Tuesday 21 January 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22

அப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.

''எங்க முருகேசு போய்ட்டு வர''

அப்பாவின் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.

''சொல்லு முருகேசு''

மின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.

''முருகேசு, எழுந்திருப்பா''

வழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.

''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''

''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''

''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''

போர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.

''நில்லு முருகேஷா''

''என்னம்மா''

''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''

''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''

வேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.

''காயத்தை காட்டுடா''

''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''

காயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.

''கொசு கடி  தான்''

தயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.

''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''

''சாரை பாத்துட்டு போவோம்'

''போலீசுல சொல்வோம்''

எதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.

''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''

''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''உள்ளே வாங்க''

ஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.

''ரொம்ப வெட்கையா இருக்கு''

''காத்தாடி ஓடுதே''

''அது பழசு''

''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''

''அது எல்லாம் உனக்கு எதுக்கு''

''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''

நிறையவே யோசித்தார்.

''அது வந்து...''

''என்ன சார்''

''நேரமாகுது, கிளம்புங்க''

''முருகேசு, வா கிளம்பலாம்''

வேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

கோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.

''கோரன் வீட்டுக்கா''

''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''

கோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா  இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.

''என்னடா சத்தம் போடுற''

''பூச்சி கடிச்சது சார்''

''போய் டாக்டரை பாரு''

ஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.

''கோரன்''

என்னை பார்த்தவன் திடுக்கிட்டான்.

''எதுக்கு இவரை தேடி வந்த''

''உனக்கு தேவை இல்லாத விஷயம்'

''கொல்ல வந்தியா''

''ஆமா''

''ஏன்''

''முருகேசு நீ தலையிடாத''

வேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.

(தொடரும்)





 

பதிப்பகங்களும் புத்தகங்களும்

இன்றைய காலகட்டத்தில் எழுதுவது என்பது எல்லோராலும் பொதுவெளியில் எழுதும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கணினி மற்றும் தமிழ் அச்சு தெரிந்து இருந்தால் போதும், உள்ளக்கிடக்கை எல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடலாம்.

எனக்கு ஓரளவிற்கு தமிழில் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறுவயதில் இருந்தே தமிழ் படிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. எழுத்தாளர்கள் புத்தகங்கள் அவ்வளவாக படிக்கவில்லையெனினும் தினமலர், வாரமலர், குடும்பமலர், குமுதம், ஆனந்தவிகடன், தமிழ் கோனார் உரை, திரைப்பட பாடல்கள், அசோகமித்திரனின் கதைகள்  என தமிழ் படித்தது உண்டு. கடை எனும் ஒரு நாவல் படித்த நினைவு இருக்கிறது. நான் கல்கத்தாவில் படித்தபோது நண்பர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து நிறைய தமிழ் புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள். அதேபோல அங்கே உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து நிறைய ஆங்கில புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள் . நான் அதிகம் படித்தது கவியரசு கண்ணதாசனின் புத்தகங்கள் என சொல்லலாம் மற்றபடி பாடபுத்தகங்கள் மட்டுமே. இதனால் நான் நாவல் எழுத தொடங்கியபோது பாட புத்தகங்களில் உள்ள கருத்துகளை கையாண்டேன்.

பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, மோகமுள்  என பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. இந்த கதைகளை எல்லாம் நான் படித்தது இல்லை. சாண்டில்யன், தி.ஜானகிராமன், கல்கி என பல பெயர்கள் அவர்கள் மூலம் எனக்கு பரிச்சயம். என்னை மிகவும் பாதித்த மலையாள மொழி பெயர்ப்பு கதை உண்டு, இன்னமும் கதை கரு மனதில் நிழலாடுகிறது, ஆனால் தலைப்பு மறந்து போய்விட்டது.

இந்த இணையம் இல்லாது இருந்து இருந்தால் நான் நாவல், கதை எல்லாம் எழுதி இருப்பேனா என்பது கேள்விக்குறிதான். முத்தமிழ்மன்றம் போட்ட விதை நுனிப்புல் இரண்டு பாகங்களும். இப்படியே கவிதைகள், சிறுகதைகள் என முத்தமிழ்மன்றம் தந்த உற்சாகம் மடமடவென எழுத வைத்தது. இன்று எத்தனையோ கதைகள் எழுதியாகிவிட்டது. ஆனால் வெளியிட்டது மூன்றே நூல்கள்.

நாவல் வெளியிட நான் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் எல்லாம் கைகளை விரித்தன. அதனால் முத்தமிழ்மன்ற பதிப்பகம் என சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டேன். அதற்கடுத்து வெளிவந்த கவிதை தொகுப்பு, கதை தொகுப்பு எல்லாம் சொந்த செலவுதான். பதிப்பாளர்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இதுவரை சம்பந்தபட்ட பதிப்பாளார்கள் புத்தகங்கள் குறித்து ஒரு விஷயமும் தெரிவிக்கவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. புத்தகம் அச்சிட்டு தந்தார்களே அதுவே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. அவர்களிடம் புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிடுங்கள், எவரேனும் என்ன விலைக்கு கேட்கிறார்களோ கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, ஒரே அறையை அலங்கரிக்கும் அந்த புத்தகங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு அறையை அலங்கரிக்கட்டுமே. எழுதுவது எனது தொழில் அல்ல, இதன் மூலம் நான் சம்பாதிக்க இருப்பது என்று எதுவும் இல்லை. புத்தகத்திற்காக சிறு பணம் ஒதுக்கி அதை வெளியிடுவதுடன் எனது பணி முடிவடைகிறது.

இப்படி நான் எழுதி சொந்த காசு செலவு பண்ணியும் புத்தகம் வெளியிட பதிப்பகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஒரு சிறந்த பதிப்பகம் கிடைக்க வேண்டுமெனில் கதை சிறப்பாக இருக்க வேண்டும், அதுவும் மக்கள் அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது காலக்கொடுமை.

நுனிப்புல் பாகம் 2 வெளியிட வேண்டும். நண்பர் சொக்கன் இதை தனி நூலாகவே கொண்டு வரலாம் என்றார். தலைப்பு கூட நெகாதம் என்றே வைக்கலாம் என யோசிக்கிறேன். எவரேனும் இந்த நூலை, தனி  நூலாகாவோ (நெகாதம் தலைப்புடன்) , தொடர் நூலாகவோ (நுனிப்புல் தலைப்புடன்)  பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட முன்வருமாயின் தொடர்பு கொள்ளுங்கள் என்பதை தவிர வேறு என்ன கேட்டுவிட முடியும். 

Thursday 16 January 2014

நீங்க எந்த ராசி?

''டேய், போயி அந்த பெரியவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திரு, உன் கல்யாணத்துல எந்த தடையும் வந்திரக்கூடாது பாரு''

''என்னம்மா நீ ரொம்ப தொனதொனத்துட்டே இருக்கே, நானும் ஸ்ரீயும் கல்யாணம் பண்ணப்போறோம், நீ என்னமோ ஆசிர்வாதம் அது இதுன்னுட்டு இருக்க''

''அதுக்கில்லைடா, ஸ்ரீ குடும்பத்தில தகராறு பண்றதா நீதானே சொன்ன, அப்பா வேற ரொம்ப கவலையா இருக்காருடா. சொன்னா கேளுடா''

ராம் 23 வயதான நல்ல உயரமான கருப்பு வண்ண இளைஞன். சமீப ஆறு மாத காலமாக தன்னுடன் வேலை பார்த்து வரும் 21 வயதான சற்றே உயரமான சிவப்பு வண்ண ஸ்திரீயான ஸ்ரீயை காதலித்து வருகிறான். இந்த காதல் விவகாரம் நேற்றுதான் ஸ்ரீ வீட்டுக்கும், ராம் வீட்டுக்கும் தெரிந்தது. ராம் பெற்றோர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். இந்த எதிர்ப்பு விவகாரத்தை ராம், தனது அம்மாவிடம் சொல்ல அம்மா அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து வர சொன்னார்கள். ராம் செல்லமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

''யாரும்மா அந்த பெரியவரு, அவர் என்ன சித்தரா, ஸ்ரீயோட அப்பா அம்மா மனசை மாத்துறதுக்கு. சும்மா கிடம்மா, நானே எப்படி கல்யாணம் பண்ணலாம்னு யோசனையில இருக்கேன்''

''டேய், அவரை பாத்துட்டா, தடைபட்ட கல்யாணம் எல்லாம் நடக்குதாம்டா. அதோட இல்லை கல்யாணம் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாம். நம்ம கோமதி பாட்டி கூட வந்து சொல்லிட்டு போனாங்க''

''அப்படினா விவகாரத்து பண்றவங்களை அவரை பார்க்க சொல்ல வேண்டியதுதானே, சேர்ந்து வாழுவாங்கள''

''அப்படியும் நடந்து இருக்காம்டா, சொன்னா கேளுடா. ஸ்ரீ நம்பர் இருக்காடா''

''எதுக்கு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சனிக்கிழமை அன்னைக்கு போறேன், என்னை நிம்மதியா போய் தூங்கவிடு''

''நம்பர் தாடா, எதுக்கும் வைச்சிக்கிறேன்''

''இந்தாம்மா''

ராம் உறங்க சென்றதும் ஸ்ரீக்கு போன் செய்தார்.

''ஸ்ரீ, நான் ராம் அம்மா பேசறேன்''

''சொல்லுங்க, இருங்க மாடிக்கு போய்க்கிறேன்''

சிறிது இடைவெளிக்குப் பின்னர்

''ம்ம் சொல்லுங்க''

''ஏன்மா, என் பையனை நீ காதலிக்கிறியாமே, உங்க வீட்டுல பிரச்சினையாமே, ராம் சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தான்''

''ஆமாம், வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்க முடிவுல மாத்தமில்லை, உங்களுக்கு சம்மதம் தானே''

''சம்மதம் தான், நீ எதுக்கும் எங்க ஊருக்கு வெளில ஒரு குடிசையில பெரியவர் ஒருத்தர் இருக்காரு, ராசிசாமினு கேட்டா சொல்வாங்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா எந்த பிரச்சினையும் வராது''

''ம்ம்''

''மறந்துராதம்மா''

''ம், மறக்கலை''

ராம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த நாள் ஸ்ரீ, ராசிசாமியை தேடி வந்துவிட்டாள்.

''வணக்கம் சாமி''

''ம்ம்''

''என்னோட கல்யாணத்துல பிரச்சினை, அதை நீங்க தீர்த்து வைக்கனும்''

''ம்ம் உன்னோட பேரு, ராசி என்னம்மா?''

''ஸ்ரீ, மகரம்''

''என்ன நட்சத்திரம்?''

''திருவோணம்''

''எந்த மாசத்தில் பிறந்த?''

''மே  7''

''பையனோட பேரு, ராசி?''

''ராம், மீனம்''

''பையனோட நட்சத்திரம்?''

''ரேவதி''

''எந்த மாசத்தில் பிறந்தார்?''

''ஜனவரி 11''

''எல்லாம் துல்லியமா வைச்சிருக்கியே''

''காதலிக்க ஆரம்பிச்சதும், ராசி பொருத்தம் பாத்துட்டேன்''

''இது ஜாதகப்படி சரி. எதுக்குனா இது சந்திர ராசி. ஜாதகத்தில எங்க சந்திரன் இருக்கோ அதுதான் ராசி. ஆனா பெரும்பாலான இணையதளங்களில் பிறந்த மாசம் வைச்சிதான் கணக்கு பண்ணுவாங்க. அது சூரிய ராசி. ஆங்கில மாச பிறப்பு படி நீ ரிஷபம், அவர் மகரம். இந்த ராசிக்கான நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ராசி மட்டுமே பாக்கனும், அப்படி பாக்கப்போனா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. தாராளாம கல்யாணம் பண்ணலாம்''

''சரிங்க சாமி, தட்சிணை எவ்வளவு?''

''அந்த பணத்தை அப்படியே போறப்ப அநாதை பிள்ளைகளுக்கு சோறு வாங்கி கொடுத்துட்டு போ''

ஸ்ரீ, ராமிடம் உற்சாகமாக விஷயத்தை சொன்னாள்.

''அந்த பெரியவர் மாத்தி சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பியா''

''மனசுக்கு கஷ்டமா இருந்து இருக்கும்''

''சரி, வேலைக்கு வந்து சேரு''

ஸ்ரீ தனது அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''சரி கவலைப்படாதே, உன் அப்பாகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி வைக்கிறேன்''

ஸ்ரீ, ராமிடம் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''நான் சொன்னேன் பார்த்தியா, அதுதான் அந்த பெரியவரோட மகிமை''

''தேங்க்ஸ்த்தை''

ஸ்ரீ வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ராம் சில தினங்கள் பின்னர் பெரியவரை சந்திக்க சென்றான்.

''எப்படி உங்களால் இந்த கல்யாணம் எளிதாக சாத்தியம் ஆச்சு?''

''என் மேல மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கை. நான் சொன்னா நல்லா நடக்கும்னு நினைக்கிறாங்க. இந்த நம்பிக்கையை ஸ்ரீக்கு கொடுத்து அது ஸ்ரீ பெற்றோருக்கு போய் சேர்ந்தது. அவங்க அவங்க மேல நம்பிக்கையை வரவைக்கிறதுதான் என்னோட வேலை. மத்தபடி ராசி, ரோசி எல்லாம் ரெண்டாம் பட்சம். பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்னைக்குமே பஸ்பம்தான்''

''ரொம்ப நன்றிங்க''

''இந்த நம்பிக்கை விஷயத்தை ஒரு நாப்பது வருஷம் முன்னாடி நான் என்னோட சுமதிக்கு சொல்லி இருந்தா இந்த ராசி கருமாந்திரம் எங்களை பிரிச்சி இருந்து இருக்காது''

ராமின் சந்தோசத்தில் சின்னதாய் வலி ஒன்று வேகமாக ஊடுருவி போனது.