Thursday 3 November 2011

பெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்

யோவ் எந்த காலத்துல இருக்க, என்ன பேச்சு பேசு பேசற. பொண்ணுக வேலைக்கு போக கூடாதா! நல்லா இருக்குயா ஞாயம். 

ஏய்யா அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குனு சொன்னவங்களை எதிர்த்து அந்த காலத்துல போராட்டம் தொடங்கனவங்களை கேலி பண்றியா.  

இப்போ எல்லா துறைகளிலும் பொண்ணுக கொடி கட்டி பறபற அப்படின்னு பரபரப்பா முன்னேறிட்டு வராங்க. என்னய்யா பேச்சு பேசற. 

பேசாம இந்த இடத்தை உட்டு ஓடிப் போயிரு. இல்லை விளக்கம்மாத்து அடி, செருப்பு அடி அப்படின்னு எல்லா அடியும் வந்து விழுகும். 

ராஜாராம் மோகன்ராய் தெரியுமாய்யா உனக்கு, பெண்கள் தங்களுடைய அடிமைத்தனத்தில் இருந்து மீளனும் அப்படின்னு ஒரு புரட்சியையே பண்ணுனவரு. 

படிக்காத காலத்துலேயே காடு மேடுன்னு ஓயாம வீட்டுக்கும் காட்டுக்கும் உழைச்சி ஓடா போனவங்கய்யா இந்த தாய்மாருக. நாலு காசு சம்பாதிச்சி நகை நட்டுன்னு வீடு வாசனு திறமையோட வாழறவங்களையா வேலைக்கு போகாதேன்னு சொல்ற. சொந்த காலுல தைரியமா நிற்குறாங்க. 

மேடம் க்யுரீ தெரியுமா உனக்கு, உனக்கு அவங்களை எப்படி தெரியும்? ஒரு சல்சா தெரியும், அதைவிட்டா ஒரு குல்சா தெரியும். பிசிக்ஸ்ல, கேமிசிட்ரில நோபல் பட்டம் வாங்குனவங்க. தன்னோட ஆராய்ச்சிக்கே உயிரை விட்டவங்கய்யா. 

இங்க பாரு, இத்தனை சொல்லியும் அசையாம நிற்குற. ஆளுக வராங்காட்டியும் ஓடிப்போயிரு. தான் படிச்சி, தங்களோட புள்ளைகள படிக்க வைச்சி, சமைச்சி, அலசி, குடும்பத்தை கட்டிக்காக்குற  பொண்ணுங்க இருக்கிற உலகத்துல என்ன உதாரு விடற. 

புரட்சி பொண்ணுங்க வாழற உலகம் இது. அவங்களை இப்படி உசுப்பேத்தி அடிமைபடுத்தலாம்னு மட்டும் கணக்கு போடாத. 

'பேசியாகிவிட்டதா, நான் கொஞ்சம் பேசலாமா'

என்னத்த பேசப் போற, அதான் ஒரு வரி அம்மணமா சொல்லிருக்கியே. வேலைக்கு போகாதீங்கன்னு. யாருயா அவங்களுக்கு சோறு போடுவா. அவங்க அடுத்தவங்க கையை ஏந்தி நிற்கனுமா. நீ துரை, வேலைக்கு போய்ட்டு வந்து ஹாயா காலு மேல காலு போட்டு உட்காருவா. அவங்க உனக்கு பணிவிடை செய்யணும், அதுவும் பெண் குழந்தைன்னா அழுகாம அத்தனை வேலையும் செய்யணும். என்னத்தையா பேச போற. 

'சரி சரி பேசுங்க, நான் நீங்க பேசி முடிக்கிறவரைக்கும் காத்து இருக்கேன்'

உனக்கு நெஞ்சுல எத்தனை தைரியம் இருந்தா இன்னும் பேச போறேன்னு இங்க நிற்ப. பேசு, நீ பேச பேச உனக்கு விழற அடியோட எண்ணிக்கை கூடத்தான் செய்யும். 

'நான் பொண்ணுங்களை படிக்க வேண்டாம்னு சொல்லல. வேலைக்கு போகவேண்டாம்னு சொன்னேன். ரொம்ப பேரு குடும்ப சூழல் காரணமாத்தான் வேலைக்கு போறாங்க. வேலைக்கு போகணும்னு நினைச்சி அவங்க போகறது இல்லை. நீங்க சொன்னீங்களே மேடம் க்யூரி அவங்க மாதிரி வாழறவங்க ரொம்ப குறைச்சல்.  பஸ்லயும், ரெயிலுளையும் அடிச்சி பிடிச்சி அவங்க வேர்த்து விறுவிறுத்து வேலைக்கு போறது பார்த்து கஷ்டமா இருக்கு. போகப் பொருளா பொண்ணுகளை பார்க்குற பூமிய நினைச்சி கவலயா இருக்கு. அதுவும் அவங்களுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்தப்பரம் வேலைக்கு போய் குழந்தைய கவனிக்க முடியாம, வேலையிலும் மனசு ஒட்டாம பாவம் அவங்களை நினைச்சி பரிதாபமா இருக்கு. நீங்க சொன்னீங்களே, வீட்டுல வேலை, வெளியில வேலை. பாவம் இல்லையா. வசதி வாய்ப்புக்காக இப்படி அவங்களை சின்னபின்னாமாக்குறது தப்பில்லையா. தாங்களே இஷ்டப்பட்டு வேலைக்கு போனா போகட்டும். ஆனா ' 

என்ன ஆனா. நீ என்ன பொண்ணுகளை காக்க வந்த ரட்சகனா. அவங்க வேலைக்கு போகமாட்டேன்னு அடம் பிடிச்சாங்களா. வேலைக்கு போகமாட்டோம்னு போர்க்கொடி தூக்குனாங்களா. அரசியல் தலைவிங்க, கம்பெனி முதலாளிங்க அப்படின்னு இருக்கறாங்க, நீ என்னமோ பேசற. 

'இல்லை, விபச்சாரத்தை தொழிலா நடத்துறவங்களை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன். உடலை காட்டி பணம் சம்பாரிக்கிற தொழிலுக்கு போக வேணாம்னு சொன்னேன். சின்ன சின்ன குழந்தைங்க எல்லாம் வைச்சி தொழில் நடத்துறாங்களே அவங்களுக்கு துணை போக வேணாம்னு சொன்னேன். சினிமா படத்துல ஒரு மெழுகு பொம்மையாட்டம், அளவு துணி பத்தாத பெண்ணாட்டம் பண்ற தொழிலு வேணாம்னு சொன்னேன், அடிமைத்தனமா பாக்குற வேலைக்கு வேணாம்னு சொன்னேன், அடிமையா வேலை செய்ற வீட்டு வேலை கூட வேணாம்னு சொன்னேன், எதோ பெத்துக்கரனும் அப்படின்னு இல்லாம, சும்மா சும்மா பெத்துக்குற வேலையும் வேணாம்னு சொன்னேன்'

பேச்சை மாத்துறியா. ஆளுங்க வராங்க. ஓடிப்போயிரு. 

ஆண்களே, பெண்களே வேலைக்கு விருப்பத்துடனே செல்கிறேன் என உங்களால் உறுதிமொழி கொடுக்க இயலுமா? 

வேலைக்கு செல்வதின் உண்மையான நோக்கம் என்ன, பணம் சம்பாதிக்கவும், புகழ் சம்பாதிக்கவும் தானா? 

வேலைக்கு செல்வதினால் அடைந்த லாபங்களும், அடைந்த துயரங்களும் தான் எத்தனை?

வேலைக்கு செல்வதின் மூலம் உங்களால் நிம்மதியாக வாழ முடிகிறதா? மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எத்தனை? 

நாட்டில், உலகில் வேலையில்லா திண்டாட்டம் பெருக்கெடுத்து ஓடுகிறது? எதனால். 

சிந்திப்பீர். 

Wednesday 2 November 2011

வேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்?

யார் என்றே தெரியாத புதிய எண் அலைபேசியில் ஒலித்தது. சற்று தயக்கத்துடனே எடுத்தேன். தெரியாத எண்கள் வந்தால் சற்று யோசனையாகவே இருக்கும். ஆனால் பதில் பேசாமல் இருப்பதில்லை. அதுவும் அலைபேசியில் 'மிஸ்டு கால்' என இருந்தாலும் திருப்பி அந்த எண்ணுக்கு அழைத்து யார் என்ன என கேட்டுவிடுவது அவ்வப்போது வழக்கம்.

சரி என பேச ஆரம்பித்தேன். 

'எப்படி இருக்கீங்க' என விசாரணையோடு தொடங்கியது பேச்சு. பால்ய நண்பர் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். எப்படி எனது எண் கிடைத்தது என கேட்டு வைத்தேன். நண்பர்களிடம் கேட்டு வாங்கினேன் என்றார். மிகவும் சந்தோசமாகவே பல விசயங்கள் பேசினார். 

அத்தோடு விட்டு இருந்தால் இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு வீண் பதிவு போட வேண்டி வந்திருக்காது. இதற்கு முன்னர் ஒரு நண்பர் இப்படித்தான் அழைத்து புத்தகங்கள் எல்லாம் வெளியிட்டு இருக்கியாமே, சொல்லவே இல்லை என்கிற ரீதியில் தமிழை விடாமல் இன்னமும் கெட்டியாக பிடித்து இருப்பதற்கு பாராட்டி தள்ளிவிட்டார். ஆனால் இவரோ சற்று வித்தியாசமான தோரணையில் பேச ஆரம்பித்தார்.

'உன்னோட ப்ளாக் படிச்சேன்'

'ஓ அப்படியா, நான் ப்ளாக் எல்லாம் எழுதறது எப்படி தெரியும்'

நான் ப்ளாக் எழுதுவது எனது நண்பர்கள், உற்றார், உறவினர் என பலருக்கும் தெரியாமல்தான் சில மாதங்கள் முன்வரை இருந்தது. முகநூல், அடடா எப்படியெல்லாம் தமிழ்படுத்துகிறார்கள், ஒன்றில் எனது இணைப்பை தர அங்கிருந்து சிலருக்கு எனது ப்ளாக் தெரியும். தமிழுல எழுதுற, நல்லா இருக்கு என ஒரு சில பாராட்டுகள் மட்டுமே. மற்றவர்கள் எதுவும் மூச்சு விடவில்லை. அப்பாடா என இருந்தது. 

நான் புத்தகம் வெளியிடும் வரை அந்த புத்தக விசயத்தை அத்தனை ரகசியமாக வைத்திருந்து அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை தந்தேன். சொல்லவே இல்லை என்கிற பாணியில் தலையில் கொட்டாத குறைதான். நான் எனது ஆய்வு விசயமோ, புத்தக விசயமோ எவரிடமும் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தது, எழுதுகிறோம், ஏதோ வாய்ப்பு கிடைத்தது ஆராய்ச்சி செய்கிறோம் என்கிற போக்கில்தான் செல்வதுண்டு. அதனால் தான் இந்த பிளாக்கில் எல்லாவற்றையும் எழுதி குவித்துவிடுகிறேன் போல, தற்போது கூட முகநூல் தனை மூடிவிட்டேன். சில மாதங்கள் முன்னர் ட்விட்டர் தனை மூடிவிட்டேன். எதற்கு அநாவசியமாக உபயோகபடுத்தாத ஒன்றை வைத்திருக்க வேண்டும் என நிறுத்தி வைத்து விட்டேன். நான் பொதுவாக நெட்வொர்க் தளங்கள் எதிலும் என்னை இணைத்து கொள்வதில்லை. 

பழைய நண்பர்கள், புது நண்பர்கள் என வா, வந்து சேர் என அழைப்பு விடுவார்கள், நான் பெரும்பாலும் தட்டி கழித்துவிடுவேன். எதற்கு இதெல்லாம் என்கிற ரீதியில் இருப்பேன். இப்பொழுது கூட கூகுள் பிளஸ் என்ற ஒன்றில் இணைந்தேன். எத்தனை நாள் அங்கிருப்பேனோ தெரியாது. இப்படி நான் எனது இணைய உலக இணைப்பை மிகவும் சிக்கனமாகவே வைத்திருக்க அவரது பேச்சு இப்படியாக போனது. 

சரி விசயத்துக்கு வருவோம்.

'ஒருநாள் உன் பெயரை கூகுள் பண்ணிப் பார்த்தேன், அதுல இருந்து உன்னோட ப்ளாக் வந்தேன், இன்னும் தமிழுல கிறுக்கற அந்த பாழாய் போன பழக்கம் போகலையா' 

'என்ன சொல்ல வர' 

'அதான், ஒரு நோட்டுல எப்ப பார்த்தாலும் எழுதிகிட்டே இருப்ப, நான் கூட சொல்லலை நீ எழுத்து பைத்தியமா போக போறேன்னு'

'இப்போ அதுக்கு என்ன இப்போ'

'உன் ப்ளாக்ல வெட்டித்தனமா எழுதிட்டு இருக்கியே, உனக்கு வேலை வெட்டி இல்லையா'

'என்னாச்சு'

'நீ எழுதி இந்த நாட்டை திருத்த போறியா, கவிதை கவிதைனு எழுதி உனக்கு கவிஞர் பட்டம் காலேஜ்ல கொடுத்தாங்க, நான் கூட நீ மாறி இருப்பேன்னு நினைச்சேன், உன் பொண்டாட்டி உன்னை ஒன்னும் சொல்லமாட்டாளா'

'இரு இரு, என்ன பிரச்சினை'

'நீ வெட்டியா எழுதுறதை நிறுத்திட்டு உருப்படியா ஏதாச்சும் பண்ணு, எத்தனை புக் இதுவரைக்கும் உன்னோட ஆராய்ச்சி சம்பந்தமா எழுதி இருக்க, எத்தனை ஆராய்ச்சி பேப்பர் வெளியிட்டு இருக்க, எத்தனை கான்பெரென்ஸ் போயிருக்க'

'அதுதான் பேப்பர் எல்லாம் பாத்துருப்பியில, அதைப்பத்தி பேசறது. இந்த ப்ளாக் பத்தி பேசி எதுக்கு உன் நேரம் வீணாக்குற. அதுவும் என்னோட உதிரி நேரத்துல எழுதுறேன், இந்த வருசம் பாத்தியா, ரொம்ப கம்மியாதான் எழுதி இருக்கேன், அதுவும் சாப்பாடு டயத்துல அப்புறம் தூங்க போகறதுக்கு முன்னம், இப்படி அப்ப அப்ப தோணுறதை எழுதிவைச்சி வெளியிடுவேன், இப்படி தமிழுல எழுதுறது கூட எனக்கு உருப்படியா தெரியுது, நீயும் எழுதி பழகு, எல்லாம் உருப்படியா போகும்'

இதற்கு பதிலாக அவனிடம் இருந்து திட்டு வார்த்தையுடன் தொடங்கியது அடுத்த பேச்சு. 'உன்னை மாதிரி என்னை லூசுன்னு நினைச்சியாடா, இந்த தமிழை மறந்து பல வருசம் ஆச்சு, எத்தனை புக் போட்டுருக்கேன் தெரியுமா, எத்தனை பேப்பர் வெளியிட்டு இருக்கேன் தெரியுமா, இதோட அம்பது கான்பரென்ஸ் போயிருக்கேன், போய் கூகுளுல தேடிப்பாரு'

'ஆமா அத்தனை வெளியிட்டு என்ன சாதிச்ச'

'நான் ஒரு அசிடன்ட் ப்ரோபாசர் இப்போ'

'அது உன் வேலை, நீ என்ன சாதிச்ச அதை சொல்லு. ஒரு மருந்தை கண்டுபிடிச்சியா, நண்பர்கள் பழக்கம் பிடிச்சியா, உன்னை பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதேனும் தெரியுமா, அதை விடு சமுதாயத்தில ஏதேனும் விழிப்புணர்வு கொண்டு வந்தியா, நாங்க தமிழுல எழுதி பெரிய புரட்சி பண்ணிட்டு வரோம், அது தெரியுமா எதுக்கும் ப்ளாக் படிச்சு பாரு, புரியும்' 

'அந்த கருமாந்திரத்தை என்னை எதுக்குடா படிக்க சொல்ற, எல்லாம் வெட்டி பயலுக, கிடைக்கற நேரத்தை இப்படி எழுதறோம்னு எழுதி வீணடிக்கிற'

அந்த திட்டு வார்த்தை என்னை கோபம் அடைய செய்தது. 

'சரிடா, இத்தோட நிறுத்திக்கோ, ஏதோ பல நாட்கள் அப்புறம் பேசறேன்னு பார்த்தா நான் தமிழுல எழுதறதை பாத்து வயித்தெரிச்சலுல பேசற மாதிரி தெரியுது. இந்த ப்ளாக் எழுதறவங்களைப் பத்தி ஒரு வரலாறு தெரியணும்னா எதுக்கும் அடுத்த மாசம் என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப்பாரு, ஒவ்வொரு சாதனையாளர்கள் பத்தி நான் எழுதறேன். இங்க எழுதறவங்க என்ன வேலை வெட்டி இல்லாதவங்கனு நினைச்சியா'

'போடா தெரியும், நீ எழுதினதுதான் படிச்சேனே, தமிழ் பதிவர்கள்னு. அதே கிறுக்கல், அப்போ நோட்டு, இப்போ நெட்டு' 

'என்னை இப்ப என்ன பண்ற சொல்ற'

'நிறுத்துடா, எழுதறதை நிறுத்து. உருப்படியா வேலையைப் பாரு. பொண்டாட்டி புள்ளைங்க குடும்பத்தை கவனி'

'அதெல்லாம் சரியாத்தான் நடக்குது, எதுக்கு இப்படி வீணா புலம்புற, உனக்கு வேணும்னா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறேன். அதுல எழுது. blogconsultancy எப்படி இருக்கு'

அதற்கடுத்து அவன் திட்டியவாறே போனை கட் பண்ணினான். பாவம் அவனுக்கு தெரியாது, இதைக்கூட எழுத்தில் வைப்பவர்கள் தான் இந்த ப்ளாகர்கள் என்று. 

மீண்டும் அவன் இதை படிக்க கூடும். மறுமுறை அவனது எண்கள் தெரிந்தால் பேசுவதா வேண்டாமா!

Tuesday 1 November 2011

அறவாழி பிறவாழி (வம்சி சிறுகதைப் போட்டி)

பேரனூரில் ஒரே ஒரு பெருமாள் கோவில். மற்ற கோவில்கள் எதுவும் இல்லை. இந்த பெருமாள் கோவில் மிகவும் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்து பெற்றது. தினமும் குறைந்தது இருபது பேராவது இந்த பெருமாள் கோவிலில் தனியே வீற்றிருக்கும் வசந்தபெருமாளை தரிசிக்க வந்துவிடுவார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சற்று அதிகமாகவே வருவார்கள். 

இந்த கோவிலில் வேலை பார்க்கும் பட்டாச்சாரியார் ராமனுஜம் குடும்பம்தான் கோவிலை பரமாரித்து வருவதோடு வரவு செலவு கணக்கு எல்லாம் பார்த்து வருகிறார்கள். இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது. சின்ன கட்டிடமாக ஆரம்பித்து கோவில் எனும் சொல்லும்படியாய் வந்து நிற்கிறது. ராமானுஜத்தின் தாத்தா, அப்பா என பூசாரியாக இருந்து வந்த கோவில் தற்போது முப்பது மூன்று வயதான ராமானுஜத்தின் கைகளில். 

பூசாரிக்கே உரிய தோற்றத்துடன் இருக்கும் ராமானுஜத்திற்கு ஒரே பையன் எட்டு வயதாகும் ஸ்ரீராம். முன் தலையில் இருக்கும் முடி வழித்து பின்புறம் அழகாக கட்டப்பட்ட முடி. நெற்றியில் இடப்பட்ட ராமம். நாலு முழ வேஷ்டியை பாங்காக கட்டிய பாங்கு என ஸ்ரீராம் அந்த பெருமாள் கோவிலில்தான் எப்பவும் இருப்பான். பள்ளிக்கு செல்லும் வழக்கம் எல்லாம் இல்லை. கோவிலை சுற்றி இருக்கும் நிலத்தில் ஓடியாடி விளையாடுவது, தந்தைக்கு உதவி செய்வது, புத்தகம் படிப்பது என அவனது பொழுது போகும். அவனது தாய் சத்தியவதி கற்று தந்ததில் இருந்துதான் எழுத படிக்க கற்று கொண்டு வருகிறான். 

பேரனூருக்கு புதிதாக வேலைக்கு வந்த ஆசிரியர் ராமமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். சுறுசுறுப்பாக வேலை செய்து திரியும் ஸ்ரீராமனை பார்த்த ஆசிரியர் ராமானுஜத்திடம் பேச்சு கொடுக்கலானார். 

'சாமி, யாரு இந்த பையன்?'

'என்னோட பையன் தான்'

'பள்ளிக்கூடம் போகறது இல்லையா'

'இல்லை, ஆத்துல படிச்சிட்டு, கோவிலுக்கு வந்துருவான், அவனுக்கு இந்த பெருமாளுனா இஷ்டம், எனக்கடுத்து அவன்தான் இந்த பெருமாளை பார்த்துக்கிரனும்' 

'நாலு எழுத்து படிச்சி வேற வேலைக்கு போகலாம் இல்லையா'

'போலாம், எங்க குடும்பத்தில இருந்தவா எல்லாம் படிச்சி நகரம்னு போய்ட்டா, ஆனா எனக்கு இந்த பெருமாளை விட்டு போக மனசில்லை அதான் இங்கனயே இருந்துட்டன்'

'உங்களோட கூட பிறந்தவங்க'

'ரெண்டு அண்ணா, ஒரு தமக்கை இருந்தா, அவாதான் கிராமத்தை விட்டு போய்ட்டா, நான், என் ஆத்துக்காரி, இதோ இவன், நாங்கதான் இந்த பெருமாளுக்கு துணை' 

ஆசிரியர் ராமமூர்த்தி பெருமாளை வணங்கிவிட்டு ஸ்ரீராமை அழைத்தார். 

'நீ பள்ளிக்கூடத்துக்கு படிக்க வரியா'

'வீட்டுல படிச்சிட்டு இருக்கேன், இங்கயும் படிக்கிறேன், எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கலை' 

ஸ்ரீராமின் மழலை குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகள் ஆசிரியர் ராமமூர்த்திக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. 

'உனக்கு சயின்ஸ், மேத்ஸ், இங்கிலீஸ் வரலாறு, பூகோளம் எல்லாம் படிக்கனும்னா பள்ளிகூடத்துக்கு போகனுமே, அதெல்லாம் எப்படி வீட்டுல படிப்ப' 

'அம்மா சொல்லி கொடுத்துட்டு இருக்கா'

'எனக்கு பள்ளிகூடத்துக்கு போக நேரமாச்சு, சாயந்திரம் வந்து பார்க்கிறேன்'

ஆசிரியர் ராமமூர்த்தி செல்வதையே  பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவர் அவனது கண்களில் இருந்து மறைந்ததும் தனது தந்தையை பார்த்தான். 

'நோக்கு பள்ளிக்கூடம் போக ஆசை வந்துடுத்தா'

'இல்லை, இதோ இந்த பெருமாள்கிட்ட இருக்கறதே போதும்'

அன்றைய தினம் எல்லாம் ஸ்ரீராம் மிகவும் யோசனையாகவே இருந்தான். தனது பெரியப்பாவின் வீடுகளுக்கு எல்லாம் செல்லும்போது அவர்களின் பிள்ளைகள் புது புது விளையாட்டு பொருட்கள், தொலைக்காட்சி என வலம் வருவதை கண்டு மகிழ்வுடன் அவர்களுடன் பொழுது கழித்திருக்கிறான். அவர்கள் தங்களோடு வந்து படிக்க சொல்லியபோது ஸ்ரீராம் மறுத்துவிட்டான். 'பெருமாளுக்கு யார் இருக்கா' என்பதே அவனது வாசகமாக இருக்கும்.

'புள்ளைய உன்னைப் போலவே கெடுத்து வச்சிருக்கே' என ஏகத்துக்கும் ராமனுஜம் திட்டு வாங்கி வருவார். இதன் காரணமாகவே சில வருடங்களாக தனது சகோதர சகோதரிகள் வீட்டுக்கு போவதையே நிறுத்திவிட்டார். 

சாயந்திரம் வருகிறேன் என சொன்ன ஆசிரியர் கோவிலுக்கு வரவில்லை. ஸ்ரீராம் எட்டி எட்டிப் பார்த்தான். அவர் கண்ணுக்கு எட்டவில்லை. கோவில் நடை சாத்தி வீட்டுக்கு வர இரவு எட்டு மணியாகிவிடும். 

ஸ்ரீராமின் வீடு மூன்று அறைகள் கொண்டது. வீட்டுக்கு முன்னர் சிறிது இடம் காலியாக இருக்கும், இரண்டு புறமும் மலர் செடிகள் பூத்து குலுங்கும். வீட்டு கதவை திறந்ததும் படிகள் ஒவ்வொன்று மேலாக செல்லும். அந்த படிகளின் இருபுறம் திண்ணைகள் இருக்கும். அந்த திண்ணைகள் முன் கட்டைகளான காற்று சென்று வரும்படியான, வெயில் வந்து போகும்படியான தடுப்பு இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் திண்ணையில் யார் இருக்கிறார்கள் என பார்ப்பது கடினம். அதற்கடுத்து சமையல் அறை. தக்காளி, புடலங்காய் என சமையல் மூக்கை துளைக்கும். அதற்கடுத்து அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணை மற்றும் போர்வைகள். வீட்டுக்கு பின்புறம் செல்ல ஒரு கதவு. வீட்டின் பின்புறத்தில் ஒரு அழகிய நந்தவனம். இங்கிருந்து பூக்கள் பறித்துத்தான் பெருமாளுக்கு மாலையாய் கட்டி சாத்துவது வழக்கம். ஒரு ஓரமாய் கழிவறை, குளியல் அறை.  இந்த வீடே ஒரு கோவில் போல்தான் இருந்தது. 

அன்று வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீராம் தனது அம்மாவிடம் சென்று அன்று நடந்த விசயத்தை சொன்னான். 

'பள்ளிகூடத்துக்கு போறியா' 

'வேணாம், நீங்களே சொல்லிக்கொடுங்க'

'முதல்ல சாப்பிடு, அப்புறம் சொல்லித் தரேன்'

சாப்பிட அமரும்போது வீட்டு வாசலில் ஆசிரியர் ராமமூர்த்தி வந்து நின்றார். 

'உள்ளே வாங்கோ'

'இல்லை, நான் இந்த திண்ணையிலே உட்கார்ந்து இருக்கேன்'

'அட வாங்கோ, ஆச்சாரம் எல்லாம் பார்க்காதீங்கோ, வந்து சாப்பிடுங்கோ' 

ஸ்ரீராம் ஆவலுடன் ஆசிரியர் கையை பிடித்து வந்தான். அவரும் மறுக்க இயலாமல் அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார். 

'வீட்டுல எப்பவும் சைவம் தான், வேற எதுவும் எதிர்பார்த்துராதீங்கோ'

'இல்லை இல்லை, தெரிஞ்சதுதானே'

'பையன் நீங்க வருவீங்கன்னு சாயந்திரம் எல்லாம் எதிர்பார்த்துட்டு இருந்தான்' 

'ஒரு வேலையா நகரத்துக்கு போக வேண்டியதா போச்சு, அதான் வந்து பாத்துட்டு போலாம்னு வந்தேன், பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாமே'

'நீங்கோதான் சொல்லனும், நாங்களும் சொல்லிப் பாத்துட்டோம், அவன் பெருமாளுக்கு யார் இருக்கா அப்படின்னு கேட்கறான். ஆமா உங்க ஆத்துக்காரி, குழந்தைங்க'

'நான் கட்டை பிரமச்சாரி, இனிமேதான் பொண்ணு தேடனும்'

சாப்பிட்டு முடித்து திண்ணையில் அமர்ந்தார்கள். ஸ்ரீராம் ஆசிரியரை பார்த்துவிட்டு அம்மாவிடம் படிப்பு சொல்லிக் கொடுக்க சொன்னான். 

ஸ்ரீராம் படிப்பதை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். 

'சாமி, சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க இப்படிப்பட்ட அறிவாளிய அடைச்சி வைச்சிராதீங்க'

'நான் என்ன பண்றது, அவன் பெருமாளே கதின்னு இருக்கான், வற்புறத்தி என்ன பண்றது'

ஸ்ரீராம் பள்ளிக்கு செல்லவே இல்லை. வருடங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. ஆசரியர் ராமமூர்த்திக்கு திருமணம், குழந்தையும் பிறந்தது. ஸ்ரீராம் பெருமாள் கோவிலிலேயே வாழ்க்கை நகர்த்தினான். 

ஆசிரியர் ராமமூர்த்திக்கு ஸ்ரீராம் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு ஏற்படும். காலம் செல்லும் வேகத்துக்கு எவரும் ஈடு கொடுக்க இயல்வதில்லை. ஸ்ரீராமுக்கு தமக்கை ஒன்று பிறந்தது. அவள் பள்ளிக்கூடம் போகலானாள். 

தமக்கை பள்ளி சென்றதால் ராமமூர்த்தி குற்ற உணர்வு குறைந்தவராக காணப்பட்டார். வாலிப பருவம் அடைந்தான் ஸ்ரீராம். தந்தை சொல்லிக் கொடுக்காத வேதம் எல்லாம் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தர ஆரம்பித்தான் ஸ்ரீராம். ராமனுஜம் பெருமிதம் கொண்டார். 

ஒரு நாள் ஸ்ரீராமை பார்த்த ஆசிரியர் ராமமூர்த்தி மகிழ்வுடன் பேசினார். 

'ஸ்ரீராம், நானும் இந்த ஊருல பத்து வருசமா இருக்கேன், நீ பள்ளிக்கூடம் வரலைன்னாலும் நீ ரொம்ப நல்லா சொல்லி தரேன்னு என் பையன் வந்து சொன்னான்' 

'வேதம், மந்திரங்கள் எல்லாம் ஒரு குலம் மட்டுமே கத்துகிரனும்னு இல்லையே, நாளைக்கு என் பிள்ளை என்னைப் போல இந்த பெருமாளுக்கு துணையா இருப்பானுனு நான் உறுதியா சொல்ல முடியாது, அதான் என் தாத்தா, அப்பா செய்யாததை நான் செஞ்சிட்டு வரேன்'

ஸ்ரீராமை கைகள் எடுத்து வணங்கினார் ராமமூர்த்தி. பள்ளியில் ஒழுக்கம் குறைந்து இருக்கிறது என கவலைப்பட்ட ராமமூர்த்தி ஸ்ரீராம் சொல்லிகொடுக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து மாணவர்கள் மிகவும் ஒழுக்கமாக பாடம் படிப்பதை கண்டு பிரமிப்பு அடைந்தார். 

ஸ்ரீராம் வீட்டுக்கு பெற்றோர்கள் வந்து நன்றி சொல்லி சென்ற வண்ணம் இருந்தார்கள். ராமனுஜத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. 

காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஊரில் இருந்த குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து நகரம் எல்லாம் சென்று கொண்டிருந்தார்கள். பேரனூர் பிள்ளைகள் தனித்து தெரிந்தார்கள். ராமமூர்த்தி பெரும் மகிழ்வு அடைந்தார். 

'பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாத மனிதர்களை வளர்க்கும் பள்ளிக்கூடம் வேணும், பெரிய கல்வி கற்று பெரிய சம்பாதிப்பு சம்பாதிச்சாலும் ஒழுக்கம், நேர்மை தவறாத அந்தணர்கள் பலரை இந்த ஊரில உருவாக்கி இருக்கேன், அதுவரைக்கும் எனக்கு சந்தோசம் தான், குலத்தினால் வருபவர்கள் அந்தணர்கள் அல்ல, குணத்தினால் வருபவர்களே அந்தணர்கள்' என்றான் ஸ்ரீராம். 

'நீ நிறையவே சாதிச்சிட்ட' என்றார் ராமமூர்த்தி.

'அறத்திற்கு உட்பட்டு வாழ பழகி கொண்ட மனிதர்களால் மட்டுமே எந்த ஒரு பிரச்சினைகளில் இருந்தும் சுலபமாக விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும்'. என்றான் ஸ்ரீராம். 

ஆசிரியர் ராமமூர்த்தியின் மகன் தனது மேற்படிப்பை முடித்து விட்டு பேரனூர் வந்து அடைந்தான். பெருமாள் கோவில் மணியோசை அவனது காதில் இன்னிசையாக கேட்டது.