Friday 24 January 2014

ஜீரோ எழுத்து - 9 (கருந்துளை)

கருந்துளை, கருங்குழி எப்படி வேண்டுமெனினும் தமிழ்படுத்தி கொள்ளுங்கள். இந்த கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை ஒளியை கூட வெளிவிடாமல் தன்னுள் உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையது என்றே முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். கிட்டத்தட்ட இருநூற்றி முப்பது  வருடங்களுக்கு முன்னர் உருவான சிந்தனை இது. அதிக ஈர்ப்புவிசை கொண்ட நிறை பொருள் ஒளியை வெளிவிடாது என்றே சிந்தனை எழுந்தது. இது கிட்டத்தட்ட் ஐம்பது வருடங்கள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நியூட்ரான் நட்சத்திரங்களே இந்த ஒப்புதலுக்கு முதற்காரணம். 

நமது சூரியனைவிட பன்மடங்கு பெரிதான நட்சத்திரங்களே இந்த கருந்துளை ஏற்பட காரணம் ஆகிறது. ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை இரண்டு வகையாக முடித்துக் கொள்ளும். நமது சூரியன் போல அளவு இருந்தால் இறுதியில் ஒன்றுமற்றதாகவே மாறிவிடும். எப்படி ஒரு விறகை எரித்து முடித்திட ஜூவாலை தோன்றி மறைந்தபின்னர் தகதகவேனும் சிவப்பாக மாறி இறுதியில் சாம்பலாக மாறி கடைசியில் கருப்பாக மறைந்துவிடுமோ அதைப்போலவே நமது சூரியன் போன்ற அளவுடைய நட்சத்திரங்கள் ஆகும் என்பது அறிவியல் குறிப்பு. 

அதே வேளையில் பெரிய அளவுடைய நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு உள்ளே இருக்கும் அளப்பரிய ஆற்றல் மூலம் மற்றொரு சூரிய குடும்பத்தை உருவாக்கும், அப்படி உருவாக்காத நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறி பின்னர் கருந்துளையாக மாறிவிடும் என்பது அறிவியல் குறிப்பு. 

எப்படி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. இருட்டினை எப்படி கண்டு கொள்வது. ஒளிதனை இருட்டில் பாய்ச்சினால் அந்த இருள் ஒளியாகும், ஆனால் ஒளியை தன்னுள் உட்கிரகித்துக் கொள்ளும் இருளை எப்படி கண்டு கொள்வது. எந்த ஒரு பொருளும் தன்னை சுற்றியுள்ள பொருள் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தும் தன்மை உடையது, அதன் அளவீடு குறைந்ததாக இருக்கலாம், அதைப்போலவே இந்த கருந்துளை தன்னை சுற்றி உள்ளவைகள் மீது ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதாவது இந்த கருந்துளையை தாண்டி செல்லும் எந்த ஒரு பொருளும் பெரும் ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தி நகர்ந்தது. அதாவது தனக்குள் இருக்கும் ஆற்றல் மூலம் இந்த நட்சத்திரங்கள் மீது ஒளி பாய்ச்சியது. அதைவைத்துதான் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. 

நியூட்டனின் கொள்கையான ஈர்ப்புவிசை ஒளியின் வேகத்தில் மாறுபாட்டினை உண்டு பண்ணும் என்பதே இந்த கருந்துளைக்கு அடிப்படை தத்துவம். சுப்பிரமணியம் சந்திரசேகரின் சூரிய நிறை குறித்தும், எப்படி ஒரு நட்சத்திரம் உருக்குலைந்து கருந்துளையாக மாறும் என்பது குறித்தும் இப்போதைக்கு சற்று தள்ளி வைப்போம். 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வேகமாக சுழலக்கூடிய, அதிக காந்த தன்மை கொண்ட நியூட்ரான் நட்சத்திரம் வெளிப்படுத்திய கதிரியக்கத்தை பூமியில் இருந்து காண முடிந்தது. இவை பல்சார் எனப்பட்டன. இந்த கருந்துளைகள் நிறை, மின்னேற்றம், சுழல் உந்தம் போன்றவை பொருத்து அமைகின்றன. 

வெறும் நிறை அடிப்படையிலும் இந்த கருந்துளைகள் அமையும். சமீபத்தில் இந்த கருந்துளை பற்றி ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. 

(தொடரும்) 

Thursday 23 January 2014

இவர்கள் எல்லாம் பெண்களா?

எல்லா பெண்களும் கல்வி, கலவி, காமம், காதல், கல்யாணம், விபச்சாரம் என தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படையாக பேசிவிட்டால் இந்த தமிழகம் தாங்காது. நாகரிகம்  மாறிவரும் வேளையில், கலாச்சாரம், பண்பாடு என இவற்றில் வளர்ந்துவிட்டதால் பல பெண்கள் இவைகளை உதாசீனம் செய்வதோடு உள்ளுக்குள் வேதனை கொள்கிறார்கள். அதையும் தாண்டி தங்கள் மனக் குமுறல்களை வெளிச் சொன்னால் இவர்களுக்கு பெண்ணியவாதி என பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, கற்பு, அடக்கம், ஒடுக்கம் என எல்லா குட்டிச்சுவரகளையும் பெண்கள் மீது கட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

வரம்பு மீறி வாழும் பெண்களுக்கு ஆண்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமெனில் மணந்து வாழலாம் எனும் போது, ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமெனிலும் மணந்து வாழ சமூகம் அங்கீகரிப்பது இல்லை. எந்த ஒரு ஆணும் அதற்கு சம்மதம் சொல்வது இல்லை. எனக்கு இரண்டு புருசர்கள் என எந்த பெண்ணும் சொல்லிக்கொண்டதாக தெரியவில்லை. கேட்டால் சமூக இழிவாம்.

சுதந்திரமாக வாழ எத்தனிக்கும் பெண்களை நோக்கி எழுப்பப்படும் ஒரே கேள்வி இவர்கள் எல்லாம் பெண்களா என்பதுவே! ஆம், தனது சுதந்திரம் பறிபோவதை எதிர்த்து, தனது உரிமைகளுக்கு போராடும் பெண்கள் பெண்கள் தான்.

காமம், கலவி இதில்தான் பல பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைக்கு என தனது சொந்த அபிலாசைகளை தூக்கி எறிந்தவர்கள் இவ்வுலகில் எத்தனை பேர். '' தூக்கி பரண் மேல போட்டாச்சு''

நிற்க.

ஒரு ஊருல சரஸ்வதின்னு ஒரு பெண். இருபத்தியொரு வயசான அந்த பொண்ணு  அந்த ஊருல இருக்கற ஹோட்டலுல வேலைப் பாத்துச்சு. ஹோட்டலு ஒன்னும் பெருசு இல்லை. கூரை மேய்ஞ்ச ஹோட்டல் தான். ஆமை வடை, உளுந்த வடை, போண்டா, இட்லி, தோசை, பூரி சாப்பாடு வகையறாதான் கிடைக்கும். புரோட்டா எல்லாம் இல்ல. கிரைண்டர் இல்லாத காலம் அது. இந்த பொம்பளை தான் எல்லாத்துக்கும் மாவாட்டணும். அந்த கடையில ஒரு பெரிசு டீ, காபி போட்டு கொடுப்பாரு.

இந்த பொண்ணு  ராத்திரி ஆனதும் 'சரக்கு' அடிக்கப் போகும். அது ஊருக்கேத் தெரியும். கம்மாய் ஓரத்தில 'சாராயம்' கொண்டு வந்து விப்பாய்ங்க. ஒரே ஒரு டம்ளர்தான் சரக்கு அடிக்கும். வாய்க்கு வந்தது எல்லாம் திட்டும். அதனால ஒரு பைய அந்த பொண்ணை  தப்பான நோக்கத்தில நெருங்க முடியாது. என்ன சரசுன்னு சொன்னா போதும், போடா பொசக்கட்ட பயலேன்னு சொல்லும். ஹோட்டலுக்கு வரவங்ககிட்ட மட்டும் நல்லா சிரிச்சு பேசும்.

அந்த பெரியவருக்கு குடும்பம் இருந்துச்சு. ஹோட்டலுல நல்ல வியாபாரம் நடக்கும். பக்கத்து ஊரில இருந்து ஆளுக வந்து சாப்பிட்டு போகும், உள்ளூர்காரங்க கொஞ்ச பேருதான் வாங்கி சாப்பிடுவாங்கே.சரக்கு அடிக்குதாம் சரசுனு கேலி பேசுவாங்கே.  இந்த சரசுக்கு ரொம்ப சம்பளம் எல்லாம் கிடையாது. சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் இலவசம். அந்த பெரிசு இந்த சரசுவை வைச்சிருக்கிறதா ஊரே பேசும், ஆனா பெரிசோட வீடு மட்டும் அப்படி பேசாது. இன்னும் என்ன என்னமோ பேசுவாங்கே, எழுதவே கை கூசுது. தட்டிக்கேட்டா மாட்டிக்கிட்டியானு வம்பு அளப்பாங்கே. எதையும் சரசு கண்டுக்காது. எங்கையா இவளைப் பிடிச்சி வந்தனு கேட்டா, அனாதையா கிடந்தா, கூப்பிட்டு வந்தேன்னு சொல்வாரு பெரிசு.

சரசுக்கு கல்யாணம் காட்சி பண்ணி வைக்க பெரிசு நினைச்சாலும் ஒரு பயலும் கட்டிக்க வரலை. சரசு போட்ட கண்டிசன் தான் காரணம். இந்த ஹோட்டலு, சரக்கு குடிக்கிறதை விடச் சொல்றவன், பொம்பளை சுகம் தேடுறவன் எல்லாம் வரக்கூடாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிருச்சி. பெரிசு ஒருநா செத்துப் போனாரு.

பெரிசோட குடும்பம் இந்த ஹோட்டலை மூட நினைச்சிச்சு. சரசு தான் நான் தனியா நடத்துறேனு சொல்லி  அடம்பிடிச்சி நடத்துச்சு. சிரிச்ச முகம் மாறாம இருக்கும். ஒரு பையலையும் கிட்டக்க அண்டவிடலை. சரசு ஹோட்டல் வாடகை பணம் மட்டுமே பெரிசு குடும்பத்துகிட்ட கொடுக்கும். மத்ததெல்லாம் சரசுகிட்ட இருந்துச்சு. கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்கலை சரசு.

முப்பது  வருசமா நாயா பேயா உழைச்சிச்சி. சரக்கு குடிக்கிறத நிறுத்தலை. இருமல் வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில படுத்துருச்சு. ஒரே நாள் தான். சரசு அன்னைக்கே கண்ணை மூடிருச்சி. சரசு செத்துப் போன விஷயம் கேள்விப்பட்டு திமுதிமுன்னு ரொம்ப பேரு வந்துட்டாங்க. அதுல ஊர்க்காரங்களுக்கு தெரியாத சின்ன சிறுசுக ஒரு பத்து பேரு மாப்பிள்ளையும் பொண்ணுமா, குழந்தையோட ஆத்தா ஆத்தா சொல்லாம போயிட்டியே ஆத்தான்னு அழுதுட்டு நின்னாங்க.

யாருன்னு விசாரிச்சப்ப, இந்த ஆத்தாதான் எங்களை வளர்த்தாங்கனு  கல்யாணம் பண்ணி வைச்சாங்கன்னு பத்து பொட்ட்பிள்ளைக சொல்ல ஊரே வாயடைச்சி நின்னுருச்சி.

ஒரு குடும்பத்தை கட்டி பிள்ளைகளை பெத்து அனாதையா போற பொணத்துக்கு மத்தியில சரசோட இறுதி சடங்கு பெருசா நடந்துச்சி. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி சரசுக்கு ஒரு கோவில் கட்டி வைச்சாங்க அந்த பிள்ளைக.

அந்த பிள்ளைக வாரம் தவறாம வந்து கும்பிட்டு போறாங்க!

ஊர்க்காரங்களும் தான் போடுற பொங்கச் சோறு திங்கிறாங்கே. மானங்கெட்ட பயலுக.