Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Wednesday 5 August 2015

தேடிக்கொண்ட விசயங்கள் - 7 ஆர் என் ஏ உலகம் இல்லை

பகுதி - 6

ஒன்று கிடைக்கும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், பிறகு வேறொன்று கிடைக்கும் உடனே எடுத்த முடிவை பரிசீலனை செய்வோம். எடுத்த முடிவுக்கு எதிராக எது தோன்றினாலும் அதன் தன்மையை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொண்டு பயணிப்போம். இதுதான் இந்த உலகத்திற்கு அறிவியல் சொன்ன நீதி.

அறிவியல் எதற்குமே அவமானப்பட்டது இல்லை. உண்மையைச் சொல்ல எதற்கு அவமானம், வெட்கம், தயக்கம். பல காலங்களாக இந்த உலகம் ஆர் என் ஏ மூலம் உருவாகி இருக்க இயலும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதற்கான ஆதராங்கள் என பல காட்டப்பட்டன. நியூக்ளிக் அமிலங்களை தாமாக ஒருங்கிணைத்து உருவாகிய ஆர் என் ஏ  பிற்காலத்தில் டி என் ஏ வாக பரிமித்தது என்பதே நம்பபட்டவந்த செய்தி. இப்போதும் கூட இந்த புரதங்கள் உருவாக டி என் ஏ  செல்லின் கருவில் இருந்து வெளிவர இயல்வதில்லை. மாறாக டி என் ஏ வில் இருந்து ஆர் என் ஏ கருவில் நகல் எடுத்து வெளியே வந்து ரைபோசொமில் புரதங்கள் உருவாக்குகின்றன. எனவே இதற்கு முன்னர் இந்த உலகில் உயிரினங்கள் தோன்ற இந்த ஆர் என் ஏ  காரணம் என எண்ணி ஆர் என் ஏ  உலகம் என்று ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த நியூக்ளிக்  அமிலங்கள் உருவாக வினையூக்கிகள் தேவை. இந்த வினையூக்கிகளை ஆர் என் ஏ தான் செயல்படுத்தி வந்ததாக  நம்பினார்கள். எப்போது புரதம் இந்த வினையூக்கி வேலையை தானே செய்ய ஆரம்பித்ததோ அப்போது இந்த ஆர் என் ஏ  உலகம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ரைபோசோம்கள் உருவான காலகட்டமே ஆர் என் ஏ  முடிவுக்கு ஒரு காரணம். ஆனால் இதை எல்லாம் மறுத்து ஒரு அறிவியல் அறிஞர் சொல்லி இருப்பது என்னவெனில் நிச்சயம் இந்த ஆர் என் ஏ  உலகம் என்று ஒன்று இந்த உயிர்களைத்  தோற்றுவிக்க காரணம் இல்லை என அறிவித்து இருக்கிறார்.

ரைபோசோம்களை ஆராய்ந்து பார்த்த இவர் இந்த ரைபோசோம்கள் முன்னர் வினையூக்கி போல செயல்பட்டு அமினோ அமிலங்களை இணைத்து புரதம் உருவாக்கி வந்து இருக்கின்றன. இது எல்லா உயிரிகளிலும் தென்படுகிறது. மேலும் இந்த ரைபோசோம்கள் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயலாற்றவில்லை மேலும் புரதம் போல இவற்றுக்கு எவ்வித வடிவமும் கிடையாது, ஆகவே இந்த ரைபோசோம்  ஒரு பானை போல செயல்பட்டு அதில் என்ன சேர்கிறதோ அதைவைத்து ஒன்று உண்டாக்கப்படும். எனவே இந்த ரைபோசோம்கள் ஒன்றும் இயற்கைத் தேர்வு மூலம் தம்மை முன்னிலைபடுத்தியவை அல்ல, மாறாக மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கியவை என எண்ணம் தோன்றுகிறது என்றார்.

ஆர் என் ஏ  மற்றும் புரதங்கள் தாமாக உருவாகக்கூடிய சாத்தியம் இல்லை என முன்னர் சொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட 14 அமினோ அமிலங்கள் மற்றும் சில புரதங்கள் தாமாகவே உருவாகும் தன்மை கொண்டவை. எனவே ஆர் என் ஏ  உலகம் என்பதை விட ஆர் என் ஏ/புரதம் உலகம் சரியாக இருக்கும் என்கிறார்.

ஆர் என் ஏ  உலகம் :

ஆர் என் ஏ  தானாக நியூக்ளிக் அமிலங்கள் மூலம் உருவாகி தாமே பெருகி அதில் இருந்து ரைபோசோம்கள் உருவாக்கி பின்னர் அந்த ரைபோசோம்கள் ஆர் என் ஏ தற்போது போல புரதங்களாக மாற்றியதும் அந்த புரதங்கள் வினையூக்கிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

ஆர் என் ஏ  அல்லாத உலகம் :

இந்த நியூக்ளிக்  அமிலங்கள், அமினோ அமிலங்கள் எல்லாம் கூடி ஆர் என் ஏ வுக்கு முந்தைய ஒன்றையும் அதே போல புரதங்களுக்கு முந்தைய ஒரு புரதம் உண்டாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கின. அந்த அடிப்படை ரைபோசோம்கள் வினையூக்கியாக செயல்பட்டு  ஆர் என் ஏ  மற்றும் புரதம் உருவாக்கின. அதற்குப் பின்னர் ஆர் என் ஏ  மற்றும் புரதம் ஆர் என் ஏ மூலக்கூறுகளை பெருகச் செய்தன. பின்னர் இந்த அடிப்படை ரைபோசோம்கள் ரைபோசோம்களாக  மாறி ஆர் என் ஏ  வை புரதம் உருவாக வழி செய்தன என்கிறார்கள்.

 இந்த உலகம் உருவாக ஆர் என் ஏ  மூலக்கூறு காரணம்  இல்லை என்றால் இந்த புரதம் மற்றும் ஆர் என் ஏ  ஒரு சேர அடிப்படையில் தானே தோன்றி இருக்க வேண்டும் என அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கி அது ஆர் என் மற்றும் புரதம் உருவாக்கும் வல்லமை கொண்டவையா என சோதிக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

சற்று பொறுங்கள், இந்த பிரபஞ்சத்தின் தீராத வலியைப் போக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

(தொடரும்) 

Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்






Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன். 

Saturday 18 July 2015

அவளது சொந்தம்

வேண்டுவன எல்லாம் வேண்டுவன
விடுவன எல்லாம் விடுவன
தான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு 
ஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை

ஊர்வன எல்லாம் ஊர்வன

பறப்பன எல்லாம் பறப்பன 
கல்வியறிவு களவு அறிவு என 
எந்த அறிவும் கொண்டதில்லை 

நடப்பன எல்லாம் நடப்பன

கடப்பன எல்லாம் கடப்பன
கவலை ஆட்டுவித்து கவலை புரிந்து 
காலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன

அவளது சொந்தம் என்று திரிவன

அவனது சொந்தம் என்று வருவன
ஒன்றுக்கொன்று வேறுபட்டு உழன்று 
உடைந்தும் ஒட்டுறவாக இருப்பன

சாமி கண்டேனென சொல்வன 

பொய்யாய் உலகம் வெல்வன
தானே உலகமும் சுற்றமும் என மறந்து 
ஏதோ எவரோ என ஓடி ஒளிவன

அழுவன எல்லாம் சிரிப்பன

சிரிப்பன எல்லாம் அழுவன
இன்பம் மட்டுமே கருதி வாழ்வில் 
துன்பம் கண்டால் நடுங்குவன

ஓடுவன எதையோ நாடுவன

நாடுவன எதையோ தேடுவன
மறதியில் எதையும் மறந்து திரிந்து
ஏதும் அறியாது சிவனாகி கிடப்பன

கண் பார்ப்பன காது கேட்பன

வாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன
காலமெல்லாம் இதையே நினைந்து

நினைந்து மூளை தோல் உணர்வன 
எது காப்பன எது தோற்பன 
அது அழிவன அதுவே ஆக்குவன
எல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும் 
வழி மாறாது இப்படியே இருப்பன 

எல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது
போனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ?

Wednesday 15 July 2015

பூமி சுற்றலும் அவள் சுற்றலும்

எங்கே சுற்றுப் பார்க்கலாம் என சுற்றச் சொன்னவுடன் சரசரவென சுற்றி தலை கிறுகிறுத்துப் போச்சு என எல்லாமே தன்னைச்சுற்றி சுற்றுவதாக சொன்னான்.  ஆமாம் இந்த பூமி எப்படி சுற்றுகிறது எனக் கேட்டால் சுற்றவேண்டும் எனும் வேண்டுதல் போல என சொல்லிவிட்டுச் சென்றான். அவனை மீண்டும் அழைத்து அப்படி என்ன வேண்டுதல் என்றேன். மனிதர்கள் பாப பரிகாரத்திற்கு பிரகாரம் சுற்றுவது போல என்றான். எதையுமே குதர்க்கமாக சொல்லிச் செல்லும் அவனை எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம். திடீரென சிறகுகள் இல்லை என்றால் பறவைகள்  இல்லைதானே என்பான். எத்தனையோ முறை என்ன என்னவோ சொல்லிவிட்டுப் போவான். எதற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என எனக்கு அவனுக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என எண்ணிக்கொள்வேன். ஆனால் இன்றுவரை அவன் அப்படி வேறு எவரிடமும் பேசியது இல்லை. 

என்னை நீ பைத்தியம்னு நீ நினைச்சல, இல்லைன்னு சொல்லாத எதுக்குனா உன்னை நான் பைத்தியமுன்னு நினைச்சேன் என்றான். சரி இருந்துவிட்டுப் போகட்டும். இந்த பூமி எப்படி சுற்றுகிறது என சொல்லிவிட்டுப் போ என்றேன். நான் பேசும்போது நீ குறுக்கேப் பேசக்கூடாது என கட்டளை இட்டான். நான் கேள்வி கேட்கலாமா என்றேன். உனக்கு ஒருதரம் சொன்னாப் புரியாது, கேள்வி கேட்கறது பேசறதுல ஆகாதா என்றவுடன் சரி என அமைதி ஆனேன். 

ஆமா, நீ அந்த புள்ளை  பின்னாலே சுத்திட்டு திரியற உனக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லையா என்றான். அவ என்னோட காதலி அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம் என்றேன். அவதான் உன்னை சுத்தி வரணும் ஆனா நீ அவளைச் சுத்தி வரியே. என்னைக்காவது நிலாவை சூரியன் சுத்தி வந்து இருக்கா என்றான். அவள் சூரியன், நான் நிலா அப்படின்னு வைச்சிக்கோ, விசயத்துக்கு வா என்றேன். இப்போ என்னோட தொனி வேறமாதிரி இருக்கும். அதனால சொல்றதை மட்டும் கேளு என அவன் ஆரம்பித்தான். 


துகள்கள் தூசிகள் சேர்ந்த போதே இந்த சுற்றுதலை தாம் உருவாகும் முன்னரே நட்சத்திரங்கள் கோள்கள் கற்றுக்கொண்டுவிட்டன. நேர்உந்து விசை. கோண உந்துவிசை என இரண்டு விசைகள் உண்டு. நேர்  உந்து விசை ஒரு பொருளின் வேகம் மற்றும் நிறை மட்டுமே சம்பந்தப்பட்டது. கோண உந்து விசை ஒரு பொருளின் நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோண வேகம் சம்பந்தப்பட்டது. 



                                                                               நன்றி கூகிள் 

நேராக எறியப்பட்ட பொருள் தான் கொண்ட நேர் உந்து விசையால் சுற்றிச்சுற்றி வராது. நேராக ஓரிடத்தில் சென்று விழும். வட்டப்பாதையில் நேர் எதுவும் கிடையாது. இது நேர் உந்து விசைக்கு உண்டானது. 


எப்போது நேர் உந்து விசையானது கோண உந்து விசை ஆகிறதோ அப்போது  எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டு இருக்க அந்த பொருளானது சீராக சுற்றிக்கொண்டே வரும்.அப்படித்தான் கோள்கள் உருவாக காரணமாக இருந்த இந்த துகள்கள் தமக்குள் சுற்றுத்தன்மையை உண்டாக்கின. "They started with spin and still spinning" அப்படி சுற்றியதால் உருண்டை வடிவம்தனை கோள்கள் கொண்டது. கோண உந்து விசை. பூமி இப்படித்தான் சுற்றுகிறது. 

எந்த ஒரு அணுவிலும் உள்ள எலக்ட்ரான்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. அவை புரோட்டான்களை மையம் கொண்டு சுற்றுபவை. சுற்றும்போது அவை ஒரே இடத்து நிலை கொள்வதில்லை. புரோட்டான்கள் கூட சுற்றுபவைதான் +1/2 -1/2 சுற்றுக்கொண்டவை.

தன்னைத்தானே சுற்றி சூரியனை சுற்றுவது பூமி. பூமியின் சுற்றுப்பாதையை பிற கோள்கள் நிலா சூரியன் இவற்றின் விசைகள் கூட தீர்மானிக்கின்றன. நிலாவானது பூமித் தன்னைத்தானே சுற்றுவதன் வேகத்தை வருடத்திற்கு இத்தனை வேகம் என குறைத்து பாதிக்கச் செய்கிறது. காலப்போக்கில் நாட்கள் நீள வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் நாள் என்பது ஆறு மணிநேரம். 

                                                                                நன்றி கூகிள் 





மேலே காட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளதுபோல மையநோக்கு விசை (Centripetal force), மையவிலக்கு விசை (centrifugal force)  ஈர்ப்பு விசை (gravitational force) கோண உந்தம் (angular momentum) என்பதெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்த செயற்கை கோள் (satellite) பூமியைச் சுற்றிவருகிறது. நிலா மற்றும் பூமிக்கும் அதே நிலை எனினும் தனக்குள் இருந்த இருக்கும் Angular momentum (கோண உந்தம்) ஒன்றுதான் இந்த சுற்றும் கலையை பூமிக்கு கற்றுத்தந்தது.




Friday 10 July 2015

நுனிப்புல் பாகம் -3 9

பகுதி - 8

9. மரபியல் உலகம்

இவ்வுலகில் இந்த குழந்தைகள் விசித்திரம். எப்படி குழந்தைகள் ஒரு விஷயத்தை அறிந்து கொள்கின்றன எப்படி ஒரு பழக்க வழக்கத்தை பின்பற்றுகின்றன என்பது மற்றொரு அதிசயம். பசிக்காக மட்டுமே குழந்தை. பின்னர் தனக்கு இன்னது தேவை என கருதி அழும் குழந்தை. குழந்தைகள் உலகம் புரிந்து கொள்ள இயலாது.

இரட்டைக் குழந்தைகளுக்கு எல்லாவித மரபணுக்கள் ஒரேமாதிரி இருந்தாலும் அவர்களது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கும். சூழ்நிலையானது குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாறுபாட்டினை உண்டாக்கும். வாசன் இந்த இரண்டு குழந்தைகள் எப்படி வளர்ந்து என்னமாதிரியான மனிதர்களாக உருவாகி வருவார்கள் என யோசித்தான்.

மறுநாள் சாரங்கன் நேராக விநாயகம் பெரியவர் வீட்டிற்கு வந்து இருந்தார். விநாயகம் அவரை வீட்டுக்குள் வரவிடாமல் மந்தையில் சென்று பேசலாம் என அழைத்துச் சென்றார்.

''அவ்வளவு கோபமா உனக்கு''

''சாரங்கா, நீ பண்ணி இருக்கிற காரியம் தெரியுதா, இன்னும் நீ மாறலை''

''எனக்கு சம்பந்தம் இல்லை, இல்லைன்னா உன்னை எதுக்கு வந்து பார்க்கபோறேன்''

''சொல்ல வந்த காரியத்தைச் சொல்லு''

''இங்கே நிலம் விலைக்கு வாங்கணும்''

''நான் தரமாதிரி இல்லை, நீ வேணும்னா இங்கே யார் தராங்கனு கேட்டு வாங்கிப்போடு. எனக்கு எந்தவித ஆட்சேபணை  இல்லை''

''அவங்க வந்தப்ப நீ அப்படி சொல்லி இருக்கலாமே, எதுக்கு முத்துராசு அவங்க மேல கையை நீட்டினான். அதுதான் அவங்க கொலைபண்ண முயற்சி பண்ணி இருக்காங்க''

''அவங்க என்ன பேசினாங்க, நீ என்ன பேச சொல்லி அனுப்பின, வாசன் மேல அவங்க காட்டின மரியாதை. சாரங்கா உன்கிட்ட எனக்குப் பேச எதுவும் இல்லை''

விநாயகம் விறுவிறுவென அங்கிருந்து சென்றார். சாரங்கனை நோக்கி சிலர் யாருமே உனக்கு நிலம் இங்கே தரமாட்டாங்க, பேசாம வேற ஊருல நிலம் வாங்கிப்போட்டு வாழுற வழியைப் பாரு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முத்துராசு அங்கே வந்தார்.

''இன்னும் இங்கதான் திரியிற''

''ராசு, உன்னோட ஆட்டத்தை எல்லாம் வேற யார்கிட்ட வேணா வைச்சிக்கோ''

''இப்ப நீ கிளம்பலை, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. ஊர்த் துரோகி''

சாரங்கன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவர் இனி இந்த குளத்தூர் பக்கம் வரக்கூடாது என்கிற நினைப்புடன் போனாலும் மனதில் ஏற்பட்ட அவமானம் அவரை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேணும் என எண்ணிக்கொண்டே இருக்கச் செய்தது. வாசன் அவரை வழியில் கண்டான்.

''ஐயா, என்ன இந்தப்பக்கம்''

''நிலம் வாங்கலாம்னு வந்தா யாரும் மரியாதை தரல, அந்த விநாயகம் என்னை ஒரு மனிசனா கூட மதிக்கமாட்டேன்கிறான். இந்த ராசு என்னை ஒரு எதிரியாகவேப் பார்க்கிறான். நீ என்ன என்னை சொல்லப்போற''

''உங்களை என்ன சொல்லப்போறேன் ஐயா. நீங்கதான் இன்னும் என் மேல கோவத்தில இருக்கீங்க. எப்படியும் நீங்க திரும்பி வரத்தான் போறீங்க. ஒவ்வொருமுறை ஏதேனும் திட்டம் இல்லாமலா வரப்போறீங்க. நிலம் வாங்குற அளவு உங்களுக்கு காசு ஏது''

''நீயும் என்னை எதிரியாப் பார்க்குற. எனக்கு காசு எப்படி வந்ததுனு உனக்கு கவலை வேணாம். நிலம் தர முடியுமானு சிலர்கிட்ட கேட்டு எனக்கு தகவல் சொல்லு, நான் வந்து வாங்கிக்கிறேன்''

''எனக்குத் தெரிஞ்சி உங்களுக்கு யாரும் நிலம் தரமாட்டாங்க. உங்களோட செய்கை எல்லாம் நல்லா இல்லை ஐயா''

''வாசா, உன்னை நான் எப்படியும் ஒழிச்சி கட்ட நினைச்சி இருந்தா அதை என்னைக்கோ செஞ்சிருக்க முடியும். எனக்கு அது தேவை இல்லை.''

''வேற என்னதான் உங்க எண்ணம்''

''நானும் இந்த ஊருல வாழணும். என்னை ராசு நீ அந்த விநாயகம் எல்லோரும் சேர்ந்து வெளியே அனுப்பிட்டீங்க''

''நீங்கதான் போனீங்க. மறந்துரவேணாம்''

முத்துராசு அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார்.

''எனக்குத் தெரியும் நீ இப்படிதான் பண்ணுவ''

கல் ஒன்றை எடுத்து சாரங்கனின் பக்கத்தில் எறிந்தார். சாரங்கன் படும் கோபம் கொண்டவராக அனுபவிப்பீங்க என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

''என்னண்ணே இப்படி பண்றீங்க''

''வாசா, உனக்குத் தெரியாது. இவன் விஷம். சரி நான் தோட்டத்திற்குப் போறேன்''

''வீட்டுக்கு வரை போயிட்டு வரேன்ணே''

வாசன் நேராக ஐவரதன் அஷ்டவரதன் இருவரையும் பார்க்க சென்றான்.

பூங்கோதையிடம் எப்படி இருவரையும் அடையாளம் காண்பாய் என்றான். ஐவரதன் வலது கையில் கட்டப்பட்ட கயிறு, அஷ்டவரதன் இடது கையில் கட்டப்பட்ட கயிறு என அடையாளம் காட்டினாள்.

நமது மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் இரண்டு இரண்டாக இருக்கும். இந்த மரபணு ஒன்று செயல்பாட்டு தன்மையும். மற்றொன்று அடங்கிய தன்மையும் கொண்டு இருக்கும். எந்த மரபணு வெளிப்படுகிறதோ அதன் குணாதிசயம் வெளிப்படும். இப்போது இந்த இரண்டு குழந்தைகளிடம் உள்ள மரபணு ஒருவருக்கு ஒன்று வெளிப்பட்டும், மற்ற குழந்தைக்கு மற்ற மரபணு வெளிப்பட்டும் இருந்தால் அதுவே வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருக்கும்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட பழக்கம் உருவாகும் என இந்த மரபணுக்கள் தீர்மானிக்க இயலது எனினும் சில அடிப்படை இயல்புகள் மாற வாய்ப்பு இருக்கும் என்றே வாசன் நினைத்தான்.

''ரெண்டு பேரும் எதிர்மாறான குணம் கொண்டு இருந்தா என்ன செய்வீங்க பூங்கோதை''

''வளரட்டும்ணா பார்க்கலாம். அந்த செடிகள் எல்லாம் என்ன அண்ணா பண்ணி இருக்கீங்க''

''அப்படியேதான் இருக்கு. பார்க்கலாம்''

வாசன் தோட்டத்திற்கு திரும்பிச் சென்றான். முத்துராசு தோட்டத்தில் மயக்கமாகி விழுந்து இருந்தார்.

(தொடரும்)





Tuesday 7 July 2015

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16

பாதை - 15

இதுவரை ஆராய்ச்சியில் என்ன செய்து இருக்கிறோம் என எவரேனும் கண்டுகொள்ள வேண்டுமெனில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரைகள் மூலம் அறிய இயலும். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக ஆராய்ச்சி செய்வதால் அவர்கள் என்ன சொல்வார்களோ அதைத்தான் செய்ய வேண்டும். அதற்கு மீறி நமது சுய சிந்தனைகளுக்கு எல்லாம் அங்கே வேலை இல்லை. இது எல்லாம் தவறு, இது அவசியமா என்ற கேள்விகள் எழுப்பினாலும் இதோ இதைச் செய்தால் போதும் எனும்போது சரிதான் என தலையாட்டிவிட்டுப் போகத் தோன்றும்.

பொதுவாக ஆராய்ச்சியில் என்ன காரணம் என அறியாமலே பல விசயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுதான் காரணமோ என்ற சிந்தனையில் கூட ஆராய்ச்சி நடக்கின்றன. பொதுவாக செல்கள், திசுக்கள் என தொடங்கப்படும் ஆராய்ச்சியில் அத்தனை குற்ற உணர்வு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சி குற்ற உணர்வு ஏற்படுத்தாமல் போனதே இல்லை. ஒரு உயிரைத் துடிதுடிக்க கொன்று அந்த உயிரில் இருந்து மூச்சுக்குழல் எடுத்து அதை வெளியில் பொருத்தி என செய்யப்படும் ஆராய்ச்சி சற்று மன சங்கடமாகவே இருக்கும். சங்கடப்பட்டால் முடியுமா என நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அப்படி என்னதான் ஆராய்ச்சி? வேறு ஒன்றும் இல்லை. Guinea pigs இல் இருந்து அதன் மூச்சுக்குழல் பிரித்து எடுக்க வேண்டும். அந்த மூச்சுக்குழலை சின்ன சின்னதாக ஒரு செமீ க்கு வெட்ட வேண்டும். அந்த சின்ன வளையங்களை மேல் கீழ் உள்ள கம்பி ஒன்றில் மாட்டி அதை இதற்கே உரித்தான  உப்புக்  கரைசலில் 37 டிகிரி செல்சியசில் வைத்து விட வேண்டும். எப்போதும் 5% கார்பன் டை ஆக்சைடு உள்ள காற்று செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இப்போது சில மூலக்கூறுகள் இந்த வளையங்களை கடினமாக்கும். அப்படி ஓரளவு  ஆக்கியபின்னர் நாம் தயாரிக்கும் மூலக்கூறு இந்த கடினமாக்கலை எளிதாக்குமா என பார்க்க வேண்டும். இவ்வளவுதான் ஆராய்ச்சி. இதை எவர் வேணுமென்றாலும் செய்யலாம். இதற்கு முனைவர் பட்டமோ பட்டப்படிப்போ ஒரு அவசியமும் இல்லை. இது ஒரு சாதாரண வேலை.

ஆனால் இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் தான் இந்த ஆராய்ச்சியின் தன்மையை முடிவு செய்யும். கடினமாக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகளாக  இருக்கும். அப்படி வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகள் கடினமாக்கும்போது அதை எல்லாம் நமது மூலக்கூறு எளிதாக்கினால் எப்படி சாத்தியம் என பல விசயங்களை வைத்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

எழுதவே முடியவில்லையே என்பதற்காக எழுதத் தொடங்கிவிட்டேன். தொடர்ந்து தொடர்வேன்.

(தொடரும்) 

Monday 6 July 2015

நமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்

ஜூலை மாத சிற்றிதழ் இங்கு 

என்னை மிகவும் பாதித்தது இராமானுஜரின் வாழ்க்கை. கணவன் மனைவி நேரெதிர் குணம் கொண்டு இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இராமானுஜரின் வாழ்க்கையை சுசீமா அம்மா அவர்களின் இந்த தொடரில் படித்தபோது நிறையவே பயம் தொற்றிக்கொண்டது. Women from Venus, Men form Mars என்பது ஒருவேளை உண்மையோ என எண்ணும்  அளவிற்கு வெவ்வேறு கருத்துகள், வெவ்வேறு பிடித்தவைகள் என ஆண் பெண் என பேதம் கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.

கணவன் சொன்னால் மனைவி கேட்பதில்லை. மனைவி சொன்னால் கணவன் கேட்பதில்லை. இராமானுஜரோ வேறு மாதிரி இருந்து இருக்கிறார் என நினைத்தால் கடைசியில் துறவறம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது மனைவியின் செயல்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு உரியது என்று சொல்லிவிட முடியாது ஆனால் காலம் காலமாக வெகு சிலரே சமய, அரசியல், சமூக ஈடுபாடுகளில் இணைந்து உள்ளார்கள் எனும்போது பெண்களை குற்றம் சொல்ல இயலாது.

அதீத சமூக சிந்தனை உள்ள ஆடவரோ, பெண்டிரோ திருமணம் முடிக்கக்கூடாது. ஒன்று குடும்பம் பிள்ளைகள் என வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அல்லது ஊருக்கு என வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அன்பை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம் அல்லாடிவிடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு குறித்த விமர்சனம் தவறுதான் என அறிந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்திற்கு தத்துவம் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன. எவருக்குத் தேவை பாவமும் புண்ணியமும், இறைபாதமும், இறைபாதமற்றதும். இதனால்தான் தனிப்பட்ட வாழ்வு பாராமல் இருக்கச் சொல்லிச் சென்றார்கள் அதுவும்  அழகாக அவரவர் தவறுகளை மறைத்து தப்பித்துக் கொண்டார்கள். 

ரமதான் மாதம் என்பதைக் குறிக்கும் வண்ணம் அட்டை வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிரியரின் எழுத்தில் உள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சிற்றிதழ் என்றாலும் எழுதுபவருக்கு நிறைய எதிர்பார்ப்பும், வாசிப்பவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். எத்தனயோ தொழில்நுட்பம் பெருகிவிட்ட நிலையில் கஷ்டப்பட்டு ஒன்றை உருவாக்குவதைவிட எளிமையான வழி இருப்பின் அதைத் தொடர்வது நல்லது என்றே கருதுகிறேன். எப்படி கொண்டுவர வேண்டும் என எண்ணுகிறோமோ அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும்.

கான் அவர்களின் விதவை கவிதை வலி சுமக்கும் கவிதை எனில் ஃபாரிஜாவின் பெண்ணாக ஏன் பிறந்தோம் எனும் முதிர்கன்னி கவிதை அதையும் தாண்டிய வலி கொண்டது. இப்போது மேலே குறிப்பிட்ட இராமானுஜர் வாழ்வும் இந்த இரண்டு கவிதை நிலைகளும் எடுத்துக் கொள்வோம். இல்லறவாழ்வு இனிமையாகவோ இனிமையற்றதோ இருந்தாலும் தன்னுடன் வாழும் ஒருவரை இழத்தல் கொடியது. வண்ணங்கள் கலைந்த எனத் தொடங்கி உளி தொலைந்த என ஒவ்வொரு வார்த்தையில் திரும்பவே கிடைக்கப்பெறாத தொலைதல் சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் முதிர்கன்னி? வறுமைக்குப் பிறந்துவிட்ட கொடுமைகள் என வலி தொடங்கி, இந்த சமூகப்பார்வை குறித்த வார்த்தைகள் ஈட்டிபோல குத்துகின்றன.

இடியாப்பச் சிரிப்பு மிகவும் ரசிக்கும்தன்மை உடையதாக தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதை பகடி பண்ணி எழுதப்பட்டவைகள் நிறைய. உண்ண  உணவு இன்றித் தவிக்கும் ஒரு பக்கம். தரப்படும்  உணவில் தரமில்லாமல் தந்து விடுவது ஒரு பக்கம். அப்படியே அதே பக்கத்தில் கணேஷ் அவர்களின் கவிதை யதார்த்தமாக அமைந்து இருக்கிறது. சூரியன் ஒரு ஓவியன். நல்ல ரசனை. நல்ல புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. அடுத்து கர்ணன் குறித்து ரவிக்குமார் அவர்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கர்ணன் சிந்திக்கும் அளவுக்கு அவனது புத்தி செயல்படவில்லைதான். அப்படி செயல்பட்டு இருந்தால் ஒரு மகாபாரதம் நடந்து இருக்காது, ஒரு மாபெரும் காவியம் கிடைத்து இருக்காது. வள்ளுவருக்குத் தெரியுமோ என்னவோ நுண்ணிய பல நூல்கள் கற்பினும் என சொல்லிச் சென்றுவிட்டார். ஒட்டுற மண்ணுதான் ஒட்டும். ஜீவா அவர்களின் உபதேசம் நல்லதொரு படிப்பினை கதை. ரசிக்கும்வகையில் இருந்தது. பெற்றோர் பிள்ளைகள் நிலை இப்படித்தான்.

சின்ன சின்ன வரிகளில் உலகம் சொல்லும் கருத்துக்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் எழுத்தும் அற்புதம். அதுவும் இந்த சிற்றிதழில் அவரவர் பெயர் அழுத்தினால் நேராக ட்விட்டர் சென்று விடும்  வடிவமைப்பு நிச்சயம் பாரட்டப்படக்கூடியதுதான். வாழ்த்துக்கள். பிரசன்னா அவர்களைப் பற்றி நாளேடுகளே பெருமை பேசி இருக்கின்றன. அவரது ஓவியங்களின் அலங்கரிப்பு இந்த நமது திண்ணை சிற்றிதழுக்கு பெரிய அங்கீகாரம். ஓவியங்கள் நம்முடன் பேசுவது போலவே இருக்கும் என்பதுதான் இவரது ஓவியங்களின் சிறப்பு.

கார்த்திக் அவர்களின் ஆலவாயன் பற்றிய நாவல் மதிப்புரை மிகவும் சிறப்பு. நிறைய நூல்களைப் படிக்கக்கூடியவர். மிகவும் தெளிவான எண்ணங்கள் கொண்டு இருப்பவர். மாதொருபாகன் எனும் நாவலின் தொடர்ச்சி இது. ஒரு நாவல் மனிதர்களின் மனதோடு ஒட்டிவிட வேண்டும். பல விசயங்களை இந்த நாவல் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

கிரேசி மோகன் அவர்களின் நேர்காணல். அடடா! சுசீமா அம்மா அவர்களின் கேள்விகள் சிறப்பு என்றால் கிரேசி அவர்களின் பதில்கள் வெகு சிறப்பு. இவர் குறித்து பல விசயங்களை அறியமுடிந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நிலை எனக்கு மன கஷ்டம் தந்தது. ஆஹா ஓஹோவென புகழப்படும் படைப்பாளிகள்  நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பாரதியார் காலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது ஏன்  வள்ளுவரே கூட பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என சொல்லிவிட்டார். நிறைய வாசிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை எனக்கும் தான். மிகவும் பிடித்த வரி, எனது எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு. ஜானகி ஆசிரியை, அட! தமிழ் மீது பற்றுக்கு ஒரு ஆசிரியை, ஆசிரியர் என அனைவருக்கும் இருந்து விடுகிறார்கள். வெண்பா! எழுத்தாளர் சொக்கன் அவர்களை நினைவுப்படுத்தினார். இது மட்டுமல்லாது, நண்பர் ரத்தினகிரி வெண்பா அருமையாக எழுதுவார், வெண்பா எப்படி எழுதுவது என கற்றுத்தந்த சூரியகாந்தி அவர்களை நினைவுபடுத்தியது. ஒவ்வொரு வெண்பாவும் அசத்தல்.

வருண் அவர்களின் நுரையீரலின் ஓலம் அந்த அழுகுரல் புகையில் கரைந்து போய்விடுவது சோகம். எவரேனும் செவிகொடுத்து கேட்கமாட்டார்களா? உமா க்ருஷ் அவர்களின் பாடல் பரவசத்தில் மலரே மௌனமா மிகவும் அற்புதமான பாடல் வரிசையில் ஒன்று என்றால் மிகையாகாது. அவர் எஸ்பிபி குறித்து சொன்ன தகவல் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்பதை விட எப்படி பாட வேண்டும் என்பதில் இருக்கிறது ஒரு பாடலின் வெற்றி. இசை அதற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அற்புதமான வரிகள் இருந்தும் சிதைத்துவிடும் இசையும், காண சகிக்காத காட்சியும் இல்லாமல் அனைத்துமே ஒருங்கிணைந்த ஒன்று என பரவசம் கொள்ளக்கூடிய பாடல் தான். மிகவும் அருமை.

கூட்டாஞ்சோறு என்பது சாதாரண சொல் என்றே நினைத்து இருந்தேன்.  கூட்டாஞ்சோறு என்றால் பழைய சோறு, புது சோறு என கலந்து உருவாக்குவது என நினைத்தால் மிகவும் அருமையாக அந்த சோறு எப்படி தயாரிப்பது என எழுதி இருக்கிறார் நண்பர் ரவி. புளியோதரை, எலுமிச்சை  சாதம், தயிர் சாதம் போல இந்த கூட்டாஞ்சோற்றில் பல காய்கறிகள் பங்குபெற்று விடுகின்றன, அத்தோடு புளி கரைசல், எலுமிச்சை எல்லாம் வந்து விடுகிறது. பிஸ்மில்லாபாத் என்பதுதான் இதுவோ?

ஆசிரியர் அவர்களின் கண்ணதாசன் குறித்து தெரிந்து கொள்ளமுடிந்தது. இன்று ஆசிரியர் இந்த சிற்றிதழை அச்சு வடிவில் கொண்டுவரலாம் என எண்ணியபோது எனக்கு சந்தோசமாக இருந்தது. செய்யலாம் என்றே சொன்னேன். ஆனால் பலர் வேண்டாம் என்று கூறினாலும் 'நாட்டாமை' என அனைவராலும் ட்விட்டரில் அறியப்படும் திருமாறன் அவர்கள் இன்னும் பல விசயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என சொன்னார். சரிதான், ஆனால் எவர் எழுத முன் வருகிறார்கள்? எழுதுவது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அதை எல்லோராலும் செய்ய இயலாது. இணையத்தில் பல விசயங்களை எழுதுபவர்கள் தனக்கென ஒரு வழி கொண்டு இருக்கும்போது இப்படி நூல்கள் எல்லாம் வெளியிட எழுத முன் வருவார்களா? நமது திண்ணைக்கு நல்ல எழுத்தாளர்கள் கிடைக்கவும் நிறைய நல்ல விசயங்கள் சேர்த்துக் கொள்ளவும் வாழ்த்துகிறோம்.





Tuesday 30 June 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் கதையின் முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. நான் ஒரு இந்து இல்லை என்பதாலோ இந்து கலாச்சாரம் பற்றி அறிந்தது இல்லை என்பதாலோ எனது ஆன்மாவைத் தொடவில்லை. எனக்குப் புரியாத காரணத்தினால் பக்தி பாடல்களை எல்லாம் வாசிக்காமல் தாவினேன்.

ஈஸ்வரி கதையில்  வரத் தொடங்கியதும் கதையை மிகவும் சுவராஸ்யத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். காதல் கடவுளை வெல்லுமா என அறிந்து கொள்ள பேராவலுடன் இருந்தேன். முடிவில் நான் எண்ணியது போல காதல் சிவனை வென்றது என சொல்லலாமா?

கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையிலான காதல் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களின் பரஸ்பர புரிதல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அதிலும் குறிப்பாக ஈஸ்வரி. அவளுக்கு தனது கணவன் மீது பொறாமையோ சந்தேகமே வரவில்லை. அது உண்மையான பரிபூரண காதல். காதல்தான் எல்லாம். அந்த பகுதி எல்லாம் அதியற்புதமாக இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்குள் காதல் அத்தனை இல்லை. அதற்கு மதுசூதனின் பிடிவாதமே காரணம். மதுசூதனின் கதை முடிவு அவனது பாழான வாழ்வு குறித்து சொல்லி இருந்து இருக்கலாம்.

கதிரேசன் மற்றும் வைஷ்ணவியின் நட்பு பிரமாதம். கதிரேசன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, அவன் வைஷ்ணவியிடம் பேசும் பாங்கு, வைஷ்ணவியை நடத்தும் முறை என்னை கவர்ந்தது. கதையில் சில வார்த்தைகள், சில விசயங்கள் புரியாமல் இருந்தது. முடிவில் காதல் தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும். காதல் அதிசக்தி வாய்ந்தது.

நன்றி

ஹனுமலர்
மலேசியா


Thursday 25 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 8

பகுதி 7 

8. நினைவுகள்

திருமால், அவரது மனைவி யோகலட்சுமி, மகன் தீபக், மகள் தீபா என அனைவரும் வந்தார்கள். பாரதியையும், கிருத்திகாவையும் நன்றாக நினைவு இருந்தது.

''ரொம்ப நேரமா காத்து இருக்கீங்களா?''

''இல்லை சார்''

''சரி உள்ளே வாங்க''

வீட்டினுள் நுழைந்ததும் அவர்களை அமரச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார் யோகலட்சுமி. தாங்கள் வாங்கி வந்த பழங்களை எடுத்துத் தந்தார்கள். தீபக் வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். அவனது பேச்சு அத்தனை இனிமையாக இருந்தது.

''என்ன பாரதி, என்ன விஷயம் சொல்லுங்க''

''பெருமாள் தாத்தா பிறந்துட்டார், ரெட்டக்குழந்தைக, தாயும் சேயும் சுகமாக இருக்காங்க''

''ரொம்ப சந்தோசம், கேட்கவே மனசு மகிழ்ச்சியா இருக்கு''

''முக்காலமும் உங்களுக்குத் தெரியும் தானே''

அப்போது நீர்மோர் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, நீங்கதானே சொன்னீங்க, சாருக்கு முக்காலமும் தெரியும்னு''

கிருத்திகா சொன்னதும் யோகலட்சுமி சிரித்தவண்ணம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். பாரதி சாத்திரம்பட்டி சென்ற விசயம்தனை சுருக்கமாக சொன்னாள்.

''எனக்கு அப்படி எல்லாம் ஒண்ணும்  தெரியாது. முக்காலம் பற்றிய கலை சொல்லித்தாங்கனு குழந்தைகள் கேட்பாங்க, நான் சும்மா சரினு  சொல்வேன். மற்றபடி எனக்கு எக்காலமும் தெரியாது''

''மாதவிக்கு எல்லாம் தெரியுதே''

''அப்போ நீங்க அதை மாதவிகிட்டதான் கேட்கணும். என்கிட்டே கேட்டா எப்படி? பெருமாள் தாத்தா பிறந்தார்னு சொன்னது நீங்க, அவர் எப்படி பிறக்க முடியும். இறந்தவர் பிறப்பது இல்லை. நினைவுகளுடனே மனிதர்கள் இறந்து போவார்கள். டிமென்சியா நோய் பற்றி நீங்க படிச்சி இருப்பீங்கதானே. ஒரு மனிசனோட மூளைகளில் ஏற்படும் பாதிப்பு நினைவு, மொழி செயல்பாடு என எல்லாத்தையும் சிதைச்சிரும். அப்படி இருக்கறப்ப ஒரு மனிசன் இறந்துட்டா அவனது செல்களின் மூலம் நினைவுகளை திரும்ப கொண்டு வர முடியும் அப்படிங்கிறது முடியாத காரியம். இப்போ இனி வரும் காலங்களில் என்ன நடக்கும்னு யூகிச்சி சொல்லக்கூடிய திறன்கள் என்கிட்டே இருக்குறமாதிரி தெரியலை. மாதவிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கும்னா அது ஆச்சரியம்தான்''

''மெடிக்கல் பத்தி எல்லாம் பேசறீங்க, நீங்க என்ன படிச்சி இருக்கீங்க'' பாரதியின் ஆர்வம் அதிகம் ஆனது.

''நான் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கேன். மேற்கொண்டு படிக்க எனக்கு விருப்பம் இல்லை. இவளும் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கா. ஆனா இப்போ பல குழந்தைகளைப் படிக்க வைக்கிற திருப்தி இருக்கு. நினைவு வைச்சிக்கிற செல்கள் பத்தி உங்க அபிப்ராயம் என்ன''

தீபக், தீபா ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். கிருத்திகா அவளை கவனித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள். திருமால் என்ன பேசுகிறார் என அந்த சிறு குழந்தைகளின் கவனிப்பு கிருத்திகாவிற்கு ஆச்சரியம் தருவதாக அமைந்து இருந்தது. பாரதிதான் பதில் சொன்னாள்.

''நம்ம உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் செல்கள் நினைவுத்தன்மை கொண்டவைகள். ஒரு வேக்சீன் போட்டம்னா, அவை நமது உடலில் உள்ள செல்களைத் தூண்டி ஆண்டிபாடீஸ் உண்டாக்கும் அப்படியே நினைவு செல்கள் உண்டாக்கும். அது மட்டுமில்லாம திருப்பி அதே நோய் வந்து தாக்கினா அதை சரியாக கணிச்சி நம்மை பாதுகாக்கும்.''

''அந்த செல்களின் பணி  அது. இப்போ கருவை உண்டாக்கும் செல்கள் எல்லா செயல்களை தன்னகத்தே வைத்து இருக்கும்போது தாய் தந்தை நினைவுகளை சுமந்து வருதா''

பாரதிக்கு அந்த கேள்வி சற்று குழப்பமாக இருந்தது. நினைவுகளை சுமந்து வருமா என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். தீபக் என்ற யோகலட்சுமியின் குரல் கேட்டு தீபக் சமையல் அறைக்கு சென்றான்.
அவனைத் தொடர்ந்து தீபாவும் சென்றாள்.

''வாய்ப்பு இல்லை'' பாரதி சட்டென முடித்தாள்.

''அப்படின்னா பெருமாள் தாத்தா நினைவுகளுடன் வலம்  வரமாட்டார். அந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள்தான். ஆனா உங்களுக்கு வாசன் எல்லோருக்கும் அது பெருமாள் தாத்தா. உங்கள் எண்ணங்களை அந்த குழந்தைகள் மீது திணிக்கப் பார்ப்பீங்க''

பாரதி மிகவும் அமைதியானாள். தீபக், தீபா குடித்த வண்ணம் எங்கே அமர்ந்து இருந்தார்களோ அங்கே அமர்ந்து இருந்தார்கள்.

''மாதவி, உங்களைப் பார்க்க கிருத்திகாவை என்னிடம் கூப்பிட்டு போகச்  சொன்னாள்''

''என்ன காரணம் என நீங்க கேட்டு இருக்கலாமே''

''என்ன காரணம்னு நீங்க சொல்லுங்க''

''எதற்கும் ஒரு துணையாக இருக்கட்டுமேனு இருக்கலாம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மனிதர்கள் அப்படின்னு ஜோசியர்கள், நாடி பார்ப்பவர்கள். மை தடவி சொல்பவர்கள், குறி பார்ப்பவர்கள், ரேகை பார்ப்பவர்கள் அப்படின்னு நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. அவர்களுக்கு அது வேலை. ஒரு சிலர் சொல்வது நடக்கிறது அப்படின்னு நம்பும் மனிதர்கள் இப்போ மட்டுமில்லை எப்பவுமே உண்டு, இப்போ அதிகமாகிட்டே வராங்க. அதுமாதிரி எதிர்காலம் சொல்றது மாதிரி நான் இருப்பேன்னு நீங்க நினைச்சா என்னை மன்னிக்கனும் எனக்கு அப்படிப்பட்ட ஞானம் அறிவு சிந்தனை எதுவுமே இல்லை.

மாதவிகிட்ட நான் இதுவரை ஒரே ஒருமுறைதான் பேசி இருக்கேன். அதுவும் திருமலைக்குப் போகறப்பபார்த்துப் பேசியதோடு சரி. ரொம்ப அறிவான பொண்ணு. ஆனா நீங்க சொல்றமாதிரி முக்காலமும் உணர்ந்த பெண் மாதிரி எனக்குத் தோணலை. எதேச்சையாக அவங்க சொல்றதுக்கு நீங்க அர்த்தம் கண்டுபிடிச்சி அந்த பொண்ணுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கும்னு நம்புறீங்க''

''நீங்க சொன்னதுதான் சார் உண்மை, இவதான் தேவை இல்லாம மாதவியை கடவுள் ரேஞ்சுக்கு பேசுறா''

கிருத்திகா பட்டென சொன்னதும் திருமால் சிரித்தார். அப்போது பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, அதுக்குள்ளே பண்ணிட்டீங்களா, கடையில் வாங்க மாட்டீங்களா''

''இல்லைம்மா, இதெல்லாம் சின்ன சின்ன வேலைகள்தானே''

''நான் கடவுள் ரேஞ்சுக்கு எல்லாம் மாதவியைப் பத்தி பேசலை. ஆனா அவளுக்கு சில விசயங்கள் முன்கூட்டியே தெரியுது. அவள்கிட்ட பழகினப்ப எனக்கு எதுவும் தெரியலை. ஆனா அவ பேசறதை வைச்சிப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. அவளுக்கு பல விசயங்கள் தெரியுது''

''பாரதி, நீங்க கிருத்திகா பேச்சு கேளுங்க. நம்முடைய செல்களுக்கு எப்படி சரியா கால் உண்டாக்கணும், கை உண்டாக்கணும்னு தெரியும். எல்லா குண  நலன்கள் கொண்ட செல்கள் எப்படி மற்ற குணநலன்களை மறைச்சி ஒன்றை மட்டும் உருவாக்க துணிகிறது''

பாரதிக்கு இது சற்று ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் இவர் எங்கு சென்று படித்தார் என்றே கேட்க வேண்டும் போலிருந்தது. கிருத்திகா குறுக்கிட்டாள்.

''எல்லாமே கருவில் சேர்த்து வைக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி வெளிப்படுகிறது. இதை ஆர்கநோஜெநிசிஸ் அப்படின்னு சொல்வாங்க. நாங்க அதை எல்லாம் படிக்கிறது இல்லை. எங்க மருத்துவத்தில் எப்படி என்ன நோய் இதுமாதிரி படிப்போம். இவதான் ஜெனிடிக்ஸ் எல்லாம் படிக்கணும்னு ஆர் என் ஏ எல்லாம் படிச்சிட்டு இருப்பா. எனக்கு ஒரு டாக்டர் ஆனா போதும்''

''கிருத்தி, ஆர் என் ஏ  பத்தி இப்போ எதுக்கு? நான் இன்னும் அதுபத்தி வாசிக்கலை, உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க''

''இப்போ ஆண்  பெண் இணைந்து உண்டாகிற கரு ஒரு குழந்தையா மாறும்போது இருவரின் விசயங்களை கொண்டு வருது. ஆனா பெருமாள் தாத்தா உருவான கரு அப்படி இல்லை. விஷ்ணுப்பிரியன் ஏதோ  பண்ணிதான் அந்த செல்களை அவர் ஒரு குழந்தையா உருவாக வழி பண்ணி இருக்கார். எனக்கும் தெரியலை பாரதி. இப்பவாச்சும் நம்புங்க எனக்கு முக்காலம் மட்டுமில்லை இக்காலமும் தெரியாது.''

கிருத்திகா என்ன நினைத்தாள் எனத் தெரியவில்லை. அங்கிருந்த பலகாரங்கள் சாப்பிட்டு முடித்தவள் இதற்கு மேல் நமக்கு என்ன வேலை என்பதுபோல பாரதியைப் பார்த்தாள். பாரதிக்கு திருமாலிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. இவருக்கு இப்படி இத்தனை விசயங்கள் தெரிகிறது.

மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் என்று ஒன்று உண்டு. மனதில் ஒன்றை நிறுத்திக்கொள்ளும் தொடர்ந்து கொள்ளும் ஆசை அது. ஒரு சிலர் அதிலேயே ஊறி இருப்பார்கள். அதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். சிலருக்கு பல விசயங்களில் ஆர்வம் இருக்கும். பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்களது சிந்தனையை குறிப்பிட்ட வழியில் செலுத்தினால் மட்டுமே ஒன்றில் சாதனை பண்ண இயலும். திருமால் பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டு இருப்பவராகவே தென்பட்டது.

''போவோமாயா''

''இரு கிருத்தி, கொஞ்ச நேரம் இருக்கலாம்''

''சாப்பாடு தயாராகிக் கொண்டு இருக்கு, சாப்பிட்டே போங்க, வேற எதுவும் கேட்கணுமா?''

''உங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார வாரம் ஏதேனும் ஒரு நேரம் தந்தா உங்களை வந்து பார்க்கிறேன்''

''ஆசிரமத்திற்கு வார வாரம் வாங்க, நான் பெரும்பாலும் அங்கதான் இருப்பேன்.

பாரதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது மாதவியிடம் இருந்து போன்  வந்தது. வாசனுக்கு என்ன நேர இருந்தது, குளத்தூரில் என்ன நடந்தது என எல்லா விசயங்களையும் சொன்னவள் கிருத்திகா நான் சாதாரண பொண்ணுனு  சொன்னாளா அதுக்குத்தான் அவளை கூப்பிட்டு போக சொன்னேன். நீ முன்ன பார்த்த திருமால் வேற இப்போ பார்த்த  திருமால் வேறனு  தெரிஞ்சிகிட்டியா என்ற அவளது சொல் கேட்டு அப்படியே போனை திருமாலிடம் எதுவும் சொல்லாமல் கொடுத்தாள்.

''எப்படிமா என்கிட்டே போன் வந்ததுன்னு கண்டுபிடிச்ச, நல்லா இருக்கேன்மா. சாத்திரம்பட்டி போனதாக கேள்விபட்டேன்''

மறுமுனையில் மாதவி என்ன சொல்கிறாள் என பாரதிக்கு கேட்கவில்லை. ஆனால் போன்  கைமாறியது எப்படி அவள் அறிந்தாள்  என ஆச்சரியம் கொண்டாள்.

''மெடிக்கல் படிக்கிற பொண்ணுகதானே, நிறைய சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீ பண்ணப்போற மூளை ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள். பாரதிகிட்ட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் உன்னோட ஒரே ஒரு தரம் தான் பேசினேன்னு''

பாரதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மாதவி குறித்து சற்று எரிச்சல் உண்டாகத் தொடங்கியது. எதற்கு தன்னிடம் அவள் குறித்த விசயங்களைச் சொல்ல மறுக்கிறாள் எனும் கோபத்தின் வெளிப்பாடு அது.

''சரிமா, பாரதிகிட்ட கொடுக்கிறேன், நீ சொன்னமாதிரி பாரதி முகம் கோபமாகத்தான் மாறிக்கிட்டு வருது''

அந்த வார்த்தைகள் பாரதியை மேலும் ஆத்திரமூட்டியது. தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொண்டாள்.

''சரி மாதவி, அப்புறம் பேசறேன்''

எதுவும் பேசாமல் துண்டித்தாள். அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாதவளாய் பாரதி தென்பட்டாள். கிருத்திகாதான் பாரதியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றாள். பாரதியின் கண்கள் குளமாகின. கிருத்திகா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. மாதவியின் செயல்கள் தனக்கு எரிச்சல் அளிப்பதாக அழுகையின் ஊடே சொன்னாள்.

''என்னை எவளோனு அவ நினைகிறதால என்கிட்ட கூட சொல்லமாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறா, அப்படி சொல்லாட்டியும் பரவாயில்லை எதுக்கு இப்படி பூடகமாகவே பேசணும். என்னை வெறுப்பேத்த இப்படி பண்றா. அங்க என்னோட பெரியம்மா முன்னமே வந்து இருக்கக்கூடாதா மாதவினு சொல்றாங்க. இவளுக்கு அப்படி ஏதேனும் தெரிஞ்சி இருந்தா எங்க பெரியப்பாவை எதுக்கு இப்படி தனியே தவிக்க விடனும்''

''விடுயா, அதைப் பத்தி எதுவும் நினைக்காதே. வா, சாப்பிட்டு கிளம்புவோம், சார் பார்த்தா தப்பா நினைப்பார். சொன்ன கேளுயா''

''இல்லை கிருத்தி, லீவு வரப்ப நேரா மாதவியை சந்திச்சி பேசணும். அவ என்னதான் மனசில நினைச்சிட்டு இருக்கா''

''சரிய்யா இப்பா வாய்யா போகலாம்''

பாரதியின் மனம் துடிதுடித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Wednesday 24 June 2015

வெட்டித் தருணங்கள் - 4 (டிவிட்டர் உலகம்)

பகுதி - 3   இனி... கதையில் வருவன எவரையும் குறிப்பிடுவன அல்ல. உங்களை குறிப்பிடுவதாக நீங்களாக நினைத்தால் ஒன்று மாறிக்கொள்ளுங்கள், கதையை மாற்ற இயலாது. 

4. ''நன்மையையும் தீமையும் கலந்த ஓர் நிழல் உலகம்''

ஒரு மாதம் நன்றாக கவனித்தேன். நிறைய படித்த மேதாவிகள் கண்ணுக்குத் தென்பட்டார்கள். அந்த ஒரு மாதத்தில் நான் அமைதியாக கவனித்தபோது ஒவ்வொருவனும் கேவலமாக நடந்து கொண்டதை இங்கே எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அப்போது நான் எதுவுமே எழுதாமல் இருந்தேன். ட்விட்டரில் டைம் லைன். நேரடி தகவல் தொடர்பு என இருவகை இருந்தது. இதில் என்னைப் பின்தொடர்ந்த ஒருத்தி என்னிடம் நேரடி தகவல் மூலம் படு கேவலமாக பேசினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் நோக்கம் ஒரு விலைமகளை விட கேவலமாக இருந்தது. இவள் எல்லாம் படித்ததற்கு செத்துப் போயிருக்கலாம் என்றே எண்ணினேன். எனது ஆசைகளைத்  தூண்டி சபலம் கொள்ளும் கயமைத்தனம் அது. நல்லவேளையாக நான் எதுவும் திரும்பி பேசாமல் இருந்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. அது என்னவெனில் பேக் ஐடி எனும் மடத்தனம்.

அது என்னவென கேட்கிறீர்களா, அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் பெயர் கொண்டு அற்பத்தனமாக நம்மிடம் நடந்து கொள்வான். எனக்கு என் தலைவர் விஜய் பற்றியே பெருமை பேச நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு கேவலமான எண்ணம் கொண்ட கொடிய மிருகங்கள் நடமாடும் தளம்  ட்விட்டர் என எனக்குத் தெரியவில்லை. டிவிட்டருடன் சேர்த்து பேஸ்புக் திறந்து வைத்தேன். அதில் தானத்தலைவர் தங்கத்தலைவர் இளைய தளபதி விஜய் அவர்களின் படத்தை வைத்து கொண்டேன். ஒவ்வொரு பாடலாக அதில் எழுதுவது அப்போது வழக்கமாக்கி கொண்டேன்.

இந்த ட்விட்டரின் டைம் லைனில் பெண்ணின் கணவன், பிள்ளை, அம்மா அப்பா என கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் கண்டேன். ஹாஷ்  டாக் அதாவது எழுதி உலக அளவில் ட்ரென்டு  ஆக்குவது என இருந்தது தெரிய வந்தது. முதலில் =vijaysuperstar என ட்ரெண்டு பண்ணினேன். என்னைக் கண்டு பல விஜய் ரசிகர்கள் பின் தொடர்ந்தார்கள். அஜீத் ரசிகர்களின் மனம் என்னைக் கண்டு பொங்கியது. சிலர் என்னை அசிங்க அசிங்கமாக பேசினர் . நானும் அசிங்கம் அசிங்கமாக பேசி வைத்தேன். நான் எதற்கும் சளைத்தவன் அல்ல என என்னைக் கண்டு மிரள வேண்டும் என திட்டமிட்டேன். நிறைய தத்துவங்கள் எல்லாம் அதில் வலம்  வந்தன. அதில் சாக்கடை கல் பன்றி யானை கூட்டாஞ்சோறு கறிவேப்பிலை என்றெல்லாம் வெளியில் கேள்விப்பட்ட விஷயத்தை எழுதி  தான் பெரிய சிந்தனை முத்துக்களாக காட்டிக்கொண்டார்கள். தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் கயமைத்தனம் கூட்டம் ஒன்று இருந்தது.

இவர்களில் எவரேனும் நல்லவர் கண்ணுக்குத் தென்பட மாட்டாரா என நினைத்தபோது ஒரு பெண் பழகினாள். ட்விட்டரில் 140  எழுத்துகள் மேல் எழுத இயலாது. நேரடி தகவல் பண்ணாமல் டைம் லைனில் எழுதினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''தாமரைச்செல்வி, நீ எந்த ஊரு?''

''மதுரை, நீ எந்த ஊரு?''

''மதுரை''

''மதுரையில் எங்க?''

''மேலமாசி வீதி''

''நானும் மேலமாசி வீதி''

''மேலமாசி வீதியில் எங்க?''

அவ்வளவுதான். அத்துடன் அவளுடன்  பேசுவது நின்று போனது. அதற்கடுத்து அவளது ஐடி என்பார்கள் அதை காணவில்லை. என்னவென அறிந்து கொண்டபோது டீஆக்டிவேட் அதாவது ட்விட்டர் கணக்கை மூடிவிடுவது. ஆனால் தினமும் தானைத்தலைவர் விஜய் அவர்களை கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் அதிகரித்து வந்தது. எதற்கு எடுத்தாலும் தலைவர் விஜய் அவர்களை பேசிய கூட்டம் மிரளும்படி எனது நடவடிக்கை இருந்தது.

அப்போதுதான் ஒரு பெண் பச்சை பச்சையாக டைம் லைனில் எழுதினாள். அருவருக்க வைக்கும் வார்த்தைகள். அவளது செயல்களைப் போற்றிப் பாட ஒரு கூட்டம் உருவாகியது. ஆண்கள்தான் பச்சையாக எழுத வேண்டுமா என அந்த பெண் எழுதியதை ஆதரிக்கும் கூட்டம். ஆனால் அந்த பெண் பெண்ணல்ல ஆண் என்றே பலர் சொல்லிக்கொண்டார்கள்.

முகம் மறைத்த சுதந்திரம் வக்கிரம் என்ற வார்த்தை ட்விட்டர் கற்றுத் தந்தது. வக்கிரம் நிறைந்த கூட்டம் ஒன்று இருந்தது. இணையம் ஒரு ஆபத்தானது இந்த ட்விட்டர் கொடியது என எனக்குள் எண்ணம் தோன்றியது.

அப்போது திடீரென் வேறொரு பெண் வந்து பேசினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''சுந்தரி, உன் ஊரு என்ன?''

''மதுரை, மேலமாசி வீதி,உனக்கு''

''திருச்சி, சுப்பிரமணியபுரம்''

எனக்கு இவள்தான் தாமரைச்செல்வி என ஒரு சந்தேகம் வந்தது. சரி என அவளது நேரடி தகவல் சென்று நீதானே தாமரைச் செல்வி என்றேன். யார் எது என சமாளித்து பேசியதால் பேசாமல் விட்டுவிட்டேன்.

தினமும் அஜீத் விஜய் சண்டை. அதோடு ராஜா ரகுமான் சண்டை. அதையும் தாண்டி ஆத்திக நாத்திக சண்டை. இந்த எல்லா சண்டைகளிலும் நான் பங்கேற்று கொண்டு இருந்தேன். விஜயபாண்டி என்றாலே வந்துட்டாண்டா என சொல்லும் அளவுக்கு இருந்தது. எனக்கு பெண் ரசிகைகள் ஆதரவு அதிகம் இருந்தது. இதில் பெண்கள் சேர்ந்து சரிக்கு சரியாக எழுதினார்கள். நான்கே மாதத்தில் ஐந்தாயிரம் பேர் பின்தொடர்ந்தனர். நான் இருநூறு மேல் எவரையும் பின்பற்றாமல் இருந்தேன்.

ஆனால் டாக், டைம்லைன் , லிஸ்ட் என பிறரின் எழுதுவதை படித்து கண்டமானிக்கு எழுதினேன். அப்போது ஒழுக்க சிகாமணிகள் இப்படி எழுதினால் க்ரைம் பாயும் க்ரைம் ஆயும் என்றார்கள். என்னை பேசியவனை திருத்தப் பாருங்கடா என சொன்னதும் ஒதுங்கினார்கள். நான் சட்டத்திற்கு புறம்பாக எழுத ஏதும் அங்கு இல்லை.

அங்கொன்று இங்கொன்று பார்க்கையில் பெண்ணியவாதிகள் என சிலர் சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் பெண்ணியவியாதிகள் என குற்றம் சொல்லப்பட்டு இருந்தது. அதிலும் என்னை அட்டென்சன் சீக்கர் என ஒரு முத்திரை குத்தினார்கள்.

நான் டிவிட்டரில் பேஸ்புக்கில் இருப்பது எனது கல்லூரியில் தெரிய ஆரம்பித்தது. சிவகுமார் என்னை குறி வைத்து தாக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் நாள்பட நாள்பட நான் சுந்தரி மீது காதல் கொள்ள ஆரம்பித்தேன். பத்து நாட்கள் தினமும் அவளுடன்  ஒரு அரை அரை மணி நேரம் நேரடி தகவலில் பேசினேன். ஒருநாள் சுந்தரி என்னிடம் நேரடி தகவலில் பேசியபோது

''நான் அஜீத் ரசிகை''

''செருப்பால அடி, ஒழுங்கா விஜய் ரசிகையா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''போடா நாயே, நீ அஜீத் ரசிகனா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''யாரடி நாய்னு சொன்ன''

''உங்கப்பனையா சொன்னேன், நான் பொண்ணே இல்லை''

எனக்குத் தூக்கிவாரி போட்டது. டிவிட்டரில் ப்ளாக் என்று ஒரு வசதி  உண்டு. பிடிக்கவில்லை எனில் ப்ளாக் பண்ணிவிடலாம். அவள் அதாவது அவன் என்னை ப்ளாக் பண்ணினான். அப்போதுதான் பல அஜீத் ராஜா ரசிகர்கள் என்னை ப்ளாக் பண்ணி இருந்தது என தெரிய வந்தது. எல்லா அஜீத் ரசிகர்களை ராஜா ரசிகர்களை ப்ளாக் பண்ணினேன். அப்போது சண்டை போட முடியாமல் இருந்தது.

ஒரு நல்லவன் ஐடி தொடங்க அப்போதுதான் யோசித்தேன். ஆனால் இந்த நல்லவன் ஐடி எனது விஜய் கொண்டை வெளியே தெரியாமல் எப்படி மறைப்பது என திட்டம் போட்டேன்.

தினமும் எப்படியும் ஒரு நான்கு மணி நேரம் டிவிட்டரில் இருந்து வந்தேன். இனிமேல் நல்லவன் ஐடிக்கு இரண்டு  மணி நேரம் விஜய் ஐடிக்கு இரண்டு மணி நேரம் என முடிவு செய்தேன்.

நல்லவன் ஐடிக்கு சில சுவாரஸ்யமான நபர்கள் சிக்கினார்கள். நான்தான் விஜயபாண்டி என்பது தெரியாமல் இருக்க சுகுமார் என்ற பெயர் வைத்து சுகுமார்@supersukku எனத் தொடங்கினேன்.

(தொடரும்) 

Tuesday 23 June 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? இன குழுக்கள்

 முந்தைய பகுதி 

மனிதர்கள் இனக்குழுக்களாக அன்றைய நாளில் வசித்து வந்தார்கள். பொதுவாக அரசர் அவருக்கு கீழ் ஒரு கூட்டம் என இருந்த காரணத்தினால் அரசரின் மனப்போக்குப்படியே இந்த இனக்குழுக்கள் செயல்பட்டன. இனக்குழுக்களின் தலைமை அந்த இனத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 

இஸ்ரேலிய மக்கள் என அழைக்கப்பட்டதன்  காரணம் இஸ்ரேலின் மகன்கள், இஸ்ரேலின் குழந்தைகள் என்ற அடிப்படை என அறியப்படுகிறது. இந்த இஸ்ரேலிய மக்கள்தான் யூதர்கள், சமாரிட்டன்கள், ஹீப்ரூக்கள் என பிரிந்தார்கள். இங்குதான் இனக்குழு தலையெடுக்கிறது. யூதர்களுக்கு என சில பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கை முறை என உண்டாக்கும்போது அதில் ஈடுபாடு கொள்ள இயலாத மக்கள் அதில் இருந்து தனித்து வெளியேறுகிறார்கள். எப்படி நமது நாட்டில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள் என பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் என சொல்லிக்கொள்வது போல அன்றைய நாளில் இந்த சமரிட்டன்கள் தங்களை யூதர்கள் என ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை மாறாக தங்களை இஸ்ரேலிய மக்கள் என சொல்லிக்கொள்ள தயங்கியது இல்லை. 

யூதர்கள் பின்பற்றியதுதான் ஜூடாயிசம். இந்த ஜூடாயிசம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. யூதர்களின் மதம், தத்துவ வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்தையும் விளக்குவதுதான் ஜூடாயிசம். யூதர்களாக பிறந்தால் அவர்கள் ஜூடாயிசம்தனை பின்பற்றி ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் இருந்து வந்தது. இந்து மதம் தனில் பிறந்தால் இந்துக்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தால் முஸ்லீம்கள், கிறிஸ்துவம் தனில் பிறந்தால் கிறிஸ்துவர்கள் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. பிறப்பால் இவர் என்ற ஒரு இனம் தொன்று தொட்டு பின்பற்ற படுகிறது. 

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமற்ற குழந்தைதான். மதம்,  சாதி, இனம், பெயர் என திணிக்கப்பட்டு குழந்தைகள் சுதந்திரமர்றுப் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த இனத்தில் இணைக்கப்பட்டு வேறு வழியின்றி அதை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த ஜூடாயிசம் தான் கிறிஸ்துவம், முஸ்லீம் எல்லாம் உருவாக பெரும் காரணமாக இருந்தது. இதனுடைய கருத்துகளின் தாக்கங்கள் பின்பற்றப்பட்டன. எப்போதும் இந்த இனக்குழுக்களிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக நம்பமாட்டார்கள். 

தங்களுக்கு என்று வரைமுறையை தனி நபரோ சில நபர்களோ  வைத்து எழுதினாலும் அதை பின்பற்றி செல்லாமல் அதை நம்பவும் மாட்டார்கள். இப்படி எல்லா இன குழுக்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் என்பது தமிழ் இனத்தில் ஒரு இனம். எதற்கு அப்படி குறிப்பிடுகிறோம் எனில் தமிழர்களை தீவிரவாதிகள் என சொல்லாமல் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என அடையாளம் காட்டிய வரலாறு சமீபத்திய ஒன்றுதான். போராளிகள் என்ற ஒரு இனக்குழு இன்றைய காலகட்டத்தில் தீவிரவாத இனக்குழு. 

இன்றைய சூழல் போலவே அன்றைய சூழலில் இந்த யூதர்கள் இனக்குழு இருந்தது. ஒரு இனத்தின் பற்றிய வரலாறு செவிவழி, கல்வெட்டு, புத்தகங்கள் மூலம் வழி வழியாக சொல்லப்பட்டு வரும். அன்றைய சூழலில் நம்ப இயலாத ஒன்றை அழிக்கவே முற்படுவார்கள். நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் எத்தனை உண்மை என தெரியாது. ஆனால் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதின் மூலம் முற்றிலும் கதை என எதையும் ஒதுக்கிவிட இயலாது. இன்றும் 14மில்லியன் யூதர்கள் உலகில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

யூதர்களின் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பைபிளில் குறிப்பிட்டு இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இப்போது இதைப் பற்றி எழுதும்போது யார் பாபிலோனியர்கள், யார் அஷ்ஸ்ரீயர்கள் என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு வந்து இருப்பது தெரியும். அந்த பகுதியில் வாழ்ந்த பல இனக்குழுக்கள் ஒவ்வொரு பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களது திறமையை, தங்களது நிலையை நிலைநாட்டிட பெரும் போராட்டங்களை செய்து கொண்டு இருந்தன. இந்த போர் முறைகளால் மனிதம் தோற்றதுதான் உண்மையான வரலாறு. 

இது குறித்து மனம் போன போக்கில் எல்லாம் எழுத முடியாத விசயங்கள் என்பதுதான் இப்போதைக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. 

(தொடரும்) 

மனைவியின் வாரிசு ( சிறுகதை )


                                                     மனைவியின் வாரிசு ( சிறுகதை )

இதோ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போது அடுத்த குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் சொல் என கேட்கும்போதெல்லாம் இதுவரைப் பெற்றுக் கொண்டது போதாதா என்றே பதில் அளித்துக்  கொண்டு இருந்தாள்.

''நாலுதானே பெத்து இருக்கோம், இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்கிரலாம்''

''ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுக, போதாதா. ஊரு உலகத்தில் நம்மளைப் பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா?''

''எவன் என்ன பேசினா என்ன, அவனா வந்து நம்ம வீட்டில உலை வைக்கிறான்''

''நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இன்னொரு புள்ளைப்  பெத்துக்க முடியாது, இதுகளை சமாளிக்கவே எனக்கு சீவன் போதலை. இதுல இன்னொன்னு வேறயா''

''அந்த காலத்தில...''

''வாயை மூடுங்க, போதும் உங்க அந்த காலப் புராணம், ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அதை வாங்கித்தாரேன் இதை வாங்கித்தாரேன் சொல்லி புள்ளைக வாங்கித் தந்ததுதான் மிச்சம். மூத்தவனுக்கு இன்னும் ரண்டு வருஷம் போனா கல்யாணம், இந்த லட்சணத்தில இன்னொன்னு கேட்குதா''

''நீ என்ன வேணும்னா சொல்லு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு உடனே ஒரு புள்ளை  நீ பெத்து தரனும்''

''குடும்ப கட்டுபாடுனு  ஒன்னு இருக்கே அதை எல்லாம் பண்ணித் தொலைக்கக்கூடாதானு போகிற இடத்தில பேசுறாளுக, மானம் போகுது''

''நாம பேசாம ரஷ்யா போயிரலாம், அங்கன நிறைய புள்ளைக  பெத்தா வரிவிலக்கு எல்லாம் இருக்கும். வேற ஒன்னும் செய்வோமா நாம பேசாம மதம் மாறிட்டா என்ன''

''புள்ளை  பெக்கிரதுக்கு யாராச்சும் மதம் மாறுவாகளா''

''கல்யாணம் பண்ணுறதுக்கு மதம் மாறுற ஆளுகனு  ஊருல பேச்சு இருக்கு, அது எல்லாம் இப்ப எதுக்கு, எனக்கு இன்னொரு புள்ளை  வேணும்''

''நான் வீட்டுக்கு இனிமே தினமும் தூரம்''

''கிறுக்கச்சி  மாதிரி பேசித் தொலையாத அப்புறம் இன்னொரு புள்ளைப்  பெத்துக்க வேற ஒருத்தியைத்தான் நான் தேடணும்''

''ச்சீ என்னப்  பேச்சு பேசறீங்க, இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு, பேசாம தள்ளிப்படுங்க, நாம பேசறது யாருக்காச்சும் கேட்கப்போகுது, ரெண்டாமவன் சொல்றான் இன்னொரு பிள்ளை பெத்துக்கம்மா இல்லைன்னா எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுனு சொல்றான். குழந்தைக பொம்மைன்னு நினைச்சிட்டான்''

''அவன் கேட்டத நாம நிறைவேத்தி வைக்க வேணாமா சொன்னா கேளு. இதுதான் கடைசி''

''நீங்க மொத பிள்ளையில் இருந்த இப்ப நாலாம் பிள்ளை வரைக்கும் இதேதான் சொன்னீங்க. எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க''

''அப்ப நான் வேற ஒருத்தியைத் தேட வேண்டியதுதான்''

''இன்னொருதடவை அப்படி பேசினீங்க, அப்புறம் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன். சொல்லிட்டேன். பேசாம படுத்துத் தொலைங்க. எப்பப்பாரு பிள்ளை பிள்ளைனுட்டு''

வழக்கம் போல நன்றாகத் திட்டு வாங்கி உறங்கினேன். காலையில் எழுந்ததும் வீடு பரபரப்பாக இருந்தது. பெரியவன் முதற்கொண்டு சிறியவள் வரை பள்ளி கல்லூரி என இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி வியர்க்க விறுவிறுக்க  வேலை செய்து கொண்டு இருந்தாள்.

''மாமா, பெரியவனுக்கு ஒரு நூறு ரூபா கொடுங்க. சின்னவளுக்கு ஒரு ஐம்பது கொடுங்க, நேத்தே கேட்க மறந்துட்டேன்''

இப்படி இவள் ஆடி ஓடி உழைத்து எத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. இன்று விடுமுறை போட்டு இருந்தேன். எப்படியும் அடுத்த பிள்ளை தயாராக வழி செய்ய வேண்டும் என.

''இன்னைக்கு வேலைக்குப் போகலையாங்க''

''போகலை, அசதியா இருக்கு''

''அப்படினா ரண்டாமவனை ஸ்கூல்க்கு போய்  விட்டு வாங்க''

''நீ ரெடியா இரு''

''எங்கேயும் வெளியில கூப்பிட்டுப் போறீங்களா''

''இல்லை, அடுத்த பிள்ளைக்கு...''

''அப்பா, அம்மாவை எப்போதுமே தொந்தரவு பண்ணிட்டேதான் இருப்பிங்களா''

பெரியவள் வந்து சத்தம் போட்டுப் போனாள்.

''கேட்டுக்கோங்க, பிள்ளைக வளர்ந்துட்டாங்க''

ரண்டாமவனையும் சின்னவளையும் அழைத்துப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். நானும் அவளும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். சப்பாத்திதான் செய்து இருந்தாள்.

அவளது சிறு வயது காலங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நான் என்னையும் அறியாமல் முகம் மலர்ந்தேன்.

கொலுசுகள் வாங்கிட்டு வரலாமா என்றவுடன் எதுவும் மறுப்பு சொல்லாமல் வா போகலாம் என கொலுசுகள் வாங்கி கொண்டு வந்து வீட்டில் அமர்ந்தோம். காலையிலேயே மதிய சாதம் சமைத்துவிட்டதால் அதிக வேலை இல்லை. ஒவ்வொரு அறையாக சென்று மகன்கள்  மகள்களின் அறைகளை சுத்தம் செய்தாள். எல்லா துணிகளை ஒழுங்கா மடித்து வைத்தாள்.

''பிள்ளை பெறலாம் வா''

''நீங்க வேலைக்குப் போங்க, நொய்  நொய்யுனுட்டு''

''நான் ஒரு கனவு நேத்து கண்டேன்''

''என்ன கனவு''

''அது வந்து ஒரு பொண்ணு இருவத்தி அஞ்சி வயசு இருக்கும், என்கிட்டே வந்து உங்களோட ஒரு புள்ளை பெத்துக்கிட்டா எனக்கு சாகா வரம் கிடைக்கும். அதோட மட்டுமில்லாம அந்த பையன் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டு இருப்பான். உங்களுக்கும் சாகா வரம் கிடைக்கும்னு  சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, குழந்தைக இருக்காங்கனு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு அது எல்லாம் தெரியும். அவங்களுக்கும் சாகா வரம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். எனக்கு உங்க குழந்தைதான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சிச்சி. வேற யாருமே உலகத்தில வேணாம் அப்படின்னு சொல்ல எனக்கு என்ன ரோதனையாப் போச்சுனு  அதெல்லாம் முடியாது, என்னோட பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்''

''அப்புறம் என்ன ஆச்சுங்க''

''பாத்தியா நான் உனக்கு கனவுல கூட துரோகம் செய்யலை''

''மீதி கதை என்ன ஆச்சுன்னு சொல்லுங்க''

''பாவிபுள்ள நான் குழந்தை தரமுடியாதுன்னு சொன்னதும் செத்துப் போச்சு''

''ஹாஹாஹா ஹாஹாஹா நீங்க ரொம்ப குறும்புங்க''

'சரி வா நாம...''

''இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு நினைப்பு உண்மையிலே இருந்து இருக்கு அதுதான கனவு வந்துருக்கு''

அந்த வார்த்தைகள் கேட்டு நான் சற்று மிரண்டேன்.

 ''இல்லை அந்த பொண்ணு உன்னோட வாரிசா வர நினைச்சி இருக்கும்''

''உங்களுக்கு மதியம் சோறு கிடையாது, பட்டினியா கிடங்க''

இப்போதெல்லாம் நான் கனவு கண்டதாக எந்த ஒரு கதையும் அவளிடம் சொல்வதே இல்லை.

(முற்றும்)

பின்குறிப்பு: சிறுகதை என குறிப்பிட்டு இருப்பதால் உங்க சொந்த அனுபவமோ என எவரேனும் என்னைப் பார்த்து கேட்டீங்க அப்புறம் உங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது.