Friday 21 May 2010

புகைபிடித்தலும், தண்ணி அடித்தலும்

ராமானுசபுரம்னு தமிழ்நாட்டுல தெற்கால இருக்கற ஊருலதான் சின்னசாமி வாழ்ந்து வந்தான்.

சின்ன வயசுல வயக்காட்டுல கூலிக்காக ஓடியாடி வேலை செஞ்சிட்டிருந்த காலத்தில வெங்கடசனோட சேர்ந்து முத முதல தோட்டத்தில மறைஞ்சி நின்னு குடிக்க ஆரம்பிச்ச சிகரெட்டு பழக்கத்தை சின்னசாமி தொடங்கினப்போ அவனுக்கு பதினேழு வயசுதான். அதக்கப்பறம் அந்தப் பழக்கத்தை நிறுத்திக்கவே இல்லை. வெங்கடேசன் படிச்சி பட்டம் வாங்கி திருச்சியில வேலைக்குச் சேர்ந்துட்டான், ஆனா இந்த சின்னசாமி ராமனுசபுரத்தைவிட்டு எங்கயும் போகலை. படிச்சிட்டு இருக்கறப்போ ஊருக்கு எப்பவாச்சும் வர வெங்கடேசன், சின்னசாமிகிட்ட 'சிகரெட் பழக்கத்தை விட்டுடா'னு சொன்னாலும் சின்னசாமி விடுறதா இல்லை.

அதோட விட்டானா சின்னசாமி, இருவது, இருவத்தி ரண்டு வயசுலேயே உடல் அலுப்புக்குனு வயக்காட்டு வேலை முடிஞ்சதும் கொஞ்சம் சாராயம் வாங்கி குடிக்க ஆரம்பிச்சான். அதுவே கொஞ்சம் அதிகப்படியாப் போக ஆரம்பிச்சிருச்சி. குடிக்காம அவனால ஒருநாளும் இருக்க முடியல. இருந்தாலும், குடிச்சிட்டு அவனோட வீட்டுல போய் பேசாம படுத்துக்குவான் சின்னசாமி. ரோட்டுல கத்தறது, கெட்ட கெட்ட வார்த்தை பேசறதுனு எதுவுமே பண்ணமாட்டான் சின்னசாமி.

இப்படி இருந்த சின்னசாமிய, தங்கராசு மக கல்யாணி விரும்பினா. அப்போ சின்னசாமிக்கு வயசு இருவத்தி மூணு இருக்கும், கல்யாணிக்கு பத்தொன்பதுதான் இருக்கும். இந்த காதலு விசயத்தை சின்னசாமிகிட்டயும் அவ சொல்லி வைச்சா. கூடவே ஒரு கட்டளை போட்டுட்டா. 'எப்போ சிகரெட்டையும், குடியையும் விடறியோ அப்பதான் கட்டிக்குவேனு' சொன்னதும் 'சரி சரினு' சொன்ன சின்னசாமிக்கு சாராயம் குடிக்காமலும், சிகரெட்டு பிடிக்காமலும் இருக்க முடியல. கல்யாணியை சின்னசாமிக்கு ரொம்பவேப் பிடிச்சிப் போயிருந்துச்சு. இருந்தும் என்ன செய்ய?

கல்யாணிகிட்ட 'என்னைக் கட்டிக்கோ, கல்யாணத்துக்கப்பறம் மாறிருவேன், உடம்பு வலி அதான் குடிக்கிறேனு' ஒரு நொண்டிச் சாக்கு சொன்னான் சின்னசாமி. அதுக்கு கல்யாணி 'ஏன் நானும்தே காட்டுல மேட்டுல வேலை செய்யலயா, உடம்பு வலிக்குதுனு நா குடிக்கிறேனா' னு ஒரே வெட்டா வெட்டிப் பேசிட்டுப் போயிட்டா.

சின்னசாமி யோசிச்சிப் பார்த்துட்டு ஒரு வாரம் சிகரெட், குடியை விட்டான், ஆனா அவனால அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியல. 'குடிகாரப் பயலுக்கு என் மகளைத் தரமாட்டேனு கல்யாணியோட அப்பா ஒத்த காலுல நின்னுட்டாரு, அதோட அந்த கல்யாணியும் சின்னசாமிகிட்ட இப்படி இருக்க உன்னோட என்னால குடும்பம் நடத்த முடியாதுனு சொல்லிட்டுப் போயிட்டா'

இதனால மனசு உடைஞ்ச சின்னசாமி சிகரெட்டும், சாராயமும் கொஞ்சமா, கொஞ்சமா விட முயற்சி பண்ணினான். சின்னசாமிய 'திருத்திப் புடலாம்' னு கல்யாணிக்கு லேசா கூட நம்பிக்கை வரவேயில்லை. கல்யாணி நினைச்சமாதிரியே மறுபடியும் சின்னசாமி குடிக்க ஆரம்பிச்சிட்டான். 'இனி இந்த போக்கத்தவனை நம்பி புரயோசனமில்லைனு' கல்யாணி அப்பா சொன்னதைக் கேட்டு கல்யாணி வேற கல்யாணம் கட்டிட்டுப் போயிட்டா.

இந்த சின்னசாமிக்கு தன் மேல கோவம் கோவமா வந்துச்சு. என்ன பண்ண? யாருமே பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த சின்னசாமியும் கல்யாணி நினைப்புலயே இருந்துருவேனு ஒரு வசனம் பேசினான். அவன் பேசினது வசனமாத்தான் இருந்துச்சினாலும், அப்படியே வாழ ஆரம்பிச்சிட்டான்.

சின்னசாமிக்கு வயசு ஏறிக்கிட்டேப் போக ஆரம்பிச்சிச்சு. சிகரெட்டுல கார்பன் மோனாக்ஸைடுனு ஒரு காத்து இருக்கு. அந்த காத்து நம்ம உடம்புல இருக்கற செல்லுக்கு போகறதினால குறைச்சலான ஆக்ஸிஜன் தான் செல்லுக்கு எல்லாம் கிடைக்கும். அதனால செல் எல்லாம் வலிமை குறைஞ்சி போயிரும். அதோடு மட்டுமா, சிகரெட்டுல டார் னு ஒரு எழவும் இருக்கு, அந்த எழவு புத்து நோய கொண்டு வந்து சேத்துரும். அப்புறம் நிக்கோட்டினு சொல்வாங்க, அதுதான் திரும்ப பிடி, திரும்ப பிடினு வம்பு பண்ணும். இப்படி சிகரெட்டு குடிக்கிறதுனால மூச்சுக்குழாயில இருக்க சின்ன சின்ன இழை போல இருக்க செல் எல்லாம் செயல் இழந்து தூசுகள எல்லாம் பிடிச்சி வைக்காது, அதனால நுரையீரலு வீங்கிரும்.

இதனால சின்னசாமி தளர ஆரம்பிச்சிட்டான். அவனோட வயசு என்னவோ இருவத்தி எட்டுதான். அதோட அவன் குடிச்ச சாராயம் அவனோட கல்லீரலுக்குப் பிரச்சினை தர ஆரம்பிச்சிச்சு. அப்படியும் கூட அவனால அதை நிறுத்த முடியல. சின்னசாமி எப்பப் பார்த்தாலும் இரும ஆரம்பிச்சிட்டான். அதனால அவனுக்கு இருமல் சின்னசாமினு பட்டப்பேரு கூட வைச்சிட்டாங்க. பாவி மனுசன், திருந்தறமாதிரி தெரியல. என்ன பண்ணுவான் சின்னசாமி!

இப்படி அவனோட கதையை கொஞ்ச நாளைக்கு முன்னால பார்க்குல எதேச்சையா என்கிட்ட பேசிட்டிருந்த வெங்கடேசன் ஒருநா சொன்னதும்,  உடனே சின்னசாமியப் போய் பார்க்கனும் போல இருந்திச்சி.

சின்னசாமிகிட்ட  பக்குவமா பேசினேன். சிரிச்சிகிட்டே சொன்னான் சின்னசாமி. 'எல்லாத்தையும் விட்டுறேன்னு'  ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவன்கிட்ட நிக்கோட்டின் பேட்ஜ் கொடுத்து எல்லாம் சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாளைக்கப்பறம் அதே பார்க்குல வெங்கடேசனை பார்த்தப்ப சொன்னான். சின்னசாமி இப்போ குடிக்கிறது இல்லை, பிடிக்கிறது இல்லைன்னு.

குடிச்சி  கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.

சின்னசாமி என்னைப் பார்த்து கும்பிட்டான். 'என்ன பழக்கமிது'அப்படின்னு சத்தம் போட்டேன். எனக்கு கல்யாணிபோல பொண்ணு கிடைப்பாளானு கேட்டான். எதுக்கு அப்படின்னு கேட்டேன். இப்போதான்ஆம்பளைங்க மாதிரி பொம்பளைங்களும் குடிச்சிட்டும் பிடிச்சிட்டும் இருக்காங்களாமேனு சொன்னான். கலாச்சார சீரழிவு அப்படின்னு என்ன என்னமோ பேசினான் சின்னசாமி. நிக்கோட்டின் பேட்ஜ் வேணுமான்னு கேட்டேன், வேணாம்னுட்டான். இத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.

இதை நினைச்சி நான் என்ன தண்ணி அடிக்கவா முடியும், இல்லைன்னா ஊதித்தான் தள்ள முடியுமா? பொழப்பு அத்தவங்க பண்ற வேலை அதுனு கண்ணுல படற சின்னசாமிக்கெல்லாம் நிக்கோட்டின் பேட்ஜ் தந்துக்கிட்டுதான் இருக்கேன். தலையில ஒட்டிக்கோனு தூக்கி வீசிட்டு, புகைய என் முகத்துல ஊதிட்டு போறவங்களப் பாக்குறப்ப மனசு வலிக்கும். அதுக்காக நான் லாட்ஜ் எல்லாம் போடறது இல்ல. வருஷம் ஓடிருச்சி. பத்தோ பதினைஞ்சி சின்னசாமிகளை, ரெண்டோ மூனோ சின்னசாமினிகளை திருத்தினேன். வாழ்ந்துட்டு இருந்தப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு, சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான்.

இந்தாங்க நிகோட்டின் பேட்ஜ். நிகோடின் பற்றி மேலும் அறிய

9 comments:

Paleo God said...

வேற என்ன பண்றது. ஊதற சங்க ஊதி வைப்போம்! :)

மங்குனி அமைச்சர் said...

//அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு ///


சரிதான்

Chitra said...

இத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.


..... சிறு துளி, பெரு வெள்ளம்..... பாராட்டுக்கள்!

////சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான். /////
....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... தமாசு பண்ணாதீக ...... அவுகளுக்கு புளைப்பே அதுதானே...... அரசாங்கமும் கல்லா கட்டுதுல..... :-(

ஹூம்...... ஆசை நல்லாத்தான் இருக்குது.

க.பாலாசி said...

//குடிச்சி கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.//

சரியாச் சொன்னீங்க... எதுக்கும் சங்க ஊதி வைக்கிறது நல்லதுதான்.... கேக்குறவங்க கேட்பாங்க... ஆமா.. நிக்கோடின் பேட்ஜ்ன்னா?

புலவன் புலிகேசி said...

ம் நல்ல ஆசை தான். அப்பறம் "கவர்"மென்ட் காசுக்கு என்னப் பன்னும்?

ஹுஸைனம்மா said...

//குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு//

ஆரம்பிக்கும்போது கெட்டவங்க இல்லை. ஆனா, தொடர்பழக்கம் புத்தியை மழுங்கடித்து கெட்டவர்களாக ஆக்கிவிடும்.

நிக்கோடின் பேட்ஜ் எப்படி செயல்படும்?

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி. நிகோடின் பேட்ச் பற்றி இணைப்பு தந்துள்ளேன். 'திருந்தும் எண்ணம் இல்லையெனில் எதுவும் எவரையும் திருத்தி விடாது'.

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

அருமை அருமை சிந்தனை - ஆனால் திருத்துவது கடினம் - அவர்களாய் மனம் மாறினால் தான் உண்டு - அதற்கு நாம் அவர்களிடம் சிரமம் பாராது எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாள் முயற்சி வெற்றி பெறும். கடினமான செயல் தான்.

'திருந்தும் எண்ணம் இல்லையெனில் எதுவும் எவரையும் திருத்தி விடாது' - உண்மை நிலை.

நல்வாழ்த்துகள் வெ.இரா
நட்புடன் சீனா

Radhakrishnan said...

மிக்க நன்றி சீனா ஐயா.