Monday 28 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 24


பகுதி 23 

கோரன் ஆசிரியர் அவனது தாய்க்கு பெரும் கொடுமையை இழைத்ததாக தனது கதையை சொல்லி முடித்து இருந்தான். அவன் மிகவும் சுருக்கமாகவே சொன்னவன் என்னை நோக்கி முறைத்தவண்ணம் இருந்தான். அவனை நோக்கி நான் மட்டுமே பேசினேன்.

''நீ சொல்வது எல்லாம் பொய்''

''உன்னை கொலை செய்தால் அந்த உண்மை தெரியும்''

கோரனின் ஆவேசம் எனக்கு ஒன்றும் இப்போது புதிதாக தெரியவில்லை. பிறரது பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள போராடினான். அதற்குள் காவல் வண்டி கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. அதைக் கண்ட கோரன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். அவனை சில மாணவர்கள் விரட்டிக்கொண்டு சென்றவர்கள் எதற்கு நமக்கு வம்பு எனத் திரும்பினார்கள். காவல் அதிகாரிகள் வேறொரு விசயத்திற்காக வந்தார்கள் என்பது எங்களுக்குப் பின்னரே தெரிந்தது.

கோரன் சைக்கோத்தனம் கொண்டவன் என முடிவுக்கு வரவேண்டி இருந்தது. நான் வாசித்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.

சைக்கோக்கள் என்போர் எவரென அடையாளம் தெரியாமல் இந்த உலகம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது எல்லோரும் ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே எனும் முடிவுக்கு வருவது பொருத்தம் ஆகாது.

தார்மீக உணர்வுகள் அற்றுப் போனவர்களை சைக்கோ என்றே அழைக்கின்றனர். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இந்த சைக்கோக்கள் இருவகைப்படுகின்றனர். ஒன்று மரபணு ரீதியாக உருவாகும் வகையினர், மற்றொன்று சூழ்நிலை காரணமாக உருவாகும் வகையினர். இவர்களால் சமூகத்திற்கு பெரும் அச்சம் உண்டாக்கப்படுகிறது. 

பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோக்கள். இந்த வகையினரின் மூளையில் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய இணைப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அப்படியெனில் ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொல்ல  வேண்டும் என உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எப்படி கோரனுக்கு வந்தது. அவனது விசயத்தில் தலையிட்டேன் என்பதற்காக என்னையும் கொலை பண்ண வேண்டும் என கோரன் இருப்பது எப்படி என யோசித்தேன்.

''என்ன யோசனை?''

''காயூ, கோரன் பத்தி என்ன நினைக்கிறே''

''நீ அவன் விசயத்தில தலையிட்டு இருக்கக் கூடாது''

''என்ன அப்படி சொல்ற''

''நிச்சயம் அவன் உன்னை கொல்ல  மறுபடியும் முயற்சிப்பான்''

''இல்லை என்னை இனி தேடி வரமாட்டான், ஆனா அவன் சொன்ன கதை பொய் அப்படின்னு எனக்குத் தோணுது''

''உண்மைன்னு இருந்தா?''

''காயூ''

''ஆமா முருகேசா, அவன் சொன்னபோது இருந்த ஆவேசம், ஆத்திரம் எனக்கு என்னமோ உண்மைன்னு தோணுது''

''இல்லை காயூ, அவன் ஒரு கதையை உருவாக்கி இருக்கான்''

''உருவாக்கப்பட்ட கதை இல்லை''

மாலை நாங்கள் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றபோது சட்டென ஒரு மறைவில் இருந்து எங்கள் முன்னால் கோரன் வந்து நின்றான்.

''நான் சொன்னது பொய்னு சொன்னல, என்னோட வாடா வந்து பாரு''

''கோரன் உன் படிப்பு எல்லாம் யோசிச்சிப் பாரு''

''டேய், எனக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை, நான் சொன்னது உண்மைடா, என்னோட வாடா''

அவனது வார்த்தைகளில் கோபமும் ஆத்திரமும் கொப்பளித்தது. காயத்ரி சற்று பயப்பட ஆரம்பித்தாள்.

''என்னோட வந்தா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், நீ வரலை, உன்னை கொலை பண்ண தயங்கமாட்டேன்டா''

''நடடா வரேன்''

''அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுடா''

''அவளும் என்னோட வருவா''

''நீ வீட்டுக்குப் போடி''

அவனது வார்த்தைகள் எனக்கு எரிச்சலைத் தந்தன. காயத்ரியை வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவளோ அவனை நம்பிப் போகாதே என சொன்னாள். அதற்குள் சிலர் கூடி விட்டார்கள்.

''வாடா''

''என்ன தம்பி தகராறு?''

''அவனை என்னோட வரச்சொல்லு''

''கூப்பிட்டா, போப்பா''

நானும் காய்தரியும் வெகு வேகமாக அங்கிருந்து நகர்ந்தோம். கோரன் எங்களை பின் தொடர்ந்தான்.

''வந்துருடா''

''நாளைக்கு வரேன் கோரன், இன்னைக்கு வீட்டுக்குப் போறேன்''

''இப்போவே வாடா''

''இல்லை கோரன்''

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். கோரன் வெளியில் நின்று கொண்டே இருந்தவன் அங்கிருந்து சென்றான்.

''போலீசில் சொல்லலாமா?''

''வேணாம் காயூ''

அரைமணி நேரம் கழித்து வேறு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் எல்லா விசயங்களையும் அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவர்

''உனக்கு இது எல்லாம் தேவையாப்பா?''

''நான் ஒன்னும் செய்யலைம்மா''

''அப்புறம் எதுக்கு அவன் உன்னை கொல்ல வரணும், கூட வா வானு கூப்பிடனும்''

''தெரியலைம்மா''

கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். எல்லோரும் உறங்கியபின்னர் நான் மட்டும் எழுந்து கோரன் வீட்டுக்குச் செல்ல நினைத்து காயத்ரியிடம் சொன்னேன்.

''நீ போகவே கூடாது''

''சொன்னால் கேளு காயூ, இதில் ஏதோ இருக்கு. உதவி பண்ணு''

''காயத்ரியை சம்மதிக்க வைத்து கோரன் வீட்டிற்கு தனியாக சென்றேன். அவனது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். கோரன் மட்டும் உறங்காமல் அறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். வாசற்கதவைத் தட்டினேன்.

''கோரன்''

கதவைத் திறந்தான்.

''உள்ளே வாடா''

அவனது குரலில் ஒன்றும் அத்தனை ஆவேசம் இல்லை. வீட்டிற்குள் சென்றேன். சட்டென கதவுகளை சாத்தி தாழிட்டான்.

''கோரன்''

''உட்காருடா''

''எதுக்கு''

''அப்படியே உட்காருடா''

உட்கார்ந்தேன்.

(தொடரும்)




Thursday 17 September 2015

எங்ஙனம் தொலைந்தீர்கள்?

அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அம்மா, நான் தொலைந்து போனால் நீ அழுவாயா? சிரிப்பாயா?

அம்மா சற்றும் யோசிக்காமல் நீ தொலைந்தால் அழவும் மாட்டேன் சிரிக்கவும் மாட்டேன் நீ கிடைக்கிற வரைக்கும் உன்னை நான் தேடுவேன்டா

அம்மாவின் அந்த சொல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது.

''பக்தா, எங்கே தொலைவதாக உத்தேசம்?''

''சாமி, நீங்கள் எப்படி இப்போது, அதுவும் நான் என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஒட்டு கேட்டுவிட்டு இப்படி குறுக்கே வந்து பேசலாமோ''

''பக்தா, உன் அன்னை அப்போதே எழுந்து சென்றுவிட்டார், அதை கவனித்துதான் நான் உள்ளே வந்தேன் ஆனால் நீயோ உன் அன்னையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறாய்''

''சாமி, அமருங்கள்''

''என்ன பக்தா, வரவேற்பு மாறுகிறதே, சாமியார் ஆக வேண்டும் என சொல்லி இருந்தாய் என்ன நடவடிக்கை எடுத்தாய்''

''அதெல்லாம் இல்லை சாமி, என் அம்மா நான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஒரேயடியாக பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்''

''பக்தா, உனக்காக நீ முடிவுகள் எடுக்காதவரை அது உன்னை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கும். நீயாக சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே உனக்கு நல்வழி தரும்''

''சாமி, எனக்கு சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசை உள்ளுக்குள் இருக்கிறது, உங்களைப் போல சுதந்திரமாக எங்கும் செல்லலாம், குழந்தை குடும்பம் என உழன்று திரிய வேண்டியது இல்லை. என்னைப்போல ஒவ்வொருவரை சென்று தேடிப்பார்த்து ஒரு கதை சொல்லலாம்''

''பக்தா, அப்படி எல்லாம் திட்டமிட்டு ஒன்றை பற்றி நீ முடிவு எடுக்காதே''

''சாமி, நான் பேசாமல் ஏதேனும் காட்டிற்கு ஓடி விடட்டுமா?''

''பக்தா, நான் உன் பின்னால் வருவேன்''

''நீங்க வந்தால் எனக்குப் பயமில்லை. ஆனால் இந்த திருமணம் தான் என்னை பயமுறுத்துகிறது. அது எப்படி சாமி இந்த மனிதர்கள் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, அது எல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லும் பதில் உனக்கு திருப்தி அளிக்காது. வா, நான் உன்னை ஓரிடம் அழைத்துச் செல்கிறேன்''

''இங்கேயே சொல்லுங்கள். வேறு எங்கும் நான் வரத் தயாரில்லை''

''பக்தா, என் தந்தை என் தாய் என எவருமே எனக்குத் தெரியாது, ஆனால் நான் பிறப்பதற்கு காரணம் அவர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நான் தந்தை ஆகும் வாய்ப்புதனை  எல்லாம் நான் தேடிச்  செல்லவில்லை, என்னை தேடி எதுவும் வரவும் இல்லை. எனக்கு ஐந்து வயது ஆன போது  நான் சாமியார் ஆனேன்''

''சாமி உங்க கதை நான் கேட்கவில்லை, மனிதர்கள் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்''

''பக்தா, உனக்கு ஒரு காதலி இருக்கிறாள் அல்லவா, அவளிடம் நீ திருமணம் செய்து கொள் என கேட்டால் அவள் மாட்டேன் என சொல்லமாட்டாள் அல்லவா, அப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்''

''எனக்கு காதலி இருப்பது என்பதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் சரி, சாமி  காதலிக்காமல் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, இதை நீ என்னிடம் கேட்பது கொஞ்சமும் நன்றாக இல்லை. எனக்கு திருமண பந்தம் என்று எதுவும் இல்லை''

''சாமி, உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்து இருக்கிறேன், அவரை திருமணம் பண்ணிக்கொள்ள இயலுமா''

''பக்தா, என்ன விளையாடுகிறாயா? யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய்''

''அப்படியெனில் என்னிடம் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்''

''பக்தா, தாய் தந்தையர் தனது மகனுக்கு மகளுக்கு இன்னார்தான் என முடிவு செய்து திருமணம் பண்ணி வைக்கிறார்கள்''

''அதையேதான் என் தாயும் செய்கிறார் சாமி, நான் காதலிக்கும் பெண்ணையே எனக்கு மணம் முடித்து வைக்க வெகுவாக போராடுகிறார். காதலித்தால் மட்டும் போதாதா, எதற்கு இந்த திருமணம் எல்லாம் எனக் கேட்டாலும் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என என்னை திட்டிவிடுகிறார்''

''பக்தா, நீ திட்டுகள் வாங்கவே பிறந்தவன், அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை, ஆனால் நீ திருமணம் பண்ண வேண்டியவன் அதில் இருந்து விலகி விட வேண்டாம்''

''எனக்குப் பிடிக்கவில்லை''

''பக்தா, பிடிக்காத விசயங்களை செய்பவர்கள் தன்னைத் தொலைத்தவர்கள் ஆவார்கள்''

''சாமி, எப்படி இப்படி எல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் என ஆச்சர்யம் கொள்கிறேன்''

''பக்தா, நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் இந்த உலகத்தின் நேரத்தை காலத்தை நடத்துகிறோம் எனும் மனப்பாங்கு ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இதனால் பல மன இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இப்போது ஓரிடத்தில் நீ இருக்கிறாய், அங்கு உன்னைச் சுற்றியே பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உனக்குள் ஒரு மாயை உருவாகிறது. நாம் இங்கே இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்பதான மாயை. உன் மீது அநேகர் பிரியம் கொண்டு உள்ளதாக உன்னுள் உவகை கொள்கிறாய். எங்கே நீ இல்லாமல் போனால் அனைவரது பிரியமும் உனக்கு கிடைக்காமல் பொய் விடுமோ என அச்சம் கொள்கிறாய், அதனால் பிடிக்காத இடத்திலும் நீ உழன்று திரிகிறாய். நீ அந்த இடம் விட்டு வெளியேறி விடு. உனக்கு ஒரு உண்மை புரியும். நீ இல்லாமலும் எல்லாம் நடக்கும், நீ இல்லாமல் கூட அவர்கள் பிரியம் கொண்டு இருப்பார், ஆக தொலைவது என்பது நமக்குப் பிடிக்காத விசயங்களை செய்வது, பிடிக்காமல் வாழ்வது என்பதுதான்.

உடலால் தொலைவது கண்டுபிடித்துவிடலாம். மனதால் தொலைந்தால் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே இப்போதே திருமண வாழ்வுக்கு எல்லாம் முடியாது என சொல்லி என் பின்னால் வா, நீ தொலையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்''

''சாமி, என் அம்மா என்னைத் தேடுவார்களே''

''பக்தா, உன் அம்மா உன்னைத் தேடவில்லை, தன்னைத் தேடுகிறார். தனக்குப் பிரியமான ஒன்றைத் தேடுகிறார். நீ அவர்களின் பிரியம்''

''அப்படியெனில் எப்படி நான் தொலையாமல் இருப்பது''

''பிடித்த விசயங்களைச் செய்''

அம்மா என அலறினேன். அம்மா என்னடா ஆச்சு என ஓடோடி வந்து விளக்கைப் போட்டார். வியர்த்து விறுவிறுத்து இருந்த நான் அம்மாவை நோக்கியபடி சொன்னேன்.

''அம்மா அந்த சுபாவோட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருமா நான் தொலையவே மாட்டேன்''.

''என்னடா அந்த சாமியார் கனவா?''

''ஆமாம்மா''

''உனக்கு மந்திரிச்சி விடனும்''

 எனக்குள் ஒரு பெரும் கேள்வி ஒன்று உங்களை நோக்கி எல்லாம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் பிடிக்காத செயல்களை எல்லாம்  செய்யும் அளவுக்கு நீங்கள் எல்லாம் எங்கனம் தொலைந்தீர்கள்? 

Thursday 3 September 2015

நமது திண்ணை செப்டம்பர் மாத சிற்றிதழ்

நமது திண்ணை சிற்றிதழை ஒவ்வொருமுறை ஒருவர் வெளியிடுவர். இதற்கு பெரிய விழா எல்லாம் இல்லை. ட்விட்டரில் இந்த சிற்றிதழின் இணைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என சொல்லி இணைப்பு தருவார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த முறை தி.மு.க மந்திரி (அவரே சொன்னபிறகு தான் எனக்குத் தெரியும்) திரு ஜெ அன்பழகன் இந்த சிற்றிதழை வெளியிட்டு இருக்கிறார். ஒரு மந்திரி ஒரு சிற்றிதழை வெளியிட முன்வந்து இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பக்க வடிவமைப்பே மிகவும் அட்டகாசம். அட்டைப்படத்தை அலங்கரிக்கும் காய்கறியை இங்கே  படித்துத் தெரிந்து கொள்ளலாம். சுபாஷினி அவர்களுக்கு நன்றி.

1. உயிருக்குள் ஓர் உயிர் - எமி

குழந்தையைப்  பற்றிய, தாய்மையைப் பற்றிய உயிருக்குள் ஓர் உயிர் எனும் அற்புதமான  கவிதையை எமி எழுதி இருக்கிறார். பிள்ளை பெறுவதால் அல்லது குழந்தையை சுமப்பதால் அழகு குறையும் எனும் கவலை இரண்டாவது பத்தியில் தென்படுகிறது. தூக்கத்தை மறந்தேனே என சொல்லப்பட்ட வரிகளுக்கு பின்னர் ஓர் விளக்கமும் இருக்கிறது. உலகம் உருண்டை நம்பினேன் எனும் எண்ணமும் வெளிப்படுகிறது நல்ல நல்ல உவமைகள் கொண்டு இருக்கும் இந்த அழகிய கவிதையில் எழுத்துப்பிழைகளைத்  தவிர்த்து இருக்கலாமோ? தேவை இல்லைதான், அந்த அழகிய குழந்தையை தாய்மையைச்  சுமந்த கவிதையில் ஏது  குறை என எமி கருதி இருக்கலாம்.

2. வளர்த்து விடுங்கள் - வருண் 

மரம் பேசும் கவிதையாக மனிதம் வேண்டும் கவிதையாக அமைந்து இருக்கிறது. இப்போதெல்லாம் மரத்தின் மீதான அக்கறை பெரும்பாலான மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. வளி  இல்லாமல் திண்டாடும்போது நல்ல கவிதை வரி. வி'சுவாசமாக நல்ல வார்த்தை நயம்.

ராஜ் மற்றும் அம்ஹர் அவர்களின் அழகிய படங்கள் சிற்றிதழை அலங்கரிக்கின்றன.

3. ஸ்ரீஇராமானுஜர் - சுஷீமாசேகர் 

மிகவும் சுவாரஸ்யமான தொடர் என்றால்  மிகையில்லை. திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார், கோவிந்தபட்டர், ஸ்ரீ போதாயன மகரிஷி என பலரது வாழ்வோடு ஸ்ரீ இராமானுஜர் வாழ்வு இணைந்து இருக்கிறது. அன்பில்  மனம் வைத்தால் அனைவரும் மனம் மாறுவர் என்பதற்கு இவரது திருமலைக்கு சென்ற காட்சி விளக்குகிறது. கோவிந்த பட்டர் தான் கொண்ட அன்பை மறக்காமல் பின்னர் இவரின் அன்பை பெற்ற காட்சி சிறப்பு. கூரத்தாழ்வாரின் மனப்பாடம் பண்ணும் ஆற்றல் நான் படித்த  பள்ளியில் ஒரு சில மாணவர்களை  நினைவுகூற  செய்தது. அவன் எல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதும் அப்படியே ஒப்பிப்பான்  என்பார்கள்.எனக்கும் சரஸ்வதி தேவி கனவில் வரமாட்டார்களா எனும் நிறைவேறாத கனவு உண்டு.

ஸ்ரீ ஆண்டாளின்  ஆசையை இவர் நிறைவேற்றிய கதையை ஓரிடத்தில் சொன்னபோது எனக்கும் பேசத் தெரியும் என சொன்னார்கள். இந்த கதையைப் படித்தபின்னர் நிறைய பேசலாம் போல. நன்றிகள் அம்மா.

4. தலைகவசம் - ப. மணிகண்டபிரபு 

தலைக்கனத்தோடு செல்லவில்லை,  தலையில் கனத்துடன்  செல்கிறேன் என அருமையான கவிதையை எழுதி இருக்கிறார் மணி. இவரது சிந்தனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். முகமே அடையாளம் எனினும் நம் உடல் வைத்து நம்மை யார் என கண்டுபிடிப்பவர் உள்ளனர் என ஒரு வரி கவிதைத்துவம். நமது மனதுக்குள் புன்னகைப்பது தெரியாது என்பது போல தலை கவசம் அறிந்தால் முகம் புன்னகைப்பது தெரியாது என்பது போல ஒரு வரி. மிகவும் சிறப்பு.

5. அப்பா - எம்சீ189 (பாமரன்) 

நல்லதொரு குட்டிக்கதை. அதுவும் கடைசி வரி மிகவும் முத்தாய்ப்பு. நாம் நல்லது செய்தால் நமது கெட்டது எல்லாம் மறைந்து போகும். படிப்பு என்பது எல்லாருக்கும்  இல்லை. எவ்வளவு படிச்சாலும் தலையில் ஏறமாட்டேங்குது ஏறமாட்டேங்குது என சொல்பவர்களிடம் எல்லாம் நன்றாக இன்னும் முயற்சி செய்யுங்கள் என சொன்னாலும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களே அதிகம் தோல்வி அடைகிறார்கள். படிப்பு மட்டுமே சமயோசித புத்தி தராது  என்பதையும் அப்பாவின் அன்பையும் அறிவுறுத்தும் கதை.

6. கிச்சன் டைம் கோவக்காய் பொரியல் - நளபாகம் ரவி 

கோவக்காய் அட! மேலதிக விபரங்கள் இங்கே  இங்கே இதை வினிகரில் போட்டு விற்பார்கள். அப்படியே கடித்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும். வெள்ளரியின் சிறு வடிவம். இவர் எழுதுவது எல்லாம் மிகவும் எளிதாக இருக்கிறது. செய்வதுதான் கடினமாக படுகிறது. ஒருமுறையேனும் நண்பர் சொல்வதை சமைத்து இங்கே ஒரு பதிவு எழுதிவிட வேண்டும்.

7.நேர்காணல் திருமதி ஜானகி சுஷீமாசேகர் 

அன்பான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த உலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கிற ஒரு ஏக்கம் வந்துவிட்டுப் போகும். எத்தனை அழகிய மனிதர்களால் ஆனது உலகம். ஒருவரின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருப்பதால்தான் பல திறமையாளர்கள் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மிகவும் அருமையான பேட்டி   என்றே சொல்ல வேண்டும். குறுகிய நேரத்தில் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அழுகை, அன்பு, ஆர்வம், இசை என எல்லாம் அறிந்து கொண்ட வேளையில் ஒரு விருதுவை புறக்கணித்த தைரியம் வெகு சிறப்பு. செத்த பின்பு ஞானி அவசியமில்லை. கடைசியில் வாசித்த வரிகள் கண்களில் நீர்த்திரள செய்தது. அற்புதமான மனிதர்களை இவ்வுலகம் பின்பற்றவேண்டும்.

கேசவ் அவர்களின் ஓவியங்கள் வெகு சிறப்பு. அருமை. மகளதிகாரம், அவளதிகாரம், மதுவிலக்கு பற்றிய அழகிய டிவிட்கள்.

8. பாடல் பரவசம் - உமா க்ருஷ் 

அப்படியே சிறிய வயது நினைவுகளை முதல் நான்கு பத்திகளில் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி  விடுகிறார். இளவயது இசையோடு ஒட்டிய கிராமத்தின் நினைவுகள் சுகமானவை என்பதை நினைவுபடுத்துகிறது. பாடல் பற்றிய பரவசத்தில் மூழ்கும் முன்னர் பாடல் பெற்ற சிறப்பில்  ஒரு நடிகரின் வரலாறு தென்படுகிறது. தேவா இல்லையென்றால் தமிழ் இசையில் இல்லை கானா என்றாலும் ஒரு நல்ல இசை அமைப்பாளாராக இருக்கப்போய்த்தான் பல படங்களுக்கு இசை அமைத்து தேனிசை தென்றல் என பட்டம் பெற்றார் தேவா என அறிய முடிகிறது. மிகவும் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார் வாலி. இந்த வரிகளை வாசிக்கும்போது கடினமாக இருக்கும், ஆனால் இதை இசைக்குள் நுழைத்து இனிமையாக்கிய பெருமை பாடகர்கள், இசை அமைப்பாளருக்குச்  சேரும். வெட்டப்பட்ட வரிகள் கண்டு இவரது கோபமும் புரிகிறது. அருமை.

சிற்றிதழ் ஆசிரியரின் தியாகராஜ பாகவதர் குறித்த விஷயங்கள்  அருமை, கைது செய்யப்பட்டு பின்னர் என்ன ஆனது என எழுதி இருக்கலாம்தான்.

அழகிய வடிவமைப்புகளுடன் மின்னி வானம் தொட்டு  சிறக்கிறது நமது திண்ணை சிற்றிதழ்.