Thursday 10 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17

17. ஊனமறு நல்லழகே

கம்பளிப்பூச்சியாக இருந்தபோது அதனில் உள்ள இந்த எதிர்ப்பு சக்தியானது இந்த இமேகோ செல்களை உருவாக விடாமல் தடுத்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது இவை எல்லாத் தடைகளையும் தாண்டி பல செல்கள் உருவாகி பட்டாம்பூச்சியாய் உருவானது. தோலினுள் உருமாற்றம் தொடங்கி தோலினை கிழித்து தலைகீழாக வெளிவந்தபோது அவைகளுக்கு சிறகுகள் இல்லை. கால்கள் மற்றும் தலையோடு மட்டுமே வெளிவந்தது. சிறகுகள் இல்லாத இதை எப்படி பட்டாம்பூச்சி எனச் சொல்வார்கள்.

வெளிவந்த அடுத்தகணம் தலையை மேற்புறம் திருப்பி தனது தோலுக்கு நன்றி சொல்லிக்கொண்டது போல இருந்தது. அங்கிருந்து பறந்து போக சிறகுகள் இல்லை. துளசி இலையில் இருந்து கீழே பொத்தென்று விழுந்து தரையில் ஊர்ந்து சென்றது. இதைக்கண்டு பட்டாம்பூச்சி ஒன்று அதன் அருகில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு பரந்தாமனின் வீட்டுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது.

ஊர்ந்து கொண்டே சென்ற இந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் இருந்த செடியின் மீது ஏறி அந்த மலரில் தேனினை உறிஞ்சத் தொடங்கியது. இமேகோ செல்கள் தங்களது பணியை சரிவரச் செய்யாத காரணத்தால் கால்கள் தலைகளோடு சிறகுகள் அற்ற பட்டாம்பூச்சி உருவானது. தனது நிலையை எண்ணி வருத்தம் எதுவும் கொள்ளாமல் பறந்து செல்வதற்குப் பதிலாக ஊர்ந்து சென்று மலர் இருந்த செடியை அடைந்தது.

விருதுநகர் மருத்துவமனையை அடைந்தார்கள். வலி பொறுக்கமாட்டாமல் கத்தினாள் பூங்கோதை. மருத்துவமனையில் வெகுவேகமாக அனுமதித்தார்கள். குழந்தையின் தலை சரியாக இருக்கிறது. பிரச்சினை எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொன்னார்கள். பரந்தாமனும் மருத்துவமனையை வந்து அடைந்தான். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டான். நாச்சியார் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மழை எப்போது பெய்யும் என்றும், பிள்ளை எப்போது பிறக்கும் என்றும் மகாதேவனே அறிந்தது இல்லை எனும் சொல்வழக்கு உண்டு. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் குழந்தை வெளிவந்தது. குழந்தையைக் கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  கை கால் என இல்லாமல் உடலோடும், தலையோடும் மட்டுமே பிறந்து இருந்தாள். நாச்சியார், எம்பெருமாளே என்ன சோதனை இது எனக் கூறியபடி உடல் நடுங்கினார்.

கால், கை குறைவோடு பிறக்கிறவங்க இருக்காங்க, ஆனா இப்படி கால், கை முழுவதுமே இல்லாம பிறக்கிற குழந்தைக அபூர்வம். இதை அமெலியானு சொல்வாங்க. குழந்தையின் இதயத் துடிப்பு எல்லாம் சீராக இருந்தது.

கை, கால் தோன்றும் இடத்தில் கருமை நிறத்தில் புள்ளிகள் மட்டுமே தென்பட்டன.பூங்கோதை மயக்கத்தில் இருந்து தெளியாமல் இருந்தாள். குழந்தையைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு பரந்தாமனிடம் விபரத்தைச் சொன்னார்கள் மருத்துவர்கள். பரந்தாமன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.

உள்ளே சென்று பூங்கோதையை, பிள்ளையை பார்த்தான் பரந்தாமன்.

''நாராயணி'' தழுதழுத்த குரலோடு அழைத்தான். குழந்தை பரந்தாமன் அழைத்தது கேட்டு வாய் அசைத்தது.

பூங்கோதை விழித்தாள். பிள்ளையைக் கண்டதும் ''நான் என்ன பாவம் பண்ணினேன்'' எனக் கண்கள் கலங்கியவள் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''குழந்தை நல்லாதான் இருக்கா, கை கால்கள் மட்டும்தான் வளரலை, நீங்க இதை முன்னமே ஸ்கேன் எடுத்து பார்த்து இருந்தா சொல்லி இருப்பாங்க, இவ்வளவு தூரம் விட்டு இருக்க வேணாம்'' மருத்துவர் சொன்னதைக் கேட்கும் மன நிலையில் அங்கே எவரும்  இல்லை.

வசுதேவன் யசோதைக்குத் தகவல் சொன்னார். நாச்சியார் கேட்டுக் கொண்டதன் பேரில் பாமாவுக்கும் தகவல் சொன்னார் வசுதேவன்.

''ஒரு இரண்டு நாள் இங்க தங்கிட்டுப் பிறகு கூப்பிட்டுட்டுப் போங்க'' தன் பேச்சை சட்டை செய்யாமல் இருப்பது கண்டு மருத்துவர் தனியறை ஒன்று தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பத்து தலைகள் கொண்ட இராவணன். ஆறு தலைகள் கொண்ட முருகன். நான்கு தலைகள் கொண்ட பிரம்மன். ஐந்து தலைகள் கொண்ட நாகம். எட்டு கைகள் கொண்ட துர்க்கை. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு. யானை தலை கொண்ட விநாயகர். சிங்கம் தலை கொண்ட நரசிம்மர். இந்த பூமி இப்படி எண்ணற்ற விசயங்களை கேள்விப்பட்டது உண்டு.

''அம்மா, இப்படி ஆயிருச்சேம்மா, இனி அந்தக் குழந்தை வளர்ந்து எப்படிம்மா இந்த உலகத்தில் வாழப் போகுது'' பரந்தாமன் அழுகையை அடக்க இயலாதவனாகச் சொன்னான்.

''நீ கவலைப்படாத, எல்லாம் நல்லபடியாக நடக்கும், நான் போய் கோதை கூட இருக்கேன்''

தாலிடோமைடு எனும் மருந்துதனை காலையில் வாந்தி வருவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டதால் அனைருக்கும் கை கால் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. அதன்பின் உடனடியாக அந்த மருந்து தடை செய்யப்பட்டது. பூங்கோதைக்கு எப்படி இப்படி ஆனது என மருத்துவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

''துளசிச் செடியை அந்த பட்டாம்பூச்சி தின்னப்பவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சும்மா'' பரந்தாமன் வருத்தம் பொங்கச் சொன்னான்.

''தேவை இல்லாம கண்டதை நினைச்சி குழப்பிக்காதே, நாங்க அந்த குழந்தையை நல்லா வளர்த்துருவோம்''

வசுதேவன் பரந்தாமனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

யசோதை அவசரம் அவசரமாக மதுரையில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் ஏறிய பேருந்தில் ஒரு இருக்கையில் பாமா அமர்ந்து இருந்தாள்.

பேருந்தில் பாடல் ஒலித்தது.

''ஊனமறு நல்லழகே, ஊறு சுவையே கண்ணம்மா''

பாமாவின் அருகில் வந்தாள் யசோதை.

''பாமா''

பாமாவின் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Sunday 6 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16

16. இமேகோ செல்கள்

துளசிச் செடியில் இருந்த அச்சிறு கம்பளிப்பூச்சி தனது தோல்களையே ஒரு கூடு போல உண்டாக்கிக் கொள்ளத் தொடங்கியது. வேறு சில பூச்சிகள் வேறு சில பொருட்கள் கொண்டு புழுக்கூடு கட்டும் ஆனால் பட்டாம்பூச்சி அப்படி இல்லை. ஒரு நல்ல இலையினைப் பார்த்து தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது. வெகு வேகமாக காற்று அடித்தால் அடித்துச் செல்லப்படும் நிலையைப் பொருட்படுத்தாமல் இலையினை பிடிமானமாகக் கொண்டு தனக்குள் ஒரு பெரும் உருமாற்றத்திற்காக தயார்படுத்திக் கொண்டு இருந்தது.

தினம் நகர தான் சுரக்கின்ற திரவத்தை வைத்துக் கொண்டே கம்பளிப்பூச்சி தன்னை மொத்தமாக கரைக்க ஆரம்பித்து இருந்தது. கம்பளிப்பூச்சியும் இல்லை, பட்டாம்பூச்சியும் இல்லை. பச்சை வண்ண திரவமாக மாறி இருந்தது. தனது உருவத்தையே மொத்தமாக கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி, செல்களோடு மட்டுமே இருக்கும் இந்த நிலை இந்த உயிரினத்தின் ஒரு ஒப்புயர்வற்ற நிலை.

இதையே மனித மன வாழ்வுக்கும் சொல்லலாம். எண்ணங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு ஒரு முழு மனிதனாக உருவாதல். இந்த மனநிலையை நான்கு நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்மை நாமே தொலைத்து இருத்தல் ஒரு நிலை. இதுதான் மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நிகழ்காலம் புரியாமல் எதிர்காலம் மயங்குகிறது எனச் சொல்வது போன்ற ஒரு நிலை இது. எல்லாவற்றையும் தொலைத்தது போன்ற ஒரு இனம்புரியாத நிலையை சமாளித்துக் கொள்வது என்பது அறிவில், அன்பில் சாத்தியம்.

அடுத்த நிலை எப்படி மழையே இல்லாமல் இருந்த நிலத்தில் மழை பொழிந்து மண் வாசம் உண்டாக்கி அந்த ஒரு மகோத உன்னத மகிழ்ச்சியை உண்டாக்குமோ அது போல நம்மை புதுமைப்படுத்திக் கொள்வது. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில் இருந்து ஒரு அடையாளம், நமக்கான இலக்கு எதுவென நம்மை நாமே உணர்ந்து அறிந்து கொள்ளும் இந்த நிலை. ஒரு கற்பனை, அதில் இருந்து நமக்கான ஒரு உருவம் என நம்மை செழுமைப்படுத்திக் கொள்ள நமக்கு நிறைய மன உறுதி தேவைப்படுகிறது.

அடுத்து வரும் நிலையே நம்மை எவரென உலகம் அறிந்து கொள்ள வழி செய்யும். ஒரு உற்சாகத்தோடு நம்மை வழி நடத்திட நமது கனவுகளை எல்லாம் நனவாக்கிட நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும். அதை எல்லாம் தகர்த்து இலக்குகள் நோக்கிய விசயத்தில் மனம் தளராது செயல்படுவது.

இறுதியான நிலையானது நாம் நினைத்த விசயங்களை சாதித்துக் காட்டி உலகம் நம்மை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வது. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொரு விசயங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இது மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்று கொள்ளலாம்.

பச்சை திரவத்தில் இருப்பது இமேகோ செல்கள். அவை அதுவரைக்கும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. அப்படியே அவைகள் அழிந்து போய் இருந்தால் ஒரு பட்டாம்பூச்சி எனும் இலக்கை அவைகள் அடைந்து இருக்காது.

தோலினுள் பச்சை திரவம் வடிவம் ஏதும் எடுக்காமல் அப்படியே இருந்தது. இமேகோ செல்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள விரைவில் துவங்கும்.

பூங்கோதை தனக்கு அவ்வப்போது வலி ஏறுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். பாமா தேர்வுகளில் முழு கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள். யசோதை மேலும் ஒரு கருத்தரங்கு சென்று உடலில் கை கால்கள் எப்படி உருவாகிறது, அதை எப்படி எல்லாம் நம் வழிக்கு மரபணு மூலம் மாற்றலாம் என அறிவை வளர்த்ததோடு சில முக்கிய நபர்களின் தொடர்பும் பெற்றுக் கொண்டாள்.

இந்த பூமியில் இருக்கும் நீர் எல்லாம் ஒரு காலத்தில் தான் ஒரு மழை என்று அறியாது. பச்சை திரவமாக இருந்த இமேகோ செல்கள் செயல்பாட்டினைத் தொடங்க ஆரம்பித்தது. இதில் ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவெனில் கம்பளிப்பூச்சியாக இருந்தபோது இருந்த நிகழ்வுகளை எல்லாம் அந்த செல்கள் நினைவில் சுமந்து கொண்டு இருப்பதை ஒரு ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.

ஒரு பட்டாம்பூச்சி உருவாக ஒவ்வொரு நிலையில் ஒரு வாரம் என குறைந்தது ஒரு மாதம் ஆகிறது. எப்படி துளசிச் செடி இலையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தன்னில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தயார் ஆனதோ அது போல தலைகீழாக தன தலையைத் திருப்பியபடி வெளி உலகுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தது பூங்கோதையின் குழந்தை.

அடுத்த சில தினங்களில் வலி அதிகம் இருப்பதாகத் துடித்தாள் பூங்கோதை. பாப்பாத்திதான் உடனே நாச்சியாருக்கு தகவல் சொல்லி வசுதேவன் வாகனத்தை தயார் செய்து விருதுநகர் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

பரந்தாமன் கோவில் கதவு அடைக்கும் நேரம் வரை உருவமாக அங்கே நின்று கொண்டு மனம் எல்லாம் பூங்கோதை மீது நிலைத்து இருந்தது. பாப்பநாயக்கன்பட்டிக்குத் தகவல் சொல்லி கோவிந்தனை கோவிலை மாலை முழுதும் பார்த்துக் கொள்ள தகவல் சொன்னான் பரந்தாமன்.

துளசிச் செடியில் பட்டாம்பூச்சியின் உருமாற்றம் நிகழ்த் தொடங்கி இருந்தது.

(தொடரும்)

Saturday 5 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15

15. மனித உறவுகள்

பாமாவின் முடிவைக் கேட்டு மிகவும் அச்சம் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள். பாமா தனது முடிவில் உறுதியாக இருந்தாள். ஏதேனும் ஒன்றை நேசித்தல் என்பது பெரும் வரம், அதிலும் எத்தனை மிரட்டல்கள், துயரங்கள் வந்தாலும் அந்த நேசிப்பை விட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது அதனிலும் பெரும் பேரின்பம்.

''நம்மை விட்டு அங்க போய் இருக்கனும்னு முடிவு பண்ணினப்பறம் நாம என்ன பண்ண முடியும், எப்படியும் கல்யாணம் பண்ணி இன்னொரு குடும்பம்னு போக இருக்கிறவகதானே இப்பவே போகட்டும்'' பாமா மனம் மாறாமாட்டாள் எனும் முடிவுக்கு வந்த தந்தை வராகன் சொன்னார்.

''நீங்க இரண்டு பேரும் என்னோட வந்து இருங்க'' பாமா தனது ஆசையை எவ்வித குழப்பம் இன்றி கொண்டு செல்ல ஒரு யோசனை சொன்னாள்.

''இல்லைம்மா, நாங்க வாராவாரம் உன்னை வந்து பாக்கிறோம், நீ மட்டும் அங்கே போய் இரு, நல்லமுறையா பரீட்சை எல்லாம் எழுது, நல்ல மார்க் எடு அது போதும் எங்களுக்கு'' வராகன் பேச பாமாவை பார்த்த வண்ணம் இருந்தார் ருக்மணி.

''என்னம்மா ஒன்னும் சொல்லலை'' பாமா சொன்ன மறுகணம் பாமாவை கட்டிப்பிடித்து அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னார் அவளது அம்மா.

''தைரியமா போய் வேலையைப் பாரு, அவர் சொன்ன மாதிரி நாங்க வந்து உன்னைப் பார்க்கிறோம். பல தடவை நீ சில விசயங்களுக்கு தயங்கினப்ப நான் சொன்ன கதைதான். இதே போல ஒரு நிலைமை எனக்கு வந்தப்ப உன்னோட பாட்டிதான் எனக்கு தைரியம் தந்து வெளியூருக்குப் படிக்க அனுப்புனது. ஊருல எல்லோரும் எதுக்கு அவ்வளவு தூரம் படிக்க அனுப்பனும்னு சொன்னப்ப என்னோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி நடக்கனும்னு முழு சுதந்திரம் கொடுத்தது உன் பாட்டிதான், அப்படிப்பட்ட அம்மாவோட பிள்ளையா நான் இருந்துட்டு தேவை இல்லாம பயப்படுறது தப்பு''

பாமாவுக்கு அம்மாவை நினைத்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகில் உங்கள் விருப்பம் போல வாழ இயலாமல் போவது பெருஞ்சாபம். எப்பாடுபட்டாவது உங்களது விருப்பம் போல உலகில் இந்த வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

பாமாவுக்கு பெருமாள்பட்டியும், பெருமாள் கோவிலும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து போயின. ஸ்ரீரங்கம் செல்கிறேன் எனச் சொல்லிச் சென்ற பாட்டியை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் மேலிட்டது. தனது தேர்வுகள் முடியும் வரை காத்திருப்பது என முடிவுக்கு வந்தாள் பாமா.

பரந்தாமன் துளசிச் செடிகளின் நிலை கண்டு மிகவும் வருத்தம் கொண்டவன் ஆனான்.

''கோதை, அந்த பட்டாம்பூச்சிக்காக இப்படி இந்த துளசிச் செடிகளை வதைக்கிறது எனக்கு நல்லதாகவே படல. மனசுல என்னமோ ஓடுது. இந்த துளசி செடி இல்லாம வேறு எந்த ஒரு செடியில போய் முட்டை போட்டு வளர்ந்து இருக்கலாம்ல உலகத்தில் இல்லாத அதிசயமா ஒரே ஒரு முட்டை போட்டு அதுவும் துளசிச் செடி இலைகள் எல்லாம் நாசாமப் போகுது''

''உங்களுக்குத்தான் தேவை இல்லாம சஞ்சலம், பெருமாளுக்கு அது பக்கத்தில இருக்க துளசிச் செடி இலைகளை எடுத்துப் போய் தீர்த்தம் பண்ணித் தந்தா ஆகாதுன்னு இருக்கா, எதுக்கு இப்படி கவலைப்படுறீங்க''

''உனக்கும் நம்ம பிள்ளைக்கும் எதுவும் ஆகாம இருக்கனும், அது போதும்''

''உங்க பெருமாளே ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு உகந்ததுனு சொல்லி இருக்காரு அது போல இந்த பூச்சி உண்ட இலைகளை வேணாம்னா சொல்லப் போறாரு''

''எதுக்கு இப்படி எல்லாம் பேசற கோதை, பல வருசங்களுக்கு அப்புறம் இப்பதான் நமக்கு ஒரு புள்ளை வரப்போகுது இந்த நேரத்தில பெருமாள் மேல எதுக்கு நிந்தனை''

''நான் எங்க நிந்தனை பண்ணினேன், இருக்கிறதைத்தான் சொன்னேன்''

''மனசுக்கு ஒருமாதிரியா இருந்தது கோதை, அதுதான் மத்தபடி ஒன்னும் இல்லை''

''எனக்கும் நான் செத்துப் போயிருவேனோனு நினைப்பு வருது''

பரந்தாமன் தனது கண்கள் குளம் போல நிறைய பூங்கோதையின் வாயினை இரு கைகளால் மூடினான்.

''அப்படி எல்லாம் சொல்லாத கோதை''

பரந்தாமனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் கொட்டின.

''என் மேல அவ்வளவு பிரியமா, குழந்தை இல்லாதப்ப கூட என் மேல இத்தனை கரிசனத்தோட இருந்தீங்க''

எதுவும் சொல்லாமல் பூங்கோதையை கட்டிக்கொண்டான் பரந்தாமன். இவ்வாழ்வுதனை அழகுற இரசித்து வாழ்வதற்கு எவரேனும் ஒருவரை அல்ல, நமது மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவரை எப்போதும் நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மனிதர்கள் இந்த பட்டாம்பூச்சிகள் போலவே மனமாற்றம் கொள்ளும் நிலையை நான்காகப் பிரித்துக் கொள்கின்றனர். அது பட்டாம்பூச்சிகளின் வாழ்வு சுழற்சி போலவே இருக்கிறது என்பதாக சிலரது எண்ணங்கள்.

பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன்னர் தனது பழைய தோல்களை பலமுறை கழட்டி எறிந்து அதன்பின் கூடு கட்டி அதனுள் தன்  உடலையே திரவ நிலைக்கு மாற்றி அதில் இருந்து சிறகுகளும், கால்களும் என புதுப்பொலிவைப் பெறுகிறதே பட்டாம்பூச்சி அதுபோல மனிதர்களும் பல்வேறு மனமாற்றங்களுக்கு உட்பட்டு புதுப்பொலிவை பெறுகிறார்கள்.

துளசிச் செடியில் வளரும் கம்பளிப்பூச்சி தனது தோல்களை சிலமுறை கழட்டி போட்டபடி துளசிச் செடி இலைகளை உண்டு வளர்ந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)