Wednesday 26 August 2015

தமிழ் மின்னிதழ் - சுதந்திரம் 2015 -1

இம்முறை தமிழ் மின்னிதழ் எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் சிறப்பிதழாக வெளிவந்து இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். அதிலும் எழுத்தாளர் சிறப்பிதழில் எனது எழுத்து வந்தது அதைவிட இரட்டிப்பு சந்தோசம்.

ஆமாம், முதலில் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வோம்.  சென்ற முறை இங்கே சொன்னது போல ஒரு கதையை தமிழ் மின்னிதழுக்கு எழுதி அனுப்பி அது இடம்பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் மின்னிதழ் ஆசிரியருக்கு கோடானு கோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதற்காக தொடர்ந்து எனது எழுத்து வரும் என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. ஆசிரியர் மற்றும் இதழின் குழுவைப் பொருத்தது, அதைவிட நான் எழுதி அனுப்புவேனா என்ன எழுதி அனுப்புவேன் என்பதைப் பொருத்தது . ஆசிரியரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததும் உள்ளூர அத்தனை சந்தோசம். இந்த தருணத்தில் முதலில் எனது எழுத்துக்கு ஆதரவு தெரிவித்த நமது திண்ணை சிற்றிதழுக்கு எனது நன்றி.  நமது திண்ணை தவிர எனது எழுத்து எந்த ஒரு சிற்றிதழ் இணைய இதழ் என எதிலுமே வந்தது இல்லை. இது என்ன பெரிய விசயமா என்று கேட்டால் என்னைப் பொருத்தவரை பெரிய விசயம் தான்.

எப்படி ஊர் மெச்ச வேண்டி நாம் வாழ நினைக்கிறோமோ அதைப்போலவே ஊர் மெச்ச வேண்டி எழுத்து இருக்க வேண்டும் எனும் எனது எழுத்தின்  தவம் எவருக்கும் தெரியாது, அதன் வலி எவருக்கும் புரியாது. எனது முதல் நாவலை வாசித்துவிட்டு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னேன் என எனக்கு இப்போது நினைவில் இல்லை.

நான் எழுதி அனுப்பிய கதையின் தலைப்பு எண்ணியாங்கு என்கொலல். நண்பர் ஒருவர் சூப்பர் என்றார், ஆனால் எனது வழக்கமான சிறுபிள்ளைத்தனம் அந்த கதையில் இல்லை என்றார். ஆமாம், இரண்டே வார்த்தைகள். எண்ணியாங்கு, என்கொலல். இந்த இரண்டு வார்த்தைகளுமே திருக்குறளில் இருந்து எடுத்தது. என்கொல் என்ற வார்த்தை என்கொலல் என திரிந்தது.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

இதில் எண்ணியாங்கு எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இந்த குறள் சொல்வது என்னவெனில் எண்ணியதை செயல்படுத்த உறுதி இருப்பின் எண்ணியது நடைபெறும். கதையில் இதைத்தான் சொல்ல எண்ணினேன். அப்போது  ஒரு பெரிய கேள்விக்குறி எனக்கு எழுந்தபோது மரம் பற்றி நினைவுக்கு வந்தது. மனிதர்கள் தான் தமது எண்ணங்களுக்கு அது இது என சொல்லித் திரிகிறார்கள், ஆனால் மரம்? மரம் என்ன நினைத்து எதை எண்ணி எதில் உறுதியாக இருந்து நிறைவேற்றி கொள்கிறது என்பதே அது. மற்றொன்று நன்றி நவிலல். நாம் சரி, மரம்?

காலைக்குச் செய்த நன்றி என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர்  எனின்

எழுத ஆரம்பிக்கிறேன். கதை சரளமாகவே வரவில்லை. ஒரு கட்டுப்பாட்டில் பயணிக்கும்போது நமது சிந்தனைகள் தடைபடும் என்பது உறுதி. இந்த கதையில் அடுத்து எடுத்துக்கொண்டது அறிவியல் விஷயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் ஒரு எண்ணம். இடைச்செருகல் மாதிரி இருக்கக்கூடாது அதே வேளையில் கதையின் ஓட்டத்தை கெடுத்துத் தொலையக்கூடாது. ஆனால் எனக்கு எழுதி எழுதிப் பார்த்தாலும் திருப்தியே வரவில்லை. கடைசியாக நிலம், வீடு, ஸ்டீரால் விஷயம் சரியெனப் பட்டது. பலமுறை யோசித்து அதிகம் என்னால் திருத்தி வெட்டப்பட்ட கதை இதுவாகவே இருக்கும். இதுக்காக பல ஆராய்ச்சி கட்டுரைகளை வேண்டி புரட்ட வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். முதலில் தவறுதலாக அதில் இருந்த மூலக்கூறுகள்  இரண்டுமே ஒரே மாதிரி அனுப்பினேன். பின்னர் அதை சரிசெய்து அப்போது சில வரிகள் மாற்றி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆசிரியரிடம் இருந்து பதிலே இல்லை. எனக்கும் கேட்கவோ பயம். சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஒருவேளை வெளியாகாவிட்டால் இருக்கவே இருக்கிறது இந்த வலைத்தளம் என சமாதானம் பண்ணிக்கொண்டேன். ஆனால் உள்ளூர ஒரு கவலை இருந்தது. அதாவது ஒரு பள்ளியில் அனுமதி கிடைக்காத பிள்ளையின் தந்தையின்  கவலை அது. நல்லவேளை, கதை அனுமதி பெற்றுவிட்டது எனும் ஆசிரியரின் பதில் வந்ததும் மனம் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமலும் போகலாம். ஆனால் எழுதிவிட்டேன் எனும் திருப்தி எனக்கு இருக்கிறது.

விரைவில் தமிழ் மின்னிதழில் இடம்பெற்றுள்ள பிறரின் எழுத்துக்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)










Tuesday 11 August 2015

இப்படித்தான் தொடங்கியது

ஒரு ஆரவாரமற்ற அமைதியான இருட்டில் இரவு ஒரு மணி இருக்கும். நார்மன் அந்த கிராமத்தின் தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தான். நார்மன் நல்ல உடற்கட்டும் அழகிய முகவடிவும் ஆறடி உயரமும் கொண்டவன். அவனது முதுகில் ஒரு பை இருந்தது. அந்த கிராமத்திற்கு நான்கே தெருக்கள் இருந்தன. ஒவ்வொரு தெருவும் மற்றொரு தெருவுடன் சந்தித்து பேஸ்பால் விளையாடும் விளையாட்டுத்திடல் போல சதுரமாக அந்த தெருக்கள் அமைந்து இருந்தன. அந்த தெருக்களின் உட்புறம் வீடுகள் ஒருங்கே கட்டப்பட்டு இருந்தன. எப்படியும் ஒரு ஐம்பது வீடுகள் தேறும். அந்த தெருக்களின் வெளிப்புறம் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பச்சை பசேலென மரங்களும், செடிகளும், கொடிகளும் தென்பட்டன. அந்த பச்சை மரங்களுக்கு ஊடே சில ஆறுகள் சில குளங்கள் எல்லாம் இருந்தன.

நார்மன் எல்லா வீடுகளிலும் எவ்வித வெளிச்சமும் இல்லாது இருப்பது கண்டான். இரவில் வெளிச்சம் எதற்கு என எல்லா வீடுகளும் எண்ணி இருக்கலாம். வடமேற்குத் தெரு முனையில் இருந்து தென்மேற்குத்   தெரு முனைக்குப் போனான். அங்கே ஒரு முப்பது நிமிடங்கள் நின்றான். அப்போது சோவென சொல்லிவைத்தாற்போல் மழை கொட்டியது. நார்மனுக்கு ஓடிவிட வேணும் என்றோ எங்கேனும் ஒளிந்து கொள்ள வேண்டுமென்றோ கொஞ்சமும் தோணவில்லை. மழையில் முழுக்க முழக்க நனைந்தான். அவனது பையும் தான்.

சிறிது நேரம் பின்னர் விடாத மழை என்றாலும் தென்மேற்குத் தெருவில் இருந்து தென்கிழக்குத் தெரு சென்றான். இந்த ஊர் பரிச்சயமற்றது. தான் எந்த தெருவில் நிற்கிறோம் என்கிற அறிவு எல்லாம் நார்மனுக்குக் கிடையாது. தண்ணீர் தாகம் எடுத்தது. அப்படியே மழை நீரை கைகளில் ஏந்தி குடிக்கலானான். என்னதான் மழை நீர் எனினும் ஆற்று நீர் போல மழை நீர் சுவையாக இருப்பது இல்லை. குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு மிகவும் சுவையாகவே இருந்து இருக்கக்கூடும், அல்லது தாகத்திற்கு சுவை எல்லாம் பொருட்டு அல்ல என்று இருக்கலாம்.

நார்மன் அப்படியே அங்கே அமர்ந்துவிட்டான். அமர்ந்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். மழை நீர் தந்த மயக்கம். மழை நார்மனைக் கண்டு இரக்கம்  கொள்வதாக ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரங்கள் மேல் கொட்டிக்கொண்டு இருக்கிறது. சில்லிட்டுப் போகும் குளிரில் மனிதர்கள் உறங்க இயல்வதில்லை ஆனால் நார்மன் உறங்கிக்கொண்டுதான் இருந்தான். சிறிது நேரத்தில் மழை நின்றது. அவனில் இருந்த தண்ணீர் எல்லாம் மலையில் இருந்து கிளையில் இருந்து இலையில் இருந்து கொட்டும் நீர் போல கொட்டிக்கொண்டு இருந்தது.

காலையில் ஆறு மணி வரை எவருமே அவனை கவனிக்கவில்லை. ஒரு ஏழு மணி இருக்கு. நடுத்தர வயது மிக்க பிரதேஷ் என்பவர் நார்மனைக் கண்டுத் திடுக்கிட்டார். எப்படி இப்படி ஒரு மழையில் நனைந்து உறங்கிக் கொண்டு இருக்க இயலும் என அவர் யோசித்தவாரே  நார்மனைத் தொட்டு எழுப்பினார். நார்மன் எழுந்தான்.

''யார் நீ, எவரைப் பார்க்க வேண்டும் இப்படியா இந்த மழை நீரில் உறங்குவது, என்னுடன் கிளம்பி வா''

நார்மன் சற்றும் யோசிக்காமல் அவருடன் கிளம்பினான்.

''எனது பெயர் நார்மன் தேச்ரன். எனக்கு வீடு ஊர் என்று எதுவும் இல்லை. எப்படியோ இந்த கிராமத்தில் வந்து சேர்ந்து விட்டேன்''

''அதற்காக அதோ அந்த வீட்டின் திண்ணையில் நீ அமர்ந்து இருக்கலாம் உறங்கி இருக்கலாம், இப்படியா தெருவில் விழுந்து இருப்பது. இந்த உலகில் நல்ல மனிதர்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாயா?''

''எவரை எனக்குத் தெரியும். அதனால் நான் செல்லுமிடத்து ஏதேனும் உண்டு உறங்கி வாழ்ந்து கழிக்கிறேன்''

பிரதேஷ் வீடு கிழக்குத் தெருவில் இருந்தது.

''சோபியா, நமது வீட்டிற்கு விருந்தாளி வந்து இருக்கிறார். முதலில் நல்ல சூடான காபி தயார் செய்''

''யார் அந்த விருந்தாளி''

''இதோ இவர்தான், அந்த தெரு முனையில் உறங்கிக்கொண்டு இருந்தார். நான்தான் எழுப்பிக் கொண்டு வந்தேன், இவர் குளிக்கட்டும். மாற்று ஆடைகள் தந்துவிடுகிறேன். நீ சாப்பாடு கூட தயார் செய்''

நார்மனுக்கு எதுவும் புரியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என யோசித்தான். பிரதேஷ் சொன்னது போல குளித்து அவரது ஆடைகளை உடுத்திக்கொண்டான்.

அவர்கள் இருவரிடமும் விசாரிக்கையில் அவர்களுக்கு எவருமே உறவினர்கள் இல்லை என்பது தெரிந்து கொண்டான். அன்றே அவர்களை கொல்ல  வேண்டும் என முடிவு செய்தான் நார்மன்.

நிற்க.

இப்படித்தான் ஒரு கதை தொடங்கியது. அதை எங்கு எப்படி எவ்வாறு முடிப்பது என இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.




Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Wednesday 5 August 2015

தேடிக்கொண்ட விசயங்கள் - 7 ஆர் என் ஏ உலகம் இல்லை

பகுதி - 6

ஒன்று கிடைக்கும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், பிறகு வேறொன்று கிடைக்கும் உடனே எடுத்த முடிவை பரிசீலனை செய்வோம். எடுத்த முடிவுக்கு எதிராக எது தோன்றினாலும் அதன் தன்மையை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொண்டு பயணிப்போம். இதுதான் இந்த உலகத்திற்கு அறிவியல் சொன்ன நீதி.

அறிவியல் எதற்குமே அவமானப்பட்டது இல்லை. உண்மையைச் சொல்ல எதற்கு அவமானம், வெட்கம், தயக்கம். பல காலங்களாக இந்த உலகம் ஆர் என் ஏ மூலம் உருவாகி இருக்க இயலும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதற்கான ஆதராங்கள் என பல காட்டப்பட்டன. நியூக்ளிக் அமிலங்களை தாமாக ஒருங்கிணைத்து உருவாகிய ஆர் என் ஏ  பிற்காலத்தில் டி என் ஏ வாக பரிமித்தது என்பதே நம்பபட்டவந்த செய்தி. இப்போதும் கூட இந்த புரதங்கள் உருவாக டி என் ஏ  செல்லின் கருவில் இருந்து வெளிவர இயல்வதில்லை. மாறாக டி என் ஏ வில் இருந்து ஆர் என் ஏ கருவில் நகல் எடுத்து வெளியே வந்து ரைபோசொமில் புரதங்கள் உருவாக்குகின்றன. எனவே இதற்கு முன்னர் இந்த உலகில் உயிரினங்கள் தோன்ற இந்த ஆர் என் ஏ  காரணம் என எண்ணி ஆர் என் ஏ  உலகம் என்று ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த நியூக்ளிக்  அமிலங்கள் உருவாக வினையூக்கிகள் தேவை. இந்த வினையூக்கிகளை ஆர் என் ஏ தான் செயல்படுத்தி வந்ததாக  நம்பினார்கள். எப்போது புரதம் இந்த வினையூக்கி வேலையை தானே செய்ய ஆரம்பித்ததோ அப்போது இந்த ஆர் என் ஏ  உலகம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ரைபோசோம்கள் உருவான காலகட்டமே ஆர் என் ஏ  முடிவுக்கு ஒரு காரணம். ஆனால் இதை எல்லாம் மறுத்து ஒரு அறிவியல் அறிஞர் சொல்லி இருப்பது என்னவெனில் நிச்சயம் இந்த ஆர் என் ஏ  உலகம் என்று ஒன்று இந்த உயிர்களைத்  தோற்றுவிக்க காரணம் இல்லை என அறிவித்து இருக்கிறார்.

ரைபோசோம்களை ஆராய்ந்து பார்த்த இவர் இந்த ரைபோசோம்கள் முன்னர் வினையூக்கி போல செயல்பட்டு அமினோ அமிலங்களை இணைத்து புரதம் உருவாக்கி வந்து இருக்கின்றன. இது எல்லா உயிரிகளிலும் தென்படுகிறது. மேலும் இந்த ரைபோசோம்கள் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயலாற்றவில்லை மேலும் புரதம் போல இவற்றுக்கு எவ்வித வடிவமும் கிடையாது, ஆகவே இந்த ரைபோசோம்  ஒரு பானை போல செயல்பட்டு அதில் என்ன சேர்கிறதோ அதைவைத்து ஒன்று உண்டாக்கப்படும். எனவே இந்த ரைபோசோம்கள் ஒன்றும் இயற்கைத் தேர்வு மூலம் தம்மை முன்னிலைபடுத்தியவை அல்ல, மாறாக மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கியவை என எண்ணம் தோன்றுகிறது என்றார்.

ஆர் என் ஏ  மற்றும் புரதங்கள் தாமாக உருவாகக்கூடிய சாத்தியம் இல்லை என முன்னர் சொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட 14 அமினோ அமிலங்கள் மற்றும் சில புரதங்கள் தாமாகவே உருவாகும் தன்மை கொண்டவை. எனவே ஆர் என் ஏ  உலகம் என்பதை விட ஆர் என் ஏ/புரதம் உலகம் சரியாக இருக்கும் என்கிறார்.

ஆர் என் ஏ  உலகம் :

ஆர் என் ஏ  தானாக நியூக்ளிக் அமிலங்கள் மூலம் உருவாகி தாமே பெருகி அதில் இருந்து ரைபோசோம்கள் உருவாக்கி பின்னர் அந்த ரைபோசோம்கள் ஆர் என் ஏ தற்போது போல புரதங்களாக மாற்றியதும் அந்த புரதங்கள் வினையூக்கிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

ஆர் என் ஏ  அல்லாத உலகம் :

இந்த நியூக்ளிக்  அமிலங்கள், அமினோ அமிலங்கள் எல்லாம் கூடி ஆர் என் ஏ வுக்கு முந்தைய ஒன்றையும் அதே போல புரதங்களுக்கு முந்தைய ஒரு புரதம் உண்டாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கின. அந்த அடிப்படை ரைபோசோம்கள் வினையூக்கியாக செயல்பட்டு  ஆர் என் ஏ  மற்றும் புரதம் உருவாக்கின. அதற்குப் பின்னர் ஆர் என் ஏ  மற்றும் புரதம் ஆர் என் ஏ மூலக்கூறுகளை பெருகச் செய்தன. பின்னர் இந்த அடிப்படை ரைபோசோம்கள் ரைபோசோம்களாக  மாறி ஆர் என் ஏ  வை புரதம் உருவாக வழி செய்தன என்கிறார்கள்.

 இந்த உலகம் உருவாக ஆர் என் ஏ  மூலக்கூறு காரணம்  இல்லை என்றால் இந்த புரதம் மற்றும் ஆர் என் ஏ  ஒரு சேர அடிப்படையில் தானே தோன்றி இருக்க வேண்டும் என அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கி அது ஆர் என் மற்றும் புரதம் உருவாக்கும் வல்லமை கொண்டவையா என சோதிக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

சற்று பொறுங்கள், இந்த பிரபஞ்சத்தின் தீராத வலியைப் போக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

(தொடரும்) 

Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்






Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன்.