Thursday 2 April 2015

வாடினேன் வாடிவருந்தினேன்

'பக்தா'

'வாருங்கள் சாமி, வந்து அமருங்கள், நான் வெகுவாக திருந்திவிட்டேன், இப்போது எல்லாம் எவருடனும் நான் அதிகம் பழகுவது இல்லை. என் வேலை உண்டு நான் உண்டு என இருக்கிறேன். மனமும் நிம்மதியாக இருக்கிறது. அன்று நீங்கள் சொன்னபிறகுதான் என்னுள் இத்தனை மாற்றம்'

'பக்தா'

'ஆமாம் சாமி, நான் இப்போது எல்லாம் எல்லா நேரங்களிலும் நாலாயிர திவ்விய பிரபந்தங்கள் மட்டுமே கேட்கிறேன். அதிலும் திருமங்கையாழ்வாரின் பாடல் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம் சாமி. அதிலும் முதற்பாடல் தொடங்குகிறதே எத்தனை பேரானந்தம்'

'பக்தா'

'மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி 
தன்னாகித் தன்னினருள் செய்யும் தலைவன் 
மின்னோர் முகில்சேர் திருவேங்கடம் மேய 
என்னானை யென்னப்பன் என்னெஞ் சிலுளானே 

இந்த பாடல் எத்தகைய தன்மை கொண்டது பார்த்தீர்களா சாமி. ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு வாழ்க்கையெல்லாம் அழிந்து போனதே என்று அழுந்தி அழுது ஓம் நமோ நாராயணா எனும் நாமம் கண்டு கொண்ட பின்னர் எத்தகைய சிந்தனை வந்து இருக்கிறது. அதைப்போலவே எனக்கும் இந்த காதல், கல்யாணம் எல்லாம் வேண்டாம் என முடிவு எடுத்து உங்களைப் போல நானும் ஒரு சாமியாராக மாறலாம் என முடிவு எடுத்துவிட்டேன் சாமி. என்னை நீங்கள் தான் உங்கள் சிஷ்யராக ஏற்றுக்கொண்டு எம்மை ஒரு 'சின்ன சாமியாக' மாற்ற வேண்டும்.

'பக்தா'

'உண்மையிலேயே சொல்கிறேன் சாமி. என் மனம் இத்தனை நாளாக அந்த பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை காதலித்து களித்து  இருந்தேன். நீங்கள சென்ற முறை சொன்னபோது கூட நான் உங்களை மிகவும் வெறுத்தேன். ஆனால் நீங்கள் சொன்னது எத்தனை உண்மை என புரிந்து கொண்டேன். இறைவன் புகழ் பாடியவர்களில் சிலர் எப்படி பெண்பித்து பிடித்து வாழ்வை சீரழித்தார்கள் என உங்களுக்கு நான் சொல்லியா தெரியவேண்டும், நீங்கள் சாமியாராக மாறியது பலன் உணர்ந்தேன்'

'பக்தா'

'பாருங்கள் சாமி, எப்படி எழுதி இருக்கிறார் என.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம் 

ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர்ப்பணைமுலை துணையா 
பாவியெனுணரா தெத்தனை பகலும் பழுதுபோயோழிந்து போயின நாள்கள் 
தூவிசேரன்னம் துணையோடும் புணரும் சூழ்புனற்குடந்தையே தொழுது என் 
நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

 இப்படி எவராவது இன்று எழுதிவிட முடியுமா? சொல்லுங்கள் சாமி. தான் எப்படி எல்லாம் பெண்கள் மீது  மோகம் பிடித்து அலைந்தேன் என எப்படி சாமி இவரால் இப்படி சொல்ல முடிந்தது. எனக்கு இந்த இருபத்தி இரண்டு வயதில் இந்த ஞானம் வர இவரே காரணம். அவளை எண்ணி எண்ணி அவள் பின்னால் நான் அலைந்து திரிந்தேன். அவளிடம் காதல் சொல்லி, அவளும் காதல் ஏற்று இருக்கும்பட்சத்தில் நீங்கள் வந்து சொன்னீர்கள். இவரது பாடல்கள் படித்த பின்னரே நல்லவேளை இந்த சம்சார உலகில்  சிக்கிவிடாமல் தப்பிக்க வழி செய்து கொண்டேன். என்னை அழைத்து செல்லுங்கள் சாமி, உங்கள் குருகுலத்தில் தங்கிவிடுகிறேன்'

'பக்தா'

'உங்களை எப்படி எல்லாம் வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைத் தேடி தேடி வந்து கொண்டே இருந்தீர்கள். ஒருமுறை வைகுண்டம் கூட அழைத்தீர்கள் நான் தான் மறுத்துவிட்டேன். இப்போது எங்கே வேண்டுமெனினும் அழைத்துச் செல்லுங்கள் சாமி'

'பக்தா'

'சாமி, என்னை நீங்கள் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீர்களே, நீங்கள் பேசுங்கள் சாமி'

'பக்தா'

'சொல்லுங்கள் சாமி'

'எனக்கு அடுத்த மாதம் திருமணம், நானும் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன் பார்

நாராயணா நரனே உன்னை பின்பற்றி பின்பற்றி பலவும் கண்டேன் 
பாராயணம் செய்து கொண்ட புண்ணியம் எனக்குப் பின் எவர் உன்னை 
ஆராதனை என்போல் பண்ணக்கூடும் என்றே அவளோடு கலவி கொண்டு 
சேராதனை சென்று அடைய கண்டுகொண்டேன் அவளது நாமம்

உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா பக்தா. சம்சாரத்தில் இருப்பவர் சாமியாராக மாறுவதும், சாமியாராக இருப்பவர் சம்சார உலகில் செல்வது இவ்வுலக இயல்பு. மறக்காமல் வந்துவிடு'

'ஐயோ சாமி'

என்னடா ஆச்சு, தூக்கத்தில இப்படி ஐயோ சாமின்னு கத்துற, மணி பாரு எட்டு ஆகுது. எப்ப பாரு அந்த சாமியாரு கனவு கண்டுகிட்டு, புலம்பிகிட்டு. ரெண்டு தடவை சுபா போன்  பண்ணிட்டா, நீ கிளம்பிட்டியா, இல்லையானு. சீக்கிரம் கிளம்பி அவளை கூப்பிட்டு வேலைக்குப் போகற வழியைப் பாரு. அடுத்த மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க பேசி வைச்சிருக்கோம்.

இனி எப்படி அம்மாவிடம் சொல்வது, நான் சாமியாராகப் போக இருக்கும் கனவு வந்தது என்று. எப்படி அந்த திருமங்கையாழ்வார் இப்படி மாறி இருப்பார் என நினைத்து அம்மாவிடம் கேட்டேன்.

'ஏன்மா ஒருத்தர் பெண் மீது ஆசை கொண்டு பின்னர் கடவுளே வழினு எதுக்குமா போவாங்க'

'ம்ம்ம்ம் அது அந்த பொண்ணு கொடுக்கிற டார்ச்சர் தாங்காமாதான் அப்படி போவாங்க, போயி கிளம்பற வழியைப் பாரு'

அம்மா சொன்னது உண்மையாய் இருக்குமோ?!








No comments: