Thursday 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)

Wednesday 30 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 26

அன்று மாலை கோரனின் வீட்டிற்கு நானும் காயத்ரியும் சென்றோம் ஆனால் கோரனின்  வீடு பூட்டப்பட்டு இருந்தது. எங்கு சென்று இருப்பான் என எண்ணுவதற்கு வழியில்லை. அப்படியே காயத்ரியின் அக்காவை பார்க்க ரங்கநாதன் சார் வீட்டிற்கு சென்றோம்.

காயத்ரியைப் பார்த்ததும் அவளது அக்கா அத்தனை பாசமாக வரவேற்றார்.  நாங்கள் சிறிது நேரம் அங்கு இருக்கும்போதே சுபத்ரா அங்கு வந்தாள். எங்களைப் பார்த்தவளின் முகம் அத்தனை சந்தோசமாக இல்லை. வாங்க என சொல்லிவிட்டு நேராக மாடிக்குப் போனாள். காயத்ரியின் அக்காவின் கவனத்தை என் பக்கம் திருப்பினேன்.

''சார் எப்போ வருவாங்க?''

''அவர் வர எப்படியும் மணி எட்டு ஆகும்''

''நீங்க வேலைக்குப் போறதை எதுக்கு நிறுத்தினீங்க''

''வேணாம்னு சொல்லிட்டார், நிறுத்திட்டேன், நீ சொன்னா காயத்ரியும் கேட்பா''

''வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லமாட்டேன்''

''ஆனா இது கூட நல்லா இருக்கு''

''அவங்க அம்மா எங்கே?''

''அத்தை வெளியூர் போயிருக்காங்க, வர ஒரு வாரம் ஆகும்''

பேசிக்கொண்டு இருக்கும்போதே சுபத்ரா வந்தாள்.

''சுபா, கோரன் எங்க போனான்னு தெரியுமா''

''எனக்குத் தெரியாது''

''சொல்லு சுபா, அவன் வீடு பூட்டி இருந்தது''

''எனக்குத்  தெரியாதுடா''

சுபத்ரா அவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். காயத்ரி அவளது அக்காவிடம் எல்லா விபரங்களையும் சொல்லி வைக்க காயத்ரி அக்காவோ சுபத்ராவிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அடுத்த நாள் கல்லூரியில் கோரன் வந்து தனது மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்றதாக பேசிக்கொண்டார்கள். நானும் தான் கல்லூரியில் இருக்கிறேன் ஆனால் எனக்குத் தெரியாமல் என்னைப் பார்க்காமல் அவன் அவ்வாறு செய்தது ஆச்சரியமாக இருந்தது. தலைவலி என சொல்லிவிட்டு கோரன் வீட்டிற்கு சென்றேன். அவனது வீடு பூட்டப்பட்டுதான் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஒரு மணி நேரம் முன்னால வெளிய கிளம்பி போனாங்க என தகவல் சொன்னார்கள். எனக்கு இப்படி துப்பறியும் வேலையாகவே போய்விட்டது.

கல்லூரியில் படிப்பு தடைப்பட்டுக் கொண்டு இருந்தது. காயத்ரியும் படிப்பு மீது அக்கறை செலுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு வாரம், இரண்டு வாரம் என வாரங்கள் கடந்து சில மாதங்கள் கடந்தது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வந்தது கண்டு கொஞ்சம் சந்தோசம் என்றாலும் கோரன் எங்கு போனான் என தெரியவில்லை. இந்த சில மாதங்களாக சுபத்ரா முகம் கொடுத்து பேசவும் இல்லை.

திடீரென எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

''டேய் முருகேசு, நான் கோரன் பேசறேன்''

''கோரன், எங்க இருக்க''

''நான் எங்க இருக்கேனு உனக்குத் தெரிய வேணாம், அந்த வாத்தியானை கொன்னுட்டேன், அடுத்து சுபத்ராதான்''

''என்ன சொல்ற''

''அவ உன்னை காதலிச்சேன்னு என்கிட்டே பொய் சொன்னால அதுக்கு அவளை கொலை பண்ணிட்டுதான் மறு வேலை''

''கோரன் உன்னோட புத்தி எதுக்கு இப்படி போகுது''

''நம்பிக்கைத் துரோகிகளை இந்த உலகம் சகித்துக்கிட்டு இருக்கவே கூடாதுடா, நீ காயத்ரிக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணின உன்னையும் கொல்வேன்டா''

''இப்படி எத்தனை பேரை கொல்லப் போற''

''எனக்கு ஏதாவது சம்பந்தபட்டவங்க மட்டும் தான்''

''நீயே நம்பிக்கைத் துரோகம் பண்ணினா உன்னை நீயே கொல்வியா''

''மூடன் மாதிரி பேசாதடா, நான் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டேன்டா''

''எனக்குப் பண்ணி இருக்கியே''

''என்னடா சொல்ற''

''உன்னை நல்லவன்னு நம்பினேன் ஆனா நீ கொடூர மனம் கொண்டவனா இருக்கே, நீ பதில் சொல்றது எல்லாம் நினைச்சி எவ்வளவு நினைச்சி இருந்தேன்''

''டேய் வாயை மூடுடா, நாளைக்கு அந்தாளு முகத்தோட பேப்பர்ல வரும், படிச்சிக்கோடா''

அத்துடன் அழைப்பைத் துண்டித்தான். அவனை மீண்டும் அழைத்தபோது அழைப்பில் இல்லை என்றே பதில் வந்தது. இதை காயத்ரியிடம் சொன்னபோது காயத்ரி சுபத்ராவை எச்சரிக்கைப் பண்ணலாம் என சொன்னாள் . சுபத்ராவிற்கு போன் போட்டபோது சுபத்ரா எடுக்கவே இல்லை. அன்று இரவு சுபத்ராவை சந்திக்கப் போனேன். எனது அழைப்பு கேட்டும் சுபத்ரா பேச மறுத்தாள். சிலமுறை முயற்சி செய்து கடைசியாக பேசினேன்.

''சுபா ஒரு முக்கியமான விஷயம், சொன்னா கேளு, வெளியே வா''

சுபா வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

''என்னடா''

''உன்னை கோரன் கொல்லப் போறதா எனக்கு போன் பண்ணினான்''

''என்னடா உளறுற''

''சொன்னான், அந்த வாத்தியானை கொன்னுட்டானாம், அடுத்து நீதான் அப்படின்னு சொன்னான்''

''எந்த நம்பர்ல இருந்து பேசினான், என்கிட்டே இருக்க நம்பருக்கு அவனை கூப்பிட முடியலையேடா''

''நம்பர் அழிச்சிட்டான்''

''நீ போடா நான் பாத்துக்கிறேன்டா, முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியாடா''

''என்ன உதவி''

''அடுத்தமுறை கோரன் போன் பண்ணினா எனக்கு இப்படி வந்து சொல்லாதே, அவ மேல கை வைச்சி பாருடா, உன்னை நானே கொலை பண்ணுவேன்னு சொல்லு''

''ஏன்''

''டேய், உன்னோட காதலி என்னை ஒருத்தன் கொல்லப்போறேனு சொல்றான், அதை கேட்டுட்டு என்கிட்டே வந்து தகவல் சொல்ற''

''அது இல்லை''

''என்னடா அது இல்லை, ஒழுங்கு மரியாதையா காயத்ரியை மறந்துரு''

''சுபா நீ என்னை காதலிக்கிறது பொய்னு தெரிஞ்சிதான் கோரன் உன்னை கொல்ல இருப்பதா சொன்னான்''

''சரிடா, ஆனா நான் காதலிக்கிறது உண்மைடா''

''வேணாம் சுபா''

''பாருடா என்ன நடக்குதுன்னு''

அவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நான் வெளியில் நின்று கொண்டு இருந்தேன். என் மீது எவரின் கையோ பட்டது. திரும்பிப் பார்த்தேன். கோரன் நின்று கொண்டு இருந்தான். எனக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கியது.

(தொடரும்)





Tuesday 29 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 25

''முருகேசு, உனக்கு சில உண்மைகளை சொல்றேன் கேளுடா, அதுக்கு அப்புறம் உனக்கும் ஒரு விஷயம் சொல்றேன்டா, அதுபடி நீ நடக்கணும்டா, இல்லை...''

''சொல்லு''

''அவனின் மனைவி எனது அம்மாவுக்கு  தங்கை முறை, என் அப்பாவுக்கும் தூரத்து சொந்தம். அவனும் சித்தியும்ஓடிப்போய்த்தான் காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள். முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். சித்தி எங்கள் வீட்டுக்கு வருவார்கள், போவார்கள். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இதனால் இவனால் எனது சித்தி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு சற்று ஆறுதலாக இருந்த எங்களை பார்க்கக்கூடாது என அவன் கட்டளை போட்டதால் எப்போதாவது வர ஆரம்பித்தவர் சில மாதங்களாக வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். என் அம்மா அங்கே செல்லும்போது அவன் என் அம்மாவை கண்டபடி பேசியதை என் அம்மா எங்களிடம் சொல்லவில்லை. சித்தியைப்  பார்க்கவும் செல்லவில்லை.

மன அழுத்தம்தனை காரணம் காட்டி பலமுறை மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் சென்று இருக்கிறான். தான் நல்லவன் போல எல்லோரிடமும் காட்டிவிட்டு தாட் பொரசெஸ் என கதைகட்டிவிட ஆரம்பித்தான். ஒருமுறை சித்தியைப் பார்த்தபோது கோரன் எனக்கு பயமா இருக்குடா, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் என்றபோது இவன் வேறொரு மணம்  முடிக்க திட்டமிடுவதை சொன்னார். நான் அவனை முழுமையாக நம்பியதால் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் சித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவனிடம் இருந்தே தகவல் வந்தது. தற்கொலைதான் என நம்பும்படி எல்லா ஆதாரங்களும் இருந்தன அதனால் போலிஸ் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்பா அம்மா இது ஒரு கொலை என்றே எண்ணினோம். அவன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை கொல்வது  எனத்  திட்டமிட்டோம். ஆனால் படுபாதகன் நீ குறுக்கே வந்துவிட்டாய், உன்னை கொலை பண்ணினால்தான் அவனை கொலை பண்ண முடியும் என எனக்குள் ஒரு ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இன்று நான் சொன்னது பொய் என்று சொன்னாய் பார் அதுதான் எனக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது.

இப்போது சொன்னது உண்மை. நான் அவனை எங்கேனும் தேடி கொலை பண்ணாமல் விடமாட்டேன். நீ இதற்கு மேல் இதில் தலையிடுவது என இருந்தால் இப்போதே சொல், உன்னை இங்கேயே கொன்று போட்டுவிடுகிறேன்''

''கோரன், இது எல்லாம் தப்பு என தெரியவில்லையா''

''எதுடா தப்பு, சொல்டா, இவ்வுலக உயிர்கள் எல்லாம் பிரசவிக்கின்றன, அந்த பிரசவம் என்பது பெண்ணுக்கு என உண்டானதுடா, ஒரு பெண் பிரசவிக்க முடியாமல் போனால் வேறு ஒரு பெண்ணை நாடுவது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆனால் அப்படியே விருப்பம் கொண்டு போகட்டும் அதற்காக மனநிலை பாதிக்கப்படும்படி செய்து கொலை செய்யும் மனநிலையை எப்படியடா மன்னிப்பது''

''கோரன் சொல்வதைக் கேள், கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீ தவறான முடிவை எடுக்காதே''

''உன்னோடு பேசினதே தப்புடா, இதோ பார் உன்னை...''

நான் சுதாரித்து எழுந்து கதவைத் திறந்து ஓட எத்தனித்தேன். ஆனால் அவன் விருப்பம்படி செய்யட்டும் என அப்படியே உட்கார்ந்து இருந்தேன். கோரன் சமையல் அறைக்குள் என நினைக்கிறேன், அங்கிருந்து ஒரு கத்தியுடன் வந்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''சொல்டா, நீ தலையிடுவாயா''

''கோரன், இனி அது உன்னோட விருப்பம், நான் விலகிக் கொள்கிறேன்''

''போலிஸ் கேட்டால் எதுவும் தகவல் சொல்வாயாடா''

''இல்லை சொல்லமாட்டேன்''

''அந்த சுபாவை நீ ஏமாற்றினால் இதே கதிதான் உனக்கும். அதென்னடா நீ நினைத்தபடி பெண் மாற்றுவது, முதலில் அவன், அடுத்து நீ. அதுக்கு ஒரு அடையாளம் உன்னில் போடவேண்டும்''

கோரன் பேசிக்கொண்டே என் அருகில் வந்தான். நான் அப்படியே அமர்ந்து இருந்தேன். என் அருகில் வந்ததும் அப்படியே எழுந்து அவனது வயிற்றில் ஓங்கி முட்டினேன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். எங்கிருந்து வந்த தைரியமோ அவனது உடலில் கைகளில் சரமாரியாக மிதித்தேன். அவன் கொஞ்சம் கூட கத்தவில்லை. இனி அங்கு இருப்பது ஆபத்து என கதவைத் திறந்து வேகமாக வெளியேறினேன். இனி கோரன் பரம எதிரிதான் என நினைக்கும்போது பயமாக இருந்தது.  சுபத்ராவிடம் விஷயத்தை சொல்லி நிலைமையை சரி செய்ய வேணும் என எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காயத்ரி தூங்காமல் காத்துக்கொண்டு இருந்தாள். எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தேன். அவள் பதறினாள்.

''முருகேசு, என்ன காரியம் பண்ணி இருக்க?''

''நீ கவலைப்படாதே, அவன் எப்படியும் அந்த ஆசிரியரைத் தேடித்தான் போவான் அதுக்குள்ளாற சுபா கிட்ட பேசுவோம்''

''அவதான் எல்லாம் தூண்டி விட்டு இருக்கா, அவகிட்ட எதுக்குப் பேச்சு''

''இல்லை காயூ, நீ தூங்கு''

காயத்ரியிடம் சொல்லிவிட்டு நான்  தூங்காமல் இருந்தேன். காயத்ரியின் அம்மாவின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் காயத்ரியின் தந்தை இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போனார். அதேபோல கோரன் சொன்னது போல இருந்தால் ஆசிரியர் எதற்கு கொலை பண்ண வேண்டும். யோசித்தவாரே உறங்கினேன்.

மறுநாள் சுபத்ராவைப் பார்க்கச் சென்றேன். சுபத்ரா எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''சுபா, முக்கியமான விஷயம் பேசணும், நீ கோரன் கிட்ட என்னை காதலிக்கலை, கதைதான் சொன்னேன்னு சொல்லிரு, அவன் என்னை கொல்லணும்னு  சொல்றான்''

''இன்னும் உன்னை கொல்லலையா?, இன்னுமா விட்டு வைச்சிருக்கான், நான் எதுக்குடா பொய் சொல்லணும், நீயும் நானும் காதலிச்சோம், என்ன மறைக்கப் பாக்கிறாய, ஒழுங்காப் போயிருடா''

''நீ பரிணாமம் பத்திதான் படிக்க வந்த, எதுக்கு இப்படி என்னை வம்பில கோர்த்துவிட்ட''

அவளிடம் நேற்று நடந்த விசயங்களை சொன்னதும் அதிர்ச்சி ஆனாள்.

''என்னடா சொல்ற''

''ஆமா சுபா, இதுதான் நடந்தது''

''இருடா''

அவளது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

''கோரன், என்ன காரியம் பண்ண இருந்த, முருகேசு என்னோட பிரெண்ட் அவனுக்கு ஏதவாது  ஆச்சு உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. ஏன்டா  அறிவுகெட்டவனே அவனை என்ன பண்றதுனு  எனக்குத் தெரியும் உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு''

பதில் கூட பேசாமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது.

''என்னடா, ஒழுங்கா இரு''

''-----''

''புரிஞ்சதுல நீ அந்த வாத்தியானை பழி வாங்கு என்னமும்  செய், என் பிரெண்ட் பக்கம் நீ தலை வைச்ச உன் தலை இருக்காது, வைடா போனை''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் எனக்குத் தெரியாதது என்று நிறைய இருக்கிறது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று நான். சுபாவின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.

''நீ தைரியமா இரு, ஆனா நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிரனும், இல்லைன்னா கோரன் பண்ணவேண்டிய வேலையை நான் பண்ணுவேன்''

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

''எங்கடா உன் பொய் காதலி, நான் எது சொன்னாலும் சிரிப்பாளே''

''சுபா சீரியஸா பேசு''

''ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதி  பெரிசாக்கி விட எனக்குத் தெரியும், எவ்வளவோ பெரிய விஷயத்தை ஒண்ணுமே இல்லாம ஆக்க என்னால முடியும்''

''சுபா, நல்லா படிச்சி வேலைக்குப் போகணும்னு இருக்கேன்''

''அப்படின்னா அவளை மறந்துரு''

''சுபா''

''டேய் இந்த உலகத்தில உயிரற்றதில் இருந்து உயிர் உருவாகியதா எந்த வரலாறும் இல்லை. அதனால நான் உன்னோட உயிர். நீ என்னோட உயிர்''

சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். பிறரது உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது . சைக்கோ! நானா? அவளா?

(தொடரும்)


Monday 28 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 24


பகுதி 23 

கோரன் ஆசிரியர் அவனது தாய்க்கு பெரும் கொடுமையை இழைத்ததாக தனது கதையை சொல்லி முடித்து இருந்தான். அவன் மிகவும் சுருக்கமாகவே சொன்னவன் என்னை நோக்கி முறைத்தவண்ணம் இருந்தான். அவனை நோக்கி நான் மட்டுமே பேசினேன்.

''நீ சொல்வது எல்லாம் பொய்''

''உன்னை கொலை செய்தால் அந்த உண்மை தெரியும்''

கோரனின் ஆவேசம் எனக்கு ஒன்றும் இப்போது புதிதாக தெரியவில்லை. பிறரது பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள போராடினான். அதற்குள் காவல் வண்டி கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. அதைக் கண்ட கோரன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். அவனை சில மாணவர்கள் விரட்டிக்கொண்டு சென்றவர்கள் எதற்கு நமக்கு வம்பு எனத் திரும்பினார்கள். காவல் அதிகாரிகள் வேறொரு விசயத்திற்காக வந்தார்கள் என்பது எங்களுக்குப் பின்னரே தெரிந்தது.

கோரன் சைக்கோத்தனம் கொண்டவன் என முடிவுக்கு வரவேண்டி இருந்தது. நான் வாசித்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.

சைக்கோக்கள் என்போர் எவரென அடையாளம் தெரியாமல் இந்த உலகம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது எல்லோரும் ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே எனும் முடிவுக்கு வருவது பொருத்தம் ஆகாது.

தார்மீக உணர்வுகள் அற்றுப் போனவர்களை சைக்கோ என்றே அழைக்கின்றனர். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இந்த சைக்கோக்கள் இருவகைப்படுகின்றனர். ஒன்று மரபணு ரீதியாக உருவாகும் வகையினர், மற்றொன்று சூழ்நிலை காரணமாக உருவாகும் வகையினர். இவர்களால் சமூகத்திற்கு பெரும் அச்சம் உண்டாக்கப்படுகிறது. 

பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோக்கள். இந்த வகையினரின் மூளையில் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய இணைப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அப்படியெனில் ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொல்ல  வேண்டும் என உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எப்படி கோரனுக்கு வந்தது. அவனது விசயத்தில் தலையிட்டேன் என்பதற்காக என்னையும் கொலை பண்ண வேண்டும் என கோரன் இருப்பது எப்படி என யோசித்தேன்.

''என்ன யோசனை?''

''காயூ, கோரன் பத்தி என்ன நினைக்கிறே''

''நீ அவன் விசயத்தில தலையிட்டு இருக்கக் கூடாது''

''என்ன அப்படி சொல்ற''

''நிச்சயம் அவன் உன்னை கொல்ல  மறுபடியும் முயற்சிப்பான்''

''இல்லை என்னை இனி தேடி வரமாட்டான், ஆனா அவன் சொன்ன கதை பொய் அப்படின்னு எனக்குத் தோணுது''

''உண்மைன்னு இருந்தா?''

''காயூ''

''ஆமா முருகேசா, அவன் சொன்னபோது இருந்த ஆவேசம், ஆத்திரம் எனக்கு என்னமோ உண்மைன்னு தோணுது''

''இல்லை காயூ, அவன் ஒரு கதையை உருவாக்கி இருக்கான்''

''உருவாக்கப்பட்ட கதை இல்லை''

மாலை நாங்கள் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றபோது சட்டென ஒரு மறைவில் இருந்து எங்கள் முன்னால் கோரன் வந்து நின்றான்.

''நான் சொன்னது பொய்னு சொன்னல, என்னோட வாடா வந்து பாரு''

''கோரன் உன் படிப்பு எல்லாம் யோசிச்சிப் பாரு''

''டேய், எனக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை, நான் சொன்னது உண்மைடா, என்னோட வாடா''

அவனது வார்த்தைகளில் கோபமும் ஆத்திரமும் கொப்பளித்தது. காயத்ரி சற்று பயப்பட ஆரம்பித்தாள்.

''என்னோட வந்தா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், நீ வரலை, உன்னை கொலை பண்ண தயங்கமாட்டேன்டா''

''நடடா வரேன்''

''அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுடா''

''அவளும் என்னோட வருவா''

''நீ வீட்டுக்குப் போடி''

அவனது வார்த்தைகள் எனக்கு எரிச்சலைத் தந்தன. காயத்ரியை வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவளோ அவனை நம்பிப் போகாதே என சொன்னாள். அதற்குள் சிலர் கூடி விட்டார்கள்.

''வாடா''

''என்ன தம்பி தகராறு?''

''அவனை என்னோட வரச்சொல்லு''

''கூப்பிட்டா, போப்பா''

நானும் காய்தரியும் வெகு வேகமாக அங்கிருந்து நகர்ந்தோம். கோரன் எங்களை பின் தொடர்ந்தான்.

''வந்துருடா''

''நாளைக்கு வரேன் கோரன், இன்னைக்கு வீட்டுக்குப் போறேன்''

''இப்போவே வாடா''

''இல்லை கோரன்''

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். கோரன் வெளியில் நின்று கொண்டே இருந்தவன் அங்கிருந்து சென்றான்.

''போலீசில் சொல்லலாமா?''

''வேணாம் காயூ''

அரைமணி நேரம் கழித்து வேறு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் எல்லா விசயங்களையும் அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவர்

''உனக்கு இது எல்லாம் தேவையாப்பா?''

''நான் ஒன்னும் செய்யலைம்மா''

''அப்புறம் எதுக்கு அவன் உன்னை கொல்ல வரணும், கூட வா வானு கூப்பிடனும்''

''தெரியலைம்மா''

கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். எல்லோரும் உறங்கியபின்னர் நான் மட்டும் எழுந்து கோரன் வீட்டுக்குச் செல்ல நினைத்து காயத்ரியிடம் சொன்னேன்.

''நீ போகவே கூடாது''

''சொன்னால் கேளு காயூ, இதில் ஏதோ இருக்கு. உதவி பண்ணு''

''காயத்ரியை சம்மதிக்க வைத்து கோரன் வீட்டிற்கு தனியாக சென்றேன். அவனது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். கோரன் மட்டும் உறங்காமல் அறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். வாசற்கதவைத் தட்டினேன்.

''கோரன்''

கதவைத் திறந்தான்.

''உள்ளே வாடா''

அவனது குரலில் ஒன்றும் அத்தனை ஆவேசம் இல்லை. வீட்டிற்குள் சென்றேன். சட்டென கதவுகளை சாத்தி தாழிட்டான்.

''கோரன்''

''உட்காருடா''

''எதுக்கு''

''அப்படியே உட்காருடா''

உட்கார்ந்தேன்.

(தொடரும்)




Thursday 17 September 2015

எங்ஙனம் தொலைந்தீர்கள்?

அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அம்மா, நான் தொலைந்து போனால் நீ அழுவாயா? சிரிப்பாயா?

அம்மா சற்றும் யோசிக்காமல் நீ தொலைந்தால் அழவும் மாட்டேன் சிரிக்கவும் மாட்டேன் நீ கிடைக்கிற வரைக்கும் உன்னை நான் தேடுவேன்டா

அம்மாவின் அந்த சொல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது.

''பக்தா, எங்கே தொலைவதாக உத்தேசம்?''

''சாமி, நீங்கள் எப்படி இப்போது, அதுவும் நான் என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஒட்டு கேட்டுவிட்டு இப்படி குறுக்கே வந்து பேசலாமோ''

''பக்தா, உன் அன்னை அப்போதே எழுந்து சென்றுவிட்டார், அதை கவனித்துதான் நான் உள்ளே வந்தேன் ஆனால் நீயோ உன் அன்னையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறாய்''

''சாமி, அமருங்கள்''

''என்ன பக்தா, வரவேற்பு மாறுகிறதே, சாமியார் ஆக வேண்டும் என சொல்லி இருந்தாய் என்ன நடவடிக்கை எடுத்தாய்''

''அதெல்லாம் இல்லை சாமி, என் அம்மா நான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஒரேயடியாக பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்''

''பக்தா, உனக்காக நீ முடிவுகள் எடுக்காதவரை அது உன்னை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கும். நீயாக சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே உனக்கு நல்வழி தரும்''

''சாமி, எனக்கு சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசை உள்ளுக்குள் இருக்கிறது, உங்களைப் போல சுதந்திரமாக எங்கும் செல்லலாம், குழந்தை குடும்பம் என உழன்று திரிய வேண்டியது இல்லை. என்னைப்போல ஒவ்வொருவரை சென்று தேடிப்பார்த்து ஒரு கதை சொல்லலாம்''

''பக்தா, அப்படி எல்லாம் திட்டமிட்டு ஒன்றை பற்றி நீ முடிவு எடுக்காதே''

''சாமி, நான் பேசாமல் ஏதேனும் காட்டிற்கு ஓடி விடட்டுமா?''

''பக்தா, நான் உன் பின்னால் வருவேன்''

''நீங்க வந்தால் எனக்குப் பயமில்லை. ஆனால் இந்த திருமணம் தான் என்னை பயமுறுத்துகிறது. அது எப்படி சாமி இந்த மனிதர்கள் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, அது எல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லும் பதில் உனக்கு திருப்தி அளிக்காது. வா, நான் உன்னை ஓரிடம் அழைத்துச் செல்கிறேன்''

''இங்கேயே சொல்லுங்கள். வேறு எங்கும் நான் வரத் தயாரில்லை''

''பக்தா, என் தந்தை என் தாய் என எவருமே எனக்குத் தெரியாது, ஆனால் நான் பிறப்பதற்கு காரணம் அவர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நான் தந்தை ஆகும் வாய்ப்புதனை  எல்லாம் நான் தேடிச்  செல்லவில்லை, என்னை தேடி எதுவும் வரவும் இல்லை. எனக்கு ஐந்து வயது ஆன போது  நான் சாமியார் ஆனேன்''

''சாமி உங்க கதை நான் கேட்கவில்லை, மனிதர்கள் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்''

''பக்தா, உனக்கு ஒரு காதலி இருக்கிறாள் அல்லவா, அவளிடம் நீ திருமணம் செய்து கொள் என கேட்டால் அவள் மாட்டேன் என சொல்லமாட்டாள் அல்லவா, அப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்''

''எனக்கு காதலி இருப்பது என்பதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் சரி, சாமி  காதலிக்காமல் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, இதை நீ என்னிடம் கேட்பது கொஞ்சமும் நன்றாக இல்லை. எனக்கு திருமண பந்தம் என்று எதுவும் இல்லை''

''சாமி, உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்து இருக்கிறேன், அவரை திருமணம் பண்ணிக்கொள்ள இயலுமா''

''பக்தா, என்ன விளையாடுகிறாயா? யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய்''

''அப்படியெனில் என்னிடம் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்''

''பக்தா, தாய் தந்தையர் தனது மகனுக்கு மகளுக்கு இன்னார்தான் என முடிவு செய்து திருமணம் பண்ணி வைக்கிறார்கள்''

''அதையேதான் என் தாயும் செய்கிறார் சாமி, நான் காதலிக்கும் பெண்ணையே எனக்கு மணம் முடித்து வைக்க வெகுவாக போராடுகிறார். காதலித்தால் மட்டும் போதாதா, எதற்கு இந்த திருமணம் எல்லாம் எனக் கேட்டாலும் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என என்னை திட்டிவிடுகிறார்''

''பக்தா, நீ திட்டுகள் வாங்கவே பிறந்தவன், அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை, ஆனால் நீ திருமணம் பண்ண வேண்டியவன் அதில் இருந்து விலகி விட வேண்டாம்''

''எனக்குப் பிடிக்கவில்லை''

''பக்தா, பிடிக்காத விசயங்களை செய்பவர்கள் தன்னைத் தொலைத்தவர்கள் ஆவார்கள்''

''சாமி, எப்படி இப்படி எல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் என ஆச்சர்யம் கொள்கிறேன்''

''பக்தா, நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் இந்த உலகத்தின் நேரத்தை காலத்தை நடத்துகிறோம் எனும் மனப்பாங்கு ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இதனால் பல மன இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இப்போது ஓரிடத்தில் நீ இருக்கிறாய், அங்கு உன்னைச் சுற்றியே பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உனக்குள் ஒரு மாயை உருவாகிறது. நாம் இங்கே இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்பதான மாயை. உன் மீது அநேகர் பிரியம் கொண்டு உள்ளதாக உன்னுள் உவகை கொள்கிறாய். எங்கே நீ இல்லாமல் போனால் அனைவரது பிரியமும் உனக்கு கிடைக்காமல் பொய் விடுமோ என அச்சம் கொள்கிறாய், அதனால் பிடிக்காத இடத்திலும் நீ உழன்று திரிகிறாய். நீ அந்த இடம் விட்டு வெளியேறி விடு. உனக்கு ஒரு உண்மை புரியும். நீ இல்லாமலும் எல்லாம் நடக்கும், நீ இல்லாமல் கூட அவர்கள் பிரியம் கொண்டு இருப்பார், ஆக தொலைவது என்பது நமக்குப் பிடிக்காத விசயங்களை செய்வது, பிடிக்காமல் வாழ்வது என்பதுதான்.

உடலால் தொலைவது கண்டுபிடித்துவிடலாம். மனதால் தொலைந்தால் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே இப்போதே திருமண வாழ்வுக்கு எல்லாம் முடியாது என சொல்லி என் பின்னால் வா, நீ தொலையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்''

''சாமி, என் அம்மா என்னைத் தேடுவார்களே''

''பக்தா, உன் அம்மா உன்னைத் தேடவில்லை, தன்னைத் தேடுகிறார். தனக்குப் பிரியமான ஒன்றைத் தேடுகிறார். நீ அவர்களின் பிரியம்''

''அப்படியெனில் எப்படி நான் தொலையாமல் இருப்பது''

''பிடித்த விசயங்களைச் செய்''

அம்மா என அலறினேன். அம்மா என்னடா ஆச்சு என ஓடோடி வந்து விளக்கைப் போட்டார். வியர்த்து விறுவிறுத்து இருந்த நான் அம்மாவை நோக்கியபடி சொன்னேன்.

''அம்மா அந்த சுபாவோட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருமா நான் தொலையவே மாட்டேன்''.

''என்னடா அந்த சாமியார் கனவா?''

''ஆமாம்மா''

''உனக்கு மந்திரிச்சி விடனும்''

 எனக்குள் ஒரு பெரும் கேள்வி ஒன்று உங்களை நோக்கி எல்லாம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் பிடிக்காத செயல்களை எல்லாம்  செய்யும் அளவுக்கு நீங்கள் எல்லாம் எங்கனம் தொலைந்தீர்கள்? 

Thursday 3 September 2015

நமது திண்ணை செப்டம்பர் மாத சிற்றிதழ்

நமது திண்ணை சிற்றிதழை ஒவ்வொருமுறை ஒருவர் வெளியிடுவர். இதற்கு பெரிய விழா எல்லாம் இல்லை. ட்விட்டரில் இந்த சிற்றிதழின் இணைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என சொல்லி இணைப்பு தருவார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த முறை தி.மு.க மந்திரி (அவரே சொன்னபிறகு தான் எனக்குத் தெரியும்) திரு ஜெ அன்பழகன் இந்த சிற்றிதழை வெளியிட்டு இருக்கிறார். ஒரு மந்திரி ஒரு சிற்றிதழை வெளியிட முன்வந்து இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பக்க வடிவமைப்பே மிகவும் அட்டகாசம். அட்டைப்படத்தை அலங்கரிக்கும் காய்கறியை இங்கே  படித்துத் தெரிந்து கொள்ளலாம். சுபாஷினி அவர்களுக்கு நன்றி.

1. உயிருக்குள் ஓர் உயிர் - எமி

குழந்தையைப்  பற்றிய, தாய்மையைப் பற்றிய உயிருக்குள் ஓர் உயிர் எனும் அற்புதமான  கவிதையை எமி எழுதி இருக்கிறார். பிள்ளை பெறுவதால் அல்லது குழந்தையை சுமப்பதால் அழகு குறையும் எனும் கவலை இரண்டாவது பத்தியில் தென்படுகிறது. தூக்கத்தை மறந்தேனே என சொல்லப்பட்ட வரிகளுக்கு பின்னர் ஓர் விளக்கமும் இருக்கிறது. உலகம் உருண்டை நம்பினேன் எனும் எண்ணமும் வெளிப்படுகிறது நல்ல நல்ல உவமைகள் கொண்டு இருக்கும் இந்த அழகிய கவிதையில் எழுத்துப்பிழைகளைத்  தவிர்த்து இருக்கலாமோ? தேவை இல்லைதான், அந்த அழகிய குழந்தையை தாய்மையைச்  சுமந்த கவிதையில் ஏது  குறை என எமி கருதி இருக்கலாம்.

2. வளர்த்து விடுங்கள் - வருண் 

மரம் பேசும் கவிதையாக மனிதம் வேண்டும் கவிதையாக அமைந்து இருக்கிறது. இப்போதெல்லாம் மரத்தின் மீதான அக்கறை பெரும்பாலான மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. வளி  இல்லாமல் திண்டாடும்போது நல்ல கவிதை வரி. வி'சுவாசமாக நல்ல வார்த்தை நயம்.

ராஜ் மற்றும் அம்ஹர் அவர்களின் அழகிய படங்கள் சிற்றிதழை அலங்கரிக்கின்றன.

3. ஸ்ரீஇராமானுஜர் - சுஷீமாசேகர் 

மிகவும் சுவாரஸ்யமான தொடர் என்றால்  மிகையில்லை. திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார், கோவிந்தபட்டர், ஸ்ரீ போதாயன மகரிஷி என பலரது வாழ்வோடு ஸ்ரீ இராமானுஜர் வாழ்வு இணைந்து இருக்கிறது. அன்பில்  மனம் வைத்தால் அனைவரும் மனம் மாறுவர் என்பதற்கு இவரது திருமலைக்கு சென்ற காட்சி விளக்குகிறது. கோவிந்த பட்டர் தான் கொண்ட அன்பை மறக்காமல் பின்னர் இவரின் அன்பை பெற்ற காட்சி சிறப்பு. கூரத்தாழ்வாரின் மனப்பாடம் பண்ணும் ஆற்றல் நான் படித்த  பள்ளியில் ஒரு சில மாணவர்களை  நினைவுகூற  செய்தது. அவன் எல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதும் அப்படியே ஒப்பிப்பான்  என்பார்கள்.எனக்கும் சரஸ்வதி தேவி கனவில் வரமாட்டார்களா எனும் நிறைவேறாத கனவு உண்டு.

ஸ்ரீ ஆண்டாளின்  ஆசையை இவர் நிறைவேற்றிய கதையை ஓரிடத்தில் சொன்னபோது எனக்கும் பேசத் தெரியும் என சொன்னார்கள். இந்த கதையைப் படித்தபின்னர் நிறைய பேசலாம் போல. நன்றிகள் அம்மா.

4. தலைகவசம் - ப. மணிகண்டபிரபு 

தலைக்கனத்தோடு செல்லவில்லை,  தலையில் கனத்துடன்  செல்கிறேன் என அருமையான கவிதையை எழுதி இருக்கிறார் மணி. இவரது சிந்தனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். முகமே அடையாளம் எனினும் நம் உடல் வைத்து நம்மை யார் என கண்டுபிடிப்பவர் உள்ளனர் என ஒரு வரி கவிதைத்துவம். நமது மனதுக்குள் புன்னகைப்பது தெரியாது என்பது போல தலை கவசம் அறிந்தால் முகம் புன்னகைப்பது தெரியாது என்பது போல ஒரு வரி. மிகவும் சிறப்பு.

5. அப்பா - எம்சீ189 (பாமரன்) 

நல்லதொரு குட்டிக்கதை. அதுவும் கடைசி வரி மிகவும் முத்தாய்ப்பு. நாம் நல்லது செய்தால் நமது கெட்டது எல்லாம் மறைந்து போகும். படிப்பு என்பது எல்லாருக்கும்  இல்லை. எவ்வளவு படிச்சாலும் தலையில் ஏறமாட்டேங்குது ஏறமாட்டேங்குது என சொல்பவர்களிடம் எல்லாம் நன்றாக இன்னும் முயற்சி செய்யுங்கள் என சொன்னாலும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களே அதிகம் தோல்வி அடைகிறார்கள். படிப்பு மட்டுமே சமயோசித புத்தி தராது  என்பதையும் அப்பாவின் அன்பையும் அறிவுறுத்தும் கதை.

6. கிச்சன் டைம் கோவக்காய் பொரியல் - நளபாகம் ரவி 

கோவக்காய் அட! மேலதிக விபரங்கள் இங்கே  இங்கே இதை வினிகரில் போட்டு விற்பார்கள். அப்படியே கடித்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும். வெள்ளரியின் சிறு வடிவம். இவர் எழுதுவது எல்லாம் மிகவும் எளிதாக இருக்கிறது. செய்வதுதான் கடினமாக படுகிறது. ஒருமுறையேனும் நண்பர் சொல்வதை சமைத்து இங்கே ஒரு பதிவு எழுதிவிட வேண்டும்.

7.நேர்காணல் திருமதி ஜானகி சுஷீமாசேகர் 

அன்பான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த உலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கிற ஒரு ஏக்கம் வந்துவிட்டுப் போகும். எத்தனை அழகிய மனிதர்களால் ஆனது உலகம். ஒருவரின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருப்பதால்தான் பல திறமையாளர்கள் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மிகவும் அருமையான பேட்டி   என்றே சொல்ல வேண்டும். குறுகிய நேரத்தில் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அழுகை, அன்பு, ஆர்வம், இசை என எல்லாம் அறிந்து கொண்ட வேளையில் ஒரு விருதுவை புறக்கணித்த தைரியம் வெகு சிறப்பு. செத்த பின்பு ஞானி அவசியமில்லை. கடைசியில் வாசித்த வரிகள் கண்களில் நீர்த்திரள செய்தது. அற்புதமான மனிதர்களை இவ்வுலகம் பின்பற்றவேண்டும்.

கேசவ் அவர்களின் ஓவியங்கள் வெகு சிறப்பு. அருமை. மகளதிகாரம், அவளதிகாரம், மதுவிலக்கு பற்றிய அழகிய டிவிட்கள்.

8. பாடல் பரவசம் - உமா க்ருஷ் 

அப்படியே சிறிய வயது நினைவுகளை முதல் நான்கு பத்திகளில் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி  விடுகிறார். இளவயது இசையோடு ஒட்டிய கிராமத்தின் நினைவுகள் சுகமானவை என்பதை நினைவுபடுத்துகிறது. பாடல் பற்றிய பரவசத்தில் மூழ்கும் முன்னர் பாடல் பெற்ற சிறப்பில்  ஒரு நடிகரின் வரலாறு தென்படுகிறது. தேவா இல்லையென்றால் தமிழ் இசையில் இல்லை கானா என்றாலும் ஒரு நல்ல இசை அமைப்பாளாராக இருக்கப்போய்த்தான் பல படங்களுக்கு இசை அமைத்து தேனிசை தென்றல் என பட்டம் பெற்றார் தேவா என அறிய முடிகிறது. மிகவும் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார் வாலி. இந்த வரிகளை வாசிக்கும்போது கடினமாக இருக்கும், ஆனால் இதை இசைக்குள் நுழைத்து இனிமையாக்கிய பெருமை பாடகர்கள், இசை அமைப்பாளருக்குச்  சேரும். வெட்டப்பட்ட வரிகள் கண்டு இவரது கோபமும் புரிகிறது. அருமை.

சிற்றிதழ் ஆசிரியரின் தியாகராஜ பாகவதர் குறித்த விஷயங்கள்  அருமை, கைது செய்யப்பட்டு பின்னர் என்ன ஆனது என எழுதி இருக்கலாம்தான்.

அழகிய வடிவமைப்புகளுடன் மின்னி வானம் தொட்டு  சிறக்கிறது நமது திண்ணை சிற்றிதழ்.



Friday 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)



Thursday 27 August 2015

பேய் ஊர்

எவருக்குத் தெரியும்
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என

பூசாரி கோடாங்கி
ஆசாரி செட்டியார்
தேவர் நாயுடு
சக்கிலியர் ரெட்டியார்
அவர்தம்மில் ஒருவராக
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என
எங்கிருந்து தவம் இருந்தனரோ

அவுசாரி தேவடியா
பொறுக்கி குடிகாரன்
கஞ்சா கசக்கி சீட்டு கட்டு
அடிதடி சண்டை
என அல்லல்படும்
அந்த ஊரில் தான்
பிறக்க வேணும் என
எவர் எழுதி வைத்தனரோ

கோவிலு குளம்
முனி பிசாசு
காடு தோட்டம்
கிணறு தோப்பு
தரிசு காஞ்ச கண்மாய்
மண்ரோடு தார்ரோடு
அந்த ஊரில் தான்
அழுது சிரிக்க வென
எப்படித்தான் அங்கு போனாரோ

அரசு வைச்சது ஒரு பேரு
இவங்க வைச்சது பேய் ஊரு
ஆம்பளைன்னு இல்ல
பொம்பளைன்னு இல்ல
ஒன்னு கிணறுல விழுந்து
சாகுறா
இல்லை கயித்துல தொங்கி
சாகுறா
சுடுகாடு ஒண்ணு உள்ள
அந்த ஊரில் தான்
அடக்கம் ஆவோம் என
சத்தியமிட்டு சொல்லி சேர்ந்தாரோ

காதலு தோத்து
விஷம் குடிச்ச ஆளும் உண்டு
கட்டிக்கிட்டவன் சரியில்லைன்னு
தட்டிக்கேட்டு தானே
அவன் கையால செத்தது உண்டு
விவாகரத்து கூத்தியாள்
கூத்தியான் விவகாரமான
அந்த ஊரில் தான்
மணமுடித்து வாழ்  என
கண்கள் இன்றி போனாரோ

என்ன என்னவென்னவோ
நடக்குது
ஆனாலும் பாருங்களேன்
அம்மனுக்கு கூழும்
கருப்பனுக்கு கறிசோறும்
தீபாவளி பொங்கலுன்னு
தின்னு தீக்குறாங்க
அந்த ஊரில் தான்
தின்னு கழியணும்னு
தினவெடுத்து போய் விழுந்தாரோ

எதுவுமே நடக்காத மாதிரி
எல்லோரும் சாமி பேய்னு
சத்தியம் பண்ணி
தீபம் அணைக்கிறாங்க
பேய் இருக்கும் ஊரில
சாமியும் தான் இருக்குமோ
சாமி இருக்கிற ஊரில
பேயும்தான் இருக்குமோ
என்னதான் இருந்தாலும்
பிறந்த ஊரு பெருமை
பேய் ஊருனு ஆனாலும்
விட்டுத்தான் போகுமோ என்றாரோ!