Monday 31 October 2011

கைரேகை காவியம் - 1

இது ஏமாற்று கலை அல்ல. இது ஒரு அற்புதமான விசயம். அறிவியல் சார்ந்ததாக இருக்கலாம்.  இந்த கை ரேகை எப்படி அமைகிறது, எப்படி மாறுகிறது போன்ற விசயங்களை அலசப் போகும் ஒரு தேடல். சிறு வயதில் இருந்தே சோதிடம், கை ரேகை போன்றவை மனதில் பெரிய கேள்விக்குறியை எழுப்பின. ஆவலுடன் பல புத்தகங்கள் படித்தேன். ஆனால் இவையெல்லாம் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த இந்த சோதிடம், கை ரேகை எல்லாம் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்தேன். அவ்வப்போது படித்து பார்க்க ஆர்வம் ஏற்படும்.  எத்தனையோ விசயங்கள் இருக்க இந்த கை ரேகை குறித்த சிந்தனை எழுந்த காரணம் எனது கல்லூரியில் பயிலும் ஒரு வெள்ளைக்கார பெண் தான். 

சமீபத்தில் வாழ்க்கையில் காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை. நல்லவனா, நமக்கு சரிபட்டு வருவானா என பழகி பின்னர் கல்யாணம் பண்ணுவது எல்லாம் அவசியமில்லாத ஒன்று. பழகும் வரை சரியாக இருந்துவிட்டு கல்யாணம் பண்ணிய பின்னர் அவனது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் என்ன செய்வாய்? எனவே திருமணம் பண்ணிய பின்னர் எப்படி இருக்கிறார்களோ அதுபோல வாழ்க்கை மாற்றி அமைத்து கொண்டாலே போதுமானது என பேசிய விசயத்தை அப்படியே அவளது காதலனிடம் அவள் போய் சொல்ல அவனோ இவளிடம் இனிமேல் நமக்கு சரிபட்டு வராது, பிரிந்து விடுவோம் என கூறி இருக்கிறான். இவளோ விளையாட்டுக்கு சொல்கிறான் என நினைக்க அவன் உண்மையிலேயே பிரிந்து விடுவதாகவே கூறி இருக்கிறான். இந்த விசயத்தை என்னிடம் சொன்னபோது எனக்கோ பக் என்று இருந்தது. என்ன மனிதர்கள்? 

நல்லவேளை இப்பொழுதாவது சொன்னானே என மனதை தேற்றி கொண்டாள். வேறு சில காரணம் இருக்கும் என்றேன். இல்லை இல்லை ஒரு வருடம் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாளை மறுநாள் கூட ஒரு இடத்தில் சந்திப்பதாக இருந்தோம், ஆனால் இந்த விசயத்தை சொன்னதும் அவன் இவ்வாறு செய்துவிட்டான் என்றாள். ஆம் நான் பேசியது காதலை கொச்சைபடுத்தும் விசயம் தான். காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை என காதலர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வர வாய்ப்பு இருக்கிறது. நேசம் என்பது, காதல் என்பது புரிந்து கொள்ளும் என்றுதான் எனக்குள் ஒரு வரையறை வைத்து இருந்தேன். ஆனால் உலகில் வித்தியாசமான மனிதர்கள் இருப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை. அவளது கையை காட்ட சொன்னேன். காட்டினாள். அவளது கைகளில் காதல் ரேகை எனக்கு தெரியவில்லை. 

எனக்கு ஒரு மனைவி, ஒரு காதலி, அப்புறம் ஒரு காதலி என எனது கைகளில் இருந்த ரேகைகளை காட்டினேன். சிரித்தாள். இந்த கை ரேகை ஒரு சுவாரஸ்யமான விசயம். இப்படி அவளது கை ரேகையை பார்த்து கொண்டிருந்தபோது பலரும் வந்து கைகளை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ ஒரு மாதிரியாகிப் போய்விட்டது. எனக்கு கை ரேகை எல்லாம் பார்க்க தெரியாது. எல்லாம் மறந்து போய்விட்டது. சில காலம் தாருங்கள், படித்துவிட்டு வருகிறேன். இதையெல்லாம் நம்ப கூடாது, ஆனால் சுவராஸ்யமாக இருக்கும் என சொல்லிவிட்டு இந்த கை ரேகை குறித்த ஆய்வில் இறங்கி விட்டேன். இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்ததும் அருகில் இருந்த எனது மனைவி அவளது கையை என்னிடம் காட்டினாள். கொஞ்சம் பொறுத்து கொள், சொல்கிறேன் என சமாளித்து இதோ எழுதி கொண்டிருக்கிறேன். 

இந்த கைரேகை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுகதை கைரேகை பற்றியது. எந்த காரணத்திற்கு அந்த கதையை எழுதினேன் என அந்த கதையிலேயே குறிப்பிட்டு இருந்து இருப்பேன். இந்த ஜோதிடம், கைரேகை, நாடி சோதிடம் எல்லாம் மக்களை ஒரு மயக்க நிலையில் வைத்திருப்பவை என்றாலும் இதன் மேல் அனைவருக்கும் ஒருவித நாட்டம் இருப்பது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சில மனிதர்கள் முகத்தின் குறிப்பை அறிந்து அகத்தில் இருப்பதை சொல்லிவிடுவார்கள். அதுபோல மருத்துவர்களிடம் சென்றால் மருத்துவர் நமது கண்களில் ரத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்து நமது நோயினை தீர்மானிப்பார். இந்த கையும் ரேகையும் அப்படித்தான். ஒரு கையானது எப்படி மடக்கப்படுகிறது, எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பது பொறுத்து கையில் ரேகைகள் அமைந்துவிடும். 

இது மிகவும் உன்னதமான கலை. இந்த அற்புதமான கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் தாரளாமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் எனக்கு இப்படி இருக்கிறதே, அப்படி இருக்கிறதே என நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படுபவர்களாக இருந்தால் தயவு செய்து கைரேகையை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். 

இந்த கைரேகை குறித்து பல விசயங்கள் என்னை ஆச்சர்யம் அடைய செய்து இருக்கின்றன. பல வருடங்கள் முன்னர் மதுரை மீனாக்ஷி கோவில் ஒன்றில் அமர்ந்து இருந்த ஒருவர் எனது கைரேகையை பார்த்து நீ மீனம் ராசி என்றார். தவறாக சொல்கிறீர்கள், நான் மீன ராசி இல்லை என்றேன். அவர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் தம்பிக்கு கைரேகையில் நம்பிக்கை இல்லையோ என்றார். தவறுதனை தவறு என்றுதானே சொல்ல முடியும் என்றேன். ஆனால் அவர் நீங்கள் மீன ராசி தான், இந்த அம்மனுக்கு தெரியும் என்றார். ஆச்சர்யமாக போய்விட்டது. எங்கேனும் நான் ராசி சொல்லி அதை ஒட்டு கேட்டாரா என எனக்கு தெரியாது. ஆனால் கை ரேகை மூலம் எனது ராசியை மிக சரியாக கணித்த அந்த மனிதரை நான் தவறவிட்டு விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சில மனிதர்கள் அதிசயமானவர்கள். 

பார்மசி கல்லூரியின் விடுதியில் மாலை ஒன்றில் வெளியில் நண்பர்களோடு அமர்ந்து இருக்க எனது கையை பார்த்துவிட்டு கையை மூடிக்கொள் எவரிடமும் காட்டாதே என சாலமன் ரேகையை சொல்லி சென்ற ஒரு மனிதரை மனது இன்னமும் நினைத்து கொண்டுதானிருக்கிறது. இரண்டு கைகளையும் இணைத்து பார்த்துவிட்டு அழகான மனைவி அமைவாள் என்று ஒருவர் சொன்னது குறித்து இன்னமும் இரண்டு கைகளை அவ்வப்போது இணைத்து பார்த்து அழகு பார்ப்பேன். சில பல  ரேகை வளர்கிறதா, தேய்கிறதா என சோதனை செய்வேன். சனி மேடு, குறு மேடு என ஆயுள் ரேகை, புத்தி ரேகை என பல விசயங்கள் ஆச்சர்யம் பட செய்கின்றன. இவையெல்லாம் உழைக்கும் மனிதருக்கு பெரிய விசயமாக படுவதில்லை, நேரமும் இருப்பதில்லை. 

பெருவிரலில் இரண்டு ரேகைகள் இணைந்து ஒரு வளையம் போலிருந்தால் பணம் அதிகமிருக்கும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் வந்த பணம் கரைந்தோடும் என சொல்வதும் சிரிப்பாக இருக்கும். அத்தனை ரகசியங்களை நமது உடலைமைப்பு வைத்திருப்பதை சாமுத்ரிகா லட்சணம் என பிரித்து வைத்தார்கள். பிறப்புறுப்புகள் கூட எப்படி எப்படி இருக்கும் எனவும் எப்படி பட்ட கனவானுக்கு எப்படிபட்ட மனைவி பொருத்தம் என்றெல்லாம் எப்படி சிந்தனை செய்தார்கள். ஆராய்ச்சி செய்து சொன்னார்களா? எத்தனை பேர் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டார்கள் என்பதெல்லாம் தேடலில் கிடைக்குமோ தெரியாது. 

ஆட்காட்டி விரலில் அமைந்திருக்கும் ரேகை அமைப்பானது ஒரு பெரிய விசயத்தை சொல்லும் என்கிறார்கள். அதைப்போல இந்த ரேகை அமைப்பு எவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிறார்கள். இதனால்தான் படிக்காத காலத்தில் கை ரேகையை நகல் எடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கை ரேகைக்கும் மரபணுக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க கூடும் என்றால் இரட்டை குழந்தைகளின் ரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். இது குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவை. 

ஆனால் இதை மட்டும் நம்பி அவரவர் வாழ்க்கையை தொலைத்தல் என்பது மிகவும் தவறு. எனவே இந்த கைரேகை, சோதிடம் எல்லாம் ஒரு குறியீடாக மட்டுமே வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. 

(தொடரும்) 

கம்யூனிசமும் கருவாடும் - 7


 கம்யூனிசம் என்றால் என்ன, அது என்ன சொல்ல வருகிறது என்பது அத்தனை சிரமம் இல்லை. இந்த கம்யூனிசம் குறித்து ஒரு தளத்திலிருக்கும் விசயத்தை அப்படியே எழுதி, தேவையிருப்பின் மேற்கோளிட்டு காட்டுவேன், அதாவது திருடி எனது தளத்தில் பிரசுரித்து கம்யூனிச பிரச்சார பதிவாக இருக்க வேண்டாம் என்பதால் எனது எழுத்துகளின் மூலமே கொடுக்கிறேன். இந்த கட்டுரையின்  கடைசி அத்தியாயத்தில் அன்றைய தினத்தில் என்ன மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் பற்றி நினைத்தார்களோ அது குறித்த சிந்தனை இப்படியாக முடிகிறது. 

'கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.'' நன்றி மார்க்சிஸ்ட் தளம்


இன்றைய அனைத்து கம்யூனிஸ்ட்கள் இதை எல்லாம் படித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் எதற்காக கம்யூனிசம் ஆரம்பித்தது என்கிற அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு இவர்கள் எல்லாம் கம்யூனிசத்தில் இணைந்து இருந்தால் இவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று பெருமிதப்பட்டு கொள்ளலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. இதனால் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கு அதாவது தங்களை தாங்களே அர்பணித்து கொண்டவர்களுக்கு, இவர்கள் அவப்பெயரைத் தேடி தந்துவிடுகிறார்கள். 

சமூக அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஆதரவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சிகள் ஆரம்பித்ததுதான் மிச்சம். மாவோயிஸ்ட், நக்சலைட், யிஸ்ட் என யிஸ்ட் என கூவியதுதான் மிச்சம். அதுவும் கேவலம், இந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும், அந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும் என நாய்படாத பாடு பட்டதை கண்டு கம்யூனிஸ்ட்கள் குறித்து நகைப்பு மட்டுமே மிஞ்சும். அதுவும் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களது பைக்கு எத்தனை பைசா வரும்படி கிடைக்கும் என முதலாளிகள் அறைக்கு சென்று கை கட்டி பேசி வந்ததை பார்த்தது இருக்கிறேன். இதே கம்யூனிஸ்ட்கள் வெளிநாட்டு கூலிப்படைகளாக அலைந்து திரிவது கூட அவமானம். இவர்கள் இங்கே அமைப்பு நடத்த எவரோ பணம் தருகிறார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க கூடும். உழைக்காமல் பணம் எப்படி வரும்? இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அத்தனை கஷ்டமில்லை. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் மொத்த கம்யூனிசத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. 

இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வெறுக்கின்ற பலர் இருந்தாலும் இந்த கம்யூனிசம் போர்வைக்குள் செல்ல மறுக்கிறார்கள். முதலாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கம். நானும் பாட்டாளி வர்க்கம் தான். நானும் கூலி வேலைதான் செய்கிறேன். எனது உழைப்பிற்கு அதிகமோ, குறைவோ மாதம் மாதம் ஊதியம் பெற்று கொள்கிறேன். எனது உழைப்பில் கிடைக்கும் வரவுதனில் பங்கு எதுவும் எனக்கு கிடையாது. ஆனால் என்னை பாட்டாளி வர்க்கம் என சொல்லக்கூடாது, என்னை நடுத்தர வர்க்கம் என சொல்ல வேண்டும் என பிரிக்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவர் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டு பணம் அவரது கைகளில் இருந்து வருகிறது, அல்லது எங்காவது கடன் வாங்குகிறார். இந்த முதலீட்டு பணத்தையோ, அல்லது அவரது உழைப்புக்கு  அவர் உபயோகபடுத்தும் அறிவையோ இந்த பாட்டாளி வர்க்கத்தினர் பகிர்ந்து கொள்வதில்லை. இவர்கள் தங்கள் உடல் உழைப்பை மட்டுமே தருகிறார்கள். இதையெல்லாம் மறந்து இவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது கம்யூனிசம். 

முதல் அத்தியாயத்தில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த கம்யூனிச அடிப்படை சிந்தனையான அனைவரும் பொது என்கிற கொள்கையானது ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமை, அயர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவுடைமை நிலம் என சில குழு சமுதாயங்கள், கிராம சமுதாயங்கள் எல்லாம் இருந்து இருப்பதாக பல அறிஞர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு பின்னர் இந்த சமுதாய கட்டமைப்புகள் ஒழிந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட தொடங்கினர். இன்றைய நிலைமையில் இந்த வேறுபாடு அதிகமாகி பாட்டாளி வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் தோற்று போயினர். இந்த நிலைமை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அதிகமாகவே இருந்து இருக்கிறது. அவர் காலம் போகட்டும், ஆனால் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் குடும்பம் எப்படி தெரியுமா இருக்கிறது? இவர்களின் நிலம் எல்லாம் வெவ்வேறு. இவர்கள் வேலைக்கு ஆள் வைத்து கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் என கத்துகிறார்கள். பாவம் கார்ல் மார்க்ஸ். 

இந்த அத்தியாயத்தில் எப்படி பல வர்க்கங்கள், அதன் உட்பிரிவுகள் இருந்திருக்கிறது என மத்திய காலம், ரோம பேரரசு காலம் என குறித்து வைக்கிறார். நிலபிரபுத்துவம் அழிந்து நவீன முதலாளித்துவம் வந்தாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டும் அதற்குரிய புது நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளதாகவே மார்க்சும், இங்கெல்சும் ஆதங்கபட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்று வேண்டாமா என எதற்கு நாம் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். 

எப்படி இந்த முதலைத்துவம் அதாவது முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை கோடிட்டு காட்டுகிறார் மார்க்ஸ். ஒரு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, கடல்வழி அதாவது நன்னம்பிக்கை வழி பயணம் என பிற நாடுகளுக்கு செல்லும் வழியே இந்த பண்ணையடிமையிலிருந்து வெளியேறிய நகரத்தார் பலருக்கு இந்த முதலாளித்துவ கூறுகள் வளர்க்க வழிபோட்டது. அதோடும்ட்டுமில்லாமல் கிழக்கிந்திய, சீன சந்தைகள் என உலக பொருளாதார இயக்கமே இந்த சீர்குலைவுக்கு அடிகோலிட்டது என குமுறுகிறார் மார்க்ஸ். 

கைவினை குழுமம் இந்த சந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாததால், பட்டறை குழுமம் உருவானது. ஆனால் இந்த தனிதனி பட்டறைகள் தங்களது உழைப்பில் பிரிவினை கொண்டாடின. இந்த பட்டறைகளால் கைவினை குழுமம் நலிந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எப்படி ஒரு மனித சமூகம் தொழில்வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள புதிய புதிய வழிமுறையை கண்டது என்பதை குறிப்பிட்டு அன்றைய காலத்தில் எப்படி இந்த தொழில்முறை உருவாகின என்பதை விளக்குகிறார்கள் இருவரும். இந்த பட்டறை தொழில் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால் நீராவி, எந்திரங்கள் எல்லாம் உருவானது. கைவினை தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கத்தினர். அதற்கு அடுத்து பட்டறை தொழில் வைத்திருந்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அதையெல்லாம் தாண்டி இந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து தொழிலில் புரட்சி செய்தவர்கள் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர். 

சந்தை புரட்சியை ஈடுகட்ட தொழிற்புரட்சி உருவானது. அந்த தொழிற்புரட்சி தான் கம்யூனிசம் கருவாடாகிப் போனதற்கு காரணம். பொதுவாக ஒரு பொருளை உருவாக்கினால் அந்த பொருளானது பிற நாடுகளுக்கு பிற இடங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும், அதற்கு போக்குவரத்து மிகவும் அவசியம். கழுதையிலும், குதிரையிலும், மாடுகளிலும் என கட்ட வண்டி, குதிரை வண்டி என உருவாக்கி இருந்த காலம் போய், ரயில், கப்பல் போக்குவரத்து என தொடங்கியதால் இந்த உலக சந்தையில் முதலாளிகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 

இப்படியாக அந்த முதலைத்துவம் பற்றி மார்க்சும், இங்க்கேல்சும் கோடிட்டு காட்டுகிறார்கள். இந்த முதலைத்துவம் பல வர்க்கங்களை பின்னுக்கு தள்ளியது. அதோடு அரசியலும் வளர்ச்சி அடைந்தது, ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது. மேலும் இந்த அத்தியாயம் பல விசயங்களை அலசுகிறது. அதனை அடுத்து பார்ப்போம். 

இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

பிற்போக்காளர்கள் யார்? முற்போக்காளர்கள் யார்? 

முற்போக்கு சிந்தனை உடையவர்கள் எல்லாம் முதலாளிகள். பிற்போக்கு சிந்தனை உடையவர்களே பாட்டாளிகள். அந்த பாட்டாளிகளை சூறையாடி கொண்டு வருகிறோம். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது எவரின் குற்றம்? அந்த வளர்ச்சிக்கு துணையாய் நின்றது பாட்டாளிகளின் குற்றமா? உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலை இருந்ததால் உழைக்காமல் உயிர் துறக்க பாட்டாளிகளின் உயிர் ஒன்றும் போராளிகளின் உயிர் இல்லை. போராளிகள் எவரும் நிலத்தில் உழைத்து பணம் சம்பாதித்ததை வரலாறு குறிக்கவில்லை. இவர்கள் பாழாய் போன பாட்டாளிகளின் மிச்சம் மீதி இருந்த உழைப்பின் பலனையும் சுரண்டி தின்றார்கள். இதில் பாட்டாளிகளுக்கு பெருமை வேறு. எங்களுக்காக போராடுகிறார்கள் என. இந்த போராட்ட புரட்சிகர இயக்கம் தொடங்குவதில் பல காலம் தொலைந்தது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அதன் காரணமாகவே அவர் தொழிலாளர்களை ஒன்று கூட சொன்னார். போராளிகளை அல்ல. 

இது போன்ற சமூக சீரழிவு தொடங்கியபோது தங்களது நிலைமையை உணராமல் அதற்கு அடிபணிந்து நின்றது எவர் குற்றம்? உழைப்பை சுரண்டுகிறார்கள் என்கிற உணர்வே இல்லாம் வாழ்ந்த அவர்களுக்கு யார் இருந்தார் வழிகாட்டியாய், அல்லது இன்றும் எவர் இருக்கிறார் வழிகாட்டியாய். ஐம்பது ரூபாய்க்கு சம்பாதிக்க வேண்டியது, நாற்பது ரூபாய்க்கு தண்ணி அடிக்க வேண்டியது, பத்து ரூபாய்க்கு சீட்டு ஆட வேண்டியது. இப்படி தங்கள் குடும்பத்தின் மேன்மைக்கென உழைக்காமல், தங்களை தாங்களே அழித்து கொள்ள உதவிய பாட்டாளிகள் நிலைமையை தனது வசமாக்கி அரசியல் கட்சி அமைப்புகள் ஆடும் ஆட்டம் எத்தனை. தங்களுக்கு தாங்களே தலித் என்று ஒரு பட்டம் வேறு. சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள். நாங்கள் எல்லாம் தலித் இல்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் என சிந்தியுங்கள். இந்த போராட்டத்துக்குதான் கார்ல் மார்க்ஸ் கூப்பாடு போட்டார். அதாவது முதலாளிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது அனைவருமே உழைக்கவேண்டும் என்பது. அனைவருமே பலன் அடைய வேண்டும் என்பது. 

தலித் என்பவரோ, தாழ்த்தப்பட்டவரோ தனக்கு தகுதி இல்லாத நிலையினை, தனது குல தகுதியால் பெற்று கொள்வது என்பதை கம்யூனிசம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. (தொடரும்). 

Sunday 30 October 2011

விவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா?

திருமணம் முடித்துவிட்டு சேர்ந்து வாழ முடியாமல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து அதுதான் சரியான முடிவு என வாழும் சக மனிதர்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்துவிட்டு வேறு வழியின்றி அதுதான் சரியான முடிவு என சேர்ந்து வாழும் சக மனிதர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்ததன் அவசியம் புரிந்து வாழ்க்கையை மிகவும் மென்மையாக நேசித்து வாழும் சக மனிதர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். 

இப்படி பூங்கா ஒன்றில் எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த அந்த வயதானவரைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஒரு சில வாரங்கள் மட்டுமே அவரை பார்க்கின்றேன். அவர் எழுதி கொண்டிருந்ததை கண்டதும் எனக்குள் அவரிடம் பேச வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியது. எப்படி பேசுவது என்ற யோசனை எதுவும் எழுந்திடாமல் அவரது எழுத்துகளையே விசயமாக பேசினேன். 

'என்ன சார், எதுக்காக இப்படி எழுதிட்டு இருக்கீங்க?'

'என்னுடைய அனுமதி இல்லாம நான் எழுதுறதை படிக்கிறது உனக்கு அநாகரிகமா தெரியலையா?'

'சாரி சார், நீங்க எழுதினது சுவாரஸ்யமா இருந்துச்சி அதுதான் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருக்கவங்க படிக்கிற பேப்பரை எட்டி பார்க்கிறமாதிரி பாத்துட்டேன்' 

'உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு?'

'என்னோட பர்சனல் விசயத்தை நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படறது உங்களுக்கு அநாகரிகமா தெரியலையா சார்?' 

'நான் சொன்னதையே நீ சொல்ற, சொல்லு எத்தனை வருசம் ஆச்சு?'

'ஆறு வருசம் ஆச்சுங்க சார், சில நேரத்துல எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கும்'

'ஏன் கல்யாண வாழ்க்கை புளிச்சி போச்சா?'

'இல்லைங்க சார், சில நேரங்களில் அப்படி தோணுறது சகஜம்தானே, எத்தனையோ பிரச்சினைகள், எத்தனையோ சுமைகள், நம்மளை விட ரொம்ப கஷ்டபடறவங்க இந்த உலகத்துல வாழ்ந்தாலும் நமக்கு வந்திருக்கிற பிரச்சினைதான் பெரிய பிரச்சினைன்னு தோணுமில்லையா சார்? எதுக்குடா இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நினைப்பு வருமில்லையா சார்'

'வேலை பார்க்கிறியா, குழந்தை இருக்கா'

'ஆமா சார், வேலை பார்க்கிறேன், ஒரு ஆணு, ஒரு பொண்ணுன்னு ரெண்டு குழந்தை இருக்காங்க, உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே சார் அதுவும் பொதுவா இப்படி எழுதுறத பத்தி'

'நான் ரிடையர்டு ஆயி ஒரு வருசம் ஆகுது. எனக்கு ஆறு குழந்தைங்க. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. போன மாசம் தான் கடைசி பொண்ணு என் மருமகன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கனும்னு வந்து நிற்கிறா, கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை' 

'சாரி சார், உங்க மனைவி இருக்காங்களா சார்?' 

'ம்ம்... இருக்கா. ரொம்பவும் நொந்து போய் இருக்கா' 

'சார், தப்பா நினைக்கலைன்னா எதுக்கு உங்க பொண்ணு விவாகரத்து வாங்கனும்னு நினைக்கிறாங்க?'

'என்னோட மருமகன் நிறைய பொண்ணுகளோட பழக்கம் வைச்சிருக்காராம், இவகிட்ட அன்போட இருக்க மாட்டேங்கிறாராம், எப்பவும் சண்டை சச்சரவுதானாம், அதானால அவரோட வாழப் பிடிக்கலைன்னு வந்து நிற்கிறா'

அவரின் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் என்னை என்னவோ செய்தது. 

'சார், பொதுவா பிரச்சினைனா பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்கு போறது சகஜம் தானே சார், நீங்க எடுத்து சொன்னீங்களா, அதுவும் இத்தனை வருசம் நீங்க வாழ்ந்த வாழ்க்கை பத்தி சொன்னீங்களா சார்' 

'நீ சொன்னியே, எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைப்பு வரும்னு. அந்த மாதிரி ஒரு நாலு கூட நான் நினைச்சதில்லை. கல்யாணம் பண்ணின அடுத்த நிமிசமே அவதான் என் வாழ்க்கை, நான் தான் அவ வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். அதை என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப தெளிவாவே சொல்லிட்டேன், நாங்களும் அவகிட்ட ரொம்ப அன்பாவே சொல்லிப் பார்த்தோம் ஆனா ஒரு முடிவா இருக்கா, என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் தனியா இந்த பார்க்குக்கு வந்து போய்ட்டு இருக்கேன், எதாச்சும் முடிவு கிடைக்காதான்னு' 

'சார், நான் கூட என் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணிருவேன்னு பல தடவை மிரட்டி இருக்கேன், ஆனா பெத்த புள்ளைங்க, சுத்தி இருக்கற சமுதாயத்த பாத்து அந்த நினைப்பு செத்து போயிருக்கு சார், அதுபோல என் பொண்டாட்டியும் என்னை பல தடவை மிரட்டி இருக்கா. ஆனா இதுவரைக்கும் அப்படி ஒரு எல்லைக்கு போனதில்லை சார். அதுக்கு தைரியம் இல்லைன்னு இல்லை சார், அவசியமில்லைன்னு ரெண்டு பேருக்குமே தோணும் சார்' 

'அதுதான் ரெண்டாவது வாக்கியம். வேற வழியில்லைன்னு சேர்ந்து வாழறது. இப்படித்தான் ரொம்ப பேரு வாழறாங்க. வாழ்க்கையோட அடிப்படையை புரிஞ்சிக்க முடியாதவங்க. இவங்களை விட முதல் வாக்கியத்துல சொன்னவங்க எவ்வளோ மேல். வேற வழியில்லன்னு பிரிஞ்சி போயிருரவங்க. ஆனா இதனால பெருமளவு பாதிக்கப்படறது அவங்களோட குழந்தைங்க. நீ ரெண்டாம் வகை' 

'இல்ல சார், நான் மூன்றாம் வகை. என்னால பிரிஞ்சி போக முடியும் சார். அவளாலயும் பிரிஞ்சி போக முடியும் சார். ஆனா கல்யாணம் எதுக்கு பண்ணினோம் அப்படிங்கிறதை புரிஞ்சி வாழறோம் சார். கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கை ரொம்ப சிரமம் சார். ஒரே மொழி பேசத்தான் சார் ஆசை. சில நேரங்களில வாய்க்கிறது இல்லை, அதுக்காக மொத்த வாழ்க்கையும் தொலைக்க ஆசை இல்ல சார்'

'என் பொண்ணுக்கு இது புரியலையே, எல்லா பிள்ளைகளும் நல்லாத்தான் இருக்காங்க, இவ மட்டும் எதுக்கு இப்படி. மருமகன் கிட்ட பேசிட்டேன், அவர் விவாகரத்து பண்ண சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு, ஆனா இவதான் ஒரேயடியா வம்பா நிற்கிறா'

'சார், உங்க மருமகன் கிட்ட பிரச்சினை இருக்கு சார், அவரை  உங்க பொண்ணு விருப்பப்படி வாழ சொல்லுங்க சார், எல்லாம் சரியாப் போயிரும்' 

'நீ என்னப்பா சொல்ற'

'அனுபவத்தில சொல்றேன் சார். ரொம்ப ஈசி சார், விவாகரத்து பண்றது அவ்வளவு ஈசின்னா வாழறது கூட ரொம்ப ஈசி சார். புருஷன், பொண்டாட்டி இவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த கொம்பனும் உள்ள வரக்கூடாது சார். புருசனுக்கு பொண்டாட்டிதான் எல்லாம், பொண்டாட்டிக்கு புருஷன் தான் எல்லாம். ரொம்ப சிம்பிளான பார்முலா சார். இந்த அடிப்படை விசயம் எங்க கால வேகத்துல அடிப்பட்டு போகுது சார். அதுதான் எனக்கு கூட சில நேரத்தில எதுக்குடா கல்யாணம்னு தோணும் சார்'

'புரியலை, இதெல்லாம் தெரியாமலா இருக்கும். எல்லாம் படிச்சவங்கதான. ஆனா இந்த காலத்துல விவாகரத்து பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்களே. அது பிடிக்கலை, இது பிடிக்கலைன்னு காரணம் சொல்லி பிரிஞ்சி போறவங்களை பார்த்து வருத்தம் மட்டுமே மிஞ்சுது. அதுதான் முத வாக்கியம்'  

'வாழ்க்கைய வாழற பொறுமை இல்லை சார் எங்களுக்கு, அந்த பொறுமை தொலையறப்போ, சகிப்பு தன்மை அழியறப்போ எதுவுமே கண்ணுக்கு தெரியறது இல்லை சார். விவாகரத்து பண்றவங்க மன வலியோட தான் பண்ணிகிறாங்க, யாரும் விருப்பபட்டு செய்றது இல்லை சார். அது அத்தனை ஈசியான விசயம் இல்லை சார், உங்க பொண்ணுகிட்ட பேசலாமா சார்' 

'ம்ம்' 

வாழ்க்கையில் எதற்கு விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாதது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி எனவும் சொல்லி முடிக்கிறார்கள். சிலர் தங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொள்வது இல்லை. வறட்டு பிடிவாதம் பிடிக்கிறார்கள். விட்டு கொடுத்து போவது என்பது கடினமாகிப் போகிறது. ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு வலி. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. 

அந்த வயதானவருடன் சென்றேன். அவரின் மகளைப் பார்த்தேன். திருக்குறளை சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளுக்கு என்ன பிரச்சினையோ, அதையெல்லாம் மனம் விட்டு பேசுவாளா என சந்தேகத்துடன் அவளிடம் பேசினேன். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என நான் ஆரம்பிக்கும்போதே அவள் 'இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என முடித்தாள். 

'இங்க பாருங்க, கல்யாணம் பண்றது சேர்ந்து வாழத்தான், எந்த பிரச்சினைனாலும் பேசி தீர்த்துக்கோங்க, எதுக்கு இப்படி அடம் பிடிகிறீங்க' 

அவளிடம் நிறைய பேசினேன். அவளும் புரிந்து கொண்டவளாய் தலையாட்டினாள். 

'நீங்க உங்க கணவர் கிட்ட நிறைய பேசுங்க. என்கிட்டே சொன்னது போல அவர் கிட்டயும் மனசு விட்டு பேசுங்க. அவர் புரிஞ்சிக்கிரனும்னு எதிர்பார்க்காதீங்க, இப்படியெல்லாம் சொல்லணும், அப்படியெல்லாம் பேசணும்னு எதிர்பார்க்காதீங்க. புதுசா வாழ்க்கைய தொடங்குங்க' 

எனது பேச்சை அவள் கேட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வயதானவர் மிகவம் சந்தோசம் கொண்டார். அவர்களிடம் விடைபெற்ற மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். 

'இன்னைக்கு ஒரு பொண்ணு விவாகரத்து பண்ண போறதை நிறுத்திட்டேன் தெரியுமா'

'யாரு அது, உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. கண்ட கண்ட பொண்ணுகளோட பழகாதீங்கனு. பேசமா அவளோட போய் தொலைய வேண்டியதுதானே'

சே, இவளை போய் கட்டிகிட்டோமேன்னு மனசு கிடந்து அலை பாயத் தொடங்கியது. விவாகரத்து என்பது அத்தனை எளிதா என்ன?