Tuesday 30 June 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் கதையின் முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. நான் ஒரு இந்து இல்லை என்பதாலோ இந்து கலாச்சாரம் பற்றி அறிந்தது இல்லை என்பதாலோ எனது ஆன்மாவைத் தொடவில்லை. எனக்குப் புரியாத காரணத்தினால் பக்தி பாடல்களை எல்லாம் வாசிக்காமல் தாவினேன்.

ஈஸ்வரி கதையில்  வரத் தொடங்கியதும் கதையை மிகவும் சுவராஸ்யத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். காதல் கடவுளை வெல்லுமா என அறிந்து கொள்ள பேராவலுடன் இருந்தேன். முடிவில் நான் எண்ணியது போல காதல் சிவனை வென்றது என சொல்லலாமா?

கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையிலான காதல் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களின் பரஸ்பர புரிதல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அதிலும் குறிப்பாக ஈஸ்வரி. அவளுக்கு தனது கணவன் மீது பொறாமையோ சந்தேகமே வரவில்லை. அது உண்மையான பரிபூரண காதல். காதல்தான் எல்லாம். அந்த பகுதி எல்லாம் அதியற்புதமாக இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்குள் காதல் அத்தனை இல்லை. அதற்கு மதுசூதனின் பிடிவாதமே காரணம். மதுசூதனின் கதை முடிவு அவனது பாழான வாழ்வு குறித்து சொல்லி இருந்து இருக்கலாம்.

கதிரேசன் மற்றும் வைஷ்ணவியின் நட்பு பிரமாதம். கதிரேசன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, அவன் வைஷ்ணவியிடம் பேசும் பாங்கு, வைஷ்ணவியை நடத்தும் முறை என்னை கவர்ந்தது. கதையில் சில வார்த்தைகள், சில விசயங்கள் புரியாமல் இருந்தது. முடிவில் காதல் தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும். காதல் அதிசக்தி வாய்ந்தது.

நன்றி

ஹனுமலர்
மலேசியா


Thursday 25 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 8

பகுதி 7 

8. நினைவுகள்

திருமால், அவரது மனைவி யோகலட்சுமி, மகன் தீபக், மகள் தீபா என அனைவரும் வந்தார்கள். பாரதியையும், கிருத்திகாவையும் நன்றாக நினைவு இருந்தது.

''ரொம்ப நேரமா காத்து இருக்கீங்களா?''

''இல்லை சார்''

''சரி உள்ளே வாங்க''

வீட்டினுள் நுழைந்ததும் அவர்களை அமரச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார் யோகலட்சுமி. தாங்கள் வாங்கி வந்த பழங்களை எடுத்துத் தந்தார்கள். தீபக் வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். அவனது பேச்சு அத்தனை இனிமையாக இருந்தது.

''என்ன பாரதி, என்ன விஷயம் சொல்லுங்க''

''பெருமாள் தாத்தா பிறந்துட்டார், ரெட்டக்குழந்தைக, தாயும் சேயும் சுகமாக இருக்காங்க''

''ரொம்ப சந்தோசம், கேட்கவே மனசு மகிழ்ச்சியா இருக்கு''

''முக்காலமும் உங்களுக்குத் தெரியும் தானே''

அப்போது நீர்மோர் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, நீங்கதானே சொன்னீங்க, சாருக்கு முக்காலமும் தெரியும்னு''

கிருத்திகா சொன்னதும் யோகலட்சுமி சிரித்தவண்ணம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். பாரதி சாத்திரம்பட்டி சென்ற விசயம்தனை சுருக்கமாக சொன்னாள்.

''எனக்கு அப்படி எல்லாம் ஒண்ணும்  தெரியாது. முக்காலம் பற்றிய கலை சொல்லித்தாங்கனு குழந்தைகள் கேட்பாங்க, நான் சும்மா சரினு  சொல்வேன். மற்றபடி எனக்கு எக்காலமும் தெரியாது''

''மாதவிக்கு எல்லாம் தெரியுதே''

''அப்போ நீங்க அதை மாதவிகிட்டதான் கேட்கணும். என்கிட்டே கேட்டா எப்படி? பெருமாள் தாத்தா பிறந்தார்னு சொன்னது நீங்க, அவர் எப்படி பிறக்க முடியும். இறந்தவர் பிறப்பது இல்லை. நினைவுகளுடனே மனிதர்கள் இறந்து போவார்கள். டிமென்சியா நோய் பற்றி நீங்க படிச்சி இருப்பீங்கதானே. ஒரு மனிசனோட மூளைகளில் ஏற்படும் பாதிப்பு நினைவு, மொழி செயல்பாடு என எல்லாத்தையும் சிதைச்சிரும். அப்படி இருக்கறப்ப ஒரு மனிசன் இறந்துட்டா அவனது செல்களின் மூலம் நினைவுகளை திரும்ப கொண்டு வர முடியும் அப்படிங்கிறது முடியாத காரியம். இப்போ இனி வரும் காலங்களில் என்ன நடக்கும்னு யூகிச்சி சொல்லக்கூடிய திறன்கள் என்கிட்டே இருக்குறமாதிரி தெரியலை. மாதவிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கும்னா அது ஆச்சரியம்தான்''

''மெடிக்கல் பத்தி எல்லாம் பேசறீங்க, நீங்க என்ன படிச்சி இருக்கீங்க'' பாரதியின் ஆர்வம் அதிகம் ஆனது.

''நான் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கேன். மேற்கொண்டு படிக்க எனக்கு விருப்பம் இல்லை. இவளும் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கா. ஆனா இப்போ பல குழந்தைகளைப் படிக்க வைக்கிற திருப்தி இருக்கு. நினைவு வைச்சிக்கிற செல்கள் பத்தி உங்க அபிப்ராயம் என்ன''

தீபக், தீபா ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். கிருத்திகா அவளை கவனித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள். திருமால் என்ன பேசுகிறார் என அந்த சிறு குழந்தைகளின் கவனிப்பு கிருத்திகாவிற்கு ஆச்சரியம் தருவதாக அமைந்து இருந்தது. பாரதிதான் பதில் சொன்னாள்.

''நம்ம உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் செல்கள் நினைவுத்தன்மை கொண்டவைகள். ஒரு வேக்சீன் போட்டம்னா, அவை நமது உடலில் உள்ள செல்களைத் தூண்டி ஆண்டிபாடீஸ் உண்டாக்கும் அப்படியே நினைவு செல்கள் உண்டாக்கும். அது மட்டுமில்லாம திருப்பி அதே நோய் வந்து தாக்கினா அதை சரியாக கணிச்சி நம்மை பாதுகாக்கும்.''

''அந்த செல்களின் பணி  அது. இப்போ கருவை உண்டாக்கும் செல்கள் எல்லா செயல்களை தன்னகத்தே வைத்து இருக்கும்போது தாய் தந்தை நினைவுகளை சுமந்து வருதா''

பாரதிக்கு அந்த கேள்வி சற்று குழப்பமாக இருந்தது. நினைவுகளை சுமந்து வருமா என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். தீபக் என்ற யோகலட்சுமியின் குரல் கேட்டு தீபக் சமையல் அறைக்கு சென்றான்.
அவனைத் தொடர்ந்து தீபாவும் சென்றாள்.

''வாய்ப்பு இல்லை'' பாரதி சட்டென முடித்தாள்.

''அப்படின்னா பெருமாள் தாத்தா நினைவுகளுடன் வலம்  வரமாட்டார். அந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள்தான். ஆனா உங்களுக்கு வாசன் எல்லோருக்கும் அது பெருமாள் தாத்தா. உங்கள் எண்ணங்களை அந்த குழந்தைகள் மீது திணிக்கப் பார்ப்பீங்க''

பாரதி மிகவும் அமைதியானாள். தீபக், தீபா குடித்த வண்ணம் எங்கே அமர்ந்து இருந்தார்களோ அங்கே அமர்ந்து இருந்தார்கள்.

''மாதவி, உங்களைப் பார்க்க கிருத்திகாவை என்னிடம் கூப்பிட்டு போகச்  சொன்னாள்''

''என்ன காரணம் என நீங்க கேட்டு இருக்கலாமே''

''என்ன காரணம்னு நீங்க சொல்லுங்க''

''எதற்கும் ஒரு துணையாக இருக்கட்டுமேனு இருக்கலாம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மனிதர்கள் அப்படின்னு ஜோசியர்கள், நாடி பார்ப்பவர்கள். மை தடவி சொல்பவர்கள், குறி பார்ப்பவர்கள், ரேகை பார்ப்பவர்கள் அப்படின்னு நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. அவர்களுக்கு அது வேலை. ஒரு சிலர் சொல்வது நடக்கிறது அப்படின்னு நம்பும் மனிதர்கள் இப்போ மட்டுமில்லை எப்பவுமே உண்டு, இப்போ அதிகமாகிட்டே வராங்க. அதுமாதிரி எதிர்காலம் சொல்றது மாதிரி நான் இருப்பேன்னு நீங்க நினைச்சா என்னை மன்னிக்கனும் எனக்கு அப்படிப்பட்ட ஞானம் அறிவு சிந்தனை எதுவுமே இல்லை.

மாதவிகிட்ட நான் இதுவரை ஒரே ஒருமுறைதான் பேசி இருக்கேன். அதுவும் திருமலைக்குப் போகறப்பபார்த்துப் பேசியதோடு சரி. ரொம்ப அறிவான பொண்ணு. ஆனா நீங்க சொல்றமாதிரி முக்காலமும் உணர்ந்த பெண் மாதிரி எனக்குத் தோணலை. எதேச்சையாக அவங்க சொல்றதுக்கு நீங்க அர்த்தம் கண்டுபிடிச்சி அந்த பொண்ணுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கும்னு நம்புறீங்க''

''நீங்க சொன்னதுதான் சார் உண்மை, இவதான் தேவை இல்லாம மாதவியை கடவுள் ரேஞ்சுக்கு பேசுறா''

கிருத்திகா பட்டென சொன்னதும் திருமால் சிரித்தார். அப்போது பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, அதுக்குள்ளே பண்ணிட்டீங்களா, கடையில் வாங்க மாட்டீங்களா''

''இல்லைம்மா, இதெல்லாம் சின்ன சின்ன வேலைகள்தானே''

''நான் கடவுள் ரேஞ்சுக்கு எல்லாம் மாதவியைப் பத்தி பேசலை. ஆனா அவளுக்கு சில விசயங்கள் முன்கூட்டியே தெரியுது. அவள்கிட்ட பழகினப்ப எனக்கு எதுவும் தெரியலை. ஆனா அவ பேசறதை வைச்சிப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. அவளுக்கு பல விசயங்கள் தெரியுது''

''பாரதி, நீங்க கிருத்திகா பேச்சு கேளுங்க. நம்முடைய செல்களுக்கு எப்படி சரியா கால் உண்டாக்கணும், கை உண்டாக்கணும்னு தெரியும். எல்லா குண  நலன்கள் கொண்ட செல்கள் எப்படி மற்ற குணநலன்களை மறைச்சி ஒன்றை மட்டும் உருவாக்க துணிகிறது''

பாரதிக்கு இது சற்று ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் இவர் எங்கு சென்று படித்தார் என்றே கேட்க வேண்டும் போலிருந்தது. கிருத்திகா குறுக்கிட்டாள்.

''எல்லாமே கருவில் சேர்த்து வைக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி வெளிப்படுகிறது. இதை ஆர்கநோஜெநிசிஸ் அப்படின்னு சொல்வாங்க. நாங்க அதை எல்லாம் படிக்கிறது இல்லை. எங்க மருத்துவத்தில் எப்படி என்ன நோய் இதுமாதிரி படிப்போம். இவதான் ஜெனிடிக்ஸ் எல்லாம் படிக்கணும்னு ஆர் என் ஏ எல்லாம் படிச்சிட்டு இருப்பா. எனக்கு ஒரு டாக்டர் ஆனா போதும்''

''கிருத்தி, ஆர் என் ஏ  பத்தி இப்போ எதுக்கு? நான் இன்னும் அதுபத்தி வாசிக்கலை, உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க''

''இப்போ ஆண்  பெண் இணைந்து உண்டாகிற கரு ஒரு குழந்தையா மாறும்போது இருவரின் விசயங்களை கொண்டு வருது. ஆனா பெருமாள் தாத்தா உருவான கரு அப்படி இல்லை. விஷ்ணுப்பிரியன் ஏதோ  பண்ணிதான் அந்த செல்களை அவர் ஒரு குழந்தையா உருவாக வழி பண்ணி இருக்கார். எனக்கும் தெரியலை பாரதி. இப்பவாச்சும் நம்புங்க எனக்கு முக்காலம் மட்டுமில்லை இக்காலமும் தெரியாது.''

கிருத்திகா என்ன நினைத்தாள் எனத் தெரியவில்லை. அங்கிருந்த பலகாரங்கள் சாப்பிட்டு முடித்தவள் இதற்கு மேல் நமக்கு என்ன வேலை என்பதுபோல பாரதியைப் பார்த்தாள். பாரதிக்கு திருமாலிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. இவருக்கு இப்படி இத்தனை விசயங்கள் தெரிகிறது.

மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் என்று ஒன்று உண்டு. மனதில் ஒன்றை நிறுத்திக்கொள்ளும் தொடர்ந்து கொள்ளும் ஆசை அது. ஒரு சிலர் அதிலேயே ஊறி இருப்பார்கள். அதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். சிலருக்கு பல விசயங்களில் ஆர்வம் இருக்கும். பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்களது சிந்தனையை குறிப்பிட்ட வழியில் செலுத்தினால் மட்டுமே ஒன்றில் சாதனை பண்ண இயலும். திருமால் பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டு இருப்பவராகவே தென்பட்டது.

''போவோமாயா''

''இரு கிருத்தி, கொஞ்ச நேரம் இருக்கலாம்''

''சாப்பாடு தயாராகிக் கொண்டு இருக்கு, சாப்பிட்டே போங்க, வேற எதுவும் கேட்கணுமா?''

''உங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார வாரம் ஏதேனும் ஒரு நேரம் தந்தா உங்களை வந்து பார்க்கிறேன்''

''ஆசிரமத்திற்கு வார வாரம் வாங்க, நான் பெரும்பாலும் அங்கதான் இருப்பேன்.

பாரதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது மாதவியிடம் இருந்து போன்  வந்தது. வாசனுக்கு என்ன நேர இருந்தது, குளத்தூரில் என்ன நடந்தது என எல்லா விசயங்களையும் சொன்னவள் கிருத்திகா நான் சாதாரண பொண்ணுனு  சொன்னாளா அதுக்குத்தான் அவளை கூப்பிட்டு போக சொன்னேன். நீ முன்ன பார்த்த திருமால் வேற இப்போ பார்த்த  திருமால் வேறனு  தெரிஞ்சிகிட்டியா என்ற அவளது சொல் கேட்டு அப்படியே போனை திருமாலிடம் எதுவும் சொல்லாமல் கொடுத்தாள்.

''எப்படிமா என்கிட்டே போன் வந்ததுன்னு கண்டுபிடிச்ச, நல்லா இருக்கேன்மா. சாத்திரம்பட்டி போனதாக கேள்விபட்டேன்''

மறுமுனையில் மாதவி என்ன சொல்கிறாள் என பாரதிக்கு கேட்கவில்லை. ஆனால் போன்  கைமாறியது எப்படி அவள் அறிந்தாள்  என ஆச்சரியம் கொண்டாள்.

''மெடிக்கல் படிக்கிற பொண்ணுகதானே, நிறைய சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீ பண்ணப்போற மூளை ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள். பாரதிகிட்ட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் உன்னோட ஒரே ஒரு தரம் தான் பேசினேன்னு''

பாரதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மாதவி குறித்து சற்று எரிச்சல் உண்டாகத் தொடங்கியது. எதற்கு தன்னிடம் அவள் குறித்த விசயங்களைச் சொல்ல மறுக்கிறாள் எனும் கோபத்தின் வெளிப்பாடு அது.

''சரிமா, பாரதிகிட்ட கொடுக்கிறேன், நீ சொன்னமாதிரி பாரதி முகம் கோபமாகத்தான் மாறிக்கிட்டு வருது''

அந்த வார்த்தைகள் பாரதியை மேலும் ஆத்திரமூட்டியது. தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொண்டாள்.

''சரி மாதவி, அப்புறம் பேசறேன்''

எதுவும் பேசாமல் துண்டித்தாள். அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாதவளாய் பாரதி தென்பட்டாள். கிருத்திகாதான் பாரதியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றாள். பாரதியின் கண்கள் குளமாகின. கிருத்திகா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. மாதவியின் செயல்கள் தனக்கு எரிச்சல் அளிப்பதாக அழுகையின் ஊடே சொன்னாள்.

''என்னை எவளோனு அவ நினைகிறதால என்கிட்ட கூட சொல்லமாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறா, அப்படி சொல்லாட்டியும் பரவாயில்லை எதுக்கு இப்படி பூடகமாகவே பேசணும். என்னை வெறுப்பேத்த இப்படி பண்றா. அங்க என்னோட பெரியம்மா முன்னமே வந்து இருக்கக்கூடாதா மாதவினு சொல்றாங்க. இவளுக்கு அப்படி ஏதேனும் தெரிஞ்சி இருந்தா எங்க பெரியப்பாவை எதுக்கு இப்படி தனியே தவிக்க விடனும்''

''விடுயா, அதைப் பத்தி எதுவும் நினைக்காதே. வா, சாப்பிட்டு கிளம்புவோம், சார் பார்த்தா தப்பா நினைப்பார். சொன்ன கேளுயா''

''இல்லை கிருத்தி, லீவு வரப்ப நேரா மாதவியை சந்திச்சி பேசணும். அவ என்னதான் மனசில நினைச்சிட்டு இருக்கா''

''சரிய்யா இப்பா வாய்யா போகலாம்''

பாரதியின் மனம் துடிதுடித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Wednesday 24 June 2015

வெட்டித் தருணங்கள் - 4 (டிவிட்டர் உலகம்)

பகுதி - 3   இனி... கதையில் வருவன எவரையும் குறிப்பிடுவன அல்ல. உங்களை குறிப்பிடுவதாக நீங்களாக நினைத்தால் ஒன்று மாறிக்கொள்ளுங்கள், கதையை மாற்ற இயலாது. 

4. ''நன்மையையும் தீமையும் கலந்த ஓர் நிழல் உலகம்''

ஒரு மாதம் நன்றாக கவனித்தேன். நிறைய படித்த மேதாவிகள் கண்ணுக்குத் தென்பட்டார்கள். அந்த ஒரு மாதத்தில் நான் அமைதியாக கவனித்தபோது ஒவ்வொருவனும் கேவலமாக நடந்து கொண்டதை இங்கே எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அப்போது நான் எதுவுமே எழுதாமல் இருந்தேன். ட்விட்டரில் டைம் லைன். நேரடி தகவல் தொடர்பு என இருவகை இருந்தது. இதில் என்னைப் பின்தொடர்ந்த ஒருத்தி என்னிடம் நேரடி தகவல் மூலம் படு கேவலமாக பேசினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் நோக்கம் ஒரு விலைமகளை விட கேவலமாக இருந்தது. இவள் எல்லாம் படித்ததற்கு செத்துப் போயிருக்கலாம் என்றே எண்ணினேன். எனது ஆசைகளைத்  தூண்டி சபலம் கொள்ளும் கயமைத்தனம் அது. நல்லவேளையாக நான் எதுவும் திரும்பி பேசாமல் இருந்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. அது என்னவெனில் பேக் ஐடி எனும் மடத்தனம்.

அது என்னவென கேட்கிறீர்களா, அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் பெயர் கொண்டு அற்பத்தனமாக நம்மிடம் நடந்து கொள்வான். எனக்கு என் தலைவர் விஜய் பற்றியே பெருமை பேச நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு கேவலமான எண்ணம் கொண்ட கொடிய மிருகங்கள் நடமாடும் தளம்  ட்விட்டர் என எனக்குத் தெரியவில்லை. டிவிட்டருடன் சேர்த்து பேஸ்புக் திறந்து வைத்தேன். அதில் தானத்தலைவர் தங்கத்தலைவர் இளைய தளபதி விஜய் அவர்களின் படத்தை வைத்து கொண்டேன். ஒவ்வொரு பாடலாக அதில் எழுதுவது அப்போது வழக்கமாக்கி கொண்டேன்.

இந்த ட்விட்டரின் டைம் லைனில் பெண்ணின் கணவன், பிள்ளை, அம்மா அப்பா என கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் கண்டேன். ஹாஷ்  டாக் அதாவது எழுதி உலக அளவில் ட்ரென்டு  ஆக்குவது என இருந்தது தெரிய வந்தது. முதலில் =vijaysuperstar என ட்ரெண்டு பண்ணினேன். என்னைக் கண்டு பல விஜய் ரசிகர்கள் பின் தொடர்ந்தார்கள். அஜீத் ரசிகர்களின் மனம் என்னைக் கண்டு பொங்கியது. சிலர் என்னை அசிங்க அசிங்கமாக பேசினர் . நானும் அசிங்கம் அசிங்கமாக பேசி வைத்தேன். நான் எதற்கும் சளைத்தவன் அல்ல என என்னைக் கண்டு மிரள வேண்டும் என திட்டமிட்டேன். நிறைய தத்துவங்கள் எல்லாம் அதில் வலம்  வந்தன. அதில் சாக்கடை கல் பன்றி யானை கூட்டாஞ்சோறு கறிவேப்பிலை என்றெல்லாம் வெளியில் கேள்விப்பட்ட விஷயத்தை எழுதி  தான் பெரிய சிந்தனை முத்துக்களாக காட்டிக்கொண்டார்கள். தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் கயமைத்தனம் கூட்டம் ஒன்று இருந்தது.

இவர்களில் எவரேனும் நல்லவர் கண்ணுக்குத் தென்பட மாட்டாரா என நினைத்தபோது ஒரு பெண் பழகினாள். ட்விட்டரில் 140  எழுத்துகள் மேல் எழுத இயலாது. நேரடி தகவல் பண்ணாமல் டைம் லைனில் எழுதினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''தாமரைச்செல்வி, நீ எந்த ஊரு?''

''மதுரை, நீ எந்த ஊரு?''

''மதுரை''

''மதுரையில் எங்க?''

''மேலமாசி வீதி''

''நானும் மேலமாசி வீதி''

''மேலமாசி வீதியில் எங்க?''

அவ்வளவுதான். அத்துடன் அவளுடன்  பேசுவது நின்று போனது. அதற்கடுத்து அவளது ஐடி என்பார்கள் அதை காணவில்லை. என்னவென அறிந்து கொண்டபோது டீஆக்டிவேட் அதாவது ட்விட்டர் கணக்கை மூடிவிடுவது. ஆனால் தினமும் தானைத்தலைவர் விஜய் அவர்களை கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் அதிகரித்து வந்தது. எதற்கு எடுத்தாலும் தலைவர் விஜய் அவர்களை பேசிய கூட்டம் மிரளும்படி எனது நடவடிக்கை இருந்தது.

அப்போதுதான் ஒரு பெண் பச்சை பச்சையாக டைம் லைனில் எழுதினாள். அருவருக்க வைக்கும் வார்த்தைகள். அவளது செயல்களைப் போற்றிப் பாட ஒரு கூட்டம் உருவாகியது. ஆண்கள்தான் பச்சையாக எழுத வேண்டுமா என அந்த பெண் எழுதியதை ஆதரிக்கும் கூட்டம். ஆனால் அந்த பெண் பெண்ணல்ல ஆண் என்றே பலர் சொல்லிக்கொண்டார்கள்.

முகம் மறைத்த சுதந்திரம் வக்கிரம் என்ற வார்த்தை ட்விட்டர் கற்றுத் தந்தது. வக்கிரம் நிறைந்த கூட்டம் ஒன்று இருந்தது. இணையம் ஒரு ஆபத்தானது இந்த ட்விட்டர் கொடியது என எனக்குள் எண்ணம் தோன்றியது.

அப்போது திடீரென் வேறொரு பெண் வந்து பேசினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''சுந்தரி, உன் ஊரு என்ன?''

''மதுரை, மேலமாசி வீதி,உனக்கு''

''திருச்சி, சுப்பிரமணியபுரம்''

எனக்கு இவள்தான் தாமரைச்செல்வி என ஒரு சந்தேகம் வந்தது. சரி என அவளது நேரடி தகவல் சென்று நீதானே தாமரைச் செல்வி என்றேன். யார் எது என சமாளித்து பேசியதால் பேசாமல் விட்டுவிட்டேன்.

தினமும் அஜீத் விஜய் சண்டை. அதோடு ராஜா ரகுமான் சண்டை. அதையும் தாண்டி ஆத்திக நாத்திக சண்டை. இந்த எல்லா சண்டைகளிலும் நான் பங்கேற்று கொண்டு இருந்தேன். விஜயபாண்டி என்றாலே வந்துட்டாண்டா என சொல்லும் அளவுக்கு இருந்தது. எனக்கு பெண் ரசிகைகள் ஆதரவு அதிகம் இருந்தது. இதில் பெண்கள் சேர்ந்து சரிக்கு சரியாக எழுதினார்கள். நான்கே மாதத்தில் ஐந்தாயிரம் பேர் பின்தொடர்ந்தனர். நான் இருநூறு மேல் எவரையும் பின்பற்றாமல் இருந்தேன்.

ஆனால் டாக், டைம்லைன் , லிஸ்ட் என பிறரின் எழுதுவதை படித்து கண்டமானிக்கு எழுதினேன். அப்போது ஒழுக்க சிகாமணிகள் இப்படி எழுதினால் க்ரைம் பாயும் க்ரைம் ஆயும் என்றார்கள். என்னை பேசியவனை திருத்தப் பாருங்கடா என சொன்னதும் ஒதுங்கினார்கள். நான் சட்டத்திற்கு புறம்பாக எழுத ஏதும் அங்கு இல்லை.

அங்கொன்று இங்கொன்று பார்க்கையில் பெண்ணியவாதிகள் என சிலர் சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் பெண்ணியவியாதிகள் என குற்றம் சொல்லப்பட்டு இருந்தது. அதிலும் என்னை அட்டென்சன் சீக்கர் என ஒரு முத்திரை குத்தினார்கள்.

நான் டிவிட்டரில் பேஸ்புக்கில் இருப்பது எனது கல்லூரியில் தெரிய ஆரம்பித்தது. சிவகுமார் என்னை குறி வைத்து தாக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் நாள்பட நாள்பட நான் சுந்தரி மீது காதல் கொள்ள ஆரம்பித்தேன். பத்து நாட்கள் தினமும் அவளுடன்  ஒரு அரை அரை மணி நேரம் நேரடி தகவலில் பேசினேன். ஒருநாள் சுந்தரி என்னிடம் நேரடி தகவலில் பேசியபோது

''நான் அஜீத் ரசிகை''

''செருப்பால அடி, ஒழுங்கா விஜய் ரசிகையா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''போடா நாயே, நீ அஜீத் ரசிகனா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''யாரடி நாய்னு சொன்ன''

''உங்கப்பனையா சொன்னேன், நான் பொண்ணே இல்லை''

எனக்குத் தூக்கிவாரி போட்டது. டிவிட்டரில் ப்ளாக் என்று ஒரு வசதி  உண்டு. பிடிக்கவில்லை எனில் ப்ளாக் பண்ணிவிடலாம். அவள் அதாவது அவன் என்னை ப்ளாக் பண்ணினான். அப்போதுதான் பல அஜீத் ராஜா ரசிகர்கள் என்னை ப்ளாக் பண்ணி இருந்தது என தெரிய வந்தது. எல்லா அஜீத் ரசிகர்களை ராஜா ரசிகர்களை ப்ளாக் பண்ணினேன். அப்போது சண்டை போட முடியாமல் இருந்தது.

ஒரு நல்லவன் ஐடி தொடங்க அப்போதுதான் யோசித்தேன். ஆனால் இந்த நல்லவன் ஐடி எனது விஜய் கொண்டை வெளியே தெரியாமல் எப்படி மறைப்பது என திட்டம் போட்டேன்.

தினமும் எப்படியும் ஒரு நான்கு மணி நேரம் டிவிட்டரில் இருந்து வந்தேன். இனிமேல் நல்லவன் ஐடிக்கு இரண்டு  மணி நேரம் விஜய் ஐடிக்கு இரண்டு மணி நேரம் என முடிவு செய்தேன்.

நல்லவன் ஐடிக்கு சில சுவாரஸ்யமான நபர்கள் சிக்கினார்கள். நான்தான் விஜயபாண்டி என்பது தெரியாமல் இருக்க சுகுமார் என்ற பெயர் வைத்து சுகுமார்@supersukku எனத் தொடங்கினேன்.

(தொடரும்)