Sunday 14 June 2015

நமது திண்ணை ஜூன் மாத இணைய சிற்றிதழ்

விளம்பரம் இல்லை என்றால் ஒரு பொருளைப் பற்றிய விசயம் அறிந்து கொள்ள இயலாது என்பதுதான் இந்த உலகம் அறிந்த உண்மை. விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் பல விசயங்கள் மக்களைச்  சென்று அடையவில்லை. அதே விளம்பரங்கள் மக்களை வெறுப்பேற்று விடுகின்றன.

நமது திண்ணை இந்த ஜூன் மாத சிற்றிதழ் விளம்பரமே இல்லாமல் வெளிவந்தது. இன்றைய காலத்தில் போராட்டங்கள் விளம்பர யுக்தியாக மாறி வருகிறது. வளர்ந்து வரும் இணைய இதழுக்கு போதிய ஆதரவு மிகவும் அவசியம், அப்படி இல்லாதபட்சத்தில் ஒருவித வெறுமை தோன்றும்.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் மிகவும் அருமையாக இருக்கிறது. ஒரு பிராமணன் சாதி இல்லை என்று சொன்னால் சாதிக்கு எதிராகப் போராடினால் அவரை சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடாது என்பதுதான் இந்த தொடர் மூலம் நான் உணர்ந்து கொண்டது. நிறைய விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த தொடர் அமைவது மிகவும் சிறப்பு.

ஒரு சிறிய பறவை குறித்த பாடல் பரவசம் உமாகிரிஷ் அவர்களின் பார்வையில் மிகவும் பரவசமாக இருக்கிறது இந்த பாடல் எனது விருப்பப்பாடலும் கூட. பொதுவாக கவிஞர்கள்  என்ன மனநிலையில் எதை கற்பனை பண்ணி எழுதுவார்கள் என தெரியாதபோது இதுபோன்று விளக்கம் சொல்லும் பார்வை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது, இதை இசைக்கும் சேர்த்துக் குறிப்பிடலாம்.

நிஷா அவர்களின் வெட்கம் மற்றும் மரணம் கவிதை ஒரு பெண்ணின் மனநிலையை வெகு சிறப்பாக விவரிக்கிறது. வார்த்தைகள் மிகவும் சரளமாக வந்து இருப்பதே நமக்கு பயணம் செய்ய ஏதுவாக  இருக்கிறது.

நச்சுனு சிரிங்க என்பதை நச்சுனு சிந்திக்க எனும் வகையில் அமைந்து இருக்கிறது. அதுவும் சதுரம் வட்டம் குறித்து திட்டுவது வெகு சிறப்பு. ஒவ்வொரு போட்டோக்களும் ஒரு கதை சொல்லும் வண்ணம் அமைந்து இருக்கிறது. எனது போட்டோ வரவில்லையே என ஆதங்கப்படும் அளவுக்கு இந்த பகுதி அமைந்து இருப்பது வெகு சிறப்பு.

கனல் கத்தியின் பச்சை உலகம் அருமை. ட்விட்டரில் எழுதப்படும் ஒவ்வொருவரின் எழுத்தை சிறப்பிக்கும் வண்ணம் இங்கு சேர்க்கப்பட்டு அழகுப் பார்க்கப்படுகிறது. ஓவியம் இன்னும் சிறப்பாக இந்த இதழில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை நல்லதொரு நாவல் என நம்பிக்கை கொண்டு வாங்கலாம். கார்த்திக் அவர்களின் இந்த நூல் குறித்த விமர்சனம் சிறப்பு. குருடன் பார்த்த யானை. நல்ல உவமை.

ஸ்ரீ அவர்களின் கோடைகால வெயிலும் ஆரோக்கியமும் கட்டுரை மிகவும் அவசியமான ஒன்று. மிகவும் பயனுள்ள கட்டுரை. இவர் ஒரு மருத்துவர் என்பதால் இந்த நமது திண்ணை சிற்றிதழில் மருத்துவ குறிப்புகள் நோய் குறிப்புகள் குறித்து தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். நமது இணைய இதழின் ஆசிரியர் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

திண்ணைப் பாடகர் இன்னும் கேட்கவில்லை. மழலைப் பட்டாளங்கள் வெகு சிறப்பு. வழக்கம் போல நண்பர் ரவி அவர்களின் கொத்தவரைக்காய் புதுவிதம். சமைத்தால்தானே இது எல்லாம் தெரியும். டெல்லி கணேஷ் பற்றிய பல விபரங்கள் சிறப்பாகவே இருந்தது. ஆன்டீராய்ட் பற்றிய நாகராஜ் அவர்களின் குறிப்புகள் பலருக்கு உதவும். இறுதியில் ஆசிரியரின் சுருளிராஜன் பற்றிய தகவல்கள்.

இம்முறை சில பிரச்சினைகளைத் தாண்டி வெளிவந்து இருக்கிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இன்னும் பல அரிய  விசயங்களுடன் இந்த நமது திண்ணை இதழ் சிறப்பாகத் தொடர வேண்டும்.

நன்றி.

Thursday 11 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 6

நுனிப்புல் பாகம் 3 - 5

6. இருவழிப் பாதை

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும். இறப்பு என்று ஒன்று இருந்தால் பிறப்பு ஒன்று இருக்கும். ஆனால் இதுவரை எவரது இறப்புமே மீண்டும் ஒரு  பிறப்பாக வந்தது என நிரூபிக்கப்படவில்லை. தனது முன் ஜென்ம வினை என்று சொல்கிறார்கள், தான் முன் ஜென்மத்தில் இது போன்று இருந்ததாக ஒரு சிலர் குறிப்பிட்டு இருப்பதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை.

பாரதி வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். இந்த திருமாலுக்கு எப்படி முக்காலமும் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனை அவளில் ஓடிக்கொண்டு இருந்தது. கிருத்திகா உடன் வந்தால் நன்றாகவே இருக்கும் என எண்ணினாள். ஒரு முறை வாசன் கூட மாதவி முக்காலமும் அறிந்தவள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறாள். இதை எல்லாம் மாதவியிடத்து  கேட்டு ஊர்ஜிதம் பண்ணிட தோணவில்லை.

சாத்திரம்பட்டிக்குச்  சென்றபோது நாச்சியார் அம்மாள் முன்னமே வந்து இருக்கலாமே மாதவி என்று சொன்னபோது பாரதிக்குப் புரியாமல் தான் இருந்தது. அதுகுறித்து இதுவரை என்ன ஏது  என விசாரிக்கத் தோணவில்லை.

மாதவியை அழைத்துப் பேசலாம் என எண்ணினாள், அதற்குள் பாரதியின் போன்  ஒலித்தது. நாம் எவரை மனதார நினைக்கிறோமோ அவர் நமக்கு உடனடியாக ஏதேனும் ஒரு ரூபத்தில் காட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் தான். போனினை  எடுத்தாள்.

''என்ன பாரதி, என்னைப் பத்தி நினைச்சிட்டு இருந்தியா?, எதையும் நிறைய யோசிக்காத, சுந்தரன் எப்படி இருக்கான்''

''மாதவி, உன்னைப்பத்தி நினைச்சிட்டு இருந்தேனு எப்படி உனக்குத் தெரியும்''

''ஒரு யூகத்தில் சொன்னதுதான், உண்மையிலேயே என்னைப் பத்திதான் நினைச்சிட்டு இருந்தியா, இல்லை திருமால் பத்தி கூடவா?''

''மாதவி, உனக்கு முக்காலமும் தெரியுமா''

''எக்காலமும் எனக்குத் தெரியாது பாரதி, சும்மா வாசன் மாமாதான் எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு இருப்பாரு. அப்படித்  தெரிஞ்சி இருந்தா எதுக்கு நான் மெடிசின் படிக்கப் போறேன். பேசாம ஒரு ஜோசியம் பார்க்கிற வேலையை எடுத்து இருக்கமாட்டேன். உட்கார்ந்த இடத்திலேயே நல்ல சம்பளம். யாரோ பிரச்சினைக்கு ஏதோ  ஒரு பரிகாரம். எந்தக் கவலையும் இல்லை பாரு. அப்படியே மாதவியம்மன் அப்படின்னு ஒரு சின்ன கோவில் கட்டி ஊரு உலகம் எல்லாம் தெரிஞ்சிருக்கமாட்டேன்''

''மாதவி, நீ கிண்டல் பண்றேன்னு தெரியுது, ஆனா அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு கஷ்டம். ஒருவேளை யாருமே ஜோசியம் பார்க்க வரலைன்னா, சாமி கும்பிட வரலைன்னா உன்னோட நிலை கஷ்டம்தானே.''

''எல்லாம் எனக்குத் தெரிஞ்சி இருக்கறப்ப அப்படி ஒரு கஷ்டம் ஏன்  வரும், சொல்லு பாரதி''

''மாதவி, உனக்கு இந்த உலகத்தில் நடக்கிறது நடந்தது நடக்கப்போறது எல்லாம் தெரியுமா''

''எதுவுமே தெரியாது பாரதி. சும்மா எதேச்சையா போன்  பண்ணினேன் அதுவும் நீ சுந்தரன் விஷயம் சொன்னதில் இருந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அவன் உன்னை கேலி கிண்டல் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு''

''பார்த்தியா, உனக்கு எல்லாம் தெரியும். அவன் என்னை கேலி கிண்டல் பண்ணினான்''

''அவன்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ ஒண்ணும்  அவனை  சொல்லாத''

''மாதவி, சாத்திரம்பட்டி பத்தி கொஞ்சம் சொல்றியா''

''எனக்கு என்ன தெரியும், நீயும்தான் கூட வந்த, உனக்கு விஷயம் தெரியுமா நம்ம ஊருல அதான் எங்க குளத்தூர்ல சின்னப் பிரச்சினை. ரெண்டு பேரை அடிச்சிட்டாங்க. எனக்கு என்னமோ அது பெரிய கலவரத்தில போய்  முடியும்னு தோணுது. வாசன் மாமாகிட்ட எச்சரிச்சி வைக்கணும்''

''யாரு சொன்னாங்க இதை''

''என்னோட அம்மாதான்''

''பொய் எல்லாம் பேசுவியா மாதவி''

''தாராளமா  பேசுவேன், பொய் தேவையெனில் உண்மையாகும். சுந்தரன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ திருமாலைப் பார்க்கறப்போ கூட கிருத்திகா இல்லைன்னா அருண் இவங்களோட போ. அவரு இந்தவாட்டி உக்கிரமான நிலையில் இருப்பார். சாந்தரூபம்னு நினைச்சியில! அப்புறம் முக்கியமான ஒண்ணு சும்மா ஆர் என் ஏ னு  இருக்காம  ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி நிறைய படி''

''எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சி. வாசன் சொன்னது மாதிரி உனக்கு எல்லாமே தெரியும். நீ தெரியாத மாதிரி நடிக்கிற. திருமால் ஐயா உக்கிரமான நிலை அப்படின்னு உனக்கு எப்படித் தெரியும். அவர் மட்டும் அப்படி இருக்கட்டும். ஆமா அது எப்படி நீ இது படினு  சொல்ற''

''மறந்துட்டியா, நீதான் ஆர் என் ஏ  உலகம் எல்லாம் சொல்லி இருக்க. நீ போய்ட்டு வந்துட்டு பேசு''

''ம்ம்''

இந்த மாதவி புரியாத புதிராக தென்பட்டாள். சாதாரணமாகவே தென்படும் இவளில் எப்படி இத்தனை ஆற்றல் இருக்க இயலும். அதுவும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி சொல்கிறாள். ஆர் என் ஏ தன்னை டி என் ஏ வாக மாற்றும் வல்லமை இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ்க்கு உண்டு. ஒற்றையாகவோ, இரட்டையாகவோ மாற்றி வைக்கும். இந்த வினையூக்கி மட்டும் இல்லையெனில் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் உருவாகி இருக்கவே இருக்காது.

வாசனின் வைரஸ் கவிதைப் போல இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் தான் உயிரின் மூலமாக இருக்கக் கூடுமோ. முதலில் ஆர் என் ஏ  உருவாகி  அதில் இருந்து டி என் ஏ உருவாகி பின்னர் டி என் ஏ  மூலம் ஆர் என் ஏ உருவாக்கி இந்த உயிரினங்கள் இருந்து இருக்குமோ.

பாரதியை நட்சத்திரங்களை எண்ண  விடாமல் யோசனை பண்ண வைத்துவிட்டாள்  மாதவி. இந்த உலகில் எதுவுமே முன்னோக்கி சென்றது பின்னோக்கி வராது என பாரதி நினைக்கும்போதே கடல் அலைகள் பற்றிய எண்ணம் வந்து சேர்ந்தது.

கிருத்திகாவிடம் மீண்டும் போன்  பண்ணி கேட்டபோது திருமாலைப் பார்க்க உடன் வருகிறேன் என்று சொன்னாள். அன்று இரவு அம்மாவிடம் அப்பாவிடம் சொன்னபோது எதுக்கும் அருண் நீயும் போயிட்டு வா என்று சொன்னார்கள். அருண் மறுபதில் சொல்லாமல் சரி என்றான். பாரதிக்கு சற்று பயமாக இருந்தது. கிருத்திகா வருகிறாள் என்று சொன்னதும்தான் அருண் நான் எதுக்கு என ஒதுங்கிக் கொண்டான்.

இந்த மாதவி பற்றி அறிய தேவகிதான் சரியான வழி என பாரதி யோசித்துக் கொண்டே அன்று உறங்கினாள். கனவில் மாதவிதான் பலமுறை வந்து போனாள். என்றுமே கனவில் வராத மாதவி இன்று மட்டும் ஏன்  என்றே உறக்கத்தின் ஊடே விழித்த வண்ணம் இருந்தாள் . திருமால் ஐயாவைப் பார்த்துதான் ஆக வேண்டுமா எனும் எண்ணம் வேறு வந்து சேர்ந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணவும்  செய்தாள்.

ஒரு வார்த்தை கூட தன்னிடம் மாதவி கனவில் பேசவில்லை என்று எண்ணினாள்  பாரதி. கிருத்திகாவும் பாரதியும் திருமாலைச் சந்திக்கப் போனார்கள்.

முதலில் வந்தபோது என்ன நிலையோ அதே நிலை. திருமால் வருவார் என வீட்டின் வெளியில் இம்முறை காத்து இருந்தார்கள்.

(தொடரும்)




Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்