Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday 17 September 2013

சூப்பர் ஹீரோ

 இந்திப் படம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. தூர்தர்சனின் புண்ணியத்தில் மட்டுமே இந்தி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு பின்னர் இந்திப்படம் என பார்த்தது என எதுவுமே நினைவில் இல்லை.

சமீபத்தில் தியேட்டருக்கு சென்று சென்னை எக்ஸ்ப்ரஸ் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் படம் என்கிற ஒரு நினைப்பில் படம் பார்க்க அழைத்த போது போகலாம் என தியேட்டருக்குள் அமர்ந்த பின்னர் தான் சட்டென நினைவுக்கு வந்தது, வந்திருப்பது ஒரு இந்திப் படத்திற்கு என.

தமிழே புரியாது, இதில் இந்தி வேறா! நிறைய 'இந்தி'மார்கள் அமர்ந்து இருந்து இருந்தார்கள். படம் தொடங்கியது. எனக்கும் இந்திக்கும் உள்ள ஒரு பந்தம் மிகவும் சுவாரஸ்யமானது. கல்லூரி படித்த காலங்களில் ஆர்வத்துடன் ரமேஷ் எனும் நண்பர் கற்று கொடுத்த இந்தியை இலக்கணம் எல்லாம் என சேர்த்து ஓரளவு படித்து விட்டேன். தலைநகர் டில்லி, கல்லூரி கால கல்கத்தா என பிற மாநிலங்கள் சென்றாலும் இந்த இந்தியை இனிப்புக்கு கூட தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதில்லை. இந்தி மீது தனிப்பட்ட வெறுப்பு என்றோ , மறத்தமிழர் என்றோ இதற்கு காரணம் இல்லை. ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எனது வாழ்வில் சில மொழிகள் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவ்வப்போது எண்ணம் தலைகாட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட.

நல்லவேளையாக படத்தில் 'சப்டைட்டில்' ஆங்கிலத்தில் போட்டார்கள். இருப்பினும் அரைகுறை இந்தி மூலம் சில புரிந்து கொள்ளலாம் என்றே பேசுவதையும் கேட்டு வைத்தேன். ஆனால் 'இந்திமார்கள்' சிரிக்கும்போது எனக்கு தானாக சிரிப்பு வரவில்லை. மொழியின் சுவாரஸ்யம் மொழிப்பெயர்ப்பில் இருப்பது இல்லை. சில இடங்களில் சிரித்து வைத்தேன்.

தமிழ்நாட்டில் இத்தனை பேரழகா என உச் கொட்டும் வகையில் மழையும், அருவிகளும் கொண்ட பிரதேசம் காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பெண்கள் உடுத்தும் சேலை கண்டு 'இந்திமார்கள்' இத்தனை அழகான சேலை எல்லாம் தமிழ்நாட்டில் கிடைக்குமா/கட்டுவார்களா என ஆச்சர்யபட்டார்களாம். ஒரு சேலை எடுக்க கடைக்கு சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய மனைவிமார்கள் பற்றிய நகைச்சுவை கதைகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.

இந்த திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். எல்லா திரைப்படங்களும் ஒரு வரி கதைதான். அதை எப்படி வடிவமைத்து முடிப்பது என்பதில் தான் மொத்த திரைப்படத்தின் வெற்றியும் இருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் வாழ்வில் என்னவெல்லாம் நடந்து விடும் என கதை சொல்லி இருக்கிறார்கள். வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் ஒரு பெண். சுத்துப்பட்டி கிராமங்களை எல்லாம் தன வசத்தில் வைத்திருக்கும் ஒரு 'பெரிய தல' என படம் நகைச்சுவை உணர்வுடன் நகர்கிறது.

எழில் கொஞ்சும் பிரதேசங்கள் கண்டு கொண்டே இருக்கலாம் என்பது போல காட்சி அமைப்புகள். அந்த கிராமங்களில் வில்லன் உட்பட சிலர் இந்தி பேசுகிறார்கள். அரை குறை இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உபயோகிப்பது 'அச்சா' 'தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை' என்பதுதான். 'ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் இழுக்கு. ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் இழுக்கு' என மொழியின் பிரவேசம் குறித்து பேசுகிறார்கள். ஆங்கிலம் பிற மொழிகளை வசப்படுத்தியதன் காரணம், மொழிபெயர்ப்பு தான். மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். சில நாடுகள் ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்த்தும் தற்போது உலகமயமாக்கல் எனும் அடிப்படையில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த திரைப்படத்தில் காதல் தான் உண்மையான மொழி என சொல்வதோடு பிரச்சனைகள் கண்டு ஓடி ஒளியாமல் அதை எதிர்த்து நிற்கும்போது சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோ ஆகிவிடுவான் என்றே சொல்லி இருக்கிறார்கள். அதாவது 'பவர் ஆ ஃப் தி காமன் மேன்'. கடைசியில் ரஜினியை வைத்து ஒரு பாடல். பாடல் முடிந்தே பலரும் கிளம்பி சென்றார்கள். ஒரு தமிழ் கலந்த இந்திப் படம் பார்த்தது போன்ற திருப்தி. அதுவும் ஹிந்திமார்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.

இந்த சூப்பர் ஹீரோ குறித்து உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைய செய்யும் தகவல்கள் உண்டு. 1912ம் வருடம் இந்த சூப்பர் ஹீரோ பற்றியஎண்ணங்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதாவது சூப்பர் ஹீரோக்கள் அமானுஷ்ய தன்மை கொண்டவர்களா கற்பனை செய்யப்பட்டார்கள். 1937ல் முதல் காமிக்ஸ் புத்தகம் வந்தது, இந்த சூப்பர் ஹீரோக்கள் குறித்து தமக்கென இரண்டு நிறுவனங்கள் உரிமம் வைத்து கொண்டன. இதில் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இவை படங்களாக உருவாக்கப்பட்டன. பேட்மேன் போன்ற சாதாரண மனிதர்கள் சில கலைகள் கற்றுக்கொண்டு தமது திறமை மூலம் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள் என சொல்லப்பட்டது. அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பின்னர் இப்படி நிறைய சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் வடிவம் எடுத்தார்கள்.

'kick ass' எனும் திரைப்படம் வாழ்வில் உள்ள நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி ஒரு  காமிக்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. அதாவது சில உடைகள் அணிந்து கொண்டு, சமூகத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை தனியாளாக செய்வது, அல்லது ஒரு கூட்டமாக சேர்ந்து செய்வது.  kick ass 2 எனும் திரைப்படம் பார்த்தபோதுதான் இந்த நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த காமிக்ஸ் புத்தகம் அடிப்படையில் உண்மையிலேயே அமெரிக்காவில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் வலம் வருகிறார்கள். உண்மையிலேயே குற்றங்களை களைவது, வீடில்லாதவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக விசயங்களை அவரவருக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து செயல்படுவது இவர்களின் வேலை. கனடாவில் அனுஜன் பஞ்சாட்சரம் இது போன்று செயல்படுவதாக குறிப்பு உண்டு. நமது கிராமங்களில் காட்டுக்கு சென்று காவல் காப்பது, எல்லை காவலாளி என ஒரு மட்டத்தில் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு.

இந்த சூப்பர் ஹீரோக்கள் சில நேரங்களில் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்து விடுவது உண்டு. சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என காவல்துறையே சொல்லிவிட்டது.

நமது தமிழகத்தில்,  இந்தியாவில் பிற நாடுகளில் உள்ளது போன்று  நிறைய நிஜ  சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சினை தமிழக, இந்திய  நிஜ சூப்பர் ஹீரோக்களின் வில்லன்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் சிரமம்.

Thursday 15 August 2013

தலைவலி தந்த தலைவா

தமிழகத்தில் மட்டும் இந்த 'தலைவா' எனும் தமிழ் திரைப்படம் வெளியாகவில்லையாம். அதற்கான காரணங்கள் இவையிவையென 'பொழுதுபோக்கு' ஊடகங்கள் வரிசைபடுத்திக் கொண்டே இருக்கின்றன. 

முதல் காரணம் தலைவா திரைப்படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என ஒரு 'சித்தரிக்கப்பட்ட' மிரட்டல் செய்தி. அதைத் தொடர்ந்து தியேட்டர்களுக்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது என கைவிரித்துவிட்ட 'பம்மல்' தமிழக காவல்துறை. அதைகண்டு பயந்து நடுங்குவதை போல 'பாவலா' செய்த திரையரங்கு உரிமையாளர்கள். 

இரண்டாவது காரணம் தலைவா படத்தின் கதாநாயகன் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விடுத்த 'நான் அண்ணா, என் பையன் எம் ஜி ஆர்' எனும் அறிக்கை. 

மூன்றாவது காரணம் 'அதிமுக வெற்றி பெற அணில் போல உதவினோம்' எனும் கதாநாயகனின் 'மறக்கப்பட்டு பின்னர் தூசி தட்டப்பட்ட' தன்னடக்கமான அறிக்கை. 

ஆனால் பாவம் தயாரிப்பாளர். திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைத்தவர் எம் ஜி ஆர். அதன் காரணமாகவே திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் அடைபவர்கள் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் எனும் கனவு காண்கிறார்கள். தன்னை ஒரு தலைவனாக சித்தரித்துக் கொண்டு கனவு காண்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் தலைவனாக வேண்டும் எனும் ஒரு சிறு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் பலர் நாட்டிற்கு நல்லது செய்ய தலைவன் எனும் பதவி ஒரு அவசியமான ஒன்று என்றாகிறது. குடும்பத் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் இப்படி தலைவர் எனும் தலைவா கோசம் எங்கும் ஒலித்து கொண்டுதானிருக்கிறது. 

இப்படி இத்தனை தலைவர் என இருந்தாலும் அரசியல் தலைவர் எனும் 'தகுதியற்ற' சிறப்பு தலைவர் பதவி ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி அதற்கு உண்டு. காங்கிரஸ், பாஜக திமுக, அதிமுக என கட்சிகளின் தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இப்படி தலைவர் ஆசை விஜய்க்கு இருப்பது என்னவோ உண்மைதான். மக்களுக்கு உதவ வேண்டும் எனும் தனது கனவு சாத்தியப்பட நினைக்கிறார். திரைப்படத்தில் இருந்து எண்ணற்றோர் அரசியல் உலகுக்கு வந்து வெற்றி பெற முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே கமல் அரசியல் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கி கொண்டார், ரஜினி அரசியல் மனசுக்கு ஆகாது என அறிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறார். ஆனால் விஜயகாந்த், விஜய டி ஆர் போன்றோர் எல்லாம் ஒரு கட்சியை நடத்தி அந்த கட்சிக்காக அங்கீகாரம் தேடி தேடி தங்களை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி நடத்த ஏகோபித்த மக்கள் ஆதரவு மட்டும் அல்லாது பணம் வேண்டும், ஆள் பலம் வேண்டும், மிக மிக முக்கியமாக அடிமைகள் வேண்டும். இப்படி விசுவாசிகள் எனும் கொத்தடிமைகள் இல்லாத பட்சத்தில் ஒரு கட்சியானது சர்வ வல்லமை பொருந்தியதாக ஆகாது. இதையெல்லாம் தயார் செய்ய மனோதிடம் வேண்டும். எம்ஜி ஆர் செய்து காட்டினார், ஜெயலலிதா அதை பின்பற்றுகிறார். ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் நிலை ஒரு கேள்விக்குறிதான். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் ஓரளவுக்கு எல்லாமே தன்னிறைவு அடைந்ததாக இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றாலும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி கொள்ளும் மனப்பக்குவம் உண்டு. சகித்து கொள்ளும் மனோபாவம் அதிக அளவில் தமிழக மக்களிடம் உண்டு. இல்லையெனில் ஒரே மாதிரியான திரைப்படங்களை மீண்டும் மீண்டும் கண்டு ரசிப்பது எப்படி? மீண்டும் மீண்டும் அதே அரசியல் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பது எப்படி? எனவே இங்கே தமிழகத்தில் ஒரு போராளி அவசியமில்லாமல் போகிறது. 

விஜய் நடித்த தலைவா எனும் திரைப்படத்தில் முதலும் கடைசியுமாய் 'Time to Lead' என்பது ஒரு அச்சுறுத்தலான விசயமாக தமிழக அரசுக்கு இருந்து இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் படைப்பாளிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் என்ன! அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை கேவலப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்து இருக்கின்றன. அவை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த படத்திற்கு அப்படி என்ன ஒரு தடை. ஆந்திரா, கேரளா, வேறு நாடுகள் என இந்த திரைப்படம் திரையிடப்பட்டு இருக்கிறதே. பாவம் இரண்டு விஜய்கள். தமிழக மக்கள் ஒரு 'முற்பாதி பொழுபோக்கு' படத்தை முழுவதுமாக புறக்கணிக்க செய்துவிட்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

தலைவா எனும் திரைப்படத்தின் கதை ஒரு அரசியல் களத்தை சார்ந்தது. அது 'உடன் இருந்து குழி பறிப்போர்' வகையை சார்ந்தது. 'துரோகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதை வடிவம் இது' மும்பையில் தொடங்கி மும்பையில் முடிகிறது. முதல் பாதி காதல் கலந்த நகைச்சுவை, இரண்டாம் பகுதி பழிவாங்கல் படலம். துப்பாக்கிகள் பெருகி போன இந்த புவியில் இன்னும் கத்திகளுக்கு கொண்டாட்டம் தான். 

கதாநாயகிகள் பொய் சொல்லும் பேர்வழிகள் என்பதை எப்போதுதான் தமிழ் சினிமா மாற்றி கொள்ளுமோ? சகிக்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள்போன்றே ஆஸ்திரேலியாவில் கூட இருக்கத்தான் செய்கிறதாம். கடல் கடந்து வணிகம் திரட்ட சென்றவர்கள் 'கும்பலாக' காதலுக்கு அலைவது கேலி கூத்து. 

அடேங்கப்பா, ஆஸ்திரேலியாவில் ஒரு அரைகுறை ஒரு ஹோட்டல் நடத்தி அதன் மூலம் கதாநாயகன் மனம் மயக்கி, அவரது தந்தையை வசப்படுத்துவது எப்படிப்பட்ட 'கிரியேட்டிவ் மூவ்'! மங்காத்தா எனும் திரைப்படத்தில் அஜீத் தனது காதலி மற்றும் தந்தையை ஏமாற்றுவார். இந்த கதையில் வேசம் போட்டு விஜய் ஏமாற்றபடுவார். எல்லாம் சரிதான். விசயங்களை சொல்லும் விதம் தான் படைப்பாளிகளிடம் வேறுபடுகிறது. 

அண்ணா! அன்னா ஹசாரே! படத்தின் தொடக்கத்தில் பல தலைவர்கள் பெயர் வருகிறது, அதில் போராளிகள் எல்லாம் வருகிறார்கள்.  அவர்களது பெயர்களை படிக்கும்போதே உடலில் 'ஜிவ்வென' உணர்ச்சி மேலிடுகிறது. எப்படிப்பட்ட தலைவர்கள், எப்படிப்பட்ட போராளிகள் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த உயர்ந்த உள்ளங்கள் அவை, ஆனால் இப்போதைய தலைவர்கள் மக்களை ஒடுக்கவே தலை எடுக்கிறார்கள். 

விஜய், உங்களுக்குள் மக்களை வழி நடத்த வேண்டும் ஒரு எண்ணம் இருப்பின் அதற்குரிய உரிய முயற்சிகள் எடுத்தாக வேண்டும். படத்தில் காட்டியது போன்று நிஜ வாழ்வில் கூட சித்தப்பர்கள் எட்டப்பர்களாக இருப்பார்கள். எப்படி இருப்பினும் தலைவா எனும் பட்டம் பெரிய தலைவலிதான். 

அந்த தலைவலியை தாங்கி கொள்ளும் சக்தி இருப்பின் 'Time to Lead...'




Friday 8 February 2013

எந்திரனை வீழ்த்திய விஸ்வரூபம்

ரஜினி-கமல் படங்களுக்கு நேரடி போட்டி வெகுவாகவே குறைந்து போய்விட்டது. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விவாதிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கமலின் திரைப்படங்களைவிட விஜய் திரைப்படங்கள் வசூலில் ரஜினிக்கு அடுத்த நிலை என்றெல்லாம் உருவாகிவிட்ட காலம். தமிழ் திரையுலகினை புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல பல இயக்குனர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி கமல் தனது இயக்கத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார். 

சமீபத்திய விஸ்வரூபம் சாதாரண கதைதான் எனினும் கமல் கையாண்ட தொழில்நுட்பம் படம் பார்த்த அனைவரையும் பாராட்டத்தான் செய்யும், ஒரு சிலரைத் தவிர. எந்திரனை விட மிக சிறப்பான படம் என்று விஸ்வரூபம் பெயர் எடுத்து இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் தான் இப்போது அமைந்து இருக்கிறது. சர்ச்சைகள் இல்லாமல் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் இத்தனை அளவுக்கு பேசப்படுமா என்றால் எந்திரன் கூட அளவுக்கு அதிகமான விளம்பரத்தில் தான் வெளிவந்தது. ரஜினி தன்னை ஒரு சூழ்நிலை கைதி என அறிவிக்கவே செய்தது எந்திரன் திரைப்படம். 

ஒரு படத்தில் என்ன இருக்கிறது எனும் எதிர்பார்ப்பை தூண்டிவிடுவதே ஒரு படத்தின் வெற்றியாகும். ரஜினி நடித்தால் அந்த படமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும் சூழல் தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கமலுக்கு அப்படியல்ல. மன்மதன் அம்பு என்றொரு படம் வந்த சுவடே தெரியாமல் ஒளிந்து கொண்டது. ரஜினி கௌரவ வேடத்தில் வந்தாலும் கூட  குசேலன் ரஜினிக்கு ஒரு தோல்விப்படம் என்றே பேசப்பட்டது. 

அத்தகைய சூழலில் இப்போது விஸ்வரூபத்தின் வசூல் எந்திரனை மிஞ்சிவிட்டது எனும் செய்தி வெளியாகிவருகிறது. எந்திரன் தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதால் எந்த ஒரு படம் வெளியானாலும் எந்திரன் வசூலுக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. பல நாட்கள் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட சந்திரமுகியை பலரும் மறந்து போனார்கள். 

தமிழகத்தில் இந்த வசூல் கணக்கெல்லாம் ஒழுங்காகவே இருக்காது என்பது காலம் கண்டு கொண்ட செய்தியாகும். இல்லையெனில் ஒன்றரை கோடி நஷ்டம் என ஒரு கோஷ்டி எந்திரன் படத்திற்கு கணக்கு காண்பித்து இருக்காது. விஸ்வரூபம் முதல் நாளே தமிழில் பத்து கோடி சம்பாதித்து விட்டது எனும் வசூல் கணக்கு கூட அதிகாரப்பூர்வமானது அல்ல என்றே சொல்கிறார்கள். ஒரு வேளை அதற்கு அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். 

ஐம்பது நாள், நூறு நாட்கள், வெள்ளிவிழா என்றெல்லாம் முன்பு போல் படங்கள் இப்போது கொண்டாடுவது இல்லை. ஒரு வாரம் ஓடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. கடல், டேவிட் எனும் சமீபத்திய திரைப்படங்கள் பெரும் சரிவினை அடைந்து இருக்கின்றன. 

முன்பு ரஜினி, கமல் படங்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதில் போட்டி இருக்கும். காரணம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும். இப்போதெல்லாம் அறுநூறு, ஆயிரம் என்று சொல்கிறார்கள். ''ஒரே காலகட்டத்தில் ரஜினி கமல் படம் வெளியாகி அப்போது வசூல் விபரங்கள் வெளிவந்தால் அப்போது யார் வசூல் சக்ரவர்த்தி என்பது தெளிவாகும். அதுவரை எந்திரன் ஒவ்வொருமுறை ஒவ்வொரு படத்தினால் வீழ்த்தப்பட்ட கதை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்'' என்கிறார் ஒரு ரஜினி ரசிகர். ஆனால் என்னைப் பொருத்தவரை விஸ்வரூபம் எந்திரனை வீழ்த்திவிட்டது படம் அமைப்பில் மட்டுமல்ல, வசூலிலும் என்றுதான் மதிப்பீடு செய்ய முடிகிறது. 


Saturday 2 February 2013

விஸ்வரூபம்

கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு இறுதி காட்சி முடிந்த பின்னர் ப்பூ என்றும், படம் மண்ணு போல இருக்கிறது என்றும் வாய் முணுமுணுத்தது. இருப்பினும் இது தமிழ் பட  உலகின் ஒரு புதிய அவதாரம். ஆப்கானிஸ்தானின் வறண்ட பிரதேச மலைகள் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. தமிழ் பட உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். மிகவும் சிரமமான இடங்களில் எல்லாம், அதுவும் போர் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.

மிகவும் சிரமமான கதைக்கருவை மிகவும் நேர்த்தியாக கையாளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம். முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள் என்று வாய்க்கு வாய் வெளியில் சொல்லியவர் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு இந்து, அதுவும் ஆராய்ச்சியாளர், புற்று நோய் எனும் கொடிய நோயிற்கு கதிரியக்கம் மூலம் தீர்வு காண முயல்பவர்,  முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியாக இருக்கிறார் என்பதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல என்பது தெள்ளத் தெளிவு. மேலும் உலகில் நடைபெறும் தீவிரவாதம் அனைத்திற்கும் முஸ்லீம்கள் பொறுப்பல்ல என்பது மிகவும் கண்கூடு. எதற்கும் உதாரணத்திற்கு அமெரிக்க தீவிரவாதம் படித்து பாருங்கள்.

வானம் என்ற ஒரு திரைப்படம். அதில் முஸ்லீம்கள் பெருமைப்படும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது. ஒரு முஸ்லீம் சமூகம் எப்படி தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகிறது என்றும் அதே வேளையில் ஒரு முஸ்லீம் எப்படி உதவுகிறார் என்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த திரைப்படம் இந்த அளவிற்கு காசில்லாத விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. எவரும் அந்த படத்தில் காட்டப்படும் தீவிரவாதம் குறித்து அதிக அளவில் கேள்வி எழுப்பவில்லை.

இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சிறு வயதில் தீபாவளி சமயத்தில் துப்பாக்கி வெடி வெடித்த நியாபகம் வந்து தொலைந்தது. திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம் நினைவில் வந்து போனது. எப்போதுமே ஒரு சமூகம் அமைதியில் மட்டுமே திளைத்திருக்க விரும்பும். இயக்குனரின் இறைமறுப்பு எண்ணம் ஆங்காங்கே தென்படுகிறது. இந்து மதத்தையும் விட்டுவைக்கவில்லை. விநாயகரை கடலில் கரைப்பது போன்ற விசயங்கள் சிரிப்பலைகள் எழுப்பின எனலாம். இந்துக்கள் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள், ஏனெனில் இந்து சமயம் ஒரு அழுத்தத்தில் இருந்து புறப்படவில்லை. அது மனதில் இருந்து கிளம்பிய ஒன்று. பகவத் கீதை எல்லாம் இந்துக்களின் புனித நூல் அல்ல.

அப்படியெனில் முஸ்லீம் சமூகம்! முகம்மது நபிகளின் வரலாறுதனை புரட்டிப் பார்த்தால் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி எத்தகைய போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை கண்கூடாக காணலாம். ஒரு குரான் மட்டும் இல்லையெனில் இந்த முஸ்லீம் எனும் மதம் இல்லாது ஒழிந்து போயிருக்கும் நிலைதான் அன்று இருந்தது. எப்படியெல்லாம் குரான் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை மற்றொரு நேரத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இயக்குனரின் இறைமறுப்பு கொள்கைக்கு மதிப்பு தரும் வகையில் டாகின்ஸ் எனப்படும் இறைமறுப்பாளர் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி பெருமைப்பட்டு கொள்கிறார். நான் சிறுமைப்பட்டு கொண்டேன்.

'டர்டி பாம்' எனப்படும் கதிரியக்க ஐசோடோப்களின் மூலம் உருவாக்கப்படும் குண்டுகளினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இது அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகமான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இல்லை. மேலும் இது போன்ற விசயங்களால் நேரடி பாதிப்பு குறைவுதான், ஆனால் மக்களில் ஏற்படும் பய உணர்வு மிகவும் அபாயகரமானது. மனதளவில் பெரும் பாதிப்பினை இதுபோன்ற கதிரியக்க குண்டுகள் ஏற்படுத்திவிடும் என்றே கருதப்படுகிறது. பெரும்பாலும் சீசியம் எனும் உலோகத்தின் ஐசோடோப்கள் பயன்படுத்தபடுகிறது. இந்த சீசியம் பற்றியும் கதிரியக்க விளைவுகள் பற்றியும் மற்றொரு முறை பார்க்கலாம். செர்னபில் அணு உலை வெடிப்பின் போது இந்த சீசியமே அதிக அளவில் வெளிப்பட்டதாக தகவல் இருக்கிறது.

அப்படிப்பட்ட கதிரியக்க விளைவைத்தான் இந்த திரைப்படம் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் இஸ்லாமிய அமைப்புகளின் மனதில் குறிப்பாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகம்மது ஓமர் பற்றி பெயர் குறிப்பிட்டதோடு பல காட்சிகள் அதீத கற்பனைகளுக்கு உட்பட்டவைதான். அவருடைய அமெரிக்க வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் ஒரு போர் நிலமாகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. இதையெல்லாம் படத்தில் ஒரு சில வரிகளில் ஒரு மூதாட்டியின் சொல்லில் இருந்து முடித்து கொள்கிறார்கள். தலிபான் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை தான் பெண்கள் ஒடுக்குமுறை எல்லாம் இருந்தது எனலாம். தலிபான் இயக்கம், ஷ்ரியா விதிகள் எல்லாம் ஒரு சமூகம் தனக்கு விதித்து கொள்ளும் கட்டுபாடுகள். இதைத்தான் குரானும் செய்கிறது. தனது சமூகத்தை தன்னுள் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வரச் செய்ய அது மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே இருக்கிறது. இல்லையெனில் க்வரைசி எனும் குழுக்களில் இருந்து முஸ்லீம் முன்னேறி இருக்குமா என்பது கேள்விக்குறியே!

வாமன அவதாரம் மகாபலிக்காக! கிருஷ்ண அவதாரம் கம்சனுக்காக பின்னர் பாண்டவருக்கு உதவிட. இதில் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அதிலும் குறிப்பாக கிருஷ்ண அவதாரத்தில். சகோதர போராட்டத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் அது. விஸ்வரூபம் எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. போர் நடந்தே ஆனது.

ஆனால் இந்த நிழல் விஸ்வரூபம், குரானை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்து இருக்கிறது, தமிழகத்தில் மட்டும்! 

Friday 1 February 2013

லைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்

கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் எங்குமே செல்ல இயலாத சூழல். லண்டன் நகரிலேயே பொழுது கழிந்தது. பனி விழும் என எதிர்பார்த்து பனி விழவே இல்லை. அதற்கு பின்னர் இந்த ஜனவரி மாதம் பனி விழுந்தது வேறு கதை.

கிறிஸ்துமஸ் முன்னர் ஒரு படம் பார்க்கலாம் என சென்றோம். படத்தின் பெயர் லைப் ஆப் பை என முடிவு எடுத்தோம். படம் பற்றிய கதை என எதுவும் அறிந்திருக்கவில்லை. சில பாகங்கள் பாண்டிச்சேரியில் எடுத்து இருக்கிறார்கள் என கேள்விபட்டதுடன் சரி. முப்பரிமாணத்தில் பார்க்கலாம் என முடிவு எடுத்து சென்றது நன்றாகவே இருந்தது.

முதலில் படம் ஆரம்பித்த போது ஒரு பாடல். அதுவும் தமிழில். கண்ணே கண்மணியே! நான் பொதுவாக படங்களில் பாடலை கொஞ்சம் கூட விரும்புவதில்லை. கதையின் போக்கினை பாடல்கள் சிதைக்கின்றன என்றே கருதுவேன். ஆனால் முதன் முதலில் தொடங்கிய பாடல், அதை காட்சி அமைத்த விதம் என ஒரு அந்த பாடல் முடியும் வரை பிரமிப்பாக இருந்தது. இத்தனை தத்ரூபமாக காட்சி எவரேனும் அமைத்து இருப்பார்களா என அந்த பாடல் முடியும் வரை நினைத்து கொண்டே இருக்க செய்தது. தமிழ் கண்டு மனம் மிகவும் பூரிப்பு அடைந்தது.

இந்த படத்தின் கதை என பாண்டிச்சேரியில் தொடங்கி அதற்கடுத்து கடலிலேயே பல காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அயர்ச்சி ஏற்பட்டது உண்டு. கதை வேகமாக நகராதா என எண்ணம் வந்து சென்றது.

அதுவும் படத்தில் ஒரு இயற்கை காட்சி, அதுவும் இரவில் ஒளிரும் தாவரங்கள் என காட்டிய இடம் பிரமிக்க வைத்தது. இந்த இடம் உண்மையிலேயே இருக்கிறதா என ஏக்கம் கொள்ள வைத்துவிட்டது. அத்தனையும் தாண்டி படத்தின் இறுதி காட்சி வாழ்க்கையின் பெரிய அனுபவத்தைச் சொல்லி சென்றது. படம் முடிந்து வெளிவருகையில் உணர்வுப்பூர்வமான படம் என்று சிலர் கண்களை கசக்கி கொண்டிருந்தார்கள். சிலர் இருக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமான படம் என்று வயதான இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த படத்தின் கடைசி காட்சியில் பிரமித்து போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனம் புரியாத ஒரு இறுக்கம் மனதில் எட்டிப் பார்த்தது.

பன்னிரண்டு சிறுவனுடனும், பத்து வயது சிறுமியுடன் படம் பார்த்தோம்.  படம் எப்படி என்று அவர்களிடம் கேட்டேன். இட்ஸ் ஓகே என்றார்கள். படத்தின் அர்த்தம் புரிகிறதா என்றேன். புரியவில்லை என்றார்கள் வாழ்வியல் தத்துவம் சொன்ன திரைப்படம் இது என புலி பற்றிய கதாநாயகனின் எண்ணவோட்டத்தை விளக்கினேன். விளங்கியது போன்றே தலையாட்டினார்கள். கடைசியில் கதாநாயகன் சொன்ன விசயம் வாழ்வியலில் விசித்திரம்.

எனது வாழ்வில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்தது உண்டு. ஆனால் எப்படி இந்த படத்தில்  முதல் பாட்டு ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்கியதோ அதைப்போல இறுதி காட்சியும்  பிரமிப்பை உருவாக்கியது.

இந்த படம் ஒரு புத்தகத்தின் தழுவல் என தெரிந்து அந்த புத்தகம் பற்றி தெரிந்து கொண்டபோது கிட்டத்தட்ட ஐந்து புத்தக நிறுவனங்கள் அந்த புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டன. அதன் பின்னர் அந்த புத்தகம் வெளிவந்து சிறந்த பரிசும் பெற்றுவிட்டது. எனது அக்கா மகன் இந்த புத்தகத்தை முன்னரே படித்து இருந்ததாக சொன்னான். நீ எல்லாம் நாவல் ஆசிரியர், முதலில் இது போன்ற புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் பட்டேன். வாசிப்பு அனுபவம் மிக மிக குறைவுதான்.

இது போன்ற கதைகள் நான் இந்தியாவில் இருந்தபோது நிறையவே கேள்விபட்டது உண்டு. அத்தனை நம்பிக்கைக்கு உரிய கதைகள் அவை. இந்த படத்தில் கேட்கப்படும், இது எதற்காக நடந்தது, எனக்கு மட்டும் எப்படி நடந்தது போன்றே பல விசயங்கள் பகிரப்படுபவை.

சிறு வயதில் கேட்ட ஒரு கதை என்னை இன்னமும் பிரமிப்பில் வைக்கும்.

சந்தோசமாக இருந்த போது
நான்கு கால் தடங்கள் இருந்தது
இரண்டு உன்னுடையது
மற்ற இரண்டு இறைவனோடது

துன்பமாக இருந்தபோது
இரண்டு கால் தடங்களே இருந்தன.
இரண்டு இறைவனோடது

அப்படியெனில் நான் எங்கே?
உன்னை இறைவன் தூக்கி கொண்டு நடந்தான்!

இதுதான் அந்த கதை. இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகிறர்கள. எனக்கு இது மிக மிக பிடித்து போனது.

ஒரு நிகழ்வு - அதில் இரண்டு கதைகள்.

இந்த உலகம் உருவானது குறித்து கூட உண்டு.

இறைவன் உருவாக்கிய உலகம். இதில் நம்புமாறு எந்த ஒரு விளக்கங்களும் இல்லை. ஆனால் சுவராஸ்யமாக இருக்கும். இருப்பினும் பைபிள், குரான், பகவத் கீதை என எல்லாம் தோற்று போவது போலவே தோற்றம் அளிக்கின்றன.

பெருவெடிப்பில் உருவாக்கிய உலகம். இதில் காஸ்மிக் கதிர்கள், ரெட் ஷிப்ட் என பல விசயங்கள் உண்டு.

இந்த இரண்டில் எது உண்மை என கேட்டால் ஏழு பில்லியன் மக்களில் பலரும் இன்னமும் இன்ஷா அல்லா என்றும், இயேசுவே பரம பிதாவே என்றும், நமோ நாராயணா என்றும் ஓம் நமசிவாயா என்றும் இறைவன் உருவாக்கிய உலகம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

லைப் ஆப் பை - இறைவன் பெருமை சொல்லும் மாபெரும் காவியம்.

இப்படி ஒரு நல்ல படத்தை பார்த்த கண்கள் மற்றொரு படம் பற்றியும் நாளை எழுதும். அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன!

Wednesday 30 January 2013

இதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி


''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை'' 

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை – தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று – ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். (‘கைத்து உண்டாக ஒன்று செய்வான்  எனக் கூட்டுக. ‘ஒன்று’என்பது வினையாதல் ‘செய்வான்’ என்றதனாற் பெற்றாம்.

குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம். - பரிமேலழகர் 

பொருள் வல்லமையுடன், அதிகார பிரயோகம், துஸ்பிரயோகம்  கொண்டு தான் செய்ய நினைக்கும் நல்ல செயல்கள் முதற்கொண்டு தரித்திர செயல்கள் வரை செய்து முடிக்கும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியவைகளே. இது திருவாளர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, திருவளர்ச் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் சரி நடந்தேறும் அவலங்களே. 

சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் திரு. ரஜினி பேசும்போது அரசினை குற்றம் சொல்லாதீர்கள், அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள் என்று பேசி இருந்தார். அரசு என்றால் என்ன?, அதிகாரிகள் என்றால் என்ன? அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்தால் அரசு சரியாக நடக்கும். ஆனால் அரசின் கைப்பாவைகள், அல்லக்கைகள் தான் அதிகாரிகள் என்பது நாடறிந்த உண்மை. 

நீதித்துறை கூட அரசின் கையில், பொருள் நிறைந்தோர் வளைக்கும் வளைப்பில் தான் உள்ளது என்பதை எவர் சொல்லித் தெரிய வேண்டும்? ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது? மற்ற பணம் எல்லாம் பிறர் போட்ட பிச்சை என்றா எடுத்துக் கொள்வது? 

திரு ரஜினி சில மாற்றங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்கிறார். மாற்றங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணபலம் மட்டும் போதாது, அரசியல் பலமும் மிகவும் அவசியம். 

ஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு படைப்பின் மூலம்  என்ன சாதித்துவிட முடியும்? ஒரு படைப்பாளி தனது பையினை நிரப்புவதுடன், அல்லது பையினை காலியாக்குவதுடன்  அவனது பணி முடிந்துவிடுகிறது. சமூக அக்கறை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்று அறிக்கைகள், வெறும் போராட்டங்கள் நடத்தி காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எவர் இவர்களுக்கு சொல்லித் தந்தது? 

திரு. ரஜினி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது, அல்லது உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கம் உடைய ஒருவர் தைரியமாக கட்சி ஒன்றைத்  தொடங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும் 

அடுக்கி வரினும் – இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் – தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

எத்தனைத் தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய முயற்சித்தால் அந்த துன்பமே துன்படும். 

திரு. கமல் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழகத்தில் வெளிவரத் துடிக்கும் ஒரு விஸ்வரூபம் திரைப்படம், சமூகப் பிரச்சினையில் இருந்து  அரசியல் பிரச்சினையாகிக் கொண்டு வருகிறது. சக மனிதர்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல. ஒரு படைப்பாளி, அந்த அந்த சமூகத்தின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுபவன். சில நேரங்களில் ஓர வஞ்சகமாகவும் படைப்பாளி நடந்து கொள்வது உண்டு. ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகலாம், ஆனால் தடை எல்லாம் அவசியம் இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் உரிமையோ, அல்லது புறக்கணிக்கும் உரிமையோ படைப்பை பார்ப்பவர்களுக்கு உண்டு. அப்படியிருக்க சிறுபான்மையினர் என கூறிக்கொண்ட  அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சமூகத்தின் உணர்வுகள் குறித்தான அக்கறை அரசுக்கு இதுவரை இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்ட ஒரு அரசு குறித்து மக்களுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையினரின் வெறுப்பு அரசுக்கு இனிமேல் தான் புரிய வரும். 

இந்த ஒரு பிரச்சினைக்காக திரு. கமல் நாடு விட்டு நாடு எல்லாம் போக வேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்கள் என மாற்றிய பெருமை திரு. கமலுக்கு உண்டு. தனக்கு அரசியல் தெரியாது என்றும்  சினிமா உலகம் மட்டுமே தெரியும் என்பவர். சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மிக சிறந்த ஆட்சி அமைய, மக்கள் யாவரும் நலம் பெற இந்த மாற்றத்தை இப்போதே உருவாக்க வேண்டும். இதுவே தருணம். 

வாழ்க தமிழ். வாழ்க தமிழகம். 

----

இப்படியாக எழுதி வைத்துவிட்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் தோட்டத்து பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். 

தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவரிடம், விவசாயம் எல்லாம் எப்படி போகுது என்றே வினவினேன். 

என்னய்யா பண்ண சொல்றீங்க, நீங்க படிச்சி மேல்நாட்டுக்குப் போயீட்டீங்க, எப்போவாச்சும் வரீங்க இங்க மழை தண்ணீ இல்லாம, கரண்ட் இல்லாம நாங்க அன்றாடம் கஷ்ட ஜீவனம் நடத்துறோம் என்றார். 

இதற்கு எல்லாம் அரசு தானே காரணம் என்றேன். 

அட நக்கல் பண்ணாதீங்கயா, எல்லாமே நாம தான் காரணம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சது யாரு? வெளில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டது யாரு? 

ஒரு படைப்பாளியான எனக்கு அவரின் கேள்விகள் புதிய அர்த்தங்கள் தந்து கொண்டிருந்தன.

அதுதான் மாற்றங்கள் நாம ஏற்படுத்தலாமே என்றேன். 

தெரியாத பேயை விட, தெரிஞ்ச பேயே மேல் தானே என்றார். 

சரியென தலையாட்டிவிட்டு மிகவும் யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். குன்றேறி யானைப்போர்... மேசையில் எழுதி வைக்கப்பட்டு இருந்த கட்டுரை தற்போது குப்பைத் தொட்டியை அலங்கரித்து கொண்டு இருந்தது.  மக்கள் எப்போது மாற்றம் கொள்வார்கள் என்றே நான் யோசிக்கத் தொடங்கினேன். 



Tuesday 29 January 2013

பேய்கள் அரசாண்டால்

நான் தூங்கும்போது காலை மணி மூன்று இருக்கும். வெட்டியாக பொழுதைப் போக்கி கொண்டிருந்தேன். பின்னர் உறங்கினேன். 'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என பட்டென்று ஒருவர் எனது காதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டுப்  பார்த்தேன். சாமியார் நின்று கொண்டிருந்தார். என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மீண்டும் அதே வரியைச் சொன்னார். பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள். எனக்கு மிகவும் குழப்பமாகிப் போனது. அதெப்படி பேய்கள் அரசாள  முடியும்? சாத்திரங்கள் பிணம் தின்ன முடியும்? என்றே சாமியாரை நோக்கினேன். எனக்கு இவரிடம் பேசுவது அவ்வளவாக பிடிக்காது. அதன் காரணமாகவே அவர் பேசுவதை தடை செய்ய வழக்கு தொடரலாமா என எனது வக்கீலிடம்  மிகவும் விரிவாக பேசி அப்போதே நினைத்தேன்.

நீங்கள் இனிமேல் என்னிடம் பேசக் கூடாது என்று வழக்கு தொடர இருக்கிறேன் என்றேன். சாமியார் திகைக்காமல் சிரித்தார். இவ்வளவுதானா? தாராளமாக வெட்டியாய் இருக்கும் உனது வக்கீலுக்கு ஒரு வெட்டி வேலை ஒன்று கொடு என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவர் மீது வழக்கு போடுவேன் என்கிறேன், அது வெட்டி வேலை என்கிறாரே என நினைத்தேன்.

பக்தா, எனது பேச்சு உரிமையை நீ தடை செய்ய நினைத்தால் நான் எங்கேனும் பேசிக் கொண்டிருப்பது உனது காதில் விழும் வாய்ப்பு நேரடியாக இல்லாது போனாலும் மறைமுகமாக அமைந்துவிடும் என்றார். சரியென இவரின் மீதான தனிப்பட்ட வெறுப்புக்கு நமது மதிப்பை குறைத்து கொள்வானேன் என நினைத்து கொண்டு பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பற்றி கேட்டேன்.

உனது மனதினை எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் வைத்து இரு. தனிப்பட்ட நபர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் கொள்ளாதே. நல்ல சிந்தனைகளை தெய்வீக சிந்தனைகள் என்றும் கெட்ட சிந்தனைகளை பேய் சிந்தனைகள் என்றும் மனதில் ஓடும் எண்ணங்களை சொல்லலாம். பேய் சிந்தனைகள்  உன்னிடத்து அரசாட்சி செய்தால், அல்லது நாட்டியம் செய்தால் நீ கற்று கொண்ட வித்தைகள், நல்ல சாத்திரங்கள் எல்லாம் செத்தவைகளுக்கு சமானம், அவைகளால் ஒன்றும் உனக்கு உதவி செய்ய இயலாது. பல நூல் கற்றும் நீ களிமண் என்றார்.

அப்படி என்றால் இதில் இருந்து விடுதலை கிடையாதா? என்றேன். சாமியார் சிரித்தார். தெய்வீக சிந்தனைகளை நீ மெதுவாக மனதில் அழுத்தமாக பிடித்து கொள்ள இந்த பேய் சிந்தனைகள் விலகும். தவறு என தெரிந்தால் அவற்றை எல்லாம் புறந்தள்ள வேண்டும். தவறு என தெரிந்தும் அதையே பிடித்து கொண்டிருப்பதால் மேலும் மேலும் உனது மரியாதைகள் குறைந்து கொண்டே போகும். நீதி நியாயத்திற்கு உட்பட்டு வாழ்வதே மனித வாழ்வில் பெரும் சௌகரியமான செயல் எனவே தெய்வீக சிந்தனைகளை கைபற்று பேய் சிந்தனைகளிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்றார் சாமியார்.

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் நானும் சொல்லிப் பார்த்து கொண்டேன். எனக்கு சாமியார் அறிவியல் பற்றி பேசமாட்டாரா எனும் ஏக்கம் வந்து தொலைந்தது. தாங்கள் இந்த பூமி பற்றி எனக்குசொல்லித் தாருங்கள் என அவரது பேச்சை தடை செய்ய நினைத்த நான் வினவினேன். சாமியார் சிரித்தார்.

எனக்கு சங்கடமாகவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் சாமியார் சிரிப்பது எனக்கு புரியாமலே இருந்தது. நிச்சயம் அடுத்த முறை சொல்கிறேன் என எழுந்து சென்றார். என்னுள் இருந்த பேய் சிந்தனைகள் என்னை அழுத்திக் கொண்டிருந்தன. எனது சோம்பேறித்தனம் என்னை பார்த்து ஏளனமாக பார்த்தது. விழித்துக் கொண்டேன்.

மணி எட்டாகுது, வேலைக்குப் போகலையா என்றார் அம்மா. எட்டு மணி ஆகுதல, எழுப்பி இருக்கலாம்ல என அம்மாவை சத்தம் போட்டேன். பிணம் தின்னும் சாத்திரங்கள். வேகவேகமாக கிளம்பினாலும் மணி ஒன்பது தொட்டு இருந்தது. வேலை இடத்தை அடைந்தேன். தாமதமாக வந்ததற்காக என்னை எனது அதிகாரி ஏகத்திற்கும் என்னை சத்தம் போட்டார். பேய்களின் அரசாட்சி.

மாலை வந்தது, விஸ்வரூபம் எனும் திரைப்படம் பார்க்கலாம் என சென்றேன். நான் சென்றபோது அந்த திரையரங்கில் வேறு படம் போட்டு கொண்டிருந்தார்கள், அங்கே இருந்தவரிடம் என்னவென வினவினேன். இந்த படம் திரையிடக் கூடாது என்பது தெரியாதா, இந்த படத்திற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்றார். என்ன காரணம் என்றேன். இது கூட தெரியாமல் எதற்கு உயிர் வாழுற என்றார். எனக்கு என்ன சொல்வது என புரியவில்லை. ஒரு திரைப்படம் பற்றி நான் அறிந்து கொள்ளாமல் இருப்பது சமூக குற்றமா?

நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.  அப்போது இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் ஒருவர். மற்றொருவர் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் அரசு பற்றி ஏதோ பேய் அரசு என திட்டி விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார். நான் மனதிற்குள் சிரித்து கொண்டேன். அரசு, மக்கள், மதம், சாமியார் எல்லாம் மனிதர்கள் தானே! ஆனால் சாமியார் எனது கண்களுக்கு மிகவும் பிரமாண்டமாக தெரிந்தார்.

அம்மாவிடம் பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றேன். பிணத்தை தின்னா தின்னுட்டு போகுது. பேய்கள் அரசாண்டா ஆண்டுட்டு போகுது. நீ ஒழுங்கா இரு, அது போதும் என்றார். எனக்கு அம்மா, சாமியாரை விட மிகவும் பிரமாண்டமாகத் தெரிந்தார். 

Thursday 24 January 2013

இவனுங்க தீவிரவாதிங்கதான்

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்த  சில அமைப்புகள் முதலில் இதை, இஸ்லாமிய தீவிரவாதம்  தடை விதிக்க ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

விஸ்வரூபம் எனும் பெயரை அரபியே மொழி வடிவத்தில் அமைத்து இருக்கிறார் கமல். கமல் தெரிந்தே தான் எல்லாம் செய்து இருக்கிறார். கமல் குறி வைத்து இருப்பது ஒசாமா போன்ற வகையறாக்களை, சாதாரண முகம்மதுகளை அல்ல.

கமல்... எதற்கு அந்த அமைப்புகளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டுறீங்க? அவர்கள் என்ன தணிக்கை குழுவில் உறுப்பினர்களா? 

தமிழக அரசு தனது கோமாளித்தனத்தினை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது.படம் பார்த்து கலவரம் பண்ணும் அளவுக்கு மதி கெட்டு போனதா தமிழகம்? கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே! அவர்களை அல்லவா முடக்க வேண்டும்! இதெல்லாம் இருக்கட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்து தமிழக அரசே! 

ஒரு சில முஸ்லீம்களின் நடவடிக்கையினால் மொத்த முஸ்லீம்களுக்கும் கெட்ட பெயர் என்பதை சராசரி முஸ்லீம்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் இது குறித்து கேட்டால் முஸ்லீம்கள் பற்றிய கண்ணோட்டம் வேறு மாதிரிதான் இருக்கிறது. 

சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு இடத்தில் சில முஸ்லீம்கள் 'இது எங்க ஏரியா, இப்படி உடை உடுத்தாதே, இங்கே குடிக்காதே என போவோர் வருவோர்களிடம் வம்பு செய்து இருக்கின்றனர்'. இப்படி இவர்கள் நடந்து கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் கமல் சொன்ன கலாச்சார தீவிரவாதம். நிறைய நபர்கள் இங்கிலாந்து அரசின் உதவித் தொகையின் மூலம் பிழைப்பு நடத்தி வருபவர்கள். 'உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள்' இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

சல்மான் ருஷ்டியை மிரட்டிய அதே கும்பல்களின் வழித் தோன்றல்கள் தான் இவர்கள் எல்லாம். படைப்பாளியை மதம் என்கிற எந்தவொரு மதம் பிடித்த பெயரில் மிரட்டும் எவரும் தீவிரவாதிதான். 

'நான் எழுதியதை நீங்கள்  தடை செய்ய துடித்தால் நீங்கள் மதிக்கும் மத நூல்களை எல்லாம் தடை செய்ய நான் எதற்கு துடிக்க கூடாது என ஒவ்வொரு படைப்பாளியும் உள்ள குமுறல்களுடன் தான் இருப்பான்' 

இப்பொழுதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கைது என முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கருத்து சுதந்திரம் என்பதன் சுதந்திர அளவு எதுவென புரியவில்லை.

கமல், தான் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு வியாபாரி என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார். பீத்தினா ஊத்திக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும். கர்வம்தனை வெளிக்காட்டாமல் பணிவுடன் பாசாங்கு போடுபவரைத்தான் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. தீவிரவாதிகளை விட மிதவாதிகளாக வேசம் போடுபவர்களைத்தான் உலகம் கொண்டாடி வருகிறது. 

வாளால் வெட்டுபவனை விட 
வார்த்தைகளால் வெட்டுபவன் 
மிக மிக கொடியவன்!

உலகம் இப்போது பழைய புதினத்தின் அடிப்படையில் புதிதாக வரலாறு எழுதிக் கொண்டு இருக்கிறது. 

விஸ்வரூபம் - திரைப்படம் வெளியாகும் முன்னரே ஒரு வெற்றி சித்திரம் தான். சிலருக்கு கண்களில் எரிச்சல் தந்து இருக்கிறது, சிலருக்கு கண்களில் குளிர்ச்சி தந்து இருக்கிறது. 

படத்தின் கதை இந்த வரிகளில் ஒளிந்து இருக்கிறது. கணவனின் பழைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் முழுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் புதுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் சுயரூபம் 

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா!


விஸ்வரூபம் 

அடுத்து எவராவது 'ஔரங்கசீப்' என்ற படம் எடுக்கட்டும்! 

Friday 5 October 2012

சாட்டை வலிக்கிறது

ஒரு படைப்பாளியின் நோக்கம் என்ன? ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்ன? சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் படைப்பாளிகள் என்னதான் செய்ய முயற்சி செய்கிறார்கள்? ஒரு திரைப்படத்தின் நோக்கம் வணிக ரீதியாக லாபம் அடைவது ஒன்றுதான். மற்றபடி எல்லாம் சமூகத்திற்கு இதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம், அதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் கண்துடைப்புதான். எந்த ஒரு படைப்பாளியும் வெட்கம் கொள்ள வேண்டியது, வெட்டியாக படம் பிடிப்பதும், வெட்டியாக எழுதுவதும் தான். 

சமூக அவலங்களை தங்களது படைப்புகள் மூலம் துடைத்து எறிந்து விடலாம் என்றோ, சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகிறேன் என தங்களது திறமைகளை பறைசாற்றிக் கொள்ள இவர்கள் கையாள்வது ஒரு ஊடகம். அவ்வளவுதான். 

சினிமா என்பது ஒரு தொழில். அதில் சேவை எல்லாம் செய்ய முடியாது. ஆனால் சேவை செய்வது போல நடிக்கலாம். நடித்து மக்களை கண்ணீர் விட வைக்கலாம். 'உச்' கொட்ட வைக்கலாம். படம் பார்த்து கெட்டுப் போனேன் என சொன்னவர்கள் ஏராளம். படம் பார்த்து திருந்தினேன் என சொன்னவர்கள் மிக மிக  குறைவு. ஒரு குடும்பம் திருந்தினாலே போதும் என்கிற முனைப்பு எல்லாம் திரைப்படங்களுக்கு சரிபட்டு வராது. அப்படி என்னதான் இந்த திரைப்படங்கள் சொல்ல வருகின்றன. 

அரசு பள்ளி ஒன்றின் இயலாத தன்மையை, ஒரே ஒரு ஆசிரியர் அடியோடு மாற்றி கட்டுகிறார். இது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை எல்லாரும் அறிவார்கள். அதைத்தான் இந்த சாட்டை எனும் திரைப்படம் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் செய்து முடித்து இருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது ஒரு கற்பனையான உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அவலக் காதல். இதைத் தாண்டி படிக்க வேண்டும் எனும் வேகம் பள்ளி மாணவர்களிடம் வர வேண்டும் என்பதை இந்த சாட்டை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கலாம். அது இந்த கற்பனை உலகத்துக்கு இன்னமும் வலிமை சேர்த்து இருக்கும். 

அத்தனை மாணவர்கள் திருந்த ஒரு ஆசிரியர் மட்டும் பொறாமை உணர்வுடன் வலம் வருகிறார். ஆஹா மிகவும் சாமர்த்தியமாக கடைசியில் மனம் மாறுகிறார். படம் ஹீரோயிசம் சொல்லி சென்றதே தவறே அடிப்படை பிரச்சனைகளை தொட்டு செல்லாதது பெரும் குறைதான். 

நான் படித்த பள்ளி அரசு பள்ளிதான். அந்த ஊரில் தனியார் பள்ளி ஒன்றும் உண்டு. இரண்டு பள்ளிக்கும் எப்போதுமே ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். தனியார் பள்ளியின் சதவிகிதம் அரசு பள்ளியின் சதவிகிதத்தைவிட கொஞ்சம் கூடத்தான். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் உரிமை இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்க்கும் தன்மை அடியோடு குறைவு. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயப்படத்தான் செய்வார்கள். போராடி படித்தும் அந்த பள்ளியின் முதல் மாணவன் பெற்றது வெறும் எழுபது இரண்டு சதவிகிதமே. இதற்கு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்றே இன்றும் நினைத்து பார்க்கிறேன். நான் படித்து களைத்ததை விட விளையாடி களைத்த நேரம் அதிகம். 

தன்னார்வம் இல்லாத எவரும் முன்னேறியதாகவோ, தம்மில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவராகவோ இதுவரை எந்த வரலாறும் எழுதி வைத்தது இல்லை.  

இந்த திரைப்படம் பலருக்கு தன்னார்வம் ஏற்பட வைக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால் தன்னில் ஒரு தன்னார்வம் இல்லாமல் போனதுதான் பெரும் குறை. சினிமா எப்போதும் சினிமா என்ற வட்டத்திற்குள்  மட்டுமே இருக்கட்டும். அது சமூகத்தை திருத்திவிடும் எனும் கனவு காண்போர்களுக்கு விழும் சாட்டை அடி பெரிய வலியைத்தான் தரும். 

படம் பார்த்த பின்னரும் திருந்தாத சமூகம் கண்டு இந்த படத்தை இயக்கிய, நடித்த, தயாரித்த இயக்குனர்களுக்கு வலிக்குமா?! 

Wednesday 22 February 2012

ரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை

ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது அத்தனை சுலபமான வேலை அல்ல. அதே போல ஒரு எழுத்தை ரீமேக் செய்வதும் அத்தனை சுலபமான வேலை அல்ல. சிந்தனை மட்டுமே இங்கே அதிகம் வேலை செய்வதில்லை. மற்றபடி பார்த்து எழுதுவதற்கான புலமை, பார்த்ததை மீண்டும் அப்படியே செய்ய  கட்டாயம் திறமை வேண்டும்.

டப்பிங், ரீமேக் என்பதற்கு வேறுபாடு உண்டு. டப்பிங் படங்களில் வசனங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும். ரீமேக் படங்களில் மொத்த விசயங்களையும் மாற்றி செய்யலாம், ஆனால் மூலபடத்தினை ஒட்டியதாக அமையவேண்டும் எனும் நிர்பந்தனைகள் ரீமேக் படத்திற்கு உண்டு. இன்றைய தினத்தில் ரீமேக் படங்கள் மிகவும் அதிகம் தமிழ் சினிமாவில் எட்டி பார்த்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் 'பெரிய' நடிகர்கள் என சொல்லப்படுபவர்களே இந்த ரீமேக் கலாச்சாரத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் ஆங்கிலப்படத்தை, இந்திப்படத்தை, தெலுங்கு படத்தை, மலையாள படத்தை ரீமேக் செய்வதோடு மட்டுமில்லாமல் பழைய தமிழ் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதைபோல தமிழ் படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எல்லா மொழிகளிலும் எடுத்து வெளியிடப்படும் திரைப்படங்கள் வெகு சில உண்டு. இப்படி ரீமேக் செய்வது இவர்களிடம் சிந்தனைகள் வற்றி போய்விட்டன என்பதையே காட்டுகிறது என சொல்வோர் உண்டு. 'அரைத்த மாவை அரைக்கும் மசாலா, காதல் கதைகள்' எல்லாமே ஒரு விதத்தில் ரீமேக் படம் தான் என்பதை இந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வது இல்லை.

ரீமேக் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றவையா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரு மொழியில் உள்ள ரசனை மற்ற மொழியில் இருப்பது இல்லை. பொதுவாக மலையாள படங்களை தமிழில் அப்படியே ரீமேக் செய்தால் ஒரு படம் கூட ஓடாது என உறுதியாக சொல்லலாம். மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களை தமிழுக்கு என்றே மசாலா தடவி விற்றால் தான் வெற்றி பெறும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.

ரீமிக்ஸ் பாடல்கள் அதைவிட மிகவும் கொடுமை என்போர் சிலர். மூல பாடலின் ஜீவனை ஒட்டு மொத்தமாக கொன்றுபோடும் அளவிற்கு 'டன் டன்' என இந்த காலத்து இசைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அவை வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெய்வீக பாடல்கள் முதற்கொண்டு எல்லாமே இன்று ரீமிக்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் வெகுவாக ஜனங்களால் ரசிக்கப்படுவது என்பது ஓரளவுக்கு உண்மைதான். பாரதியார் கவிதைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தனித்தன்மை என்பதை பொறுத்தே ஒருவரின் திறமை பெரிதளவு பேசப்படுகிறது. தனக்கென ஒரு அடையாளத்தை காட்டாத எவருமே உலகில் பெரிதாக சாதித்தது இல்லை. ஒரிஜினாலிட்டி, நாவல்டி என சொல்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் எல்லா துறைகளுமே கிட்டத்தட்ட மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. எதற்கு கிடந்து மெனக்கெடுவானேன். சிம்பிளா ஒரு விசயத்தை செய்றதை விட்டுட்டு எதுக்கு காம்ப்ளிகேட் பண்ணனும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உடனடி வெற்றிதான் இப்போதைய இலக்கு. உடனடி வெற்றி உடனடியாக மறைந்து போய்விடுகிறது, அது காலத்திற்கும் நிற்பது இல்லை.

அதைப்போலவே வலைப்பூக்கள் எழுதும் பலரிடம் ஒரிஜினாலிட்டி இருப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நிலவி வருவது தவிர்க்க இயலாதது. அவசர உலகில் நின்று நிதானமாக எழுதும் நிலை எல்லாம் வெகு குறைவானவர்களிடமே இருக்கிறது என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.

நாவல்கள், கவிதைகள், உபநிடதங்கள், வேதங்கள் என முன்னோர்கள் எழுதியவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். இங்கே மூலத்தினை சிதைக்காமல் எழுதுவது மிகவும் அவசியம் ஆகிறது. இப்படி பல காலத்திற்கு முன்னாள் எழுதியவகைகள் திரும்பவும் எழுதுவதால் எழுத்துகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன, சிந்தனைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் ஆகிவிடாது. அதைப்போலவே ரீமேக், ரீமிக்ஸ் போன்றவைகள் ஒரு துறையை சீரழித்து கொண்டிருக்கின்றன என்பது ஆகாது. பழையனவாகிய  அவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கொண்டு வருகின்றன என்றுதான் அர்த்தம் கொள்ளலாம். 

Thursday 26 January 2012

நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி

ஹிட்ஸ் ஹிட்ஸ் ஹிட்ஸ்! 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களா என்பது பற்றிய விவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் தரமிக்க பதிவுகளை எழுதுகிறார்களா என்பது பற்றிய கலந்துரையாடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

எந்த பதிவர் எப்படி தலைப்பு வைத்து எழுதி எப்படி ஹிட்ஸ் அள்ளி குவிக்கிறார் என்பதுதான் இன்றைய விவாதம் எல்லாம். ஹிட்ஸ் வைத்து வீடா கட்டப் போகிறோம் என அறைகூவல் விடுத்தாலும் ஹிட்ஸ் என்பது ஒரு அங்கீகாரத்தின் அடையாளம். 

எழுத்துகள் அத்தனை எளிதாக எவரையும் வசீகரிப்பதில்லை. எந்த ஒரு எழுத்தாளரும் அனைத்து சமூகத்தையும் தன்னருகே ஒருங்கே நிறுத்தியது இல்லை இதுவரை. பிரிவினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் இவரது ரசிகன் என ஒருவர் சொல்லும்போதே மற்றவர்களை ரசிக்கும் தன்மை குறைந்தவராகவே தென்படுகிறார். 

எழுதுவது அவரவர் உரிமை. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்பதை எழுதுபவரே தீர்மானிக்கிறார். 

இப்பொழுதெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது. இதை மறுமொழி இடுபவர்க்கு என வெப்துனியா தனது மறுமொழி இணைப்புக்கு முன்னர் எழுதி இருக்கிறது. 

//விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதே விசயத்தை பதிவு எழுதுபவர்கள் மீதும் ஒருவர் தொடங்கலாம் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. 

இணையத்தில் நல்ல விசயங்களை மட்டுமே வாசிக்க நினைப்பவர்கள் கையில் தான் மவுஸ் உள்ளது. இவர்கள் அவ்வாறு செய்யாமல் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசி பொழுதை வீணடிக்கிறார்கள் என்கிறார் இணையதளத்தை அதிகமாக உபயோகிக்கும் ஒருவர். 

மேலும் இணையதளத்திற்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகிவிட்டு இதற்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள் என பிறருக்கு அதே அடிமைத்தனத்தில் இருந்து கொண்டே எச்சரிக்கை விடுப்பது குடிகாரன் பிறரை குடிக்காதே என அறிவுரை சொல்வது போன்றதுதான். அவரவருக்கு தெரியும் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது என. எந்த போதையும் கண்களை மறைக்கும். 

இந்த ஹிட்ஸ் பற்றி என்ன சொல்வது?

எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவுக்கு தமிழ்வெளி மூலம் வந்த வாசகர்கள் என ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலே காட்டியது. அதைவிட கூகுள் பக்கம் பார்வைகள் ஒரே நாளில் நான்காயிரம் அருகில் என காட்டியது. இதுவரை எந்த ஒரு பதிவுக்கும் இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. இத்தனைக்கும் எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவு எனது கணக்கில் ஒரு கமர்சியல் பதிவு. அவ்வப்போது ஒரு கமர்சியல் பதிவு எழுதுவது வாடிக்கை.



இப்படி எந்த பதிவு எத்தனை பேரால் வாசிக்கப்பட்டது என்பது பெரிய விசயமாக பேசப்பட்டாலும் அதில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என பார்த்தால் சைபர். சைபர் என்றால் இருவேறு அர்த்தங்களும் உண்டு. 

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடித்து இருக்கிறது. பிடித்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனக்கு அதாவது தனக்கு தவறென தெரிந்தால் எதிர்த்து பதிவு போடுகிறார்கள். இவர்களது கருத்து பரிமாற்றங்கள் தனிமனித தாக்குதல் வரை சென்று அச்சத்தை விளைவிக்கிறது. 

ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள் 

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள். 

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள். 

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள். 

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது. 

Monday 23 January 2012

எந்திரனை மிஞ்சிய நண்பன்

ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் கதையமைப்பில் அல்ல, அது எத்தனை தூரம் வசூலை அள்ளி குவிக்கிறது என்பதை பொருத்துத்தான் அமைகிறது என்பதை சமீப காலங்களில் அறிந்து கொண்ட திரையுலகினர் படம் ஐம்பது நாள் ஓடுகிறதா, நூறு நாள் ஓடுகிறதா, வெள்ளிவிழா கொண்டாடுகிறதா என்பதெல்லாம் பற்றி கவலைப்படுவதில்லை. எவ்வளவு வசூல் வந்தது என்பதுதான் இப்போதைய வெற்றி கணக்கு. அதன்படி பார்க்கும்போது பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் இயக்கம் படங்கள் 'குப்பைகளாக' இருந்தாலும் வெற்றி பெற்ற படங்களாகவே ஆகிவிடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் விளம்பரங்கள். ஒரு கரகாட்டகாரன், ஒரு சந்திரமுகி என பல நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படங்கள் என விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போதெல்லாம் தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் படங்கள் அடுத்த நாளிலேயே இணையதளங்களில் எளிதாக கிடைத்துவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் தமிழ் திரைப்படங்கள் வசூல் சாதனை புரிந்து கொண்டுதான் இருக்கின்றன. 

எந்திரன் படம் தயாரிக்கப்பட்ட போது படத்தை பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த நண்பன் படம் அப்படி ஒன்றும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமையவில்லை. இதற்கு காரணம் இது ஒரு இந்தி படத்தின் தழுவல். 'ஈ அடிச்சான் காப்பி' என்பது போல இந்த படத்தை வெகு நேர்த்தியாகவே சங்கர் காப்பி அடித்துவிட்டார் எனும் பரவலான குற்றச்சாட்டு உண்டு. அது அவரது திறமைக்கு ஒரு சான்று என சான்றிதழ் தருபவர்கள் உண்டு. 

நண்பன் ஒரு ஈ அடிச்சான் காப்பி என்றாலும் அது மக்களிடம் நல்ல பெயரை வாங்கி இருப்பதாகவே பல இணையதளங்கள் செய்திகளை எழுதி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. அதிகாரப் பூர்வமாக அறிவித்தலில் கூட பல குளறுபடிகள் இருக்கும் என்றாலும் அது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு என்றே பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த நண்பன் படம் சரியாக வசூல் குவிக்கவில்லை என ஒரு பக்கம் ஒரு தரப்பு எழுதுவதும், அதே வேளையில் எந்திரனை மிஞ்சிய படம் என மறு சாரார் எழுதுவது என இந்த நண்பன் வசூல் குறித்த உண்மை நிலவரம் இதுவரை வெளிவரவில்லை. மிக சிறந்த படங்கள் அனைத்துமே வசூலில் அள்ளி குவிப்பதில்லை என்பதுதான் தமிழக திரையுலக வரலாறு.  

விஜய் அவர்களுக்கு நிறைய கனவுகள் இருப்பது பாராட்டப்பட வேண்டியதுதான். அரசியலில் இறங்க வேண்டும் எனும் அவரது எண்ணம் நல்லதுதான். இதற்கான முயற்சிகளை அவர் செய்கிறாரோ இல்லையோ அவரது தந்தை மிகவும் எச்சரிக்கையுடன் அதற்கான விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு திரையுலகில் வெற்றியை மிகவும் முக்கியமானதாகவே விஜய் கருதுகிறார். தனுஷ், சிம்பு என அடுத்த கட்ட நடிகர்கள் பலமுகங்களுடன் திரையுலகை ஆக்கிரமித்து கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் விஜய் தொடர்ந்து வெற்றிப்படங்கள் தராது போனால் அவரது கனவுகள் தகர்க்கப்பட்டுவிடும் என்பதால் நண்பன் போன்ற படங்களில் எல்லாம் விஜய் நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்றே திரையுலகினர் கருதுகிறார்கள். 

விக்கிபீடியா ஒருநாள் செயல்படாமல் இருக்கப்போவதை கண்டு ஒருவர் 'அப்பாடா இனிமேல் நான் பொய்யான தகவல்களை வாசிக்கவோ, சேகரிக்கவோ வேண்டியதில்லை' என நகைச்சுவையாக எழுதினார். இந்த விக்கிப்பீடியாவில் வரும் பல செய்திகள் நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்தெல்லாம் விசயங்களை சேகரித்து வெளியிடுகிறது. இந்த விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட விபரங்களில் படி ஒரு மூன்று படங்களின் (எந்திரன் ஏழு நாட்கள், நண்பன் நான்கு நாட்கள், மங்காத்தா ஐந்து நாட்கள்) வசூலைப் பார்ப்போம். இதன் கணக்குப்படி பார்த்தால் நண்பன் எந்திரனை மிஞ்சிவிடும். மேலும் தயாரிப்பு செலவு என பார்த்தால் நண்பன் பெற்று இருப்பது எந்திரனை விட பெரும் வெற்றிதான். எனவே இனிமேல் விஜய் தான் 'சூப்பர் ஸ்டார்' என அறிவிக்கப்பட வேண்டும். 


பொய்யான தகவல்களை தருவதும், கவர்ச்சிமிக்க தலைப்புகளில் எழுதுவதும் மீடியாக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதில் நாமும் கரைவோம்.


Wednesday 28 December 2011

மயக்கம் என்ன வியக்கும் வண்ணம்

சார், எதற்கு ஒரு மாதிரி இருக்கீங்க?

வாழ்க்கையே வெறுத்து போச்சுயா, எதுக்கு இந்த உசிரை பிடிச்சி இருக்கணும்னு தோணுது.

சார், எதுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா உங்க பொண்டாட்டி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவாங்க, இப்படி விரக்தியா எல்லாம் பேசமாட்டீங்க.

வெங்காயம், அவளால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து உட்காந்துருக்கேன், கல்யாணமாம் கல்யாணம், கிளம்பிரு இல்லை கடிச்சி வைச்சிருவேன்.

சில நேரங்களில் பல விசயங்கள் மிகவும் அதிகபடுத்தபட்டு பேசபடுகிறதோ எனும் ஒரு எண்ணம் தானாக எழுவது உண்டு. பிறர் நமக்கு ஊக்க சக்தியாக இருந்தாலும், நம்முள் ஒரு ஊக்கமும், உந்துதலும் இல்லையெனில் நம்மால் ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பதுதான் நான் கண்டு கொண்ட கற்று கொண்ட பாடம். எதற்கு இந்த எண்ணம் சிந்தனை எழுந்தது எனில் இந்த விசயத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து ஒரு காந்தி மட்டும் ஏன் உருவானார் என்பதுதான்?

மயக்கம் என்ன படம் சரியில்லை என்று கேள்விபட்டேன், ஆனால் விமர்சனம் எதுவும் படிக்கவில்லை. படம் பார்க்க அமர்ந்ததும் படத்தின் வேகம் சற்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனாலும் மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவே காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அதுவும் 'ஓட ஓட' எனும் பாடலில் 'சாமி என்ன பங்கம் பண்ணுது' எனும் காட்சி அமைப்பில் சாமி சிலைகள் தலையை தொங்கபோட்டதை கண்டு அதிகமாகவே சிரிப்பு வந்தது. இப்படியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும், அவரது நண்பனும் அழுத பின்னர் 'ரொம்பவே அழுதுட்டோம்' என சொல்லும் போது சிரிப்பு வந்து சேர்ந்தது.

ஒரு படைப்பு என்பது என்ன? அதை படைப்பவரின் வலி எப்படி இருக்கும் என்பதை பிறர் எழுத்து மூலம் அறிந்த நான் இந்த படத்தை பார்த்துதான் காவியமாக தெரிந்து கொண்டேன். நான் ஆராய்ச்சி செய்தபோது நான் எனது ஆராய்ச்சி பற்றி வெளியிட இருந்த அதே விசயத்தை, ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது குறித்து ஏமாற்றம் மட்டுமே என்னால் அடைய முடிந்தது. அங்கே வேலைக்கு என ஒரு வருடம் முன்னர் தான் விண்ணப்பம் போட்டு இருந்தேன். வெளியிட்ட ஆராய்ச்சியில் எல்லா வேலைகளும் அவர்கள் செய்தது, ஆனால் சிந்தனை மட்டும் என்னுடையது. அதே வேளையில் ஆராய்ச்சியில் ஒரே சிந்தனை பலருக்கு வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நாம் செய்து இருக்கலாம் என்கிற ஒரு ஏக்கம் இருப்பது இயல்புதான். அதே வேளையில் எவர் செய்தால் என்ன எனும் பக்குவம் அந்த நாளில் இருந்து எனக்குள் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் புன்னகையுடன் கடக்க பழகி  கொண்டேன். அதைப் போல இந்த எழுத்துகளை திருடினேன், தாரளாம திருடங்க என பதிவுகளும் போட்டு இருக்கிறேன். ஆனால் தனது வேலையை மட்டுமே நம்பும், உயிராக போற்றும் மனிதரின் வலிகள் மிகவும் அதிகம் தான்.

ஒரு திறமைசாலியின் திறமையை எவராலும் அடைத்து வைக்க முடியாது. ஒரு படம் எடுத்த அந்த கதாநாயகன் அதைப்போல பல படங்கள் எடுக்க இயலும், ஆனால் மனம் உடைந்து போகும் பலவீனனாக காட்டி இருப்பது யதார்த்தம். பலர் தங்களது திறமைகளை உணராமலே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் எடுத்துகாட்டு. உடைஞ்சி போய்ட்டேன் என எத்தனை தடவை எத்தனை விசயங்களில் பேசி இருப்போம். நமக்குள் ஒரு உந்துதல் இல்லையெனில் நம்மால் முன்னேறவே முடியாது. படம் எடுத்தது கதாநாயகன், படத்தை அனுப்பி வைத்தது மனைவி. சில எதிர்மறை விசயங்கள் படத்தில் உண்டு, அதை பற்றி எதற்கு பேசுவானேன்.

ஒரு மனிதன் போராடி சாதிக்கும் போது நமக்குள் கண்ணீர் வந்து சேர்வது இயல்புதான். அதற்கு பின்னணி காரணங்கள் என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இந்த படத்தை பற்றி இன்னும் இன்னும் எழுதி கொண்டே போகலாம். பல விசயங்கள் கனவாக இருக்கும் என நினைத்தபோது நான் என்ன சீரியலா எடுத்துட்டு இருக்கேன் என இயக்குனர் காட்சிகள் மூலம் நம்மை கேள்வி கேட்பது மிகவும் அருமை.

மயக்கம் என்ன என்கிற வார்த்தையை படத்தின் தலைப்பாக போட்டுவிட்டு மௌனம் என்ன என கதாநாயகனின் மனைவி மூலம் நிறையவே பேசி இருக்கிறார். சில பல நேரங்களில் தவறிப் போகும் மனிதர்களை மன்னித்து அவர்களை நல்ல பாதையில் செல்ல வைக்க இயலும் எனும் இயல்பான வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த மயக்கம் என்ன பலருக்கும் மயக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.


Wednesday 14 December 2011

கன்னத்தில் முத்தமிட்டால் கறை படியும்

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கேட்டுக் கொண்டே இருக்கையில் இந்த படத்தை பார்க்கவே இல்லையே எனும் ஒரு வேண்டாத ஆசை வந்து சேர்ந்தது. இந்த படம் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

ஈழத்து தமிழர்கள் பற்றிய படம் என்றெல்லாம் கேள்விபட்டது மட்டுமே உண்டு. பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசக் கேட்டது உண்டு. விடைகொடு எங்கள் நாடே எனும் பாடல் அத்தனை துயரங்களை சொல்லி செல்லும்.

அப்படி என்னதான் படம் என பார்த்தால் ஒரு எழுத்தாளரும், ஒரு குழந்தையும் பற்றிய கதை. ஈழத்து நிகழ்வுகளை பற்றி கதை கதையாக பேசி ஈழம் வெளிநாடுகளில் மலர்ந்து விட்டது என கூவி கோடிக்கணக்கான  மக்களின் கனவுகள் சிதைந்து போன தேசமாக இப்போது இலங்கை இருந்து வருகிறது. இந்த இலங்கை அற்புத தேசம் எனவும் சுற்றுலா தளங்களில் மிகவும் சிறந்தது எனவும் சொல்லப்படுவது உண்டு.

ஒரு குழந்தையின் ஏக்கம் தனை படம் முழுக்க காட்டப்பட்டு சினிமா நடிக்க வேண்டும் என, வீட்டுக்கு பயந்து என வீட்டை ஓடிப் போகும் குழந்தைகள் போல தாயை தேடி அகதி முகாம் செல்லும் வரை என குழந்தையின் மன நிலையை இளங்கன்று பயம் அறியாது என காட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

ஒரு சாதாரண மனிதருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தற்கொலை மனிதராக காட்டியது திடுக்கிடத்தான் செய்தது. ஒரு கிராமத்தில் வாழும் பூசாரி அந்த இறைவன் வந்து காப்பற்ற மாட்டாரா எனும் ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்தே இருக்கும். இப்படி காட்சிக்கு காட்சி என ஒரு திரைப்படம் கவிதையாக வடிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது. எட்டு ஆண்டுகள் முன்னர் கள்ளத்தோணி பிடிச்சி வந்தேன் என கண்ணீர் கதையை சொன்ன நண்பரை கட்டிபிடித்து என்ன செய்யலாம் என கேட்டபோது இங்கே இருந்தே அவங்களுக்கு சாவு மணி அடிக்கலாம் என்றார். அவரை அதற்கு பின்னர் நான் காணவே இல்லை. ஈழத்தில் நடந்த விசயங்கள் சாதாரண விசயங்கள் என எவரேனும் சொன்னால் அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், இடுக்கண் வருங்கால் நகுக என இளித்து கொண்டு போக கூடியவர்கள். ஆனால் வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை. தினமும் எவரும் இந்த நிகழ்வுகள் நினைத்து அழுது கொண்டிருக்கவும் இல்லை. இதுதான் பூமி கண்ட கோட்பாடு. செத்தாருக்கு சொல்லி அழு. அழுதவுடன் எல்லாம் தீர்ந்தா போய்விடுகிறது! வடுக்கள் ஏற்பட வழியில்லா ரணம் ஆறிட வழி இல்லை. சொந்த மண்ணை கீறி எரிதழலில் போட்டு பொசுக்கி போன பின்னர், எதுவுமே நடக்கவில்லை என்றா இளைய தலைமுறை வரலாறு கற்று கொள்ளும்? வெறுப்பு எப்படி எல்லாம் வளர்ந்து தொலைக்கிறது!!!

இப்பொழுது ஈழம் எப்படி இருக்கும்? சிங்களவர்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என இருந்தாலும் சிங்களவர்கள் எனும் நினைப்பே தமிழர்களுக்கு ஒருவித எரிச்சல் தந்துவிட்டு போகிறது. எனக்கு தெரிந்த சிங்கள நண்பரிடம் பேசும்போது வார்த்தை தடுமாறுகிறது. அவரோ சகஜமாகவே பேசுவார், என்ன செய்வது சில கோணங்கி புத்தி உடையவர்களால் மொத்த இனமே வேறுபாட்டினை கொள்கிறது என்பார். ஆனால் சில கோணங்கி புத்தி இல்லை, ஒரு இனமே கோணங்கி புத்தி உடையதாக அல்லவா இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் புலம் பெயர்ந்து வந்ததால் அந்த உணர்வு இருக்க வாய்ப்பு இல்லை என நகர்ந்து விடுவேன். அதுவும் எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன, எத்தனை சிறார்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இது போன்ற காணொளி எல்லாம் இணையதளத்தில் உலவியபோது அதை பார்க்கும் தைரியம் எதுவுமே இல்லை. மருத்துவ உதவி செய்யப்போன புலம் பெயர் தமிழர் சொன்ன கதையை கேட்டு, போர் நிறுத்தம் செய்ய கூறி போராட்டம் நடத்தப்பட்ட வெளிநாடுகளில் கூடிய கூட்டம் கண்டு ஈழம் மலர்ந்து விடும் என்றே கனவுகள் உண்டு. ஆனால்... ஐம்பது வருட போராட்டம் கண்டது... இப்பொழுது இலங்கை அரசு மீதான நடவடிக்கைகள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஈழம் பற்றிய அக்கறை இனி எவருக்கும் வரப்போவது இல்லையோ! எல்லாம் போச்சு! என்றுதான் என்னிடம் ஒரு நண்பர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி வந்ததும் சொன்னார். ஒரு நல்ல இலக்கியம் ஒன்றை தமிழுக்கு படையுங்கள் என ஒரு நண்பர் கேட்டார். கதைகளும், காவியங்களும் எவருக்கு தேவை, கண்ணீருடன் வாழ்ந்து மடியும் இனங்கள் உள்ளபோது என இருந்தாலும் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு இருப்பது வேதனைக்கு உரியது. கறைபடிந்த வரலாறாக மாறக்கூடாது.

இலங்கைக்கு சென்று வரும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டு கொள்வதோடு, அங்கே செல்வதால் பயம் இல்லையா என்று கேட்டால் 'எனது தாய் மண்' என்றே பெருமிதம் கொள்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன.

இருபது வருடங்கள் முன்னால் எழுதிய கவிதை தொலைந்து போய்விட்டது. மயானத்தில் கூட அமைதி, அந்த அமைதியையா இந்த போர் வேண்டி நிற்கிறது என வரும் அந்த கவிதை. போர்  எல்லாம் அமைதிக்கான வழியே இல்லை, இருப்பினும் எதிரிகளின் கன்னத்தில் முத்தமிட்டால் நமது உதடுகளில் கறைபடிந்து விடுவதை துடைக்க வழிதான் தெரிவதில்லை. 

Tuesday 6 December 2011

போராளி பேரொளி

சமீபத்தில் திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் பேச்சுதனை கேட்க நேரிட்டது. அந்த பேச்சில் இருந்து அவருக்கும் ஆனந்த விகடனுக்கும் அவரது படம் சம்பந்தமாக மன வருத்தம் என புரிந்து கொள்ள முடிந்தது. எதுக்கு விமர்சனம் எழுதுற, எதுக்கு மார்க் போடுற என ஆனந்த விகடனை பிடி பிடி என பிடித்துவிட்டார். உன்னால ஒரு நல்ல தமிழ் படம் எடுக்க முடியுமா? உன்னால சின்னத்திரையிலதான் எல்லாரையும் அழ வைக்க முடியும், ஒரு படம் எடுத்தியே அது எப்படி இருந்துச்சி என ஏகத்துக்கும் பேசிவிட்டார், ஏசிவிட்டார்.

விமர்சனம் என்பது என்ன? ஒருவரின் படைப்பை, செயலை உண்மையிலேயே மனம் திறந்து குறைகளை மட்டுமே சொல்லாமல் நிறைகளையும் சுட்டி காட்டுவதுதான். பெரும்பாலான விமர்சனங்கள் எப்படி அமைகிறது என்பது அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்து அமைகிறது. ஒருவர் இப்படி என்பார், மற்றொருவர் அப்படி என்பார். இந்த இரண்டையும் கேட்டுவிட்டு படைப்பை பார்ப்பவர் இப்படி அப்படி என்பார். 

'போராளி' என பேரு வைச்சிருக்காங்களே அப்படின்னு நினைச்சா, நட்பு பற்றிய கதை என அரசல் புரசலாக தெரிய ஆரம்பித்தது. பொதுவாகவே முழு விமர்சனங்கள் படம் பார்க்கும் முன்னர் நான் படிப்பது இல்லை. அதைப்போல முழு விமர்சனங்கள் படத்தைப் பற்றி நான் எழுதுவதும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் வரிகள் தான். 

போராளி என்பவர் யார்? போராளி என்பவர் சொந்த பந்தம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கமால் தனது சமூகத்திற்காக பாடுபடுவர். அதாவது சொந்தங்களும் அதில் உள்ளடக்கம். இந்த போராளிகள் தனக்கென குடும்பத்தை வைத்து இருந்தாலும், இவர்களது போராட்டம் எல்லாம் சமூக அவலங்களை களை எடுப்பதுதான். இவர்களுக்கு தனது சமூகமே அவர்களது குடும்பம்.  இந்த போராளிகள் ஒரு இலக்கோடு தங்களது பயணத்தைத் தொடங்குவார்கள். அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். இந்த போராளிகள் தனி தனி குழுக்களாக செயல்படுவார்கள். இந்த போராளிகளுக்கு என ஒரு தலைவர் இருப்பார். இப்படிப்பட்ட போராளிகளால் சமூகங்கள் விழிப்புணர்வு அடைவது உண்டு. ஆனால் இந்த போராளிகளை விட தொழிலாளிகளே மேல் எனும் கருத்து நிலவுவது உண்டு. தொழிலாளிகள் தங்களது அடிமைத்தனத்தில் இருந்து தங்களை தாங்களே மீட்க தெரிந்து கொண்டால் இந்த போராளிகள் உருவாகும் சாத்தியம் இல்லை. 

சரி இந்த திரைப்படத்திற்கு வருவோம். படத்தில் சில பல காட்சிகள் பார்க்கும்போது இயக்குனரை, படக் குழுவினரை பாராட்ட வேண்டும் என மனம் சொல்லிக் கொண்டது. இப்படியெல்லாம் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்த முடியாதா என்கிற சின்ன அபிலாசை இந்த இயக்குனருக்கு இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் கதாநாயகரைப் போல ஆங்காங்கே ஓரிரு மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறருக்கு உதவும் குணம். 

அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கும் மனிதர்கள் இவ்வுலகில் மிகவும் அதிகமாகவே உண்டு. நான் வேலைக்கு செல்லும் வழியில் சுரங்க பாதையில் எப்போதும் உறங்கி கொண்டிருப்பது போன்று இருக்கும் நபர்களை காண்பது உண்டு. ஏதாவது சில்லறை தாருங்கள் என கேட்பார்கள். அவர்கள் மிகவும் உடல் வலிமையுடனே காணப்படுவார்கள். மனதில் இவர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் என அவர்களை சட்டை செய்யாமல் சென்று விடுவது உண்டு. வீடு இல்லாதவர்களுக்கு என ஆதரவு கரம் இந்த அரசு அளித்தாலும் இவர்கள் உழைக்க முயற்சி செய்வது இல்லை, அல்லது உழைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுவது இல்லை. எப்படித்தான் இந்த குளிரிலும் இவர்களால் இப்படி வாழ முடிகிறது எனும் ஆச்சரிய குறி எழுந்துவிட்டு போகும். 

நான் கடவுள் எனும் திரைப்படம் எப்படி ஒரு அவல நிலையை சுட்டி காட்டி அதற்கு ஒரு முட்டாள்தனமான தீர்வு சொன்னதோ, அதை விட பல மடங்கு மேலாக நல்லதொரு தீர்வை இந்த படத்தில் சொல்வதாகவே தெரிகிறது. ஆனால் நட்பு என்பதை தூக்கி நிறுத்துகிறோம் என்கிற பெயரில் அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து குடும்பம், சொந்தங்களை கொச்சை படுத்தி இருக்கிறார்கள். கொச்சை படுத்தி இருக்கிறார்கள் என்பதை விட நடப்பதை காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 'கிட்ட இருந்தால் முட்டப் பகை'

குடும்பங்கள், உறவினர்கள் என்றாலே சொத்து சிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. இது காலம் காலமாகவே நடைபெற்று வரும் ஒரு பொல்லாத விசயம். பணம் இது ஒன்றுதான் பிரதானம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவே செல்கிறது, அதுவும் நகைச்சுவையுடன் நளினம் ஆடுகிறது. 'தொட்டதெற்கெல்லாம் குற்றம் சொல்லும் மனைவி' 'குடித்தும் தன்னிலை மறவா பாத்திரம்' மிகவும் அழகாகவே நகர்கிறது. படத்தின் கருவில் ஒரு மாபெரும் குறை இருக்கிறது! எவர் எவரையோ நல்வழி படுத்தும் கதாநாயகர் தனது சொந்தங்கள் மீது வெறி கொள்வது எதற்கு. சொந்தங்களின் பேராசையை புரிந்து கொண்டு விலகி முன்னரே விலகி இருந்தால் பல இழப்புகள் நேர்ந்து இருக்காது. இது போன்ற சொந்தங்களின் உறுதியை வலுப்படுத்தும் கதைகள் வந்திருக்கின்றன என்பதாலும், தான் கொண்ட நட்பு உயர்ந்தது என்பதாலும் அதற்காக மட்டுமே இந்த அன்பு உபயோகப்படுவதாக கட்டம் கட்டி இருக்கிறார்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்'

அன்பு, அரவணைப்பு இல்லாத பட்சத்தில் மனநிலை பிறழ்வதற்கான வாய்ப்புகள் அனைவருக்குமே சாத்தியம். இந்த அன்பும், அரவணைப்பும் மனிதர்களின் மனதில் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தவறு செய்யும் குழந்தையை அடிப்பதை காட்டிலும், அன்புடன் பேசும்போது ஒரு பாதுகாப்பாகவே அந்த குழந்தை உணர்கிறது. மனம் விட்டு பேசுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். எவராவது பிரச்சினை என சொல்லும்போது அவர்களின் வலியை நீங்கள் முதலில் உணர கற்று கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் பிரச்சனைகளை பற்றி பேசினாலே பெரும் பிரச்சனைகளை உருவாக்குபவர்களாகவே நாம் இருக்கிறோம். மேலும் ஒரு திட்டமிட்ட மனநிலை. நான் இப்படித்தான் என்கிற போக்கு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என இல்லாத அக்கறை. 

இதற்கு காரணமாக அறிவியல் விசயங்கள் கூட உண்டு என்கிறார்கள். அதாவது செரோடொனின் எனும் மூலக்கூறானது நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவுதாக கண்டுபிடிக்க பட்டு உள்ளது. 

             

நாம் சந்தோசமாக இருக்கும்போது இந்த மூலக்கூறு நரம்புகளில் இருந்து வெளிப்படுகிறது. இதன் அளவு குறையும் போது நமக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டு அதற்காகவே மன அழுத்தம் தனை குறைக்க செய்யும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல பில்லியன் டாலர்கள் விற்பனை செய்தது. அது ப்ரோஜாக் எனப்படும் மருந்து ஆகும். இந்த ப்ரோஜாக் இந்த செரோடொனின் அளவை அதிகரிக்க செய்து மனதை மகிழ்வாக வைக்க உதவும் என்கிறார்கள்.  


இதற்காகவே நமது முன்னோர்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என சொல்லி வைத்தார்கள். இந்த வாசகமும் படத்தில் வருகிறது. சினிமா என்பதால் ரசனைக்கு பஞ்சமில்லை. ஆனால் போராளி சமூகத்திற்காக போராடுபவன். திருந்தும் அல்லது திருத்தப்படும் சில மனிதர்கள் மட்டுமே சமூகம் ஆகிவிட முடியாது! 

Thursday 24 November 2011

ஒழுக்கம்

எத்தனையோ வருடங்கள் முன்னர் கவிஞர் வைரமுத்து சொன்னதாக ஒருவர் என்னிடம் சொன்னது இன்னும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது. அவர் உண்மையிலேயே அப்படி சொன்னாரா என்பதை இப்போது அவரிடம் கேட்டால் அவர் மறந்து இருக்க கூடும். ஒரு நல்ல கவிஞர், ஆனால் நடிகைகள் பற்றி எதற்கு அப்படி சொன்னார், உண்மையிலேயே சொல்லி இருப்பாரோ என எண்ணும் போது அந்த கவிஞரை நடிகை சிம்ரனை பற்றி இணைத்து பேசிய செய்தி கசிந்தது. 

நடிகையாக என்ன தகுதி வேண்டும் என கேட்டால் தகாத உறவுக்கு தயாரானவராக இருக்க வேண்டும் என்றுதான் பலர் மனதில் சொல்லிக்கொள்கிறார்கள். குடும்ப பாங்கான படங்களில் நடித்தவுடன், ஓரளவுக்கு புகழ் பெற்றவுடன் ஒரு நடிகை தனது முந்தைய வரலாற்றினை அழித்துவிடுகிறார் எனும் குற்றச்சாட்டு உண்டு. இதன் மூலம் ஒரு நடிகை என்றாலே எத்தனை கேவலமான எண்ணம் மக்களின் மனதில் உள்ளது என்பதை அறியலாம். விலைபொருட்கள் போலவே நடிகைகள் நடத்தப்படுகிறார்கள் எனும் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இந்த நடிகைகள் குறித்து ஒருமுறை நாளிதழ் ஒன்று வெளியிட்டதை எதிர்த்து பெரும் போராட்டமே வெடித்தது. நடிகைகளும்  சாதாரண பெண்மணிகள் எனும் எண்ணம், சகோதரத்துவம் போன்றவை பொதுவாக ஒரு பாமரனிடம் எழுவதில்லை. 

ஒரு நடிகையின் கதை என குமுதம் ஒன்றில் வந்த தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது எல்லாம் கற்பனை, அந்த தொடருக்கு தடை விதிக்க போராடி வருகிறோம் என அரசியல் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அன்று என்னிடம் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. அவர் சொன்ன ஓரிரு வாரங்களில் தொடர் நின்று போனது. 

சமீபத்தில் கூட கவிஞர் வாலி ஒழுக்கமில்லாத துறை திரைத்துறை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த திரைத்துறையில் வெகு சிலரே ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அவர் சொன்னது குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மது உட்கொள்தல் ஒழுக்க கேடு என கவிஞர் வாலி நினைக்கிறார் போலும். 

கிசுகிசுக்கள் அதிகம் உலவும்  துறை திரைத்துறை தான். இரண்டு மூன்று படங்களில் ஒரே நடிகர், நடிகை சேர்ந்து நடித்தால் காதல் என கிசுகிசுக்கப்படுகிறார்கள். அதற்கு அலங்காரம் செய்வது போல சில நடிகை, நடிகர்கள் செயல்படுவது உண்மைதான்.  இயக்குனர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது பொய்யான கற்பழிப்பு வழக்கு போடப்பட்டதாக செய்திகள் உலவின. தற்போது பிறிதொருவரின் மனைவியை, குழந்தையை கடத்தியாக கவிஞர் சினேகன் மீதான குற்றச்சாட்டு. அரசியல் பலத்தினாலும், சொந்த செல்வாக்கினாலும் நடிகை சோனா சொன்ன பாடகர் எஸ் பி பி மகன் சரண் மீதான குற்றச்சாட்டு ஒன்றும் இல்லாமல் போனது. நடிகைகள் பற்றிய படம் எடுத்தால் என்ன ஆகும் என்கிற பயம் பலருக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை திருமணங்கள், விவாகரத்து என எதிர்கொண்டது திரைத்துறையில் உள்ளவர்கள் என அறியலாம். 

நடிகர் கமல்ஹாசன், நடிப்பு என சொல்லிக்கொண்டு இவர் நடிகைகளிடம் பண்ணும் அட்டகாசம் பெருமளவில் ரசிக்கப்படுவது உண்டு.  தன்னை தானே ஒழுக்கம் கெட்டவன் என தைரியமாகவே சொல்லக்கூடியவர் இவர் என சொல்கிறார்கள். இவர் மட்டும் காந்தியை போன்று சத்திய சோதனை எழுதினால் திரை உலகம் சந்தி சிரித்துவிடும் என சொல்பவர்கள் உண்டு. நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் நடிகை அமலா பற்றியும் கூட வேலைக்காரன் படத்தின் போது அரசல் புரசலான செய்திகள் பரவியது உண்டு. 

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அமலா பால் இடையே தகாத உறவு இருந்ததால் தான் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என ஒரு இணையம் எழுதி இருந்தது. சமீபத்தில் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா சாமியார் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது. நடிகர் சிம்பு, நடிகர் பிரபுதேவா, நடிகை நயனதாரா விவகாரங்கள் திரையுலகின் ஒழுக்கம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பின. 

இப்படி இருக்க திரைத்துறையில் பேசப்படும் இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? உண்மையிலேயே திரைத்துறை ஒழுக்கம் கெட்டதா? எல்லா துறைகளிலும் ஒழுக்க கேடு என்பது கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் என பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள் மூலம் அறியலாம். ஆனால் இந்த திரைத்துறையில் நடிப்பு என்ற போர்வையில் பாலியல் வன்முறைக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாகவே வெளியில் இருப்போர்க்கு தென்படுகிறது. மேலும் திரைத்துறை பெருமளவு மக்களால் பார்க்கப்படுவதால், ரசிக்கப்படுவதால் அங்கே நடக்கும் சில விசயங்கள் பூதகாரமாக்கப்படுகின்றன. அவரவர் கற்பனைக்கேற்ப தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறதோ என அச்சம் நிலவுகிறது. 

அப்பொழுதெல்லாம் நினைவு வரும், எங்கிருந்து இந்த கற்பனைவாதிகள் புறப்படுகிறார்கள் என! உறவுகள் குறித்து எதற்கு ஒரு தவறான கண்ணோட்டம் நமது தமிழ் மக்களிடம் வந்து சேர்ந்தது. புறம் பேசுதல் குறித்து இலக்கியங்கள் அதிகமாகவே பேசுகிறது. ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் இதிகாசங்கள், இலக்கியங்கள் உருவாகி இருக்கின்றன. 

இது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை என எவரும் விடுவதில்லை. ஊரெல்லாம் இவர்கள் பற்றி தெரிவதால் நமட்டு சிரிப்புடன், பரிகாச பார்வையுடன் இவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அதே வேளையில் கவிஞர் கண்ணதாசன் போல எவரும் தன்னைத்தானே இந்த திரையுலகில் மட்டுமல்ல உலகில்  நிர்வாணப்படுத்தி கொள்ள முன்வருவதில்லை. 

திரைத்துறையில் ஒழுக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகனும், ரசிகையும் அதிகமாக தமிழகத்தில் இருக்கிறார்கள் எனும் போது மொத்த தமிழகமே ஒழுக்கம் கெட்டதோ எனும் கேள்வி எதற்கு எழுவதில்லை. 

திருவள்ளுவர் அற்புதமாக சொல்கிறார் 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 

அதாவது ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் கூட தகாத வார்த்தைகளை சொல்லமாட்டார்களாம்! 

வள்ளுவர் சொல்வதைப் பார்த்தால் அத்தகைய ஒழுக்க நெறி இந்த உலகில் மிகவும் குறைவாகவே இருக்கிறது எனலாம். எனவே ஒழுக்கம் கெட்டதுதான் திரைத்துறை என சாலமன் பாப்பையா அங்க வை, இங்க வை என தீர்ப்பு கூறலாம். 

Monday 21 November 2011

ஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்

திருமோகூர் கோவிலில் சரியாக சொன்னபடி ஏழு மணிக்கு அனைவரும் திரண்டார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள்.

வேல்முருகன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். 

'இந்த படம் எடுக்க குறைஞ்சது ஒரு வருடம் ஆகும். நீங்க எல்லாம் இந்த ஊர்லதான் இருக்கனும். உங்களுக்கு தினமும் வேலை இருக்கு. யார் யாருக்கு என்ன சம்பளம், எப்படியெல்லாம் படம் எடுக்க போறோம் அப்படிங்கிற விவரம் எல்லாம் இந்த டாகுமென்ட்ல இருக்கு. இதை எல்லாம் படிச்சி பாருங்க. சுருக்கமா சொல்ல போனா பதினைஞ்சி ஏக்கர் தரிசு நிலத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து பண்பட்ட நிலமா மாத்தி அதுல விவசாயம் செய்யனும். அந்த நிலத்துல சாகுபடி பண்ணனும், அது ஒரு போகமா இருக்கலாம், அல்லது ரெண்டு போகமா இருக்கலாம். நிலத்தை பண்படுத்த எப்படியும் குறைஞ்சது மூணு மாசம் ஆகும். நீங்கதான் உழைக்க போறீங்க. இங்க என்ன நடக்குது அப்படிங்கிற விவரம் எல்லாம் என்னோட இணையதளத்துல எழுதி படங்கள் எல்லாம் போட்டு வருவேன். எப்படி வேலை செய்றீங்க எல்லாம் படம் எடுத்து இணையத்துல எழுதுவேன். இப்படி நடக்கிற விசயங்களை கதையோட இணைச்சி சுவராஸ்யமா சொல்றதுதான் நம்மோட 'நன் செய்' படம்.   உங்களுக்கு மேற்கொண்டு இந்த படத்துல நடிக்க விருப்பம் இருந்தா, இங்க இருக்கலாம், அப்படியில்லைன்னா நீங்க கிளம்பி போகலாம். வேறு படத்தில கமிட் ஆகி இருந்தா அந்த படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பிருங்க'

வேல்முருகனுடன் தங்கி இருந்த மூன்று இயக்குனர்கள் புன்னகை முகத்துடன் இருந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என பேசிக்கொண்டார்கள். 

'எதுக்கு சார் இதெல்லாம், ஒரு காட்சியில தரிசு நிலத்தை காட்டுவோம், அடுத்த காட்சியில விவசாயம் ஆயிருச்சின்னு விளைநிலத்தை காட்டுவோம். இதுக்கு போய் நாங்க எல்லாம் மாடா உழைச்சி தரிசு நிலத்தை விளை நிலமா மாத்தனுமா. நடிக்க சொல்வீங்கன்னு பார்த்தா நிசமாவே வாழ சொல்றீங்களே, என்ன பைத்தியகாரத்தனம் இது, நீங்க சரியான பைத்தியம்' என ஒருவர் உயர்ந்த குரலில் பேசினார். 

'சினிமான்னு சொல்லிக்கிட்டு அதை சாதிக்கிறான், இதை சாதிக்கிறான் அப்பிடின்னு ஒரு ஹீரோவை படத்துல காமிக்கிறது, அவன் தான் உலகத்துல  ரொம்ப நல்லவன்னு காட்டுறது,  ஊழலை ஒழிக்கிறான் அப்படின்னு ஊழல் பண்றவனைய படத்துல நடிக்க சொல்றது, பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க மாட்டான் அவனையெல்லாம் ஐ பி எஸ், ஐ எ எஸ், டாக்டர் அப்படின்னு படத்துல காட்டுறது எல்லாம் பைத்தியகாரத்தனமா தெரியலையா.பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு மொத்த சமூகத்தையும் பைத்தியமாக்கி வைச்சிருக்க இந்த சினிமா, சமூக அக்கறை, சாக்கடை திருத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டு, கடையில கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களோட வறுமையை, கொடுமையை படமா காட்டுறோம்னு காசு பணத்தை அள்ளி பைக்குள்ள போட்டுகிறது முதற்கொண்டு இப்படி அடவாடித்தனம் பண்ற மத்தவங்க எல்லாம் நல்லவங்க, சினிமாவுல சொல்லப்போற சமூக சிந்தனைய வாழ்க்கையா வாழ்ந்து காட்டுங்க அப்படின்னு சொல்ற நான் பைத்தியகாரன், சரிதான். இந்த சினிமா மூலம் ரொம்ப நல்ல விசயங்கள் பண்ணலாம் அப்படிங்கிறதைத்தான் சமூகத்துக்கு சொல்லப்போறேன், இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா போகலாம்' 

வந்தவர்களில் சிலர் மட்டுமே களைந்து சென்றார்கள். மற்றவர்கள் சம்மதம் என சொல்லி நின்றார்கள். 

படம் தொடங்கியது. அனைவரும் தரிசு நிலத்தை பண்படுத்த வேலையாட்களாக இறங்கினார்கள். பூஜை என்ற பெயரில் காசு பணத்தை வீணாக்குவது, விளம்பரம் என்ற பெயரில் காசு பணத்தை கரியாக்குவது என இல்லாமல் படம் இணையதளத்தில் அறிவிப்புடனே தொடங்கியது. சில நாட்களில் படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் தொடங்கிய சில நாட்களில் இன்னும் சிலர் பிரிந்து சென்றார்கள். 

பண்படுத்தப்பட்ட நிலம், விளைச்சலில் இறங்கியது. இறுதியாக இருநூற்றி முப்பத்து ஆறு பேர் கொண்ட அந்த படக்குழு பெருமிதம் கொண்டது. தினமும் விவசாய வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள். இணையதளம் மூலம் பரவிய செய்தியினால் பணம் நன்கொடையாகவும் வந்து கொண்டிருந்தது. 

படத்திற்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டன. அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். தாங்கள் விளைத்த நிலத்தில் தாங்களே அறுவடை செய்தார்கள். நன் செய் படமும் வெளியானது. 

ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட சந்தோசத்தை விட ஒரு தரிசு நிலத்தை விளைநிலமா மாத்துன திருப்திதான் ரொம்ப பெரிசு என இந்த படத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கால காலத்திற்கும் விவசாயம் செய்வது என முடிவு கொண்டார்கள். அவர்களைக் கொண்டே எடுக்க இருக்கும் அடுத்த படத்துக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார் வேல்முருகன்.  படத்தின் பெயர் 'குறைவற்ற செல்வம்' 

சுத்தம் நிறைந்த நோயற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை. விவசாயத்தோடு மாசு அற்ற நகரங்கள் உருவாக அந்த படக்குழு தமது புது படத்தை தொடங்கியது. 

இப்படித்தான் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் தங்களது சமூகம் பற்றிய சிறந்த எண்ணங்களை கற்பனை மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவை எல்லாம் உண்மையாக நடப்பது அரிதாகவே இருக்கின்றது. 

இதுதான் வாழ்க்கை என்றான பின்னர் எவரை குறைபட்டு என்ன பிரயோசனம். திருமோகூருக்கு அருகில் பதினைந்து ஏக்கர் நிலம் இன்னும் தரிசாகவே இருக்கிறது!  

Wednesday 16 November 2011

இங்கே சினிமாவுக்கு கதைகள் விற்கப்படும்

'அப்பா நம்ம பங்களா வீடு எனக்கு தந்திருங்க'

'எதுக்குடா'

'தேவைப்படுதுப்பா'

திருமோகூரில் வாழ்ந்து வந்த இருபத்தி மூன்று வயது நிரம்பிய வேல்முருகன் தனது திரைப்பட நிறுவனத்திற்கு வேல்முருகன் சினி லிமிடெட் என பெயர் வைத்தான்.  அதனுடனே வேல்முருகன் இன் என்று ஒரு இணைய தளம் தொடங்கினான்.

அந்த இணையதளத்தில் 'இயக்குநராக ஆசைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள  விளம்பரம் தந்து தனது செல்பேசி நம்பரை இணைத்தான். அவன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இருபது பேர் அவனை தொடர்பு கொண்டார்கள்.  ஒவ்வொருவராக அவர்களை சந்திக்கும் திட்டத்துடன் திருமோகூருக்கு தனித்தனி நேரங்களில் அவர்களை வரச் சொன்னான் வேல்முருகன். வந்தவர், வேல்முருகனைப் பார்த்து இத்தனை சின்ன வயசாக இருக்கிறானே, இவனா தயாரிப்பாளர் என யோசித்தார். அந்த யோசனையை அப்புறப்படுத்தினான் வேல்முருகன்.

'எத்தனை வருசமா திரை உலகத்துல இருக்கீங்க'

'பதினைந்து வருசமா'

'என்ன வேலை பாத்துட்டு இருக்கீங்க'

'அசிஸ்டென்ட் டைரக்டர் '

'எத்தனை படங்கள்'

'இருபது படங்கள்'

'சரி, ஒரு கதை சொல்லுங்க, ஒரு வரி கதை'

'நம்ம தமிழகத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்க, அவங்கள ஒருத்தர் எப்படி அழிக்கிறார் அப்படிங்கிறது தான் கதை'

'சரி, எங்களோட பங்களா ஒன்னு இருக்கு, அதுல அடுத்த வாரம் மூணாம் தேதியில இருந்து தங்குங்க, சாப்பாடு எல்லா வசதியும் நான் பண்ணி தரேன், நாம நிச்சயம் படம் பண்ணலாம். மத்தது எல்லாம் மூணாம் தேதி பேசிக்கிறலாம்'

இன்முகத்துடன் அவரை அனுப்பி வைத்தான். இது போல ஒவ்வொருவரிடம் ஒரு வரி கதை கேட்டான் வேல்முருகன். சிலர் ஒரு வரி மேலேயும் சொன்னார்கள். வந்த அனைவரையும் மூணாம் தேதி வரச் சொல்லி அனுப்பினான். ஐந்தாவது, ஏழாவது. பதினான்காவது கதை சொன்னவர்களை மட்டும் தன்னுடன் இருக்க சொன்னான். வந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேச வேல்முருகன் நினைக்க ஒரு படம் இயக்கினா அதுவே பெரிசு, கொடுக்கிறதை கொடுங்க என பெருந்தன்மையாய் வந்தவர் சொன்னார்கள்.

இயக்குநர் ஆகும் கனவோடு வந்தவர்கள் சொன்ன கதைகள்.

1 நம்ம தமிழகத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்க, அவங்கள ஒருத்தர் எப்படி அழிக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை.

2  கதாநாயகன் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசுவான். அவனை ஒருத்தி காதலிக்கிறா. அவங்களுக்கு பொறக்கிற குழந்தையும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசுது. இவங்களை சுத்தி நடக்கிற விசயம் தான்  கதை.

3 ஒரு சித்தன் ஊரெல்லாம் சுத்துறான். போற இடத்துல எல்லாம் அழிவு நடக்குது. இந்த அழிவை நடத்தறது யாரு அப்படிங்கிறதை கண்டுபிடிக்கிறதுதான் கதை.

4 ஒரு ரயிலுல வாழ்க்கையை ஓட்டுற சின்ன பசங்களோட கண்ணீர் கதை

5 நெகாதம் செடி அப்படிங்கிற செடியில எல்லா மருத்துவ குணங்களும் நிறைஞ்சி இருக்கு, அந்த ரகசியத்தை தெரிஞ்ச ஒரு பெரியவரும், இளைஞனும் நெகாதம் செடியை அடைஞ்சாங்களானு ஒரு கதை.

6 ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணாம செயற்கையா ஸ்டெம் செல்கள் மூலமா குழந்தை பெத்துக்கிறதை பத்திய ஒரு அறிவியல் சமூக கதை.

7 விவசாயம் அழிஞ்சிட்டு வரதை பொறுக்க முடியாம பெரிய பெரிய தொழிற்சாலையை தரை மட்டமாக்குற ஒரு இளைஞனோட கதை.

8 தாயுக்கும் மகளுக்கும் இடையே நடக்கிற ஒரு பாச போராட்ட கதை.

9 ஒரு கோயில், ஒரு பூசாரி, ஒரு கொலை இதுதான் கதை.

10 இது ஒரு காதல் கதை சார். அண்ணனும் சித்தப்பா மகளும் நேசிக்கிறாங்க, கல்யாணத்துல முடியுமா அப்படிங்கிற கதை.

11 நண்பனுக்காக உயிரை விடற ஒரு பொண்ணோட கதை.

12 ஐந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண விரும்புறாங்க, கல்யாணம் பண்ணினாங்களா, சமூகம் என்ன சொல்லுதுன்னு ஒரு ஆராய்ச்சி கதை.

13 இது ஒரு எழுத்தாளரோட வக்கிரபுத்திய விலாவாரியா சொல்ற உண்மை கதை. கதை டிஸ்கசன்ல முழுசா சொல்றேன்.

14 ஆப்பிரிக்கா நாட்டில இருந்து விவசாயத்துக்கு ஆட்களை இறக்குமதி பண்ற ஒரு பண்ணையாரோட கதை

15 ஊழல் பண்ற அரசியல்வாதி எப்படி வியாதியில சாகுறான் அப்படின்னு ஒரு கதை.

16 ஒரு குடும்பம் எப்படி பண பைத்தியம் பிடிச்சி அழியுது அப்படின்னு கதை.

17 ஒரு பையன் படிக்காமலே எப்படி தன்னோட திறமையால் முன்னுக்கு வர போராடுரானு போராட்டத்தை காமிக்கற கதை. முடிவுல பையன் செத்துருவான் சார்.

18 அம்மாவையும் அப்பாவையும் கொலை பண்ற ஒரு பையனோட போராட்ட கதை.

19 நேர்மையான அதிகாரி எப்படி தான் நினைச்சதை குறுக்கு வழியில நாட்டுக்காக சாதிக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை. முரண்பட்ட விசயம் சார் இது.

20 வறுமையில வாடறவங்க படிக்காதவங்களை பத்தின கதை. இந்த கதை நிச்சயம் தேசிய விருது பெரும் சார்.

அதைப் போலவே நடிகர்கள், துணை நடிகர்கள், நடிகைகள், துணை நடிகைகள், இசை அமைப்பாளர்கள், நடன ஆசிரியர் என திரைப்படத்தின் அனைத்து பிரிவுகளில் இதுவரை சேர இயலாமல் தவித்து கொண்டு இருந்த நபர்களை இணையதளத்தில் விளம்பரம் செய்து  வரவழைத்து அவர்களுடன் பேசி மூணாம் தேதி வரச் சொல்லி அனுப்பினான் வேல்முருகன்.

வந்த அனைவரது எண்ணிக்கையை கூட்டியபோது முன்னூற்றி முப்பத்தி இரண்டு என வந்தது. வேல்முருகு படம் எடுக்க போகுது என சுற்று வட்டாரம் எல்லாம் பேச தொடங்கினார்கள். அதன் காரணமாக சென்னைக்கு செல்லாமல் திருமோகூரை முற்றுகையிட்டவர்கள் சிலர் இந்த எண்ணிக்கையில் அடங்குவர். அத்தனை பேரையும் தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் ஊரில் செய்தான். ஊரில் உள்ள அனைவரும் வேல்முருகனின் தந்தைக்காக என நினைத்து உதவி செய்தார்கள்.

ஐந்தாவது, ஏழாவது, பதினான்காவது கதை சொன்னவர்களுடன் தினமும் கலந்து ஆலோசித்தான் வேல்முருகன். தினமும் மூவருடன் சென்று வயலில் வேலை செய்வது, ஊரை பெருக்குவது போன்ற விசயங்கள் செய்து வந்தான். அவர்களின் யோசனைப்படியே திரைப்படம் எடுப்பதற்கான கருவிகள், கிராமத்து இசைக் கருவிகள் மிகவும் குறைந்த செலவில் ஒவ்வொன்றாக வந்து இறங்கின. அனைத்தையும் தனது இணைய தளத்தில் எழுதிக் கொண்டே வந்தான். இந்த செய்தி வலைப்பதிவாளர்கள் மூலம் சென்னையில் காட்டு தீயாக பரவியது.

சென்னையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் குமுறியது. எப்படி படம் வெளி வருகிறது என பார்ப்போம் என ஒவ்வொரு நாளும் அறிக்கை முழக்கமிட்டார்கள்.

மூணாம் தேதி வந்தது. முன்னூற்றி இருபத்தி ஒன்பது பேர் திருமோகூரை அடைந்தார்கள். திருமோகூர் கோவிலுக்குள் அனைவரையும் வரவழைத்து பேசினான் வேல்முருகன்.

'நம்ம படத்தோட தலைப்பு 'நன்செய்'

'தலைப்பை கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து சம்மதம் சொன்னார்கள். இந்த படத்துக்கு மூணு பேரு இயக்குநர் என ஐந்து, ஏழு, பதினான்காவது கதை சொன்னவர்களை காட்டினான். மத்த பதினேழு பேரு துணை இயக்குநர்கள். அவங்களுக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு தரப்படும்'.

'என்ன கதை, எல்லோருக்கும் என்ன என்ன வேலை, எப்படி காட்சி அமைக்க போறோம் அப்படிங்கிறதை நாளைக்கு நாம பேசலாம். எல்லாருக்கும் தங்க வீடு, சாப்பாடு எல்லாம் இந்த கிராமத்துல இருக்கிறவங்க மூலம் தயார் செஞ்சிருக்கோம், இன்னைக்கு எல்லோரும் ஊரை எல்லாம் சுத்தி பாருங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, காலையில சரியா ஏழு மணிக்கு இந்த கோவிலுக்கு வாங்க என அனுப்பினான்.

'அப்பா நீங்க கொடுத்த பணத்துல நான் ஒரு லட்சம் கூட இன்னும் செலவு செய்யலை'

'படத்தோட பேரு நல்லா இருக்குடா, வந்தவங்க ஒவ்வொருத்தரும் பேசிகிட்டதை பார்க்கறப்ப அவங்களுக்குள்ள எத்தனை கனவுடா, எதையெல்லாம் தொலைச்சி வாழ்ந்துருக்காங்க, நினைக்கறப்ப கண்ணு கலந்குதுடா'

'இனி அவங்க கலங்க மாட்டாங்கப்பா, நீங்க வட்டிக்கு விடற தொழிலை விட்டுட்டா ரொம்ப நல்லா இருக்கும்'

'நான் என்ன ஏழை பாழைங்க வயித்துல அடிச்சா சம்பாதிக்கிறேன்'

'சரிப்பா, நாளைக்கு நீங்களும் ஏழு மணிக்கு கோவிலுக்கு வந்துருங்க'

'நன் செய்' படம் தொடங்கியதா? அடுத்த பதிவில் காண்போம். 

இங்கே சினிமா கதைகள் விற்கப்படும்

 'அப்பா நீங்க சொன்ன மாதிரி டிகிரி முடிச்சிட்டேன், ரெண்டு கோடி ரூபா கொடுங்க'

'கம்ப்யூட்டருக்கு படிச்சிட்டு எதுக்கு என்னோட மானத்த வாங்கற'

'இந்த கம்ப்யூட்டரை வைச்சித்தான் நான் நினைச்சதை செய்யப் போறேன், சொன்ன வாக்கு மீறாதீங்கப்பா'

'வட்டிக்கு விட்டு, காடு கழனில உருண்டு விழுந்து சம்பாதிச்சது, இன்னைக்கு விவசாயத்துக்கு வான்னு கூப்பிட்டா யாரும் வேலைக்கு ஆளு கிடைக்கலை, அப்படியே ரொக்கமா ரெண்டு கோடி ரூபா கொடுக்கச் சொன்னா எனக்கு மனசு வரலை'

'பணத்தை தனியா எடுத்து வைச்சிக்கோங்க, நான் கேட்கறப்ப கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா போதும்'

'நான் சொல்லி இனி நீ கேட்கவா போற, எப்ப மெட்ராசு கெளம்புற'

'நான் எதுக்கு சென்னைக்கு போகனும், இங்கேயே இருந்துதான் செய்யப் போறேன்'

'ஒரு படத்தை இங்கே இருந்து எப்படிடா எடுப்ப, எல்லோருக்கும் ஹீரோ ஆகனும் டைரக்டர் ஆகனும்னு ஆசை இருக்கும், நீ பட தயாரிப்பளாரா ஆசைப் படறியே, எங்க போய் என் தலைய முட்டிக்கிறது'

'எல்லாரும் படம்னா சென்னைக்கு ஓடுறாங்களே, அதை மாத்தி மதுரைக்கு ஓடி வர வைக்கனும்'

'நிறைய செலவு ஆகுமேடா'

'ஆகாது'

'என்னமோ செய்டா போ'

'முன் பண தொகையா பத்து லட்சம் கொடுங்க'

இப்படித்தான் மதுரையில் அருகில் இருக்கும் திருமோகூரில் இருந்து ஒரு தயாரிப்பாளர் உருவாக இருக்கிறார்.

அவரது கனவுகள் நிறைவேறியதா? அவர் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்தினார்? விரைவில் தொடரும்.




Friday 4 November 2011

திரு. ஞாநி கதை விடுபவரா?

திரு ஞாநி ஒரு டுபாக்கூரா? என்பதற்கும், திரு ஞாநி கதை விடுபவரா, காதில் பூ சுற்றுபவரா என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான். டுபாக்கூர் என்பது கொச்சை தமிழ், இழிவுபடுத்தி சொல்லப்படும் வார்த்தை. கதை விடுபவர் என்பது சுத்த தமிழ், வஞ்ச புகழ்ச்சி அணியை தழுவியது. 

கதை விடுபவர் என்பதற்கும் கதை சொல்பவர் என்பதற்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. கதை சொல்பவர் என்பது ஒருவரின் செயலை நல்லவிதமாக குறிக்கிறது, அதே வேளையில் கதை விடுபவர் என்பது ஒருவரின் செயலை கெட்டவிதமாக குறிக்கிறது. அதாவது ஏமாற்றுக்காரர் என்கிற தொனியில் அது அமைகிறது. 

இப்பொழுது திரைப்படம் என்றால் என்ன? அது ஒரு கனவு தொழிற்சாலை எனவும், பொழுதுபோக்கு கலை எனவும் குறிப்பிடப்படுகிறது. கற்பனைகளின் கூடாரம் என்று கூட குறிப்பிடலாம். ஒரு திரைப்படத்திற்கான அளவுகோல் எது? மக்களின் ரசனைக்கு ஏற்றமாதிரி எடுப்பதா? சிறந்த கதையுடன் அல்லது சிறந்த கதையாக இல்லாவிட்டாலும் சிறப்பான திரைக்கதை கொண்டதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? இப்படி பல கேள்விகள் இந்த திரைப்படத்தை குறித்து எழுந்தாலும் அது ஒரு கனவு மட்டும் கற்பனை தொழிற்சாலை என்பது உண்மை. 

நடந்த விசயங்களை சொன்னாலும் அது ஒரு கதை வடிவமே. உண்மையான பாத்திரங்களை சொல்ல முடியாது. திரைப்படம் சமூகத்தை சீரழிக்கின்றன என்றும், சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது அவ்வப்போது நடைபெறும் சில விசயங்கள் உறுதிபடுத்தினாலும் முழுமையான தாக்கத்தை, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை திரைப்படங்கள் கொணர இயலுவதில்லை. நமது கற்பனைகளை, ஆதங்கங்களை வடிவமாக கண்டு மகிழும் நிலையில் இருப்பவர்கள்தான் நாம். அதற்காகவே ஒரு எம் ஜி ஆரோ, ரஜினியோ பெரும் புகழ் அடைய வழிவகுத்தது. 

தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. தமிழில் நல்ல படங்கள், மசாலா படங்கள், குப்பை படங்கள் என பிரித்து பார்த்தால் ஐம்பது சதவிகிதம் குப்பை படங்களும், நாற்பத்தி ஐந்து சதவிகிதம் மசாலா படங்களும் மீதி ஐந்து சதவிகிதம் மட்டுமே நல்ல படங்கள் என பிரித்துவிடலாம். சிறந்த பொழுதுபோக்கு படங்கள்தனை  விரும்பும் மக்கள் அதிகம் உள்ளவர்களே தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு பல மசாலா படங்கள் சாட்சி. இதில் கதை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். 

இப்படிப்பட்ட சூழலில் திரு ஞாநி அவர்கள் ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் எனும் முனைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டார்கள். அதாவது ஆள் பிடிப்பது. நல்ல படங்கள் வரவேண்டும் என முனைப்புடன் இருப்பவர்களை சேர்த்து ஒரு படம் எடுப்பது. இன்றைய காலகட்டத்தில் குறைந்த செலவில் படங்கள் எடுப்பது மிகவும் அரிதான விசயம். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் குழுவினர்கள் என பார்த்தால் ஒரு நிறுவனம் போலவே அந்த படத்தில் பங்கு பெற்று இருப்பவர்கள் இருப்பார்கள். அதற்காக செலவாகும் தொகை மிகவும் பெரிது. அதைப்போலவே அந்த திரைப்படத்தின் வாடிக்கையாளர்கள் என பார்த்தால் மிகவும் அதிகம். அதன் காரணமாகவே பல கோடி செலவு செய்து லாபம் அடையவும் செய்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை என்பதை பலரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். 

சமீபத்தில் எனது நண்பர் செல்வமுரளி தனது விசுவல் மீடியா நிறுவனத்தை விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் விளம்பரம் செய்தது மிகவும் குறைவே. இது ஒரு சிறிய நிறுவனம், மிகப் பெரிய நிறுவனமாக வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் திரைப்படம் என்பது அப்படியல்ல. அது ஒரு பொழுதுபோக்கு சித்திரம். உடனடி லாபதாரர்கள் ஒரு படத்தின் மூலம் பார்க்கலாம், அதைப்போலவே பெரும் நஷ்டம் அடைபவர்களையும் காணலாம். 

திரு. ஞாநி அவர்களின் விளம்பரம் இப்படித்தான் இருந்தது. 

'நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம். 

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். 

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும். 

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்'

அதற்கான எனது மறுமொழி இப்படித்தான் இருந்தது. 

'இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?

ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'

இந்த உரையாடல் எனது வலைப்பூவில்  நடந்த வருடம் ஆகஸ்ட் 2009. திரு ஞாநி அவர்கள் தங்களது இலக்கை அடைந்தாரா? இலக்கை நோக்கிய பயணம் தொடர்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. திரு ஞாநி நீங்கள் கதை விடுபவரா? என்கிற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது. 

இவரைப்போலவே ரூபாய் 30,000 முதலீடு செய்யுங்கள், ஒரு அழகிய படம் எடுத்து காட்டுகிறேன் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் திரு. கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் இலக்கை அடைந்தாரா? இந்த திரைபடத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்காக மூலதனம் செய்பவர்கள் மூலம் நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டு நிறைய பொருளாதாரம் ஈட்டிட்டால் மேலும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் பெருகும். வாழ்த்துகள். 

இவர்களை போன்றே பல கனவுகளுடன் வாழும் பலர் தங்கள் இலக்குகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களது  ஆய்வில் பத்து பதினைந்து வருடங்கள் போராடி ஒரு மருந்தினை கண்டுபிடித்து உலக மக்களை நோயிலிருந்து விடுபட செய்தாலும்  எங்களுக்கு கிடைக்கும் வரவோ வெறும் வாய். 

ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் மூலதனம் செய்யுங்கள் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்கு தெரியும். :)