Tuesday 23 June 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? இன குழுக்கள்

 முந்தைய பகுதி 

மனிதர்கள் இனக்குழுக்களாக அன்றைய நாளில் வசித்து வந்தார்கள். பொதுவாக அரசர் அவருக்கு கீழ் ஒரு கூட்டம் என இருந்த காரணத்தினால் அரசரின் மனப்போக்குப்படியே இந்த இனக்குழுக்கள் செயல்பட்டன. இனக்குழுக்களின் தலைமை அந்த இனத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 

இஸ்ரேலிய மக்கள் என அழைக்கப்பட்டதன்  காரணம் இஸ்ரேலின் மகன்கள், இஸ்ரேலின் குழந்தைகள் என்ற அடிப்படை என அறியப்படுகிறது. இந்த இஸ்ரேலிய மக்கள்தான் யூதர்கள், சமாரிட்டன்கள், ஹீப்ரூக்கள் என பிரிந்தார்கள். இங்குதான் இனக்குழு தலையெடுக்கிறது. யூதர்களுக்கு என சில பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கை முறை என உண்டாக்கும்போது அதில் ஈடுபாடு கொள்ள இயலாத மக்கள் அதில் இருந்து தனித்து வெளியேறுகிறார்கள். எப்படி நமது நாட்டில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள் என பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் என சொல்லிக்கொள்வது போல அன்றைய நாளில் இந்த சமரிட்டன்கள் தங்களை யூதர்கள் என ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை மாறாக தங்களை இஸ்ரேலிய மக்கள் என சொல்லிக்கொள்ள தயங்கியது இல்லை. 

யூதர்கள் பின்பற்றியதுதான் ஜூடாயிசம். இந்த ஜூடாயிசம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. யூதர்களின் மதம், தத்துவ வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்தையும் விளக்குவதுதான் ஜூடாயிசம். யூதர்களாக பிறந்தால் அவர்கள் ஜூடாயிசம்தனை பின்பற்றி ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் இருந்து வந்தது. இந்து மதம் தனில் பிறந்தால் இந்துக்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தால் முஸ்லீம்கள், கிறிஸ்துவம் தனில் பிறந்தால் கிறிஸ்துவர்கள் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. பிறப்பால் இவர் என்ற ஒரு இனம் தொன்று தொட்டு பின்பற்ற படுகிறது. 

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமற்ற குழந்தைதான். மதம்,  சாதி, இனம், பெயர் என திணிக்கப்பட்டு குழந்தைகள் சுதந்திரமர்றுப் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த இனத்தில் இணைக்கப்பட்டு வேறு வழியின்றி அதை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த ஜூடாயிசம் தான் கிறிஸ்துவம், முஸ்லீம் எல்லாம் உருவாக பெரும் காரணமாக இருந்தது. இதனுடைய கருத்துகளின் தாக்கங்கள் பின்பற்றப்பட்டன. எப்போதும் இந்த இனக்குழுக்களிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக நம்பமாட்டார்கள். 

தங்களுக்கு என்று வரைமுறையை தனி நபரோ சில நபர்களோ  வைத்து எழுதினாலும் அதை பின்பற்றி செல்லாமல் அதை நம்பவும் மாட்டார்கள். இப்படி எல்லா இன குழுக்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் என்பது தமிழ் இனத்தில் ஒரு இனம். எதற்கு அப்படி குறிப்பிடுகிறோம் எனில் தமிழர்களை தீவிரவாதிகள் என சொல்லாமல் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என அடையாளம் காட்டிய வரலாறு சமீபத்திய ஒன்றுதான். போராளிகள் என்ற ஒரு இனக்குழு இன்றைய காலகட்டத்தில் தீவிரவாத இனக்குழு. 

இன்றைய சூழல் போலவே அன்றைய சூழலில் இந்த யூதர்கள் இனக்குழு இருந்தது. ஒரு இனத்தின் பற்றிய வரலாறு செவிவழி, கல்வெட்டு, புத்தகங்கள் மூலம் வழி வழியாக சொல்லப்பட்டு வரும். அன்றைய சூழலில் நம்ப இயலாத ஒன்றை அழிக்கவே முற்படுவார்கள். நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் எத்தனை உண்மை என தெரியாது. ஆனால் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதின் மூலம் முற்றிலும் கதை என எதையும் ஒதுக்கிவிட இயலாது. இன்றும் 14மில்லியன் யூதர்கள் உலகில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

யூதர்களின் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பைபிளில் குறிப்பிட்டு இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இப்போது இதைப் பற்றி எழுதும்போது யார் பாபிலோனியர்கள், யார் அஷ்ஸ்ரீயர்கள் என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு வந்து இருப்பது தெரியும். அந்த பகுதியில் வாழ்ந்த பல இனக்குழுக்கள் ஒவ்வொரு பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களது திறமையை, தங்களது நிலையை நிலைநாட்டிட பெரும் போராட்டங்களை செய்து கொண்டு இருந்தன. இந்த போர் முறைகளால் மனிதம் தோற்றதுதான் உண்மையான வரலாறு. 

இது குறித்து மனம் போன போக்கில் எல்லாம் எழுத முடியாத விசயங்கள் என்பதுதான் இப்போதைக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. 

(தொடரும்) 

மனைவியின் வாரிசு ( சிறுகதை )


                                                     மனைவியின் வாரிசு ( சிறுகதை )

இதோ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போது அடுத்த குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் சொல் என கேட்கும்போதெல்லாம் இதுவரைப் பெற்றுக் கொண்டது போதாதா என்றே பதில் அளித்துக்  கொண்டு இருந்தாள்.

''நாலுதானே பெத்து இருக்கோம், இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்கிரலாம்''

''ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுக, போதாதா. ஊரு உலகத்தில் நம்மளைப் பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா?''

''எவன் என்ன பேசினா என்ன, அவனா வந்து நம்ம வீட்டில உலை வைக்கிறான்''

''நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இன்னொரு புள்ளைப்  பெத்துக்க முடியாது, இதுகளை சமாளிக்கவே எனக்கு சீவன் போதலை. இதுல இன்னொன்னு வேறயா''

''அந்த காலத்தில...''

''வாயை மூடுங்க, போதும் உங்க அந்த காலப் புராணம், ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அதை வாங்கித்தாரேன் இதை வாங்கித்தாரேன் சொல்லி புள்ளைக வாங்கித் தந்ததுதான் மிச்சம். மூத்தவனுக்கு இன்னும் ரண்டு வருஷம் போனா கல்யாணம், இந்த லட்சணத்தில இன்னொன்னு கேட்குதா''

''நீ என்ன வேணும்னா சொல்லு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு உடனே ஒரு புள்ளை  நீ பெத்து தரனும்''

''குடும்ப கட்டுபாடுனு  ஒன்னு இருக்கே அதை எல்லாம் பண்ணித் தொலைக்கக்கூடாதானு போகிற இடத்தில பேசுறாளுக, மானம் போகுது''

''நாம பேசாம ரஷ்யா போயிரலாம், அங்கன நிறைய புள்ளைக  பெத்தா வரிவிலக்கு எல்லாம் இருக்கும். வேற ஒன்னும் செய்வோமா நாம பேசாம மதம் மாறிட்டா என்ன''

''புள்ளை  பெக்கிரதுக்கு யாராச்சும் மதம் மாறுவாகளா''

''கல்யாணம் பண்ணுறதுக்கு மதம் மாறுற ஆளுகனு  ஊருல பேச்சு இருக்கு, அது எல்லாம் இப்ப எதுக்கு, எனக்கு இன்னொரு புள்ளை  வேணும்''

''நான் வீட்டுக்கு இனிமே தினமும் தூரம்''

''கிறுக்கச்சி  மாதிரி பேசித் தொலையாத அப்புறம் இன்னொரு புள்ளைப்  பெத்துக்க வேற ஒருத்தியைத்தான் நான் தேடணும்''

''ச்சீ என்னப்  பேச்சு பேசறீங்க, இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு, பேசாம தள்ளிப்படுங்க, நாம பேசறது யாருக்காச்சும் கேட்கப்போகுது, ரெண்டாமவன் சொல்றான் இன்னொரு பிள்ளை பெத்துக்கம்மா இல்லைன்னா எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுனு சொல்றான். குழந்தைக பொம்மைன்னு நினைச்சிட்டான்''

''அவன் கேட்டத நாம நிறைவேத்தி வைக்க வேணாமா சொன்னா கேளு. இதுதான் கடைசி''

''நீங்க மொத பிள்ளையில் இருந்த இப்ப நாலாம் பிள்ளை வரைக்கும் இதேதான் சொன்னீங்க. எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க''

''அப்ப நான் வேற ஒருத்தியைத் தேட வேண்டியதுதான்''

''இன்னொருதடவை அப்படி பேசினீங்க, அப்புறம் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன். சொல்லிட்டேன். பேசாம படுத்துத் தொலைங்க. எப்பப்பாரு பிள்ளை பிள்ளைனுட்டு''

வழக்கம் போல நன்றாகத் திட்டு வாங்கி உறங்கினேன். காலையில் எழுந்ததும் வீடு பரபரப்பாக இருந்தது. பெரியவன் முதற்கொண்டு சிறியவள் வரை பள்ளி கல்லூரி என இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி வியர்க்க விறுவிறுக்க  வேலை செய்து கொண்டு இருந்தாள்.

''மாமா, பெரியவனுக்கு ஒரு நூறு ரூபா கொடுங்க. சின்னவளுக்கு ஒரு ஐம்பது கொடுங்க, நேத்தே கேட்க மறந்துட்டேன்''

இப்படி இவள் ஆடி ஓடி உழைத்து எத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. இன்று விடுமுறை போட்டு இருந்தேன். எப்படியும் அடுத்த பிள்ளை தயாராக வழி செய்ய வேண்டும் என.

''இன்னைக்கு வேலைக்குப் போகலையாங்க''

''போகலை, அசதியா இருக்கு''

''அப்படினா ரண்டாமவனை ஸ்கூல்க்கு போய்  விட்டு வாங்க''

''நீ ரெடியா இரு''

''எங்கேயும் வெளியில கூப்பிட்டுப் போறீங்களா''

''இல்லை, அடுத்த பிள்ளைக்கு...''

''அப்பா, அம்மாவை எப்போதுமே தொந்தரவு பண்ணிட்டேதான் இருப்பிங்களா''

பெரியவள் வந்து சத்தம் போட்டுப் போனாள்.

''கேட்டுக்கோங்க, பிள்ளைக வளர்ந்துட்டாங்க''

ரண்டாமவனையும் சின்னவளையும் அழைத்துப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். நானும் அவளும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். சப்பாத்திதான் செய்து இருந்தாள்.

அவளது சிறு வயது காலங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நான் என்னையும் அறியாமல் முகம் மலர்ந்தேன்.

கொலுசுகள் வாங்கிட்டு வரலாமா என்றவுடன் எதுவும் மறுப்பு சொல்லாமல் வா போகலாம் என கொலுசுகள் வாங்கி கொண்டு வந்து வீட்டில் அமர்ந்தோம். காலையிலேயே மதிய சாதம் சமைத்துவிட்டதால் அதிக வேலை இல்லை. ஒவ்வொரு அறையாக சென்று மகன்கள்  மகள்களின் அறைகளை சுத்தம் செய்தாள். எல்லா துணிகளை ஒழுங்கா மடித்து வைத்தாள்.

''பிள்ளை பெறலாம் வா''

''நீங்க வேலைக்குப் போங்க, நொய்  நொய்யுனுட்டு''

''நான் ஒரு கனவு நேத்து கண்டேன்''

''என்ன கனவு''

''அது வந்து ஒரு பொண்ணு இருவத்தி அஞ்சி வயசு இருக்கும், என்கிட்டே வந்து உங்களோட ஒரு புள்ளை பெத்துக்கிட்டா எனக்கு சாகா வரம் கிடைக்கும். அதோட மட்டுமில்லாம அந்த பையன் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டு இருப்பான். உங்களுக்கும் சாகா வரம் கிடைக்கும்னு  சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, குழந்தைக இருக்காங்கனு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு அது எல்லாம் தெரியும். அவங்களுக்கும் சாகா வரம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். எனக்கு உங்க குழந்தைதான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சிச்சி. வேற யாருமே உலகத்தில வேணாம் அப்படின்னு சொல்ல எனக்கு என்ன ரோதனையாப் போச்சுனு  அதெல்லாம் முடியாது, என்னோட பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்''

''அப்புறம் என்ன ஆச்சுங்க''

''பாத்தியா நான் உனக்கு கனவுல கூட துரோகம் செய்யலை''

''மீதி கதை என்ன ஆச்சுன்னு சொல்லுங்க''

''பாவிபுள்ள நான் குழந்தை தரமுடியாதுன்னு சொன்னதும் செத்துப் போச்சு''

''ஹாஹாஹா ஹாஹாஹா நீங்க ரொம்ப குறும்புங்க''

'சரி வா நாம...''

''இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு நினைப்பு உண்மையிலே இருந்து இருக்கு அதுதான கனவு வந்துருக்கு''

அந்த வார்த்தைகள் கேட்டு நான் சற்று மிரண்டேன்.

 ''இல்லை அந்த பொண்ணு உன்னோட வாரிசா வர நினைச்சி இருக்கும்''

''உங்களுக்கு மதியம் சோறு கிடையாது, பட்டினியா கிடங்க''

இப்போதெல்லாம் நான் கனவு கண்டதாக எந்த ஒரு கதையும் அவளிடம் சொல்வதே இல்லை.

(முற்றும்)

பின்குறிப்பு: சிறுகதை என குறிப்பிட்டு இருப்பதால் உங்க சொந்த அனுபவமோ என எவரேனும் என்னைப் பார்த்து கேட்டீங்க அப்புறம் உங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது.






Sunday 21 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 7

பகுதி - 6  

7 வஞ்சகர்கள் நிறைந்த உலகம்

பெரியவரிடம் வாசன் சாரங்கனிடம் சென்று எதுவும் விசாரிக்க வேண்டாம் என சொன்னான். பெரியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வேண்டாம் என சம்மதம் சொல்லிவிட்டார். முத்துராசு தான் இந்த உலகம் வஞ்சகர்களால் நிறைந்தது என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். பெரியவர் சற்று அதட்டியதும் அமைதி ஆனார்.

இந்த உலகம் வஞ்சகர்களால் மட்டுமே நிறைந்தது என குறிப்பிட இயலாது. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள தனது சந்ததிகள் நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட நலன் என்று ஒன்று இல்லாமல் இல்லை.

பெரியவர் வாசனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். வாசன் நாம் எதுவும் தவறு செய்யவில்லை என சொன்னபோது முத்துராசு அவர்களை அடித்து விரட்டியது அபாயகரமானது என்றே குறிப்பிட்டார்.

வாசன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மாதவி வாசனிடம் பேசினாள்.

''மாமா நீங்க பாதுகாப்பாக இருங்க, எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு தெரியாது''

''என்ன சொல்ற மாதவி''

''உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு மாமா''

''மாதவி...''

''நீங்க வீட்டுல இருங்க, இன்னைக்கு எங்கையும் போக வேணாம்''

''ம்ம் சரி மாதவி, எந்த வீட்டில் இருந்தாலும் சரிதானே''

''ம்ம்''

முத்துராசுவிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல் தான் தோட்டம் செல்வதாக சென்றார். வாசன் சற்று கோபமாக சொன்னதும் சரி தம்பி நான் வீடு போறேன் என போனவர் வாசன் சற்று மறைந்ததும் தோட்டம் நோக்கி சென்றார். வாசன் நேராக கேசவன் வீட்டிற்குப் போனான்.

''எப்படி இருக்க பூங்கோதை''

''நல்லா இருக்கேண்ணா''

''பையனுங்க என்ன பண்றாங்க''

''இப்போதான் தூங்கினாங்க''

''கேசவன் எங்க''

''மாரிமுத்து தோட்டம் போறேன்னு போனார்ணா, நான் போய் காபி கொண்டு வரேன்ணா''

''வேணாம் பூங்கோதை, நெகாதம் செடி வாடிப்போனது பத்திக் கேள்விப்பட்டதான''

''ஆமாணா, ரோகிணி  கூட போன் பண்ணிக் கேட்டா. எனக்கும் ஆச்சரியமா இருக்குணா''

''மேற்கொண்டு படிக்கலையா பூங்கோதை''

''இல்லைணா, இவங்களை வளர்த்துப் பெரியவங்க ஆக்கணும், பெருமாள் தாத்தா அவரோட முந்தைய நினைவுகளோட இருப்பாராண்ணா''

''உனக்கு குழந்தைகளில ஏதேனும் வித்தியாசம் தெரியுதா பூங்கோதை''

''அண்ணா ஒரு நிமிஷம் காபி போட்டு வரேன். மோராவது குடிங்க''

''ம்ம்''

வாசன் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்தான். அதில் இரு குழந்தை விழித்துப் பார்த்தது. அதே பெருமாள் தாத்தாவின் கண்கள். இரண்டு கைகளையும் வாசனை நோக்கி நீட்டியது. வாசன் கைகளை நீட்டினான். அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. வாசன் விடுவிக்க முயன்றான். குழந்தை சிரித்தது. வாசன் ஆச்சரியம் அடைந்தான். பூங்கோதை அங்கே வந்து கொண்டு இருந்தாள். குழந்தை கைகளை விடுத்து கண்ணை மூடியது.

''காபி''

''பூங்கோதை, நீ இந்த குழந்தைகளில் எதுவுமே வித்தியாசம் பார்க்கலையா''

''இல்லண்ணா''

''பெருமாள் தாத்தா...''

''என்னண்ணா, நீங்க எதுவும் பார்த்தீங்களா''

''என்னோட கையை இறுகப் பிடிச்சான்''

''அண்ணா''

''பூங்கோதை, பெருமாள் தாத்தா கரு தான் இரண்டாக பிரிந்து இரட்டை குழந்தையாகப் பிறந்து இருக்கு, உனக்கும் கேசவனுக்கும் உருவான கரு எதுவும் இல்லை''

''அண்ணா, டாக்டர் விஷ்ணுப்பிரியன் அப்படி சொன்னாரா''

''மாதவிதான் சொன்னா''

வாசன் மாதவிக்கு போன்  பண்ணி அங்கு என்ன நடந்தது என சொல்லிக்கொண்டு இருந்தபோது கேசவன் வீட்டிற்குள் வந்தான்.

''மாப்பிள்ளை நீ இங்கதான் இருக்கியா''

''என்னாச்சு''

''முத்துராசுவை மூணு பேரு வெட்டிக்கொல்ல வந்தானுங்க, மாரிமுத்து நான், வீரப்பசாமி, வேல்முருகன் எல்லாம் அந்த நேரத்தில நம்ம பெரியவர் தோட்டம் வழியா வந்தோம். பெரிய கலவரம் ஆகிருச்சி. அடிச்சி அவனுகளை போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுப் போயிட்டு இருக்கோம். நீ வீட்டுக்குப் போயிட்டன்னு ராசு மாமா சொன்னார். கொஞ்சம் பணம் எடுக்கத்தான் வந்தேன், நீ இங்கேயே இரு. உன்னை கொல்லத்தான்  வந்து இருக்கானுங்க மாப்பிள்ளை''

''நானும் வரேன்''

''சொன்னா கேளு மாப்பிளை''

வாசனுக்கு வியர்த்துக் கொட்டியது. யார் இந்த மனிதர்கள். முத்துராசு சொன்னது போல வஞ்சம் நிறைந்த மனிதர்கள். முத்துராசு எதற்கு தோட்டம் போனார் என்றே வாசன் யோசித்தான். வாசன் தனது வீடு நோக்கி நடந்தான்.

கேசவனும் பிறரும் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தார்கள். அவர்களை விசாரித்தபோது சாரங்கன்  பெயரைச் சொன்னார்கள். பெரியவர் மிகவும் கோபம் கொண்டவர் ஆனார். சாரங்கனுக்கு அழைத்து பேசியபோது விநாயகம் நீ தேவையில்லாம பேசறதை நிறுத்து எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

காவல் அதிகாரிகள் சாரங்கன் வீடு சென்றார்கள். சாரங்கனிடம் விசாரித்தபோது தான் அவ்வாறு செய்ய சொல்லவில்லை என அடம்பிடித்தார். அவர்கள் தப்பிக்க தன்னை சொல்வதாக சொன்னார். காவல் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துவிட்டு திரும்பினார்கள்.

''சாரங்கா, என்ன இது''

''நான் நிலம் விலை பேச சொன்னேன். ஆனா கொல்ல  சொல்லலை''

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இன்றி வீடு திரும்பினார். இரவெல்லாம் பெரியவருக்கு யோசனையாக இருந்தது.

குழந்தைப் பிடித்த தனது கைகளைப் பார்த்துக் கொண்டான் வாசன்

(தொடரும்)