Saturday 18 February 2012

பகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞானம்)

பகுதி 2 


கண்ணன் உலகம் தோன்றா காலம் முன்னரே இந்த கீதையை நண்பர்களுக்குச் சொல்லி வந்தானாம். ஒவ்வொரு முறையும் கீதை மறக்கும் பட்சத்தில் மறுபடியும் நண்பனுக்குச் சொல்வானாம். அப்படிச் சொல்லப்பட்ட, இறுதியாகச் சொல்லப்பட்ட கீதைதான் அர்ச்சுனனுக்குச் சொன்னது. அதெப்படி உலகம் தோன்றா முன்னர் சொல்லி இருக்க கூடும், அப்படி எந்த நண்பருக்கு சொல்லி இருக்க கூடும் என்றெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. 'நல்லாவே காதுல பூ சுத்துறான்' என ஒரு நமட்டு சிரிப்பும் சிரிக்க கூடாது. ஏனெனில் இது பகவத் கீதை. புரிகிறதோ? 


இப்படித்தான் புனித நூல்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் 'அழுக்கினை' மறைத்துக் கொண்டு புனிதத் தன்மையினை பாதுகாத்து கொண்டு வருகின்றன என சொல்வோர்கள் உண்டு. நான் எல்லாம் அப்படி சொல்லமாட்டேன். புனிதமான விசயங்களை கூட அழுக்கு படுத்திவிடும் குணங்கள் உடையவர்கள்தான் நாம். 


மூன்று வகை குணங்கள் உடைய மனிதர்கள் என பிரிக்கலாமாம். ஆனால் இந்த மூன்று வகை குணங்கள் ஒவ்வொன்றில் கொஞ்சம் கொஞ்சம் என எல்லா குணங்களும் ஒரு மனிதரிடம் இருக்கும். இந்த மூன்று வகை குணங்களில் எது மேம்பட்டு இருக்கிறதோ அந்த குணத்தை வைத்து அவரை குணவான், கனவான் என சொல்லிக் கொள்ளலாம். ஒரே மரபணுவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஓங்கியதன்மை உடையது, மற்றொன்று தாழ்த்திய தன்மை உடையது. ஓங்கும் தன்மை செயல்பாடே அது வெளிப்படுத்தும் என்பார்கள். அதே வேளையில் இரண்டு தாழ்த்திய தன்மை இணைந்தால் தாழ்த்திய தன்மை வெளிப்படும் என்பார்கள். நமது குணநலன்கள் மரபணுக்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தான் இனி எவர் மூலமாவது வெளியிட இருக்கும் வேத நூலில் தெளிவாக சொல்லவேண்டும். 


மூன்று வகை குணங்கள் எது. சுயநலம் அற்ற வெள்ளேந்தியான கள்ளம் கபடமற்ற சத்வ குணம். இந்த குணம் கொண்டோர் எவரையேனும் காட்டுங்கள் பார்க்கலாம். சில தினங்கள் முன்னர் தான் ஒரு பதிவில் சொன்னோம், சுயநலவாதிகளால் ஆனது உலகம் என. மனிதர்களுக்கு கொஞ்சம் இருக்கும், ஆனால் ஞானிகள், யோகிகள் எல்லாம் இந்த குணம் கொண்டவர்கள் என்கிறது வரலாறு. அப்படியெனில் மனிதர்களுக்கு இல்லை? குழந்தைகள். பொம்மையை தனக்கென வைத்து கொள்ளும் குழந்தைகள் கூட உலகில் உண்டு. இவ்வுலகை படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் இறைவன் கொண்டது சத்வ குணமோ? 


தானே எல்லாம், தன்னால் தான் எல்லாம் முடியும் என்று தற்பெருமை சொல்லித்திரியும் அகங்காரம் கொண்டு அலையும் தற்குறிகள் கொள்ளும் ரஜோ குணம் அடுத்தது. இதே கண்ணன் நானே எல்லாம், என்னை நீங்கள் பின்பற்றுங்கள், என்னால் மட்டுமே முடியும் என சொல்வது ரஜோ குணம் இல்லையா? இறைவனால் மட்டுமே முடியும், இறைவன் மட்டுமே உலகை படைக்க இயலும் என்பது இறைவனுக்கு ரஜோ குணத்தை தருவதில்லையா? 


எதுவுமே செய்வது இல்லை. உண்பது கூட அடுத்தவர் ஊட்டி விட வேண்டும். உறங்க வைக்க அடுத்தவர் தாலாட்ட வேண்டும் என சோம்பேறியாய் வாழ்வதே தமோ குணம். இந்த குணத்தில் இருப்பவருக்கு இவ்வுலக வாழ்க்கை பற்றி எதுவுமே தெரிவதில்லை. கடவுளா, அவன் கிடக்கான், ராஜாவா அவன் கிடக்கான் என தான் கிடந்தது உழல்பவர். இறைவன் இவ்வுலகில் எதுவுமே செய்வதில்லையே, எல்லாம் மனிதர்கள் தானே செய்து கொண்டிருப்பது அப்படியெனில் இறைவன் கொண்டது தமோ குணமா?


ஒவ்வொருவருக்கம் இந்த மூன்று குணநலன்கள் இருக்கத்தான் செய்யும். நான் சில விசயங்களில் சோம்பேறியாய் இருக்கிறேன், சில விசயங்களில் அகங்காரம் கொண்டு திரிகிறேன், சில விசயங்களில் கள்ளம் கபடமற்று சுயநலமற்று இருக்கிறேன். 


அடுத்ததாக வர்ணம் பற்றி பேசுகிறது கீதை. எனக்கு தெரிந்தது வானத்தில் மழை விழுந்த பின்னர் தெரியும் வானவில். வானவில் ஏழு நிறங்கள் கொண்டது என்றுதான் படித்து இருக்கிறேன். வயலட், இண்டிகோ, புளு, கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் (தமிழ் படுத்திக்கோங்க). ஆனால் மனிதர்களில் நான்கு வகை வர்ணங்கள உடையவர்கள் இருக்கிறார்களாம். மனிதர்களில் கூட நிறத்தை தருவது மெலனின் எனும் ஒரு நிறமி. இந்த மெலனின் நிறமி மூன்று வகைப்படும். இந்த மெலனின் நிறமியை உருவாக்கும் மேலநோசைட் பற்றி தான் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்தேன். இந்த மெலனின் நிறமி தராத வேறு நான்கு வர்ணங்களை இந்த கீதை பேசுகிறது. 


சென்ற பதிவில் குறிப்பிட்டோம், நம்மை தொழில் ரீதியாகவே அறிமுகப்படுத்துவோம் என, அதே போலவே இந்த வர்ணங்கள் தொழில் ரீதியாகப் பூசப்படுகிறது. அந்தணன், சூத்திரன், வைஷ்யன், சத்திரியன். 


பழியே இல்லாத தூய்மையான ஆத்மா அந்தனணன். அடடா! இழிநிலை வாழ்வு கொள்பவன் சூத்திரன். ஆஹா. அடுத்தவன் குடியை கெடுப்பவன் வைஷ்யன். சபாஷ். அழிக்கிரதையே செய்பவன் சத்திரியன். அருமை. ஆனால் மேற்சொன்ன குணங்களையும் இந்த நிலைகளையும் ஒப்புமைபடுத்தி பார்த்தால் எல்லா வர்ணங்களையும் பூசிக்கொண்டு திரிபவரகாத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. நான் வர்ணம் பற்றி பேசினால் எனது வலைத்தளத்தில் 'சாணி' எறிந்துவிடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ஏனெனில் அந்த ஞானம் எனக்கு இருக்கிறது. 


அதென்ன ஞானம்? பலனை எதிர்பார்க்காமல் செயல்களை செய்வதே ஞானம் என்பார்கள். அப்படி செய்பவர்கள் ஞானி என போற்றப்படுவார்கள். ஆசை எதுவும் இருக்க கூடாது, ஆனால் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். என்னப்பா இது! இந்த உலகத்துக்கு இது அடுக்குமா? ஆசை இல்லாம ஆர்வம் வருமா? பலன் இதுதான் என நினைக்காம எதுவும் செய்ய முடியுமா? 
ஆனால் மிருகம் வேறு மனிதன் வேறு என்பதே இங்குதானாம். 

ஞானிகள் எல்லாம் ஞானம் தேடி குகைகளைத் தேடித் போவாங்க. எந்த ஞானம் தேடி போறாங்க, எந்த ஞானத்தை கண்டு கொண்டாங்க அப்படின்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை அப்படின்னு பல வருஷம் தியானம் இருந்து கண்டு சொல்வாங்க. பாவ புண்ணியம் எல்லாம் பத்தி இந்த ஞானம் தெளிவா சொல்லுமாம். ஒருத்தருடைய பாவத்தை போக்க இன்னொருத்தர் பாவம் பண்ணுறது எப்படி நியாயமாகும்? இந்த ஞானம் பெற தியானத்தை இமயமலை போன்ற இடங்களில் போய் செய்வாங்களாம். 



ம்ம். இவ்வுலக ஆசைகளும், பந்தங்களும் துன்பத்திற்கே என விட்டு ஒதுங்கி வாழ்வதா வாழ்க்கை. ஒரு வேலையும் செய்யாமல் தியானம் பண்ணுவதைவிட வேலையை தியனாமாக செய்வது சால சிறந்தது. ஞானிகள் வாழும் ஆசையற்ற, பந்தங்கள் அற்ற ஆனந்தமான வாழ்க்கை போல, ஆசையுள்ள, பந்தங்கள் உள்ள ஆனந்தமான வாழ்க்கையும் உண்டு. மனிதர்கள் எல்லாம் பாவிகளாம். இப்படி சொன்னவரை அப்பாவி என்பதா, அடப்பாவி என்பதா. 


எது பாவம்? நமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், பிறருக்கு துன்புறுத்தல் தராமல் இருக்கவேண்டும் எனில் நாம் எதையும் இவ்வுலகில் செய்ய முடியாது. ஆக பாவம் என சொல்லப்படுவதே பாவமின்றி, மற்றவை பாவம் என வரைகொட்டில் வைக்க முடியாது. இந்த பாவம் குறித்த அறியாமை நிறையவே எனக்கு இருக்கிறது. 


அறிவுள்ள ஒருவன் தனது அறிவினை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவன் எப்படி ஞானி ஆவான்! 

பொருள் பற்று இல்லாதவனை ஞானியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அறிவு தனில் பற்று இல்லாதவனை ஞானியாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. அறியாமையில் இருப்பதால் நானும் ஞானியாக ஆசைப்படுகிறேன். 
நினைவுகளை நம்முடன் மறந்தே எடுத்துச் செல்கிறோம், வந்து் இருக்கிறோம், செல்லவும் செய்வோம்! அந்த நினைவுகளை மட்டும் மறக்காமல் இருந்திட பரந்தாமன் வழி சொல்வானெனில் உண்மை உணர்த்தப்பட்டுவிடும். 


ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நினைவில் கொண்டால் மறக்காது என எனக்கு நினைவில் வைப்பதின் அதிசயம் பற்றி ஒருவர் பாடம் சொல்லித் தந்தார். அவர் பெயர் இன்று என் நினைவில் இல்லை. மறதி மனிதனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' எனப் படிக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு செயலானது செய்யும்போது அது எவ்விதத்தில் முடிய வேண்டும் என பகுத்தாராய்ந்து செய்வதுதான் சரியான முறை. இது செய்தால் இது கிடைக்கும் என எதிர்பார்த்து செய்தல் கூடாது என்பது ஒரு வகையில் மிக அழகாக, அறிவாக இருந்தாலும் என்ன பலன் என்பதை அடிப்படையாய் வைத்து ஒரு காரியம் செய்வதுதான் நடைமுறை. பலனை எதிர்பார்க்காமல் செய்கிறேன் என நினைக்கும் போதே ஒரு எதிர்பார்ப்பு வந்து அமர்ந்து கொள்வது என்னவோ மனதை கனக்கச் செய்கிறது. எல்லாம் இருந்து, வேண்டாம் எனச் செல்வதுதான் பற்றற்ற தன்மை. அப்படி இல்லாத பட்சத்தில் அது இயலாமையாக கருதப்படும். அறியக்கூடிய தன்மை பெற்றபின் அறிவில் பற்று இல்லாதவரைத்தான் ஞானியாக ஏற்றுக் கொள்ள முடியும். அறியாமைக்கு காரணமான அறிவை அறிந்து கொண்டு அதனை பற்றாமல் இருப்பவரை ஞானியாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன். 

பிறப்பு இறப்பு பற்றி எண்ணும்போதெல்லாம் எதற்கு கண்ணன் என எண்ணத் தோன்றும்! இது காலம் காலமாக நடக்கும் யாகம் எனில் எதற்கு கண்ணன்? இல்லாத ஒன்று இருந்ததாய் கண்டு கொண்டதன் உண்மைதான் என்ன? மரணம் அறிவுறுத்துவதில்லை, பயமுறுத்துகிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள் என வரும்போது எதனை விடுப்பது என்பது கேள்வியாக நிற்கப்போவது இல்லை. எல்லாவற்றையும் விடுப்பது என வரும்போது எதனை ஏற்பது என்பது ஒரு கேள்வியாக நிற்கபோவது இல்லை. நாம் எதனையும் பெறுவதுமில்லை எதனையும் இழப்பதுமில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. 

அகந்தை என யார் எதனைச் சொல்வது? ''நானே எல்லாம்'' என கண்ணன் சொல்லும்போது எனக்கு அது மாபெரும் அகந்தையாய் தெரிகிறது! எல்லாம் அவன் என நான் சொல்லும்போது எனக்கு அது அடக்கமாய் தெரிகிறது. எனது செயல்களுக்கு பொறுப்பு யார் ஏற்பது? நான் செய்ததை நான் செய்தேன் எனச் சொல்லிக் கொள்வது அகந்தையா? என்னால் மட்டுமே செய்ய முடியும் என மார் தட்டிக் கொள்வது அகந்தையா? கர்வப்படு. எல்லாம் தொலையும் என தெரிந்தும் கர்வப்படு. 


--------------------

obsessive-compulsive disorder - இது குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். நாம் எல்லாம் இறைவன் குறித்த விசயத்தில் இப்படித்தான் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றும்!

எட்ட முடியாத யோகம் எட்டு நிலைகளாய்! சமாதி என்பது எப்படி உணர்வு நிலையாகும்? சமாதி என்பது உணர்வற்று போகும் நிலைதானே! இங்கு உணர்வு நிலை என்பது இறை உணர்தல் நிலையை குறிக்கிறதா? எட்டு நிலை யோகத்தை பின்னர் பார்க்கலாம்.

ஹூம்... ஒரு குழந்தை ஒரு முறை ஆர்வமுடன் ஒரு விசயம் பற்றி கேட்டதும் அக்குழந்தைக்கு அதற்கான விடை சொல்லப்பட்டால் அக்குழந்தை போகிற போக்கில் எல்லா விசயமும் பற்றி கேட்க ஆரம்பித்துவிடுமாம்! அப்படித்தான் அர்ச்சுனன் தெரிகிறான். உலகம் தோன்றா முன்னர் சொன்ன இந்த கீதையை ஒவ்வொருவருக்கும் திரும்ப திரும்ப சொன்ன கண்ணனுக்கு எதற்கு சலிப்பு ஏற்படவில்லை?


12 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்ல ஆராய்ச்சி.....

Unknown said...

//// நமது குணநலன்கள் மரபணுக்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தான் இனி எவர் மூலமாவது வெளியிட இருக்கும் வேத நூலில் தெளிவாக சொல்லவேண்டும். ////
யார் கண்டார்கள் இதற்கு முந்திய வேதங்களை முழுதாகப் படித்து முடித்தவர்களும் உண்டா.... பல பகுதிகள் காணாமலும், பல பகுதிகள் சிலரின் இடைச் சொருகளுக்கும் ஆளாகியே போனவாம்! இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் எப்போதே வேதங்களில் குறிப்பிட்டவைகள் தான் என்பதை தாங்களும் அறிவீர்கள் தான்!

////இவ்வுலகை படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் இறைவன் கொண்டது சத்வ குணமோ? ////

அவன் எங்கே வேடிக்கைப் பார்க்கிறான்... இறைவன் என்பவன் தனி சிம்மாசனம் போட்டுத் தனியாக ஒரு இடத்திலே அமர்ந்து இருக்கவில்லை என்பது தான் வேதாந்தம் கூறும் உண்மை... அது அவனின் வேலையும் இல்லை... இயக்கம் பெற படைப்ப்பின் ஏற்பாடு... அவ்வளவு தான் அந்த இயக்கம் சரியாக நடக்க தனிமனிதனுக்கு சக்தியும், அதிகாரமும் இருக்கிறது. அதை அவன் இரு அறையில் பூட்டி வைத்து விட்டத் தான் திரிகிறான்...

////தானே எல்லாம், தன்னால் தான் எல்லாம் முடியும் என்று தற்பெருமை சொல்லித்திரியும் அகங்காரம் கொண்டு அலையும் தற்குறிகள் கொள்ளும் ரஜோ குணம் அடுத்தது. இதே கண்ணன் நானே எல்லாம், என்னை நீங்கள் பின்பற்றுங்கள், என்னால் மட்டுமே முடியும் என சொல்வது ரஜோ குணம் இல்லையா? இறைவனால் மட்டுமே முடியும், இறைவன் மட்டுமே உலகை படைக்க இயலும் என்பது இறைவனுக்கு ரஜோ குணத்தை தருவதில்லையா? ////

ரஜோகுணம் என்பதன் தவறானப் புரிதல்... என்னால் மட்டுமே முடியும் என்று சொல்லித்திரிவது ரஜோகுணம் என்று எப்பிடி நீங்கள் அறிந்தீர்கள் என்றுத் தெரியவில்லை.
தன்னால் செய்ய முடியும் என்று நம்பி அந்த இலக்கையே குறியாகக் கொண்டு செல்லும் குணம் ரஜோகுணம்... தன்னால் தான் என்பதை. ரஜோ என்பது?! இருந்தும் தங்களின் அடுத்த கேள்வியும் இதனால் உறுதிப் படுத்தப் படுகிறது.

நானே எல்லாம் என்கிறான் கண்ணன் என்றால்... நீங்களும் அவன் தானே! இப்போது அப்படிச் சொல்வதும் நீங்கள் தானே! அவன் தான் எல்லோரிலும் இருக்கிறான் என்றால். நீங்கள் தான் அவனிலும் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்! என்ன! அவன் அதை அறிந்து இருக்கிறான் அப்போது அர்ஜுனன் போல் நாம் இன்னமும் அதை அறியாமல் இருக்கிறோம் அவ்வளவு தான்.... இப்போது சொல்லுங்கள் இந்த உலகைப் படைத்தது யார்? அதில் உங்களின் பங்கு எவ்வளவு?.... எல்லாமுமா! ஆச்சரியப் பட ஏதும் இல்லை.
என்னாயிற்று ஏதோ குழப்ப நிலையில் எழுதி இருக்கிறீர்கள்.

////எதுவுமே செய்வது இல்லை. உண்பது கூட அடுத்தவர் ஊட்டி விட வேண்டும். உறங்க வைக்க அடுத்தவர் தாலாட்ட வேண்டும் என சோம்பேறியாய் வாழ்வதே தமோ குணம். இந்த குணத்தில் இருப்பவருக்கு இவ்வுலக வாழ்க்கை பற்றி எதுவுமே தெரிவதில்லை. கடவுளா, அவன் கிடக்கான், ராஜாவா அவன் கிடக்கான் என தான் கிடந்தது உழல்பவர். இறைவன் இவ்வுலகில் எதுவுமே செய்வதில்லையே, எல்லாம் மனிதர்கள் தானே செய்து கொண்டிருப்பது அப்படியெனில் இறைவன் கொண்டது தமோ குணமா?/////

இறைவன் எத்தகையவன் அவன் எப்படி இருக்கிறான் என்பதன் உங்கள் புரிந்துணர்வு எனக்குத் தெரியவில்லை. பூமி சுத்துவது மனிதனால் தான் என்றால் தாங்கள் சொவது நூறு விழுக்காடு உண்மை... வேறொன்றும் அதிகம் சொல்ல வேண்டியதில்லை...

Unknown said...

///பழியே இல்லாத தூய்மையான ஆத்மா அந்தனணன். அடடா! இழிநிலை வாழ்வு கொள்பவன் சூத்திரன். ஆஹா. அடுத்தவன் குடியை கெடுப்பவன் வைஷ்யன். சபாஷ். அழிக்கிரதையே செய்பவன் சத்திரியன். அருமை. ஆனால் மேற்சொன்ன குணங்களையும் இந்த நிலைகளையும் ஒப்புமைபடுத்தி பார்த்தால் எல்லா வர்ணங்களையும் பூசிக்கொண்டு திரிபவரகாத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு.///

கடந்த கால வாழ்க்கையில் சமூக இயக்கத்திற்கான ஒரு ஏற்பாடு... அது அன்றைய சூழலில் தேவை, அதோடு ஒரு நல்ல உயர்ந்த ஏற்பாடாகவே அது இருந்து இருக்கிறது... ஆக, அதைப் பற்றிய கீதா உபச்சாரத்தில் இன்றைய உரையாசிரியர்களின் கைவண்ணம் பற்றிய செயல்களை நாம் விவாதிப்பது வீண்.... இது காலப் போக்கில் தார்ப்பரியம் கெட்டு போன காலாவதியான ஒரு முறை...

மறு பிறவியை நம்பும் எவனும் இங்கே ஒன்றை யோசிக்கணும்... இப்பிறவியில் யாராக இருந்தாலும் அது சென்றப் பிறவியின் கர்ம வினையே எனும் போது... சென்றபிரவியும், வரும் பிறவியும் எப்படி இருக்கும் என்பதை நமது இன்றயப் பிறவிகளின் கர்ம வினையே நிர்ணயிக்கும் என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்டால் இது போன்ற உயர்வுத் தாழ்வு பற்றிய மடத்தனம் அதில் நான் உயர்ந்தவன் மற்றவர்கள் எல்லாம் கீழானவர்கள் என்ற எண்ணம் இருக்காது... உயர்ந்தவன் என்பவன் பிறப்பால் அல்ல.. அவனது செய்கையால் நிர்ணயிக்கப் படுகிறது.

ஈசனே, புலயனாக வந்தார் ஆதி சங்கருக்கே திருத்தம் செய்தார்.. ராமானுஜரைத் தெரியும் பொய் சத்தியம் தரும் கொடும் பாவத்தையும் கருத்தில் கொள்ளாமல்... திருக்கோஷ்டியூர் கோவில் கொபிரத்தில் நின்று ஒரு பிரிவினர் அனுபவித்த மந்திரத்தை ஊருக்கே சொன்னவர் ஐவரும் கிருஷ்ண பக்தர் என்பதை யாவரும் அறிவோம். கீதையில் கிருஷ்ணன் சொன்னதை இவர் தவறாகப் புரிந்துக் கொள்ளாததால் தான் இவர் இதைச் செய்தார்.
நந்தனார்... சூத்திரன் என்று பிரித்து வைக்கப் பட்ட வகுப்பில் பிறந்தவர் இவரைப் போல் ஒருப் பாப்பான் உண்டா என்று பாரதியே பாடியுள்ளான். முருகன் குறவீட்டிலும், சிவன் மீனவ வீட்டிலும், மனம் முடிக்கவில்லையா! ஆயர் குலத்தில் தானே கிருஷ்ணனும் பிறந்தான். ஆதிசங்கரரும், ராமானுஜரும் எங்கே பிறந்தவர்கள் அவர்கள் செய்த காரியங்கள் என்ன? அனைத்தையும் கூர்ந்து பார்த்து... முழுவதுமாக கீதையையும் படிக்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாது...

ஒரு விதியின் இடையில் உள்ள வரியைக் கொண்டு அந்த தத்துவத்தை முழுவதுமாக எப்படி மதிப்பிட முடியும்... இன்னும் நிறைய படித்து புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது... ஆகவே தங்களின் இந்த எண்ணம் நுனிப் புல் மேய்ந்ததும்... சிலரின் தகாத செயல்களின் மீது உள்ளக் கோபமும் தான் காரணம். அவர்கள் ஒன்றும் ஆண்டவனின் குத்தகைக் காரர்கள் அல்ல.... வேதம் முழுவது படித்த திமிரில் பரந்தாமனின் மார்பிலே உதைந்தானாம் பிருகு என்ற முனி என்கிறது ஒரு புராணம்!....

வேதம் படிக்க அவனுக்கு அவன் நல்லக் கர்மா உதவி இருக்கிறது அதே நேரம் அத்தகைய செயலைச் செய்ய தீயக் கர்மா தள்ளி இருக்கிறது என்றும் கொள்ளலாம்...
ராவணனை நாம் அறிவோம், எவ்வளவுப் பெரிய ஆள், ஈச்வரப் பட்டம் நால்வருக்காம், நந்தி, சண்டி, சனி, இராவணன் அந்தத் தகுதியைப் பெற அவர்கள் என்ன பாடு பட்டு இருப்பார்கள்.

அதிலே பிரம்மனின் பரம்பரையிலே பிறந்து வந்த வேதங்களை எல்லாம் படித்து முடித்த ராவணன் ஒரு வேதிய வகுப்பை சார்ந்தவன் அப்படியானால் அவனை இதே கிருஷ்ணன், ராமனாக பிறந்து ஏன் அழித்தான்.

தனிப் பட்டவனின் வாழ்க்கைக்கு, அவன் பிறந்த சாதி வர்ணம் அவனின் அறிவை வளர்க்க காரணமாக அமையலாமேத் தவிர... இறைவனின் சபையில் யாவரும் ஒன்றே!...
நிறைய படிக்க வேண்டும்... நிறைய ஆராய வேண்டும்... இறைவன் குற்றமற்றவன், தூயவன் எங்கும் நிறைந்தவன் இதை நீங்க ஏற்றால்.. நீங்கள் காணும் அவலம் யாவும் நமக்கு நாமே ஏற்படுத்தியதே... ஆக, இறைவனை குறைபடுவதென்றால் அது நமது புரியாத் தனமே!

Unknown said...

////இவ்வுலக ஆசைகளும், பந்தங்களும் துன்பத்திற்கே என விட்டு ஒதுங்கி வாழ்வதா வாழ்க்கை. ஒரு வேலையும் செய்யாமல் தியானம் பண்ணுவதைவிட வேலையை தியனாமாக செய்வது சால சிறந்தது.///

இதை தான் கிருஷ்ணன் படித்துப் படித்து அர்ஜுனனுக்கு சொல்கிறான்... செய்யும் வேலையையும் யோக நிலையில் நின்று செய்யென்று.... இங்கேயும் தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள்.. பாரதியின் பாடல்கள் தெளிவாக இருக்கிறது... அவைகளை எடுத்து ஆராயுங்கள் அத்தனையும் புரிபடும்.... அவனும் கண்ணனைப் பாடி புகழ்ந்திருக்கிறான் குற்றம் இருப்பதாக தோன்றி இருந்தால் எப்படிப் பாடுவான்.

பாவம், கடமை நியதி என்பவைகளைப் பற்றிய தெளிவு வெவ்வேறானது... பூவில் இருக்கும் தேனைக் குடிக்கும் தேனியின் செயல் என்ன... தாங்கள் சொல்வது போலென்றால் யாரை வேண்டுமானாலும் வெட்டி வீழ்த்தி விட்டு நாம் வாழலாம்... நாலுபேருக்கு என்பதெல்லாம் பொய் இப்போது ஒரு ஆளுக்கே என்பதாகிறது இல்லையா?!:):)

நீங்கள் பேசும் அறிவு எதைப் பற்றியது... உலகாயாதப் பொருள்களைப் பற்றியது என நினைக்கிறேன்...

"ஆயிரம் தெய்வங்கள் உண்டெனத் தேடி அலைந்திடும் அறிவிலிகாள்
சுத்த அறிவோடேர்த் தெய்வம் என்று அறிவீரே!"

என்பான் பாரதி... அந்த அறிவுதான் ஞானிகளின் அறிவு... விஞ்ஞானிகளின் உலக அறிவல்ல.... ஏதோ குழப்பம் இருக்கிறது.

அர்ஜுனனுக்கு ஒரே நேரத்தில் "டேட்டா டிரான்ஸ்பர்" செய்ய கண்ணனுக்கும் முடிந்திருக்கும்... அதை அவன் செய்யாதது தான் ஏன்? என்பதை நிதானமாக யோசியுங்கள்.... இதுவும் "கிட்டத் தட்ட டேட்டா டிரான்ஸ்பர் தான்" ஏனன்றால் போர்க்களத்தில் பேசும் அளவிலா பேசி யிருக்கிறார்கள் .. அரைமணி நேரக் கனவில் வருடக் கணக்கான வாழ்க்கையைப் பார்ப்பது போல்....
நல்லக் கருத்தை சொன்னால் கருத்தை விட்டு அவனை தெய்வமாக்குவது தான் மனித இயல்பு... அதே போல் புராண இதிகாசங்களில் புரிந்துக் கொள்ள வேண்டியது வேறு.. நாம் கையில் கொண்டு ஆராய்வது வேறாகவே இருக்கிறது...

நீங்கள் வேறு எதையும் ஆராயும் முன் கடவுளைப் பற்றிய உண்மையானத் தகவல்களை முழுமையாகக் கற்றுணர்ந்து அதை தெயல்வாகப் புரிந்து மனம் அதிலே எந்த சந்தேகமும் இல்லாமல் போனப் பிறகு இவைகளைப் பற்றி பேசினால் அதிலே அறிவு ஜொலிக்கும் என்பது எனது அபிப்ராயம்.... அதற்கு வேதாந்தத்தை மட்டும் முதலில் ஆராயுங்கள்... கடவுளைப் பற்றிய கருத்தில் தெளிவு பெறுங்கள். உங்களின் வோவொரு வரிக்கும் பல பக்க பதில் போகும் உள்ளது....

பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

Unknown said...

என்னுடைய மேல் பின்னூட்டங்கள் மறுபடியும் படிக்காமல், பிழைத் திருத்தாமல் இட்டது... அதனால் பிழையிருப்பின் பொருத்தருள நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.

Radhakrishnan said...

மிகவும் அழகிய விரிவான பின்னூட்டங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன் தமிழ்விரும்பி ஐயா.

நீங்கள் சொல்வது போல வேதங்கள் பல தொலைந்து இருக்கலாம் என்பது ஏற்புக்குரியதே. அதோடு மட்டுமில்லாமல் கிடைத்த விசயங்களையும் என்னைப்போல் இப்படி 'அரைகுறையாக' புரிந்து கொண்டு சிதைத்து கொண்டுவேறு இருக்கிறோம். இயக்கம் பெற படைப்பின் ஏற்பாடு. அருமை.

மூவகை குணங்களை இறைவனுக்கு சொன்னது எனது அறியாமை என்பதை அறிந்திட விழைகின்றேன். அய்யன் வள்ளுவன் சொன்னது இறைவன் எண்வகை குணத்தான் அல்லவா. ரஜோ குணம் குறித்த விளக்கம் மிகவும் அருமை. என்னால் மட்டுமே முடியும் என்பதற்கும் தன்னால் முடியும் என்பதற்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. இயக்கத்திற்கு நாம் எல்லாம் கருவிகள் சரியே. தெளிவு பெற வேண்டிய குழப்பம் என்றே கருதுகிறேன் ஐயா.

//இறைவன் எத்தகையவன் அவன் எப்படி இருக்கிறான் என்பதன் உங்கள் புரிந்துணர்வு எனக்குத் தெரியவில்லை.//

இறைவன் இறைவனாக இருக்கிறான் என்பதுதான் என்னுடைய புரிந்துணர்வாக இருக்கிறது.

Radhakrishnan said...

வர்ணம் குறித்தான எனது பார்வையை திருத்தியமைக்கு நன்றி. இறைவன் முன்னர் அனைவரும் சமம் எனும் கொள்கையைத்தான் எல்லா வேதங்களும் சொல்கின்றன. ஆனால் நாம் தான் பிரிவினையை வளர்த்து கொண்டே வருகிறோம். நீங்கள் சொல்வது மிகவும் சரியே, ஒருவரின் செய்கையை பொறுத்தே ஒருவரின் தகுதியும் குணங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. சென்ற பிறப்பில் கர்ம வினைக்கு ஏற்ப நாம் இந்த பிறவியில் செயல்படுவதும், இந்த பிறவியின் கர்ம வினைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் செயல்படுவதும் நமது செயல்களை நம்மால் கட்டுபடுத்த இயலாத நிலைக்கு நாம் தள்ளப்படுவது உண்மைதானா?

//வேதம் முழுவது படித்த திமிரில் பரந்தாமனின் மார்பிலே உதைந்தானாம் பிருகு என்ற முனி என்கிறது ஒரு புராணம்!.//

மிகவும் ரசித்தேன். ஆம், பலரும் நுனிப்புல் மேய்ந்து கொள்ளும் காரணத்தால் இன்று வேத நூல்கள் விமர்சிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. நான் இப்படி எழுதுவது குறித்து பலமுறை சிந்தித்து இருக்கிறேன். ஆனால் அறியாமை இருளில் இருப்பவரின் மனநிலை ஒன்றே என் மனக்கண் முன்னர் வருகிறது. அனைத்தும் அறிந்த ஒருவர் வேதங்களை விமர்சனம் செய்ய மாட்டார் என்பது தெளிவு.

//இறைவன் குற்றமற்றவன், தூயவன் எங்கும் நிறைந்தவன் //

ஏற்றுகொள்கிறேன் ஐயா.

Radhakrishnan said...

//நல்லக் கருத்தை சொன்னால் கருத்தை விட்டு அவனை தெய்வமாக்குவது தான் மனித இயல்பு... அதே போல் புராண இதிகாசங்களில் புரிந்துக் கொள்ள வேண்டியது வேறு.. நாம் கையில் கொண்டு ஆராய்வது வேறாகவே இருக்கிறது...

நீங்கள் வேறு எதையும் ஆராயும் முன் கடவுளைப் பற்றிய உண்மையானத் தகவல்களை முழுமையாகக் கற்றுணர்ந்து அதை தெயல்வாகப் புரிந்து மனம் அதிலே எந்த சந்தேகமும் இல்லாமல் போனப் பிறகு இவைகளைப் பற்றி பேசினால் அதிலே அறிவு ஜொலிக்கும் என்பது எனது அபிப்ராயம்.... அதற்கு வேதாந்தத்தை மட்டும் முதலில் ஆராயுங்கள்... கடவுளைப் பற்றிய கருத்தில் தெளிவு பெறுங்கள்.//

நிச்சயம் ஐயா. அழகிய கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Unknown said...

//// 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' எனப் படிக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு செயலானது செய்யும்போது அது எவ்விதத்தில் முடிய வேண்டும் என பகுத்தாராய்ந்து செய்வதுதான் சரியான முறை. இது செய்தால் இது கிடைக்கும் என எதிர்பார்த்து செய்தல் கூடாது என்பது ஒரு வகையில் மிக அழகாக, அறிவாக இருந்தாலும் என்ன பலன் என்பதை அடிப்படையாய் வைத்து ஒரு காரியம் செய்வதுதான் நடைமுறை. பலனை எதிர்பார்க்காமல் செய்கிறேன் என நினைக்கும் போதே ஒரு எதிர்பார்ப்பு வந்து அமர்ந்து கொள்வது என்னவோ மனதை கனக்கச் செய்கிறது. எல்லாம் இருந்து, வேண்டாம் எனச் செல்வதுதான் பற்றற்ற தன்மை.////

எந்த ஒரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு... அதந்த விளைவு நாம் செய்த அளவினதாகவே இருக்கும்..
"பலனை எதிர் பார்க்காதே கடமையைச் செய்" என்றுக் கூறியது... தவறாகவேப் புரிந்துக் கொள்ளப் படுகிறது.
அதாவது இயற்கையானது அதனதன் இயல்பு படி நடப்பது போல் மனிதர்களாகிய நாமும் நமது உண்மையான, நியாயமான மறைகள் கூறிய தன்மைகள படி நடக்க வேண்டும் என்னும் ஒருக் கருத்தை மனதில் கொண்டாலும்... இங்கே கீதையிலே குறிப்பிடுவது யாதெனின்...

ஒரு காரியத்தை பற்றில்லாமல் அதாவது விளைவில் பற்றில்லாமல் யோகா நிலையில் நின்று செய்தல் என்பதாகும்.. கர்ம யோகமாகச் சொல்லப் படுவதே அது தான்.. பாரதியும் நுனிவரைச் செல் என்கிறான்... நீ என்ன செய்தாயோ அது தான் விளைவு.. அதால் பலனை மனதில் இருத்தாமல் காரியத்திலே கவனமாக இரு.. வள்ளுவனோ எண்ணித் துணிக கர்மம் என்பது இதுவே... கர்மத்தில் ஈடுபட ஆரம்பித்தப் பிறகு கவனம் முழுவதும் காரியத்திலே தான் இருக்க வேண்டும்...

சரி பலன் என்னவாக இருக்கும் நீ செய்தளவிற்கு... நீ நினைத்த அளவிற்கு வரவில்லை என்றால் செயல் இன்னும் சரியாகச் செய்யவில்லை என்பது தான் அர்த்தம்.. சரி செய்தது தோல்வியில் முடிந்தது என்ன செய்வது.. இப்போது தான் கிருஷ்ணன் வருகிறான் பலனில் பற்றுக் கொண்டு இங்கிருந்தே ஒப்பாரி வைக்காதே... எழுந்து மேலும் செல் ஆகவேண்டியதைச் செய் என்று.... சரி செய்த காரியம் வெற்றிப் பெற்று விட்டது என்றால்... அதவும் அவன் கூறியதே.. வெற்றிக் களிப்பிலே அப்படியே பலனில் ஆழ்ந்து பற்றுக் கொண்டு இருந்து விடாதே அடுத்து ஆகவேண்டியதைச் செய் என்பது தான்.

இது மனிதர்களுக்கு மாத்திரமா! சராசரி மனிதனுக்கு மாத்திரமா என்றால் இல்லை.. அது ஜீவன் முக்தர்களுக்கும் இப்படித் தான்... ஆண்டவனையே நரந்த போதும் அவர்கள் கொண்ட கடமைகளில் தொடர்ந்து செயல் புரிய வேண்டும் என்பதே... ஆகா அது தான் நா கடவுள் என்று உணர்ந்தேன் என்று அவர்களுமே சும்மா இருக்க மாட்டார்கள் என்பதே... அதாவது "இயல்பது கரவேல்" இயல்பல்லாதன செய்யாதே.... இன்னும் அழகாகச் சொல்லுவார் ஒளவை ஆத்திச் சூடி கொன்றை வேந்தன், மூதூரையிலும்...

ஆகவே பலனை எதிர்பார்க்காதே கடமையைச் செய் என்பது... தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட ஓன்று தாங்களும் அதையே மேல கூறுகிறீர்கள் நண்பரே!.

Radhakrishnan said...

மிகவும் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

Unknown said...

பொருள் பற்று இல்லாதவனை ஞானியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அறிவு தனில் பற்று இல்லாதவனை ஞானியாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை......
உங்களை போல் எனக்குள்ளும் நிறைய கேள்விகள் என்னை இம்சித்துக்கொண்டிருக்கின்றன.உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா? என் நம்பர் 9841199970 அமல்ராஜ்

Radhakrishnan said...

மிக்க நன்றி அமல்ராஜ்.
கேள்விகளை தங்களை இம்சிக்க விடாதீர்கள். ஒரு பதிவு எழுதி அந்த கேள்விகளுக்கான விடைகளை பிறரிடம் இருந்து பெற்று கொள்ளுங்கள். இது அஞ்ஞானியர் பின்பற்றும் முறை. இருளில் பற்று வைத்திடும் வரையில் அஞ்ஞானிகளுக்கு சொல்லப்படும் பதில்களில் திருப்தி இருக்காது.

ஆனால் மிகவும் சிறப்பான வழி ஒன்று இருக்கிறது, அது உங்களுக்குள் எழும் கேள்விகளை நீங்கள் எந்தவிதமான வெளித் தூண்டுதலுக்கு உட்படாமல் உங்களுக்குள் சிந்தித்து பாருங்கள். அதுவே மெஞ்ஞானியர் பின்பற்றும் முறை.

இதோ மேலே நீங்கள் குறிப்பிட்ட வரிகளுக்கு விடை இருக்கிறது. ஞானம் பொதுவாக மூன்று வகைப்படும். மெஞ்ஞானம், அஞ்ஞானம், விஞ்ஞானம்.

மெஞ்ஞானம் என்பது பொருளில் பற்று வைக்காமல் அருளில் பற்று வைப்பது. விதைக்கான மூல காரணன் இறைவன் என்று இருப்பது.
அஞ்ஞானம் என்பது அறிவில் பற்று வைக்காமல் இருளில் பற்று வைப்பது. இருளில் இடப்பட்ட விதை போல இருளிலேயே இருப்பது.
விஞ்ஞானம் என்பது அருளில், பொருளில், இருளில் சதா தேடுவது. விடைக்குள் விடை தேடி விதையை விருட்சம் ஆக்கும் தன்மை இது.