Wednesday 11 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 4

எனது தந்தை தமிழ் ஆசிரியர் மற்றும் அவர் சில காலங்கள் முன்னர் வரை தமிழ் அடிப்படைவாதியாக இருந்தவர். தமிழ் தொன்மையான, உன்னதமான மொழி என எனக்கு மூளை சலவை செய்து வளர்த்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து இப்படி சொல்லி வந்ததும், மற்றும் மற்ற தமிழ் புலமை உள்ளவர்களின் செயலும் என் மனதில் சந்தேகத்தை வரவழைத்தது. அதன் காரணமாக நானே தமிழ் குறித்து ஆராய்ச்சி செய்து தமிழ் தொன்மையான மொழி இல்லை என்பதை கண்டு கொண்டேன். எனது தந்தையார் முன் வைத்த எனது விவாதங்கள் மூலம் எனது தந்தை தமிழ் மீது வைத்திருந்த நம்பிக்கையை சற்று மாற்றியமைக்க வித்திட்டது. தற்போது தமிழ் சார்ந்த பாரபட்ச எண்ணங்களை கைவிட்டுவிட்டார். அந்த சில எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு எவரோடும், எந்த நிமிடத்திலும், எந்த இடத்திலும் விவாதம் செய்ய தயார் என செண்பகமுருகன் எனும் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுதும் பதிவர் 2007ம் ஆண்டு பகிங்கிரமாக அறிவிப்பு செய்து இருந்தார்.

ஆராய்ச்சி செய்தேன் என சில இடங்களை என்னைப் போல் தேடிப் பார்த்துவிட்டு, நான் தமிழ் தொன்மையான மொழி என சொன்னேன், அவரோ தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்லிவிட்டார். காலம் காலமாக தொல்பொருள் ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி என செய்தவர்கள் முன்னர் கிடைக்கும் சில விசயங்கள் அடிப்படையில் தமிழ் தொன்மையான மொழி இல்லை என அவர் முடிவுக்கு வந்தது வியப்புக்குரியது. அதே வேளையில் தமிழ் தொன்மையான மொழிதானா எனும் சந்தேகம் அவசியம் அற்றது என்பதற்கு தம் இல் என தெளிந்து கொண்டோம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும், உயிரற்ற சடப்பொருள்களும் தமிழிலியே பேசின. செண்பகமுருகன் எழுதியதை வைத்து தமிழ் மீது பற்று கொண்டவர்களின் கருத்துகள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

மொழியில் இரண்டு வகை உண்டு, ஒன்று எழுத்து மொழி மற்றொன்று பேச்சு மொழி. பேச்சு மொழியை எழுத்தில் வைக்க பழங்கால மனிதர்கள் திணறி இருப்பார்கள். இப்படித்தான் வேத நூல் எனும் ஒரு சிறுகதையில் பேச முடியாத ஒருவர் பேச வேண்டும் என நினைக்கும்போது எழுத்து உருவாக்கப்பட்டது என ஒரு கற்பனை எழுந்தது. மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என தொல்லுயிர் எச்சம் மூலம் கிடைக்கும் விசயங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இந்த கல்வெட்டுகள் போன்றவை எல்லாம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டே உள்ளது என தெரிகிறது. ஒன்று இந்த கல்வெட்டுகள் எல்லாம் வரலாற்றை சிதைத்து கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. அது எப்படியெனில்  தொல்லுயிர் எச்சங்கள் கிடைப்பது போன்ற இந்த கல்வெட்டுகள் எல்லாம் காலப்போக்கில் தங்கள் மீது எழுதப்பட்ட அடையாளங்களை சிதைத்து இருக்கலாம் என எண்ண வாய்ப்புண்டு.

சமஸ்கிருதம் பற்றி குறிப்பிடும்போது அது வாய் மொழி என்றே கூறப்பட்டு வந்து இருக்கிறது. ஒலி எழுப்புதல் பொறுத்தே ஒரு மொழி எழுதப்பட்டு இருக்குமெனில் அது தமிழ் மொழியாக முதலில் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் க, த, ட போன்றவைகள் பல விதங்களில் உச்சரிக்க பிராமி, கிரந்தா, சமஸ்கிருதம் என எழுத்து மொழியில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழில் அப்படி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் இதன் காரணமாக தமிழ் மொழி மிகவும் பின்தங்கியது என வாதிட முடியாது. வாடா. வாடா. எனும் வார்த்தைகளில் என்ன வித்தியாசம் எழுத்தில் காண முடியும்? ஆனால் இந்த வார்த்தைகள் சொல்லும் விதத்தில் ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என கண்டு கொண்ட மொழி தமிழ்.

இப்படி பிறமொழிகளில் உள்ள எழுத்துகள் போன்று இல்லாமல் தனித்தே காணப்பட்டதால் தமிழ் தொன்மையான மொழி என உறுதியாக இறுதியாக அறியலாம் என கூறுவோர் உண்டு. அதிலும் சில சமஸ்கிருத வார்த்தைகள் எல்லாம் தமிழில் உள்ளதால் தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் தமிழ் வார்த்தைகள் தான் மருவியிருக்கிறது என்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. ஆங்கில வார்த்தைகள் கலந்து தமிழ் தற்போது பேச்சு வழக்கில் இருப்பதால், தங்கிலிஷ் ஆளுமையால் பிற்காலத்தில் தமிழ் ஆங்கிலம் தழுவியது என சொன்னாலும் சொல்வார்கள். இருப்பினும் எந்த மொழி முதலில் வந்தது என்பது கண்டு கொள்வது கடினமில்லை, ஆனால் தமிழ் முதல் மொழியில்லை என நிரூபிக்க தமிழர்களே முன் நிற்பது  நகைப்புக்குரியது.

தமிழ் கொண்ட மாற்றங்கள் என ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். எழுத்து, பேச்சு என தமிழ் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. சங்கத்தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ் என தமிழ் பிரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கொடுந்தமிழ் காலத்தில் இருக்கிறோம். சென்னை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ், கோவை தமிழ் என தமிழ் பேசும் மக்களின் வேறுபாடு தமிழ் எத்தைகைய அழகு மொழி என புரியும். எழுத்து என வரும்போது இந்த பேதம் எழுத்தில் தெரியுமா என நெல்லை பதிவர்கள், மதுரை பதிவர்கள், கோவை பதிவர்கள், சென்னை பதிவர்கள்  என தேடிப்பார்த்தால் தான் புரியும்.

தமிழ், தமிழ் என சொல்வதை விட்டு உருப்படியாக வேலையை பாருங்கள் என சொல்பவர்கள் உண்டு. ஒரு மொழி அழிந்தால் அதன் இனம் அழியும். இந்த பூமியில் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஒரு தமிழ் கண்டமே அழிந்து போனதாக கதைகள் உண்டு, ஆனால் அறிவியலில் அப்படி ஒரு கண்டம் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த லெமுரியா கண்டம் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். இது குறித்த தேடல் அதிகம் தேவை எனினும் தொலைந்தது, தொலைந்ததுதான். எப்படி சமஸ்கிருதம் இன்று அழிந்து கொண்டிருக்கிறதோ அது போன்ற நிலை தமிழுக்கு நேரலாம், எனினும் தமிழ் பற்றாளர்கள், தமிழகம் இருக்கும்வரை தமிழுக்கு அழிவில்லை.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே... தமிழர்கள் பூமி உருவானபோதே உருவாகிவிட்டார்கள். இது அறிவியலுக்கு வியப்பை தரும். படிப்பவர்களுக்கு எரிச்சலை தரும். ஆனால் இந்த பூமியில் என்ன நடந்தது என எவருக்கு தெரியும்? வீரஸ் எனும் ஒரு தமிழர் தமிழ் பெருமை குறித்து இப்படி கூறுகிறார். வீரஸ் என்பவரின் இந்த சிந்தனை மிகவும் அழகாக இருக்கிறது.

வெடித்து சிதறிய பூமியானது வாயுக்களாக இருந்தது. வெப்பம் தணிந்ததும் முதன் முதல் பூமியில் எங்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது. பின்னர் சூரியனின் வெப்பத்தில் தண்ணீர் ஆவியாக தொடங்கியது. அப்படி ஆவியானதும் மலைக்குன்றுகள் மட்டுமே  தெரிந்தன. இதைக்கண்டதும் மலைகளும் மலைகள் சார்ந்த இடங்கள் குறிஞ்சி என தமிழர்கள் சொன்னார்கள். காலப்போக்கில் சில இடங்கள் மரங்கள் உருவாகும் வகையில் இருந்தன. அதைக்கண்டு காடுகளும், காடுகள் சார்ந்த பகுதிகள் முல்லை  என்றார்கள். அதற்குப்பின்னர் சின்ன சின்ன இடங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் என கண்டு கொண்டார்கள். அதை மருதம் என அழைத்து வயலும் வயல் சார்ந்த இடங்கள் என சொன்னார்கள். சில இடங்கள் மிகவும் தாழ்வாக இருந்ததால் அங்கே தண்ணீர் ஆவியாக வில்லை, அந்த இடங்கள் உள்ள தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிந்து கடல் போன்று இருந்ததது. அதை நெய்தல் என்றார்கள். கடலும் கடல் சார்ந்த இடங்கள். அதே போன்று சில இடங்கள் வறண்டே காணப்பட்டன, அதைக்கண்டு பாலை என சொன்னார்கள். நீரற்ற வறண்ட பகுதி. இப்படி பூமியின் பெருமையை அழகாக தமிழர்களே சொன்னார்கள் என்கிறார் வீரஸ்.

சமஸ்கிருத மொழி இலக்கியம், கணிதம், மனிதர்கள் என அந்த மொழி அளித்த பங்கு மறுக்கவியலாது. ஆர்யபட்டர், பாஸ்கரர், விஷ்ணு சர்மா, வச்தசயனர், வியாசர், வால்மீகி என ஒரு சமஸ்கிருத பட்டாளமும், திருவள்ளுவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமணர்கள் என தமிழர்கள் பட்டாளமும், இரண்டு மொழிகளிலும் மாபெரும் இலக்கியங்கள் படைத்த ஆண்டு என வரலாறு சொல்வது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டுதான். அதுவும் முதல் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இலக்கிய சிந்தனையாளர்கள் கோலோச்சி கொண்டிருந்தார்கள். குப்த, பல்லவ ஆண்டு காலம் மொழிகளின் பொற்காலம் என்றே சொல்லப்படுகிறது. வேற்றுமை இருந்த காரணத்தால் பல விசயங்கள் அழிந்து போயின. அதுவும் களப்பிரர் காலம் கரு மேகங்கள் கொண்டு தமிழை அழித்ததாக சொல்வார்கள். இவர்கள் கன்னடியர்கள் எனும் குற்றச்சாட்டு இன்றும் உண்டு. இதே காலத்தில் கிரேக்கர்களின் சிந்தனைகள் கொடிகட்டி பறந்தன. மிகவும் சிறப்பு வாய்ந்த  மொழிகளின் இலக்கியங்கள் குறித்து இனி பார்வையை திருப்புவோம். 

7 comments:

கோவி.கண்ணன் said...

பட்டையக் கிளப்புறிங்க.

முதல் மொழி மூத்த மொழி என்று எதையும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது, ஆனால் இலக்கிய இலக்கண வளங்களை தன்னகத்தே நெடுங்காலமாக கொண்ட மொழி என்ற வகையில் தமிழ் பிரம்மிவழியாக எழுதிய காலத்திலேயே வளர்ந்துவிட்டது. அப்போது வடமொழிக்கு எழுத்துவடிவம் கூட இல்லை. ஆனால் இராமர் பாலம் குறித்து (15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாமே) படம் போடுபவர்கள் அனுமான் 'ராம' என்று எழுதிய கல்லைத் தண்ணீரில் போட்டதாகவும் அது மிதந்ததாகவும் 'கதை'ப்பர். அவர்கள் அதில் வரைந்திருக்கும் சமஸ்கிரத கிரந்த எழுத்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவாயின என்று விக்கிப்பிடியா பார்த்து தெரிந்த போது அதிர்ந்தேன், அது எப்படி 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிருந்த எழுத்தில் இராம எழுதி இருக்கும் ?

"ஸ்மிருதி" என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்தும் வேதங்கள் எழுதி தொகுப்பட்டதாக எப்படித்தான் இவர்களால் புளுக முடிகிறதோ என்று திகைக்க முடிகிறது.
:)

Unknown said...

///ஆனால் தமிழ் முதல் மொழியில்லை என நிரூபிக்க தமிழர்களே முன் நிற்பது நகைப்புக்குரியது.///
ஹா! ஹா!!..."தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது"

Unknown said...

////இவர்கள் கன்னடியர்கள் எனும் குற்றச்சாட்டு இன்றும் உண்டு.////
துளுத் தமிழ், கருனாட்டுத் தமிழ், மலைத் தமிழ், செந்தமிழ் ௯த்மில் நாட்டுத் தமிழ் இவைகளைப் பற்றியும் கூறலாமே!

Unknown said...

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
- பாரதி தாசன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கோவியாரே. மிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா. பாரதிதாசன் பாடல் அருமை. தமிழின் பெருமையை நீங்கள் எழுத வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.

Unknown said...

மிக்க நன்றி நண்பரே!
இந்த அளவிற்கு பல நிரூபணக் கட்டுரைகளை தர என்னால் இயலாது.
தாங்கள் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள்...
ஆகவே தொடர்ந்து எழுதுங்கள், நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.
நன்றி.

Radhakrishnan said...

தங்களின் தன்னடக்கம் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா.