Wednesday 12 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 3

கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்பதால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க லண்டனில் இருந்து வருகை தந்த ஐயர் அவர்களை சந்திக்கும் ஏற்பாடு இருந்தது. நேராக கோயம்பேடு வந்து விடுங்கள் அங்கே இருந்து பாரிமுனை பக்கம் செல்லலாம் என சொன்னார். 

நாங்கள் அவரை சந்தித்த நேரம் மாலை நான்கு மணி மேல் இருக்கும். பைக்கில் வந்தவர் காரில் ஏறாமல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நேரம் ஆகி கொண்டு இருக்கிறதே, கடைகள் எல்லாம் மூடிவிடுவார்கள் எனும் அச்சம் வேறு. சின்ன சின்ன தெருக்களில் கார் சென்றபோது எத்தனைவிதமான இடைஞ்சல்களில் இந்தியாவில் வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

அவரது வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் சென்றபோது நேரத்தின் மீதுதான் கண் இருந்தது. சில இயந்திரங்களை  முன்னரே வாங்கி வைத்ததாக காட்டினார். இவர் லண்டனில் ஏற்கனவே பணி புரிந்துவிட்டு மீண்டும் லண்டனில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்காக ஓராண்டு முன்னர் தான் லண்டனில் உள்ள கோவிலில் இணைந்தார். வெளிநாட்டில் பணி புரிவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடுவதாக அவர் சொன்னபோது மறுக்க இயலவில்லை. ஆனால் அதற்கடுத்து நான் கண்ட காட்சிகள் இந்தியாவில் உள்ள திறமைமிக்க வியாபாரிகள் போல உலகில் காண்பது சற்று கடினம் தான் என்றே எண்ண தோன்றியது. 

முதலில் தேவையான ஆராதனை பொருட்கள், கலசங்கள், குத்துவிளக்கு, குடை என வாங்கிட மிகவும் குறுகலான தெரு ஒன்றில் சென்றோம். இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது சாலையில் ஆட்டோ வந்து போய் கொண்டிருந்தது. நடப்பதற்கே மிகவும் கடினமாக இருந்தது. அந்த தெருவில் இருந்த சில கடைகளில் விசாரிக்க ஒரே பொருளின் விலை வேறு வேறாக இருந்தது. சரி என ஐயர் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றார். கடை மிகவும் சிறிதாக இருந்தது. இந்த கடையில் என்ன பொருட்கள் இருந்து விடப்போகிறது என நினைக்க மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நிற்கவே இடம் இல்லாமல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எந்த பொருள் கேட்டாலும் அங்கே வேலை செய்தவர் ஓடோடி எடுத்து காண்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இல்லாத பொருளை கூட இல்லை என சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என கணக்கு போட்டபோது ஓரிரு மணி நேரங்களில் லட்சம் ரூபாய்க்கான வியாபாரம்! சில்லறை வியாபார கடைகள் முதலாளிகளிடம் பேசினால் தான் கடைகளின் நிலவரம் புரியும் என நினைக்க கடைகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து போய் கொண்டிருந்தார்கள் மக்கள். 

அடுத்தொரு கடை. அங்கே ஹோமத்திற்கு தேவையான கட்டைகள், குங்குமம் போன்ற பொருட்கள். அந்த கடையும் சிறிதாகத்தான் இருந்தது. நாங்கள் அந்த கடையை சென்றடைந்தபோது இரவு பத்து மணி இருக்கும் என்றே நினைக்கிறேன். கடையை மூடும் நேரம். லிஸ்ட் கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி வாங்கிகோங்க என்றார். அவரது மேசையில் கணினி இல்லை, கால்குலேட்டர் இல்லை. ஒவ்வொன்றாக சொல்ல விலை போட்டு கொண்டே வருகிறார். இது கிடைக்கும், இது பக்கத்து கடையில்  வாங்கிகொள்ளுங்கள் என வேகமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். அடுத்து விறு விறுவென மொத்த கணக்கையும் போட்டு காட்டியபோது எனக்கு சரிபார்க்க மனமே வரவில்லை. சரி முன் பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். 

துணிகள் இனிமேல் வாங்கமுடியாது, நல்லி சில்க்ஸ் நாளை வாருங்கள் என ஐயர் இடம் சொல்லி அனுப்ப இரவு சாப்பாடு மெக்டோனல்ட்ஸ் சென்று நாங்கள் சாப்பிட்டோம். நான் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. அவனுக்கு தமிழ் தெரியாதோ என நான் நினைக்க அங்கே வேலை பார்க்கும் மற்றொரு பையனிடம் தமிழில் பேசினான். சரி என நான் மீண்டும் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் மட்டுமே என்னிடம் பதில் சொன்னான். தமிழில் சொல்லுங்க என நான் சொன்னது அவனது காதில் விழவே இல்லை. மொழி தொலைந்து போய் விடும் அநாகரிகம்! நகரத்தில் மட்டுமே இப்படி, அதனால் அச்சப்பட தேவையில்லை என்றே டிரைவர் நண்பர் சொன்னார். 

பன்னிரண்டு மணிக்கு ஹோட்டல் அடைந்தபோது அன்றைய தின அலைச்சல் எல்லாம் தொலைந்திட மீண்டும் பெய்த மழைத் தூறலில் சிறிது நேரம் நடந்தோம். காலையில் எழுந்தபோது எட்டு மணி மேல் ஆகி இருந்தது. கிளம்பி தயாராக பத்து மணி ஆகி இருந்தது. இனி சாப்பாடு கிடையாது என நினைத்து ஹோட்டலில் இருக்கும் உணவகம் செல்ல பத்தரை மணி வரை உணவகம் திறந்து இருக்கும் என்றார்கள். கொஞ்சம் நிம்மதி. இட்லி, பொங்கல் வடை என நமது உணவு. பேசாமல் இந்த உணவுக்காகவே இந்தியாவில் வாழ்ந்துவிட்டு போகலாம் என்றே தோணியது. 

திடீரென எனது மனைவி, அதோ ஒரு நடிகை என்றார் (வீட்டில் சன் டிவி, டிவிடி படம் நாங்கள் பார்ப்பது உண்டு). நாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து மூன்று நாற்காலி தள்ளி தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் நடிகை ஜெனிலியா. அவரைப் பார்க்க வேண்டும் என எவரும் ஓடவில்லை. அங்கே பலரும் சாதாரணமாகவே இருந்தார்கள், நாங்கள் உட்பட. அங்கே மிகவும் சாதாரணமாக அவராலும்  இருக்க முடிந்தது. இந்தியாவில் சினிமாவிற்கு என ஒரு தனி இடம், சினிமா கலைஞர்களுக்கு என தனி மரியாதை இருந்தாலும் அங்கே எதுவும் தென்படவில்லை. 

ஹோட்டலில் இருந்து சென்னை வரவே மதியம் ஆகிப்போனது.  மீண்டும் வேறு சில கடைகள் சென்றோம். நல்லியில் சாமிக்கு தேவையான உடைகள் வாங்கினோம். புது நல்லி, பழைய நல்லி என இருப்பது அன்றுதான் தெரிந்து கொண்டேன். சென்னையில் இருந்த சகோதரர் வீடு சென்றோம். அங்கிருந்து மற்றொரு உறவினர் வீடு சென்றோம். மேலும் சில உறவினர்கள் வீடு இருந்தாலும் செல்ல இயலவில்லை. உறவினர் வீடு சென்றபோது இரவு பத்து மணி. தைக்க கொடுக்கப்பட்ட துணி வாங்கிட அன்று முடியாமல் போனது. நாளை எப்படியாவது வாங்கித்தான் ஆக வேண்டும். சென்னையில் இருந்த போக்குவரத்து நெரிசல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல ஆகும் நேரம் எல்லாம் கணக்கில் வைத்து ஹோட்டலில் இருந்து நாளை மறுநாள் அப்படியே அங்கிருந்து நகரத்திற்குள் வராமல் கிராமம் சென்று விடலாம் என நினைத்தோம். 

அடுத்த நாள் வழக்கம்போல காலை உணவு. அன்று போக்குவரத்து போலீசார்... இந்தியா என்றுமே இந்தியாதான். 

(தொடரும்) 

Friday 7 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 2

காரினை நடு சாலையில் நிறுத்திவிட்டு, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களிடம் பேசி அவர்களை அழைத்து வந்தார் டிரைவர். நானும் இறங்கி கொள்கிறேன் என நான் சொல்ல, வேண்டாம் சார் என்றே சொன்னவர் அந்த மூன்று நபர்கள் காரினை தள்ள, கார் ஏனோ கிளம்பவே இல்லை. அவர்கள் காரினை சாலையின் ஓரமாக தள்ளிவிட்டு  சென்றுவிட்டார்கள். 

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் எதுவுமே வேகமாக செல்லாமல் இருந்தது மனதில் அச்சத்தை விலக்கி இருந்தது. மீண்டும் காரில் இருந்து இறங்கிய டிரைவர் வேறு ஆட்களிடம் பேசிவிட்டு வந்தார். வாகனங்கள் கிளம்ப, பேசி வைத்த ஆட்கள் மறக்காமல் வந்து காரினை தள்ளினார்கள். கார் இந்த முறை கிளம்பியது. காரினை தள்ளியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். ஓகே என ஒரு வார்த்தையோடு விலகிப் போனார்கள். யார் இவர்கள்? உதவி என கேட்டதும் ஓடோடி வந்து செய்துவிட்டு போகும் யார் இவர்கள்? 

லண்டனில் ஏழு வருடங்கள் முன்னர் மாலை ஏழு மணிக்கு சாலையில் திடீரென நின்று போன எனது காரினை நான் மட்டுமே தள்ளி சென்ற நினைவுகள் வந்தது. அதிகமான வாகனங்கள் சாலையை அலங்கரித்தாலும் அவரவர் வேகம் அவரவருக்கு தெரிந்தே இருக்கிறது. யார் மீதும் அத்தனை எளிதாக மோதமாட்டார்கள் என டிரைவர் சொன்னபோது எத்தனை நெருக்கடியிலும் வாழப் பழகிப் போன இந்திய சமூகம் மனதோடு நின்றது. 

மகாபலிபுரம் சாலை என நான் தவறாக தகவல் தர, ஈ சி ஆர் சாலையில் செல்லாமல் மகாபலிபுரம் சாலையில் சென்று ஓரிடத்தில் விசாரித்தபோது இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் சொன்ன பின்னர் தான் எனக்கு ஈ சி ஆர் சாலையே நினைவுக்கு வந்தது. ஈ சி ஆர் சாலை நேர் பாதை. மகாபலிபுரம் சாலை சுற்றுப் பாதை. ஒரு வழியாக ஹோட்டல் வந்தடைந்தபோது போதும் போதும் என்றாகிவிட்டது. இத்தனை தொலைவிலா ஹோட்டல் என சற்று அயர்ச்சியாக இருந்தது. சென்னை நகரத்துக்குள் செல்ல மலைப்பாக இருந்தது. 

ஹோட்டல் சென்றதும், அங்கே மாலை போட்டு வரவேற்றார்கள். மிகவும் சிறப்பான வரவேற்பாக இருந்தது. தனியாக வில்லா ஒன்றை பதிவு செய்து இருந்தோம். வில்லாவிற்கு வெளியே ஊஞ்சல். வில்லாவில் இருந்து நடக்கும் தொலைவில் கடல். மிகவும் ரம்மியாமாக இருந்தது. அறையின் அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. திறந்த வெளியில் குளிக்கும் வண்ணம் ஒரு அறை இருந்தது. அந்த அறையை சுற்றிய சுவர் இருப்பினும், வெளியில் இருந்து பார்த்தால் மூங்கில் வைத்து கட்டப்பட்டு இருந்தது. விலை அதிகம் தான். ஆடம்பரத்திற்கு எப்போதுமே விலை அதிகம் தான். சில நேரங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தாது போனால் வேறொரு வாய்ப்பு அத்தனை எளிதாக வந்துவிடுவதில்லை. சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டு சென்னை நகரத்திற்குள் சென்றோம். 

வாகனத்தை ஒரு சாலை விதி கண்காணிப்பாளர் நிறுத்தினார். டிரைவர் அவரிடம் சென்று பேசி நூறு ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வந்தார். என்னவென விசாரித்ததில் வாகனத்தின் கண்ணாடியில் குளிர்ச்சிக்காக ஒட்டப்பட்ட தாளினை அகற்ற வேண்டும் எனும் விதி உள்ளது என சொன்னார். இருப்பினும் இது குறித்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என சொன்னதும், இதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சொன்னார். எனக்கு ஏனோ எதற்கு விதிகள் மதிக்கப்படுவதில்லை என்றே தோன்றியது. உடனே எடுத்துவிடுங்கள் என டிரைவர் நண்பரிடம் சொல்லிவைத்தேன். மதுரைக்கு சென்ற பின்னர் எடுத்துவிடலாம் என்றே சொன்னார். 

சாலையின் தன்மை என்னை மிரள செய்தது. வேலை நடக்கிறது என எங்கே பார்த்தாலும் சாலைகள் தங்களது அழகை சூறையாடிக் கொண்டிருந்தன. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பெராஸ் மால் சென்றோம். கட்டிடத்திற்குள் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஆடம்பரத்திற்கு விலை மிக மிக அதிகம். மனைவிக்கு மிகவும் சந்தோசம். சிறிய சிறிய கடைகளாக இருந்தாலும் மிகவும் அழகிய பொருட்கள் நிறைந்தே காணப்பட்டன. இந்தியா கலைக்கு மட்டுமல்ல, கலைத்துவம் வாய்ந்த பொருட்களுக்கும் உன்னதமான இடம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. ஒரு கடையில் அந்த பொருட்களை செய்து கொண்டிருந்தவரை கண்டபோது பிரமிப்பு மிஞ்சியது. எத்தனை திறமையான மனிதர்களை கொண்டது இந்தியா என்று நினைக்கும் பொது பெருமிதமாக இருந்தது. அவரிடம் நான் பேசிய தமிழ் அவருக்கு புரியாமல் போனதற்கு காரணம் அவர் வடநாட்டினை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. 

துணிகள் வாங்கி அங்கேயே தைக்க கொடுத்துவிட, மாலை ஆறு மணிக்கு வாருங்கள் என அவர்கள் சொல்லி வைக்க, நகைக் கடை ஒன்றுக்கு சென்றோம். பணம் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். மக்கள் நிறைந்த கடைகள் என மறுபக்கம். மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள். எல்லா நாட்டிலும் உண்டு. பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க இந்தியா ஒன்றே சிறந்த இடம். 

லண்டனில் பழைய நகை கொடுத்தால் பத்து சதவிகிதம் கூட நகைக்கான பணம் தரமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே பழைய  நகை எனினும் நகைக்கான பணத்தை ஓரளவு மதிப்புக்கு தருகிறார்கள் என்றே தோணியது. கையில் இருந்த பிளாஸ்டிக் அட்டையை கொடுத்ததும், பணம் எடுக்க இயல வில்லை என கடையில் இருந்த பெண் சொன்னதும் திடுக்கென இருந்தது. சரி என கிரெடிட் கார்ட் வாங்கி பார்த்தால் முடிந்து போன கிரெடிட் கார்ட். அடக்கடவுளே, என்ன செய்வது என திகைக்க எதை உபயோக்கிக்க கூடாது என்று இருந்தேனோ அந்த கார்டுகளை கொடுத்து நிலைமையை சரி செய்து  நகை வாங்கி கொண்டு வெளியே வந்தால் மழை. அந்த மழை சத்தத்தில் எத்தனை முறை சொன்னேன், எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து வாருங்கள் எனும் மனைவியின் அன்பு பாராட்டு வேறு. 

இந்த மழை கிராமப் பகுதியில் விழுந்து தொலைய கூடாதா எனும் ஆதங்கம் மனதை தொட்டு சென்றது. மழை விடும் வரை கடையின் வாசலிலேயே நின்றோம். உடலில் பட்டு தெறிக்கும் மழை குமிழிகள், அந்த மழையோடு வந்து போகும் காற்று. இந்தியா இன்னும் இதமாகவே இருக்கிறது. 

துணிகள் தைக்க கொடுத்த கடைக்கு தகவல் சொல்லலாம் என அவர்கள் கொடுத்து இருந்த அட்டையில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, இந்த எண் தற்போது தொடர்பில் இல்லை என்றே வந்தது. அருகில் இருந்த நபரை தொடர்பு கொள்ள சொன்னேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் தொடர்பு பண்ணியவர், இந்த நம்பர் இணைப்புல இல்லையே சார் என்றார். இந்தியா என்னதான் சொல்லி தந்தது?

(தொடரும்) 


Wednesday 5 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய  விடுமுறை பயணம்  முடிந்து போன அலுப்பு மனதை அழுத்தத்தான் செய்கிறது. மீண்டும் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் எனும் ஆர்வம் இருப்பினும், எப்போது லண்டன் சென்று சேர்வோம் என்கிற மனநிலையை இந்த விடுமுறை பயணம் விதைத்து சென்றது. 

இரண்டு வருடங்கள் முன்னர் சென்ற பயண நினைவுகள் மனதை அழுத்த, காளையார்கரிசல்குளம் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்தனை முன்னிட்டே இந்த பயணம் முடிவானது. சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவது என்று சில மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் மூன்று நாட்கள் தங்கி செல்லலாம் என முடிவானது. இந்த மூன்று நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாகவே திட்டம், அதோடு சென்னையில் கடைகள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து செல்லலாம் என நினைத்து தங்குவதற்கு ஹோட்டல் தேடினோம். சென்னையில் இருக்கும் உறவினர்கள் ஏதேனும் நினைப்பார்களோ எனும் எண்ணம் எட்டிப் பார்த்தாலும் ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்து தாஜ் ஹோட்டல் தெரிவு செய்தோம். இந்த தாஜ் ஹோட்டல் ஒன்று நகரத்திலும், மற்றொன்று நகரத்தை தாண்டியும் இருந்தது. நகரம் வேண்டாம் என முடிவு செய்து ஈ சி ஆர் சாலையில் கோவளம் கடற்கரையில் அமைந்து இருக்கும் விவான்டா தாஜ் ஹோட்டல் முன்பதிவு செய்தோம். 

பெரும் ஆவலுடன் லண்டனில் இருந்து கிளம்பி அதிகாலை சென்னை வந்தடைந்தது விமானம். என்றுமில்லாத திருவிழாவாக மேலும் இரண்டு விமானங்கள் துபாய் மற்றும் இன்னொரு இடத்தில் இருந்து அதே வேளையில் வந்து இறங்க விமானநிலையத்தை விட்டு வெளியே வரும் முன்னர் போதும் போதும் என்றாகிப்போனது. நேராக விளாச்சேரியில் உள்ள ஆள் இல்லாத உறவினர் வீட்டில் சென்று முதலில் இறங்கினோம். புதிதாக கட்டப்பட்ட வீடுகள். அந்த இடத்திற்கு செல்லும் பாதையோ கிராமப் பாதை போல் மோசமாக இருந்தது. 

காலை உணவு சாப்பிடலாம் என கடைக்கு சென்று பொட்டலம் வாங்க சென்றவர்கள் வர நாழிகை ஆகி கொண்டே இருந்தது. ஓரிரு மணி நேரம் பின்னர் அவர்கள் பொட்டலங்கள் வாங்கி வர, சாப்பாடு கடைகள்  எல்லாம் ஏழர மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என்றதும் இத்தனை தாமதமாகவா திறப்பார்கள் என்றே மனம் எண்ணியது. 

லண்டனில் இருந்து எங்களுடன் வந்து இருந்த உறவினர்கள் கிராமம்  நோக்கி கிளம்பி செல்ல நாங்கள் ஹோட்டல் நோக்கி சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு பின்னர் தான் அறை கிடைக்கும் என்றாலும், வாருங்கள் அறை காலியாக இருந்தால் தருகிறோம் என ஹோட்டல் பணியாளர் வர சொல்லவே தைரியமாக சென்றோம். 

இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய கார். சோளிங்கநல்லூர் அருகில் சென்றபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென எங்களது கார் நின்று போனது. எத்தனையோ முறை முயற்சி செய்தும் கார் கிளம்பவே இல்லை. சாலை நடுவே கார். இருபுறங்களிலும் வாகனங்கள் விலகி சென்று கொண்டு இருந்தது. காரினை தள்ளிவிட்டால் கிளம்பிவிடும், பேட்டரி பிரச்சினை என டிரைவர் சொல்ல எவர் வந்து தள்ளுவது என நினைக்க, எங்கள் இருவரை காரிலியே இருக்க வைத்துவிட்டு காரினை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் இறங்கி சென்றதும் திக் திக் என்று இருந்தது. பயமுறுத்திய கார். 

(தொடரும்)


Thursday 2 August 2012

எல்லாம் அந்த காலமய்யா

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை.

ராமநாதனும், ராமச்சந்திரனும் பால்ய கால நண்பர்கள். ராமநாதனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமச்சந்திரன் நினைத்ததே இல்லை. ராமச்சந்திரனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமநாதனும் சிந்தித்தது இல்லை. ஆனால் இருபது வருடங்கள் பின்னர் ஒரு நாள் இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடந்தேறியது. பழைய கதைகளை பேசி கசிகின்றன இவர்களது பொழுதுகள்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

ராமநாதன் தனது கதைகள் சொல்லி முடிக்க, ராமச்சந்திரன் தனது கதைகள் சொல்லி முடிக்க இவர்களின் இருபது வருட வாழ்க்கை பரிமாறப்படுகிறது. இந்த இருபது வருட கால கட்டத்தில் ராமச்சந்திரனால் ராமநாதனுக்கோ, ராமநாதனால் ராமச்சந்திரனுக்கோ எந்த வித உதவியோ, உபத்திரவமோ இல்லை. இருவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழலில் வாழ்ந்துதான் பழகிப் போனார்கள்.

'ராமநாதா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் துடிதுடிச்சி போயிருவேன், ஞாபகம் இருக்கா' என்ற ராமச்சந்திரனை நோக்கி 'உனக்காக நம்ம கணக்கு வாத்தியார் மண்டையை பொளந்தேன், இன்னும் அவர் என்னை மறந்து இருக்க மாட்டாரு' என்றார் ராமநாதன்.

'அது எல்லாம் அந்த காலமய்யா, சுதந்திரமா சுற்றி திரிஞ்சி நமக்கு எந்தவித பொறுப்பும் இல்லாம அந்த காலம் எல்லாம் திரும்ப வருமாய்யா' என்றார் ராமச்சந்திரன்.

'நம்ம பிள்ளைகள இப்போ அதே நிலைமைக்கு நம்மால விடமுடியுதா, நம்ம காலம் வேற' பெருமூச்சு விட்ட ராமநாதன்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

இ மெயில், செல்பேசி எண்கள் என பரிமாறிக் கொண்டார்கள். இந்த சந்திப்பு ஒன்றும் திட்டமிட்டது அல்ல. இனிமேல் சந்திப்புகள் திட்டமிடப்படும். இனி நடப்பவைகளை பற்றி பேச இருபது வருடங்கள் இனி காத்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை, இருபது நொடிகள் போதும். தொழில்நுட்ப வசதிகள், வாய்ப்புகள் என எல்லாம் பெருகிக்  கொண்டே போகின்றன.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை. 

Friday 20 July 2012

எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு

இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.

நான் மெதுவாக அவரிடம் சென்று "சாமி" என்றேன்.

மூடிய கண்களைத் திறந்தவர் "என்ன இந்த பக்கம்" என்றார்.

"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்"

"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை"

"என்ன காரணமாக இருக்கும்"

 "தெரியவில்லை"

"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்"

"இதோ நீ வந்து இருக்கிறாயே"

 எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு

"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்".

"சரி உட்கார்"

நான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.

"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா"

"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்"

"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்"

"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று"

"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது?"

அட கண்றாவியே என நினைத்துக் கொண்டு

"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு"

சாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.

"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்"

"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது?"

"எதற்கு கேட்கிறாய்?"

"எல்லாம் ஒரு கணக்குதான்"

"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது"

"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே"

 "எந்த வகையான மாற்றம்"

"புரியவில்லை"

"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்"

 "சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது?"

"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு"

"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது,  அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா? எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்"

"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா"

"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்"

"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால்  எப்படி"

"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்"

"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு"

சாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.

சாமியாரைப் பார்த்தேன்.

"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க"

 "எல்லாம் இயற்கைத் தேர்வு"

"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா?"

உன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க  விட்டத்தில் இருந்த பல்லி  ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.

ஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு?

(முற்றும்)

Thursday 19 July 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 5

தியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது? துன்பத்தின் அளவு எது? என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.

இரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என அலை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர்  துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.

இப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு விசயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு.  மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா?

மாணிக்கவாசகர் பாடுகிறார்.

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.

முக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்?

(தொடரும்) 

Saturday 14 July 2012

எவருக்கு என்ன லாபம்

என் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு 
நீ இல்லையெனில் 
நீ என் அன்னையும் இல்லை 
நீ என் தந்தையும் இல்லை 
உங்களுக்கான மகனும் நான் இல்லை 
வெற்று உறவாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

என் சிந்தனையின் கோட்டில் 
நீ இல்லையெனில் 
நீ என் தோழனும் இல்லை 
நீ என் தோழியும் இல்லை 
உங்களுக்கான தோழமை எனதில்லை 
நட்பு என சொல்லிக்கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

நான் கேட்கும் வரங்கள் 
நீ தரவில்லையெனில் 
நீ கடவுள் இல்லை 
உனக்கு கோவில் இல்லை 
உனக்கான பக்தனும் நான் இல்லை 
இருப்பதாய் சொல்லிக் கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

எல்லாம் இருந்தும் இருந்தும் 
நிம்மதியாய் நீ இல்லையெனில் 
இது உன் வாழ்க்கை இல்லை 
வாழ்க்கையில் பயனும் இல்லை 
பூமிக்கான மனிதனும் நீ இல்லை 
மனம் செத்த சடமாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

தெளிந்த அறிவு இன்றி 
தேடுவதில் உன்னை தொலைத்தால் 
இயற்பியல் விதிகளும் இல்லை 
இயற்கை தேர்வும் இல்லை 
இதற்கான நடைமுறையும் இல்லை 
பரிணாமமும் பகுத்தறிவும் சொல்வதால் 
எவருக்கு என்ன லாபம் 

லாபம் என்றே தொடங்கிட 
இது வியாபாரம் இல்லை 
பாபம் என்றே ஒதுங்கிட 
இது பந்தயம் இல்லை 
அன்பில் கிடந்து வாழ்ந்திடும் 
பண்பின் சிகரமாம் வாழ்க்கை இது
எவருக்கு என்ன லாபம் 
என்றே கணக்கை தவிர்த்து 
எல்லோருக்கும் லாபம் என்றே 
போற்றி வாழ்ந்திடுவோம் 

Saturday 7 July 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 9

காயத்ரியின் அப்பா என்னை பயத்துடன் பார்த்தார். எனது அதிர்ச்சியை மறைத்துவைத்து கொண்டு மன சுமையை இறக்கி வைக்க முடியாமல் நோட்டு புத்தகங்களை வைத்துவிட்டு முகம் அலம்ப சென்றேன். காயத்ரி என் பின்னால் வரவில்லை. 

கை கால் முகம் அலம்பிவிட்டு 'அம்மா இவர் எப்போ வந்தார்?' என்றேன். 'ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும் முருகேசு என காபிதனை கையில் தந்தார். காயத்ரியோட அக்கா இன்னும் வரலையா என்றேன். 'எப்பவும் போலதான் வருவா, இன்னைக்கு மட்டும் என்ன வேகமாகவா வரப்போறா என அம்மா சொன்ன வேளையில் காயத்ரி வந்து நின்றாள். 'இந்தாம்மா காபி'' என காயத்ரிக்கும் கொடுத்தார் எனது அம்மா.

'அப்பா எதுவும் சாப்பிட்டாரா'' என்றாள் காயத்ரி. 'காபி வைச்சி கொடுத்தேன். வெளியில சாப்பிட்டேன் அப்படின்னு சொல்லிட்டார் என்றார் அம்மா. தேங்க்ஸ்மா என்று காயத்ரி சொல்லிவிட்டு அவளது அப்பாவிடம் சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன். 

'என்னப்பா இமயமலை போக மனசு இல்லையா'' என்றாள் காயத்ரி. என்னை பார்த்தவர் என்ன சொல்வது என புரியாமல் விழித்தார். 'காயத்ரி என்னை மன்னிச்சிரும்மா'' என்றார் அவர். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்ன தப்பு பண்ணினீங்க, உங்களை மன்னிக்க சொல்றீங்க'' என்றாள் காயத்ரி. நிலைமையை சுதாரித்து கொண்டவராய் உங்களை எல்லாம் விட்டுட்டு இமயமலை போகிறேன்னு போனது தப்புதான்மா என்றார். இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. காயத்ரிக்கு விசயம் தெரியாது என நினைத்துவிட்டாரோ? அல்லது காயத்ரி தெரியாதது போல இருப்பது அவருக்கு வசதியாக போவ்யிட்டதோ என நினைத்து கொண்டு நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னை பார்க்கும்போது மட்டும் அவர் குற்ற உணர்வில் இருப்பது போல் நான் உணர்ந்தேன். 

நான் அவரிடம் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பா வந்தார். 'அடடே வாங்க வாங்க, குடும்ப வாழ்க்கையில இருந்தவங்க எல்லாம் அப்படி லேசா எல்லாத்தையும் விட்டுற முடியாது என்றவர் அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். காயத்ரியின் அக்கா அவரது அப்பாவை பார்த்து இனிமே இந்த பக்கமே வரமாட்டீங்கன்னு நினைச்சேன் என சொல்லிவிட்டு போய்விட்டார்.. எனக்கு புரியாமலே இருந்தது. பின்னர் நான் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டேன். காயத்ரியும் மேலே வந்தாள்.

முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியா என்றாள். என்ன என்றேன்? என் அப்பாவை பத்தி என்கிட்டே சொன்னதை நீ யார்கிட்டயுமே சொல்லலைன்னு என் அப்பாகிட்ட சொல்வியா என்றாள். என்னை பொய் சொல்ல சொல்றியா என்றேன். ம்ம் என்றாள். சிரித்தேன். The world is created by a chance. A chance that can be explained in many ways. நான் அவ்வாறு சொன்னதும் இனி உன் இஷ்டம் என்றாள். காயத்ரி கவலைப்படாதே, நீ சொன்னமாதிரி நடந்த்துக்கிறேன் என்றேன். காயத்ரியின் அக்கா கோபத்துடனே இருந்தது கண்டேன். 'ஒருமாதிரியா இருக்கீங்க, வேலையில பிரச்சினையா'' என்றேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை, இவரை பாத்ததுல இருந்து ஒருமாதிரியா இருக்கு என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

அன்று இரவு காயத்ரியின் அப்பாவிடம்  நான் எவரிடமும் எதையும் சொல்லவில்லை என சொன்னதும் என்னை கைகள் எடுத்து கும்பிட்டார். அவரிடம் என்ன நடந்தது ஏது நடந்தது என விசாரிக்க மனம் வரவில்லை. நேராக தூங்க சென்று விட்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. Human beings are erroneous subjects without having any proper objects. நினைப்பு எல்லாம் ஆங்கிலத்தில் வந்து தொலைந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து தூங்கிய விதமே நினைவில் இல்லை.

காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கையில்  காயத்ரியின் அப்பா நினைவுக்கு வந்தார்.  அம்மாவிடம் கேட்டேன். அவர் அஞ் சரை மணிக்கே கிளம்பி போய்ட்டார் என்றார். அப்பாவிடம் சென்று கேட்டேன். அப்பா சிரித்து கொண்டே எழுதி கொடுத்த சொத்து பத்திரம் எல்லாம் வாங்கிட்டு போய்ட்டார் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காயத்ரிக்கு விசயம் தெரிந்ததும் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அக்காவுக்கு பயங்கர கோபம் வந்தது. எதுக்கு சார் அந்த பத்திரம் எல்லாம் எங்களை கேட்காம கொடுத்தீங்க என்றார். 

என்னம்மா சொல்ற என்றார் என் அப்பா. என் அப்பா எங்க குடும்பத்துக்கு நல்லவர் இல்லை என்றார் அவர். இதைக் கேட்ட காயத்ரி அதிர்ச்சியானதை கண்டேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார் என்றவர்  அங்கே எவரையும் கவனத்தில் கொள்ளாமல் சார் என் அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருப்பதா என் அம்மா என்கிட்டே சொல்லி இருக்காங்க. இதை நானே நேரா பார்த்து உறுதிபடுத்திகிட்டேன். ஆனா காலக்கொடுமை.. எல்லாம் கைக்கு மீறி போயிருச்சி. அதனால எதுவுமே தெரியாம நான் இருக்க வேண்டியதா போச்சு. எங்க அம்மா இறந்தப்பறம் எங்க நிலைமையை நினைக்கவே முடியல. நீங்க தான் உதவிக்கு வந்தீங்க. எதிர்பாரா விதமா எங்க அப்பா எங்களுக்கு சொத்து எழுதி வைச்சார். இமயமலை போறேன்னு சொன்னதும் எனக்கு அவர் எங்க போகப்போறாரு அப்படின்னு தெரியும். சரி போகட்டும் அப்படின்னு விட்டுட்டேன் என்றவர் இப்போ இந்த சொத்து எல்லாம் எடுத்துட்டு போகத்தான் வந்திருக்கிறதை நினைச்சா அருவெறுப்பா இருக்கு சார் என்றார். 

'சே இதை என்கிட்டே எதுக்கும்மா முன்னமே சொல்லலை. விசயம் தெரிஞ்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பேனா? என ஆறுதல் சொன்னார். அம்மாவுக்கு கோபம் வந்தது. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் என பாடல் பாட .ஆரம்பித்துவிட்டார். காயத்ரி மட்டும் அமைதியாக இருந்தாள். நாங்க உங்களுக்குனு இருக்கோம் என அம்மா அவர்கள் இருவரையும் அணைத்து கொண்டபோது எனக்கு சற்று மகிழ்வாகவே இருந்தது. 

கல்லூரிக்கு நாங்கள் கிளம்பினோம். Courtship behaviour sometimes are not followed based on customs by some human beings என்றேன். முருகேசு எனக்கு எப்படி இருக்கு தெரியமா என்றாள். எப்படி இருக்கு என்றேன். உன்னை ஓங்கி அறையலாம் போல இருக்கு என்றாள். உன்னோட அப்பாவின் தப்புக்கு நான் எப்படி பொறுப்பு என்றேன். நீ பொறுப்பு இல்லை, ஆனா என்னோட உணர்வுகளை நீ கேலி பண்றமாதிரி சர்காஸ்டிக்கா பேசறது சரியா என்றாள். அப்படின்னா உன் அப்பா மேல கோவம் இல்லையா என்றேன். அவள் கண்கள் கலங்கி இருந்தது. 

முருகேசு, காதல் அப்படிங்கிறதோட அர்த்தம் தெரியுமா என்றாள். அவளை பார்த்து கொண்டே இருந்தேன். சொல்லு என்றாள். நான் காயத்ரி என்றேன். பதில் சொல்லு என்றாள். சொல்லிட்டேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் காதலுக்கு அர்த்தம் நீதான் என்றேன். சாலை என பார்க்காமல் எனது கைகளை இறுக  பற்றினாள். இனி என் அப்பா பத்தி பேசவேண்டாம் என்றாள். சரி என சொன்னேன்.

முதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியரை  எனக்கு அத்தனையாக பிடிக்காது. அவர் என்னை நோக்கி என்னை உனக்கு எதற்கு பிடிக்காது என்றார். நான் தடுமாறினேன். சொல்லுப்பா என்றார். சார் என்றேன். சும்மா ஒரு கற்பனைக்கே வைச்சுக்கோ. சொல்லு என்றார். தெரியலை சார் என்றேன். 
என்ன காரணம் என்றே தெரியாமல் ஒருவரை பிடிக்காமல் போவதும், பிடித்துவிடுவதும் என சொல்வது மனிதர்களின் மடத்தனம் என்றவர், எந்த ஒரு காரணமும் இல்லாமல் எந்த ஒரு காரியமும் இல்லை என்றார். 

இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை என்றார். 

சும்மா வெட்டித்தனமா பேசாதீங்க சார் என்றான் எனது அருகில் இருந்தவன். என்னடா சொன்ன? என்றவரின் கோபத்தில் நான் எரிய ஆரம்பித்தேன்.

(தொடரும்)

Saturday 26 May 2012

எனக்கு ஏனிந்த வேலை

ந்த சாமியார், ஜோசியர், குறி சொல்பவர் என்பவர்களையெல்லாம் நீக்கிவிட்டேன். ஆச்சரியம் எனக்கு ஒரு வேலை கிடைத்து இருந்தது. ஒரு காலை முழுவதும் செய்த வேலையில் சரியான அலுப்புடன் வீடு வந்து சேர்ந்தேன். என்னால் நம்ப முடியவே இல்லை. நான் காண்பது கனவா, நினைவா எனும் கேள்விக்குறிகள் என்னுள் ஈட்டியாக பாய்ந்து கொண்டிருந்தன. கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன். ஆனால் பார்த்தது நிஜம் தானா என ஊர்ஜிதம் செய்து கொள்ளவே முடியவில்லை. மீண்டும் கண்களை கசக்கினேன். இப்படி கண்களை கசக்குவதால் மூளைக்கு செல்லும் நரம்புகளும் கசக்கப்படும் என ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்து போனது. 

வார்த்தை குளறியதால் வாய் குளறியது. நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன். அங்கே நின்றவர் ஒரு பெரிய புன்னகையை வீசிக்கொண்டு நின்றார். சொல்லுங்கள், நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன் மீண்டும். அதே புன்னகை. அருகில் சென்று உடலைத் தொட்டேன். எனது உடல் சில்லென்றது. ''உங்களைத் தொட்டதால் உலகில் உள்ள அனைத்தையும் தொட்டது என்றாகுமோ?'' என்றேன். மீண்டும் புன்னகை. 

''எனது வீட்டில் நீங்கள் எழுந்தருளியிருப்பது எனது பாக்கியம், வாருங்கள் இதோ இந்த நாற்காலியில் அமருங்கள். உனது நாற்காலி எல்லாம் எதற்கு, நானே நாற்காலி செய்து கொள்வேன் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள்'' என்றேன். அதே புன்னகை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டில் வேறு எவரையும் காணவில்லை. பரந்தாமன் நாராயணன் வந்தது தெரிந்தால் அம்மா எத்தனை சந்தோசம் கொள்வார் என அடுப்பங்களைக்கு ஓடினேன். ஏதாவது ஒரு பானையில் ஒரு சோறாவது ஒட்டி இருக்கிறதா என தேடினேன். 'பரந்தாமன் ஒரு சோறு உட்கொண்டால் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பசியாறிவிடும் அல்லவா'' என்று பார்க்க சட்டி நிறைய சோறு இருந்தது. இந்த சட்டி நிறைய இருக்கும் சோற்றில் எந்த ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வது என நினைத்துக்கொண்டிருக்க, பரந்தாமன் போய்விடுவாரோ என ஓடி வந்து பார்த்தேன். அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 

சரி ஆனது ஆகட்டும் என கண்களை மூடி ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு பரந்தாமனின் கையில் வைத்தேன். எனது வயிறு நிறைந்தது போலிருந்தது. ஒவ்வொரு சோறாக எதற்கு நாட்கள் முழுக்க பரந்தாமன் உண்ணக்கூடாது என மனதில் நினைத்தேன். அதே புன்னகை. அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய்விட்டது. வீட்டில் எரிந்து கொண்டிருந்த ஒளி அணைந்து போனது. பரந்தாமா, நீங்கள் பேரொளியிருக்க இந்த ஒளி எல்லாம் எதற்கு என்றே சொன்ன பிறகும் இருட்டாகவே இருந்தது. இருளில் நீங்கள் இருப்பது இல்லையோ? என்றே கேட்டேன். இப்போது ஒலி மட்டும் வழி கொண்டிருக்க ஒளி தெளிவின்றி இருந்தது. பரந்தாமன் கொண்டது புன்னகையா இல்லையா என தெரியவில்லை. 

சிறிது நேரத்திற்கெல்லாம் எவர் செய்த புண்ணியமோ மின்சாரம் வந்து சேர்ந்தது, அப்படியெனில் எவர் செய்த பாவத்தினால் மின்சாரம் போனது என்றே நினைத்துக்கொண்டே பரந்தாமா இவ்வுலகில் எதற்காக ஜீவராசிகளைப் படைத்தாய்? அதுவும் என்னை எல்லாம் எதற்காக படைத்தாய்? என்றேன். அதே புன்னகை. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இத்தனை பேசியும் எதுவுமே சொல்லாமல் இப்படி மெளனமாக நின்று கொண்டிருக்கிறாரே என மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு வீட்டில் இருந்த பூமாலைகள் எடுத்துகொண்டு வந்து அவரின் கழுத்தில் போட்டேன். மாலை சூடிய மங்கை ஆண்டாள் நான் இல்லை என்றாலும் மரியாதை செலுத்தும் பக்தனாக பரந்தாமன் கண்ணுக்குத் தெரியட்டும் என நினைத்தேன். மீண்டும் அதே புன்னகை. 

ஒரு நன்றியாவது செலுத்தமாட்டாயா என்றே கேட்டேன். அதே புன்னகை. இதோ உலகில் உள்ள பாவங்களையெல்லாம் போக்காமல் எதற்காக பார்த்து கொண்டிருக்கிறாய் என்றேன். மீண்டும் புன்னகை. இன்னும் நின்று கொண்டிருக்கிறீர்களே, அமருங்கள் பரந்தாமா என்றேன். புன்னகை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. இந்த உலகில் மனிதர்கள் அவர்களுடைய காரண காரியங்கள் படி செயலாற்றி கொண்டிருக்க அவர்களை திருத்துவது மாற்றுவது எல்லாம் அவசியமில்லாத வேலை என்று நினைக்கிறீர்களோ பரந்தாமா? என்ற நான் அவருக்காக ஒரு பாசுரம் பாடினேன். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செல்வித்திரு காப்பு. அந்த பாடலை பாடிய பின்னரும் அதே புன்னகை. எப்படி பரந்தாமா இப்படி இருக்க முடிகிறது உங்களால், பதில் சொல்லுங்கள் பதில் சொல்லுங்கள் என கண்ணை மூடி சத்தம் போட்டேன்.

யாரோ தொட்டு எழுப்புவது போன்று இருந்தது. பரந்தாமன் தான் என்னை தொடுகிறானோ என நினைத்தேன். கண்களைத் திறந்த போது எதிரே அம்மா நின்று கொண்டிருந்தார்.

''மதிய வேளையில் கூட என்னடா தூங்கிண்டு இருக்கே, மணி நாலரையாறது. இன்னைக்குத்தான் கோவில் அர்ச்சகரா வேலைக்கு சேர்ந்தே அதுக்குள்ள இப்படித் தூக்கமா. முகத்தை அலம்பிண்டு நீர் ஆகாரம் குடிச்சிட்டு கோவிலுக்குப் போய் மாலை பூஜை எல்லாம் ஆரம்பி' என அம்மா என்னை எழுப்பி சொன்னதும் 'அம்மா, அம்மா அந்த பரந்தாமன் என் கனவுல வந்தாரும்மா' என சொல்லிக்கொண்டே அடுப்பங்களையில் இருந்த சோற்றுப்பானையை திறந்து பார்த்தேன். ஒரே ஒரு சோறு மட்டும் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது.

என் பின்னால் வந்த அம்மாவிடம் இதோ ஒரு சோறு என்றேன். நான் பாத்திரத்தை சரியா கழுவாம வைச்சிட்டேன்டா என்றார். இருக்கட்டுமா என்று ஒரு சோற்றினை மட்டும் எடுத்துக்கொன்டு கோவில் நோக்கி புறப்பட்டேன். உலகில் உள்ள உயிர்களின் பசியை போக்குவார் என்கிற அதீத நம்பிக்கையுடன்.

Friday 18 May 2012

குருட்டுத்தனமான குரு பெயர்ச்சி

இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படித்தான் வாழ்க்கையில முன்னேறுரது? வழக்கம் போல பழைய புராணம் ஒன்றை கேட்க வேண்டியதாகி போனது. 'என்னை என்ன பண்ண சொல்ற' என பழைய புராணம் ஒன்றை நானும் தான் எடுத்துவிட்டேன். 'ஏதாவது பண்ணி தொலை' அதே சலிப்புடன் அம்மா நகர்ந்து போய்விட்டாள். எனக்கு அப்பாடா என்று இருந்தது.

இந்த முறை கனவு எல்லாம் நம்ப நான் தயாராக இல்லை. எனவே ஏதேனும் சாமியார் ஒருவரை நிஜத்திலேயே சந்தித்து எதிர்கால வாழ்க்கை குறித்து கேட்டு விடலாம் என கிளம்பினேன். நமது ஊரில் சாமியார்களுக்கா பஞ்சம். சாமியாரிடம் என்ன அருள்வாக்கு கேட்பது என மனதில் திட்டம் போட்டு கொண்டேன். இந்த சாமியார்கள் எல்லாம் மிகவும் சக்தி படைத்தவர்கள். அதாவது பிறரை ஏமாற்றும் சக்தி படைத்தவர்கள் அல்லது பிறர் தங்களிடம் வந்து ஏமாறும் நிலையை அறிந்தவர்கள்.

படித்தறிந்த மேதாவிகள் முதற்கொண்டு படிக்காத தற்குறிகள் உட்பட தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள கொண்டிருக்கும் ஆவலை அவல் போல மென்று துப்பும் வித்தையை இந்த சாமியார்கள் நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இதற்காக சாமியார்களை மட்டும் குறை சொல்ல முடியுமா? இது வியாபார உலகம். எது எது வியாபாரம் நன்றாக ஆகுமோ அது அது நன்றாக வியாபாரம் ஆகும்.

உடல் விற்று வாழும் பெண்களை வைத்து நடத்தப்படும் தொழில் கூடத்தான் இவ்வுலகில் பெரும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக அந்த பெண்களை குறை சொன்னால் மட்டும் போதுமா? எல்லாவற்றுக்கும் மோகம் கொண்டு திரியும் மனிதர்கள்தான் அத்தனை குட்டிச்சுவர்களுக்கும் முழு காரணம். வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தவறு செய்பவர்கள் கொஞ்சம் என்றால் தவறு செய்ய வாய்ப்புதனை ஏற்படுத்தி கொண்டு வாழ்பவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள். இந்த குட்டி குடைசலை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஊரிலேயே பெரிய சாமியார் என சொல்லப்படும் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது கால கிரகம்.

அப்பாய்ன்ட்மென்ட் இருக்கிறதா என வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து இருந்த ஒருவர் என்னை பார்த்து கேட்டதும் எனக்கு வியர்த்து கொட்டியது. இல்லை, எப்போ சாமியாரை பார்க்கலாம் என கேட்டேன். கையில் இருந்த நோட்டில் வேகமாக பார்த்துவிட்டு அடுத்த மாசம் பத்தாம் தேதி வா என பெயர் விலாசம் எல்லாம் குறித்து கொண்டார். சாமியார் இருக்கும் அறைக்குள் எட்டி பார்த்தேன். ஒரு ஐம்பது நபர்கள் அமர்ந்து இருப்பார்கள். சாமியாருக்கு வந்த கிராக்கி என நினைத்து கொண்டு வெளியே வந்தேன்.

பேசாம சாமியாரா போயிரலாம் போல இருக்கு என எனக்கு நானே பேசினேன். சாமியார் ஆகிறது எத்தனை கஷ்டம தெரியுமா? ஆசைகள் எல்லாத்தையும் துறந்துரனும் என்றார். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்றார் அவர். என்னய்யா மடத்தனமா பேசற இப்ப எல்லாம் அந்த ஆசைகள் எல்லாம் இருந்தாத்தான் சாமியார் ஆக முடியும். ஊரெல்லாம் சிரிச்சி கேவலப்படுத்தினாலும் ஒய்யாரமா இந்த காலத்தில உலா வரமுடியும் என எனது பங்குக்கு கரிச்சி கொட்டினேன்.

வழியில் ஒரு ஜோசியர் கடை தென்பட்டது. ஜோசியம் எல்லாம் கடை போட்டு விற்பனை பண்ணும் நிலைக்கு வந்து விட்டது. ஜோசியம், பரிகாரம், பூஜை புனஸ்காரம். அப்பப்பா என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. எதற்கும் ஜோசியரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அங்கே சென்றேன். அங்கே எனக்கு முன்னர் ஒரு ஏழெட்டு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். அட பாவி மனுசங்களா என திட்டிவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்தேன். அங்கே குருபெயர்ச்சி பலன்கள் என போட்டு இருந்தது. சரி படிப்போம் என பார்த்தேன். இந்த குரு ஒவ்வொரு வருஷம் ஒரு ராசிக்கு பயன் செய்வாராம். இந்த வருஷம் ரிஷபத்தில் இருக்கிறாராம்.

இந்த குருவுக்கு தர மரியாதைய இப்போ எல்லாம் யார் தங்களுடைய ஆசிரியர், தாய், தந்தை என யாருக்கும் தரது இல்லை. கொடுமைடா சாமி. நான் எந்த ராசியா இருந்தா என்ன அப்படின்னு எல்லா ராசிய படிச்சி பார்த்தேன். ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த குரு இப்படி குருட்டுத்தனமா இடம் பெயர்ச்சி செய்றார். சரி அப்படின்னு ஜோசியர் கிட்ட போனேன். 

அவர் சொன்னார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பணம் அந்தஸ்தை அள்ளி தரும் அப்படின்னு சொன்னார். அவர்கிட்ட ஒரு ஆறு வருசமா அப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க ஒன்னும் நடக்கலையே என்றேன். குரு துரோகம் பண்ணாதே அழிஞ்சிருவ அப்படின்னு சொன்னார். 

பணம் அந்தஸ்து இருந்தா எல்லா துரோகம் பண்ணலாம்னு சொல்லிட்டுஉங்க ராசிக்கு என்ன சொல்லி இருக்கு அப்படின்னு கேட்டேன். சகல சௌபாக்கியம் அப்படின்னு சிரிச்சார். 

வெளியே வந்தப்போ வியர்க்க விறுவிறு க்க ஒருத்தர் வேலை செஞ்சிட்டு இருந்தார். என்ன ராசி நீங்க அப்படின்னு கேட்டேன். தெரியாது, எதுக்கு கேட்கறீங்க அப்படின்னு கேட்டார். குரு  பெயர்ச்சிநடந்து இருக்காம் அதான் உங்களுக்கு என்ன பலன் இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்னு. 

குரு குருட்டுதனமா பெயர்ச்சி அடைவான். சனி சந்தடிசாக்கில பெயர்ச்சி அடைவான். இப்படி வெட்டித்தனமா சுத்திட்டு திரியற அவங்களே இன்ன இன்ன பலன்கள் தராத வெட்டி கதைகள் பேசிட்டு திரியறாங்களே, உழைக்கிற நாம எவ்வளவு பலன்கள் நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் தரலாம்னு ஊரெல்லாம் போய் சொல்லு என வியர்வை துடைத்து அவர் வீசி சென்றதில் எனக்குள் இருந்த ஒரு சாமியார், ஜோசியர் என்கிற கற்பனை உலகத்தை முற்றிலும் துடைத்து எறிந்தேன். 


Thursday 17 May 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8

ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் என்ன காரியம் பண்ண இருந்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் என்னை நோக்கி கைகள் கூப்பி எங்க இருவரையும் வாழ விடு என்று கெஞ்சினார். எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது. எத்தனை வருட பழக்கம் என்றேன். சில வருடங்கள் தான் என்றார். சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்து விட்டதாக அப்பா சொன்னாரே என்றேன். எனக்கு தேவையானது எடுத்து கொண்டே எழுதி வைத்தேன் என்றார். அவரின் அருகில் இருந்த பெண்ணை பார்த்து இவர் திருமணம் ஆனவர் என்றும் தெரிந்தா இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார். 

எனது இந்த செயல்பாடு என்னை கோமாளியாக்கி கொண்டு இருந்தது. இவரை எப்படி வீட்டிற்கு அழைத்து செல்வது என யோசித்தேன். உங்க மனைவியிடம் சத்தியம் செய்தது என சொன்னது எல்லாம் பொய்யா என்றேன். அவர் பேசவில்லை. எப்படி பேசுவார். காயத்ரியின் அம்மா இறந்தபோது இவர் இருந்த நிலை கண்டு நான் எப்படி ஏமாந்துவிட்டேன். எப்படியாவது தொலைந்து போய்விடுங்கள் என சொல்லியபடி அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு மனம் எல்லாம் பாரமாகி போனது. 

வீட்டிற்கு வந்ததும் அம்மா எப்போதும் போல கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். காயத்ரி அருகில் இருந்தாலும் ஒவ்வொரு பொய்யாக சொல்லி கொண்டே இருந்தேன். ஒரு பொய் ஓராயிரம் பொய்தனை இழுத்து கொண்டு வருமாம். எனது நிலைமை மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. அன்று இரவு காயத்ரியிடம் தனியாக பேசினேன். காயத்ரி இந்த உலகம் எப்படிபட்டது தெரியுமா என்றேன். எப்படிபட்டது என்றாள். பொய்களாலும், புரட்டுகளாலும் நிறைந்தது என்றேன். அது பார்ப்பவர்களின், நினைப்பவர்களின் கைகளில் உள்ளது என்றாள். 

உன் அப்பா பற்றி என்ன நினைக்கிறாய் என்றேன். அவர் மிகவும் தங்கமான்வர் என்றாள். நான் உன் அப்பாவை வேறு ஒரு நிலையில் இன்று பார்த்தேன் என்றேன். அவளுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்து இருக்க கூடும். என்ன என பதட்டத்துடன் கேட்டாள். இன்று நடந்த அனைத்து விசயத்தையும் அவளிடம் அப்படியே ஒப்புவித்தேன். அவளது கண்களில் கண்ணீர் கொட்டியது. உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல காயத்ரி, என் அம்மாகிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சிக்கோ, என் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய ரகளையே பண்ணிருவாங்க என்றேன். என்னால நம்ப முடியலை என்றாள் காயத்ரி. சில விசயங்கள் அப்படித்தான் என்றேன். 

அன்று இரவு எல்லாம் அவள் தூங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றே எனக்கு பட்டது. எத்தனை அன்பான அம்மா. எத்தனை அன்பாக இருந்து இருக்கிறார் அவளது அப்பா என்றே நினைத்தேன். எதற்கு இந்த மாற்றங்கள் எல்லாம். கல்லூரிக்கு நாங்கள் இருவரும் சேர்ந்தே சென்றோம். அப்போதெல்லாம் சந்தேகம் மனதில் அள்ளிக்கொண்டு போனது. இவர் இப்படி இருப்பாரோ, அவர் அப்படி இருப்பாரோ, சே சே அப்படி எல்லாம் எல்லாரும் இருக்க மாட்டார்கள் எனும் ஆறுதல் வேறு வந்து போனது. கல்லூரியில் காயத்ரியை நிறைய பேர் துக்கம் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்த துக்கத்தில் அவளது கண்கள் குளமாகி கொண்டே இருந்தது. அதிலும் அவர் அப்பா பற்றி அவள் அறிந்து இருந்தது அவளுக்குள் பெரும் வேதனையை உருவாக்கி இருந்தது. மதிய வேளையில் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது 'முருகேசு நீயும் என் அப்பா மாதிரி நடந்துக்குவியா' என்றாள். 'நிச்சயம் நடந்துக்கமாட்டேன்' என உறுதி அளித்தேன். அவளிடம் நீ அந்த பெண்ணை போல நடந்துக்குவியா என கேட்க தோணவில்லை. நான் இறந்தால் காயத்ரியும் இறந்து போக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அதே போல காயத்ரி இறந்தால் நானும் இறந்து போக வேண்டும் என கூடுதலாக வேண்டி கொண்டேன். 

எனக்கு பிடித்த ஆசிரியர் பாடம் நடத்த வந்தார். அவர் பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன்னரே நான் ஒரு கேள்வி கேட்க எழுந்தேன். 'என்னப்பா, வந்ததும் வராததுமா எழுந்துட்ட, வெளியில போறியா' என்றார். 'இல்லை சார், ஒரு கேள்வி' என்றேன். 

பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன? என்றேன். கலகலவென சிரித்தார். எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள். 'You made me laugh' என தொடர்ந்து சிரித்தார். என்ன சொல்றார் என புரியாமல் நின்று கொண்டே இருந்தேன். சார், பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என திரும்பி கேட்டேன். மறுபடியும் மொத்த வகுப்பும் சிரித்தது. காயத்ரியை கவனித்தேன். காயத்ரி சிரிக்காமல் இருந்தாள். 

'wait' என சொன்னவர் ஒரு பேன் வரைந்தார். 'what is this?' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this?' என்றார். இது பெருமாள் என்றேன். That's it. என மீண்டும் கலகலவென சிரித்தார். சார், நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்றேன். சட்டென காயத்ரி எழுந்தாள். 'Can I have your permission to answer this question Sir' என்றாள். தமிழில் சொன்னால் நல்லா இருக்கும் என்றேன். 'Carry on Gayathri' என்றார் ஆசிரியர். 

ஒரு சின்ன விசயத்தை அதாவது ஒன்றுமில்லாத விசயத்தை பெரிது படுத்தி பேசுவதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என பொருள்படும் என்றாள். உதாரணம் சொல்ல முடியுமா என்றேன். இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் இயற்கையாகவே நடக்க கூடியது, ஆனால் நடக்கின்ற விசயத்தை 'ஐயோ இப்படி நடந்துவிட்டதே' என அங்கலாய்ப்பது இந்த பேனை பெருமாள் ஆக்குவதற்கு சமம் ஆகும். உதாரணத்திற்கு நீ ஒருவளை காதலிக்கிறாய். அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். இப்போது நடந்த விசயத்திற்கு என்ன காரணம், அவளுக்கு உன்னைவிட மற்றவனை பிடித்து இருந்தது, அதனால் அவள் சென்றுவிட்டாள். ஆனால் ஊர் உலகம் இதை எப்படி பேசும்? உன்னை பற்றி தவறாக, அவளை பற்றி தரக்குறைவாக ஏதோ ஏதோ காரணங்கள் காட்டி பேசும். இதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என கூறிவிட்டு அமர்ந்தாள். எனக்கு அவள் காட்டிய உதாரணம் சுர்ரென வலித்தது வகுப்பு மிகவும் மௌனமாக இருந்தது. 

'Are you happy with the answer Murugesu?' என்றார். 'No Sir, the example is a disgrace and disgusting. It offended me' என்று அமர்ந்தேன். 'Well, Gayathri did not mean to offend you anyway. She tried to simplify what she understood of this. Don't take it personally. I laughed when you asked this question to me because the same sentence I told my wife today. It is a co-incidence' என்றார். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன். 

அன்று அவர் நடத்திய பாடம்தனை கவனிக்க எனக்கு தோணவில்லை. மாறாக காயத்ரி எதற்கு இப்படி பேசினாள் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. அப்போது ஆசிரியர் சொன்ன ஒரு விசயம்தனை கூர்ந்து கேட்க மனம் எத்தனித்தது. 

'This world was created by chance. The chance which occurs very very rarely. There was no reason behind for this happening. It happened at such a rate that no one could ever re-visit. We have various laws of physics to explain this however our biological evidences are showing completely different aspects. Let us consider a Tiger. Now you have to think about this tiger and where its habitat is. Why tiger chose that particular habitat? Think about it and tell me' 

மூன்றாவது வரிசையில் இருந்த ஒருவன் எழுந்தான். 'Could you please tell me Sir,  does Tiger think why he chose particular habitat?' மொத்த வகுப்பும் அவனையே பார்த்தது. 'Absolutely not' என்றார் ஆசிரியர். 'You may be wrong Sir, did you ask any Tiger'? மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அவன் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது. 'Fabulous Sriram, spot on' என்றார். அப்படியெனில் காயத்ரி ஒன்று நினைத்து சொல்ல நான் ஒன்று நினைத்து விட்டேனோ என நினைத்தேன். காயத்ரியை பார்த்தேன். அவள் அமைதியாகவே இருந்தாள். 'We will continue this' என ஆசிரியர் சென்றார். 

அன்று மாலை காயத்ரியிடம் நீ சொன்ன உதாரணம் எனக்கு ரொம்ப வலிச்சது என்றேன். ஒரு உதாரணத்தை உதாரணமா பார்க்காம இருந்த பாத்தியா அதுதான் பேனை பெருமாள் ஆக்குறது. இப்போ இதையே காரணம் காட்டி நாம இரண்டு பெரும் சண்டை போட்டுகிட்டா நம்ம ரெண்டு பேருக்குத்தான் நஷ்டம். நீ எதுவும் மனசில வைச்சிக்காத என்றாள் காயத்ரி. 

ஆனா நீ உன் அப்பாவை பத்தி நான் சொன்னதை இன்னமும் நினைச்சிட்டுதான் இருக்க. அதுதான் அந்த உதாரணம் வந்தது என்றேன். 'தெரியலை, ஆனா என் அப்பாவா அப்படினு என்னால நம்ப முடியல. மத்தபடி நான் என்ன செய்ய முடியும் சொல்லு முருகேசு என சொன்னபோதே அவள் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அப்பாவை எங்கள் வீட்டில் பார்த்தபோது எனக்கு திடுக்கென இருந்தது. 

(தொடரும்) 




Thursday 26 April 2012

நமக்கெல்லாம் எதற்கு இறைவன்

இந்த முறை சாமியாரை இத்தனை விரைவில் சந்திப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரை பார்க்க குழுமியிருந்தவர்களில் நானும் ஒருவனாக அமர்ந்து இருந்தேன். என்னை உற்று நோக்கி கொண்டே இருந்தார் அவர். 

முதன் முதலாக நான் காண்பது நிஜமா, பொய்யா எனும் எண்ணம் மனதில் வந்து குடி புகுந்தது. நிஜம் தான் என மனம் சொல்லிக்கொண்டு இருக்க அந்த சாமியார் என்னை உற்று நோக்கி கொண்டே இருந்தார். 

நான் அதற்கு பின்னர் அவரை பார்க்க முயற்சிக்கவே இல்லை. அவரை பார்த்தால் தானே என்னை பார்க்கிறார் எனும் எண்ணம் எழும் எனும் ஒரு மனப்பான்மை வந்து சேர்ந்தது. ஒரு சிலர் வேறு வேறு கேள்வி கேட்க பதில் சொல்லிக் கொண்டிருந்தார் சாமியார். கேள்வியும் பதிலும் மனதில் நிற்கவே இல்லை. 

அப்போது எனது அருகில் இருந்த ஒருவர் சாமியாரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். 

நமக்கெல்லாம் எதற்கு இறைவன்? 

இந்த கேள்வியானது என்னை அந்த நபரை திரும்பி பார்க்க வைத்தது. நான் நினைத்து கொண்டிருந்ததை எப்படி இவர் கேட்டு வைத்தார் எனும் எண்ணமே மேலோங்கி இருந்தது. அவரைப் பார்த்து புன்னகைத்து கொண்டேன். அவர் என்னை கவனிக்கவில்லை. 

எதற்கு இப்படி ஒரு கேள்வி வந்தது என தெரிந்து கொள்ளலாமா என கேட்டார் சாமியார். அப்போது சாமியாரை பார்த்தேன், அவர் என்னை பார்ப்பது போலிருந்தது. 

இந்த உலகம் கள்ளம், கபடம், சூது வாதுகள் போன்ற தீய சக்திகளால் சூழப்பட்டு இருக்கிறது. சக மனிதர்கள் சக மனிதர்களை மதிப்பதே இல்லை. இப்படி ஒரு இழிநிலை பிறவிகளாக நாமெல்லாம் வாழ்ந்து கொண்டும் நமக்கு இறைவன் என்ற ஒன்றை வைத்து கொண்டு நம்மை நல்வழிபடுத்த வேண்டும் என வேண்டுவது முறையாக எனக்கு தெரியவில்லை, அதனால் தான் நமக்கெல்லாம் எதற்கு இறைவன் என்று வினவினேன் என்றார் அருகில் இருந்தவர். 

கேள்வி உங்களுடையதா, அல்லது அருகில் இருப்பவருடையதா என்றார் சாமியார். எனக்கு கோவம் வந்தது, அடக்கி வைத்து கொண்டு அமைதியாகவே இருந்தேன். 

எனது கேள்வி தான் இது, ஆனால் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும் இந்த கேள்வி இருக்கலாம் என்றார் அருகில் இருந்தவர். 

இறைவன் நமக்காக மட்டுமே இல்லை என்றார் சாமியார். 

அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இருப்பினும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். 

அருகில் இருந்தவர் தொடர்ந்தார். நாம் நல்லவர்களாக மாற இறைவன் அவசியம் இல்லையே, நாம் நன்றாக நடந்தால் நாம் நல்லவர்களாக இருந்துவிட்டு போகிறோம், இதில் நமக்கெல்லாம் எதற்கு இறைவன்? என்றார். 

உன் அருகில் அமர்ந்து இருக்கும் அந்த பக்தன் போன்றோருக்கு இறைவன் அவசியமாக படுகிறார். வேண்டுதல் எதுவும் இல்லை என வேண்டுதல் பல அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். தங்களை தாங்களே திருப்தி படுத்தி கொள்ள இயலாத பட்சத்தில் நமக்கு இறைவன் மிகவும் அவசியம். இந்த உலகம் இருளால் சூழப்பட்டு இருப்பதால் வெளிச்சம் கொண்டு வர இறைவன் அவசியம் என்றார் சாமியார். 

என்னை பற்றி சொன்னதும் ஏதேனும் பேச வேண்டும் போலிருந்தது, இருப்பினும் அமைதியாக இருந்தேன், என்னை பற்றி அவர் பேசவில்லை எனும் சமாதானத்தை என்னுள் விதைத்தேன்.  

நீங்கள் சொல்லும் விளக்கம் புரியவில்லை என்றார் அருகில் இருந்தவர். 

நான் எதற்கு உனக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றார் சாமியார். 

நீங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்றார் அருகில் இருந்தவர். 

அப்படியெனில் நீ என்ன முட்டாளா? உன் அருகில் இருப்பவர் முட்டாளா? என்றார் சாமியார். 

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இனிமேலும் அமைதியாக இருப்பதில் அர்த்தம் இல்லை. என வாய் திறந்தேன். கொட்டாவி விட்டு விட்டு மூடிவிட்டேன். எதுவும் பேசவில்லை. 

எப்படி என்னை நம்பி விசயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என வந்தாயோ அதைப்போலவே இறைவன் மூலம் நமது வாழ்வு நலம் அடையும் என பலரும்  உறுதியாக நம்புகிறார்கள். அதனால் நமக்கெல்லாம் இறைவன் அவசியம் என்றார் சாமியார். 

நான் மெதுவாக எழுந்து வெளியில் நடந்தேன். வழியில் ஒருவர் அடிபட்டு வலியால் துடித்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மற்றொருவர் அவரை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்லலாம் என அழைத்து சென்றார். 

நமக்கெல்லாம் எதற்கு இறைவன் என சத்தமாக கேள்வியை கேட்டேன். ஒருவர் எனது தோளை தட்டினார். திரும்பினேன். சாமியார் நின்று கொண்டிருந்தார். 

என்னிடம் கேட்க நினைத்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா என்றார். தலையை மட்டும் ஆட்டினேன். அவரிடம் எதுவுமே பேச தோணவில்லை. 

பூமி பற்றி கேட்பாய் என நினைத்தேன் என்றார் சாமியார். 

இன்னும் படுத்து இருக்கியா எனும் ஒரு சப்தம் என்னை எழுப்பிவிட்டது. 


Thursday 12 April 2012

மனிதர்களின் தீவு

Isle of Man   

இந்த தீவு அயர்லாந்து கடலில் அமைந்து உள்ளது. கிட்டத்தட்ட நூறாயிரம் மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த தீவு அழகிய மலைகளால் நிரம்பி உள்ளது. வான்வெளி போக்குவரத்து மிகவும் குறைவு. கடல்படகு மூலம் செல்லும் வழியில் தான் பெரும்பாலோனோர் செல்கிறார்கள். 

வீட்டில் இருந்து இந்த கடல் படகு கிளம்பும் இடத்திற்கு செல்ல ஆறு மணி நேரம் ஆனது. காரினை கடல் படகுதனில் எடுத்து செல்லும் திட்டத்துடனே பயணம் தொடங்கியது. கடல் படகு செல்லும் இடம் அடைந்ததும் சில சோதனைகள் செய்த பின்னர் கடல் படகினில் அனுமதித்தார்கள். சகல வசதிகளுடன் கூடிய கடல் படகு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. தனிக்கட்டணம் செலுத்தினால், நான்கு படுக்கை வசதி உடைய தனி அறை ஒன்று பெற்று கொள்ளலாம். அதைப்போலவே தனிக்கட்டணம் செலுத்தி நல்ல வசதியான இருக்கையுடன், உணவும் பெற்று கொள்ளலாம். 

மூன்று மணி நேரம் முப்பது நிமிட பயணம். எங்கள் இருக்கைக்கு எதிரே ஒரு எழுபத்தி ஐந்து வயது நிரம்பிய பாட்டியும், அவரது பத்து வயது நிரம்பிய பேத்தியும் அமர்ந்து இருந்தார்கள். புன்னகை மட்டுமே முதலில். அவர்கள் இருவரும் சீட்டு விளையாடி கொண்டு இருந்தார்கள். நாங்கள் காரில் வந்த அலுப்பில் கடல் பரப்பை பார்த்து கொண்டே சென்றோம். அவ்வப்போது உணவு வந்து தந்தார்கள். கிட்டத்தட்ட தீவினை அடைய ஒரு மணி நேரம் இருக்கும்போது அந்த சிறுமி இன்னும் எத்தனை நேரம் என பாட்டியிடம் கேட்டு வைக்க, நான் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என சொன்னேன். அந்த வார்த்தைகள் பல விசயங்கள் பேச உதவியாக இருந்தது. 

அந்த பாட்டியின் கதை வெகு சுவாரஸ்யம். அவரது கணவர் இறந்து போன பின்னர், இந்த தீவில் இருந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டு எட்டு வருடங்களாக பழகி இருக்கிறார்கள். இந்த தீவில் இருந்த அவரின் மனைவியும் இவருடன் பழக்கம் ஏற்படும் முன்னர் காலமாகிவிட்டார். அவர் ஆக்ஸ்போர்ட் வருவதும், இவர் இந்த தீவுக்கு செல்வதுமாக இருந்து இருக்கிறார்கள். பலமுறை அவர் இவரை திருமணம் செய்ய வேண்டும் என சொன்னபோது மறுத்து வந்திருக்கிறார் இவர். ''எத்தனையோ இடங்கள் சுற்றினோம், எனக்குள் காதல் இருந்தது, ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல மனம் வரவில்லை. எத்தனையோ அருமையான இடங்கள் சென்றபின்னரும், எனது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் அவரிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என சென்ற வருடம் தான் சம்மதம் சொன்னேன்'' என அவர் சொன்னதும், அவரின் பேத்தி ''நான் தான் மணமகளின் தோழியாக இருந்தேன்'' என கிளுக்கென சிரித்து கொண்டார். ''அதுவும் திருமணத்தின் போது நான் எல்லா தருணங்களிலும் உடன் இருப்பேன் போன்ற வசனங்கள் எல்லாம் சொன்னபோது நானும் எனது உறவுக்கார பையனும் சிரித்துவிட்டோம்'' என்றார் அந்த சிறுமி. மேலும் ''நானும் திருமணம் செய்து கொள்வேன் ஆனால் இந்த வயதில் அல்ல'' என வாய் மூடி அவர் சொன்னது நகைப்பாகவே இருந்தது. 

தீவு குறித்த விசயங்கள் பல பகிர்ந்து கொண்டார். எதையும் அங்கிருப்பவர்கள் எளிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என அச்சம் தந்தார். தாங்கள் வரும்போதெல்லாம் ஒரு மலைப்பகுதிக்கு செல்வதுண்டு என சொன்னார். அப்போது அவர் கீழே விழுந்த கதையும், அவரை ஏற்றி கொண்டு செல்ல ஹெலிகாப்டர் வருவதற்கு ஆயத்தமாக இருந்த விசயம் என நினைவுகளை பகிருந்து கொண்டார். காரில் வருபவர்கள் கடல்படகில் இருந்து வேகமாக சென்று விடலாம் என சொன்னவர் தீவுதனை நெருங்க நெருங்க, தீவு நன்றாக தெரியும், ஆனால் இப்போது தெரியவில்லை என சொல்லிக்கொண்டார். வருடாந்திர பயண சீட்டு வாங்கி வைத்து இருக்கிறாராம். இப்படியாக அவர்களுடன் அந்த நேரம் கழிந்தது. நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் கடல் படகு நிற்கும் இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் என எனது மனைவியிடம் விளையாட்டாக சொல்லி வைத்திருக்க, அதை அவரிடம் கேட்டு ஊர்ஜிதம் செய்ய நினைத்தார். அதற்கு அந்த பாட்டி, இந்த தீவுதனையே மூன்று மணி நேரத்தில் சுற்றி விடலாம், எங்கு சென்றாலும், ஒரே இடத்திற்குத்தான் வந்து சேரும் என்றார். 

நிறுத்தம் வந்தது. விடைபெற்றோம். பத்தே நிமிடங்களில் ஹோட்டல் வந்தோம். எங்கே காரை நிறுத்துமிடம் என கேட்க ஹோட்டல் உள்ளே சென்று கேட்டுவிட்டு வெளியில் வந்தபோது கால் வழுக்கி ஒரு கம்பியின் உதவியால் உட்கார்ந்து எழுந்தேன். காலில் அணிந்து இருந்த சூ பயமுறுத்தியது. வீட்டில் கிளம்பியதில் இருந்து இதோடு மூன்று முறை வழுக்கிவிட்டது. எனினும் காரை ஹோட்டல் பின்புறம் நிறுத்திவிட்டு அறைக்கு சென்றோம். அழகிய அறை. தோட்ட அமைப்புடன் கூடிய அறையில் ஒரு பால்கனி என அழகாகவே இருந்தது. நாங்க வந்து சேர்ந்த நேரம் ஆறு மணி என்பதால் மழை தூற்றி கொண்டு இருந்தது. 

இரவு சாப்பிட மில்லினியம் சாகர் எனும் ஒரு இந்தியன் உணவு கடை தேடி சென்றோம். இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்த இடம் தேடி சென்றபோது அங்கே அப்படி ஒரு கடை இல்லவே இல்லை. சிலரிடம் விசாரித்தோம். தெரியாது என்றார்கள். ஒரு இந்தியரை சந்தித்தோம், அவர் சரியாக இடம் சொன்னார். அங்கே சாப்பிட்டுவிட்டு நடந்து வர தாஜ் ரெஸ்டாரன்ட், டேஸ்ட் ஆப் இந்தியா என கடைகள் தென்பட்டன. அடுத்த நாள் காரினை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஊராக சென்றோம். அந்த பாட்டி சொன்னது போலவே மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மொத்த தீவையும் சுற்றி விட்டோம். நாங்கள் தங்கி இருந்த இடமே பெரிய நகரம். மற்றவை எல்லாம் சின்ன சின்ன நகரங்களாக இருந்தது. நிறைய பேர் நடந்தார்கள். சைக்கிளில் சென்றார்கள். அற்புதமான மலைகள் கேரளா, ஊட்டி போன்ற இடங்களை நினைவில் கொண்டு வந்தது. பனி மூட்டங்கள் மாலை வேளையில் மலையை தழுவியது. அதில் காரில் சென்றபோது அச்சமாகவே இருந்தது. எப்போதாவது ஒரு கார் செல்லும். மற்றபடி தொடர்பு அற்ற பிரதேசங்களே. அன்று இரவு தாஜ் ரெஸ்டாரன்ட் சென்றோம். பதிவு செய்யாததால் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என சொல்லி இருக்கை தந்தார். நாங்கள் மட்டுமே இந்தியர்கள். இந்திய உணவை பலரும் ரசித்து சாப்பிட்டார்கள். 

அடுத்த தினம் மிகவும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றோம். அப்படி செல்லும்போதெல்லாம் சென்ற பாதையே திரும்ப திரும்ப வந்தது. கடற்கரை என சொல்லமுடியாது. எல்லா இடங்களும் கடலை ஒட்டியே இருந்தது. அன்று இரவு டேஸ்ட் ஆப் இந்தியா செல்ல அவர்கள் எல்லாம் பர்மின்காம் பகுதி சேர்ந்தவர்கள் என சொன்னார்கள். இரண்டாம் தினம் சில இந்தியர்களை பார்த்தோம். மிகவும் அமைதியான தீவு. எந்த கொள்ளை, கொலை எதுவும் நடக்காத தீவு என பாட்டி சொன்னது நினைவில் வந்தது. எத்தனையோ ஆபத்தான சாலைகள் எல்லாம் சென்று வந்தாலும் பயம் என்று எதுவும் இல்லை. சின்ன சின்ன சாலைகள் என மொத்த தீவையும் மீண்டும் சுற்றியாகி விட்டது. இனி பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என நினைக்க மேலும் இடங்கள் தென்பட்டன. அடுத்த நாள் நாங்கள் இருந்த இடத்தில் இருந்த நகர்புற கடைகள் பார்த்துவிட்டு முன்னொரு காலத்தில் தண்ணீரில் இருந்து மின்சாரம் உருவாக்க செய்யப்பட மிகப்பெரிய சக்கரம் ஒன்றை கண்டோம். அப்படியே சாக்லேட் தொழிற்சாலை (சிறியது) கண்டோம். பெரிய கோட்டைகள் கண்டோம். அந்த கோட்டைகள் சொன்ன கதைகள் பற்பல. எப்படி மனிதர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்பட்டார்கள், எப்படி இந்த தீவினை ஆக்கிரமிக்க போர் எல்லாம் செய்தார்கள் எனும் விபரம் எல்லாம் கொட்டி கிடந்தது. இப்படியாக பயணம் முடிவடைய எப்போதும் போல் பிரமிப்பு மட்டுமே மிஞ்சியது. எப்படி மனிதர்கள் இப்படி ஒரு தீவு கண்டுபிடித்து அங்கே வாழ்க்கை நடத்தி, தொடர்ந்து வாழும் விதம்... 

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகில் இருந்த கடலில் தண்ணீர் அளவு வற்றுவதும், அதிகரிப்பதும் என இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அந்த தண்ணீருக்கள் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு தண்ணீர் வற்றியதும் பலர் சென்று பார்த்துவிட்டு திரும்பி வந்தார்கள். இரண்டு மணி நேரம் தான். தண்ணீர் அளவு கூடிவிடுகிறது. கடற்கரை என நாங்கள் முதல் நாள் நடந்த இடம், அடுத்த நாள் தண்ணீரால் நிரம்பி இருந்தது ரசிக்கும் வண்ணம் இருந்தது. நான்கு நாள் பயணம் முடிந்து வரும்போது இரவு நான்கு மணி நேரம் காரை ஓட்ட வேண்டும் என படுக்கை வசதி அறையை கடல் படகில் எடுத்து இரண்டு மணி நேரம் உறங்கிய அனுபவம் தனிதான். 

இந்த தீவு தனி அரசு எனினும், பிரிட்டனின் உதவி பல விசயங்களுக்கு இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட எட்டாயிரம் வருடங்கள் முன்னர் இங்கே மனிதர்கள் குடியேறி இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலோனோர் அயர்லாந்து, ஸ்காட்லாண்டு போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் எனவும் இவர்களின் மொழி அயர்லாந்து மொழிதனை ஒட்டியது எனவும் கருதுகிறார்கள். 

இந்த நாட்டில் விவசாயம் தொழிலாக இருக்கிறது. பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நாட்டில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு விசயம், இந்த நாட்டின் சின்னம். 

இந்த சின்னம் எதை குறிக்கிறது என அறிந்து கொள்ளும் ஆர்வம் முதல் நாளில் இருந்து தொடங்கி இறுதி நாள் வரை இருந்தது. இறுதி நாள் அன்று என்ன என தேடியதில் 'எப்படி எறிந்தாலும் கீழே விழாமல் இருந்துவிடும் ஒரு கால்' என்பதுதான் அந்த மூன்று கால் கொண்ட சின்னம். வாழ்க்கையில் ஒரு உற்சாகம் தந்துவிட்டு போனது. எனக்கு தெரிந்த உறவினர் ஒருவர் இந்த பயணத்திற்கு சில தினங்கள் முன்னர் தான் எதேச்சையாக சொன்னார். கொக்கு போன்ற படிப்பறிவில்லாத பறவைகள் கூட கண்டம் விட்டு கண்டம் சென்று சரியாக தனது இடம் திரும்பிவிடுகிறது. படித்தறிந்த மனிதர்கள் நம்மால் எதைத்தான் சாதிக்க இயலாது! அவர் சொன்னது எத்தனையோ உண்மை, ஆனால் நமது படிப்பறிவு சண்டை போடுவதிலும், உன் மதம் பெரிதா, என மதம் பெரிதா என்பதிலும். எனது வீடு பெரிதா, உனது வீடு பெரிதா என பொறாமை கொள்வதிலும், வஞ்சகம் தீர்ப்பதிலும், நஞ்சுகளை விதைப்பதிலும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இது போன்ற விசயங்களால் மனித இனம் எப்படி எப்படியோ எறியப்பட்டாலும் இன்னும் இந்த பூமியில் மனித இனம், மனிதாபிமானம் செழித்தோங்கி கொண்டே வந்து கொண்டிருக்கிறது. 

வீட்டில் இருந்து கிளம்பிய கார் பாதி தூரம் சென்றபோது, எனது பையன் தலைசுற்றலாக இருக்கிறது என சொல்ல காரினை நிறுத்தி எச்சரிக்கை விளக்கை அழுத்தினேன். திடீரென ஒரு வாகனம் எங்கள் முன்னால் நின்றது. அந்த வாகனத்தில் இறங்கிய நபர் ஒருவர் எங்களை நோக்கி வந்து 'எதுவும் பிரச்சினை இல்லையே' என கேட்டுவிட்டு நாங்கள் எதுவும் பிரச்சினை இல்லை, பையனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது, அதுதான் காற்றோட்டம் கிடைக்கட்டும் என நிறுத்தினோம் என சொன்னதும் சென்றார். அந்த நிகழ்வு ஏனோ கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மனிதர்கள்... எப்படி எறிந்தாலும் மனிதாபிமானம் எப்படியேனும் தழைத்துவிடும் எனும் நம்பிக்கை இந்த மூன்று கால்கள் கொண்ட சின்னம் காட்டி கொண்டு இருந்தது. 


Wednesday 4 April 2012

பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா!

சாமியார் ஒருவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றா!

பக்தா, பரமாத்மாவில் இருந்து பிரிந்ததுதான் ஜீவாத்மா எனவே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று.

முட்டாள்தனமாக இருக்கிறதே, நான் எப்போது உங்கள் பக்தன் ஆனேன். ஆத்மாவே இல்லை என சொல்லும்போது அதில் எங்கே பரமாத்மா, ஜீவாத்மா! திலோத்தமா என்றுதான் பாட வேண்டும் போலிருக்கிறது.

பக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி கிடந்தழியும் உனது சிந்தைக்கு ஜீவாத்மா, பரமாத்மா எல்லாம் புரிந்து கொள்ள இயலாது.

இருக்கட்டும், பூமியும், பிரபஞ்சமும் ஒன்றா.

பக்தா, பிரபஞ்சத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் பூமி, எனவே பூமியும் பிரபஞ்சமும் ஒன்று.

அப்படியெனில் தாயும் சேயும் ஒன்றா.

பக்தா, தாயில் இருந்து சேய் பிரிந்து வந்ததால் தாயும் சேயும் ஒன்றுதான்.

உங்கள் தாய் எங்கே?

பக்தா, அன்னை எங்கே எனும் தேடல் என்னில் இல்லை.

முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தீரா, அல்லது தெருவில் கிடந்து உழலட்டும் என விட்டுவிட்டு வந்தீரா.

பக்தா, அன்னை அவள் தன்னை காத்து கொள்வாள்.

தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.

பக்தா, உண்மை புலப்படுகிறதோ. பரமாத்மாவில் இருந்து ஜீவாத்மா பிரிந்து வந்தபின்னர் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு. அதைப்போல பூமி பிரிந்து வந்தாலும் பிரபஞ்சம் வேறு, பூமி வேறு.

இப்படி வேறு வேறு என இருக்க எதற்கு வேதங்கள் எல்லாம் அனைத்தும் ஒன்றே என புலம்பி தள்ளுகின்றன.

பக்தா, உற்று நோக்கில் எல்லாம் ஒன்றே. பற்று வைத்திடில் எல்லாம் வேறு வேறே.

பூமி உருண்டை என சொல்வது தவறு. பூமி தட்டை என்பதுதானே சரி என யஜூர் வேதம் சொல்லி இருக்கிறதே.

பக்தா, நாம் பார்க்கும் விசயங்கள் எல்லாம் ஒளியினால் நமக்கு தெரிபவை. ஒளியின் சிதறல்கள் பொறுத்தே ஒரு பொருள் வடிவமைப்பை பெற்று கொள்கிறது. பூமி உருண்டை என சொல்வதும், பூமி தட்டை என சொல்வதும் நமது பார்வையை பொறுத்தே அமையும். கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என சொல்வதைப் போலவே எல்லாம் அமையும்.

பூமி உருண்டை எனில் பக்கவாட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் விழுந்துவிடாதா. கடல் நீர் எல்லாம் கீழே கொட்டிவிடாதா.

பக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி இருக்கும் உனது சிந்தைக்கு இது எல்லாம் புரியாது. ஈர்ப்பு விசையின் காரணமாக எல்லா பொருட்களும் அட்டை போன்றே பூமியின் பரப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வெளிஈர்ப்பு விசையினை புவிஈர்ப்பு விசை முறியடித்து விடும் தன்மை உடையது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை தலைகீழாக சாய்த்தால் தண்ணீர் கீழே விழ வேண்டும், அதுதான் நியதி. ஆனால் பூமி அப்படி அல்ல.

பிறகு எப்படியாம்.

இதுகுறித்து பேச மீண்டும் ஒருநாள் வா.

இயந்திரம் மனிதர்களை விட சிந்திக்கும் வலிமை கொண்டவையாம்.

பக்தா, இயந்திரம் சுயமாக சிந்திப்பது இல்லை.

இயந்திரம் சுயமாக சிந்திக்கும் வல்லமை உடையதாக சொல்கிறார்கள்.

பக்தா, மனிதர்களின் கனவு இது. ஒரு விளையாட்டு போட்டியில் இயந்திரத்துக்கு கொடுக்கப்பட்ட விசயங்களின் அடிப்படையில் அவை செயல்பட்டு வெற்றி பெற்றால் அது இயந்திரத்தின் சிந்திக்கும் திறன் என எப்படி சொல்ல இயலும்.

மனிதர்கள் கொடுப்பதை வைத்து தனக்குத்தானே சிந்தித்துதான் இயந்திரங்கள் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் சாமியார் என ஒரு தேடுபொறியில் தட்டினால் எந்த சாமியார் என்பது குறித்து தேடி அது சம்பந்தமான விசயங்களை இயந்திரம் தந்துவிடுகிறது அல்லவா.

பக்தா, அது சுய சிந்தனை அல்ல. நமது மூளையை போல சிந்திக்கும் திறன் எந்த இயந்திரமும் பெற்று கொள்ள இயல்வதில்லை. காலப்போக்கில் இவை எல்லாம் சாத்தியமாக கூடும்.

இயந்திரமும், மனிதர்களும் ஒன்றா!

ஆமாம் பக்தா. மனிதன் இயந்திரமாகி கொண்டு வருகின்றான். இயந்திரம் மனிதராகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

முட்டாள்தனமாக இருக்கிறதே.

பக்தா, முட்டாள்களின் தினம் மட்டுமே வருடத்தில் ஒருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அறிவாளிகளின் தினம் எல்லாம் கொண்டாடப்படுவதில்லை.

எப்போது உங்களை சந்திக்கலாம்?

கண்கள் மூடிக்கொண்டிருந்த வேளையில் தெரிந்த வெளிச்சம், கண்ணை திறந்த பின்னர் இருட்டாகவே இருந்தது. தலையில் லேசாக வலிக்க ஆரம்பித்தது.

Thursday 29 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7

வேனில் இருந்து பொருட்களை இறக்கி எங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்தார்கள். 'அப்பா என்ன நடக்கிறது' என்று கேட்டேன். அவருக்கு இறக்கிற எல்லா சொத்துகளையும் இந்த இருவரின் பெயரில் எழுதி வைத்து விட்டார் என்றார் அப்பா. அதற்குள்ளாகவா, என்றேன். ஆமாம் என்றார். அப்படியெனில் அவர் சாக முடிவு செய்துவிட்டாரா என்றேன் கலக்கத்துடன். தெரியவில்லை என சொல்லிவிட்டு வேன் டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். காயத்ரி கலக்கத்துடன் இருந்தாள். எதற்கு இந்த கல்லூரிக்கு செல்லவேண்டும், எத்தனையோ பேர் இருக்க காயத்ரி எதற்கு கண்ணில் பட வேண்டும், என்னுடன் பேச வேண்டும், பழக வேண்டும், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் 'என்ன யோசனை முருகேசு' என்றார் அம்மா. மற்ற அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.

'நான் இமயமலைக்கு போகப் போறேன், என்னோட வியாபாரம், இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் தேவேந்திரன் பாத்துகிறேனு சொல்லிட்டார்' என்றார் காயத்ரியின் அப்பா. எனது அப்பாவின் பெயரை சொன்னதும் எனக்கு திடுக்கென இருந்தது. எனது அப்பாவுக்கு என்ன தெரியும் வியாபாரம், விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை உடையவர். கடையில் ஐந்து ரூபாய் பொருள் என்றால் ஆறு ரூபாய் கொடுத்து வியாபாரம் நல்லா பெருகட்டும் என சொல்லிவிட்டு வரக்கூடியவர். இதுவரை எந்த பொருளுக்கும் பேரம் பேசியது இல்லை. இதனால் அம்மா அதிக கோபம் கொள்வது உண்டு. இவர் எப்படி வியாபாரம் செய்வார். கறாராக இல்லாதபட்சத்தில் வியாபாரம் எல்லாம் வீண் என நினைத்து கொண்டு 'சார், எங்க அப்பாவுக்கு வியாபாரம் பண்ண தெரியாது, நீங்க இரண்டு மாசத்தில திரும்பி வரப்ப எல்லாம் தொலைஞ்சி போயிருக்கும்' என்றேன்.

'நான் இரண்டு மாசத்தில திரும்ப வரப்போறதில, திரும்பி வர சில வருசங்கள் ஆகும், எனக்கு இந்த வியாபாரம் திரும்பவும் வேணாம்' என்றார் அவர். 'முருகேசு செத்த இப்படி வா' என அம்மா அழைத்தார். 'நீ பேசாம இரு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்' என்றார் அம்மா. 'என்னம்மா சொல்ற, இதெல்லாம் அப்பாவுக்கு சரிபட்டு வராது, காயத்ரியின் அக்காவை கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும், எதுக்கும்மா, வீண் சிரமம்' என்றேன். 'சார் நீங்க யோசிச்சி பேசுங்க, இதோ இந்த ரெண்டு பேரு உங்களை நம்பி வந்தவங்க' என்றேன். 'உங்க அப்பா எல்லாம் பாத்துக்குவார்' என்றார் அவர். 'ஒருவேளை எங்க அம்மா செத்து போய், எங்க அப்பாவும் சாக முடிவு பண்ணிட்டா, நாங்க மூணு பேரு எந்த தெருவுல போய் நிற்கிறது' என்றேன். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி என் வாயில் இருந்து வந்தது என யோசித்து முடிக்கும் முன்னர் 'என்ன பேச்சு பேசற நீ, அவரே மனசு உடைஞ்சு போயிருக்கார், அபசகுனமா பேசிட்டு' என அம்மா சில தினங்கள் பின்னர் என் மீது கோபம் கொண்டார். 'அப்படி எதுவும் நடக்காது' என்றார் அப்பா.

'சரி நான் கிளம்புறேன்' என்றார் அவர். இரண்டு பெண்களும் அமைதியாகவே இருந்தார்கள். 'காயத்ரி உங்க அப்பாவை எங்கயும் போக வேணாம்னு சொல்லு' என்றேன். காயத்ரி கலங்கிய கண்களுடன் 'அவர் கேட்கமாட்டார்; எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டார்' என்றாள். 'சார், நீங்க போக கூடாது சார்' என்றேன். எனது வயதுக்கு மீறிய வார்த்தைகளா, நிலையின் தன்மையை உணர்ந்து வந்ததா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. 'முருகேசு நீ போய் வேலைய பாரு' என அம்மா அதட்டினார். நண்பன் வீட்டிற்கு செல்வதாக  பொய் சொல்லி சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, எனது தொப்பி ஒன்றையும், கண்ணாடி ஒன்றையும் மறைத்து எடுத்து கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். உண்மை மட்டுமே பேச சொன்ன காயத்ரி நினைவில் அப்போது இல்லை. காயத்ரியின் அப்பா வெளியேறும் வரை ஓரிடத்தில் மறைந்து இருந்து காத்து இருந்தேன். அவர் வந்ததும், அவரை பின்தொடர்ந்து சென்றேன். கையில் சின்னதாய் பெட்டி. பேருந்து நிலையத்தில் நின்றார்.


அவர் ஏறிய பேருந்தில் நானும் ஏறினேன். எந்த இறக்கம் என எப்படி தெரிந்து கொள்வது என தெரியாமல் பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் கேட்டு டிக்கட் வாங்கினேன். அவர் இறங்கிய இறக்கத்தில் நானும் இறங்கி பின் தொடர்ந்தேன். இமயமலை செல்வதாய் சொன்னவர் இங்கே எதற்கு இறங்கினார் என புரியாமல் இருந்தது. சில தெருக்கள் தாண்டி ஒரு வீட்டிற்கு முன்னர் நின்றார். வீட்டின் கதவு திறந்தது.  உள்ளே சென்றார். எத்தனை மணி நேரம் இப்படியே காத்து இருப்பது என சுற்றும் முற்றும் பார்த்தேன். துப்பறியும் சிம்பு போல் ஆகிவிட்டேனே என மனம் கிடந்து அடித்து கொண்டது. அந்த வீட்டினை நோட்டம் விட்டு கொண்டே இருந்தேன். அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணுடன் காயத்ரியின் அப்பா வெளியே வந்தார். அந்த பெண்ணின் கையில் பெட்டி. இருவரும் பேசாமல் நடந்து நான் இருக்கும் இடம் தாண்டி சென்றார்கள். அவர்களை பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பெங்களூர் செல்லும் வாகனத்தில் ஏறினார்கள். என்னால் அதற்கு மேல் பொறுத்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நானும் ஏறி 'சார் இந்த வாகனம் இமயமலை போகாது' என்றேன். 'யார் நீ' என்றார். தொப்பி, கண்ணாடியுடன் யாராய் இருந்தா என்ன என்றேன். கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் பெண்கள் மத்தியில் மற்றொரு பெண்ணின் கணவனை கூட கணவனே கண் கண்ட தெய்வம் என நினைக்கும் பெண்கள் இருப்பார்களோ என அச்சம் தவிர்த்து தகராறு பண்ணுவதாகவே முடிவு செய்து இனி இவரை சும்மா விடக்கூடாது என நினைத்தேன். 'நீங்க இப்போ வீட்டுக்கு திரும்பலை, போலீசுல சொல்வேன்' என்றேன். வியாபாரியாச்சே அவர். அந்த பெண் 'இந்த சனியனை அடிச்சி விரட்டுங்க' என்றாள்.

நடத்துனரிடம் அவர் புகார் செய்ய, நடத்துனர் என்னை பேருந்தில் இருந்து கீழே வலுக்கட்டாயமாக தள்ளினார். கோபம் கொப்பளித்தது. அந்த நேரம் பார்த்து ஒரு போலிஸ்காரர் வந்தார். அவரிடம் சுருக்கமாக விபரம் சொன்னேன் என்பதைவிட ஒரு பெரிய பொய் சொன்னேன். ஒருவர் தனது மனைவியை கொலைசெய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போக இந்த பேரில் ஏறி அமர்ந்து இருக்கிறார் என்றேன். வந்து போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன் கொடு என சொல்லிவிட்டு போய்விட்டார். தொப்பி, கண்ணாடி கழற்றி மறைத்தேன். பெங்களூர் வாகனம் கிளம்பியது. ஒரு கல்லை எடுத்து அவர் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி எறிந்தேன். நான் எடுத்த வேகம், எறிந்த வேகம். எதுவுமே தெரியாதது போல மக்களுடன் மக்களாய் கலந்தேன். பேருந்தின் சத்தத்தையும் தாண்டி 'ஆ' எனும் அலறல் சத்தம் கேட்டது. பேருந்திற்கு எந்த சேதமும் இல்லை என்பதுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. பேருந்து நின்றது. பயமற்ற நிலை என்னுள் பரவி இருந்தது. ஒரு கடையில் சென்று நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் நபராக மாறி இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின்னர் பேருந்தில் இருந்து தலையில் கட்டுடன் அவரை இருவர் சேர்ந்து இறக்கினார்கள். அந்த பெண்ணும் உடன் இறங்கினாள். நிலைமை விபரீதம் ஆகி கொண்டு இருப்பது தெரிந்தது. பேருந்து கிளம்பியது.

நான் அருகில் சென்று பார்த்தேன்.  அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். முழித்தவர் விழித்தார். மீண்டும் கண்களை மூடினார். மீண்டும் விழித்தார். அங்கே சுற்றி இருந்தவர்கள் 'ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க' என்றார்கள். கைத்தாங்கலாக பற்றி கொண்டு ஒரு ஆட்டோவில் அவரை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றேன். தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். ஆஸ்பத்திரி வந்து இறங்கியதும் நீதான தகராறு பண்ணின பையன் என்றார் அந்த பெண். கல்லெடுத்து அடிச்சதும் நான் தான் என்றேன். பயந்து போனார்.

(தொடரும்)


Monday 26 March 2012

மறுபிறப்பு, நட்சத்திரங்கள், புரட்டல்கள்

எனது கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு வந்திருந்த ஒரு சாமியாரை பார்க்க சென்றேன். அவர் மிகவும் சாந்தமாக இருந்தார். நீங்கள் எல்லாம் ஒரு சாமியாரா? என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தார். நானும் தான் அவரை முறைத்து பார்த்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஜன்மத்தில் நீ பறவையாக பிறக்க கடவது என அவர் என்னைப் பார்த்து சொன்னதும் எனக்கு அவர் மீது கடும் கோபம் வந்தது. அவரை நோக்கி நான் நீங்கள் அடுத்த ஜன்மத்தில் மனிதனாகவே பிறக்க கடவது என்றேன்.

எனக்கே சாபம் விடுகிறாயா? உனது சாபம் எல்லாம் பலிக்காது என்றார். அப்படியெனில் நீங்க விடுத்த சாபம் பலிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றேன். எனது ஞான கண்களில் தெரிகிறது என்றார்.

வெட்கமாக இல்லை, இதோ அருகில் இருக்கும் எனது கிராமம் உங்கள் கண்ணுக்கே தெரியாது, இதில் எனது அடுத்த பிறப்பு பற்றியெல்லாம் தெரிகிறது எனும் புரட்டல் வேறு என சொன்னதும் சாந்தமாக இருந்த அவர் கோபம் கொப்பளிக்க எழுந்தார். கையில் வைத்திருந்த தண்ணீரை என் மீது தெளித்தார்.

எந்த ஊரில் திருடிய தண்ணீர் என்றேன். அவரை பார்க்க வந்திருந்த பலர் என்னை திட்டினார்கள், சத்தம் போட்டார்கள். அவர்களை நோக்கி சற்று அமைதியாக இருங்கள் என சொன்னேன். எவரும் கேட்கவில்லை. அந்த சாமியார், அவர்களை அமைதி என சொன்னதும் எல்லோரும் அடங்கினார்கள். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என நினைத்து கொண்டேன்.

இந்த தண்ணீர் கைலாய மலையில் இருந்து கொண்டு வந்தது என்றார். எப்போது கைலாய மலையில் இருந்து கிளம்பினீர்கள் என்றேன். காலம், நேரம் எல்லாம் எனக்கு இல்லை நான் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவர் என்றார். எனக்கு தலை சுற்றியது.

இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறுபிறப்பு எடுக்கின்றனவோ அது போலவே மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், ஊர்வன, பறப்பன எல்லாம் மறுபிறப்பு எடுக்கின்றன என்றார். நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுக்கிறதா? என்றேன். ஆமாம் என்றார். சாமியார் சயின்ஸ் பேசுகிறார் என சைலன்ஸ் ஆனேன் நான்.

இந்த பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்னால் நான் தூசியாகவும், துகளாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் காலமும் இல்லை, நேரமும் இல்லை. தூசியாய், துகளாய் இருந்த நான் இறுக்கமடைந்தபோது என்னுள் வெப்பம், அழுத்தம் எல்லாம் அதிகரித்தன. ஒளியற்று இருந்த நான் ஒலி எழுப்பி, ஒளி கொண்டேன் என்றார். நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு வேளை இவர் ஏதாவது பள்ளி கூடத்தில் ஆசிரியராக இருந்துவிட்டு மாணவர்கள் தொல்லை தாங்காமல் சாமியார் ஆகிவிட்டாரா எனும் ஐயப்பாடு என்னுள் நிலவியது.

அப்படி ஒளி ஒலி கொண்டு இருந்தபோது நான் நட்சத்திரமாக உருவாகினேன். அந்த நட்சத்திரம் தான் இன்று எல்லையற்று விரிந்து கிடக்கும் அனைத்து நட்சத்திரங்களும், அனைத்து உயிர்களும் என்றவர், ஒரு நட்சத்திரத்தில் இருந்து பல்லாயிரம் நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து கொண்டே இருப்பது போல ஒரு உயிரில் இருந்து பல்லாயிர மறுபிறப்பு நடைபெற்று கொண்டே இருக்கிறது என்றார். உயிர்கள் எல்லாம் பூமியில் மட்டும் தானே என எனக்கு அவரது தாடியை பிடித்து இழுத்து உலக நடப்புக்கு வா என சத்தம் போட வேண்டும் போல் இருந்தது.

நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து வேறொரு நட்சத்திரம் தானே உருவாகிறது என்னை எதற்கு பறவையாக பிறப்பேன் என்றீர்கள் என்றேன். ஒரு நட்சத்திரம் மறு நட்சத்திரம் என்பது போல ஒரு உயிர் மற்றொரு உயிர், இதில் பறவை, மனித செயல்பாடுகள் வேறு என்பது போல நட்சத்திரங்களின் செயல்பாடு வேறு என்றார். நீங்கள் எந்த பள்ளிக்கூடத்து சயின்ஸ் வாத்தியார், பூமியில் மாத்திரம் தானே உயிர்கள் என்றேன்.

புல்லாக இருந்த போதும் சாமியார். நான் ஒவ்வொரு பிறப்பிலும் சாமியார். இந்த அண்ட சாரங்கள் எல்லாவற்றிலும் உயிர்கள் உள்ளது என்றார். உனது கேட்கும் திறன் எப்படி ஒரு அளவுக்குள் சுருங்கியதோ அதைப்போலவே உனது பார்க்கும் திறனும் ஒரு அளவுக்குள் சுருங்கியது. அதனால் தான் தொலைநோக்கி எல்லாம் வைத்து கொண்டு தேடிக்கொண்டு அலைகிறீர்கள் அதுதான் சொன்னேன் எனது ஞான கண்களில் தெரிகிறது நீ பறவையாக பிறப்பாய் என. நீங்கள் சரியான புரட்டல் சாமியார் என்றேன்.

புரட்டல்கள் என்றால் கலவை. இந்த உடல் பல கலவைகளால் ஆனது. இசையில் இந்த புரட்டல்கள் அதிகம் பேசப்படும். ஒவ்வொரு தாளத்திற்கேற்ப இந்த புரட்டல்கள் வேறுபாடு அடையும் என்றார். சலனமே இல்லாத மக்கள் கண்டு நான் சலனப்பட்டேன். நீங்கள் அதிகம் பாவம் செய்வதால் தான் அடிக்கடி பிறப்பு எடுக்கிறீர்கள் என்றேன்.

பாவம் செய்பவர்கள் தான் மறுபிறப்பு எடுப்பதில்லை. ஒரு நட்சத்திரம் தன்னில் இருந்து வேறு நட்சத்திரம் உருவாக்க முடியாத பட்சத்தில் அவை ஒன்றுமில்லாமல் போகும். அது போலவே மறுபிறப்பு எடுக்க முடியாத பிறவிகள் ஒன்றுமில்லாமல் போகும் என்றார்.

எனக்கு அவர் அப்படி சொன்னதும் ஒரு ஆசை வந்தது. அப்படியெனில் என்னை கருட பறவையாக பிறக்க வழி செய்வீர்களா என்றேன். எதற்கு என்றார். நான் ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் நாராயணனுக்கு பணி செய்யவே விருப்பம் என்றேன்.

சாமியார் சிரித்தார். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.

எனது மனதை இவர் எப்போது படித்தார்? துணுக்குற்றேன். கட்டிலில் இருந்து விழுந்த வலி இன்னும் போகாமலே இருந்தது.



Friday 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன். 

Tuesday 20 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 6

வந்த அழுகையை அடக்கிக்கொண்டு 'சார்' என்றேன் மீண்டும். என்ன என்பது போல் அவரது பார்வை சிவந்து இருந்தது. 'சார் நம்ம உயிரை நாமளே எடுத்துகிரதுக்கு எந்த உரிமையும் இல்லை' என்றேன். 'ம்ம்' என்றார். 'வலி பொறுக்க முடியாம இப்படி ஒரு வழி தேடிக்கிறது தப்புதானே சார்' என்றேன். 'ம்ம்' என்றார். வேறு எதுவும் பேசவில்லை. எனக்கு வேறு எதுவும் பேசத் தோணவில்லை. அன்று இரவு தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தேன். என் அப்பாவும் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் மட்டும் தூங்கியது போலவே தெரியவில்லை.

காலை எழுந்ததும் அவர் குளித்து தயாரானார். நாங்கள் எங்களது வீட்டில் சென்று குளிக்கலாம் என நினைத்து கொண்டு அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். சரி என ஒரு பெட்டியுடன் எங்களுடன் வந்தார். வீட்டில் அம்மாவும், காயத்ரியும் அவளது அக்காவும் எழுந்து இருந்தார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறை தினமாக இருந்தது அசௌகரியத்தில் சற்று சௌகரியமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவர் காயத்ரியையும், அவரது அக்கா சுபலட்சுமியையும் பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் வந்ததும் வாங்க, வக்கீல் ராமலிங்கத்தை பார்க்கனும் என்றார். நான் புரியாமல் அங்கேயே நின்றேன்.


எனது அப்பா குளித்து முடித்து இருந்தார். நான் அவசர அவசரமாக குளித்தேன். நான் குளித்து வெளியே வருமுன் அவர்கள்  அனைவரும் அங்கே இல்லை. எனது அம்மா மட்டும் இருந்தார். 'எங்கேம்மா அவங்க' என்றேன். வக்கீலைப் பார்க்க போய் இருக்காங்க, உங்க அப்பாவும் கூட போய் இருக்கார். ரொம்ப பாவம் கதிரேசு அந்த பொண்ணுங்க என்றார் அம்மா. 'என்னம்மா என்றேன்' ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை, காலையில சாப்பிடறதுக்கு முன்னால இப்படி அவசரமா கிளம்பி போய்டாங்க. வா நீயாவது வந்து சாப்பிடு என்றார் அம்மா. 


வக்கீல் ராமலிங்கம் எங்க இருக்காருன்னு தெரியுமாம்மா என்றேன். எத்தனை ராமலிங்கம் இருப்பாங்களோ என்றார் அம்மா. என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் இருந்தது. அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தேன், அதை வீட்டிலேயே விட்டு போய் இருந்தார். இனி அவர்கள் வரும் வரை காத்து இருக்கவா வேண்டும் என அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு அக்கம் பக்கத்தில் கேட்கலாம் என கிளம்பினேன். வீட்டுல இரு முருகேசு, எங்க போகப் போற, வந்ததும் பேசலாம் என சொன்னார் அம்மா. அம்மாவின் வார்த்தையை மீறுவதற்கு பயமாக இருந்தது. ஒருவேளை நான் வெளியே செல்ல, அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், நினைக்கவே ஈரல், இதயம் எல்லாம் நடுங்கியது. 


'அம்மா, அவர் சாகப்போறதா சொல்லி இருந்தாரும்மா' என்றேன் நான். அம்மா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். அவர் காயத்ரியோட அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி சாகப்போறதா சொன்னாரும்மா என்றேன் மீண்டும். 'என்னடா பைத்தியகார முடிவா இருக்கு, இந்த பொண்ணுகளை நம்மளை அதுக்குதான் பார்த்துக்க சொன்னாரா. உங்க அப்பாவும் கூட போய் இருக்காரே. உங்க அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கவே போதும் போதும்னு ஆயிருச்சி. இதுல இவர் இப்படி பண்ணிட்டா நம்ம மேல கொலை குத்தம் வந்துறப்போகுது' என்றார் அம்மா. அம்மாவின் பயம் எனது பயத்துடன் தொற்றியது. 


'சத்தியம், நேர்மை, உண்மை, நீதி, தர்மம் எல்லாம் இந்த உலகத்துல இன்னும் இருக்காம்மா' என்றேன். 'அதெல்லாம் எப்பவுமே உலகத்துல இருந்தது இல்லைடா முருகேசு, அவங்க அவங்க வசதிக்கேற்ப அதது மாறும்' என்றார். நான் அம்மாவிடம் பேசிய பொய்கள் என்னை அரித்தன. 'அப்படின்னா நீ நேர்மையா இருந்தது இல்லையாம்மா' என்றேன் நான். அம்மா என்னையவே பார்த்தார். 'இல்லைடா முருகேசு' என்றார். 'ஏன்மா உண்மைய பேசினா நேர்மை தானே' என்றேன் நான். 'பெரிய பெரிய விசயம் எல்லாம் கேட்கற, நம்ம வீட்டுல இருக்கற புத்தகங்களை படி, ஓரளவுக்கு எல்லாம் புரியும்' என்றார். 


மாடி அறைக்கு சென்றேன். புத்தகங்களை தள்ளி தள்ளி பார்த்தேன். தற்கொலையும், விரும்பி சாதலும் என்றொரு புத்தகம் இருந்தது. எடுத்து புரட்டினேன். 'வலி, வேதனை, அவமானங்கள் தாங்க இயலாமல், இதன் காரணமாக வாழப் பிடிக்காமல் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவல நிலையை மனிதர்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்' என ஓரிடத்தில் எழுதி இருந்தது. 'ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்தல் என்பது கொடிய செயலாகும், ஆனால் யூதனசியா எனப்படும் முறையில் வலி வேதனை உள்ளவர்களின் வாழ்க்கையை மருத்துவர்களே முடித்து வைக்கலாம் எனும் நிலை சில நாடுகளில் நிலவி வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். உண்ணாவிரதம் மூலம் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்வது கூட அறிவற்ற செயலாகும். உண்ணாவிரதத்தின் மூலம் அடையும் சாவுக்கும், தற்கொலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு எனினும் இறுதியில் தன்னை தானே மாய்த்தல் என்பது தவறு. கொத்து கொத்தாக மனிதர்கள் போரில் கொல்லப்படுவதும், ஒரு இனம், ஒரு மதம் பிடிக்காமல் அதை சேர்ந்தவர்களை உயிர் துறக்க செய்வதும் கருணை கொலை என்றே கருத சொல்வது மடமையாகும்'.

இதை எல்லாம் வாசித்து கொண்டிருக்கும்போதே நாம் நமது உடலை முறையாக பேணி காக்காமல் நோய் வாய்ப்பட்டு இறப்பது கூட ஒருவகையில் உண்ணாவிரதம் போன்ற சாவுதான் என எண்ணத் தோணியது. அந்த புத்தகத்தில் ஆழ்ந்து படித்தேன். அவ்வப்போது அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என கீழே சென்று பார்த்து வந்தேன். 'ஓரிடத்தில உட்கார்ந்து படி என அம்மா சொன்னதும், கீழேயே அமர்ந்து படித்தேன். புத்தகத்தில் இறுதியாக 'இந்த புத்தகம் ஒரு மரத்தின் மரணத்தில் ஜனித்திருக்கிறது' என்று முடித்து இருந்தது. எனக்கு அந்த வரிகள் விளங்கவே இல்லை. அம்மாவிடம் கேட்டேன்.

'எல்லாம் கர்ம வினை' என்றார் அம்மா. 'கர்ம வினை அப்படின்னா என்னம்மா' என்றேன். 'நாம செய்ற செயல் பொறுத்தே அதனோட வினை இருக்கும்' என்றார். 'புரியலைம்மா' என்றேன். அந்த புத்தகம் உருவாக காகிதம் வேணும். அந்த காகிதத்துக்கு ஒரு மரம் வெட்டப்பட்டு இருக்கும்'. காகிதம் தேவை இல்லைன்னா, அந்த மரம் காகிதத்துக்காக வெட்டப்பட்டு இருக்காது' என்றார்.

'அப்படின்னா காயத்ரியோட அப்பா சத்தியம் செய்து தராம இருந்து இருந்தா தன்னோட சாவு பத்தி நினைச்சி இருக்க மாட்டாரா' என்றேன் நான். 'தெரியலை முருகேசு' என்றார் என் அம்மா. 'எதுக்கு தெரியலை' என்றேன் நான். 'ஒருவேளை அவரோட மனைவி மேல இருக்கற பாசத்தால,  அவரோட மனைவி இல்லாத உலகம் நமக்கு எதுக்குன்னு நினைக்கலாம்' என்றார். 'அப்படியும் இருக்காங்களா' என்றேன் நான்.

'எப்படியும் இருப்பாங்க' என்றார் என் அம்மா! மதிய வேளை நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் இன்னும் காணவில்லை. புத்தகம் எனது நேரங்களை தின்று முடித்து இருந்தது. ஒரு மணி நேரம் பின்னர் அவர்கள் அனைவரும் வந்தார்கள். 'இதை பத்திரமா வீட்டில் வை' என அப்பா எனது அம்மாவிடம் தந்தார். பின்னால் ஒரு வாகனம் பல பொருட்களுடன் வந்து இறங்கியது! எனக்குள் அதிர்ச்சி மின்னலாக இறங்கியது.

(தொடரும்)


Thursday 15 March 2012

குரான் பேசுமா அறிவியல்

ஒரு நூலினை நாம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு வித எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு நூல் பலரால் போற்றப்பட்டு, பலரால் நம்பப்பட்டு வரும் பட்சத்தில் அந்த நூலில் கூறப்படும் கருத்துகளை மறுத்து பேசுவது என்பது நம்பிக்கையாளர்களின் மனம் நோக செய்வதாகும்.

எத்தனையோ அறிவியல் வல்லுனர்கள், முனிவர்கள் எழுதிய நூல்கள் இருந்தாலும், அதிக மக்களால் அறியப்பட்ட நூல் என்றால் பகவத் கீதை, குரான், பைபிள் என்றே சொல்லலாம். இவை மதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருந்தாலும், வாழ்க்கை முறைகளை சொல்வதாகவே கருதப்பட்டு இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குரான், பைபிள் போன்ற நூல்கள் தங்களது வலிமையை இழக்கத் தொடங்கின என்றாலும் இன்னமும் இந்த நூல்கள் பலராலும் பின்பற்றப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. தாய் வழித் தோன்றல்கள், தந்தை வழித் தோன்றல்கள் போல இந்த நூல்கள் இறைவழித் தோன்றல்கள் என்றே கருதப்பட்டு வருவது இந்த நூல்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தத்தம் இறைவனை நம்புபவர்கள் இந்த நூல்களை ஒருபோதும் எதிர்த்து பேச முற்படமாட்டார்கள். ஆனால் வெவ்வேறு வழிப்பாதை கொண்டவர்கள் ஒரு கொள்கையின் மீது அவதூறு பேசி தமது கொள்கையே சிறந்தது என தமது வழிப்பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது என்றே பெருமை பட்டு கொள்வார்கள். இதில் பகவத் கீதையை நாம் சற்று தள்ளி வைத்துவிடலாம். இதற்கு காரணம் அந்த நூல் அறிவியல் பேசுகிறது என இதுவரை எவரும் சொன்னதில்லை, பகவத் கீதை யோக நிலைகளை பறைசாற்றும் ஒரு இலக்கியம். அதற்கடுத்து பைபிள், இதுவும் அறிவியல் பேசுவதாக எவரும் சொல்வதில்லை. ஆனால் அவ்வப்போது உலகம் அழிவதாக சொல்வதாக சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி குரான் அறிவியல் பேசுவதாக பல அறிவியல் அறிஞர்கள் முதற்கொண்டு படித்து தெளிந்த பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது. குரான் அறிவியல் பேச வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அது அறிவியல் நூலா, வாழ்வியல் நூலா? என்று இதுவரை அறிந்தது இல்லை.

முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை. குரானும், நபிகள் வாக்கும் பிரித்தே கையாளப்பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும் படிப்பறிவு என்பது எதை வைத்து சொல்வது என்பதையும் எவரும் அறிந்தாரில்லை. குரான் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காலகட்டங்களில் அரேபிய நாடுகள் அறிவியலில் செழித்தோங்கி இருந்தன. அதன் விளைவாக கூட சில வசனங்கள் குர்ஆனில் வைக்கப்பட்டு இருக்கலாம், எனினும் குரானின் நோக்கம் அறிவியல் பேசுவதா?

எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.

ஆனால் மனதை நிர்மூலமாக்குதல் என முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். அதாவது குரான் ஒரு நூல் மட்டுமே. இப்போது முகம்மது நபிகள் ஒரு இறைத்தூதர், அந்த நூல் முகம்மது நபிகளுக்கு இறைவன் சொன்னது என்பதெல்லாம் இரண்டாம் நிலை. இந்த இரண்டாம் நிலை எல்லாம் நாம் அறிந்து கொண்டு அந்த நூலினை அணுகும்போது நமது மனநிலை, ஒன்று இறைவன் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தால் நேசத்தோடும், இரண்டாவது இறைவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் வெறுப்போடும் அணுகத் தோன்றும். இது மனித இயல்பு. எந்த ஒரு முதல் புத்தகமும், எழுதுபவருக்காக வாங்கப்படுவதில்லை. ஆனால் அதற்குப்பினர் அந்த நபரால் எழுதப்படும் புத்தகங்கள் அவருக்காகவே வாங்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலை எல்லாம் குரானுக்கு இல்லை. குரான் நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

எனக்கு ஒரு நண்பர் அரபு வசனங்கள் கூடிய தமிழ் வசனங்கள் கொண்ட குரான் தந்தார். முதலில் படிக்கும்போது எதற்கு இறைவன் இப்படி நபிகளிடம் சொன்னார், இதை எல்லாம் இறைவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றே தோணியது. எப்போது மனதை நிர்மூலமாக்குகிறேனோ அப்போது குரான் வாசிக்கிறேன் என நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்களால் மனதை இனிமேல் நிர்மூலம் ஆக்க முடியாது. இதை செய்ய வேண்டும் எனும் அணுகுதல் இருக்கும்போது அதை செய்து விட்டோமா என சரி பார்க்க தோன்றும், எனவே மனதை நிர்மூலமாக்குதல் அவசியம் இல்லை. இறைவன் தந்ததாகவே படியுங்கள் என்றார். அந்த மன நிலை இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அறிவியல் மூலம் மேலும் பல விசயங்கள் அறிந்து கொள்ளவே விருப்பம் உண்டு, அதுபோலவே இந்த குரானும்.

குரான் - இறைவன் தந்தது.


ஆமாம், குரானை எழுத சொன்னவரே இறைவன் சொன்னதாய் சொன்னது. 

Wednesday 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)