனை தரதரவென இழுத்து சென்றார்கள். கூட்டத்தில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

''அடியார்க்கெல்லாம் அடியாரா நீ, உன்னை இரும்லே, என்ன பண்ணுதேன்''

கத்தி எடுத்து மதுசூதனின் கழுத்தில் வைத்தான் அவன்.

''யாம் மீண்டும் திரிகோடனாக  பிறவி எடுப்போம்''

''இன்னுமால பேசற''

மதுசூதனனை கொலை செய்துவிட்டு அந்த இருவரும் ஓடிப்போனார்கள். மதுசூதனின் மரணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பௌத்தம் பின்பற்ற சொன்னதற்காக கொலை செய்யப்பட்டான் என்றே பேசினார்கள்.

வாழ்வில் தடம் மாறிப் போனவர்கள் எந்த ஒரு தடயமும் இல்லாமல் இறந்து போகிறார்கள்.

(முற்றும்) 

Thursday, 29 January 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - யூதர் உலகம்

முந்தைய பகுதி   சென்ற பதிவுக்கு சில எதிர்ப்புகள்  இருந்தது என்பதால் இந்த தொடரை எழுதுவதை தள்ளிவைக்கவில்லை. அவ்வப்போது எழுதுவதுதான் வாடிக்கை. என்றோ வாழ்ந்து அழிந்தவர்களின் வரலாற்றை அருகில் இருந்து பார்த்தது போல  எழுதப்படும் விசயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது.

எகிப்து, பாபிலோனிய பயணத்தின் போது  இந்த இஸ்ரேல் குறித்து என்னவென பார்க்க ஆவல் பிறந்தது. இன்றைய இஸ்ரேல் குறித்து எழுதப்படும் பார்வை அல்ல இது. மேலும் பைபிளில் குறிப்பிடப்படுவது எல்லாம் அத்தனையும் பொய் புரட்டு என ஒதுக்கி விட இயலாது, அதே வேளையில் எல்லாம் உண்மை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சுவாரஸ்ய வாசிப்புதனை முன்னர் எழுதப்பட்டு இருப்பவை தந்து போகின்றன. அதை எடுத்துக்கொண்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என இப்போதும் கட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் ஒன்றின் மீது நம்பிக்கை, தைரியம் இல்லாதவன் எதிரியை பலவீனப்படுத்தும் முறை என ஒன்று உண்டு.

இந்த இஸ்ரேல் முன்னர் எகிப்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இறைத்தூதர்கள் என அறியப்பட்டவர்களின் கட்டுபாட்டில் இருந்தது என பைபிள் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட 3035 வருடங்களுக்கு முன்னர் சால் என்பவன் ஒரு பேரரசனாக இருந்தான். இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவன் ஸ்திரதன்மை  அற்றவனாக இருந்து இருக்கிறான். மன உறுதி அற்றவர்கள் வாழ்க்கையில் சீரழிந்து போவார்கள் என்பதற்கு இவன் ஒரு உதாரணம். அதற்குப் பின்னர் வந்த டேவிட் என்பவன் இந்த இஸ்ரேலிய பேரரசுதனை விரிவாக்கம் செய்தான். இவனது காலத்தில் ஜெருசலம் புனித தலமாக  விளங்கி வந்தது. இவனது மகன் சாலமன் ஒரு மாநிலத்தை பன்னிரண்டு மாவட்டங்களாக பிரித்தான். இவனது காலத்தில் வியாபாரம் பெருகியது. ஜெருசலத்தில் பெரிய கோவில் ஒன்றை கட்டினான் சாலமன்.

பழங்குடியினரை இந்த சாலமன் மிகவும் மோசமாக நடத்தினான் எனும் குற்றச்சாட்டு உண்டு. இந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டன. எப்போது ஒரு மக்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். அது அந்த காலம் என்றல்ல, எந்த காலமும் அப்படித்தான். அஷ்ஷிரியர்கள் இந்த இஸ்ரேலை குறி வைத்து இருந்தார்கள். வட  பகுதியில் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அஷ்ஷ்ரியர்கள் இஸ்ரேலை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இஸ்ரேலின் தென் பகுதி மட்டுமே சாலமன் மற்றும் அவனது மகனின் வசம் இருந்தது. சாலமன் வட  பகுதி மக்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.

இந்த அஷ்ஷிரியர்களை எதிர்த்து வந்தவன் ஹெசக்கியா. பெர்சியன் அரசன் பாபிலோனியாவை கைப்பற்றியதும் யூதர்களை அங்கு அனுமதித்தான். அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஜெருசலத்தில் கட்டப்பட்டன. இஸ்ரேலியர்கள் இதுதான் சமயம் என மத வழிபாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டார்கள். பெர்சியர்களின் தலைமையில் யூதர்கள் பெரும் சமூகமாக உருவானார்கள். இந்த மத சுதந்திரம் எல்லாம் ஒரு முன்னூறு ஆண்டுகள் செழிப்பாக இருந்தது.

கோவில்கள் கட்டுவது என ஒரு கூட்டமும், கோவில்களை இடிப்பது என ஒரு கூட்டமும் அன்றே இருந்து இருக்கின்றன. மேலும் கோவில்கள் மூலம் சேர்க்கப்படும் பொருளை கைப்பற்றி அரசையே மாற்றியவர்கள் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ரோமானியர்கள் இஸ்ரேலில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ரோமானியர்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினார்கள், அதோடு கோவில்களை இடித்து தள்ளினார்கள்.

யூதர்கள் இஸ்ரேலில் இருந்து உலகம் எல்லாம் பரவிய காலம் அது. யூதர்கள் ஜெருசலத்தில் தங்கக்கூடாது என கிட்டத்தட்ட 2125 வருடங்கள் முன்னர் ஒரு அரசர் கொண்டு வந்த சட்டம் யூதர் சமூகத்தை அலங்கோலம் செய்தது. இப்போது நமது இலங்கையை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்தான், தமிழர்களை இலங்கையில் இருக்கவே விடாமல் உலகம் எல்லாம் விரட்டிட செய்தான் என 2025 வருடங்கள் கழித்து படிப்பவனுக்கு அது எல்லாம் உண்மை அல்ல என நினைப்பான் எனில் நாம் கண்டது எல்லாம் பொய்யா?

ஒற்றுமையின்மை, பலமின்மை வாழ்க்கையில் தனி மனிதரை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே சீரழித்து விடும்.

(தொடரும்)


Monday, 19 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4

நிறைய நாட்கள் கழித்து முதன் முறையாக ஒரு தமிழ் இதழை வாசித்து முடித்து இருக்கிறேன். முத்தமிழ்மன்றத்தில் நிறைய பேர் நிறைய எழுதுவார்கள். 2006 ம் வருடத்தில் இருந்து அங்கே உறுப்பினராக இருந்தேன். அப்போது திரு. ரத்தினகிரி, திருமதி பத்மஜா போன்றவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்கள் தந்த கருத்துகளால் எனது நுனிப்புல் முதல் பாகம் நாவல் வளர்ந்தது என்றால் மிகையாகாது, அந்த நன்றியை அவர்களுக்கு முதல் நாவலில் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் அவர்களது ஊக்கம் இருந்தாலும் எழுதுவது எனது எண்ணமாக இருந்ததால் இரண்டாம் பாகம் அவர்களின் அதிக பங்களிப்பு இன்றி எழுதி முடித்தேன். மூன்றாம் பாகத்திற்கு எவரேனும் என்னோடு பயணிக்க கூடும். குழு மனப்பான்மை, சச்சரவுகள் என பல இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் எழுதினேன். பின்னர் வலைப்பூ ஆரம்பித்தபிறகு முத்தமிழ்மன்றம் மட்டுமல்ல எனது வலைப்பூவில் எழுதுவது கூட குறைந்து போனது. இதற்கு நான் 2010 ல் மீண்டும் ஆலயம் ஒன்றில் தொண்டுபுரியும் அறங்காவலராக பணிபுரிய சென்றது என்று சொல்லலாம். அவ்வபோது எழுதி வந்து இருக்கிறேன், முற்றிலும் நிறுத்தியது இல்லை. அப்படி இந்த ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் முன்னர் எழுத ஆரம்பித்து தமிழ் எழுத்துகள் வாசித்து வந்தது மகிழ்வாக இருந்தது.

அப்படி ட்விட்டரில் எழுத்து மூலம் பழகியதால்  திரு. என். சொக்கன், திரு கண்ணபிரான் ரவிசங்கர், 'திருப்பூர் இளவரசி' சு.ஐஸ்வர்யா இவர்களின் பழக்கம் அவ்வளவாக இல்லாதபோதும் இவர்களிடம் நுனிப்புல் பாகம் 2 க்கு அவர்களது எண்ணங்களை வாங்கி புத்தகம் வெளியிட முடிந்தது. அதுவும் திரு என். சொக்கன் அவர்கள் என் நாவலை திருத்தித் தந்தது இங்கு நினைவுகூறத்  தக்கது. இப்படி பலர் எழுதிக்கொண்டு இருக்கும் ட்விட்டரில் இருந்து ஒரு மின்னிதழ் வெளியே வந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆசிரியர் ஒரு எழுத்தாளர் என்றாலும் முதல் பார்வையில் சொன்னது போல ரைட்டர் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், ட்விட்டர் உலகில் இருந்து பலரை இந்த தமிழ் மின்னிதழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அது எழுத்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்.

பொதுவாக நான் எதையும் விமர்சனம் பண்ணும் தகுதி உள்ளவன் என என்னை எண்ணுவதில்லை. அதனால் எனது சினிமா விமர்சனம் கூட மேலோட்டமாகவே இருக்கும். விமர்சனம் என்பது ஒன்றை பண்படுத்த உதவ வேண்டும், பழுதுபடுத்த அல்ல. மென்மேலும் முயற்சிக்க வைக்க வேண்டும், முடங்க வைக்கக்கூடாது. இங்கே இந்த தமிழ் மின்னிதழில் எனது பார்வையை முன் வைத்து இருக்கிறேன், இது எனக்கே கூட ஒரு புது அனுபவமாக இருந்தது. பக்கத்து ஊர்க்காரர் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துலக பயணம் எனக்கு ஆச்சரியம் உண்டுபண்ண வைத்தது. எங்கள் ஊரில் கூட சில எழுத்தாளர்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் உண்டு. அப்படி சிறு வயதில் எழுத ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்தபோது இப்படி நோட்டில் கிறுக்கிக் கொண்டே இருக்காதே என அறிவுரை எல்லாம் எனக்குத் தந்தார்கள். நான் எழுத்துலகில் ராமனுஜனாக எழுத்தில் பரிமாணம் எடுக்க இயலாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் எனது திமிர், ஈகோ. எழுதி ஏமாற்றுகிறார்கள் என்பதே எனக்குள் இருக்கும் எழுத்து மீதான விமர்சனம். எழுதுபவன் எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும்  இறங்க வேண்டும் என எண்ணுபவன், அதனால் எனது எழுத்துகளில் ஒருவித ஏக்கப் பெருமூச்சு அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பார்த்தால் எழுத்து ஒரு தவம். அது சிலருக்கே கை வந்து இருக்கிறது. அப்படி பலரை கௌரவம் செய்து இருக்கிறது இந்த தமிழ்  மின்னிதழ். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழ் திரைப்பட விருதுகள் - 2014  எனக்கு சிறு வயதில் இந்தவிருதுகள் பட்டியல் எல்லாம் பார்க்க பேரானந்தமாக இருக்கும். இப்போது கூட தேசிய விருதுகள் பட்டியலை ஆர்வத்தோடு பார்ப்பேன். எனக்கு பிலிம்பேர் விருதுகள், இன்னபிற விருதுகள் எல்லாம் பல வருடங்களாக ஈடுபாடு தந்தது இல்லை. தேசிய விருது மட்டுமே நான் அதிகம் விரும்பி பார்ப்பது. இங்கே என்ன விருதுகள் என்ன தரப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் பெரும்பாலான படங்கள் நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு காரணம் நமது ஊரில் உள்ளதுபோல திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு படங்கள் வருவது இல்லை. குறிப்பிட்ட சில படங்களே வரும். மேலும் பெரும்பாலான படங்கள் இணையம் அல்லது டிவிடியில் பார்க்க வேண்டிய சூழல். ஊரில் இருக்கும்போது பாடல்கள் நிறைய கேட்பது உண்டு, இங்கே வெகுவாக குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கலை உலகினருக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருது என்பது விமர்சனத்திற்குரியது, பலருக்கு திருப்தி தருவதைவிட அதிருப்தி தந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெறுவது நல்ல விஷயம்.

அடுத்து படித்த எழுத்து சற்று வித்தியாசமானது.  முதலில் சில வரிகள் படித்ததும் தமிழ் - மின்னிதழை மூடிவிட்டேன். பொதுவாக இப்படி இருப்பவர்கள் என குறிப்பிட்டு வாசிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் அதில் ஏதேனும் ஒன்று எனக்குப் பொருந்தும் எனில் கூட நான் வாசிப்பதே இல்லை. எழுதுபவருக்குத்  தரும் மரியாதையாகவே நான் அதை கருதுவேன். அப்படித்தான் படிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த தமிழ்-மின்னிதழ் அந்த கொள்கையை தகர்த்த சொன்னது. முழுமையாகப் படிக்காமல் வாசிப்பது முழுமை அடையாது என வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதிய எக்சைல் - புனைவும் புனைவற்றதும் - சுரேஷ் கண்ணன் எழுதி இருக்கிறார். அதிலும் எழுதுவதற்கு ஆசிரியரின் பரத்தை கூற்று தனை காரணம் காட்டுகிறார். உங்ககளை  வாசிக்கக் வைக்கவே அப்படி தொடக்கத்தில் எழுதினேன் என்கிறார். அப்படி எல்லாம் வாசிக்கமாட்டேன் சுரேஷ்கண்ணன். வாசிக்காதே என்றால் வாசிக்கவே மாட்டேன். எவருக்காகவும் எழுத்து சமரசம் செய்யக்கூடாது, தனது நிலையை எழுத்து மாற்றக்கூடாது என எண்ணுபவன் நான். காமக்கதைகளுக்கு இங்கு மவுசு அதிகம் என நான் எழுதிய கதை ஒன்றில் ஒரு வார்த்தை கூட வேறு விதமாக எழுதி இருக்க மாட்டேன். வாசகனுக்கு எழுத்தாளனை விட கற்பனை சக்தி அதிகம் என நினைப்பேன். கதாபாத்திரங்கள் மூலம் அழகாக பல விசயங்களை எழுதி இந்த புதிய எக்சைல்  எனும் தமிழ் நாவலுக்கு இரண்டு விமர்சனங்கள் வைத்து இருக்கிறார். அவரே குழப்பம் அடைந்து இருக்கிறார் என முடிவில் நையாண்டியாக முடிக்கிறார். சுவாரஸ்யமான எழுத்து.

காமத்தை முன்னிறுத்தி எழுதப்படும் கதைகளில் சமீபத்தில் ராஜன் என்பவர் எழுதிய தேர்க்கால் எனும் சிறுகதை அப்படியே மனித உலகில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை பிரயோகித்து இருப்பார். வாசகன் இதைக் கண்டு அஞ்சக்கூடாது அதுதான் நிதர்சனம். இதைவிட மோசமான வார்த்தைகளை எங்கள் கிராமத்தில் உபயோகம் செய்வார்கள். சுரேஷ் கண்ணன் மறைமுகமாக சில வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். ஜ்யோவரம் சுந்தர் என நினைக்கிறேன், ஒரு கட்டுரையில் அப்படியே வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பார்.  எழுத்து நாகரீகம் கருதி அப்படியே எவரும்  எழுதுவதில்லை. ஆங்கில நாவல்கள் விதிவிலக்கு என கருதுகிறேன். இப்போதெல்லாம் எவ்வித மன சஞ்சலம் இன்றி எதையும் வாசிக்க முடிகிறது. எனது மனம் சிறுவயது கட்டுக்கோப்பில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டது ஆனால்  என்னால் இப்படி எழுதவே இயலாது, எழுத வேண்டிய நிர்பந்தமும் எனக்கு இல்லை. எழுதுபவர்கள் எழுதட்டும்.

இசை - இசையை நோக்கி நகர நகர இசையை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறேன். ராகங்கள் எல்லாம் கற்று தாளங்கள் கற்று நானும் ஒரு இசை மேதை ஆக விருப்பம். ஆனால்  சாத்தியமற்ற ஒன்று. இளையராஜா, இசைஞானி. இவரது ரமண மாலை, திருவாசகம் எல்லாம் நான் திரும்பத் திரும்ப கேட்பவை. ஆனால் என்ன ராகம் என்ன இசை வாத்தியங்கள் என்ன என்றெல்லாம் மனம் சஞ்சரிப்பது இல்லை. வார்த்தைகளுக்காக நான் மயங்குவேன். காரணமின்றி கண்ணீர் வரும் என்றவுடன் எனக்கு கண்ணீர் வரும். ஆனால் எஸ். சுரேஷ் சுவப்னம் கனவுகளுக்கான இசை என ஒரு ஆல்பத்தை அழகாக இசைத்து இருக்கிறார். கானடா, காம்போதி, ஜோக், பிலஹரி என பல ராகங்கள், மிருதங்க இசை, பாடல் பாடும் அழகு என ஆராதனை செய்து இருக்கிறார். நிச்சயம் இவரை நம்பி இந்த ஆல்பம் கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

இந்திரன் எழுதிய பந்து புராணம். அட்டகாசம். எனது கிரிக்கெட் வாழ்நாளை அசைபோட வைத்தது. என்ன இந்திரன் வேறு ஊர்களுக்கு சென்று விளையாடவில்லையா என்றே கேட்கவேண்டும் என இருக்கிறேன். வேறு ஊர் அணிகளில் அவர்களுக்காக களம் இறங்கவில்லையா என்ற கேள்வியும். எங்கள் ஊரில் பெண்கள் கிரிக்கெட் விளையாண்டது இல்லை. அவர் குறிப்பிட்டது போல ஊரில் உள்ள அக்காக்கள் எல்லாம் வேற பொழப்பே இல்லையா இப்படியா வேகாத வெயிலில் விளையாடுறீங்க நீங்க சின்ன பசங்க எங்க மாமாவை எல்லாம் ஏன்டா  இப்படி விளையாட இழுத்துட்டு போறீங்க என திட்டாத நாளில்லை. வெயிலில் விளையாடியே கருத்து போனேன் என வீட்டில் சொல்வார்கள். பழைய நினைவுகளை அசைபோட வைத்த அற்புத விபரிப்பு, அதுவும் கடைசியில் முடிக்கும் போது  ஒரு காவியம் போல முடித்து இருக்கிறார்.

பாலா மாரியப்பனின் நிழோலோவியம். ஏதேனும் தென்படுகிறதா என பூவினை தாண்டி பார்த்தேன். புகைப்படம் அருமை. எனக்கு ஓவியம் என்றால் கொள்ளைப்பிரியம். ஓவியத்தில் மனதை அழகாக சொல்லலாம். ட்விட்டரில் ஓவியம் வரையும் ராகா, பாரதி, அகழ்விழி, அண்ணே ஒரு விளம்பரம், தமிழ்பறவை, பிரசன்னா மீனம்மாகயல் என ஒரு பெரிய ஓவியர்கள்  பட்டாளமே உண்டு. எனது  நுனிப்புல் பாகம் 2 நாவலுக்கு அகழ்விழி தான் ஓவியம் வரைந்து தந்தார். அப்படியே நான் அவரது ஓவியத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு சற்று ஆச்சரியம். இந்த தமிழ் மின்னிதழில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த இயக்குனர் கே பாலசந்தர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் என தனது அருமையான அனுபவத்தை அவர் ஒரு தொடர்கதை என கார்த்திக் அருள் அழகாக எழுதி இருக்கிறார். அதுவும் அவருடன் நேரடியாய் பேசிய அனுபவம் சிறப்பு. நானும் கே பாலசந்தர் படங்களை பார்க்கலாம் என இருக்கிறேன்.  தமிழ் மின்னிதழின் கடைசி பக்கத்தில் பரணிராஜன் வரைந்த பாலசந்தர் ஓவியம் அப்படியே பாலசந்தரை ஒரு விழாவில் அமர்ந்து இருப்பதை பார்ப்பது போன்ற போன்ற உணர்வைத் தந்தது. இவர் வரையும் ஓவியங்கள் அத்தனை தத்ரூபமாக இருக்கும். மாதுளம் பழம் ஒன்று உரித்து அது தட்டின் மேல் இருக்கும் ஒரு ஓவியம் பிரமிப்பு தரும், பாராட்டுகள். எப்படி இப்படி வரைவது என இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளவும் ஆசைதான்.

இணைய நூற்றாண்டு குறித்து சிறகு அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். மிகவும் உண்மை. இந்த உலகம் இணையம் மூலம் பெரும் உதவியையும் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. அருமையான  எழுத்து. இறுதியாக திறமைசாலிகள்  என ட்விட்டர் மூலம் அடையாளம் காட்டப்படும் எழுத்து என எஸ்கே செந்தில்நாதனின் குவியொளி வெகு சிறப்பு. ஆத்திசூடி போன்று டிவிட்டர்சூடி. எழுதிய அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த தமிழ் மின்னிதழ் குறித்து இரு வாக்கியங்களில் ஒரு விமர்சனம்.

'நிர்வாணத்தை மறைக்க விரும்பாத ஒரு அழகியல் -தமிழ் மின்னிதழ்' 

'நிர்வாணத்தை மறைத்த பின்னும் கண்களை அகற்ற இயலாத பேரழகியல் - தமிழ் மின்னிதழ்'

எனது பார்வை நிறைவுப் பெற்றது. இந்த தமிழ் மின்னிதழ் காலாண்டு இதழாக தொடரும். அன்றும் தமிழ் - மின்னிதழில்  பகிரப்படும் படைப்புகள் குறித்து இங்கே எழுதுவேன் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 (முற்றும்)

Saturday, 17 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3

என்னால் எழுத்தாளன் ஆக இயலாது என உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டபோது எழுதுவது எனக்கு மிகவும் எளிதானது. நான் பாடப்புத்தகங்கள் வாசித்து வளர்ந்தவன். எனக்கு இந்த நாவல், சிறுகதை தொகுப்பு எல்லாம் அதிகம் வாசிப்பது ஒரு பதினாறு வயதுடன் முடிந்து போனது என்றே கருதுகிறேன். அவ்வப்போது சில நாவல்கள் வாசிப்பது உண்டு. நாவல் எழுத அமர்ந்தபோது எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனை இல்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான். எனது எழுத்துக்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக எழுதுங்கள், விரிவாக, விபரமாக எழுதுங்கள் என சொன்னவர்கள் ஏராளம், அவர்களை எல்லாம் ஏமாற்றுவது எனக்கு வாடிக்கை. ஆனால் ஒரு எழுத்தாளன் யார், அவன் எப்படிப்பட்டவன், எப்படியெல்லாம் எழுத்தாளன் உருவாகிறான் என நீங்கள் தெரிந்து கொள்ள இந்த 'தமிழ்' மின்னிதழில் வெளியாகி இருக்கும் மின்காணல்தனை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

பொதுவாக நேர்காணலில் உள்ள பிரச்சினை என்னவெனில் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதுவது சற்று சிரமம். அப்படியே எழுதினாலும் வசதிக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து வெளியிடுவார்கள். அந்த பிரச்சினை இதில் இல்லை, அவர் என்ன எழுதி அனுப்பினாரோ அதையே பிரசுரித்து இருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். அதற்கு முதலில் பாராட்டுகள்.

அடேங்கப்பா! எத்தனை பெரிய மின்காணல். கிட்டத்தட்ட 47 பக்கங்கள், 54 கேள்விகள். புத்தகத்தில் 35 சதவிகித பக்கங்கள். வெற்றி பெற்ற எழுத்தாளன், படைப்பாளி  பேசினால் அதில் திமிர்த்தனம், தலைக்கனம் எல்லாம் வெளிப்படும். பணிவாக இருப்பவனே சிறந்தவன் என்கிற பண்பாடு எல்லாம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை. எழுத்துலகில் மட்டுமல்ல எதிலும் அரசியல் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வெற்றி பெற்ற சக மனிதனின் மீது பொறாமை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அனைவராலும் சொல்லப்படும் ஈகோ.

ஜெமோ என செல்லமாக அறியப்படும் ஜெயமோகன். எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இவரது கருத்துகளில் எல்லோரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. தனக்குத் தெரிந்ததை, தனக்குப் புரிந்ததை, தனக்குள் பிறர் நிரப்பிய விசயங்களை பகிர்தல் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் செய்துகொண்டுதான் இருக்கிறான். எனக்கு இவரைப்பற்றி நிறையத் தெரியாது என்பதால் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும் 'ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை' என்ற வரிகள் அட! 'எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே தோணாது'.

'வாசிப்பே என்னை எழுத்தாளனை உருவாக்கியது' என்பதோடு ஆன்மிக நாட்டம் குறித்து நண்பன் மற்றும் அம்மாவின் தற்கொலையை குறிப்பிடுகிறார். எனது நண்பன் கிரியின் தற்கொலையை நினைவுபடுத்தியது. கற்பனையே எழுத்துக்கு வழி. அமரர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, சுஜாதாவின் மனைவி குறித்த இவர் கருத்துகள், மனுஷ்யபுத்திரன், பெண்கள், மலையாளி முத்திரை, சொல் புதிது, குருநாதர், சினிமா உலகம், இவரது நாவல்கள், நோபல் பரிசு, நகைச்சுவை கதைகள், குழந்தை நாவல்கள், அறிபுனைவு, வாசிப்பாளனின் இயலாமை, விமர்சனம் பண்ணவேணும் எனும் அயோக்கியத்தனம், இணைய மொண்ணைகள் என இவரது விவரிப்பு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆசிரியரின் கேள்விகள் எழுத்தாளனின் உள்ளக்கிடங்கை கிளறி இருக்கிறது.  'நல்ல எழுத்தாளன் புகழ் அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவது இல்லை'. அடடே! எதற்கும் நீங்களே எல்லாம் வாசியுங்கள். அவரது ஒவ்வொரு வரிகளை எழுதிக்கொண்டு இருந்தால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டி இருக்கும். அப்புறம் என்னை அவர் வசையாகத் திட்டிவிடுவார். எனக்குப் பிறரிடம் திட்டு வாங்கும் அளவுக்கு எழுதும் தைரியம் இல்லை.

அடுத்து வினோத நகரம். - முரளிகண்ணன் எழுதி இருக்கிறார். அதுவும் எங்கள் விருதுநகர். அவர் எழுதியதில் எண்ணையில் குளித்த புரோட்டா, சினிமா காட்சிகள் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி பெண்கள் இதற்காகத்தான் திருவிழா செல்வது, குடும்ப உறவுகளின் பலம், நகை எடுக்கும் பாங்கு இதெல்லாம் நான் ஊன்றி கவனித்தது இல்லை. ஐந்தாம் திருவிழா என டிராக்டர் சென்ற அனுபவம் சினிமா சென்று தொலைந்து போன அனுபவம் என பல உண்டு. விருதுநகரில் இருந்து பதினோரு  கிலோமீட்டர் தொலைவில் எனது ஊர் என்பதால் எனக்கு விருதுநகர் சற்று அந்நியம்  தான். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார்.

அடுத்து புனைவுகள். எல்லா புனைவுகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டே வாசித்தேன். நளீரா, என்னை நடுநடுங்க வைத்துவிட்டாள். தோழர் கர்ணா சக்தி எழுதி இருக்கிறார். கருவில் உள்ள குழந்தை கதை சொல்வது போல அமைந்து இருக்கிறது. அபிமன்யு நினைவுக்கு வந்தான். தோழர் கர்ணா சக்தி ஒரு புரட்சி சிந்தனையாளர். பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது என கேட்கும் பலரிடம் பிறக்கும் முன்னரே குழந்தை என்ன செய்தது என சமூகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோழரே, இந்த சமூகம் மூடர்களால், மடையர்களால் ஆனது, அறிவாளிகள் கூட சாதி, மதம் என வந்தபின்னர் அறிவிழந்து போகிறார்கள். சந்ததியை அழித்தால் எல்லாம் அழியும் எனும் கொடூர எண்ணம் கொண்டு வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இணக்கமான சமூகம் அழிந்து கொண்டே இருக்கிறது. மனதை கலங்க வைத்த கதை.

0 F  மத்யமன் என்பவர் எழுதி இருக்கிறார். வித்தியாசமான கதை, வித்தியாசமாகவே தொடங்குகிறது. அதுவும் ட்விட்டர் சம்பவங்களை வைத்தே தொடங்கி ஆருத்ரா தரிசனம், ஒரு ஆத்திகனுக்குள் நாத்திகன் என கதை பரபரப்பாக நகர்கிறது. குளிர் குறித்த விவரிப்பு, சமன்பாடு என கடைசியில் மனித நேயம் சொல்லி முடிகிறது கதை. உதவும் மனப்பான்மையை நட்புகளிடம் மட்டுமே கொண்டு இருக்க வேண்டியது இல்லை என சொல்லும் கதை எனவும் கொள்ளலாம். நன்றாக இருக்கிறது.

சிறகில்லாப் பறவைகள் - அல்டாப்பு வினோத் எழுதி இருக்கிறார். எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் காந்திய கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்றே எண்ணுகிறேன். ரஜினி ரசிகர் என்பது கூட இவர் அடையாளம் என எண்ணுகிறேன். கதை சொல்லும் பாணி ஒரு சினிமாவைப் போன்று காலங்கள் நேரங்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்த கதை. இறுதி நிகழ்வு மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் பணத்தில் குளிப்பவர்கள் அல்ல என எளிமையாக உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். அருமை வினோத்.

அடுத்து கவிதைகள் தாவினேன். நிறைவேறாத ஆசைகள் - மிருதுளா. எதிர்நீச்சல் என்ற பாடல் வரிகள் போல இருக்கிறது என எனது எதிர்பார்ப்புகள் கவிதைகள் குறித்து என் தங்கை சொன்னது உண்டு. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகள் இருபக்க விசயங்களை அழகாக தொட்டு செல்கிறது. இருக்கலாம் என்பதான வார்த்தையே கவிதைக்கு அழகு, அதுவும் முடித்த விதம் சிறப்பு.

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் - சொரூபா. மனதை கனக்க  வைத்த கவிதை. சிரஞ்சீவிடா, ஜீவிதாடி. கவிதையில் கலங்க வைக்க இயலும் என சொல்லி இருக்கிறார். நிறுத்தி நிதானமாக நிகழ்வுகளை அசைபோடுங்கள்.

நா ராஜு கவிதைகள். மிருதுளா, சொரூபா அற்புதமான எழுத்தாளர்கள் என ட்விட்டர் உலகம் அறியும். எனக்கு ராஜு, அசோகர் பரிச்சயமில்லை. முத்தம் மூர்க்கமெனினும்  காதல். அருவி, நீர், பறவையின் பாட்டு என வேறொரு பொருள் உண்டு இங்கு என்கிறார். முன்னேற்பாடுகள் அற்ற விசயங்கள் என கவிதையின் ஆழம் அருமை.

ஒரு பெண் ஒரு ஆண் - அசோகர். வித்தியாசமான கவிதைக்களம். சிந்தனை மாறுபாடு ஒன்றும் காதலுக்கு அலுக்காதுதான். நன்றாகவே இருக்கிறது. ஒப்புமை குறியீடுகளில்  மூழ்கி முத்தெடுங்கள்.

விமர்சனம். ஸ்டான்லி க்ப்யூரிக் - இயக்குனர்களின் ஆசான்  எழுதி இருப்பவர்  நவீன் குமார். நல்ல சுவாரஸ்யமாக படம் பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறது எழுத்து. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்து போகிறது, அதே வேளையில் நேர்மையாக இருக்கும் கணவன் மனைவி குடும்பத்தில் சர்ச்சை தோன்ற வைத்துவிடும் அளவிற்கு இந்த படம் ஒரு மன உளைச்சலை தந்துவிடும் எனும் அபாயமும் உள்ளது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் நல்லிணக்கம் அத்தனை இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவது. நக்கல், கேலி, கிண்டல் என இருந்தாலும் மெல்லிய காதல் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே இருக்கும். எப்போது நிராகரிப்பு, புறக்கணிப்பு நிகழ்கிறதோ அப்போது பிரச்சினை தலைதூக்கும். ஒருமித்த கருத்து உள்ள தம்பதிகள்  வாழ்வின் வரம்.

இப்படியாக 'தமிழ்' மின்னிதழை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். புனைவுகள், கவிதைகள், நேர்காணல் எனும் மின்காணல் என வாசித்து முடித்த தருணத்தில் இந்த தமிழ் மின்னிதழ் ஒரு அருமையான இலக்கிய இதழ் என தைரியமாக சொல்லலாம். இது ஆசிரியரின் முதல் முயற்சி என்றாலும் தெரிவு செய்த விதங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மின்காணல் இந்த தமிழ் மின்னிதழின் முத்தாய்ப்பு.

நான் நேசிக்கும் ஓவியர்கள் என ட்விட்டரில் நிறைய உண்டு. எவராவது கோலம் படம் போட்டால் கூட ஓடிச்சென்று அதை சேமித்து விடுவேன். அதுபோல எவரேனும் படம் வரைந்தால் அட என பிரமித்துவிடுவேன். ஓவிய ஈடுபாடும் இந்த தமிழ் மின்னிதழில் உள்ள வேறு சில ஓவியங்களோடு விமர்சனம் அனுபவங்கள் என சில நாளைப் பார்க்கலாம்.

மின்காணல் வாசித்து முடித்ததும் மனதில் எழுந்தது இதுதான். எதையும் முழுதாய் வாசிக்கத் திராணியற்ற இணைய மொண்ணைகளே, ஒன்றை விமர்சனம் செய்ய முழுவதுமாக வாசித்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள், இல்லையெனில் போங்கடா வெண்ணைகளா என திட்ட வேண்டி இருக்கும். ஷப்பா... தமிழ் எழுத்துலகம் என்னை மிரள வைக்கிறது.

(தொடரும்)


Friday, 16 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2

சிறுகதையோ, கதையோ புனைவு என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவிதை கூட புனைவதுதான் ஆனால் அது புனைவு என சொல்லப்படுவதில்லை. நாவலை புதினம் என்றும் அழைக்கிறார்கள். புனைவு எனும் சொல் நன்றாகவே இருக்கிறது.

பைத்தியக் காலம் என்றொரு புனைவு    எழுதியவர் 'இலக்கிய எழுத்தாளர்' நர்சிம்.  இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்துலகம் இவரது எழுத்துக்கள் பற்றி அறியும். இவரது எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன் என அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இவரிடம் சென்று எழுத பயின்று கொண்டால் நான் நன்றாக எழுத ஆரம்பிக்கலாம். ஒருமுறை நான் எழுதியதை கவிதை என்றேன். சற்று மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். எப்படி மாற்றி அமைப்பது என சிந்தித்து பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டேன்.

'தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச் செய்து விடுகிறார்கள் சிலர்'. இது அவரின் எழுத்து. எனக்கு என்னவோ இந்த எழுத்து வெகுவாக என்னை பாதித்துவிட்டது. எனது கிராமத்தின் சூழலை கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படித்தான் இவரது எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் நிகழ்வு மனக்கண் முன்னால் வந்து போகும். சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். அதில் இவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். விவரிப்பு அதில் வரும் கதாபாத்திரங்கள் அழுத்தமான ஒன்றை சொல்லி செல்லும். இந்த பைத்தியக் காலம். கதையை வாசித்து முடித்தபோது அதே பிரமிப்பு. கோமாதா, நந்தி அட! சொல்ல வைத்தது. அதுவும் கதையில் வரும்காட்சிகளின் பின்னணி. முடிவுதான் கதைக்கான மொத்த தளமும்.

அடுத்து பொன் வாசுதேவன் அவரது கவிதைகளுக்குப் போனேன். எளிமையான மனிதர். நேரில் பார்த்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். எனது இரண்டு புத்தகங்கள் வெளிவர காரணமானவர். இவரது  இருபது வருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவம் இவரது எழுத்துகளில் மிளிரும். ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருந்தார். தமிழும், அடர்ந்த கருத்து செறிவுமான  கவிதைகள் . ம்ம் இவரிடம் கவிதை எழுத கற்றுக்கொள்ளப்போகலாம். 'தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர் சிற்றலை நெளிய' பிரமாதம். நிழல் குறித்து  அட! வாழ்தலின் பலி கொண்டலையும் அற்ப சிம்மாசனம். வேரிழந்த எழுத்துக்கள். எனக்கு மிகவும் கடினம் இதுபோன்ற வார்த்தை கோர்ப்புகள். அதனால் தான் எனது கவிதைகளை வெறும் வார்த்தைகள் என கர்வத்துடன் சொல்லிக்கொண்டேன்.

அடுத்து என் சொக்கன் அவர்கள். இவருடனான அறிமுகம் ட்விட்டரில் இடம்பெற்றது. இவர் அழகாக வெண்பா எழுதுவார். அழகாக கதையும் சொல்வார். இவரது புனைவின் தலைப்பு காரணம். இவரது கதையை படிக்கும் முன்னரே நான் இப்படி எழுதி இருந்தேன்.

மனமுவந்து பாராட்டுவதை கூட உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என எண்ண  வைத்தது சந்தேக குணத்தின் குரூரமான பக்கம். 

இவரது கதையை படிக்கும்போது இதே சிந்தனை கொண்ட கதை. ஆனால் மனிதர்கள்  எப்படி விலகிப் போய்விட்டார்கள் என சொல்லும் அழுத்தமான கதை.

அடுத்து ரைலு. முத்தலிப். நகைச்சுவை உணர்வு உடையவர். பெயர்தான் முத்தலிப் ஒரு முத்தம் கூட தன இதழ்கள் கண்டதில்லை என என்னை சிரிக்க வைத்தவர். ரைலு ஒரு கனவும் அந்த கனவின் ஏமாற்றமும் சொன்ன கதை. இவர் தற்போது எழுத்துலகில் பரப்பரப்பாக கண்காணிக்கப்படுபவர். இந்த கதையும் அப்படியே. அதுவும் எங்கள் ஊர் பக்க கதை என்பதால் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை ரயில் மனத்திரையில் வந்து போனது. உள்ளப் போராட்டங்களை சொன்னவிதம் வெகு சிறப்பு. சில புதிய சொற்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

சங்கீதா பாக்கியராஜா. இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்துகளில் ஒரு கனமான வலி இருக்கும். அது சிறிது நாட்கள் வலித்துக் கொண்டே இருக்கும். இவரது எழுத்து பெண்களின் பிரச்சினைகளை நிறைய பேசும். இந்த அன்றில் பறவை ஒரு தபுதாரனின் கதை. நான் இந்த கதையைப் பற்றி நிறைய சொல்லப்போவதில்லை. ஒரே வரி மனைவி போனால் எல்லாம் போம்.

அடுத்து தமிழ் தமிழ் தமிழ். ஆம். கண்ணபிரான் ரவிசங்கர்.  இவரது சிந்தனைகள் இவர் ஒரு தமிழ் மாமேதை. எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கணிதமேதை ராமனுஜன் நினைவுக்கு வருவார். இவர் முருகனின் அருள் பெற்றவர். தரவு இல்லையெனில் வெளியே போ என மிரட்டும் கோபக்காரர். இவரோடு நான் ஒருமுறை ஆண்டாள் பற்றி விவாதம் செய்தபோது நான் விளையாட்டாக எழுதினேன் ஆனால் இவர் எல்லாவற்றையும் ஆணித்தரமாக எழுதினார். இதோ தரவு இப்படி அர்த்தம் கொள்ளலாம் என்றார். எனக்கு பொதுவாக புராணங்கள், பழைய விசயங்களில் அத்தனை தரவு பார்ப்பதில்லை, கற்பனைதான். ஆனால் இவரின் சிந்தனை வேறு. இவரைப்போல தமிழுக்கு பலர் வேண்டும். இவருக்கு எழுத்துலகில் கடும் எதிர்ப்புகள் இருப்பதால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் இவர் எழுத வேண்டும். இவர் எல்லாம் மாதம் ஒரு தமிழ் நூல் வெளியிடலாம். தமிழில் சிலப்பதிகாரம்தனை ஆய்வு செய்து உள்ளார். இவரது எழுத்து எனது நூல் ஒன்றுக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்.  அதைப்போல இவரது எழுத்து சுமந்து வந்த 'தமிழ்' மின்னிதழ் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறது. இலக்கியம், இலக்கணம் என சொல்லி எல்லா விசயங்களையும் இங்கே அருமையாக எழுதி இருக்கிறார். தகவல் களஞ்சியம், தமிழ் களஞ்சியம்.

அட இப்படி எழுதலாமா என ஜி ரா எண்ண  வைத்துவிட்டார். கேபியும் மூன்று பெண்களும் என்பதான புனைவு. எனக்கு அவர் குறிப்பிட்ட படங்கள் தெரியாது என்பதால் முழுவதும் உள்வாங்க இயலவில்லை. ஆனால் கதைநாயகிகள் மூலம் அற்புதமாக பல விசயங்கள் சொல்லி இருக்கிறார். படம் பார்த்து மீண்டும் படித்தால் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று இறுதியாக விமர்சனம். உலகப்படங்கள் பார்ப்பவர்கள் தமிழில் அதிகம், ஆனால் அதை அழகாக விமர்சனம் செய்வது இவருக்கு மட்டுமே கைகூடும். இவரது எழுத்து எனக்கு முன்னரே பரிச்சயம். புத்தக விமர்சனங்கள் இவர் எழுதுவது உண்டு. இவர் எழுதியதைப் படித்தபோது அந்த நியூரி பில்கே சிலேன் இயக்குனரின் படங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிகவும் தெளிவான நடை. தற்போது இவரது எழுத்துக்கள் பத்திரிக்கைகளிலும் வருகிறது.

நாளை, விஷ்ணுபுரத்தான் ஜெயமோகன் மற்றும் சில கவிதைகளும், புனைவுகளும்.

(தொடரும்)


Thursday, 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)


Tuesday, 13 January 2015

மதமும் சாதியும்

மூர்க்கர்கள் நிறைந்த உலகில் இந்த மதம் சாதி  எல்லாம் குறித்து கண்டித்து எழுதினாலும் மூர்க்கர்கள் திருந்தவே மாட்டார்கள்.

இந்த மதம், சாதி குறித்து எழுதினால் தரம் தாழ்ந்துவிடும். தரங்கெட்டதை குறித்து எதற்கு எழுதுவானேன்.

                                                     நன்றி வணக்கம்.

இப்படியெல்லாம் எழுத்தாளன் ஓடி ஒளியக்கூடாது. எழுதிக்கொண்டே இருப்பதுதான் எழுத்தாளன் பணி, இல்லையெனில் சமூகத்தின் பிணியை எவர் தீர்ப்பது.

திருவள்ளுவர் எழுதியே திருந்தாத சமூகம் நம்மளோடது, அதனால் எழுதுவது மட்டுமே எழுத்தாளன் பணி. மக்களை நல்வழிபடுத்தி செல்வது அரசு பணி . 

Tuesday, 6 January 2015

பொய்யான மனிதர்களின் கூடாரம்

'பக்தா, பக்தா' எனும் சத்தம் கேட்டு கண் விழிக்க முடியாமல் தவித்தேன்.

'என்ன பக்தா, நிறைய உறக்கமோ?' என்றபோது கூட என்னால் விழிக்க இயலவில்லை.

'நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன்' என்றதும் கண்களை கசக்கியவாறே  எழுந்தேன்.

'வாருங்கள் சாமி'

'என்ன பக்தா, என்னை காண வேண்டும் எனும் அக்கறை எதுவும் உனக்கு தோணவில்லையா?'

'உங்களை எனக்குத்தான் பிடிக்காதே, பின்னர் எதற்கு உங்களை நான் தேடி வர வேண்டும்?'

'அதுதான் நான் உன்னைத் தேடி வந்தேன் பக்தா'

'என்ன விஷயம் சொல்லிவிட்டு போங்க எனது உறக்கத்தை கெடுக்க வேண்டாம். யார் உங்களுக்கு கதவு திறந்து விட்டது?'

'உனது அன்னைதான் கதவு திறந்துவிட்டார், என்னை அமர சொல்ல மாட்டாயா?'

'சரி அமருங்கள்'

'பொய்யான மனிதர்களுடன் நிறைய சகவாசம் வைத்துக்கொண்டு இருக்கிறாயே பக்தா?'

'நீங்கள்தான் போலியானவர், நான் எதற்கு பொய்யான மனிதர்களுடன் சகவாசம் கொள்ள வேண்டும்?'

'என்ன பக்தா, எனக்கு எதுவும் தெரியாது என்று நீ நினைத்தாயா?'

'இதற்குதான் உங்களை எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை, திடீரென வருகிறீர்கள், சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்'

'பக்தா உனது நலமே எனது நலம். நீ பொய்யான மனிதர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு இருக்கிறாய்?'

'உங்கள் உளறலை நிறுத்துங்கள், அம்மா இந்த ஆளை எதற்கு உள்ளே விட்டீங்க, கழுத்தறுக்கிறான்'

'பக்தா, உனது நல்லதுக்கு சொன்னால் என்னை நீ கோவித்துக் கொள்கிறாயே'

'என்ன நல்லது? யாரை போலியான மனிதர்கள் என சொல்கிறீர்கள்?'

'நீ இணையத்தில் தொடர்பு கொண்டுள்ள மனிதர்களைத்தான் போலியானவர்கள் என்கிறேன்'

'இதற்கு மேல் பேசினீர்கள் சாமியார் என பார்க்கமாட்டேன், வெளியே போய்விடுங்கள்'

'என்ன பக்தா நீ செய்வது எனக்குத் தெரியாது என எண்ணிவிட்டாயா? முகமே தெரியாத மனிதர்களுடன் என்ன அப்படி ஒரு பழக்கம் உனக்கு வேண்டி இருக்கிறது. உனக்கு உன் பெற்றோர்கள் நல்ல பெண்ணை மணமுடித்து வைப்பார்கள் தானே, அதை விட்டுவிட்டு நீ எதற்கு முகம் தெரியாத பொய்யான பெண்களுடன் காதல் வசனம் பேசித் திரிகிறாய். நீ உண்மையானவனாக இருக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள் எனும் ஒரு எண்ணம் உனக்கு வரவில்லையா? இணையம் பொய்யான மனிதர்களின் கூடாரம் பக்தா'

'போதும் நிறுத்துங்கள், எனது உயிர் நண்பர்கள் இருக்கிறார்கள். சிலரை சிறு வயது முதல் தெரியும். கல்லூரியில் பழகியவர்கள் என சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி பொய்யான மனிதர்கள் ஆவார்கள். உங்கள் சாமியார் வேலையை மட்டும் பாருங்கள்'

'பதறாதே பக்தா, உனது உயிர் நண்பர்கள் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. முகமே அறியாத, எவ்வித அறிமுகமும் இல்லாத மனிதர்களுடன் உனக்கு என்ன பழக்கம் என்றுதானே கேட்கிறேன். அதுவும் உனக்கு இந்த பொய்யான மனிதர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது என சொல். நீ பண்ணுவது எத்தனை குற்றம் தெரியுமா?'

'என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள்'

'பக்தா, அவர்கள் எல்லாம் தங்களது வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள், அவர்களுக்கு எல்லாம் அது ஒரு பொழுதுபோக்கு ஆனால் நீ அப்படியா? ஒவ்வொன்றும் நீ செய்வது இவ்வுலகில் எவருக்கேனும் பயன்பட வேண்டும் என எண்ணுபவன் நீ. அப்படி இருக்க நீ எப்படி பொய்யான மனிதர்களுடன் உனது நேரத்தை செலவிட்டு கொண்டு இருக்கிறாய்'

'மனதுக்கு சந்தோசம் தருவதை செய்வதில் என்ன தவறு'

'பக்தா, உனது மூடத்தனத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பார். நீ இணையத்தில் பழகும் அந்த பொய்யான மனிதர்கள் ஒருபோதும் உனது உண்மை வாழ்வில் வரப்போவது இல்லை. உனது உண்மை வாழ்வில் வரத்தயங்கும் அந்த போலிகளுக்கு நீ எதற்கு உனது நேரத்தை செலவழிக்க வேண்டும். அவர்களுக்கு பொழுதுபோக்கு அவர்கள் செலவழிப்பார்கள், ஆனால் நீ?'

'உங்களால் இணையம் பயன்படுத்த இயலாது என்பதற்காக என்னை நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் சாமி'

'மூடனைப் போல பேசாதே பக்தா. இந்த அகில உலகம் என்னில் இயங்கும்போது இந்த இணையம் எனக்கு எதற்கு அவசியம். நீ உண்மையான, உன்னிடம் உண்மை பேசும் மனிதர்களுடன் பழக்கம் கொள்வதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் நீ கொண்டுள்ள பொய்யான மனிதர்களின் பழக்கம் தான் என்னை அச்சுறுத்துகிறது. அந்த பொய்யான மனிதர்கள் தங்களை எவர் என காட்டிக்கொள்ள தைரியம் இல்லாத கோழைகள். அவர்களுடன் எல்லாம் நீ பழகி பேசி என்ன இவ்வுலகில் சாதிக்க நினைக்கிறாய்'

'நீங்கள் அறிவிழந்து பேசுகிறீர்கள் சாமி. அவர்கள் எல்லாம் உண்மையானவர்கள் தான். அவர்கள் ஒன்றும் பொய்யானவர்கள் அல்ல. தங்களின் பாதுகாப்பு கருதி அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்'

'பக்தா, உன்னைப் போல முட்டாள்தனத்தில் மூழ்கி இருப்போரை நான் எப்படி திருத்த இயலும் என அச்சம்  கொள்கிறேன். ஆனால் உன்னை திருத்துவது எனது கடமை. எனது பக்தன் வழி தவறிப் போவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க இயலாது. விளையாட்டுத்தனம் நிறைந்த பொய்யான மனிதர்கள் எப்போதுமே ஆபத்தானவர்கள். அவர்கள் தவறு செய்யாதது போலவே அவர்கள் நடந்து கொள்வார்கள் ஆனால் உன்னைப் போன்ற பல அப்பாவிகள் அவர்களின் செயல்பாட்டை உண்மை என நம்பி ஏமாந்து போவார்கள். என்ன பக்தா நீ பெண் என்று நம்பிய ஒருவர் ஆண் என அறிந்தபோது நீ எத்தனை வேதனை அடைந்தாய் என்பதை சொல்லட்டுமா'

'போதும் சாமி நிறுத்துங்கள், நான் எப்படி போனால் என்ன'

'இல்லை பக்தா, நீ முட்டாள்தனத்தில் உன்னை அழித்துக் கொண்டு இருக்கிறாய். நீ எப்படியேனும் அதில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது முயற்சி. உன்னை நான் அடிக்கடி வந்து சந்திக்க வேண்டும். என்னை விட்டு நீ விலகிப் பொய் கொண்டு இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது'

'இப்போது என்ன செய்ய வேண்டும்'

'பொய்யான மனிதர்களிடம் இனிமேல் நீ ஒருபோதும் பேசக்கூடாது, பழகக் கூடாது என சத்தியம் செய்து கொடு. உன்மீது நம்பிக்கை வைக்காத நயவஞ்சகர்களின் பிடியில் இனிமேல் நீ சிக்கி சீரழியக் கூடாது எனவே உன் மீது நம்பிக்கை வைக்காத மனிதர்களுடன் நீ ஒருபோதும் பேசக்கூடாது. இதுவே நான் உனக்கு இடும் கட்டளை'

'சாமி, அப்படியெனில் நான் இணையம் பயன்படுத்தக்கூடாது என்கிறீர்களா, எனது நண்பர்கள் என்னை தேடுவார்களே'

'அதெல்லாம் தேடமாட்டார்கள், அவர்கள் பொழுதைப்போக்க வேறு எவரையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். பொழுதைப் போக்க நினைக்கும் பொய்யான மனிதர்களுக்கு நீ மட்டுமே அத்தியாவசியம் என நினைப்பதே உனது முட்டாள்தனத்தின் முதல் படி. அதை நீ முதலில் விட்டொழி பக்தா. நீ உனது உற்றார் உறவினர் என அவர்களோடு அன்போடு இரு. பாசமாக இரு. நாளை ஒரு பெண்ணை மணமுடித்த பின்னர் அந்த பெண்ணுக்கு உண்மையாய் இரு. இந்த பொய்யான மனிதர்களை விட்டு சற்று விலகியே நில். புரிந்து கொள் பக்தா இவ்வுலகில் நீ பலமுறை பிறப்பு எடுப்பதில்லை'

'எப்படி விலக இயலும் சாமி'

'எப்படி சேர்ந்தாய்  பக்தா, அப்படியே விலகிவிடு'

'சாமி நிறையே பேர் என்னை நேசிக்கிறார்களே'

'பக்தா, இதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். பொய்யான மனிதர்களின் நேசம் எதற்கு அவசியம் பக்தா. உனது உண்மையான நண்பர்கள் உன்னோடு எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். நீயாக தேடி எவரையும் தொடர்பில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. நீ சோகத்தில் இருந்தபோது அவர்கள் வந்தார்களா? அவர்களின் சோகத்தில் நீ சென்று இருந்தாயா? உண்மையான யதார்த்தம் புரிந்து கொள்ள மறுப்பதேன் பக்தா'

'எல்லாம் துறந்து இருக்கும் உங்களுக்கு சாத்தியம் ஆனால் எனக்கு'

'துறந்து விடும் விசயங்களில் பற்று வைத்திடும் உங்களுக்கு நானா தெரிகிறேன் துறவியாய் எனும் வாசகம் படித்தது உண்டா பக்தா. எதை துறக்க வேண்டுமோ அதில் நீ பற்று வைத்துக்கொண்டு திரிகிறாய். அந்த பற்று தவறு என சொல்கிறேன், கேட்க மறுத்து கேள்வி கேட்கிறாய். பெரும்பாலும் வெளி உலகின் அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களே இணையத்தில் பேசி மகிழ்ந்து இருப்பார்கள்  பக்தா, இதை எவரும் உண்மை என ஒப்புக்கொள்வதில்லை. மற்றவர்களுடன் எழுதி பேசுகையில் உனக்குள்ளேதான் பேசிக் கொள்கிறாய் பக்தா. எனவே எனது பேச்சைக் கேள். உனக்கு அடுத்த முறை பூமி குறித்து சொல்கிறேன்'

'என்னால் இயலாது. எனக்கு அந்த பொய்யான கற்பனையான உலகம் பிடித்து இருக்கிறது, ஆனாலும் பேசமாட்டேன் பழகமாட்டேன் என சத்தியம் செய்கிறேன்'

'பக்தா மிகவும் நல்லது, அடுத்த முறை வரும்போது நீ பொய்யான மனிதர்களுடன் தொடர்பில் இருக்க மாட்டாய் என்றே எண்ணுகிறேன்'

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. மொபைலில் வந்த ஒரு நோடிபிகேசனில் 'எழுந்திருடா செல்லம்' என முகமே தெரியாத, உண்மை பெயரும் தெரியாத ஒரு பெண் எழுதி இருந்தாள்.

அவளுக்கு பதில் எழுத எத்தனித்தபோது சாமியாரிடம் செய்த சத்தியம் தடுத்தது.


Sunday, 4 January 2015

வெட்டித் தருணங்கள் - 3

அடுத்த நாள் சிவக்குமாரை சந்தித்தேன். ஓங்கி ஒரு குத்து விட்டேன்.

''என்னடா''

''இனிமே நீ சொல்வியா?''

''டேய் என்னடா சொன்னேன்''

''நேத்து சொல்லலை''

''அணிலா?''

திரும்பி ஓங்கி ஒரு அறைவிட்டேன். அவனுடனான சண்டை அன்று பெரும் பிரச்சினையில் முடிந்தது. அவன் என்னோடு இனிமேல் பேச மாட்டேன் என கூறினான். போடா வெங்காயம் என திட்டிவிட்டேன். என்னைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்தார்கள். நான் இப்போது கல்லூரியில் எனக்கான அடையாளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டேன்.

சில நாட்களில் இணைய இணைப்பு வீட்டில் வந்தது. முதலில் ட்விட்டர் திறந்தேன். www.twitter.com சென்று vijayathma என பெயரிட்டு @vijaysole என வைத்தேன். புதிய உலகம் கண்ணுக்கு பட்டது. முதலில் ஒரு விஜய் ரசிகர் டேய் அது vijaysoul என்றார். உடனடியாக அக்கவுண்ட் டெலிட் பண்ணிவிட்டு @soulvijay எனத் தொடங்கினேன்.

விஜய் ரசிகர்களாக தேடி தேடி இணைந்தேன். அவர்களும் என்னைத் தேடி தேடி இணைந்தார்கள். விஜய் படத்தை இணைத்தேன். பின் அட்டையில் பெரியார் படத்தை இணைத்தேன். முதல் நாள் மட்டுமே நூறு பேர் பாலோ பண்ணினேன். முன்னூறு பேர் பாலோ பண்ணினார்கள்.

வெளி உலகத்தை விட இந்த உலகம் மிக நன்றாக இருந்தது. தமிழில் எப்படி எழுதுவது என தெரியவில்லை. அப்போது ஒருவர் தமிழில் எழுதுவது எப்படி என சொல்லித் தந்தார். ஒரு மாதம் எதுவும் எழுதுவதில்லை என முடிவு செய்து என்ன நடக்கிறது என பார்த்தேன். (தொடரும்)

Friday, 26 December 2014

கண்டு தாழிட்டேன் - 2

அவனைக் கொன்றுவிட மனம் துடித்தது. அன்றே வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். என்னை இரு என சொல்ல எவருக்குமே தைரியம் இல்லை. எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது. எவரேனும் நமக்குத் தேவைப்படுவார்கள் என்றுதானே நாம் கொடுமைகளை பொறுத்துக் கொள்கிறோம். கோபமாக வெளியேறினேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா கடுமையாகவே சத்தம் போட்டார். இதுக்குனு வேலைய விடுவியாம்மா, சுத்த அறிவுகெட்ட ஜென்மம் நீ என்றார். உங்களுக்கு ரொம்ப அறிவு, திட்டுறாராம் திட்டு. நீ செஞ்சது சரிதான் உனக்காச்சும் தைரியம் இருக்கே என்றார் அம்மா. காவ்யாவிற்கு போன் செய்தேன். அடியேய் உன்னைப்பத்தி கேவலமா பேஸ்புக்ல ஒருத்தன் எழுதி இருக்கான். நீ ஒரு வேசினு வேற எவனு தெரியலைடி. அந்த கௌதமன்தான் பண்ணி இருப்பான். ஏன்டீ? அவனை ஓங்கி ஒரு அறைவிட்டேன் அந்த கடுப்பில் பண்ணி இருப்பான் என்றேன். உன்ட்ட என்னடி சொன்னேன், பேசாம ஒதுங்கிப் போயிருக்கலாம்ல என்றாள். சரிடீ என சொல்லிவிட்டு போலிஸிடம் புகார் சொன்னேன். இனி வேலை தேட வேண்டும். சிறிது நேரத்தில் கௌதமன் போன் செய்தான். அந்த பேஸ்புக் ரிமூவ் பண்ணிட்டேன். புகாரை வாபஸ் வாங்கு என்றான். இணைப்புதனை துண்டித்தேன் இச்சமூகத்தில் மன்னிப்பு கிடைக்கும் என்ற தைரியம் பாவம் செய்யத் தூண்டுகிறது. சாவட்டும்.

எனது இன்னொரு தோழி சியாமளினி மூலம் வேறு ஒரு வேலை நான்கே நாட்களில் கிடைத்தது. காவ்யா அவளது எண்ணை மாற்றி இருந்தாள். எனக்கு புது எண் தரவில்லை . கௌதமன் என் மீது பெரும் வெறியில் இருந்து இருக்க வேண்டும் அவனை பலர் பேஸ்புக்கில் காறித்துப்பி விடும்படி ஒரு காரியம் செய்து இருந்தேன் தண்டனை தந்த திருப்தி எனக்குள் இருந்தது. ஆம்பள பசங்க அப்படித்தான் என சில பெண்களின் சப்பைக்கட்டு வேறு. வலி தாங்கிப் பழகியவர்கள். கௌதமன் வேலையை ரிசைன் பண்ணியதாக தகவல் வந்தது. அவன் வேறு எங்கேனும் சென்று திருந்தினால் சரி என இருந்தேன். முதல் நாள். புது வேலை. ஐ ஆம் ஶ்ரீதர் என வந்து நின்றவனைப் பார்த்ததும் என் கண்கள் காதல் கொள்ளத்துடித்தன. யுவர் ப்ரொஜக்ட் லீடர் காயத்ரி லெட் மீ இன்ட்ரடியூஸ் அவர் கொலீக்ஸ் டூ யூ. தேன் ஒலி ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்தது எனது இருக்கையில் அமர்ந்தேன். பெரிய அலுவலகம் எல்லாம் கிடையாது. ஆரம்பித்து ஒரு மூன்று வருடங்கள் ஆகி இருந்தது. எட்டு பேர் கொண்ட வேலை இடம். ஆண்கள் மூன்று பெண்கள் ஐந்து. மேலும் பத்து பேர் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள். மொத்தம் 18 பேர் மட்டுமே. சியாமளினி பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னைவிட பேரழகு. சிறு வயதிலிருந்து தோழி. அவள் ஒரு டாக்டர். மாதம் ஒரு முறை சந்திக்கும் வழக்கம் உண்டு. அவளிடம் நிறைய பேசுவதுண்டு. எங்கள் வீட்டு குடும்ப டாக்டர். அப்பா அம்மாவுக்கு ஏதேனும் என்றால் அவள்தான். வயது 24. மாநிறம். நல்ல உயரம்.

அவளுக்கு ஒரு காதலன் உண்டு பெயர் டாக்டர் சியாமளன். இருவரும் ஒரே கிளினிக்கில் வேலை பார்த்தனர் சியாமளனின் நண்பரின் கம்பெனிதான் நான் வேலைக்கு சேர்ந்து இருப்பது. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள். ஆனால் ஶ்ரீதர்?! கௌதமன் போல இருப்பானோ என சந்தேகம் வந்தது. அடுத்தநாள் கோவிலுக்கு சென்று இருந்தேன். இந்த கோவிலுக்குப் போனதே இல்லை. அந்த கோவிலில் வயதான அம்மாவுடன் ஶ்ரீதர் நின்று இருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் வைத்தேன். தலை நிறைய மல்லிகைப்பூ நீல வண்ண சேலை என நான் ஜொலித்தேன். அம்மா, இவங்க காயத்ரி என சொல்ல அந்த அம்மா லேசாக சிரித்தார். @radhavenkat2: இந்த கோவிலுக்குத்தான் வருவீங்களா? என்றார் ஶ்ரீதர். இல்லை சார், இதுதான் முதல் தடவை. நம்ம கம்பெனிக்கு வந்ததால தெரிஞ்சது என்றேன். நல்ல சாமி என சொல்லிவிட்டு கும்பிட்டு வாங்க என்றார். அந்தம்மா கணவனை இழந்தவர் என்பதானா அடையாளம் இருந்தது.
சாமியை வணங்கினேன். கோவிலை சுற்றி வந்தபோது ஶ்ரீதர் அங்குதான் நின்றார். என்ன சார் இன்னும் இங்கேயே நிற்கறீங்க என்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் என்றார். வரேன்மா என சொல்லி நடந்தேன்.

சியாமளினியை அன்று சந்தித்து பேசினேன். கௌதமன் காவ்யா ரகுராமன் குறித்து சொன்னதும் அவளின் ஒரே வார்த்தை தான் பதில். உலகம். நீ தப்பு பண்ணி இருக்கியா என்ற என் கேள்விக்கு இல்லை என்றே சொன்னாள். சியாமளன் அத்தனை நல்லவரா என்றேன். சிரித்தாள். உடல் மீதில் ஆசை எல்லோருக்கும் இல்லை. என்ற பதில் எனக்குப் பிடித்து இருந்தது. கௌதமன் மீது நான் கொண்டது உடல் மீதான காதல். ஶ்ரீதர் மீது கொள்ளத்துடிப்பது மனம் மீதான காதல். காயத்ரி  எல்லா ஆண்களும் மோசம் கிடையாது சின்ன சின்ன சபலம் இருக்கும், ஆனா அறிவுள்ளவங்க அதை கட்டுபடுத்திருவாங்க சந்தேகப்படு, எல்லாரையும் இல்ல என்றாள். சியாமளனின் அறையை எட்டிப் பார்த்தேன் எனக்கொரு சியாமளன் வேண்டும் என நினைத்தேன் அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கௌதமனைப் பார்த்து விலகி நடந்தேன். காயத்ரி நில்லுடி என அசிங்க அசிங்கமாக பேசினான். வேடிக்கைப் பார்த்தவர்கள் அதிகம். நான் நிற்காமல் நடந்தேன். சில நிமிடத்தில் போலீஸ் வந்தது. கௌதமனை அடித்து உதைத்தார்கள். சிலர் திருந்த முனைவதே இல்லை. பெண்ணை கேவலமாகப் பேசும் கொடிய நாக்கு தானாக அறுந்து விழவேண்டும் என எனது வேண்டுதல் பலித்துவிடுவதில்லை என்றபோதும் வேண்டிக்கொண்டேன் வாழ்வை இயல்பு இயல்பற்றது என பிரித்துக்கொள்ளலாம். இயல்பாக இருப்பது கடினம். இருக்கிறதை விட இல்லாத ஒன்றின் மீது அதிகப்பற்று வரும் அதை அடைய மனம் போராடும் அந்த போராட்டம் வலியாக உருவெடுக்கும். வலி மரணத்தை உண்டுபண்ணும். (தொடரும்) 

Monday, 22 December 2014

கண்டு தாழிட்டேன் - 1

அவள் திட்டிக்கொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏன்டீ உனக்கு அவனைப் பிடிச்சா காதலி, என்னை எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என கொஞ்சம் அதிகமாகவே சத்தம் போட்டுவிட்டேன். அந்த மூஞ்சிய எவன் லவ் பண்ணுவான், அவன் சரியில்லை அதனால்தான் சொல்றேன். சும்மா கத்தாதே என்றாள். உன் மூஞ்சிய விட அவன் நல்லா மூக்கு முழியுமாத்தான் இருக்கான், உனக்கு பொறாமை அவன் உன்னை கண்டுக்கலைனு என நான் சொன்னதும் உன்னைத் திருத்த முடியாதுடி என என்னைத் திட்டிவிட்டுப் போனாள். என் பெயர் காயத்ரி. வயது 23. மென்பொருள் வேலை. அதோ போகிறாளே அவள் காவ்யா வயது 23. அதே வேலை.

ஒரே கல்லூரியில் படித்தோம் என்பதுதான் எங்களுக்கான நட்பு. நான் பேரழகி, அவள் கொஞ்சம் பேரழகி. எனக்கு திமிர் அதிகம். அவளுக்கு கொஞ்சம் திமிர். கல்லூரியில் அவள் ரகுராமை காதலித்தாள். முதல் வருடத்திலேயே காதல். ஆனால் கடைசி வருடத்தில் காதல் கைகூடவில்லை. என்னையும் சிலர் காதலித்தார்கள் அந்த ரகுராம் என்னை காதலிப்பதாக மூன்றாம் வருட இறுதியில் சொன்னதை நான் காவ்யாவிடம் சொன்னதால் அதற்குப்பின் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது  நான் ரகுராமை உடனடியாக நிராகரித்தேன். என்னை முதலில் காதலிக்க வக்கில்லாதவன் எதற்கு என்னை இரண்டாவதாக காதலிக்க வேண்டும். காவ்யா கசந்தாளோ?

காவ்யா அவனோடு சண்டை போடாத நாளே கிடையாது. அதிலிருந்து இந்த காதல் பையன் எல்லாம் வெறுக்கத் தொடங்கி இருந்தாள். நான் முதன் முதலில் காதல் என மனதில் உணர்ந்தது இதோ இந்த கௌதமன் தான். என்னை விட ஒரு வயது மூத்தவன். இங்குதான் வேலை. பார்த்தவுடன் என் மனம் பற்றிக்கொண்டது. இந்த காவ்யாவை அவன் காதலிக்கக்கூடாது என நான்தான் வலியப் போய் கைகொடுத்து என் காதலை கண்களால் வெளிப்படுத்தினேன். அட்டகாசமான முகம் கட்டான உடல். வசீகரித்தான். காவ்யா காதலித்து விடக்கூடாது என அவளிடம் கௌதமனை நான் காதலிப்பதாக முதலில் சொன்னபோது சிரித்தாள். இருவரும் வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது

கௌதமன் இரண்டு வருடங்களாக இங்கே வேலை செய்கிறான். ஆறு மாதங்கள் சும்மா இருந்தவள் என்னை காதலிக்கக்கூடாது என சொல்ல என்ன காரணம் என யோசித்தேன். ஆனால் அவளை பொறாமைப் பிடித்தவள் என திட்டிவிட்டேன் கோபமாகப் போய்விட்டாள். அன்று கௌதமனை சந்தித்தேன். கௌதம் டிட் யூ ஸ்பீக் டூ காவ்யா? என்றேன். நோ என்றான். எனக்கும் அவனுக்குமான காதல் வேலை இடத்துக்குத் தெரியாது. வேலையில் இருப்பவர்கள் யாரும் கௌதமனை குறை சொன்னது இல்லை. இந்த காவ்யா!

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவே இல்லை கௌதமன் என்னை மட்டுமே காதலிக்கிறானா என எப்படி உறுதி செய்வது? குழப்பம் கண்களைச் சுற்றியது. அடுத்தநாள் கௌதமனிடம் எதேச்சையாகத்தான் கேட்டேன். ஆர் யூ சஸ்பிசியஸ்? என்றான் வேறு கேட்க மனமே இல்லை நோ ஜஸ்ட் என சொன்னேன். அன்று இரவு கௌதமன் எனது மொபைலுக்கு அழைத்தான். ஒய் டிட் யூ ஆஸ்க் மீ தெட் என்றான். ஒண்ணுமில்லை என சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை, காவ்யா நீ நல்லவன் இல்லை என சொன்னதாக சொன்னாள் என்றேன். அசிங்கமாக காவ்யாவைத் திட்டிவிட்டு டோன்ட் லிஸன் டூ கெர் என வைத்துவிட்டான். காவ்யாவை அவன் தகாத வார்த்தை சொன்னது எனக்கு வலித்தது. காவ்யாவிற்கு போன் செய்தேன் என்னடி கௌதமன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா என்றேன். நீ அவனை காதலிக்காதே என்றாள். ஏன்டீ இப்படி மொட்டையா சொல்ற, ரகுராமன் மாதிரி நடந்துகிட்டானா என்றேன். அவன் பேச்சையே பேசாத, நீ காதலிக்காத, அவனை விட்டு விலகிருடி என அவள் சொன்னதும் எரிச்சலை உண்டுபண்ணியது அவன் நல்லவனில்லையெனில் என்ன காரணம் சொல்லித்தொலைத்தால் என்ன என மனதில் எண்ணிக்கொண்டு போனை வைத்தேன்

அடுத்தநாள் கௌதமன் என்னோடு பேசவில்லை. என்னைத் தவிர்த்தான், நான் தவித்தேன். சொல்லுடி எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என மதியம் கேட்டேன். விளக்கம் சொல்ல முடியாதுடி, அவன் நல்லவனில்லை என்றாள். இனி காவ்யாவிடம் கேட்கவே கூடாது என முடிவு செய்தேன். கௌதமன் அன்று மாலையில் என்னிடம் காவ்யாவைப் பற்றி படு கேவலமாக பேசினான். அவனை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது ஆனாலும் உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. அவளது நட்பு பற்றிய அக்கறை எனக்கு பெரிதில்லை. கௌதமன் எனக்கு மட்டும் எனும் என் திமிர் தாண்டவம் ஆடியது. அவளது ரகுராமன் பற்றிய காதலை சொன்னதும் காவ்யாவை சகட்டுமேனிக்குத் திட்ட ஒய் ஆர் யூ சோ ஆங்கிரி  ஆன் கெர் என்றேன். சீ இஸ் எ யூசர் லெட் அஸ் நாட் டாக் அபவுட் தெட் எனத் திட்டினான். அவன் கரம் பற்றினேன். சீ இஸ் மை க்ளோஸ் ப்ரண்ட் என்றேன். சட் அப் நவ் என்றான். அதிர்ந்தேன். அவளைப் பற்றி பேசினாலே எரிந்து விழுந்தான். அன்றோடு காவ்யா பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தேன். காவ்யாவிடம் கௌதமனைப் பற்றி பேசுவதும் இல்லை. சில மாதங்கள் போனது. காவ்யா வேறு வேலை தேடிச் சென்றாள். என்னடி என்னாச்சு எனக் கேட்டபோது சிலமாதங்கள் முன்னரே கௌதமன் தன்னிடம் தவறாக பலமுறை நடக்க முயன்றான் நான் மறுத்துவிட்டேன் உன்னை எச்சரித்தேன். நீதான் அவனது காதல் வலையில் வீழ்ந்து என்மீது பொறாமை கொண்டாய். நான் எங்கே உண்மையை சொல்லி விடுவேனோ என மிரட்டினான். பயந்து வேலையை விட்டுப்போவது போல அவனிடம் சொல்லிவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறேன். நீ ஒரு ஓட்டவாய், அன்று சொல்லி இருந்தால் அவனது சட்டையைப் பிடிப்பாய்.

என் நிலை என்ன ஆவது? நீ ஆண்களிடத்தில் எச்சரிக்கையாகவே இரு. அந்த ரகுராமன் நான் காதலிப்பதை சாதகமாக்கிக் கொண்டு என்னை அடைய முயற்சித்தான், முட்டாள், நான் மறுத்ததும் உன்னிடம் காதலை சொல்லி இருக்கிறான், நீ என்னிடம் உளறிவிட்டாய். அவனோடு தினமும் சண்டையிட்டேன். என் காதலை அவன் ஏற்கவில்லை. அவனைப் பற்றி அன்று உன்னிடம் சொல்ல மனமில்லை. ஒரே கல்லூரி. இங்கு வந்தால் இந்த கௌதமனின் பார்வை என் மீதே இருந்தது. காமுகப் பார்வைடி அது. நீயோ முந்திக்கொண்டு காதலிப்பதாக சொன்னபோது சிரித்தேன். உன்னை அடைய நினைத்தானாடி? என்றாள். கண்களில் நீர்்நிறைய ஆம் கேட்டான்டி முடியாதுன்னேன்

அதான் என்கிட்ட கேட்டு இருக்கான். நம்மைப் பார்த்தா எப்படிடீ இந்த பசங்களுக்கு இருக்கும்? என பொரிந்து தள்ளிவிட்டாள். சில விசயங்களை பேசாது போனது எத்தனை தவறு என காவ்யாவிடம் சொன்னேன். இல்லடி நீ என்னை நம்பற சூழலில் இல்லை. என் மேல உனக்கு நட்பு இருந்தாலும் நமக்கே உரித்தான பொறாமை உன்னோட திமிர் உனக்குத் தந்தது. நீயும் வேற வேலை தேடு, இனி நாம பிரிஞ்சிரலாம் என்றாள். அவனை நம்பாதே. அவள் கண்களில் கண்ணீர் இருந்தது. எனக்கு அவனை நம்பாதே. எனக்கு கை கால்கள் உதறல் எடுத்தது அன்று என் அப்பாவிடம் நேரடியாகவே கேட்டேன். ஏன்ப்பா பையனுங்க எல்லாம் இப்படித்தானா? என ரகுராமன் கௌதமன் கதையை சொன்ன மறுகணம் சில லூசுக அப்படித்தான்மா என்றார் நாமதான் கவனமாக இருக்கணும் என்றவரிடம் சரிப்பா என அம்மாவிடம் போய் அதே கதையை சொன்னேன் எடுபட்ட பயல்க பொட்டபிள்ளைக வாழ்க்கையோட விளையாடறதே பொழப்பா வைச்சிட்டுத் திரியறாணுங்க எனத் திட்டினார். ஆண்கள் மோசமானவர்களா? ஒரு ரகு ஒரு கௌதமன். வேறு யார் என யோசிக்கையில் வாழ்வில் கண்ட ஆண்கள் சிலரின் நடவடிக்கைகள்   அபத்தமாகத் தெரிந்தது. புரியாமல் இருந்து இருக்கிறேன். வெட்கமே இல்லாத சீவன்கள்.

கௌதமனிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்க இயலவில்லை. அங்கிருந்த பெண்கள் சிலரிடம் கௌதமனைக் குறித்து கேட்டபோது டோன்ட் டாக் நான்சென்ஸ் எனத் திட்டி  விட்டதோடு என்னைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டார்கள்்எனக்கு தாங்க முடியாத எரிச்சல் எல்லாம் அவனிடம் சொல்ல வெலவெலத்துப் போனான் ஐ ஆம் நாட் தெம் என அவனை ஓங்கி அனைவர் முன்னிலையில் அறைந்தேன். திஸ் இஸ் பார் காவ்யா எனச் சொன்னதும் யூ என கையை ஓங்கினான். அங்கிருந்த பெண்கள் சிலரது முகம் மகிழ்ச்சி களை கொண்டது. இப் யூ டச் மீ, யூ வில் பி டெட் என்றேன். அவமானத்தில் வெளியே ஓடினான். எனக்கு ஏமாற்றப்பட்ட ஆங்காரம். (தொடரும்)




Thursday, 11 December 2014

வெட்டித் தருணங்கள் - 2

அன்று நிறைய கனவு கண்டேன். எனக்கான ஒரு லேப்டாப். இரவு முழுக்க விழித்து இருந்தேன். அடுத்தநாள் நானும் என் அப்பாவும் கடைக்குப் போனோம். விதவிதமாக லேப்டாப் வைத்து இருந்தார்கள்.

"எதுனு தெரியுமா?"

"டோசிபா ஸ்டேடிலைட்"

"அப்ப போய் எடு, எதுக்கு பிராக்கு பாக்குற"

எனக்கு எதை தேர்ந்தெடுப்பது என சற்று குழப்பம் அடைந்தேன். நண்பன் சொன்னதை நம்பலாமா என புரியாமல் திகைத்தேன்

"என்ன மசமசனு நிற்கிற"

"இதோ எடுத்துட்டு வாரேன்"

அங்கே இருந்த விற்பனை பையனிடம் மேலும்  விசாரித்து சரியாக ரூபாய் 30000க்கு ஒரு லேப்டாப் வாங்கினேன்.

"எனக்கு ஒரு நல்ல போன் வேணும்பா"

"இந்த போன் நல்லாதான இருக்கு"

"நிறைய ஆப்ஸ் இதில இல்லை"

இது உடையட்டும், வேற வாங்கலாம்"

லேப்டாப் வாங்கிய கையோடு நேராக மாரியம்மன் கோவிலுக்குப் போனேன். லேப்டாப் பூஜை பண்ண இல்லை. என்னிடம் சவால் விட்டவன் அங்கு இருந்தான், அவனுக்கு காட்டவே சென்றேன். வீடு வந்ததும் லேப்டாப் திறந்தேன். புதிய உலகம் எனக்கானது. இரண்டு அக்காக்கள், வேண்டாம்
.
இன்டர்நெட் கனெக்‌ஷனுக்கு போன் பண்ணி சொன்னேன். டாடா மெமரி கார்டு வாங்க சொன்னார்கள். எனக்கு வீட்டில் இணைப்பு வேண்டும் என அடம்பிடித்தே போன் செய்தேன். இன்னும் சில நாட்களில் இணைப்பு தருகிறோம் என சொன்னார்கள்.

சிவகுமாருக்கு போன் செய்தேன்.

"டேய் லேப்டாப் வாங்கிட்டேன்டா"

"என்ன லேப்டாப்"

"டோசிபா"

"இன்டர்நெட்?"

"ஏர்டெல்"

"பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் அப்புறம் இன்ஸ்டாக்ராம் எல்லாம் ஆரம்பிடா"

"அதெல்லாம் எதுக்குடா"

"நீ வெளி உலக ஆட்களோட பழக வேணாமா? உங்க வீட்டுல யார்கிட்டயும் இல்லையா?"

"இல்லைடா"

"இன்னைக்குத்தான லேப்டாப் வாங்கி இருக்க, ஒண்ணொன்னா சொல்றேன். மொபைலே காலேஜுக்கு வந்தப்பறம் வாங்கி இருக்க"

"கிண்டல் பண்ணாத"

"நாளைக்கு லிங்கா பார்க்க வாடா"

"என் தலைவன் படம் மட்டுமே பார்ப்பேனு உனக்குத் தெரியாதா?"

"யாரு அணிலா?"

"அப்பா வரார்,பிறகு பேசறேன்டா"

அப்பா ஒன்றும் வரவில்லை. அந்த நாயை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது. சிவகுமார் நாய் கல்லூரியில் பழக்கம். பெரிய பணக்காரன். எல்லோரிடம் திமிராக பேசுவான். கத்தி படம் வெற்றி பெற்றது அவனுக்கு வயிற்றெரிச்சல். தான் யாருக்கும் ரசிகன் இல்லைனு சொல்வான். மடையன், அணிலாம். நாளை அவனை வயிற்றில் ஓங்கி குத்து விட வேண்டும்.

(தொடரும்)