Wednesday 29 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 2

சென்னையிலிருந்து அருப்புகோட்டைக்கு ஏழு மணி நேரத்தில் வாகனத்தில் சென்றது ஆச்சர்யம் தான். ஆனால் அதிர்ச்சியாகவும் இருந்தது. இன்னும் சாலைகள் முழுவதும் போட்டு முடிக்கப்படவில்லை. பல இடங்களில் யார் முன்னர் செல்வது, யார் நின்று செல்வது என புரியவே முடியாதபடி சாலை அமைப்பு. சாலையில் இருந்து வலப்பக்கம் திரும்பும்போது எந்த அறிவிப்பும் இல்லை. திடீரென தவறான பாதையில் வரும் வாகனங்கள். நமது ஊர் மக்கள் திறமைசாலிகள்தான். எந்த சூழலிலும் வாழ்ந்துவிடும் அளவுக்கு மிகவும் திறமைசாலிகள்தான். போதிய திறமை இல்லாத காரணத்தால் நான் இந்தியாவில் வாகனத்தை ஓட்டவே இல்லை.

முதல் நாள் எங்கும் செல்லாமல் கழிந்தது. அடுத்த நாள் மதுரைக்கு சென்று வந்தோம். போத்தீஸ் கடையில் மனிதர்கள்! எங்கு பார்த்தாலும் மனிதர்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். இன்னும் கடை முழுவதும் தயாராகவில்லை என்றே சொல்லலாம். மதுரை எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தனை சுற்றியிருந்த கடைகள் மதுரை மாட்டுத்தாவனிக்கு இடப்பெயர்ச்சி ஆகி கொண்டிருந்தது. இருப்பினும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி எங்கும் கூட்டம். பீமாஸ் எனப்படும் நகைகடையிலும் மனிதர்கள். வாகனங்கள் நிறுத்த வழியின்றி சாலைகள் எல்லாம் சிறு வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. லண்டனில் நகை கொடுத்து நகை வாங்கினால் நம்மிடம் இருந்து வாங்கும் நகைக்கு அவர்கள் தரும் விலை இருபது சதவிகிதம் கூட இருக்காது. ஆனால் தமிழகத்தில் விற்கும் விலைக்கே வாங்கும் விலை நிர்ணயிக்கிறார்கள். தொழிலில், விற்பனையில், வியாபாரத்தில் கொடிகட்டும் நம்மவர்கள் திறமைசாலிகள்.

அன்று இரவு கிராமத்தில் பூப்புனித நீராட்டு விழா. சடங்குகள் இன்னும் தொலைந்து போகவில்லை என்பதை காட்டும் வண்ணம் ஒலித்து கொண்டிருந்த குழாய் ரேடியோ. உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள். இந்த விழா பெண்ணுக்கு நடத்தப்படுவது குறித்து இப்பொழுதெல்லாம் பெரும் விவாதம் எழுப்பப்படுவது உண்டு. ஆனால் கிராமங்களில் இந்த சடங்கு உறவுமுறைகளை இணைக்கும் வண்ணமாகவே இருந்து வருகிறது. முன்னர் எல்லாம் இலைமறை காயாகவே பேசப்படும் இந்த விசயங்கள் எல்லாம் 'அம்மா, அது உங்க காலம்' என வெளிப்படையாகவே பேசும் நவநாகரிகம் இன்னும் கிராமத்தில் வளர்ந்திருக்கவில்லை. விழா முடிந்ததாக அறிவிக்கப்படும் வண்ணமாக உணவு பரிமாற்றம். எத்தனை பேர் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். உறவுகள் ஒட்டாத நகரம் எவருக்கு தேவை.

இணையம் மறந்து போயிருந்தேன். இணைய உறவுகள் மறந்து போயிருந்தேன். முத்தமிழ்மன்ற கூட்டம் ஒன்று திருவண்ணாமலையில் நடைபெற இருப்பதாக அறிந்து இருந்ததால், அன்றே நண்பர் ரத்தினகிரியை தொடர்பு கொண்டேன். மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சொன்னார். நண்பர் செல்வமுரளியிடமும் பேசினேன். தோழி சூரியவிடமும் பேசினேன். எழுத்துலக நண்பர்கள்தனை சந்திக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது.

அடுத்த நாள் எனது பிறந்த ஊருக்கு சென்றேன். மேற்கு தெருவில் ஒரு வீடு எழுதிய மனம் உண்மையிலே அழுதது. நான் வருவேன், என் சகோதரன் வருவான் என எந்த ஊருக்கும் செல்லாமல், லண்டன் வரும் வாய்ப்பு இருந்தும் அதை தட்டிக் கழித்துவிட்ட எனது அன்னை இல்லாத வீடு. கடவுள் தொழுதல் கண்ணை விட்டு அகலவில்லை. நுனிப்புல்லில் எழுதிய நாச்சாரம்மாள் வீடு. மனம் ஒருபோதும் மறுப்பதில்லை. நம்பிக்கைகள் விருட்சமாக இருக்கிறது. இறைவன் மறுக்கவே முடிவதில்லை. அமைதியாய் வேண்டுதல், உள்மனதில் ஆயிரம் கேள்விகள். நம்பிக்கைகளை தொலைக்கும் தைரியம் ஒருபோதும் ஊரில் வருவதே இல்லை.

உறவுகளை பார்த்த திருப்தி. மகிழ்வுடன் பேசிய தருணங்கள். ஒரு இரவு கூட தங்காமல் திரும்பினேன். தந்தையை என்னுடன் வந்து தங்க சொல்லும் அளவுக்கு தலைக்கனம். பணம் தரும் வசதிகளில் பழையவை புறக்கணிக்கப்படுகின்றன, அல்லது புறக்கணிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். பல விசயங்கள் வேதனைபடுத்தின. இதுதான் வாழ்க்கை என சமாதானம் வசதியாகவே இருந்தது. அவசர அவசரமாக திரும்பினோம்.

அடுத்த தினம் மீண்டும் மதுரை, மீண்டும் போத்தீஸ். இன்னும் சில கடைகள். அருப்புகோட்டையும், விருதுநகரும் மதுரை அளவுக்கு இன்னும் வளரவில்லை. வியாழக்கிழமை ஒரு திருமணம். அதற்கு முதல் தினமே வளையல் அணிவிக்கும் நிகழ்வு. எந்த ஒரு திருமண நிகழ்விலும் இதுபோன்ற நிகழ்வு பார்த்ததில்லை. மிகவும் சிறப்பாக இருந்தது. பலர் ஆவலுடன் வளையல்கள் அணிந்து கொண்டார்கள். தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கும் ஒரு ஆலயம். பிரமிக்க வைக்கும் அளவில் அமைக்கப்பட்ட சிலைகள். நாற்பது நாட்களாக பூமிக்குள் இருந்த மனிதர் அதாவது சித்தர். வியக்கவைக்கும் அதிசயங்கள் நமது ஊரில் மிகவும் அதிகம். வினாக்களும் உடன் எழுவதை தவிர்க்கவே இயல்வதில்லை. ஆனால் பிறர் நம்பிக்கையை உரசும் அளவுக்கு எதுவும் பேச வருவதில்லை.

அடுத்த நாள் திருமணம். கோவிலில் வைத்து மிகவும் சிறப்பாகவே நடந்தது. திருமணம் முடிந்த உடன் பந்திக்கு பரபரக்கும் மக்கள். அடுத்த வேலை பார்க்க வேண்டும் என ஓடும் அவசரம். பலருடன் நிதானமாக பேச இயலாத தருணம் அது. நான்கே மணி நேரத்தில் அனைவரும் பறந்து போனார்கள்.

அடுத்த நாள் காங்கேயனத்தம் எனும் ஊரில் கும்பாபிஷேகம். எழுத்துலக நண்பர்கள் எவரும் தொடர்பில் இல்லை. இணையம் செல்லாமல் ஏழு நாட்கள், வாழ்க்கை வசதியாகத்தான் இருந்தது. வலைப்பூ பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. வாழ்க்கையில் வேலையென அன்றாடம் உழலும் மக்களுக்கு எழுதுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் இருக்கும், ஆனால் அவர்களுக்கு வக்கணையாக எழுதும் வசதிகள் இருக்கவில்லை. அறிக்கைகள் விட்டு கொண்டிருக்கும் அனாவசியம் அவர்களுக்கு இருப்பதில்லை.

(தொடரும்)

2 comments:

Unknown said...

நண்பரே உங்களை கண்டதில் மகிழ்ச்சி.நானும் அருப்புக்கோட்டைதான் நண்பரே!

Radhakrishnan said...

மிகவும் மகிழ்ச்சி நண்பரே. விரைவில் சந்திப்போம். :) நன்றி.