Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday 19 May 2014

வானத்தைக் காணோம்

'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.

'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'

'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.

'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'

'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'

'பக்தா, என்ன உளறுகிறாய்?'

'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'

'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'

'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'

'பக்தா, அது வேறு இது வேறு'

'எது வேறு'

'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'

'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கிறது, வானம் பூமிக்கே சொந்தம்'

'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'

'வானத்தைக்  காணோம்'

'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா?'

'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா?'

'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'

'நான் எதற்கு செல்ல வேண்டும்'

'அங்கே வானம் இருக்கும்'

'நமது வானம் அங்கே இருக்குமோ?''

'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'

'எனக்கு புரியும்படி சொல்லுங்கள்'

'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'

'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா?

'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'

'இப்ப என்ன கேட்டுட்டேன்'

'வானத்தைக்  காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'

'சொல்லுங்க சாமி'

'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'

'வட்டமாகவா, நீளமாகவா சாமி'

'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'

'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த  வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'

'பாய் ஒரு பிரபஞ்சம்'

'இல்லை பாய் ஒரு வானம்' 

'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'

'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'

'அந்த வானத்தைக் காணோம் சாமி'

எந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற

வெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து  இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.

வானம் என்றால் என்ன?

'A sky is the region of atmosphere or outer space seen from the earth' 

ஒருவேளை செவ்வாயில் நாம் இருந்தால் 'A sky is the region of atmosphere or outer space seen from the mars' 



Tuesday 13 May 2014

டிவிட்டப் மதுரையில் நானிருந்தேன்

பக்தா, மதுரையில் நடக்கும் டிவிட்டப் விழாவிற்கு கலந்து கொள்ள வில்லையா என்று சாமியார் கேட்டதும் நான் பயந்து போனேன்.

''என்ன சொல்கிறீர்கள் சாமி?''

''ட்விட்டரில் 140 எழுத்துக்குள் எழுதும் கீச்சர்கள் ஒன்று கூடினார்களே, எப்படி இந்த உலகத்தை மேம்படுத்தி செல்வது என, அதில் நீ கலந்து கொள்ளவில்லையா?''

''எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சாமி?''

''நீயும் ஒரு கீச்சர் தானே''

''எப்பொழுது நான் என்னை கீச்சர் என சொன்னேன், நான் உங்கள் பக்தனே இல்லை, இதில் எப்படி கீச்சர் என்பதெல்லாம்?''

''நீ முழு நேர கீச்சர் ஆகிவிட்டாய்?, என்னோடு நீ பேசுவதே இல்லை''

''இங்கே பாருங்கள், என்னை தொல்லை செய்யாதீர்கள், வைகுண்டம் போக வேண்டியதுதானே''

''மானிடர்கள் தங்களில் பொய் உருவம் உருவாக்கிக் கொள்கிறார்கள், அதில் அந்த கீச்சர்கள் மிகவும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது நீ அறிந்ததுதானே''

''எனக்கு அதில் ஆர்வம் இல்லை, எவரோ என நினைத்துக் கொண்டு என்னிடம் வந்து பேசுகிறீர்கள்''

''பக்தா, யாம் உமது சித்து விளையாட்டு எல்லாம் அறிவோம்''

''என்னை நீங்க கலங்க படுத்த நினைத்து வந்து இருக்கிறீர்கள்''

''பக்தா, பொய்யாய் வாழ்வது பெரிய பாவம். நீ வேடம் தரித்து சென்றதை யாம் அறிவோம்''

''என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் கீச்சரும் அல்ல, கோச்சரும் அல்ல''

''பக்தா, இந்த கவிதை உன்னுடையது தானே''

''எந்த கவிதை''

''ஒன்றென கூடி இருக்கும் தமிழே
உலகம் நமதென ஒலிக்கும் தமிழே
நம் சிந்தையால் வளரும் தமிழ்
மகிழ்ந்தது நமது கூட்டம் கண்டு

எழுத்தில் நம்மை கண்டோம்
வருத்தமின்றி ரசித்து மகிழ்ந்தோம்
தமிழால் சாதித்தது நிறைய
சேர்ந்தோமே இன்று மீண்டும் அதை உரைக்க

ஊர் புகழ் உலகப் புகழ்
எல்லாம் தமிழ் தந்தது
எழுத்து கொண்ட பிம்பம்
எல்லாம் முன்னால் நின்றது
தமிழ் வளர்ப்போம், சிறப்போம்''

''சாமி, இது நான் எழுதலை, ஏன் இப்படி''

''பக்தா, இந்த கவிதை நீ எழுதியது, இதை நீ அங்கே பிறிதொருவரை வாசிக்க வைத்து ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்து இருந்தாய், எனக்கு தெரியாதா?''

''உங்கள் கற்பனைக்கு அளவில்லை, நான் எழுதலை, நான் போகவும் இல்லை''

''எத்தனை சிறப்பாக இருந்தது தெரியுமா, ஆடலும், பாடலுமாய் சந்தோசத்தில் திளைத்து இருந்தார்கள், நீயும் தான். நீ அவளைத் தேடித்தான் அங்கே சென்றதும் அறிவேன்''

''போதும் நிறுத்துங்கள், நான் செல்லவே இல்லை''

''நீ இருந்தாய், பெண்கள் பெயரில் எழுதும் கீச்சரில் நீயும் ஒருவன்''

''இல்லவே இல்லை, பழி வேண்டாம்''

''பக்தா, என்னிடம் பொய் சொன்னது போதும். அது நீதான்''

''பெண் வேடமிட்டு எழுதி நான் என்ன சாதிக்கபோகிறேன்''

''பிறரை ஏமாற்றும் நோக்கம் இருக்கிறதே''

''எனக்கு எழுதவே தெரியாது''

''பக்தா, மெச்சினேன் உமது வீர தீரத்தை, நீ அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தாய்''

சட்டென விழித்துப் பார்த்தேன், இருளாக தெரிந்தது. என்னவென எழுந்து எனது மாடி அறையின் சன்னல் திறந்து பார்த்தேன்.

எவரோ ஒருவர் சத்தமாக பேசிய ஊர்ப்புகழ் உலகப்புகழ் எல்லாம் தமிழ் தந்தது என எனது அறையின் உள்ளே பாய்ந்து சென்றது.

மதியம் உறங்காதேனு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா என அம்மா சப்தம் போட்டுக்கொண்டே மாடிக்கு வந்து கொண்டு இருந்தார்.


Monday 28 April 2014

அருள்வாக்கு - அசரீரி

சின்ன சின்ன மழைத் துளிகள் பட்டு மண் மணம் எழுப்பிக் கொண்டு இருந்தது. மண் மணத்தை நுகர்ந்தாவரே நடக்கலானான் குரூரம் எண்ணம் படைத்த கோபாலன். எவரையாவது கவிழ்த்து விடவேண்டும் என்பதே இவனது ஆவல். இருப்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. ஆனால் விளையாட்டுத்தனம் இன்னும் இவனை விட்டு போகவில்லை. நல்ல மாநிறம், நல்ல உயரம், குறுகிய விழிகள், குறுகிய உடல்.

இவனது குணங்களை கண்டு எவருமே இவனுக்கு பொண்ணு தர முன்வருவதே இல்லை. இவனுக்கு கூட ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கேசவன். கேசவன் நல்ல உயரம், கருத்த நிறம். பெரிய விழிகள். சில வருடங்கள் முன்னர் சிரித்த முகத்துடன் வலம் வருவான். கேசவன், கோபாலனை விட மூன்று வயது அதிகம். கடந்த வருடம் திருமணம் ஆகி இருந்தது. நல்ல மனைவி. ஆனால் கேசவன் ஒரு பெண்ணை காதலித்து குடும்ப சூழலால் அந்த பெண்ணை மணம் முடிக்காது போய் அந்த பெண் விஷம் குடித்து இறந்து போனாள் என்றால் எவருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நடந்தது.

கேசவனின் குடும்பத்தில் அம்மா, அப்பா, அவனுக்கு என ஒரு தங்கை. தங்கை மிக நல்ல நிறம். அழகானவர். நன்கு படித்து இருந்தார். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள். அனேகமாக சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்றே நம்பி இருந்தார்கள்.

கேசவனும், கோபாலனும் எப்படி நண்பர்கள் ஆனால் என்பதே ஒரு சுவாரஸ்யம். ஒருமுறை சிறுவயதில் ஆசிரியர் கேசவனை நன்றாக அடித்துவிட அழுதபடி நின்று இருந்தான் கேசவன். எதுக்கு அழற என விசயம் தெரிந்து அந்த ஆசிரியரை அவருக்கே தெரியாமல் கோபாலன் கல்லால் அடித்தது கேசவனுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படித்தான் முதல் பழக்கம். இப்படி ஏதேனும் பிரச்சினை வரும்போதெல்லாம் கோபாலன் கேசவனுக்கு உதவி செய்வதில் குறியாக இருந்தான். அதற்கு காரணம் கேசவனின் தங்கை அவனது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள் என்பதை எல்லாமா எழுதி வைக்க வேண்டும்.

கோபாலனுக்கு கேசவனின் தங்கை வசந்தி மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதை கேசவனின் மீது காட்டி கொண்டு இருந்தான். நண்பன் என கேசவனின் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டான் கோபாலன். இப்படி முன் அறிவிப்பு எல்லாம் எழுதி எதை எதையோ நியாயப்படுத்த வேண்டி இருக்கிறது. சரி கதைக்கு வருவோம். என்னா கதை உலகம்.

''கேசவா, என்ன ஒரு மாதிரியாக இருக்க''

''ஒன்னுமில்லைடா''

''உன்னோட ஒய்ப் உன்னை அடிச்சிட்டாங்களா''

''அது எல்லாம் ஒண்ணுமில்லை''

''உன்னோட தங்கச்சிக்கு நல்ல வரன் அமையலையா''

''தங்கச்சிதான் பிரச்சினை''

''என்ன பிரச்சினை?''

''தங்கச்சிக்கு பிறக்க போற பொண்ணுதான் என்னை கொல்லுமாம்''

''எந்த படுபாவி அப்படி சொன்னது?''

''பனைமரத்து ஜோசியர் அருள்வாக்கு அய்யாவு தான் சொன்னார்''

''அவரை எதுக்கு பாக்க போன''

''நல்ல அருள்வாக்கு சொல்றாருறு சொன்னாங்கனு நான் பார்க்க போனேன், ஆனா இப்படி தலையில இடி விழறமாதிரி பண்ணிட்டார்''

''எத்தனாவது குழந்தை, எப்படி கொல்லும், எதுக்கு கொல்லும், எத்தனை வயசில கொல்லும் இதெல்லாம் விளக்கமா சொன்னாரா?''

''அதெல்லாம் சொல்லலை, ஆனா முத பொண்ணு குழந்தை ஐஞ்சு வயசு ஆனப்பறம் கொல்லுமுனு சொன்னார்''

''பஞ்ச பரதேசி, தன்னோட பொழைப்புக்காக எப்படி எல்லாம் கதைவிட்டு திரியறான் அந்த ஆளு, அவரைப் போய் நீ நம்புறியே''

''இல்லை, அவர் ரொம்ப பேருக்கு எல்லாம் சொல்றதில்லை, குறிப்பிட்ட பேருக்கு சொல்றார் எல்லாம் அப்படியே நடக்குது''

''இப்ப என்ன பண்ணலாம்''

''எங்காவது தனியா போயிரலாம்னு இருக்கேன்''

''நீ எதுக்கு போற, உன் தங்கச்சிய கொன்னு போட்டுருவோமா''

''என்ன சொல்ற?''

''பிரச்சினை, உன்னோட தங்கச்சி பொண்ணு தானே, உன் தங்கச்சிய கொன்னு போட்டா பிரச்சினை முடிஞ்சது''

''ஆனா, எப்படியாவது இது நடந்தே தீரும்னு சொல்லி இருக்கார்''

''அவர் கிடக்கார், ஒன்னு கொன்னு போடுவோம், இல்லை நான் கட்டிக்கிறேன், குழந்தையே பிறக்காம நான் பாத்துகிறேன்''

''உன் புத்திய காட்டுற பாத்தியா. அவளை கொன்னா காலகாலத்திற்கும் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்''

''இங்க பாரு, உன்னை காப்பாத்திக்க இரண்டே வழிதான், என்ன சொல்ற''

''உன்னை நம்பலாமா? ஆனா உனக்கு வீட்டுல பொண்ணு தரமாட்டாங்களே''

''நா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறவா?''

''பேசாம என் தங்கையை குடும்ப கட்டுப்பாடு பண்ண வைச்சிட்டா ஈசியா போயிரும்''

''அவளை கொல்றது ஈசி, ஆனா அவளை குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்றது எல்லாம் கஷ்டம்''

''அவகிட்ட இந்த விசயத்தை சொல்லி என்னை காப்பாதிக்கிரலாமா''

''நாசமா போச்சு, இதெல்லாம் நடக்காது''

''அப்ப என்னதான் பண்றது''

''குழந்தை பிறந்தப்பறம் எங்கனயாவது விட்டுரலாம், இது மூணாவது வழி, அல்லது குழந்தைய கொன்னுரலாம் இது நாலாவது வழி''

''இல்லை, அவ கல்யாணம் பண்ணவ கூடாது''

''சரி பார்ப்போம்''

கோபாலன் வசந்தியை கல்யாணம் பண்ணிக்கொள்வது என நினைத்து இருந்த திட்டம் பாழாகிப் போனது. கேசவன் நிச்சயம் இனி சம்மதிக்கமாட்டான். இந்த விபரத்தை வசந்தியிடம் சென்று சொல்லி வைத்தால் என்ன என யோசித்தான் கோபாலன்.

''வசந்தி, உன்னை உன் அண்ணன் கொல்லப் போறான், உன்னோட முத குழந்தை ஐஞ்சி வயசில உன் அண்ணனை கொல்லுமாம். அய்யாவு சொன்னாராம்''

''நிசமாவா சொல்ற, என் அண்ணன் அப்படி பண்ணாது, நீதான் என்னை மிரட்டுற''

''வேணும்னா அய்யாவு கிட்ட போயி கேளு''

வசந்தி அய்யாவுவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் சொன்ன விசயத்தை தெரிந்து கொண்டாள். வீட்டில் அனைவருக்கும் தெரிந்தது. கேசவனின் மனைவி யாசவி வசந்தியை கெஞ்சி கூத்தாடினாள். அது எல்லாம் புரட்டு என கேசவனின் பெற்றோர் சமாதானம் செய்து பார்த்தார்கள். வசந்தி கடைசியாக திருமணம் பண்ண மாட்டேன், குழந்தை பெற்று கொள்ள மாட்டேன் என உறுதி கொடுத்தாள்.

ஏழரை வருடங்கள் கழிந்தது. வசந்தியின் தோழி மாதவி தனது கணவன் வசந்தராஜ், தன ஐந்து வயது பெண் குழந்தை சுபி உடன் வசந்தி வீட்டிற்கு  எப்போதாவது வருவது போல பிறந்தநாள் அழைப்புக்கு சொல்ல வந்து இருந்தார்கள். வசந்தி திருமணம் முடிக்காமலே இன்னும் இருந்தார்.

''சுபிக்கு ஐஞ்சு வயசு நேத்து முடிஞ்சிருச்சி, அடுத்த வாரம் சனிக்கிழமை பிறந்தநாள், வந்துருடி''

''எப்படி வளர்ந்துட்டா, வந்துருறேன்''

சுபியை கேசவன் தூக்கி வைத்து கொண்டு தனது அறைக்கு சென்று பொருட்கள் காமித்து கொண்டு இருந்தான். கேசவன் அம்மா எல்லோருக்கும் காபி போட்டு வந்து இருந்தார். கேசவனுக்கும் அவனது அறையில் வைத்து சென்று இருந்தார். கேசவன் சுபியை கீழே விட்டுவிட்டு தனது அறைக்கு சென்றான்.

மாதவி, சுபி, வசந்தராஜ் கிளம்பி சென்றார்கள்.

''ஐயோ'' என  மாதவி கத்தினாள்.

எல்லோரும் ஓடிப் போய் பார்த்தார்கள். கேசவன் மரணம் அடைந்து இருந்தான். மாத்திரை பாட்டில் ஒன்று மூடி கழன்று  மேசைக்கு அடியில் கீழே விழுந்து கிடந்தது.

அருள்வாக்கு அய்யாவு சொன்னது சரியாகவே பலித்தது. எல்லோரும் வசந்தியை பார்த்தார்கள். வசந்தி தலையை குனிந்தாள். 

சரி இந்த ஏழரை வருடங்கள் முன்னர் நடந்த கதை ஒன்று சொல்வோம்.

மாதவிக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லை. என்ன பிரச்சினை என அறிந்த போது மாதவியிடம் உருவாகும் கரு முட்டை மிகவும் பலவீனமாக இருந்தது. முதிர்ச்சி அடைய கரு முட்டை மறுத்தன. முதிர்ச்சி அடையாத கரு முட்டைகள் கருத்தரிப்பதில்லை. FSH (follicle stimulating hormone) சிகிச்சை எடுத்த பின்னரும் எதுவும் பலிக்கவில்லை. IVF (in vitro fertilisation) கூட செய்து பார்த்தார்கள். அப்போதுதான் வசந்தியை அணுகினாள் மாதவி.

''வசந்தி, எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?''

''என்ன மாதவி?''

''எனக்கு குழந்தை பாக்கியமே இல்லை, குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு, ரொம்ப முயற்சி பண்ணினோம், ஆனா ஒன்னும் முடியலை. என்னை என் புருஷன் வெறுத்து ஒதுக்கிருவாரோனு பயமா இருக்கு. இன்னொரு முறை முயற்சி பண்ணுவோம், இல்லைன்னா வேறு வழி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்''

''தத்து எடுத்துகிரலாமே''

''நான் பெறணும், அப்பதான் அவர் பாசமா இருப்பார்''

''என்னது இப்படி பேசற''

''என்னோட நிலைமை அப்படி இருக்கு''

மாதவியின் அழுகை வசந்தியை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

''நான் என்ன பண்ணனும்''

''உன்னோட கரு முட்டைகள் தர முடியுமா?, டாக்டர்கிட்ட பேசி இதை வெளிய சொல்லாம பாத்துக்கிறேன்''

''இல்லை, அது வந்து''

''பிளீஸ், முடியாதுன்னு சொல்லாத, நான் செத்துருவேன்''

''கிறுக்கு மாதிரி பேசாத, எனக்கு பிறக்க போற முத பொண்ணு என் அண்ணணனை கொன்னுரும்னு சொல்லி தான் எனக்கு கல்யாணமே பண்ண வைக்க வேணாம்னு வீட்டுல சொல்றாங்க''

''உனக்கு எங்க பிறக்க போது, எனக்கு தானே பிறக்க போகுது, அது எல்லாம் அப்படி நடக்காது, எனக்கு இந்த உதவி செய்டி, உன்னோட உயிர்த்தோழி உயிரோட இருக்க வேணாமா சொல்லுடி''

மாதவியின் அழுகையும் அந்த பேச்சும் வசந்தியின் மதிதனை வேலை செய்யாமல் தடுத்தது. சரி என சம்மதம் தந்தாள்.

வசந்தியின் கரு முட்டை எடுக்கப்பட்டு, வசந்தராஜின் விந்துவுடன் இணைத்து குழந்தை கரு உருவானதும் மாதவியில் கருப்பையில் வைத்து பிறந்தவளே இந்த சுபி என்பது வசந்திக்கும், மாதவிக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும்.

இப்போது வருவோம். நிறைய மருந்து உட்கொண்டதால் கேசவன் உயிர் போனது என மருத்துவ அறிக்கை வந்தது. தற்கொலை என குறித்து வைத்தார்கள். சுபி விபரம் அறியாமல் அவளது வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள்

வசந்திக்கு தன்  குழந்தைதான் தன் அண்ணனை கொன்றது என புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.

(முற்றும்)

Friday 25 April 2014

கலாச்சார சீரழிவு

கிட்டத்தட்ட 23 வருடங்கள் முன்னர் ஒரு கதை எழுதினேன்.

''அண்ணன் தங்கை
உடன் பிறந்தவர்கள்
சிறுவயதில்  பிரிகிறார்கள்.

ஒரு கால கட்டத்தில்
கல்லூரியில் பயில்கிறார்கள்
இருவருக்கும் காதல் வருகிறது

திருமணம் வரை வருகிறார்கள்
உண்மை தெரிய வருகிறது
திருமணத்திற்கு தடை போடபடுகிறது

இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். ''

இதை காந்தியடிகளின் 125வது பிறந்த தினம் என நினைக்கிறேன். அனுப்ப நினைத்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டேன். அப்போது அவர்களுக்குள் காதல் மட்டுமா, களவும் இருந்ததா என்றெல்லாம் விவரிக்கும் தைரியம் இல்லை.

அதற்கு பின்னர் மறுபதிப்பு என ஒரு கதை எழுதி அனுப்பி ஆறுதல் பரிசு கிடைத்தது. வசன கவிதையில் எழுதி இருந்தேன்.

எப்போது அண்ணன் தங்கை கதையை எழுதி தூக்கி குப்பையில் போட்டேனோ அடுத்த வருடமே  அது போன்ற கதை படிக்க நேர்ந்தது. நொந்து கொண்டேன்.

திடீரென ஒரு கதை சிந்தனை.

அன்னை மகன்.
மகன் சிறுவயதில் தொலைந்து போகிறான்

இன்னுமொரு மகள் பிறக்கிறாள்
மகள் பிறந்த சில வருடம்
கணவன் இறந்து போகிறார்.

தொலைந்த மகனை
பதினெட்டு வயதில் காண்கிறாள் அன்னை

இருவரும் காதல் கொள்கிறார்கள்
தாய் மகன் என தெரியாமல்.

தாய் மீது மகன் காதல் கொள்வதை கூட கலாச்சார சீரழிவு என்றே சமூகம் கருதும்.

காதலை காமத்துடன் இணைத்து பார்த்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்க இயலும். கதை முடிகிறது. இதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிட்டு போகிறேன். 

Wednesday 2 April 2014

காதலே இல்லைன்னு சொன்னா

அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.
ஒருவழியாய் தைரியம் வரவழைத்து 'உன்னை எனக்குப் பிடிச்சி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன்' என சொன்னதும் 'செருப்பு பிஞ்சிரும்' என திட்டிவிட்டு போய்விட்டாள்.

எனக்கு அவமானமாக இருந்தது. அவளை பின் தொடர்ந்துசெல்ல என் மனம் இடம் தரவில்லை. வாழ்வது வீண் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். வீட்டில் சொல்லவும் தயக்கம்.

ஒருநாள் எதேச்சையாக அவளைப்  பார்த்தேன். பார்த்த மறுகணம் தலைகுனிந்தே இடம் அகன்றேன். இப்படியாக எனது காதல் தத்தளித்தது. அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வர சொன்னேன். அம்மா பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.

வாழ்வா சாவா என போராடிக் கொண்டு இருந்தேன். வாழ்வது என முடிவு எடுத்தேன். 

சாமியார் ஆகிவிட்டேன். 

Wednesday 26 March 2014

அறிவுகெட்ட

உன்னை நான் காதலிச்சேன்.
என்னை நீ காதலிச்ச.
எனக்குப் பிடிச்சது
உனக்குப் பிடிச்சது.
கல்யாணம் பண்ணிக்கலாம்னு
திட்டம் போட்டோம்.
நீயும்தான் சரின்னு சொன்ன.

அடி பாதகத்தி
காதலுல வந்த சின்ன சின்ன
சண்டைகள் எல்லாம்
அன்பின் தடயம்னு
நானும்தான் நம்பி இருந்தேன்
உன்னோட கோவத்தை எல்லாம்
பாசம்னு கதை படிச்சேன்

போராடி வீட்டுல வாங்கிய
சம்மதம் வைச்சி
போட்டேன் மூணு முடிச்சி
நம்ம சந்தோசத்துக்கு
பெரிய வலை விரிச்சி
நீயும்தான் கழுத்து நீட்டின

என்னைவிட நீ பெரிய படிப்பு
என்னைவிட நீ பெரிய பதவி
என்னைவிட நீ பேரழகி
எப்பவுமே பேதம் பாக்கலையே
இதையெல்லாம் என்கிட்டே
ஒருபோதும் நீ கேட்கலையே

ஆத்தாடி நீயும் என்
ஆசைநாயகி ஆன பின்னே
எல்லாமும் வித்தியாசம் ஆகுமா
இதையே ஒரு காரணம்
என நீ சொன்னா தகுமா

உன்னோட சேவகனா
நான் கிடக்கேன்
என்னை நீயும்
கை வுட்ராதே
கைகட்டி நானும் நிக்கிறேன்
உன் கண் பார்வையில்
இருந்து என்னை ஒதுக்காதே
பலமுறை கேட்டாலும்
படுபாவி உன் காது செவிடா

பாவ புண்ணியம் பாக்காம
கோர்ட் வாசப்படி
மிதிக்க வைச்சே
உன்னை கொடுமை
படுத்துறேனு கொடி பிடிச்ச
படிப்பு, பதவின்னு
சொல்லி வைச்ச

சண்டாள பயபுள்ளைக
உண்மை தெரியாம
நீதி சொன்னாக
இதை சரித்திரத்தில
தப்பாக குறிச்சி வைப்பாங்களே

எல்லாம் இந்த
அறிவுகெட்ட





Friday 14 March 2014

அவள் என்னை ஒதுக்கினாள்

என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என தெரியாது. நான், என் மாமா மகள், என் மனைவி, என்னுடன் வேலை பார்த்த பெண் அப்புறம் புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண் என மூன்று வருடங்கள் முன்னர் ஒரு சின்ன கதை சொல்லி இருந்தேன். அந்த கதைக்கு அப்புறம் என்னைப் பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏதும் வரவில்லை. ஆனால் இப்போது ஒரே ஒரு தடவை மட்டும் பேசிவிட்டு சென்று விடலாம் என இருக்கிறேன். மீண்டும் எப்போது நான் வருவேன் என எனக்குத் தெரியாது. இனிமேல் இது குறித்து நான் உங்களிடம் சொல்லாமலே போகலாம்.

கல்யாணம் ஆகி நான்கே வருடங்கள் தான் ஆகி இருந்தது. ஒரு மகள் பிறந்து ஓராண்டு முடிந்து இருந்தது. புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண்ணின் மீதான காதல் துளிர் விட்டதும் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் காதலை உணர்ந்து இருந்தேன். அன்று இரவு மனைவியிடம் எனக்கு நேர்ந்து இருக்கும் விஷயத்தை சொன்னதும் நீங்கள் நம்பினால் நம்புங்கள், கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து எனது தலையில் ஓங்கி அடித்து விட்டாள். எனக்கு வலி பொறுக்க இயலவில்லை. தலை புடைத்து வீங்கி நின்றது.

'ஏன்டா, கட்டின பொண்டாட்டி நான் இருக்க இன்னொருத்தி மேல காதல்னு சூடு சொரணை இல்லாம அதுவும் என்கிட்டே வந்து சொல்வ' அதுதான் முதல் தடவை என் மனைவி என் மீது இத்தனை அளவுக்கு அதிகமான அகங்காரம் கொண்டது.

அன்று இரவு முழுவதும் விசும்பிக் கொண்டு இருந்தாள். 'எடுபட்ட பயலே, இனிமே எவளைப் பத்தியாவது பேசின உன்னை கொலை பண்ண கூட தயங்கமாட்டேன். உன்னை நம்பி தனிக்குடித்தனம் வந்தேன் பாரு, அது என் தப்பு தான். நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாரிச்சு தனிச்சி வாழுறேன் பாரு' என்று அந்த விசும்பலின் ஊடே சொல்லிக் கொண்டு இருந்தவள் எப்போது தூங்கினாள் எனத் தெரியாது. காலையில் அவளைப் பார்த்தபோது அவளது கண்கள் எல்லாம் வீங்கி இருந்தது. கொஞ்சமும் கோபம் குறையாமல் இருந்தாள். நான் என் தலை வீக்கம் குறையட்டும் என மூன்று நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்தேன். எத்தனையோ சமாதானம் பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவள் கொஞ்சமும் கேட்பதாக இல்லை.

கொஞ்சம் வீக்கம் அன்றே குறைந்துவிட்டது. கடைக்கு சென்று சாப்பிடலாம்  வா என அழைத்தேன். 'ஏன் அவளுக எவளாச்சும் அங்க வரேன்னு சொல்லி இருக்காளுகளா' என்று அவளே அவர்களை பற்றி பேசினாள். நான் இல்லை என்று சொல்லிவிட்டு அதிகம் பேசவில்லை. இங்க பாரு, நீயில்லாம எனக்கு வேறு யாரும் இல்லை. ஏதோ புத்தி கொஞ்சம் புரண்டு போச்சு, இனிமே இப்படி நடக்கமாட்டேன் என்று இத்தோடு ஆயிரம் தடவை மேல் சொல்லி இருப்பேன்.

'உன்னை நம்பி எப்படி இருக்கிறது, அன்னைக்கே அந்த சிறுக்கி வீட்டுக்கு வந்தப்ப காலை வெட்டி அனுப்பி இருக்கணும். நீ எவளோடையும் போயிர கூடாதேனுதான் நான் உன்னோட உறவு வைக்க சம்மதிச்சேன். ஆனா நீ இப்ப காதல்னு சொல்லிட்டு கண்டவளோட அலைய ஆசைப்படற. உனக்கு இனிமே என்னோட உறவு கிடையாது, ஒட்டும் கிடையாது. அப்படி உனக்கு சுகம் தேவைப்பட்டுச்சினா அதான் இருக்காளுக அந்த ரெண்டு பேரு, அவள்கிட்ட போ' இப்படி எல்லாம் வார்த்தைகளை அவள் உதிர்த்து கொட்டுவாள் என ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை. அவளின் கோபம் தணியும் என்றே பார்த்தேன். ஆனால் வாரம் ஆகியது. கோபத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு சின்ன விசயத்துக்கு இத்தனை தண்டனையா என என்னை நானே நொந்து கொண்டேன். ஒரு மாதம் கடந்து போனது. அவள் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்தாள். அவளை கல்யாணம் கட்டியபோது எப்படி என்னை பிரமச்சரியம் அனுபவிக்க வைத்தாளோ அதைப்போலவே இப்போதும் என்னை அனுபவிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இந்த சூழல் காரணமாக நான் பக்கத்து அலுவலக பெண்ணை மட்டுமல்ல எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதை தவிர்த்து இருந்தேன்.

எனக்கு வேலை கிடைச்சிருக்கு. உன் அம்மாகிட்ட பேசினேன், அவங்க வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க, என்னோட அம்மாவும் அப்பாவும் நம்மளோட தங்கி இருப்பாங்க என சொன்னதும் எனக்கு மறுத்து பேச மனம் வரவில்லை. உன் விருப்பப்படியே செய் என சொல்லிவிட்டு வேலைக்கு செல்வது வீட்டுக்கு வருவது மகளுடன் கொஞ்சி விளையாடுவது என்று இருந்தேன். அவள் முகம் கொடுத்து கூட பேச மறுத்தாள். நம்பிக்கை போய்விட்டது என்றால் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து கொண்டு இருந்தேன்.

அன்று அலுவலகத்திற்கு என்னுடன் முன்னால் வேலை பார்த்த பெண் வந்து இருந்தாள். வீட்டில் உள்ள பிரச்சினையை சொன்னேன். அவளை விவாகரத்து பண்ணிட்டு என்னோட வந்துரு, எதுக்கு இப்படி உன்னோட இளமை காலத்தை வீண் பண்ற, உன்னை நான் நல்லா பாத்துப்பேன் என்று காதல் மொழி பேசினாள். அதில் நான் கரைந்துவிடாது இருந்தேன். இல்லை இனிமே என்னோட நீ பேசாத, என்னை பார்க்க வராதே அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது. நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என சொன்னதும் அலுவலகத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அவளது காலில் இருந்த செருப்பை கழட்டி எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 'சீ நீயெல்லாம் ஒரு நண்பன்னு பேச வந்தேன் பாரு, உன் பொண்டாட்டிக்கு பதிலா என்னை உன் பொண்டாட்டியாக்க எத்தனை கேவலமா பேசுவ என சொல்லிவிட்டு போய்விட்டாள். நான் குற்றுயிராய் நின்று இருந்தேன். நடந்தது வேறு என அங்கிருப்பவர்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. எல்லோரும் என்னை கேவலமாக பார்ப்பது போன்று தோன்றியது. அடுத்த இரண்டு வாரங்களில் நான் வேறு வேலை மாறி இருந்தேன்.

எனது மனைவியும் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், என் மாமியார், மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன்னால் சிரித்து பேசுவது போல நடிப்பாள், ஆனால் தூங்க செல்லும்போது மகளை எங்கள் இருவருக்கும் இடையில் தூங்க வைத்தே தூங்குவாள். தாம்பத்யம் என்பதை மறந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது. இந்த காம இச்சையை எத்தனை சாதுர்யமாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறாள் என என்னால் கொஞ்சம் கூட நம்ப இயலவில்லை. நானும் அவளின் உணர்வுகளை மதித்து அதிகம் தொந்தரவு தராமல் இருந்தேன்.

ஆனால் ஓர் இரவு என்னால் பொறுத்து கொள்ள இயலாமல் அவளிடம் கெஞ்சினேன். இதுவரை என்னால் எந்த பிரச்சினையும் இல்லை என மன்றாடி அவளுடன் உறவு கொண்டேன். அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். விருப்பம் இல்லையா என்றே கேட்டு வைக்க, உனக்கு சுகம் கிடைச்சா போதும்ல என சொல்லிவிட்டு என் வாய் அடைத்தாள். எப்படி இப்படி காம இச்சை இன்றி இவள் போக கூடும்.

ஒரு மருத்துவரை அணுகினேன். மொத்தமாக அனைத்து கதையையும் கூறி முடித்ததும் அடுத்த வாரம் வா  என சொல்லி அனுப்பினார். எனக்கு காம இச்சை தோன்றும்போது அவளை பணிய வைத்தேன். அவளும் எவ்வித உணர்வு இன்றி சரி என்றே இணைந்தாள். எனக்கு இந்த பிரச்சினைக்கு முன்னால் அவள் நடந்து கொண்ட விதமும், இப்போது நடந்து கொண்டு இருக்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது. அடுத்த வாரம் சென்றபோது என்ன நடந்தது என கேட்டார். சொன்னேன். சில மாதங்கள் பின்னர் அழைத்தார், சென்றேன். ஒருமுறை கூட அவளாக காம இச்சை கொண்டு என்னை அணுகவில்லை என சொன்னேன். உங்ககிட்ட சில விசயங்கள் பேசணும் என மாலை பூங்காவிற்கு வர சொன்னார். சென்றேன்.

'உங்க மேல உங்க மனைவிக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை இனிமே வருமான்னு சொல்லவும் முடியாது. அவங்களுக்கு காம இச்சை இருந்தாலும் அதை தீர்த்துக்கொள்ள நீங்கதான் வழி. ஆனாலும் அந்த காம இச்சையை எளிதாக நீங்கள் நடந்து கொண்ட நம்பிக்கை துரோகத்தை நினைச்சி அவங்களால கட்டுபடுத்திக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் உங்களை அவங்க இழக்கவும் விரும்பலை, அதனால நீங்க விரும்பற நேரம் எல்லாம் உங்களோட ஆசையை பூர்த்தி செஞ்சா போதும்னு இந்த விசயத்தில நடந்துக்கிறாங்க. நீங்க உங்க காம இச்சையை குறைக்கணும், அவங்களே உங்களை விரும்பி வரணும். அதுக்கு இன்னைக்குல இருந்து அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க. குறைவில்லாத அன்பு, எந்த விசயத்துக்கும் சத்தம் போடாம இருப்பது மாதிரி நீங்க நடந்துக்கோங்க. இதுதான் நீங்க கடைபிடிக்க வேண்டியது. காமம் அல்லாத காதலை நீங்க அவங்ககிட்ட தந்தால் ஒழிய உங்களால உங்க மனைவியை நீங்க திரும்ப பெற இயலாது.

பெரும்பாலான ஆண்கள் தங்களோட காம இச்சை தீர்ந்தா போதும்னு நடந்துக்குவாங்க, மனைவியோட மனசை அவங்க புரிஞ்சிக்கிறதே இல்லை. மனைவி உறவுக்கு சம்மதிக்கிறானு எல்லாம் நல்லா இருக்குணு நம்பி வாழ்க்கையை ஒரு ஏமாத்தமா நடத்துறது இந்த உலகத்தில் வாடிக்கை. ஆனா நீங்க அப்படி வாழ வேண்டாம்னு சொல்றேன். அன்னியோனியம் அப்படிங்கிறது இரண்டு மனசு சேர்ந்து வரது. அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் தாசி முறை, விபச்சாரம் எல்லாம் ஒரு ஆணுக்கு காம இச்சை தீர்க்கும் வழின்னு வைச்சிட்டாங்க. பெண்ணுக்கு காம இச்சை இல்லாமலா இருக்கும். இதுவே நீங்க உங்க மனைவிக்கு முன்னால வேற யாருகிட்டயாவது உறவு வைச்சீங்களா, இல்லையே. எப்படி அப்போ கட்டுபாடா இருக்க முடிஞ்சது.

பாலினத்தை தீர்மானிக்கிற குரோமசோம்கள் முதற்கொண்டு காம இச்சையை தீர்மானிக்கிற ஹார்மோன்கள் இருப்பதாகவே அறிவியல் உலகம் நம்புறது. பாலின ஹார்மோன்கள் பெண்கள் பருவம் அடையறப்ப பிட்யூட்டரி சுரப்பி  மூலம் இந்த இரண்டு Luteinising Hormone (LH) and Follicle Stimulating Hormone (FSH)  சுரக்கிறது.  கருமுட்டை உற்பத்தி பண்ற இடத்தில் இருந்து  oestrogen and progesterone சுரக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பெண் என்பவளோட உடலில் எல்லா மாற்றங்களும் உருவாகிறது. மார்பகங்கள் வளர்ச்சி முதற்கொண்டு, மாதவிடாய் காலங்கள் எல்லாம்  இந்த நிலைக்கு அப்புறம்தான். இதே மாதிரி ஆண்களிலும் LH, FSH சுரக்கிறது. ஆனால் விரைப்பையில் இருந்து testosterone சுரப்பதன் மூலம் தான் ஒரு ஆண், ஆண் தன்மையை பெறுகிறான். மீசை வளர்ச்சி முதற்கொண்டு. இந்த testosterone பெண்களிலும் எட்டு மடங்கு ஆணை விட குறைவாகவே சுரக்கிறது.

எல்லா விலங்கினங்களும் தாங்கள் உறவு கொள்ள தயாராக இருக்கிறோம் அப்படின்னு ஒரு குறிப்பு உணர்த்தும். அதைப்போலவே மனிதர்கள் உணர்த்துவாங்க. பொதுவா பெண்கள் மாதவிடாய் தொடங்கிய காலத்தில் இருந்து பதினாலாவது நாள் கருமுட்டை வெளியேறும். அந்த கருமுட்டை வெளியேறும் ஆறு நாட்கள் முன்னர், ஆறு நாட்கள் பின்னர் வரை அவர்களுக்குள் காம இச்சை அதிகமாக இருக்கும். அப்போது அவர்களின் நடவடிக்கை எல்லாம் கவனித்தால் ஒரு மாற்றம் இருக்கும் என்றே சில ஆராய்ச்சி முடிவுகளில் சொல்றாங்க. அதே வேளையில் இப்படி கருமுட்டை வெளியாகும் தருணத்தை வைத்து ஒரு பெண்ணின் காம இச்சையை கணிப்பது தவறுன்னு சொல்றாங்க. இப்படி ஆய்வக முடிவுகள் எல்லாம் வைத்து ஒரு உறவின் காம இச்சையை தீர்மானிக்ககூடாதுன்னு சொல்வாங்க. இப்போ உங்க வாழ்க்கையே ஒரு உதாரணம். உங்க மனைவிக்கு காம இச்சை குறைந்து போனதற்கு காரணம் அவங்களோட ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை. நீங்கதான்.

இப்படித்தான் 66 தம்பதிகளை தேர்ந்தெடுத்து பெண்களிடம் அவங்க ஆண்கள் கிட்ட என்ன பிடிக்கும்னும் இன்னொருத்தர் கிட்ட என்ன பிடிக்கும்னு கருமுட்டை வெளியாகும் தருணம் , கருமுட்டை வெளியாகாத தருணங்களில் ஒருவரோட அறிவு, புகைப்படம், மேலும் சில உடல் வடிவமைப்புகள் கொடுத்தாங்க. அதாவது ஒரு பெண் 66 ஆண்களை பார்த்து எப்படி நினைக்கிறாங்கன்னு சொல்லணும். நம்ம ஊருனா என்ன பொழப்புன்னு சொல்லிட்டு போயிருவாங்க. ஆனா அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொன்னதுன்னா எந்த பெண்ணும் ஒரு ஆணின் அறிவு குறித்து காம இச்சை கொள்வதில்லை. மாறாக ஆணின் தோற்றத்தை கொண்டு காம இச்சை இந்த கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இருந்ததுன்னு கண்டுபிடிச்சாங்க. இதே மாதிரி வேறொரு ஆராய்ச்சியில் பெண் தான் கருமுட்டை வெளியாகும் தருணத்தில் கொஞ்ச நாள் உறவுக்கு ஏற்ற கொஞ்சம் கரடு முரடான தசைப்பிடிப்புள்ள ஆணையும், கருமுட்டை வெளியாகத தருணத்தில் அன்பு உள்ள ஆணை நெடுநாள் அவர்களுடன்  இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதா சொல்றாங்க. அதாவது காம இச்சை அற்று.

இப்ப பெண்கள் கரு தடுப்பு மாத்திரைகள் உட்கொண்டால் இந்த கருமுட்டை வெளியாகும் உணர்வுகள் எல்லாம் மறைந்து போனதா சொன்னாங்க. ஆனால் ஆண்களுக்கு இது போன்ற ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை என்றாலும் வயது ஆக ஆக testosterone அளவு குறைய அவர்களின் காம இச்சை குறையும்னு சொன்னாங்க. காம இச்சை அற்ற ஆண்கள் உண்டு என்பது அவங்களோட எண்ணம்.

இந்த மொத்த ஆராய்ச்சி தப்புன்னு சொல்லி கருமுட்டை உருவாகும் தருணத்தில் பெண்கள் நன்றாக ஆடை உடுத்துவார்கள் என்றெல்லாம் சொன்னாங்க. கிராமப்புறம் எல்லாம் இதை சொன்னா ச்சீ கருமம் என்றே போயிருவாங்க. இதில் கலாச்சாரம் எல்லாம் நிறைய பங்கு பெறுது. தங்களோட ஆசைகளை மனதில் அடக்கி கொள்ளும் பெண்களே அதிகம்.

ஒரு பெண் கோபமாக அழுது கொண்டு தலைவலியுடன் இருக்கும்போது காம இச்சையை நினைத்துக்கூட மாட்டார். பெரும்பாலான பெண்கள் இந்த காம இச்சை குறைவிற்கு அவர்களது ஹார்மோன்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆனா நிறைய பேருக்கு இந்த ஹார்மோன்கள் பத்தி எல்லாம் தெரியாது கூட.

யாரிடமாவது நீங்க போய் எப்ப காம இச்சையுடன் கவர்ச்சியா உணருறீங்கனு  கேட்டா அவங்களால உறுதியா சொல்ல முடியாது. ஒரு ஆணின் அல்லது பெண்ணின் இன உறுப்பில் ஏற்படும் எழுச்சிக்கும், உச்ச நிலைக்கும் காம இச்சைக்கும் வேறுபாடு உண்டு. அதாவது சுய இன்பம் மூலம் ஒரு பெண்ணோ ஆணோ தனது உச்சத்தை அடைந்து கொள்ளலாம், ஆனால் இன்னொருவருடன் உடல் உறவு கொள்ளும் காம இச்சை என்பது அத்தனை எளிதாக தோன்றுவது இல்லை. காம இச்சையே இல்லாத ஆணோ, பெண்ணோ எப்படி காம இச்சைக்கு உட்படுத்துவது என்பது குறித்து மருத்துவ உலகம் அதிக செலவு செய்யவில்லை. வயாகரா மாத்திரை ஆணின் இன உறுப்பின் எழுச்சிக்காக உருவாக்கப்பட்டது, காம இச்சைக்கு என்று இல்லை.

oestrogen காம இச்சையை அதிகரிக்காது காம இச்சையை ஆண் பெண் இருவருக்கும் அதிகரிக்க செய்வது testosterone என முப்பது ஆண்டுக முன்னர் ஒரு பெண் சொன்னாங்க. கடந்த 40 வருடம் பெண்ணுக்கு testosterone கொடுத்து காம இச்சை அதிகரிக்குமா என பார்த்தபோது அந்த பெண்ணின் இன உறுப்பி மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. காம இச்சை மாறாது இருந்தது.

இந்த காம இச்சை அதிகரிப்பது நமது எண்ணம் சார்ந்தது என கூறி இருக்காங்க. ஒரு பெண் தாய் ஆனபின்னர் காம இச்சை குறையும், இப்படி நிறைய காரணம்  இருக்கிறது. ஆகவே நான் உங்ககிட்ட் கேட்டுக்கிறது என்னன்னா நீங்க அன்பும் பாசமும் நிறைந்த கணவனாய் உங்க மனைவியின் உணர்வினை புரிந்தவராய் இருக்க வேண்டும்.

டாக்டர் பேசியதை கேட்டபின்னர் நான் வெகுவாக மாறி இருந்தேன். நீங்க நம்பினா நம்புங்க மூன்று மாதம் பின்னர் என் மனைவி என் மீது பிரியம் அதிக காட்டினார். இனி பிரியம் அகன்றுவிடாது இருக்க பாசத்துடன் இருந்தேன்.

முற்றும். 

Sunday 2 March 2014

காதல் மட்டும்

                                                  காதல் மட்டும் - சிறுகதை

                                                   வெ.இராதாகிருஷ்ணன்

இந்த வாழ்வு நமக்காக என்ன வைத்து இருக்கிறது எனத் தெரியாது. ஆனால் பல மகிழ்ச்சியானத் தருணங்களும், மறக்க இயலாத நினைவுகளும் நம்முடனே வந்து சேர்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மனதுக்குப் பிடித்துப் போன சுபாவைப் பற்றி முன்னரே நிறைய அறிந்து வைத்திருந்தேன். சுபாவிடம் காதலைச் சொல்லும் அளவுக்கு அத்தனை தைரியம் அப்போது இருந்தது இல்லை. அவள் வேறு கல்லூரி நான் வேறு கல்லூரி ஆனபிறகும் மனதில் அவளது எண்ணமாகவே இருந்தது. பருவத்தில் வரும் காதல் போல மாறிவிடும் என்று பார்த்தால் அவள் மீதான காதல் தொடர்ந்தபடியே இருந்தது.

ஒருமுறை அவளைச் சந்தித்தபோது நான் என்ன படிக்கிறேன் என்ன செய்கிறேன் என மிகவும் ஆர்வமாகக் கேட்டாள். ஒருவேளை அவளும் என்னைக் காதலித்துக் கொண்டு இருக்கக்கூடும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்போதும் கேட்கவும் இல்லை. அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் சென்றபிறகு ஒருமுறை அவளைப் பார்த்தேன். அப்போதும் அவள் குறித்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் இருப்பது கண்டு நானே என் மனதை எண்ணி வியந்தேன்.

அப்போது நான் சேர்ந்த வேலை குறித்துச் சொன்னேன். அவளோ தற்போது தான் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் எனச் சொன்னாள். சூழல் சரியானப்பிறகு வேலைக்குப் போ எனச் சொல்லிவிட்டு வந்தேன். என்றோ பார்க்கிற முறையில் கூட சில சொற்களை மட்டுமே பேசிவிட்டு வந்தது எனக்குப் புரியாமல் இருந்தது. அப்போதுதான் வீட்டில் என் அம்மா என்னிடம் எனக்குப் பெண் பார்ப்பதாகச் சொன்னார். நான் அவசரம் அவசரமாக மறுத்துவிட்டு சுபாவை காதலிப்பதாகச் சொன்னேன். வீட்டில் அன்று பெரியப் பிரச்சினை ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்கக் கூடாது என அடுத்த வாரமே சுபாவைச் சந்தித்தேன்.

''சுபா உன்னை நான் நிறைய வருசமா காதலிக்கிறேன் ஆனா உன்கிட்ட சொல்ல தைரியம் வந்தது இல்லை, என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா''

''தீபக் உன்னை எனக்கும் நிறையப் பிடிக்கும், ஆனால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது வேணும்ன்னா காதலிக்கலாம்''

சுபா சொன்னதை நினைத்து நினைத்து எனக்கு அன்று உறக்கமே இல்லை. காதலின் அடுத்த நிலை கல்யாணம் என்றுதானே சொல்லப்பட்டு இருக்கிறது. காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனில் கல்யாணம் பண்ணிக்கொண்டு காதலிக்கலாம் என்று அவளிடம் சொல்ல வேண்டும் என மனம் நினைத்தது. எதற்கு இப்படி சட்டென திருமணமே வேண்டாம் என சொன்னாள் என்பது குழப்பமாக இருந்தது. சில நாட்கள் போகட்டும் என இருந்தேன்.

திடீரென ஒருநாள் சுபாவை பெண் பார்க்க போவோம் அவளுக்குத் தகவல் சொல்லிரு என வீட்டில் சொன்னதும் அவள் சொன்ன விசயத்தைச் சொன்னதும் வீட்டில் கோபம் கொண்டார்கள். நாம போய் பேசுவோம் இல்லைன்னா உனக்கு வேறு பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் என உறுதியாகச் சொன்னார்கள்.

சுபாவின் வீட்டிற்கு பெண் பார்க்கச் சென்றோம். சுபா எவ்வித கோபமும் இல்லாமல் மெல்லிய குரலில் சொன்னாள்.

''நானும் தீபக்கும் காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் பண்ணிக்கிற மாட்டேன், இப்படியே காதலித்தபடியே இருப்பேன்''

அவ்வளவுதான், என் அப்பா கடுமையாகச் சத்தம் போட்டார்.

''அடுத்த சந்ததினு இல்லாம ஆயிரும் இந்தப் புள்ளையை இங்கேயே தலைமுழுகிட்டு வா'' விறுவிறுவென வெளியேறினார்.

''எங்களை மன்னிச்சிருங்க'' என நானே மன்னிப்பு கேட்டேன்.

''நாங்க எவ்வளவு சொன்னாலும் அவ கேட்கமாட்டேங்கிறா. கல்யாணம் பிடிக்காதுனு ஒரேயடியா சொல்றா நாங்க என்ன பண்ணட்டும்'' சுபாவின் தந்தையின் குரல் உடைந்து போயிருந்தது.

வேறு வேலை தேடிக்கொண்டு அதைக் காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியேறியபோது சுபாவை சென்று அழைத்தேன். அவள் வர மறுத்தாள். சுபாவுடன் இருந்த தொடர்புக்கு சற்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால் மனதில் அவளது எண்ணங்களே இருந்தது. வேறொரு பெண்ணை நினைத்துப் பார்ப்பது என்பது அனலில் பட்ட புழு போல மனம் துடித்தது. காலம்தான் எத்தனை வேகமாகச் செல்லக் கூடியது. ஒரு வருடத்திற்குள் தங்கையின் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அதற்காகவே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சுபாவை சந்தித்து பேசியபோது அவள் மனதில் எவ்வித மாற்றமும் இல்லை.

''சுபா என்னைத்தான் நீ நினைச்சிட்டு இருக்கியா''

''நீ என்னைய நினைச்சிட்டு இருக்கிறப்ப நான் உன்னை நினைச்சிட்டு இருக்க மாட்டேனா''

''கல்யாணம் பண்ணிப்போம் சுபா, என் தங்கை லதாவுக்கு கல்யாணம் பண்ற இடத்தில ஒரு வரன் இருக்கு அதை எனக்கு முடிக்கலாம்னு பார்க்கிறாங்க''

''நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கோ தீபக், வாய்ப்பைத் தவற விட்டுறாத''

அவளது சொற்கள் என்னைச் சீண்டுவது போல இருந்தது.

''உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லைன்னா இப்படியே இருக்கிறேன்''

''காதலிச்சிக்கிட்டே''

சிரித்தாள். அவளையும் விட்டு விலக இயலாமல் வேறொன்றை கைப்பற்ற மனம் இல்லாமல் தவித்தேன். அவளது உறுதி என்னை வியப்படையச் செய்தது. மறுபடியும் என்னோடு வருமாறு அழைத்தேன். அதற்கும் சம்மதிக்க மறுத்தாள்.

தங்கையின் வளைகாப்பு வந்தது. அப்போது ஊருக்கு சென்றபோது அவள் ஒரு வேலையில் சேர்ந்து இருப்பதாகச் சொன்னாள்.

''இப்போதாவது சொல் சுபா''

''தெய்வீகம்னா என்ன தீபக்''

''தெரியல, நீயே சொல்''

''சாத்திரம், சடங்கு, வழிபாடு எனும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாத தூய்மை, உண்மைதான் என்னைப் பொருத்தவரை தெய்வீகம்''

''அதுக்கென்ன, அதுக்கு ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லனும்''

''சாத்திரம் சடங்குகளில் விருப்பம் இல்லை''

''சரி சேர்ந்து வாழ்வோம்''

''காதலித்தால் சேர்ந்து வாழனும்னு இருக்கா என்ன''

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சென்றுவிட்டேன். வாரம் ஒருமுறை சுபா மறுக்காமல் என்னை அழைத்துவிடுவாள். நானும் அவளை அழைத்துப் பேசுவது உண்டு. கல்யாணம் என்ற பேச்சை நான் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.

தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தபோது, அவனுக்கு மொட்டை எடுக்கும் போது என ஊருக்கு வந்து போனேன். நான் சுபா என்ன முடிவு எடுக்கிறாளோ அதுவே என் முடிவு எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன். சுபா குறித்து என் பெற்றோர்கள் எதுவும் தவறுதலாகப் பேசாது இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

சுபாவின் வீட்டிற்குச் சென்று என் தங்கையின் கணவர் வீட்டார் சென்று  மிரட்டவும் அவளது பெற்றோர்களை வேறு வீடு பார்க்கச் சொல்லி வீட்டின் உரிமையாளர் சொன்னதும் எனக்கு சுபா தகவல் சொன்னாள். நான் உடனே அவள் வேலை புரியும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டினை வாங்க ஏற்பாடு செய்து அவர்களை அங்கே குடியமர்த்தினேன். அப்போது கூட அவள் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும் நான் இந்த உதவியை ஏற்றுக்கொள் உனக்கு யாரும் தொல்லை தரமாட்டார்கள் என உறுதி சொன்னேன். அப்போது கூட என்னைத் திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் எனும் மனமாற்றம் அவளுக்கு ஏற்படவில்லை.

எனது தங்கை கணவர் வீட்டில் இனிமேல் சுபாவிற்குத் தொல்லை தந்தால் நானே காவல் நிலையத்தில் புகார் தருவேன் என மிரட்டி வைத்தேன். இனிமேல் உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என தங்கை சொற்களை அள்ளி வீசினாள். எங்களுக்கு வயது முப்பத்தி மூன்று ஆனது. சுபாவின் பெற்றோர்கள் சுபாவை எவ்வித வறுபுறுத்தலும் பண்ணாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த வருடமே என் அம்மா நோய்வாய்ப்பட்டது கண்டு ஊருக்கு ஓடோடி வந்தேன்.

''நான் சாகுறதுக்கு முன்னே கல்யாணம் பண்ணிக்கோப்பா, இல்லைன்னாலும் பரவாயில்லை நீங்க மகிழ்ச்சியா இருந்தா போதும்''

அந்தச் சொற்கள் என்னைக் கலங்க வைத்தது. சுபாவின் வீட்டை நோக்கிச் சென்றேன். அவளது தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

''சுபா உன் அப்பா, என் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிப்போம்''

''தீபக் காதலிச்சிட்டே இருப்போம், கல்யாணம் மட்டும் வேண்டாம்'' அவளது விழிகளும் கலங்கி இருந்தது.

சுபாவின் அம்மாதான் சொன்னார்.

''தம்பி அவதான் இப்படி இருக்கிறானா நீங்க ஏன் உங்க வாழ்க்கையை வீணாக்கனும் பேசாம ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா இருங்க''

எத்தனை எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. மனதில் சுபா நிறைந்து இருந்தாள்.

''சுபாதான் என்னுடைய மகிழ்ச்சி'' சொல்லிவிட்டு நடந்தேன். கலங்கிய விழிகளின் ஊடே சுபாவின் இதழ்களில் புன்னகை நிறைந்து இருந்தது. சுபாவுக்கு வீடு வாங்கித் தந்த விசயம் தெரிந்து தங்கை என்னுடன் ஏகத்துக்குச் சண்டை போட்டாள்.

''பெத்த தாய் உசிர விட உன்னோட காதல் பெரிசா ஒரு கல்யாணத்தை பண்ணித்தொலை''

அச்சிறு பெண்ணின் சொற்கள் என்னை அதிர்வுறச் செய்தன.

''அன்னைக்கு உறவு வேணாம்னு சொன்ன, இன்னைக்கு என் வீடு உனக்குச் சொந்தமா''

முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

''அம்மாவின் கைகளைப் பிடித்தபடி என்னை மன்னிச்சிருமா'' என்றேன்.

''நீ என்ன தப்பு பண்ணின, காதலிச்சிட்டுதான இருக்க உன் மேல, அந்தப் பொண்ணு மேல கோபம் எல்லாம் இல்லைப்பா, தங்கமான பொண்ணுப்பா ஏனோ அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை'' அம்மாவின் அந்த மனமாறுதல் என்னை என்னவோ செய்தது. அன்று இரவே அம்மா இறந்து போனார்.

சுபா கதறி அழுத காட்சி என்னை என்னவோ செய்தது. ஈமகாரியங்கள் முடித்த பின்னர் வேலைக்குச்  செல்ல கிளம்பினேன். அப்பா என்னுடன் வர மறுத்தார். தங்கையிடம் அப்பாவை அழைத்து போகச்  சொன்னேன். அங்க என்ன வாழுது என்றாள். அம்மாவின் நகைகள், புடவைகள் எல்லாம் என் தங்கைக்கு என ஆனது. அப்பாவை அழைத்துச் செல்ல தங்கை மறுத்த கணத்தில் அப்பா உடன் செல்ல மறுத்தார். சுபாவும் அங்குதான் நின்று கொண்டு இருந்தாள்.

''டேய் பெத்தது நீங்க உங்க வழினு போயீட்டீங்க, பெறாத மகளா எங்களை கண்ணுக்குள்ள வைச்சி பாத்துக்குச்சி'' சுபாவை கைகாட்டி குலுங்கி குலுங்கி அழுதார். எனக்கு அப்போது சுர் என தைத்தது. வலித்தது.

சுபா வேறொரு அறை சென்று மிச்சம் அழுதாள்.

அவளைத் தேற்றிட நன்றி சொல்லிட எங்கே சொற்கள் தேடுவேன். பார்த்துக்கோ சுபா என வேலைக்குச் சென்றேன். இனம் புரியாத வலி. 

மேலாளரிடம் வேலையை ராஜினாமா செய்வதாக சொன்னேன். அவர் என்னை சத்தம் போட்டதில் மொத்த அலுவல சுவர்களும் விரிபட்டன. முகத்தில் முழிக்காதே என சொன்ன சொற்களில் சட்டென எழுந்தேன். வீடு வந்தேன்.

ஊருக்குத் திரும்பி வந்து அப்பாவுடன் அன்றுதான் மனம்விட்டு பேசினேன். அப்பாவுடன் தங்கி அங்கேயே வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். அவருக்குப் பணிவிடை செய்வது நிறைவாக இருந்தது. அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் அப்பா. எங்களை விட்டுட்டு நீ அப்படி போயிருக்கக் கூடாதுப்பா எனவும் ஊடே சொல்லிக் கொள்வார். 

பிரம்மச்சரியம் என்பது தவம். 
எவ்வித கறையின்றி 
நான் வாழ்வதற்கு நீ துணை. 
உன்னை முதிர்கன்னி என்றே பிறர் 
சொன்னாலும் காதல் இளமை நீ 

சுபாவை நினைத்து கவிதை என எதையோ மனதில் உளறினேன். 

சுபாவின் அப்பாவின் நிலைமை மோசமாகியது. மருத்துவ பலனின்றி மற்றொரு உயிர் போனது. சுபா மனம் மாறவே இல்லை, நானும் மனம் மாறிக் கொள்ளவில்லை. 

சுபா தனது வேலையை விட்டுவிட்டு அவளது அம்மாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை பார்க்க இருப்பதாகச் சொன்னாள். எனக்கும் சரி என்றானது. அந்த வீட்டை தங்கையின் பெயருக்கு எழுதித் தந்தேன். தங்கை, என்னை மன்னிச்சிருண்ணா என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வீடு கிடைத்த நிம்மதி. 

சில மாதங்கள் கழித்து சுபாவை குழந்தைகள் காப்பகத்தில் பார்க்கச் சென்றேன். துள்ளித்திரிந்த குழந்தைகள் பார்த்து சொன்னேன். 

''இந்நேரம் நமக்கும் இப்படி குழந்தைகள் இருக்கும்ல சுபா''

''காதல் மட்டும்'' சிரித்தாள். 

''தாய்மை என்பது ஒரு பெண்மையின் அடையாளம். அந்த தாய்மை உணர்வு வேண்டாமா சுபா'' 

சின்னக் குழந்தையை அள்ளியணைத்தாள். நானொரு காதல் அன்னை என்றாள். 

விக்கித்து நின்றேன். மற்றொரு குழந்தையை அள்ளியணைத்தேன் நான். எங்கெங்கோ சென்று நிராதவற்ற  குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறாள். அவளது பணி பெரியது. சில வருடங்களில் அவளது அம்மாவும் இறந்து போனார். வாழ்க்கை வேகமாக நகரத் தொடங்கியது. ஐம்பதைத்  தொட்டு இருந்தோம். அப்பா தள்ளாடியபடி இருந்தார். இன்னும் ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆனா ஒன்னு நான் உன் அம்மாவை எப்படி அடம் பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேனோ அதைப்போல நீயும் அந்தப்பொண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சி நின்னுட்ட என்றார். வலியில் கூட அவருக்குள் ஏதோ ஒருவித மகிழ்ச்சி.

ஒருநாள் குழந்தைகள் காப்பகம் சென்று அவளிடம் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.

''பிரம்மச்சரிய வாழ்க்கை எதற்கு'' 

''கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று வாழ்ந்து பின்னர் தனித்து விடப்படுவது கொடுமை தீபக்'' 

எனக்கு அதன் பொருள் புரிந்தது. 

''இது மானுட வாழ்க்கை அல்லவே. காதல் புரிந்து கல்யாணம் பண்ணி இல்லறமே நல்லறம் சுபா'' 

''அது சாதாரண மனிதர்கள் செய்வது. உனக்கு அதில் உடன்பாடு இல்லை'' அழுத்தமாகச்  சொன்னாள். 

''என்ன சுபா, இத்தனை வருடங்கள் காதல் மட்டும் எனச் சொல்லிட்டே இருந்த எதற்கு இத்தனைப் பிடிவாதம் இப்போவாச்சும் சொல்லு''

''மனசுக்குப் பிடிச்சவங்க நிறைய. காதலானது கல்யாணம் எனும் சடங்குக்கு உட்பட்டால் களங்கம் தீபக்.  கலவியில் ஈடுபட்டு சுகித்திருப்பது காதல் இல்லை. இனப்பெருக்கம் செய்யப் பிறந்த பிறவிகள் இல்லை நாம். காதல் மட்டும் புரிந்திடவே நாம்''

''இப்படியே அனைவரும் நினைச்சா இந்த பூமி என்ன ஆகும்'' 

என் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள் . நான் அதில் கலங்கி இருந்தேன். 

''இவ்வுலகம் எப்படி உருவாச்சி தீபக்'' 

அம்மா என ஓடிவந்து ஒரு குழந்தை சுபாவின் கழுத்தை அணைத்து பின்னால் வந்து கட்டிக்கொண்டது. 

அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்தாள். 

''என்னம்மா''

''சாமி கும்பிட வாம்மா''

நானும் சுபாவுடன் சென்றேன்.

''என்ன கும்பிட்ட சுபா''

''இந்த அண்டப் பெருவெளியில் கடவுள் ஒரு புதிர். உயிர் இன்னொரு புதிர். கும்பிட எதுவும் இல்லை''

''இந்த உலகம் கடவுள் படைத்தது என் புரிதல்''

சிரித்தாள். 

''என்ன''

''என்னை இப்பவும் நீ இரசிக்கிறல'' 

''இத்தனை வருடங்கள் இதேதான்''

அதற்கு பின்னர் சுபா சொன்ன விசயம் கேட்டு அதிர்ந்தேன். அப்படி நடக்க சாத்தியமில்லை என்றுதான் எனக்குத் தோனியது. ஒரு செல் உயிரி சரி. எப்படி இப்படி அவள் சிந்தித்தாள்? பல செல்கள் கொண்ட உயிரி தானாக பல்கி பெருகும் காலநிலை ஒன்று வரும் எனவும் அங்கே காதல் மட்டும் நிறைந்து இருக்கும் எனவும் எப்படி அவளால் யோசிக்க முடிந்தது.

''சுபா புரியலை''

''பல செல்கள் உயிரியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பருவகாலத்தில் உடலில் இருந்து உதிர்ந்து புதிய அதேபோல உயிரிகள் தோன்றும் தீபக்''

''விதை இல்லாத மரம் சாத்தியமில்லை'' 

''தண்டு வெட்டி மரம் வளரும்'' 

''நினைச்சேப் பார்க்க முடியலை சுபா''

''இனப்பெருக்கத்தில் இரண்டு வகை எப்போதுமே இருக்கு, எப்போ காதல் மட்டும்னு ஆகுதோ அப்போ நான் சொன்னது நடக்கும், மனுசங்க கல்யாணம் குழந்தைகள்னு விருப்பம் கொள்ளாத காலம்னு ஒன்னு உருவாகும் அப்போ நான் சொன்ன ஸ்டெம் செல்கள் குழந்தைகள் உருவாகும்''

அவளது சிந்தனை என்னவோ செய்தது. சில வருடங்கள் கழித்து அப்பா இறந்து போனார்.  மணமுடிக்காமல் காலம் காதலினால் மட்டுமே கடந்தது.

''ஏதேனும் வருத்தம் இருக்கா தீபக்''

''காதல் மட்டும்''

உடலைவிட்டு உயிர் பிரியும் காலம் நெருங்கியது. சுபா ஆவலோடு தழுதழுத்த குரலில் சொன்னாள். 

''இதோ அறிவியல் கண்டுபிடித்துவிட்டது, பல செல்கள் உயிரி தானாக பல்கும், பரிணாமத்தில் ஒரு மாற்றம் நிகழும். இனப்பெருக்க உறுப்புகளற்ற உயிரிகள் தோன்றும்''

''இல்லை சுபா, அப்படியே நிகழ்வுகள் உண்டானாலும் இந்த உலகம் இப்படியே இருந்தால் தான் நல்லது. காதல் புரிவது அதிசயம். அதிலும் காதலுக்கு மட்டுமே வாழ்வது ஆச்சரியம்''

மலர்ந்த முகத்துடன் கண்கள் மூடினாள். அவளது விழிப்பார்வையில் இனி நான் விழமாட்டேன் என எண்ணியபோது என் கண்கள் மூடியது. காதல் மட்டும். 

Tuesday 25 February 2014

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - பாபிலோன் ஓரினச்சேர்க்கை

எகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.

ஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.

பாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.


                                                            படம் நன்றி: விக்கிபீடியா

இந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.

பாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.

வணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.

ஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.

பாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

சுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு  நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி  கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.

இந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

சாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

                                படம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா

ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள்  லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.

பலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.

இதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.

உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும். 

பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்

(தொடரும்)

Thursday 20 February 2014

காமத்தின் மீதேறி

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான்  ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின்  நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது. 

ஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின்  சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது. 

அப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது. 

கண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை  என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு. 

தனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. 

ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு. 

குறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும். 

இது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல்  இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது. 

திருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை 
அடைத்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
வலி தான். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை
திறந்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
சுகம் தான். 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''  இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு  மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது. 

விபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது  விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது. 

மேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது. 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' 

இவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான். 

உலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு. 

காமத்தின் மீதேறி
பணம் பண்ணும் 
கயமைத்தனம் சமூகத்தில் 
புரியவொண்ணா செயல் 
காமத்தின் மீதேறி 
இளம் பிஞ்சுகளை 
இயந்திர பொருளாக்கி 
பெண் இனத்தை 
பேதலிக்க செய்யும் 
கொடிய சமூகம் 

நிகழ்ச்சி முடிவடைகிறது. 

காமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும். 

Wednesday 5 February 2014

அங்கன எதுக்கு போன

ஸ்ரீராம் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். அவனைக் கண்டால் சிறு வயதில் இருந்தே பயந்து ஒதுங்கி விடுவேன். அவனை ஊரில் திமிர் பிடிச்சவன் என்றே சொல்வார்கள். நல்ல உயரமாக கருகரு முடியுடன் வாட்டசாட்டமாக இருப்பான். நானோ சோப்ளாங்கி போல இருப்பேன். என்னை கிண்டல் பண்ணாத நாளே அவனுக்கு கிடையாது. அவனிடம் எல்லா கெட்டப் பழக்கங்கள் இருந்தது. பிறரிடம் வம்பு இழுப்பதே அவனது வழக்கம். சண்டியர், வில்லங்கம் என்றே அவனை ஊரில் அழைப்பார்கள். அதனால் அவனுடன் எவரும் அத்தனை எளிதாக பழகமாட்டார்கள். அவனுக்கு பயந்தே ஊரில் பலரும் தவறு செய்ய யோசிப்பார்கள். அவன் கண்ணில் பட்டுவிட்டால் நிறைய பொய்கள் சேர்த்து ஊர் எல்லாம் சொல்லித் திரிவான். .

எப்படியோ இத்தனை வருடங்களாக அவனோடு ஒட்டுதல் உறவு எதுவும் இல்லை என்றாகிவிட்டது. இனியும் இப்படியே கழிந்தால் போதும் என்றே இருப்பேன்.

ஆனால் அன்று  ஸ்ரீராம் என்னை வந்து அழைப்பான் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அழைத்துவிட்டானே என அவனுடன் செல்ல முடிவு செய்தேன். கையில் ஒரு தூக்குவாளி வைத்து இருந்தான். என்ன என கேட்டேன். பேசாம என் கூட வாடா என சொல்லிவிட்டான்.

சரியென அவனுடன் நடந்து போகையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

''இன்னொரு நாளைக்கு போகலாம்''

''பேசாம கூட வா, இல்லைன்னா உனக்கும் அந்த பொண்ணுக்கும் இருக்க லிங்க்க ஊரு போறா சொல்லிருவேன்''

''எந்த பொண்ணு, என்ன பேசுற''

''அதுதான் அந்த பிரபாவதி''

அவன் அவ்வாறு சொல்லியதும் எனக்கு மழைத்துளிகள் விட அதிக வியர்வைத் துளிகள் பூத்தது. எனக்கும் பிரபாவுக்கும் தெரிந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும், நான் சொல்லவே இல்லையே என நினைத்தேன்.

''எனக்கும் அவளுக்கும் என்ன லிங்க்கு''

''நீயும் அவளும் காதலிக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, அவளே வந்து சொல்லிட்டா''

''பொய் சொல்லாத''

''டேய் நான் அவகிட்ட என்னோட காதலை சொன்னேன், அதுக்கு உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டா, போனா போறான்னு விட்டுட்டேன். நீ என்னடா மழுப்பற''

''உன்கிட்ட தப்பிக்கிறதுக்கு அப்படி சொல்லி இருப்பா''

சற்றும் எதிர்பார்க்கும் முன்னர் என்னை ஓங்கி அறைவிட்டான் ஸ்ரீராம். நானும் யோசிக்காமல் பதிலுக்கு ஒரு அறை விட்டேன். இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டோம். நல்லவேளை எவரும் அவ்வழி வரவில்லை. முடிவில் அவனே ஜெயித்தான். எனது குரல்வளையை பிடித்து நெருக்கிட ஆமா ஆமா என என்றதும் விட்டான்.

''ஒழுங்கா கூட வாடா ''

கழுத்து வலியுடன் அவனுடன் நடந்தேன். ஒரு பனை மரத்துக்கு பக்கத்தில் சென்று நின்றான்.

''கீழேயே நில்லுடா''

சரசரவென பனைமரத்தில் ஏறினான். நொங்குகள் பறித்தான். கீழே போட்டான். மடமடவென கீழே இறங்கினான். ஒவ்வொன்றாக உடைத்து தூக்குவாளியில் ஊற்றினான். நிறைய சுண்ணாம்பு சேர்த்தான்.

''குடிடா''

''வேண்டாம்''

''பிரபாவதி பத்தி சொல்லிருவேன்''

''நீயே குடி, எனக்கு பழக்கம் இல்லை'

''வெண்ணைக்கு காதல் பழக்கமோ''

குடிடா என காலால் எட்டி உதைத்தான்.

''யாராவது வந்துருவாங்க''

''இந்த நேரத்தில எவனும் வரமாட்டான், ஒழுங்கா குடிச்சி தொலைடா''

''முடியாது''

சொல்லிட்டு ஓட்டம் எடுத்தேன். என்னை விரட்டிக்கொண்டு வந்தான். கல்லால் அடித்தான். வலியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் பயந்து போனார்கள். ஸ்ரீராம் பற்றி சொன்னேன். பனைமரம் சென்ற விஷயம் சொல்லி முடித்தேன்.

''அங்கன எதுக்கு போன''

''நான் பிரபாவதியை காதலிக்கிறேன்''


Thursday 30 January 2014

மனநிலை பாதிப்பும் மானசீக குருவும்

''ஒவ்வொரு மனிதரும் பைத்தியக்காரர்கள், ஏதேனும் ஒன்றிற்கு தம்மை அடிமையாக்கி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும்போது ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கிறார்கள். இந்த சூழலில் இருந்தாலும் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், இல்லாதபட்சத்தில் மன அழுத்தத்தில் உட்பட்டு தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார்கள், அல்லது நடைபிணமாக வாழ்ந்து வாழ்க்கையை கழிப்பார்கள்''

வாசித்து முடித்துவுடன் எனக்கு வியர்த்துக் கொட்டியது. நான் கூட பைத்தியகாரனா? என யோசித்துக் கொண்டிருந்தேன்.

''பக்தா, என்ன யோசனையில் அமர்ந்து இருக்கிறாய்?''

சாமியார் வருவார் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. வைகுண்டம் போகிறேன் என்றல்லவா சொன்னார். இப்போது இங்கே வந்து நிற்கிறாரே என குழப்பத்துடன் அவரை நோக்கினேன்.

''என்ன பக்தா, ஆச்சரியமாக பார்க்கிறாய்?''

''நீங்கள் வைகுண்டம் போகவில்லை?, எதற்கு திரும்பி வந்தீர்கள்''

''நீயில்லாமல் நான் மட்டும் எப்படி போவது பக்தா, அதனால் எனது திட்டத்தை நான் கைவிட்டுவிட்டேன்''

''மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''என்ன பக்தா, இப்படி ஒரு கேள்வியை என்னை நோக்கி கேட்கிறாய், நான் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் சாமியாராக இருக்கிறேன் என நினைக்கிறாயா?''

''இல்லையில்லை, மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''மனநிலை என்றால் என்ன பக்தா?''

''உங்களிடம் கேள்வி கேட்டால் என்னிடம் கேள்வி கேளுங்கள், எனக்குத் தெரியாமல் தானே உங்களிடம் கேட்கிறேன்''

''நன்றாக யோசனை செய் பக்தா, மனநிலை என்றால் என்ன?''

''நமது எண்ணங்கள்?''

''அதேதான் பக்தா. எண்ணங்களே மனநிலை. ஒரு விஷயத்தை குறித்து நீ என்ன நினைக்கிறாய், எப்படி உணர்கிறாய், எவ்வாறு செயல்படுகிறாய் என்பதே மனநிலை. இந்த மனநிலை பிறர் நம்மை கண்காணிக்கும் போதும், கண்காணிக்காதபோதும் வெவ்வேறாக இருக்கும். அப்படி உனது மனநிலையை நீ நன்றாக புரிந்து கொண்டால் உனது செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வாறு கட்டுப்பாட்டில் இல்லாதபோது மனநிலை பிறழ்வு நடைபெறும். இதைத்தான் மனநிலை பாதிப்பு என்கிறார்கள்''

''அப்படியெனில் எல்லாருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்களா? இப்போதுதான் ஒரு பத்தி படித்தேன். மனிதர்கள் அனைவரும் பைத்தியகாரர்கள் என்று எழுதி இருந்தது''

''பக்தா, நீ பைத்தியகாரனா?''

''என்ன பேச்சு பேசுறீங்க, என்னை எதற்கு பைத்தியகாரன் என்று சொல்றீங்க''

''கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல் பக்தா''

''இல்லை, நான் பைத்தியகாரன் இல்லை''

''அதெப்படி உனக்குத் தெரியும். உன்னையறியாமல் நீ ஏதேனும் விஷயத்திற்கு அடிமையாகி இருக்கிறாயா என்று யோசனை செய்து பார்''

''இல்லை, அப்படி ஏதுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன்''

''சாப்பாட்டுக்கு அடிமையானவர்கள் உண்டு, காமத்திற்கு அடிமையானவர்கள் உண்டு, கற்பனை உலகத்தில் சஞ்சாரிப்பவர்கள் உண்டு, சினிமா, இசை, காதல் கல்வி அரசியல், பணம், நிலம், புகழ், பதவி போதை, என பல விசயங்களுக்கு அடிமையானவர்கள் உண்டு. அதில் நீ ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்''

''இல்லை, நான் எதற்கும் அடிமை இல்லை. நீங்கள கூட இறைவனுக்கு அடிமை, ஆனால் நான் இறைவனுக்கு கூட அடிமை இல்லை''

''என்ன பக்தா, பேச்சுவாக்கில் என்னை இறைவன் அடிமை என்று சொல்லிவிட்டாய்''

''ஆம், நீங்கள் இறைவன் பற்றி அதிகம் பேசுகிறீர்கள், இறைவனே நல்வழிபடுத்துவான் என புலம்பித் தள்ளி இருக்கிறீர்கள். நீங்கள் இதை மறுக்க இயலுமா''

''அப்படியே ஆகட்டும் பக்தா, ஆனால் இப்படிப்பட்ட அடிமைகள் எல்லாம் மனநிலை பாதிப்புக்கு நேரடியாக உட்படுவதில்லை. மன அழுத்தத்தில் இவர்கள் நிலை சென்று முடியும். இவர்களுக்கு தகுந்த அன்பும், ஆதரவும் தரும் பட்சத்தில் இவர்களால் இந்த நிலையில் இருந்து மீண்டு வர இயலும். அதற்கு இவர்களுக்கு மானசீக குரு ஒருவர் வேண்டும்''

''யார் அந்த மானசீக குரு''

''அவர்களேதான் மானசீக குரு, அனைவரும் சிந்திக்கும் அறிவுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒரு தவறான விசயம் செய்யும் முன்னர் அது தவறு என மனம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தவறினை தவறியும் செய்யக்கூடாது என அவர்கள் திடமான மனதுடன் இருக்க வேண்டும். எப்படி ஒரு தவறு செய்து பிடிபட்டால் அவர்களின் நிலை கவலைக்குரியதாக மாறுமோ, அதுபோல பிடிபடாத நிலை இருப்பினும் தவறு செய்ய கூடாது''

''விளையாட்டாக செய்யலாமே''

''அப்படித்தான் பலரும் நடந்து கொள்கிறார்கள். விளையாட்டு புத்தி என்பது ''விநாச காலே விபரீத புத்தி'' என்பது போன்றது. ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும் பக்தா, இஷ்டத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை''

''எதற்கு இப்படி அறிவுரை அள்ளி கொட்டுகிறீர்கள்''

''மானசீக குரு எவர் என்று கேட்டாய் அல்லவா, அவரவரே அவரவருக்கு மானசீக குரு. ஒரு ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதுடன் அவரது பணி  முடிவடைந்துவிடும், அதற்கடுத்து நீயாகவே உனக்கு கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு குரு, நீதான் உனக்கு மானசீக குரு''

சாமியார் பேசியதை கண்டு அவரிடம் நான் வாசித்த தாளினை காட்டினேன்.  கலகலவென சிரித்தார்.

''யார்  இப்படி எழுதியது தெரியுமா பக்தா''

''தெரியாது. வெல்லக்கட்டி வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அங்கு இந்த காகிதம் கிடைத்தது, எடுத்து வந்துவிட்டேன்''

''அதை எழுதியது நான் தான் பக்தா''

''நீங்களா''

''ஆம்''

''ஏனிப்படி எழுதினீர்கள்''

''பல வருடங்கள் முன்னர் இருந்த அந்த மனநிலையைத் தான் சென்று கேட்கவேண்டும்', இப்போது எனக்குத் தெரியாது''

பைத்தியகார சாமியார் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

''மனநிலை பாதிப்பு குறித்து சொல்லுங்க''

''மனநிலை பாதிக்கப்பட்டதால் நான் சாமியாரா''

''திரும்பவும் கேட்காதீர்கள், சொல்லுங்க''

''ஒரு மனிதர் நான் மேல் சொன்ன பல விசயங்களுக்கு அடிமையாதல் போல மனநிலையானது குறிப்பிட்ட விசயங்களால் மாறுபாடு அடையும். மனநிலை பாதிப்பு நமது உடல், மூளை சம்பந்தப்பட்டதாகவே அமைந்துவிடுகிறது.

1. பயத்தால் வரும் மனநிலை பாதிப்பு. சிறு குழந்தைகளிடம் ஏற்படும் இந்த பாதிப்பு காலகாலத்திற்கு மாறாது. பயத்தைப் போக்கிட மனநிலை சீராகும்.
2. உணர்ச்சி வசப்படுதல் மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. இதை மூட் ஸ்விங் என சொல்வார்கள்
3. நம்பிக்கையால், அந்த நம்பிக்கை தொலையும் கணத்தில் வரும் மனநிலை பாதிப்பு. காதல், கல்யாணம் நட்பு போன்ற நம்பிக்கை விசயத்தில் ஏமாற்றம் நிகழும்பட்சத்தில் இந்த மனநிலை பாதிப்பு ஏற்படும். கவனத்துடன் கையாள வேண்டிய விஷயம் இது பக்தா. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது, அதனால் புதுக் கண்ணாடி அவசியம் போன்ற நிலை ஏற்படும்.
4. மொழி, நடக்கும் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை மூலம் மனபாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது''

''இறைவன் நம்பிக்கையை விட்டுட்டீங்களே, ஜோசியம் நம்பிக்கை எல்லாம் சொல்லலை''

''பக்தா, குறுக்கே பேசாதே, ஜோசியம், இறைவன் எல்லாம் நடக்கும், நடக்காது என்கிற நிலையை மக்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் அதை எல்லாம் இங்கே இழுக்காதே''

''ஆமாம், அதுவே ஒரு மனநிலை பாதிப்புதானே''

''பக்தா, எனது சாபத்திற்கு ஆளாகாதே''

''சரி, தொடருங்கள்''

''5. மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் மனநிலை பாதிக்கப்படுபவர்கள் உண்டு. அவர்களுக்கு மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து தேற்ற முடியும், ஆனால் ஒரு விஷயம் வரம்பு மீறிப் போய்விட்டால் மருத்துவமுறை கை கொடுக்காது.
6. சிலர் மனநிலை பாதிக்கப்படுவதால் சாப்பிடும் முறையில் கூட வேறுபாடு கொள்வார்கள். ஒல்லியாக இருந்து கொண்டே குண்டாக இருப்பதாக நினைப்பார்கள். அதனால் சரியாக சாப்பிடாமல் உடற்பயிற்சி என உயிரை கொல்லும் அளவுக்கு செல்வார்கள். தன்னை தானே அதிகம் வெறுத்து ஒதுக்குவார்கள். இதைப்போலவே காம உணர்வு மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. காமுகர்களாக பலர் மாறுவதற்கு அதுவே காரணம். இவர்கள் பலர் இருக்கும்போதே யாரும் நம்மை பார்க்கவில்லை என தறிகெட்டு நடந்து கொள்வார்கள்.
7. சிலருக்கு தூக்கமே வராது. இது கூட மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுதான் பக்தா''

''கனவு கூட மனநிலை பாதிப்பு தானா''

''என்ன பக்தா, நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாய். கனவு மனநிலையை சரி செய்யும் ஒரு காரணி''

''சரி சரி தொடருங்கள்''

8. தன்னைத் தானே மறப்பது கூட ஒருவகை மனநிலை பாதிப்புதான். குறிப்பட்ட விசயங்கள் மறந்து போவதும் இதில் அடங்கும். சமூகத்திற்கு எதிராக நடந்து கொள்வது கூட ஒரு வகை மனநிலை பாதிப்புதான்''

''அரசியல்வாதிகள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா''

''பக்தா, உனக்கு ஒருமுறை சொன்னால் போதாதா, எதற்கு இப்படி குறுக்கீடு செய்கிறாய்''

''சரி சரி சரி தொடருங்கள்''

9. அதிர்ச்சி அடையாதே, இப்படி சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பின் சாராம்சம்தான். இதை ஆங்கிலத்தில் பெர்சானலிட்டி டிஸ்ஆர்டர், ஒழுங்கற்ற நடத்தை  என சொல்வார்கள்.

''இறைவன் எப்படி உலகை படைத்தான், இவ்வுலகம் எப்படி தோன்றியது போன்ற சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பு என சொல்வது நகைப்புக்குரியது''

''பக்தா, நீ ஒழுங்கற்ற மனநிலையில் இருக்கிறாய். உரிய சந்தேகங்கள் சரி, ஆனால் அனாவசியமான சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்றே சொன்னேன். கணவன் மனைவியின் நடத்தையினை சந்தேகம் கொள்வது, பெற்றோர் பிள்ளை, மாமியார் மருமகள் போன்ற உறவு முறை சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் அடிச்சுவடுகள்''

இந்த மனநிலை பாதிப்பு மரபணுக்கள், பரிணாம வளர்ச்சிகள் என அடிப்படையில் வந்தவை. மனநிலையோடு மனநிலை பாதிப்பும் உடன் தொடர்பவை, அதனால்தான் மானசீக குரு அவசியம்''

''எனக்கு நீங்கள் மானசீக குருவாக இருக்கலாமே''

''உன்னை எப்படி திருத்துவது என தெரியவில்லை பக்தா, நீ ஆறறிவுடன் படைக்கப்பட்டு இருக்கிறாய், உன்னை வழிநடத்தவோ, நீ ஒருவரை பின்பற்றி நடக்கவோ அவசியமே இல்லை. நீயே உனக்கு மானசீக குரு. எந்த உயிர்களுக்கும் வஞ்சம் இழைக்காதே. நல்ல சிந்தனையுடன் இருந்தாய் எனில் உனது மனநிலை சந்தோசமாகவே இருக்கும். எந்த சங்கடங்களும் இல்லை''

''நான் குறுக்கீடு செய்ததால் சில நல்ல விசயங்கள் தெரிய வந்தது''

''நல்லது பக்தா, அடுத்தவரை துன்புறுத்தி பார்ப்பது மனநிலை பாதிப்பின் உச்சகட்டம்''

''எந்திரிப்பா, மணி பத்து ஆகுது, சனிக்கிழமைன்னா இப்படியா தூங்குவ''

அம்மாவின் குரலில் நான் மனநிலை பாதிப்பில் இருந்து விடுபட்டு இருந்தேன்.


Mental Disorders are often associated with how we perceive things in the world - Radhakrishnan

Wednesday 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம். 

Thursday 23 January 2014

இவர்கள் எல்லாம் பெண்களா?

எல்லா பெண்களும் கல்வி, கலவி, காமம், காதல், கல்யாணம், விபச்சாரம் என தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படையாக பேசிவிட்டால் இந்த தமிழகம் தாங்காது. நாகரிகம்  மாறிவரும் வேளையில், கலாச்சாரம், பண்பாடு என இவற்றில் வளர்ந்துவிட்டதால் பல பெண்கள் இவைகளை உதாசீனம் செய்வதோடு உள்ளுக்குள் வேதனை கொள்கிறார்கள். அதையும் தாண்டி தங்கள் மனக் குமுறல்களை வெளிச் சொன்னால் இவர்களுக்கு பெண்ணியவாதி என பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, கற்பு, அடக்கம், ஒடுக்கம் என எல்லா குட்டிச்சுவரகளையும் பெண்கள் மீது கட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

வரம்பு மீறி வாழும் பெண்களுக்கு ஆண்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமெனில் மணந்து வாழலாம் எனும் போது, ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமெனிலும் மணந்து வாழ சமூகம் அங்கீகரிப்பது இல்லை. எந்த ஒரு ஆணும் அதற்கு சம்மதம் சொல்வது இல்லை. எனக்கு இரண்டு புருசர்கள் என எந்த பெண்ணும் சொல்லிக்கொண்டதாக தெரியவில்லை. கேட்டால் சமூக இழிவாம்.

சுதந்திரமாக வாழ எத்தனிக்கும் பெண்களை நோக்கி எழுப்பப்படும் ஒரே கேள்வி இவர்கள் எல்லாம் பெண்களா என்பதுவே! ஆம், தனது சுதந்திரம் பறிபோவதை எதிர்த்து, தனது உரிமைகளுக்கு போராடும் பெண்கள் பெண்கள் தான்.

காமம், கலவி இதில்தான் பல பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைக்கு என தனது சொந்த அபிலாசைகளை தூக்கி எறிந்தவர்கள் இவ்வுலகில் எத்தனை பேர். '' தூக்கி பரண் மேல போட்டாச்சு''

நிற்க.

ஒரு ஊருல சரஸ்வதின்னு ஒரு பெண். இருபத்தியொரு வயசான அந்த பொண்ணு  அந்த ஊருல இருக்கற ஹோட்டலுல வேலைப் பாத்துச்சு. ஹோட்டலு ஒன்னும் பெருசு இல்லை. கூரை மேய்ஞ்ச ஹோட்டல் தான். ஆமை வடை, உளுந்த வடை, போண்டா, இட்லி, தோசை, பூரி சாப்பாடு வகையறாதான் கிடைக்கும். புரோட்டா எல்லாம் இல்ல. கிரைண்டர் இல்லாத காலம் அது. இந்த பொம்பளை தான் எல்லாத்துக்கும் மாவாட்டணும். அந்த கடையில ஒரு பெரிசு டீ, காபி போட்டு கொடுப்பாரு.

இந்த பொண்ணு  ராத்திரி ஆனதும் 'சரக்கு' அடிக்கப் போகும். அது ஊருக்கேத் தெரியும். கம்மாய் ஓரத்தில 'சாராயம்' கொண்டு வந்து விப்பாய்ங்க. ஒரே ஒரு டம்ளர்தான் சரக்கு அடிக்கும். வாய்க்கு வந்தது எல்லாம் திட்டும். அதனால ஒரு பைய அந்த பொண்ணை  தப்பான நோக்கத்தில நெருங்க முடியாது. என்ன சரசுன்னு சொன்னா போதும், போடா பொசக்கட்ட பயலேன்னு சொல்லும். ஹோட்டலுக்கு வரவங்ககிட்ட மட்டும் நல்லா சிரிச்சு பேசும்.

அந்த பெரியவருக்கு குடும்பம் இருந்துச்சு. ஹோட்டலுல நல்ல வியாபாரம் நடக்கும். பக்கத்து ஊரில இருந்து ஆளுக வந்து சாப்பிட்டு போகும், உள்ளூர்காரங்க கொஞ்ச பேருதான் வாங்கி சாப்பிடுவாங்கே.சரக்கு அடிக்குதாம் சரசுனு கேலி பேசுவாங்கே.  இந்த சரசுக்கு ரொம்ப சம்பளம் எல்லாம் கிடையாது. சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் இலவசம். அந்த பெரிசு இந்த சரசுவை வைச்சிருக்கிறதா ஊரே பேசும், ஆனா பெரிசோட வீடு மட்டும் அப்படி பேசாது. இன்னும் என்ன என்னமோ பேசுவாங்கே, எழுதவே கை கூசுது. தட்டிக்கேட்டா மாட்டிக்கிட்டியானு வம்பு அளப்பாங்கே. எதையும் சரசு கண்டுக்காது. எங்கையா இவளைப் பிடிச்சி வந்தனு கேட்டா, அனாதையா கிடந்தா, கூப்பிட்டு வந்தேன்னு சொல்வாரு பெரிசு.

சரசுக்கு கல்யாணம் காட்சி பண்ணி வைக்க பெரிசு நினைச்சாலும் ஒரு பயலும் கட்டிக்க வரலை. சரசு போட்ட கண்டிசன் தான் காரணம். இந்த ஹோட்டலு, சரக்கு குடிக்கிறதை விடச் சொல்றவன், பொம்பளை சுகம் தேடுறவன் எல்லாம் வரக்கூடாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிருச்சி. பெரிசு ஒருநா செத்துப் போனாரு.

பெரிசோட குடும்பம் இந்த ஹோட்டலை மூட நினைச்சிச்சு. சரசு தான் நான் தனியா நடத்துறேனு சொல்லி  அடம்பிடிச்சி நடத்துச்சு. சிரிச்ச முகம் மாறாம இருக்கும். ஒரு பையலையும் கிட்டக்க அண்டவிடலை. சரசு ஹோட்டல் வாடகை பணம் மட்டுமே பெரிசு குடும்பத்துகிட்ட கொடுக்கும். மத்ததெல்லாம் சரசுகிட்ட இருந்துச்சு. கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்கலை சரசு.

முப்பது  வருசமா நாயா பேயா உழைச்சிச்சி. சரக்கு குடிக்கிறத நிறுத்தலை. இருமல் வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில படுத்துருச்சு. ஒரே நாள் தான். சரசு அன்னைக்கே கண்ணை மூடிருச்சி. சரசு செத்துப் போன விஷயம் கேள்விப்பட்டு திமுதிமுன்னு ரொம்ப பேரு வந்துட்டாங்க. அதுல ஊர்க்காரங்களுக்கு தெரியாத சின்ன சிறுசுக ஒரு பத்து பேரு மாப்பிள்ளையும் பொண்ணுமா, குழந்தையோட ஆத்தா ஆத்தா சொல்லாம போயிட்டியே ஆத்தான்னு அழுதுட்டு நின்னாங்க.

யாருன்னு விசாரிச்சப்ப, இந்த ஆத்தாதான் எங்களை வளர்த்தாங்கனு  கல்யாணம் பண்ணி வைச்சாங்கன்னு பத்து பொட்ட்பிள்ளைக சொல்ல ஊரே வாயடைச்சி நின்னுருச்சி.

ஒரு குடும்பத்தை கட்டி பிள்ளைகளை பெத்து அனாதையா போற பொணத்துக்கு மத்தியில சரசோட இறுதி சடங்கு பெருசா நடந்துச்சி. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி சரசுக்கு ஒரு கோவில் கட்டி வைச்சாங்க அந்த பிள்ளைக.

அந்த பிள்ளைக வாரம் தவறாம வந்து கும்பிட்டு போறாங்க!

ஊர்க்காரங்களும் தான் போடுற பொங்கச் சோறு திங்கிறாங்கே. மானங்கெட்ட பயலுக.

Thursday 16 January 2014

நீங்க எந்த ராசி?

''டேய், போயி அந்த பெரியவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திரு, உன் கல்யாணத்துல எந்த தடையும் வந்திரக்கூடாது பாரு''

''என்னம்மா நீ ரொம்ப தொனதொனத்துட்டே இருக்கே, நானும் ஸ்ரீயும் கல்யாணம் பண்ணப்போறோம், நீ என்னமோ ஆசிர்வாதம் அது இதுன்னுட்டு இருக்க''

''அதுக்கில்லைடா, ஸ்ரீ குடும்பத்தில தகராறு பண்றதா நீதானே சொன்ன, அப்பா வேற ரொம்ப கவலையா இருக்காருடா. சொன்னா கேளுடா''

ராம் 23 வயதான நல்ல உயரமான கருப்பு வண்ண இளைஞன். சமீப ஆறு மாத காலமாக தன்னுடன் வேலை பார்த்து வரும் 21 வயதான சற்றே உயரமான சிவப்பு வண்ண ஸ்திரீயான ஸ்ரீயை காதலித்து வருகிறான். இந்த காதல் விவகாரம் நேற்றுதான் ஸ்ரீ வீட்டுக்கும், ராம் வீட்டுக்கும் தெரிந்தது. ராம் பெற்றோர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். இந்த எதிர்ப்பு விவகாரத்தை ராம், தனது அம்மாவிடம் சொல்ல அம்மா அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து வர சொன்னார்கள். ராம் செல்லமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

''யாரும்மா அந்த பெரியவரு, அவர் என்ன சித்தரா, ஸ்ரீயோட அப்பா அம்மா மனசை மாத்துறதுக்கு. சும்மா கிடம்மா, நானே எப்படி கல்யாணம் பண்ணலாம்னு யோசனையில இருக்கேன்''

''டேய், அவரை பாத்துட்டா, தடைபட்ட கல்யாணம் எல்லாம் நடக்குதாம்டா. அதோட இல்லை கல்யாணம் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாம். நம்ம கோமதி பாட்டி கூட வந்து சொல்லிட்டு போனாங்க''

''அப்படினா விவகாரத்து பண்றவங்களை அவரை பார்க்க சொல்ல வேண்டியதுதானே, சேர்ந்து வாழுவாங்கள''

''அப்படியும் நடந்து இருக்காம்டா, சொன்னா கேளுடா. ஸ்ரீ நம்பர் இருக்காடா''

''எதுக்கு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சனிக்கிழமை அன்னைக்கு போறேன், என்னை நிம்மதியா போய் தூங்கவிடு''

''நம்பர் தாடா, எதுக்கும் வைச்சிக்கிறேன்''

''இந்தாம்மா''

ராம் உறங்க சென்றதும் ஸ்ரீக்கு போன் செய்தார்.

''ஸ்ரீ, நான் ராம் அம்மா பேசறேன்''

''சொல்லுங்க, இருங்க மாடிக்கு போய்க்கிறேன்''

சிறிது இடைவெளிக்குப் பின்னர்

''ம்ம் சொல்லுங்க''

''ஏன்மா, என் பையனை நீ காதலிக்கிறியாமே, உங்க வீட்டுல பிரச்சினையாமே, ராம் சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தான்''

''ஆமாம், வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்க முடிவுல மாத்தமில்லை, உங்களுக்கு சம்மதம் தானே''

''சம்மதம் தான், நீ எதுக்கும் எங்க ஊருக்கு வெளில ஒரு குடிசையில பெரியவர் ஒருத்தர் இருக்காரு, ராசிசாமினு கேட்டா சொல்வாங்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா எந்த பிரச்சினையும் வராது''

''ம்ம்''

''மறந்துராதம்மா''

''ம், மறக்கலை''

ராம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த நாள் ஸ்ரீ, ராசிசாமியை தேடி வந்துவிட்டாள்.

''வணக்கம் சாமி''

''ம்ம்''

''என்னோட கல்யாணத்துல பிரச்சினை, அதை நீங்க தீர்த்து வைக்கனும்''

''ம்ம் உன்னோட பேரு, ராசி என்னம்மா?''

''ஸ்ரீ, மகரம்''

''என்ன நட்சத்திரம்?''

''திருவோணம்''

''எந்த மாசத்தில் பிறந்த?''

''மே  7''

''பையனோட பேரு, ராசி?''

''ராம், மீனம்''

''பையனோட நட்சத்திரம்?''

''ரேவதி''

''எந்த மாசத்தில் பிறந்தார்?''

''ஜனவரி 11''

''எல்லாம் துல்லியமா வைச்சிருக்கியே''

''காதலிக்க ஆரம்பிச்சதும், ராசி பொருத்தம் பாத்துட்டேன்''

''இது ஜாதகப்படி சரி. எதுக்குனா இது சந்திர ராசி. ஜாதகத்தில எங்க சந்திரன் இருக்கோ அதுதான் ராசி. ஆனா பெரும்பாலான இணையதளங்களில் பிறந்த மாசம் வைச்சிதான் கணக்கு பண்ணுவாங்க. அது சூரிய ராசி. ஆங்கில மாச பிறப்பு படி நீ ரிஷபம், அவர் மகரம். இந்த ராசிக்கான நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ராசி மட்டுமே பாக்கனும், அப்படி பாக்கப்போனா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. தாராளாம கல்யாணம் பண்ணலாம்''

''சரிங்க சாமி, தட்சிணை எவ்வளவு?''

''அந்த பணத்தை அப்படியே போறப்ப அநாதை பிள்ளைகளுக்கு சோறு வாங்கி கொடுத்துட்டு போ''

ஸ்ரீ, ராமிடம் உற்சாகமாக விஷயத்தை சொன்னாள்.

''அந்த பெரியவர் மாத்தி சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பியா''

''மனசுக்கு கஷ்டமா இருந்து இருக்கும்''

''சரி, வேலைக்கு வந்து சேரு''

ஸ்ரீ தனது அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''சரி கவலைப்படாதே, உன் அப்பாகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி வைக்கிறேன்''

ஸ்ரீ, ராமிடம் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''நான் சொன்னேன் பார்த்தியா, அதுதான் அந்த பெரியவரோட மகிமை''

''தேங்க்ஸ்த்தை''

ஸ்ரீ வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ராம் சில தினங்கள் பின்னர் பெரியவரை சந்திக்க சென்றான்.

''எப்படி உங்களால் இந்த கல்யாணம் எளிதாக சாத்தியம் ஆச்சு?''

''என் மேல மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கை. நான் சொன்னா நல்லா நடக்கும்னு நினைக்கிறாங்க. இந்த நம்பிக்கையை ஸ்ரீக்கு கொடுத்து அது ஸ்ரீ பெற்றோருக்கு போய் சேர்ந்தது. அவங்க அவங்க மேல நம்பிக்கையை வரவைக்கிறதுதான் என்னோட வேலை. மத்தபடி ராசி, ரோசி எல்லாம் ரெண்டாம் பட்சம். பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்னைக்குமே பஸ்பம்தான்''

''ரொம்ப நன்றிங்க''

''இந்த நம்பிக்கை விஷயத்தை ஒரு நாப்பது வருஷம் முன்னாடி நான் என்னோட சுமதிக்கு சொல்லி இருந்தா இந்த ராசி கருமாந்திரம் எங்களை பிரிச்சி இருந்து இருக்காது''

ராமின் சந்தோசத்தில் சின்னதாய் வலி ஒன்று வேகமாக ஊடுருவி போனது. 

Friday 6 December 2013

ராமனின் சீதை தீ குளித்தாரா?

என் அம்மா இறந்தபின்னர் பத்து நாட்கள் எனது சின்னம்மா இரவில் ராமாயணம் புத்தகம் எடுத்து வைத்து படித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி சிலர் அமர்ந்து இருந்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதுவும் எனக்கு எங்கள் வீட்டில் ராமயாணம் புத்தகம் இருக்கும் என்றே தெரியாது. ராமாயணம் புத்தகத்தை படித்தால் இறந்தவர்களின் ஆத்மா சொர்க்கத்தை அடையும் என்பது ஒருவகையான ஐதீகம் என பின்னர் தெரிந்து கொண்டேன். அன்று கூட ராமாயணம் படிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. நான் அதிகம் படித்த புத்தகங்கள் கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள், (அர்த்தமுள்ள இந்துமதத்தை பலமுறை படித்து இருக்கிறேன்) மற்றும் அகிலனின் சிறுகதை தொகுப்பு மட்டுமே. நண்பன் ஸ்ரீதர் கொடுத்த பட்டுகோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் கதைகள் என சில. பாடபுத்தகங்களை மட்டுமே அதிகம் படித்து வளர்ந்தேன்.

நான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை. என்னிடம் இப்போது ராமாயணம் புத்தகம் இருக்கிறது. திடீரென சில பக்கங்களை புரட்டி அதில் இருக்கும் பாடல்களை எப்போதாவது வாசிப்பது வழக்கம். ஆனால் ராமாயணம் குறித்து பல விசயங்கள், விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் 'விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பானு  சொன்னானாம்' எனும் வழக்கு மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இப்படித்தான் பலர் ராமாயணத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதில் குறைகள் என குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா? என்பன போன்ற வாதங்கள என கேட்டு இருக்கிறேன். மூலக்கதையை சற்று தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பர் மாற்றி விட்டார் எனும் சொல் பேச்சும் கேட்டதுண்டு. ராவணன் மிகவும் நல்லவர், அவர் சைவ சமயத்தை சார்ந்து இருந்ததால் சைவ சமயத்தை மட்டமாக்க வைணவ சமயத்தை சேர்ந்த ராமனை உயர்த்தி சொல்ல எழுதப்பட்டது என்பார்கள்.

ராமாயாணத்தை கேலி செய்வதற்காக படிக்க தொடங்கிய நான் ராமாயாணத்தின் பெருமை பேச தொடங்கினேன் நான் என்றார் கன்ணதாசன்.
ஒரு கதாசிரியர் என்ன நினைத்தாரோ அதைத்தான் அவரால் எழுத முடியும், நாம் நினைப்பதை எல்லாம் எழுத கதாசிரியர் எதற்கு? ஒரு கதையின் தன்மை எழுதுபவரை விட புரிந்து கொள்பவர்களின் மன நிலையினை பொருத்தே அந்த கதையின் தன்மை இருக்கும், இல்லையெனில் திருக்குறளுக்கு இன்னும் பலர் உரை எழுதிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் ராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ராமன் தனது மனைவியை சந்தேகம் கொண்டதால் சீதை தீயில் குதித்து தனது புனித தன்மையை நிலைநாட்டினார் என்றே பேசப்படுகிறது.

இந்த விஷயத்தை வால்மீகியும் சரி, கம்பரும் சரி எப்படி எதிர்நோக்கினார்கள் அல்லது எப்படி எழுத்தில் வைத்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் சொன்ன கதையை இனிமேல்தான் சென்று இந்த நூல்களில் பார்க்க வேண்டும்.

ஒரு வண்ணான் ராமர் நகர்வலம் வந்தபோது தனது மனைவியிடம் 'என்னை என்ன ராமன் என நினைத்தாயா? எவனோ ஒருவன் வீட்டில் பலநாட்கள் இருந்துவிட்டு வந்தவளை பத்தினி என ஏற்றுக் கொள்ள என சொல்லிவிடுகிறான்' இதைக் கேட்ட ராமன் தன் மனைவிக்கு இப்படி அவப்பெயர் நேர்ந்து விட்டதே என மனம் கலங்குகிறான். ராமனுக்கு தெரியும் சீதை பத்தினி என. ஆனால் இங்கே கதாசிரியர் ராமனை ஒரு சாதாரண மனிதராகவே பாவிக்கிறார்.

ஊர் பழி நேர்ந்துவிட்டதே என நினைத்த ராமன் ஊருக்கு சீதை பத்தினி தான் என சொல்லவே தீக்குளிக்கும் வைபவம் நடைபெறுவதாக அந்த காவியத்தில் காட்டபடுகிறது. ராமன் தன மனைவியை சந்தேகபட்டுவிட்டான் என நினைப்பது நமது அறியாமை. ஊரின் சந்தேகம் போக்கவே அந்த நிகழ்வு என்பதை தெரிந்து கொளல் வேண்டும். மேலும் கதாசிரியர் ஊரின் வாயை அந்த வண்ணான் நிகழ்வை காட்டாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பின்வரும் சந்ததியினர் ஒருவேளை இந்த கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என அதற்கும் பதில் வேண்டுமென்றே அந்த நிகழ்வை வைத்து இந்த தீக்குளிப்பு வைபவத்தை நிறைவேற்றி இருக்கலாம்.

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். அதாவது பத்தினியாக இருப்பவர் தனது சீலையில் நெருப்பை வாங்கிக் கொண்டால் அந்த சீலை பொசுங்காது என! என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ?நெருப்பு எதையும் எரித்துவிடும் தன்மை உடையது. பெண் நெருப்பை போன்றவள் என வசனம் எல்லாம் உண்டு.

நெருப்பை பொசுக்கிவிடும் சீலையை போலவே உரிய சாதனம் உடலில் பொருத்திக் கொள்ளாமல் நெருப்பில் குதித்தால் பொசுங்கி போவார்கள். நமது உடல் நிலை அப்படி. நமது தோல், செல் அமைப்பு எல்லாம் கருகிப் போய்விடும். இது கூட அறியாத சமூகத்திலா  நாம் இருக்கிறோம். தீயில் குதித்துதான் பாருங்களேன்.

அப்படி எனில் எப்படி சீதை தப்பித்து இருக்க இயலும்? அதுதான் கதாசிரியரின் வெற்றி. சீதையை தெய்வ அவதாரமாக காட்டவே இந்த யுக்தி. வால்மீகி இப்போது இருந்து இருந்தால் பல விளக்கங்கள் கேட்டு இருக்கலாம், அல்லது அயோத்தி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சந்ததி இப்போது இருந்தால் அதையும் கேட்டு வைக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. எனவே ஒரு காவியத்தை காவியமாக படித்துவிட்டு அதில் இருக்கும் விசயங்களை அதீத கற்பனைகளுக்கு விடாமல் அது ஒரு நிகழ்வு என கடந்து செல்ல பலரால் முடிவது இல்லை.

இந்த உலகில் நிறைய கருத்துகளுடன் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் என்ன செய்வது!