Thursday 27 August 2015

பேய் ஊர்

எவருக்குத் தெரியும்
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என

பூசாரி கோடாங்கி
ஆசாரி செட்டியார்
தேவர் நாயுடு
சக்கிலியர் ரெட்டியார்
அவர்தம்மில் ஒருவராக
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என
எங்கிருந்து தவம் இருந்தனரோ

அவுசாரி தேவடியா
பொறுக்கி குடிகாரன்
கஞ்சா கசக்கி சீட்டு கட்டு
அடிதடி சண்டை
என அல்லல்படும்
அந்த ஊரில் தான்
பிறக்க வேணும் என
எவர் எழுதி வைத்தனரோ

கோவிலு குளம்
முனி பிசாசு
காடு தோட்டம்
கிணறு தோப்பு
தரிசு காஞ்ச கண்மாய்
மண்ரோடு தார்ரோடு
அந்த ஊரில் தான்
அழுது சிரிக்க வென
எப்படித்தான் அங்கு போனாரோ

அரசு வைச்சது ஒரு பேரு
இவங்க வைச்சது பேய் ஊரு
ஆம்பளைன்னு இல்ல
பொம்பளைன்னு இல்ல
ஒன்னு கிணறுல விழுந்து
சாகுறா
இல்லை கயித்துல தொங்கி
சாகுறா
சுடுகாடு ஒண்ணு உள்ள
அந்த ஊரில் தான்
அடக்கம் ஆவோம் என
சத்தியமிட்டு சொல்லி சேர்ந்தாரோ

காதலு தோத்து
விஷம் குடிச்ச ஆளும் உண்டு
கட்டிக்கிட்டவன் சரியில்லைன்னு
தட்டிக்கேட்டு தானே
அவன் கையால செத்தது உண்டு
விவாகரத்து கூத்தியாள்
கூத்தியான் விவகாரமான
அந்த ஊரில் தான்
மணமுடித்து வாழ்  என
கண்கள் இன்றி போனாரோ

என்ன என்னவென்னவோ
நடக்குது
ஆனாலும் பாருங்களேன்
அம்மனுக்கு கூழும்
கருப்பனுக்கு கறிசோறும்
தீபாவளி பொங்கலுன்னு
தின்னு தீக்குறாங்க
அந்த ஊரில் தான்
தின்னு கழியணும்னு
தினவெடுத்து போய் விழுந்தாரோ

எதுவுமே நடக்காத மாதிரி
எல்லோரும் சாமி பேய்னு
சத்தியம் பண்ணி
தீபம் அணைக்கிறாங்க
பேய் இருக்கும் ஊரில
சாமியும் தான் இருக்குமோ
சாமி இருக்கிற ஊரில
பேயும்தான் இருக்குமோ
என்னதான் இருந்தாலும்
பிறந்த ஊரு பெருமை
பேய் ஊருனு ஆனாலும்
விட்டுத்தான் போகுமோ என்றாரோ!





1 comment:

Nagendra Bharathi said...

பேய் ஊர் பயங்கரம்