Sunday 13 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20

20 சிறகுகள்

பாமா பாடி முடித்ததும் மனதில் அவளுக்கு ஒரு யோசனை தோனியது. யசோதையிடம் இந்த பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்க இயலுமா எனக் கேட்கவேண்டும் என நினைத்தாள். சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சியை பட்டாம்பூச்சி என எவரும் அழைக்க மாட்டார்கள். அது ஒரு பூச்சி அவ்வளவுதான். பட்டாம்பூச்சிகளை வளர்த்துப் பழகிய பாமாவுக்கு பட்டாம்பூச்சியை சிறகுகள் இல்லாமல் அடையாளம் காண்பது எளிதாகவே இருந்தது.

யசோதையிடம் அலைபேசி மூலம் பேசி தனது ஆர்வத்தைச் சொன்னாள் பாமா. யசோதை சிறிது நேரம் யோசித்தவள் சிறகுகள் வரவைக்கலாம் என உறுதி தந்தாள். இந்த உலகில் பரிணாம வளர்ச்சி என்பது உணர்தல், தொடுதல், ஊர்தல், பறத்தல், நடத்தல் என்றே பக்கத்திற்கு பக்கமாக விரிவடைந்து வந்து இருக்கிறது.

தமக்கு தேவை இல்லாத உறுப்புகளை உதறித்தள்ளிவிடும் குணாதிசயங்கள் உயிரினங்களுக்கு இருந்து வந்து இருக்கிறது. எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது பிரமிக்கத்தக்க ஒன்றுதான் அந்த அந்த இயற்கை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை இந்த உயிரினங்களுக்கு உண்டு. இதில் இன்று வரை பெரும் வியப்பு தந்து கொண்டு இருப்பவைகள் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள். தங்களை அழிக்க வருபவைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. எவை எல்லாம் பயனில்லை என்று ஆகிறதோ அவை அழிந்து போகும். எவை மென்மேலும் பயன் உண்டாக்க உதவுமோ அவை மாற்றம் அடைந்து ஒரு நிலைக்கு வரும்.

பூங்கோதை வீட்டுக்குள் சென்றாள் பாமா.

''வாம்மா, உட்கார்'' பூங்கோதை பாமாவை வரவேற்றாள்.

''குழந்தை எப்படி இருக்கா?''

''நல்லா இருக்கா''

''நாராயணி'' என அழைத்தாள் பாமா. குழந்தை குரல் கேட்டு ஒலி எழுப்பியது.

''தன்னைத்தான் கூப்பிடறாங்கனு நினைக்கிறா அக்கா''

''பசிச்சா மட்டும் அழறா, மத்தபடி எந்த ஒரு தொல்லையும் இல்லம்மா, இவளுக்குனு இப்படிதான் துணி எல்லாம் தைச்சி வைச்சிருக்கேன்'' கை கால் வைக்காத துணியைக் காட்டினாள் பூங்கோதை.

''அக்கா, ஆழ்வார்களில் நம்மாழ்வார் எனும் சடகோபன் பத்தி நீங்க தெரிஞ்சி இருக்கீங்களா''

''இல்லைம்மா''

''நம்மாழ்வார் பிறந்தப்போ அழவே இல்லை. அதுக்கு நம்ம உடம்புக்குள்ள இருக்கிற காற்றை நாம வெளியேற்றத்தான் பிறந்த உடனே அழறோம்னும் நம்மாழ்வார் சட அப்படிங்கிற காத்தை அடக்கியாளும் திறமை இருந்ததால அழாம இருந்தார்னு சொல்றாங்க. அதுவும் பதினாறு வருசம் அவர் பேசாம ஒரு பிண்டம் மாதிரியே இருந்து இருக்கார். புளியமரத்துக்கு அடியில இப்படியே அசைவற்று கிடந்தவரை மதுரகவி ஆழ்வார்தான் ஒரு கல்லை தூக்கிப் போட சலனம் இருக்குனு கண்டுபிடிச்சி அவர்கிட்ட கேள்வி கேட்டு அவருடைய அறிவை மெச்சி தனது குருவாக ஏத்துக்கிட்டார், அதுக்கு அப்புறம் அவர் எழுதின பெருமாள் பற்றிய பாசுரங்கள் எல்லாம் சேர்த்து வைச்சி இருக்காங்க. நம்ம நாராயணி அப்படி இல்லைக்கா, நிச்சயம் பதினாறு வருசம் எல்லாம் அப்படி இருக்கமாட்டா, மத்த குழந்தை போல பேசுவா''

''ஆனா அவளால தன்னால் எதுவும் செய்யமுடியாதுல. தவழ்றது, நடக்கிறது, கை கொட்டி சிரிக்கிறதுனு எதுவுமே பண்ண முடியாதுல அதை நினைச்சி எனக்கு அப்போ அப்போ பகீர்னு இருக்கும்மா''

''அதான் யசோதை கை கால் வந்துரும்னு சொல்லி இருக்காங்க, நீங்க கவலைப்படாதீங்க அக்கா''

ஒரு தாய்க்கு தனது சேய் தான் உலகம். கட்டிய கணவனை விட தான் பெற்ற பிள்ளைக்காக எதுவும் செய்யத் துணிவு கொண்டுவிடுவாள் தாய். ஒரு தாய்க்கு மனச்சோர்வு ஏற்பட்டு இந்த வாழ்வைத் தொலைத்து விடுவோம் என எண்ணிக் கொண்டிருக்கையில் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழறயாம்மா, அழாதம்மா நானிருக்கேன்ல எனும் அந்த சேயின் மழலைச் சொல் அந்த தாய்க்கு இந்த வாழ்வின் மீது நிறைய நேசத்தை வளர்த்து விடும். ஆனால் நாராயணி பூங்கோதையின் மனதில் கவலைகளை சேர்த்துக் கொண்டு இருந்தாள். அந்தக் கவலைப் போக்குவதற்கு என்றே பாமா நிறைய நம்பிக்கைகள் தந்து கொண்டு இருந்தாள். பாமாவின் பேச்சு பூங்கோதைக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

பாமா நாச்சியார் சொன்னபடி விவசாய நிலங்களில் வேலை பார்த்து வர ஆரம்பித்தாள். கோவிலை கோவிந்தன் பார்த்துக் கொண்டான். பரந்தாமனிடம் வசுதேவன் இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனால் இந்த மன வருத்தம் எல்லாம் தீரும் என ஆறுதல் சொன்னார். இனிமேல் தான் பெருமாளுக்கு சேவை செய்தால் நன்றாக இருக்காது என்ற பரந்தாமனுக்கு அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முப்பது நாள் கழித்து தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

யசோதை சொன்னது போலவே அடுத்த வாரம் பெருமாள் பட்டி வந்து சேர்ந்தாள். அவளுடன் சடகோபன் மருத்துவரும் உடன் வந்தார். நாராயணியை பரிசோதித்தவர் ஒரு மாதம் கழித்து தனது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வரச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''யசோ டாக்டர் என்ன சொல்லிட்டுப் போறார்'' நாச்சியார் கேட்டார்.

''முயற்சி பண்ணி பார்க்கலாம்னு சொல்றார் அத்தை. செல்களை மறுபடியும் இயங்க வைச்சி பார்க்கலாம்னு சொல்றார். செல்கள் இயங்க ஆரம்பிச்சிருச்சினா சாதாரணமா வளர்ச்சி அடையறது போல வளர்ந்து விரல்கள், நகங்கள் எல்லாம் உருவாகி நின்றும், கவனமா செய்யனும் இல்லைன்னா ஒரு கைக்கு இரண்டு கை வரக்கூட வாய்ப்பு இருக்குனு சொல்றார்''

''யசோ, உன்னை நம்பித்தான் இருக்கோம்''

''கவலையை விடுங்க அத்தை, குழந்தை இந்தளவுக்கு நல்லா இருக்கிறதே பெரிய விசயம்னு அவர் சொல்றார். நிறைய செலவு ஆகும், அப்பாதான் இதுக்கு உதவி பண்ணணும்''

''பணத்தைப் பத்தி கவலைப்படாத யசோ''

பாமா அப்போதுதான் வந்தாள்.

''எப்போ வந்தீங்க யசோதை''

''இப்பதான், நீங்க எங்க போனீங்க''

''திருமங்கலம்ல வேளாண்மை கூட்டத்துக்குப் போயிட்டு வந்தேன், குழந்தைக்கு எதுவும் முயற்சி பண்ணினீங்களா''

''டாக்டர் வந்துட்டுப் போனார், அடுத்த மாசம் குழந்தையை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கிறார்''

''ரொம்ப நன்றிங்க யசோதை, பட்டாம்பூச்சிக்கு முயற்சி பண்ணினீங்களா''

பட்டாம்பூச்சியை காட்டினாள் பாமா. பாமா எங்கு போனாலும் காலை, மாலை என நாராயணியையும், பூங்கோதையையும், பட்டாம்பூச்சியையும் பார்க்காமல் செல்வது இல்லை.

''இமேகோ செல்களை செலுத்திப் பார்க்கலாம் பாமா, நான் இதை எடுத்துட்டுப் போறேன்''

''இன்னைக்கே போறீங்களா, ஊருல தங்க மாட்டீங்களா''

''நிறைய வேலைக இருக்கு பாமா, அதான் இன்னைக்கு சாயந்திரமே கிளம்புறேன்''

யசோதை வீட்டுக்குச் சென்றுவிட்டு கிளம்புவதாக இருந்தாள். வசுதேவன் நாச்சியார் சொன்ன விசயங்களை கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டாள். அப்போதே மாணிக்கவாசகரை சென்று பார்த்து விபரங்கள் சொல்ல வேண்டும் என்றார் வசுதேவன். நாச்சியார் தடுத்தார்.

''குழந்தைக்கு நல்லது நடக்கிற வரைக்கும் இதை பேச வேண்டாம்ணா''

வசுதேவன் எதுவும் சொல்லாமல் அமைதியானார். பாமாவை வரச் சொன்னாள் யசோதை. பாமா பட்டாம்பூச்சியை ஒரு காற்றுப் புகக்கூடிய சிறு குடுவையில் அடைத்து அது உயிர்ப்போடு இருக்க மலர்களுடன் கூடிய செடியை உள்ளே வைத்து இருந்தாள். யசோதை அதைப் பார்த்ததும் ஆச்சரியம் கொண்டாள்.

''எப்படிங்க பாமா, இப்படி எல்லாம் பண்ணி கொண்டு வந்து இருக்கீங்க''

''வளர்த்துப் பழகிருச்சிங்க''

பாமாவை மகிழ்வோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் யசோதை.

பாமா. பேரழகும் பேரறிவும், பேரன்பும் நிறைந்த ஒரு பெண். அவளுக்கென ஆன கள்ளமில்லா உள்ளம் வேறு எவருக்குமென ஆனது இல்லை. அவளை எண்ணி மகிழ்ந்திட உண்டாகும் உற்சாகம் வேறு எதனாலும் உண்டானது இல்லை. இதை எல்லாம் ஆச்சரியங்களில் அடக்க வேண்டியது இல்லை. அவளது இயல்பே அதுதான்.

சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி பாமாவை நோக்கி நன்றி சொல்வது போல தனது முன்னங்கால்களை சேர்த்து வணங்குவது போல செய்தது.

இந்த உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணங்கள் எதுவென எவரும் ஆழமாகவும், முழுமையாகவும் படித்தது இல்லை. அதனின் செயல்பாடுகள் எதற்கு என முழுவதுமாக உணர்ந்ததும் இல்லை. மழை வரும் முன்னே தோகை விரிக்கும் மயில், தனது பெண் துணைக்கு தான் விடும் தூது என்றே நாம் சொல்லிக் கொள்கிறோம், அதற்காக மட்டும்தான் என்பதை நாமாக முடிவு செய்தால் மயிலுக்கு தெரியவாப் போகிறது. பாமா பட்டாம்பூச்சியின் செயல் கண்டு புன்னகை புரிந்தாள்.

(தொடரும்)

Saturday 12 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19

19. நம்பிக்கைகள்

பாமாவின் தோளில் அமர்ந்த பட்டாம்பூச்சி அப்படியே குழந்தையின் மீது அமர்ந்துவிட்டு பறந்து போனது. சிறகுகள் இருப்பதால் எங்கு வேண்டும் என்றாலும் பறந்து போகும் இந்த பட்டாம்பூச்சிக்கு இலக்குகள் என்று இரண்டுதான், உயிர்ப்போடு இருப்பது, இனத்தைப் பெருக்குவது. பொதுவாகவே எல்லா உயிரினங்களும் இந்த இரண்டுக்காகத்தான் வாழ்கின்றன, இதில் அன்பை, பாசத்தை, நேசத்தை கலந்து வாழும் உயிரினங்கள் இந்த வாழ்வின் மீது ஒரு தீராத காதலை ஏற்படுத்திக் கொள்கின்றன.

முதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடக்கவே இயலாமல் இருப்பவர்களைத் தூக்கிச் சுமக்கும் தாய்மார்கள், செவிலியர்கள், இயக்கமற்றுப் போய் நினைவே இல்லாமல் படுக்கையிலேயே தமது வாழ்நாட்களை கடக்கும் மனிதர்கள், தான் யார் எவர் என்று அறியாமல் மனநிலையைத் தொலைத்துவிட்டு, மனநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி நோயாளிகளாகவே வாழும் மனிதர்கள், எவற்றின் மீதாவது வெறுப்புகளை சுமந்து கொண்டே திரியும் மனிதர்கள் என இந்த உலகம் கண்டு கொண்ட, கண்டு கொண்டிருக்கும், கண்டு கொள்ளப்போகும் உயிரினங்கள் என நிறையவே உண்டு.

தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றியில் சிவந்த பொட்டும், காதில் தண்டட்டியும், கழுத்தில் நகைகளும், மூக்குத்தியும் அணிந்து பட்டாடை உடுத்திய ஒரு மூதாட்டி பூங்கோதையின் அருகில் வந்து ''மகராசி கை, கால் இல்லாம பிறந்துருச்சேன்னு வருத்தப்படாத ஆத்தா, இங்க இருக்க வெயிலுக்குகந்தம்மனுக்கு முப்பது நாளு கழிச்சி குழந்தையைத் தூக்கி வந்து அந்த ஆத்தாளுக்கு முன்னாடி கிடத்தி கை கால் வரனும் நிச்சயம் வளர்ந்துரும், உனக்கு கை கால் வெள்ளியில் செஞ்சி வைக்கிறேனு மனமுருக வேண்டிக்கோ ஆத்தா, உனக்கு எந்த குறையும் வராது, நீயும் உன் பொண்ணும், குடும்பமும் நல்லா இருப்பீங்க'' என சிரித்த முகத்தோடு சொல்லியவர் குழந்தையின் கன்னத்தைத் தடவினார்.

பூங்கோதை கைகள் எடுத்து அவரைக் கும்பிட்டாள். ''வேண்டிக்கிறேன் பாட்டி'' எனும் அவளது குரல் தழுதழுத்தது. யசோதையும், பாமாவும் அந்த மூதாட்டியை வியப்போடு பார்த்தவண்ணம் நின்றார்கள். ''நீங்க எந்த ஊரு'' என்றார் நாச்சியார். ''ஸ்ரீரங்கம், குழந்தைக்கு கை கால் வந்துட்டா என்னை வந்து பார்த்துட்டுப் போகப் போறீங்களா?'' என்றார் மூதாட்டி. ''வந்து பார்த்துட்டுப் போறதுல ஒன்னும் தப்பு இல்லையே, வீடு விபரம் தந்தீங்கனா வரோம்'' என்ற நாச்சியாரைப் பார்த்து சிரித்தார் அந்த மூதாட்டி.

அங்கே இருந்த செவிலியர் ஒருவரிடம் காகிதம் வாங்கி எழுதித்தந்தார். ஆண்டாள் என அவரது பெயர் குறிப்பிட்டு இருந்தது. நாச்சியார் அவரிடம்  ''கல்யாண வீட்டுக்குப் போறது போல இங்க வந்து இருக்கீங்க'' என்றதும் ''நான் எப்பவும் அலங்காரத்தோடதான் இருப்பேன், அலங்கரிச்சி கொண்டாடத்தான் இந்த உடம்பும், மனசும்'' என்றவர் பூங்கோதையின் தலையில் கை வைத்து பாமாவை கை காட்டி பூங்கோதையிடம் ''இவ உனக்கு உறுதுணையா இருப்பா ஆத்தா, கவலைப்படாத'' என்றபடி நடந்து போனார். பூங்கோதையின் கண்கள் பாமாவை ஆறுதலுடன் பார்த்தன. பாமாவுக்கு பட்டாம்பூச்சி தந்த மெய் சிலிர்ப்புதனைக் காட்டிலும் அந்த மூதாட்டி தந்த மன உற்சாகம் மிகவும் பிடித்து இருந்தது. யசோதை தான் மருத்துவரை சென்று பார்த்துப் பேசிவிட்டு தகவல் சொல்வதாக மதுரைக்கு கிளம்பினாள். வசுதேவன் யசோதையிடம் ''ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டுப் போம்மா'' என்றதும் ''அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்'' என்றபடி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.

ஒரு குறையும் இல்லை எனும் நம்பிக்கை தரும் சொற்கள் தரும் உற்சாகங்கள் பேரழகானவை. குறையை நிறையாக மாற்றிவிடவே பலரும் முனைகின்றனர். குறையை அப்படியே குறையாக ஏற்று வாழ்தல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. நோய் என்று வந்தால் அதற்கு மருந்து என்ற ஒன்றை நாடிச் செல்கின்றனர். இந்த வாழ்வை செம்மையாக வாழ வேண்டும் எனும் பேராவல் பலரிடமும் உள்ளது. ஆனால் தாங்கள் செல்லும் பாதை, தாங்கள் கொள்ளும் நட்பு உறவுகள், பழக்க வழக்கங்கள் அவர்களை வழி மாற்றிவிடுகிறது. மன உறுதி உள்ளவர்கள் தடுமாற்றம் கொள்வது இல்லை.

''பாமா, அந்தம்மா சொன்னது எனக்கு நிறைய மகிழ்ச்சியா இருக்கு'' என்றார் நாச்சியார்.

''நாம வைக்கிற நம்பிக்கைகளோட பலம் நமக்கு உறுதுணையா எப்பவும் இருக்கனும்மா'' என்றாள் பாமா.

நாச்சியார் மட்டுமே அங்கே தங்க அனுமதி வாங்கி இருந்தார். பாமா இரண்டு நாட்கள் கழித்து பெருமாள் பட்டியில் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்ப இருந்தாள். பூங்கோதை பாமாவின் கைகளைப் பிடித்து ''மறக்காம வந்துரும்மா'' என்றார். ''வரேன்க்கா, எதுவும் எடுத்துட்டு வரலை, போய் எல்லாம் எடுத்துட்டு ஊருக்கே வந்துருறேன்'' என்றபோது குழந்தையும் மகிழ்ச்சியால் உடல் அசைத்தது.

மனிதர்களின் நம்பிக்கைகள் அறியாமை கலந்த பேரன்பின் வெளிப்பாடுகள். ஊசி போட்ட பின்னம் திருநீறு பூசி விடுகிறேன் உன் காய்ச்சல் சரியாகும் என்பவர்கள், உன் உடைந்த கை சரியானால் வெயிலுக்குகந்தம்மனுக்கு மாவினால் ஆன கை செய்து வைக்கிறேன் என்பவர்கள். இந்த வாழ்வை பேரழகோடு இரசித்திட தனி மனம் வேண்டும்.

''அம்மா, இன்னைக்குத்தான் நானும் பிறந்தேன்'' என்றாள் பாமா.

''இது புரட்டாசி மாசம், சனிக்கிழமை. பெருமாளுக்குனு ஆனது. காலையிலேயே கருட சேவை பண்ணினேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  நீ பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாம குழந்தைச் செல்வங்களோட நல்லா வாழனும் பாமா'' என்றார் நாச்சியார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்றார் பூங்கோதை.

அவள் இந்த புரட்டாசி மாதம்தனில்தான் பிறந்தாள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்த மாதத்திற்குச் சிறப்பு இல்லை, அதைவிட வேறு எந்த ஒரு மாதத்திற்கும் இந்த சிறப்பும் கூட இல்லை என சென்ற வருடம் கல்லூரியில் தனது பிறந்தநாளுக்கு கிடைத்த பாராட்டை எண்ணி மகிழ்ந்தாள் பாமா.

மதுரைக்குச் சென்று தனது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு பெருமாள்பட்டிக்கு வந்து சேர்ந்தாள் பாமா. ஊரில் பூங்கோதையின் குழந்தையைப் பற்றி பயத்தோடும் வியப்போடும் பேசிக் கொண்டார்கள். பூங்கோதை வீட்டுக்குச் சென்றாள் பாமா. அப்போது ஒரு பட்டாம்பூச்சி அவள் மீது அமர்ந்து பறந்து ஒரு செடியில் அமர்ந்தது. அதையே பார்த்து நின்றாள் பாமா. மறுபடியும் பறந்து வந்து அவள் மீது அமர்ந்துவிட்டு செடியில் சென்று அமர்ந்தது. என்னவென அச்செடியை நோக்கிச் சென்றாள். கால்கள் தலை கொண்ட சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி ஒன்று மலரில் தேன் அருந்திக் கொண்டு இருந்தது. கண்களில் சட்டென நீர் முட்டிக்கொண்டது. கண்கள் மூடி வணங்கியபடி பாசுரம் பாடினாள்.

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டை நம்வினைகெடவென்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

தேன் சுவையை விட இச்சுவை பெரிது என எண்ணியது போல பாடல் ஒலி கேட்டு தன் தலை உயர்த்திப் பார்த்தது சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி.

(தொடரும்)

Friday 11 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18

18. உயர்வறவுயர்நலம்

தன்னை அழைப்பது எவரென திரும்பிப் பார்த்தாள் பாமா. யசோதை பாமாவின் அருகில் அமர்ந்தாள்.

யசோதையை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டவள்  எப்படி ஆமையானது தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ அப்படி தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

''யசோதை, எப்படி இருக்கீங்க?''

அவளது குரல் அவளது மனதின் வருத்தம்தனை வெளிக்காட்டியது.

''நல்லா இருக்கேன், நீங்க?''

''ம்ம், கோதை அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன், நீங்களும் அங்கதான் போறீங்களா''

''ம்ம், அப்பா விபரத்தைச் சொன்னார். அதான் என்ன ஏதுன்னு நேரடியாய் பார்த்துட்டு ஏதாச்சும் பண்ண முடியுமானு பார்க்கனும்''

நடத்துனர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். இருவருக்கும் யசோதையே பயணச்சீட்டு வாங்கினாள்.

''பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கீங்களா, வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா'' பாமாவின் முடிவு குறித்து எதுவும் அறியாத யசோதை கேட்டாள்.

''நல்லா எழுதி இருக்கேன், பெருமாள்பட்டில விவசாயம் சம்பந்தமா வேலை, வீடு எல்லாம் நாச்சியார் அம்மா பார்த்து கொடுத்து இருக்காங்க. கை, கால் இல்லாம குழந்தை பிறக்குமா, அது உயிரோட எவ்வளவு நாள் இருக்கும்''

பாமா அவளது வேலை குறித்து சொன்னதும் யசோதை வியப்போடு நோக்கினாள்.

''என்னது, அந்த ஊரிலேயே வேலையா, அந்த ஊர்ல இருந்து எல்லாம் வெளியூர் போயிட்டு இருக்காங்க, நீங்க என்ன இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க, நல்லா யோசிங்க பாமா. அப்புறம் அந்த குழந்தை பத்தி கேட்டீங்கள, பொதுவா இந்த மாதிரி பிறக்கிற குழந்தைக மூச்சு விட திணறும், நரம்பு மண்டலம் எல்லாம் ஒழுங்கா உருவாகி இருக்காது, குறைஞ்ச காலத்திலேயே இறந்துருவாங்க, சில விதி விலக்கு இருக்கு. எல்லாமே நல்லபடியா இருந்து கை கால் மட்டும் இல்லைன்னா நம்மளைப் போல உயிர் வாழ்வாங்க, ஆனா யாரையாவது துணைக்கு உடன் வைச்சிட்டே இருக்கனும். கை, கால் வரத பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்''

''கை கால் வளருமா''

''இதுபத்திதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் நிறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு. நானும் வேலனும் அவர்கிட்டதான் இதுபத்தி நிறைய கத்துக்கிட்டு இருக்கோம்''

பாமா வியப்போடு யசோதையைப் பார்த்தாள். பேருந்து அதிவேகமாக போய்கொண்டு இருந்தது. இந்த உலகில் குறைகள் அற்ற ஒன்றாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என நிறைய முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

இறந்து போன ஒருவரை தரையில் கிடத்தி வைத்த பிறகு, அவர் இறந்துவிட்டார் என மனதுக்கு தெரிந்தாலும், உயிர்த்து எழுந்து வந்து விடமாட்டாரா என நடக்காத ஒன்றை அவர் மீதான பிரியத்தினால் எண்ணும் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த இழப்பை மறந்து விட பல வருடங்கள் ஆகிறது. அவர்கள் வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என சமாதானம் அடைகிறது அல்லது தங்களது குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவராக எண்ணி மனதை தேற்றிக் கொள்கிறது. உறுப்புகள் அற்று பிறந்த பிறகு இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் உறுப்புகள் வளர்ச்சி அடைந்ததாக மருத்துவக் குறிப்பில் இல்லை.

பொதுவாக எல்லாமே கருவில் தீர்மானிக்கப்படும் விசயமாக இருக்கிறது. நான்காவது வாரத்திலேயே கை கால் தோன்றுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடுகிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறார்கள். இறந்து போன செல்களைப் புதுப்பித்தல் என்பது எல்லாம் நடைபெறுகிறது.

''எப்படியாவது இந்த குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க யசோதை'' பாமா தனது ஆசையை சொல்லி வைத்தாள்.

''கால் இல்லாம போன தவளைக்கு கால் வர வைச்சி இருக்காங்க, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்தான் இதுக்கு துணை புரிஞ்சி இருக்கு பாமா, இதையே முன்மாதிரியா வைச்சி மனுசங்களுக்கு செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. நிறைய பேருக்கு கை கால் வெட்டி எடுத்துட்டா திரும்பி வளர வாய்ப்பே இல்லாம இருந்ததை மனசில வைச்சி இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு''

''முயற்சி பண்ணுங்க யசோதை''

கட்டாயம் பண்ணுவதாகச் சொன்னாள் யசோதை. அதன்பின்னர் அவர்கள் அமைதியாக வந்தனர். மருத்துவமனையை வந்து அடைந்தபோது மாலை ஆறு மணி ஆகி இருந்தது.  இருவரும் சென்று குழந்தையைப் பார்த்தார்கள். நாச்சியார் அங்கேதான் பூங்கோதையோடு இருந்தார். கை கால்கள் உடன் இல்லாமல் இருந்த குழந்தை பார்க்க மன உறுதி வேண்டும். தாங்கள் வாங்கி வந்த பொருட்களை அங்கே வைத்தார்கள். வைச்சி விளையாட கைக இல்லை என வருந்தினாள் பூங்கோதை. அப்போது சிறு ஒலி எழுப்பியது குழந்தை. கை, கால் முளைக்க வேண்டிய இடத்தில் இருந்த தசைகள் ஆடின.

''கவலைப்பட வேண்டாம்க்கா, உங்க குழந்தைக்கு கை கால் வந்துரும்'' யசோதை பூங்கோதைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

''குழந்தை உயிரோட இருந்தாலே போதும் சின்னம்மா'' பூங்கோதையின் வலிமை இழந்த சொற்கள் பாமாவை என்னவோ செய்தது.

''நான் இருக்கேன்க்கா'' பாமா பூங்கோதையின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கினாள் பாமா. ''குழந்தை தலை பத்திரம் பாமா'' என்றார் நாச்சியார்.

தன் கன்னத்தோடு குழந்தையின் கன்னம் ஒட்டிக் கொண்டாள். அதன் செவியில் பாசுரம் ஒன்றைப் பாடினாள்.

உயர்வறவுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியவனவன்
துயரறுசுடரடி தொழுதெழன்மனனே

பாமா பாடிய பாடலைக் கேட்டு குழந்தையின் முக தசைகள் புன்னகை புரிவது போல அசைந்தன. வானில் பேரிடி ஒன்று இடித்து ஓய்ந்தது. 'பெருமாளே, இந்தக் குழந்தையை குறையில்லாத குழந்தையா மாத்து' என மனதில் வேண்டிக் கொண்டார் நாச்சியார்.

பாமாவின் தோளினைத் தொட்டாள் யசோதை. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. மெய் சிலிர்த்துப் போனாள் பாமா.

(தொடரும்)