Tuesday 11 August 2015

இப்படித்தான் தொடங்கியது

ஒரு ஆரவாரமற்ற அமைதியான இருட்டில் இரவு ஒரு மணி இருக்கும். நார்மன் அந்த கிராமத்தின் தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தான். நார்மன் நல்ல உடற்கட்டும் அழகிய முகவடிவும் ஆறடி உயரமும் கொண்டவன். அவனது முதுகில் ஒரு பை இருந்தது. அந்த கிராமத்திற்கு நான்கே தெருக்கள் இருந்தன. ஒவ்வொரு தெருவும் மற்றொரு தெருவுடன் சந்தித்து பேஸ்பால் விளையாடும் விளையாட்டுத்திடல் போல சதுரமாக அந்த தெருக்கள் அமைந்து இருந்தன. அந்த தெருக்களின் உட்புறம் வீடுகள் ஒருங்கே கட்டப்பட்டு இருந்தன. எப்படியும் ஒரு ஐம்பது வீடுகள் தேறும். அந்த தெருக்களின் வெளிப்புறம் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பச்சை பசேலென மரங்களும், செடிகளும், கொடிகளும் தென்பட்டன. அந்த பச்சை மரங்களுக்கு ஊடே சில ஆறுகள் சில குளங்கள் எல்லாம் இருந்தன.

நார்மன் எல்லா வீடுகளிலும் எவ்வித வெளிச்சமும் இல்லாது இருப்பது கண்டான். இரவில் வெளிச்சம் எதற்கு என எல்லா வீடுகளும் எண்ணி இருக்கலாம். வடமேற்குத் தெரு முனையில் இருந்து தென்மேற்குத்   தெரு முனைக்குப் போனான். அங்கே ஒரு முப்பது நிமிடங்கள் நின்றான். அப்போது சோவென சொல்லிவைத்தாற்போல் மழை கொட்டியது. நார்மனுக்கு ஓடிவிட வேணும் என்றோ எங்கேனும் ஒளிந்து கொள்ள வேண்டுமென்றோ கொஞ்சமும் தோணவில்லை. மழையில் முழுக்க முழக்க நனைந்தான். அவனது பையும் தான்.

சிறிது நேரம் பின்னர் விடாத மழை என்றாலும் தென்மேற்குத் தெருவில் இருந்து தென்கிழக்குத் தெரு சென்றான். இந்த ஊர் பரிச்சயமற்றது. தான் எந்த தெருவில் நிற்கிறோம் என்கிற அறிவு எல்லாம் நார்மனுக்குக் கிடையாது. தண்ணீர் தாகம் எடுத்தது. அப்படியே மழை நீரை கைகளில் ஏந்தி குடிக்கலானான். என்னதான் மழை நீர் எனினும் ஆற்று நீர் போல மழை நீர் சுவையாக இருப்பது இல்லை. குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு மிகவும் சுவையாகவே இருந்து இருக்கக்கூடும், அல்லது தாகத்திற்கு சுவை எல்லாம் பொருட்டு அல்ல என்று இருக்கலாம்.

நார்மன் அப்படியே அங்கே அமர்ந்துவிட்டான். அமர்ந்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். மழை நீர் தந்த மயக்கம். மழை நார்மனைக் கண்டு இரக்கம்  கொள்வதாக ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரங்கள் மேல் கொட்டிக்கொண்டு இருக்கிறது. சில்லிட்டுப் போகும் குளிரில் மனிதர்கள் உறங்க இயல்வதில்லை ஆனால் நார்மன் உறங்கிக்கொண்டுதான் இருந்தான். சிறிது நேரத்தில் மழை நின்றது. அவனில் இருந்த தண்ணீர் எல்லாம் மலையில் இருந்து கிளையில் இருந்து இலையில் இருந்து கொட்டும் நீர் போல கொட்டிக்கொண்டு இருந்தது.

காலையில் ஆறு மணி வரை எவருமே அவனை கவனிக்கவில்லை. ஒரு ஏழு மணி இருக்கு. நடுத்தர வயது மிக்க பிரதேஷ் என்பவர் நார்மனைக் கண்டுத் திடுக்கிட்டார். எப்படி இப்படி ஒரு மழையில் நனைந்து உறங்கிக் கொண்டு இருக்க இயலும் என அவர் யோசித்தவாரே  நார்மனைத் தொட்டு எழுப்பினார். நார்மன் எழுந்தான்.

''யார் நீ, எவரைப் பார்க்க வேண்டும் இப்படியா இந்த மழை நீரில் உறங்குவது, என்னுடன் கிளம்பி வா''

நார்மன் சற்றும் யோசிக்காமல் அவருடன் கிளம்பினான்.

''எனது பெயர் நார்மன் தேச்ரன். எனக்கு வீடு ஊர் என்று எதுவும் இல்லை. எப்படியோ இந்த கிராமத்தில் வந்து சேர்ந்து விட்டேன்''

''அதற்காக அதோ அந்த வீட்டின் திண்ணையில் நீ அமர்ந்து இருக்கலாம் உறங்கி இருக்கலாம், இப்படியா தெருவில் விழுந்து இருப்பது. இந்த உலகில் நல்ல மனிதர்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாயா?''

''எவரை எனக்குத் தெரியும். அதனால் நான் செல்லுமிடத்து ஏதேனும் உண்டு உறங்கி வாழ்ந்து கழிக்கிறேன்''

பிரதேஷ் வீடு கிழக்குத் தெருவில் இருந்தது.

''சோபியா, நமது வீட்டிற்கு விருந்தாளி வந்து இருக்கிறார். முதலில் நல்ல சூடான காபி தயார் செய்''

''யார் அந்த விருந்தாளி''

''இதோ இவர்தான், அந்த தெரு முனையில் உறங்கிக்கொண்டு இருந்தார். நான்தான் எழுப்பிக் கொண்டு வந்தேன், இவர் குளிக்கட்டும். மாற்று ஆடைகள் தந்துவிடுகிறேன். நீ சாப்பாடு கூட தயார் செய்''

நார்மனுக்கு எதுவும் புரியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என யோசித்தான். பிரதேஷ் சொன்னது போல குளித்து அவரது ஆடைகளை உடுத்திக்கொண்டான்.

அவர்கள் இருவரிடமும் விசாரிக்கையில் அவர்களுக்கு எவருமே உறவினர்கள் இல்லை என்பது தெரிந்து கொண்டான். அன்றே அவர்களை கொல்ல  வேண்டும் என முடிவு செய்தான் நார்மன்.

நிற்க.

இப்படித்தான் ஒரு கதை தொடங்கியது. அதை எங்கு எப்படி எவ்வாறு முடிப்பது என இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.




1 comment:

Yarlpavanan said...

சிறந்த பயனுள்ள பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/