Wednesday 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம். 

14 comments:

Unknown said...

அருமை

Radhakrishnan said...

🙏🏾🙏🏾🙏🏾

Unknown said...

தங்களின் விளக்கம் கண்டு வியக்கிறேன்...

vasanth said...

தோழர் தங்களின் விளக்கம் ஏற்புடையது அல்ல பாரதி அவன் கண்ட ஆத்ம தரிசனத்தை பற்றி பாடிய பாடலே இது .

Unknown said...

Superrrr

செல்வம் said...

மிக்க நன்றி பாரதிக்கும் தங்களுக்கும்....

போராளி said...

அருமையான விளக்கமளித்தமைக்கு நன்றி

Unknown said...

அருமையான விலக்கம்

Unknown said...

நல்லா தகவல்

கவிதைகளை காதலிப்போம் said...

அப்படியானால் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை விளக்குங்கள்...

Sritharan said...

அற்புதமான விளக்கம்

Suganthy said...

கவிஞர்கள் அவர்களின் ஏதாே ஒரு
நினைவின் கனவின் தீரா ஏக்கத்தில்
எழுதுவது கவிதையாகிறது.

வாசகன் அதை எந்த திசையிலும்
காேணத்திலும் புரிந்து ாெள்ளலாம்.

அதுதான் கவிதையின் சிறப்பு எனலாம்.

Radhakrishnan said...

🙏🏾🙏🏾🙏🏾

Anonymous said...

அக்னி குஞ்சு என்பது விழிப்பு நிலை -

அகவேள்வி

அதுவே யோகம்

காடு என்பதற்கு மனம் என்னும் காடு

அதில் பலப்பல எண்ணங்கள்

வேள்வி என்ற விழிப்பு நிலையை பற்ற வைத்தால்

மாசுகள் எல்லாம் அழிந்து சாம்பல் ஆகிவிடும்

மாசுகள் எல்லாம் அகலும்

நெருப்பில் சின்னது, பெரியது என்று எதுவும் இல்லை

ஒரு சிறு தீப்பொறிக் கூட

பெரிய காட்டை அளித்து விடும்

நெருப்பபுக்கு பருவம் இல்லை என்பதைத் தான் பாரதி

"தழலில் குஞ்சென்றும், மூபென்றும் உண்டோ...???"

என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்

விழிப்பு நிலை இரண்டு வகை

அவை

அகவிழிப்பு மற்றும் புற விழிப்பு

அக விழிப்பு - சுய ஜாக்கிறதா அவஸ்தை (self awareness)

புற விழிப்பு - உறவுகள், சமுதாயம் தொடர்பானது 🔥

💥 அக்னி பிழம்பில் : உள் முக பயணம் 💥