Monday 27 September 2010

தோழிகள் ஒரு சாபக்கேடு

1. நல்லாவே சமைப்பேன் 


2. எனது மனைவி போடும் கடிவாளம்    


3. பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் 

4. சபலத்தில் அல்லாடும் மனம் 


5. விளையாட்டுப் பெண்கள் 

'என்னது எனது பெயர் போட்டு இருக்கிறாய்' என அந்த ஆத்திரத்தில் கத்திவிட்டேன். 'உங்கள் பெயர் போட்டதில் என்ன தவறு, இந்த பெயர் உங்களுக்கு மட்டுமா இருக்கிறது' என்றாள் அவள். எனது மனைவி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

'பொதுவாக காதலனை, காதலியை மணம் முடிக்க இயலாமல், வேறு ஒருவருடன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு பிள்ளை பெற்றுக் கொள்பவர்கள் தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பெயர் வைப்பார்கள். நினைவுகளில் எப்போதும் இருக்கிறார்கள் என சொல்லும் ஒரு போலித்தனம். ஆனால் நான் அப்படி இல்லை' என்றாள்.

என்ன ஆச்சுங்க, என்ன பிரச்சினை என்றாள் என் மனைவி. இதோ இந்த பத்திரிகையில் எனது பெயர் மணமகன் எனும் இடத்தில் இருந்தது, அதுதான் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது என்றேன். என்னங்க, இவங்க சொல்றமாதிரி இந்த பெரு உங்களுக்கு மட்டுமா சொந்தம் என சிரித்தாள் எனது மனைவி.

அசடு வழிந்தேன். எல்லாம் நன்றாக இருக்கிறது. அச்சடிக்கலாம் என்றேன் . அப்படியெனில் வரவேற்பு உங்கள் இருவர் தலைமையில் என இணைத்து விடட்டுமா என்றாள். எனது மனைவி அதெல்லாம் எதற்கு என மறுத்துவிட்டாள். நானும் எனது பங்குக்கு மறுப்பு சொன்னேன். எனது வாழ்க்கையையே குலைத்து போட இருந்தவள். அவளையா என் தோழியாக நினைத்து முதன் முதலில் வேலைக்கு சேர்ந்ததும் எல்லாம் சொல்லி தந்தேன். நினைக்கும் போதே எனக்கு நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. அவள் போனதும்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

அவ மேல உங்களுக்கு ஆசை இருக்குல என்றார்  என் மனைவி. எனக்கு எரிச்சலாக போய்விட்டது. இப்பொழுதுதான் ஒரு சனியனை விரட்டி அடித்தேன். பெண் மட்டும் போய்விட்டாள். ஆனால் சனியன் எனது மனைவி மீது அமர்ந்துவிட்டதோ என அச்சம் அடைந்தேன். அவள் மீது ஆசை இருந்தால் எதற்கு நான் அவளை ஒதுக்க வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர்  வெறுப்பில் தான் ஆசை அதிகம் வளருமாம் என்றார். அன்பில் தான் ஆசை அதிகரிக்கும் என்றல்லவா படித்து இருக்கிறேன் என்றேன்.

உங்கள் பெயரை பத்திரிகையில் பார்த்ததும் உங்களுக்குள் தேனாட்டம் இனித்து இருக்குமே என்றார். தேளாட்டம் இருந்தது என வெடுக்கென பேசினேன். நச்சரித்து கொண்டே இருந்தார். இனிமேல் உன்னுடனே இருபத்தி நான்கு மணி நேரம் இருக்கிறேன் என அவசரமாக சொல்லிவிட்டேன். என்னிடம் எதையோ மறைக்க பார்க்கிறீர்கள் என்றார். எதுவும் இல்லை என சத்தியம் செய்தேன்.

வீட்டினுள் இருக்கப் பிடிக்காமல் ஊரின் தெருக்களில் உலாத்திக் கொண்டு இருந்தேன். 'மாமா' என வந்தாள் என் மாமா மகள். அடுத்த ஒரு தொல்லையா என நினைத்தேன். கைபேசியை எடுத்தாள். அவளுடைய முன்னால் காதலுனுக்கு அவள்  அனுப்பிய தூது ஒன்றை காட்டினாள்.

வருத்தம் தரும் செய்தி கேட்டேன். வாழ்க்கை நீ இழக்கவில்லை. உனக்கு வாழ்க்கைப்பட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். நாளை எனது அலுவலகத்தில் மாலை சந்திக்கலாம். அவள் அனுப்பிய செய்தி படித்ததும் அதிர்ந்தேன்.

நீ என்ன காரணம் செய்து கொண்டு இருக்கிறாய் தெரியுமா? உனது வாழ்க்கையை வீணடித்து விடப்போகிறாய் என எச்சரித்தேன். அவள் அதற்கு சிரித்தாள். அவன் வரமாட்டான், குற்ற உணர்ச்சியில் அவன் குறுகி போய் இருப்பான் என்றாள். நான் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் கதையை சுருக்கமாக சொன்னேன்.

நான் சொல்லித்தந்த டெக்னிக்கு மாமா அது, அதை உங்களுக்கே காட்டிட்டா, என விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் விழுந்து விழுந்து சிரித்ததில் எனது மனம் புண்ணாகி கொண்டு இருந்தது. இவளைப் போய் ஒரு தோழியாய் நினைத்தோமே என மனம் வருந்தியது.

வீட்டினை அடைந்தேன். உங்கள் மாமா மகளுடன் இந்த இரவில் என்ன அப்படி இளிப்பு என்றார். சிரித்தது நான் இல்லை, அவள் தான் என்றேன். பெரிய நாகேசுனு உங்களுக்கு நினைப்போ என்றார். என்ன சொல்வது என தெரியவில்லை.

எத்தனையோ நல்ல தோழிகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவரவர் குடும்பத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். குடும்பமாக வருகிறார்கள், குடும்பமாக போகிறார்கள். அவர்களை பற்றியெல்லாம் எனது மனைவி ஒருபோதும் தவறாக பேசியதே இல்லை. ஆனால் இந்த இருவர் மூலம் நான் படும் தொல்லைகள் மிக அதிகம். எவர் கொடுத்த சாபமோ என உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் எனது மாமாவிடம் அவரது மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் பண்ணி வைக்குமாறு சொன்னேன். அவளது செயல்கள் பற்றி எச்சரித்தேன். அந்த எச்சரிக்கை எனக்கே வினையாக வந்து சேர்ந்தது.

அன்று இரவே எனது வீட்டுக்கு வந்து எனது மாமா மகள் கன்னாபின்னாவென்று சத்தம் போட்டாள். எனது மனைவிக்கு பொறுக்க இயலவில்லை. பளார் பளார் என எனது மாமா மகளை அறைந்தார். யாரைப் பத்தி எனக்கு முன்னால இப்படி பேசுவ என எனது மனைவி கொண்ட கோபத்தில் அவரது பலநாள் ஆத்திரம் தெரிந்தது. பிள்ளைதாட்சியா இருக்கே, இல்ல நிலைமையே வேற என அழுதபடி வெளியேறினாள் எனது மாமா மகள்.

கைகால்கள் எல்லாம் நடுங்கியபடி அமர்ந்து இருந்தேன். கோவிலுக்கு போய்விட்டு வந்த எனது பெற்றோர்கள் என்ன ஆச்சு என்றார்கள். சிறிது நேரத்தில் எனது மாமாவும், அத்தையும் வாசலில் வந்து நின்றார்கள். ஓ என எனக்கு அழவேண்டும் போலிருந்தது.

வைரவாசல் (சவால் சிறுகதை)




நெடு நெடுவென உயரமும், தோசை சட்டி போன்ற பரந்த முகமும் உடைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பரந்தாமன் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் தனது வீட்டு மாடியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.  வழுக்கைத்தலையில் இருந்து அவரது நெற்றியில் வியர்வைத்துளிகள் கோடு போட்டுக் கொண்டிருந்தது. அந்த வியர்வைத்துளிகள் புதிய ஆற்றுப்பாதை போல அமைந்து இருந்தது.                                                                 

வறட்சியான காலத்தில் எப்படி ஆறு வற்றி போய்விடுமோ அதைப்போலவே சட்டென அந்த வியர்வைத்துளிகளை தனது வலது பக்க தோளில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த துண்டினால் துடைத்து விட்டார். 'சே என்ன வெயில்' என வெயிலில் நடந்து கொண்டே  அழுத்துக் கொண்டார்.       

நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு என காட்டிக் கொண்டிருந்தது. பசிக்க வேறு ஆரம்பித்தது. பரந்தாமன் தனது ஒரு கைப்பேசியை எடுத்தார். காமினியின்  கைப்பேசியின் எண்களை ஒவ்வொன்றாக அழுத்தினார். மறுபுறம் 'வைரத்தைக்  கொண்டு வருவேன், தைரியமாய் இருந்து கொள்ளுங்கள்' என ஒலித்தது. சிலமுறை அதே வரிகளை ஒலித்தவுடன் அடங்கிப் போனது. 'ஏன் இன்னும் போன் எடுக்கலை இந்த காமினி' என மனதுக்குள் கேட்டுக்கொண்டார்.

''வெயிலுல குளிர் காயறீங்களா, வந்து சாப்பிட்டு போங்க'' என பரந்தாமனின் மனைவி பரமேஸ்வரி வீட்டின் கீழ் தளத்தில் இருந்து கத்தினார். சாப்பாடு என்றதும் மேலும் பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் காமினி எண்களை அழுத்தினார். அதே பாடல். அதே அடக்கம். இருபது முறை இதுவரை அழைத்துவிட்டதாக கைப்பேசி கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

 மாடியிலிருந்து கீழிறங்கி வந்தார். அவசரம் அவசரமாக சாப்பிட்டார். இரண்டு மூன்று முறை புரையேறிவிட்டது. ''யாரு நினைக்கிறாங்களோ இந்த நேரத்தில'' என பரமேஸ்வரி சிறிது சாதம் எடுத்து வைத்தார். ''அந்த காமினி பொண்ணுதான் நினைக்கிறாளோ என்னவோ, அவளுக்கு போன் போட்டு பார்த்தேன், ஆனா அவ எடுக்கலை'' என்றார். ''ஏன் நம்ம பொண்ணு நினைக்கமாட்டாளா'' அப்பொழுது பரந்தாமனின் கைப்பேசி ஒலித்தது. அவசரமாக எடுத்தார். மனைவியை பார்த்தார்.

மறுமுனையில்,

''சார், நான் டாக்டர்.காமினி பேசறேன்''

''எங்கே இருக்கே''

''ஒரு முக்கியமான ஆப்பரேசன் வேலை வந்திருச்சி சார். இப்போதான் முடிச்சிட்டு எங்க மருத்துவமனையில என்னோட அறையிலதான் இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில வைரவாசல் கிளம்பிருவேன். வயர் எல்லாம் அப்படி அப்படியே மாட்டிக் கிடக்கு, கழட்டனும்''

''இன்னைக்கு ராத்திரியே வந்து சேர்ந்துருவியா''

''வந்துருவேன் சார், ஆனா அந்த சிவா என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கான், இப்போ கூட எங்க மருத்துவமனையிலதான் இருக்கான்''

''அவனுக்கு ஒரு மயக்க மருந்து ஊசியை நறுக்குன்னு குத்திட்டு போ''

''அதெல்லாம் வேணாம் சார். அவன் கண்ணுக்கு தெரியாம வைரவாசல் போகணும், அதுதான் எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது''

''அவன் கூட யாராச்சும் இருக்காங்களா''

''தெரியலை சார்'' 

''சரி''

''அப்புறம் பேசறேன் சார்''

தனது முகத்தில் மீண்டும் மாஸ்க்தனை அணிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அந்த அறையில்  டாக்டர் ரகசியன் உள்ளே நுழைந்தார்.

''ஹௌ இஸ் பேசன்ட் நௌ காமினி''

'' பைன் டாக்டர்''

''யு ஹவேன்ட் ரிமுவ்ட் யுவர் மாஸ்க்''

'' வில் டூ சார்''

'' தேங்க்ஸ் பார் திஸ் ஹெல்ப், யு கேன் லீவ் நௌ''

''ஓகே சார்'' 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

 ''ஆ'' என சின்ன சத்தம் எழுப்பிக் கொண்டாள். புல்தரை மெத்தென இருந்தாலும் மலர் உடம்பில் முள்ளாகத்தான் குத்தியது. தனது கைப்பையில் எல்லாம் சரிபார்த்து கொண்டாள். தான் அணிந்து இருந்த வெள்ளை கோட்டினை கழற்றினாள். கைப்பையில் இருந்து ஒரு சிறிய பையை எடுத்து கோட்டினை வேகமாக மடித்து அதற்குள் வைத்தாள்.

அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி நேராக திருச்சி பேருந்து நிலையம் அடைந்தாள். வெகு வேகமாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறினாள். 

''வைரவாசலுக்கு ஒரு டிக்கட்'' 

''வண்டி நிக்காதும்மா'' 

''வைரவாசலுக்கு அடுத்த ஸ்டாப்ல இறங்கிகிறேன்'' 

காற்று சன்னல் வழியாக படபடவென அடித்தது. ஒரு கனவு காணலாம் என்று நினைத்துப் பார்த்தாள். ஆனால்  மனம்  அனுமதி தரவில்லை. தனது சிறிய வயது காலங்களை எல்லாம் அசை போட நினைத்தாள். அதற்கும் மனம் அனுமதி தரவில்லை. வைரவாசல் அடைந்ததும் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என  சிந்திக்க நினைத்தாள். அதுவும் இயலவில்லை. உறங்குவது போன்று கண்களை வைத்துக் கொண்டாள். மனம் உறங்கிப் போனது.

வைரவாசல் ஊர்தனை பேருந்து நெருங்கியது. இதை அறிந்த காமினி பேருந்தின் சன்னல் வழியே குதிக்கலாமா என எண்ணினாள். எலும்பு கூட தேறாது என படி அருகில் வந்தாள். ஓரிடத்தில் பேருந்து மெதுவாக செல்லவே ஓடும் பேருந்தில் இருந்து கீழிறங்கி பேருந்துடன் சிறிது தூரம் ஓடி நின்றாள். இரண்டாவது தடவை தப்பித்தோம் என நினைத்துக் கொண்டாள்.

ஊர் அமைதியாக இருந்தது. அங்கும் இங்குமாக மனிதர்கள் இருந்தார்கள். 

''இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வீடு எது?''

''நேராப் போய் கிழக்கே போங்க'' 

வழி சொன்னவர்கள் காமினியை சற்று நேரம் கழித்து பின் தொடர்ந்தார்கள். காமினி,  சுப்பிரமணி வீட்டினை அடைந்தாள்.  அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் வீட்டினில் உள்ளே இருந்து சிவா வெளிப்பட்டான். அதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து போனாள் காமினி.
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

''சிவா....'' 

''நான் திருடன் தான், கொள்ளைக்காரன் தான். எப்படிப்பட்டவனா இருந்தா உங்களுக்கு என்ன''

''நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை'' 

''உனக்கு தெரிஞ்ச ரகசியம் எனக்கு தெரியாதா?''

அப்பொழுது சிவாவின் கைகளில் சட்டென பெரும் கல் ஒன்று விழுந்தது. துப்பாக்கி சற்று தள்ளி சென்று விழுந்தது.  சிலர் ஓடி வந்து சிவாவினை வளைத்தார்கள்.
''போங்க, இவனை நாங்க பாத்துக்கிறோம், டேய் இவன் காரை அடிச்சி நொறுக்குங்கடா'' 

சுப்பிரமணி வீட்டுக்குள் நுழைந்தாள் காமினி.

'வைரமணி' என கட்டிப்பிடித்தாள் காமினி.

''உனக்கு ஒன்னும் ஆகலையே மணி''

''இல்லை''

''எங்கே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி''

''தெரியலை''

''ராஸ்கல், அவன் தான் சிவாவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கனும்'' 

''அவரா''

''வேகமா கிளம்பு, திருட்டு கேஸ் போட்டுருவான்'' 

இன்னும் சிலர் சிவாவை அடித்து கொண்டிருந்தார்கள். சிவா வலியால் துடி துடித்து கொண்டிருந்தான்.சுப்பிரமணி அந்த இடத்திற்கு வந்தபோது காமினியும், வைரமணியும் திருச்சி நோக்கி பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார்கள். 

''சார், உங்க வீட்டுக்கு வந்த பொண்ணை இவன் கொல்ல பார்த்தான் சார்'' 

''எங்கே அந்த பொண்ணு''

''உங்க வீட்டுல இருந்த ஒரு பொண்ணை கூட்டிட்டு போய்ட்டாங்க சார்''

''இவனை விட்டுட்டு நீங்க போங்க'' 

அனைவரும் அங்கிருந்து நகன்றார்கள். சிறிது நேரத்தில் காவல் அதிகாரிகள் அங்கே வந்தார்கள். 

''வீ அரெஸ்ட் போத் ஆப் யு பார் கிட்னாப்பிங் எ கேர்ல்''

இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி திருதிருவென முழித்தார்.

மாலையில் பரந்தாமனின் வீட்டுக்கு காமினியும், வைரமணியும் வந்து சேர்ந்தார்கள். இதை கண்ட பரந்தாமன் முகத்தில் பெரும் பிரகாசம் தெரிந்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

''டைமண்டா இவ, இவ சரியான மண்டு சார்'' 

(முற்றும்) 
கதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
kbkk007@gmail.com

Sunday 26 September 2010

ரஜினியின் எந்திரனும் அமெரிக்காவின் நாசாவும்

ரஜினியின் எந்திரனா?, சங்கரின் எந்திரனா? எனும் கேள்விக்கு  சங்கரின் எந்திரன் என  ரஜினி பதில் சொல்லிவிட்டார். ஆனால் இது ரஜினியின் எந்திரன் என சங்கருக்கும் தெரியும், இந்த படத்தை தயாரித்த கலாநிதி மாறனுக்கும் தெரியும். ரஜினி ஒரு மந்திர சொல் என்பதான மாயை எப்போதும் உண்டு.

இந்த எந்திரன் என்ன கதை? வைரமுத்து தனது பங்கிற்கு சொல்லிவிட்டார். 'இது ஒரு முக்கோண காதல் கதை'. ரஜினியின் படத்திற்கு எதற்கு கதை? யார் ரஜினியின் படத்திற்கு கதை தேடி சென்று இருக்கிறார்கள்? ரஜினி நடிக்கிறார் என்பதற்காக மட்டுமே செல்பவர்கள் அதிகம்.

எந்திரனில் அழிவில் இருந்து மீட்க எந்திரனாக வலம் வரும் ரஜினி, அறிவியலாளாரக வலம் வரும் ரஜினி. தான் உருவாக்கிய எந்திரனிடமே தனது காதலியை பறிகொடுத்துவிடும் நிலையில், எதிர்க்கும் நிலையில்  ரஜினி. மீதியை வெள்ளித்திரையில் காண்க.

ரஜினியின் திரைப்பட உலக வரலாற்றில் தோல்விப்படங்கள் பல உண்டு. ஆனால் அதில் குறிப்பிடப்பட வேண்டியவை ஸ்ரீராகவேந்திரர் மற்றும் பாபா. ரஜினிக்கு ஒரு உண்மை உரைத்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தை வியாபாராமாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவைகள் அந்த படங்கள்.

ஆன்மிகத்திற்கு எதற்கு விளம்பரம்? ஊரெல்லாம் பாபாஜி, மாதாஜி. உள்ளூர வெந்து வேகிறார் விவசாயி.

எந்திரன், மனிதன் போல பல மொழிகள் தெரிந்து வைத்து கொண்டு, மனிதன் போலவே செயல்படும் ஒரு பாத்திரம். இதை பல கதைகளில் எழுத்தாளர்கள் சித்தரித்து இருக்கிறார்கள்.

அதைப்போலவே நாசாவில் ஒரு மனிதனை போல செயல்படும் வண்ணம் ரோபோ ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். பத்து மொழிகள் தெரியும் அந்த ரோபோவிற்கு. அந்த ரோபோவின் நோக்கம் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்வதல்ல. மனிதர்களுக்கு உதவியாய் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பது.

ரஜினியின் எந்திரனா, நாசாவின் எந்திரனா எனும்போது நாசாவின் எந்திரன் மனித குலத்திற்கு பெரும் உதவியாக இருக்கபோவது மட்டுமே உண்மை.