Friday 10 February 2012

புற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை

முன்னுரை :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, பலரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு அரிய வாசகம். வாழ்வில் நடந்து கொள்ளும் முறைகள் பொருத்தே இந்த நோய்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குகின்றன. வாழ்க்கை முறையில் உணவு, சுற்றுப்புறம் என பல காரணிகள் சுகாதார வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கின்றன. புற்று நோயானது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் உருவாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட புகையிலை, சிகரெட், கதிரியக்கம், சில வேதி பொருட்கள் சூரிய ஒளி என பல தெரிந்த காரணிகளும், சில தெரியாத காரணிகளும் அடங்கும். வருமுன் காப்போம் என்பதுவும், நோயினை முற்றிலும் குணப்படுத்துவது காட்டிலும் அதனை தடுப்பது  மிக சிறந்தது எனவும் நோய் பற்றிய அறிவு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் இது குறித்த சிந்தனைகள் அறிந்திருத்தல் மிகவும் அவசியம் ஆகிறது. 

நோய் தீர்க்கும் மருத்துவம்: 

ஒரு நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதற்குரிய மருத்துவத்தை செய்ய வேண்டும் எனும் சிந்தனையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தங்களுக்குள் ஏற்படும் மன சோர்வு, உடல் வியாதிகள் என அனைத்திற்கும் மருந்து வகைகளை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்து தங்களது வியாதிகளை அந்த காலகட்டத்தில் குணப்படுத்தி இருக்கிறார்கள். புற்று நோயிற்கு கூட ஒரு தாவரத்தில் இருந்தே மருந்தனாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புற்று நோயினை முற்றிலும் தீர்க்க முடியாவிட்டாலும் அதனை தடுக்கும் முறையினை இன்று மருத்துவத்தில் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். 

நோய்தனை ஆரம்ப நிலையிலே தடுக்கும் வாய்ப்புகளை இப்போது மருத்துவ உலகம் உருவாக்கி கொண்டு வருகிறது. முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் புற்று நோய் முதலான மிகவும் கடுமையான நோய்களை தடுத்து நிறுத்த இயலும். கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்ப்பதன் மூலம் நோய்களை தடுக்க இயலும். கீமோதெரப்பி எனப்படும் மருத்துவ முறைகள் கொண்டு, எக்ஸ் ரே, காமா கதிர்கள் மூலம் இந்த புற்று நோய்தனை கட்டுபடுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த எக்ஸ் ரே, காமா கதிர்கள் அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யப்பட்டால் அவைகளே புற்று நோய் உருவாக்கவல்லவை. 

புற்று நோய்கள் வகைகள்: 

புற்று நோய் தலை முதல் கால் வரை வரக்கூடிய ஒன்றாகும். இந்த புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோய்தனை விரைவில் குணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய் தனை அகற்றலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. இதன் காரணமாக இந்த புற்று நோய் தனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதால் தடுக்கலாம். 

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது போல் புற்று நோய்தனை அறுபத்தி நான்கு வகைகளாக பிரித்து உள்ளார்கள், அதில் மூளை புற்று நோய், எலும்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், ரத்த புற்று நோய், மார்பக புற்று நோய், கருக்குழல் புற்று நோய், ஆண் பெண் பிறப்பு உறுப்பு புற்று நோய், தோல் புற்று நோய், வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், ஆண் இனப்பெருக்க சுரப்பி புற்று நோய், கணையம் புற்று நோய், வயிற்று புற்று நோய் மற்றும் மூச்சு குழல் புற்று நோய் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. 

ஒவ்வொரு புற்று நோயிற்கும் ஒவ்வொரு அறிகுறிகள் தென்படும். இந்த புற்று நோயானது உடனே நாம் உடல் பாகத்தை தடவி பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாது. இந்த புற்று நோய் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்து உடலெல்லாம் பரவி மனிதர்களை கொல்லும் வலிமை உடையது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் பட்சத்தில் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைகிறது எனலாம். 

பரிசோதனை செய்ய பயம் ஏன்:

மனிதர்களில் பலர் மருத்துவம் பார்க்கவே மிகவும் அச்சப்படுகிறார்கள்.  கிராமங்களில் காவல் நிலையத்திற்கு சென்றாலே கௌரவ குறைச்சல் என்பதை போல மருத்துவமனை பக்கம் செல்வது என்றால் தான் நோயாளி என்பது போன்ற உணர்வுகள் வருவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். வெளிநாடுகளில் எல்லாம் பெண்களுக்கு கருவாயில் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு அனுப்புவார்கள். இந்த பரிசோதனை இலவசமானது, ஆனால் பெரும்பாலான பெண்கள் இது போன்ற அழைப்புகளை அலட்சியபடுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அலட்சியபடுத்துவதன் மூலம் தங்கள் உயிருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடலை பேணி காப்பதில் தான் உயிர் காப்பதின் ரகசியம் இருக்கிறது என்பதை இத்தனை தெளிவாக எவரால் சொல்ல இயலும். மருத்துவ தொழில் நுட்பம் பெருகிய இந்த காலகட்டத்தில் புற்று நோயிற்கான உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. 

பரிசோதனை வகைகள்: 

நமது உடலில் புற்று நோய் உருவானால் அதை எதிர்க்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த புரதமானது ஆன்டிபாடி என சொல்வார்கள். புற்று நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பது மூலம் புற்று நோய் தடுக்கலாம். இந்த பரிசோதனையில் ஒருவேளை இந்த எதிர்ப்பு ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்க இயலாமல் போக வாய்ப்பும் உண்டு. எனவே வேறு சில பரிசோதனை முறைகளும் உபயோகிக்கலாம். 

நமது உடலில் புற்று நோய் ஏற்பட்டால் சில வேதி பொருட்கள் உடலில் அதிகரிக்கும், இந்த வேதி பொருட்களை பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான புற்று நோய் வந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் ஆல்பா பிட்டபுரதம், புற்றுநோய் ஆண்டிஜென் போன்றவை ஆகும். மேலும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் புற்று நோய் வந்தால் இந்த பொருட்கள் அளவு மாறுபடும் அதை வைத்து புற்று நோய் கண்டு பிடிக்கலாம். இவை எல்லாம் மிக மிக ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க கூடிய வசதிகளாகும். 

சிறிது பெரிதானாலும் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உண்டு. உடலை ஸ்கான் செய்து இந்த புற்று நோய் கண்டுபிடிக்கலாம். பெட் ஸ்கான் என சொல்வார்கள். மேலும் உடலில் ஏதாவது கட்டி இருகிறதா என உறுப்புகளின் அளவினை பார்த்து சொல்வதும் உண்டு. இப்படி பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டபின்னர் உரிய மருத்துவ முறையினை பின்பற்றினால் புற்று நோய்தனை தடுக்கலாம். 

விழித்து கொள்ளுங்கள்: 

புற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் எனும் உணர்வை அகற்றிவிட்டு புற்று நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு அந்த நோயின் தன்மையில் இருந்து காத்து கொள்ளலாம். தற்போது கரு உருவானதும் அந்த கருவில் மார்பக புற்று நோயிற்கான மரபணு இருக்கிறதா எனும் அளவிற்கு கரு பரிசோதனை எல்லாம் தற்போது மருத்துவத்தில் வந்துவிட்டது. இதை எல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் ரத்த தான முகாம், கண் பார்வை முகாம் போன்றது போல, புற்று நோய் முகாம் நடத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். 

இதுகுறித்த அறிவினை எங்கும் பரப்பிட பல அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, அந்த அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து மக்களை அறியாமையில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும். 

முடிவுரை:

புற்று நோயிற்கு முற்று புள்ளி வைக்க பரிசோதனை முறைகள் மிகவும் உதவி புரியும் என்றாலும் இது குறித்த அறிவு அனைவருக்கும் அவசியமாகும். அதனை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்திட போராடுவோம். 

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு பள்ளி மாணவனைப்போல நிதானமாக ,தெளிவாக,சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லி இருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி செந்தில்குமார்.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று. வாழ்த்துகள்!

Radhakrishnan said...

நன்றி சகோதரி