Wednesday 3 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 31


ஈஸ்வரி வேகமாக வந்தாள். 'என்ன விசயம்?' எனக் கேட்டாள். கதிரேசன் சுருக்கமாக சில வரிகளில் சொன்னான். 'சரி நான் பார்த்துக்கிறேன்' என சொன்னாள் ஈஸ்வரி. பெண்ணின் மனதை ஒரு பெண்ணே அறிவாள் என நினைத்தான் போலும் கதிரேசன்.

ஈஸ்வரி வைஷ்ணவிக்கு ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வைஷ்ணவி ''நான் ரொம்பத் தெளிவாத்தான் இருந்தேன், ஆனா இழப்புனு வரப்போ தாங்கிக்க முடியலை, இன்ன காரணத்துக்குனு ஒருத்தரை ஒதுக்க முடியாதில்லையா?'' என வைஷ்ணவி கூறினாள். ''ம், சட்டுனு எதையும் செஞ்சிரமுடியாது, ஆனா இப்போ நிலமை கைக்கு மீறிப் போயிருச்சி அதனால அவனை இனிமே நினைச்சிட்டு இருக்கிறதுல்ல அர்த்தமில்லை'' என்றாள் ஈஸ்வரி. ''ம்'' எனக் கேட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. ஈஸ்வரியே தொடர்ந்தாள்.

''எப்பவுமே நமக்கு இருக்கிறது மேல அக்கறையே இருக்காது, இல்லாதது மேலதான் அக்கறையே இருக்கும், இருக்கிறதை நல்லா வைச்சிக்கத் தெரியாது, இல்லாததை பத்தியே யோசிச்சி காலம் போகும், அப்புறம் நாள் போனப்பறம் தான் தெரியும் இருக்கிறதை ஒழுங்காப் பாதுகாக்காம விட்டதால இருக்கிறதும் இல்லாமப் போயிரும்'' என மெதுவாக நிறுத்திச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசனின் காதிலும் அது விழுந்தது.

''எனக்கு அவனுக்கு கல்யாணம் நிச்சயம்னு சொன்னதும் மனசு கொஞ்சம் தளர்ந்திருச்சி, என்னை வெறுப்பேத்தத்தான் இந்த தகவலையே ஃபோன் பண்ணிச் சொல்றேன், கல்யாணத்துக்கெல்லாம் வந்துராதேனு சொல்லிட்டு ஃபோனை வைச்சிட்டான், அதுதான் கதிரேசன் கிட்ட சொல்லலாம்னு நேரில வந்தேன்'' என்றாள் வைஷ்ணவி. ''நீயும் ஃபோன் பண்ணி ஒருத்தனை காதலிக்கிறேனு சொல்லு, அதுவும் இப்பவே. உன்னால முடியலைன்னா என்கிட்ட கொடு நான் சொல்றேன் அவனுக்கு'' என்றாள் ஈஸ்வரி.

''சே சே வேண்டாம்'' என்றாள் வைஷ்ணவி. ''உயிருக்குயிரா காதலிச்ச ஒருத்தரை எப்படி லேசா தூக்கிப் போட முடியும்?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''நம்ம காதலே, காதல்னு இல்லைனு சொல்லிட்டுப் போறவனுக்கு, நம்ம காதல் இருக்குனு வாழறது கோழைத்தனம்'' என சொன்ன வைஷ்ணவியின் கண்கள் தெளிவாக பிரகாசித்தது.

''வழி தேடிக்கிற சக்தி உள்ளவங்களுக்கு வலி எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, ரொம்பப் பிடிச்சிருக்கு உங்களை, நான் கூட நீங்க மனசு வெறுத்துட்டீங்களோனு நினைச்சேன், சீக்கிரம் ஒரு பையனைப் பார்த்துருவோம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்கும் தான் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, ம் பையனா? சரி'' என்றாள் வைஷ்ணவி.

கதிரேசன் அங்கே காபியுடன் வந்தான். ''என்ன வைஷ்ணவி, என்ன முடிவு பண்ணியிருக்க?'' எனக் கேட்டான் கதிரேசன். ''உங்களை மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம்'' என்றாள் ஈஸ்வரி. ''நல்ல முடிவு தான'' என்றான் கதிரேசன். ''பையன் கிடைக்கனுமே'' என்றாள் ஈஸ்வரி. ''ஏன் உன் அண்ணன் சங்கரன் இல்லையா?'' என்றான் கதிரேசன். வைஷ்ணவி புன்னகைத்தாள். ''கொஞ்சம் நாள் ஆகட்டும், இப்ப எல்லாம் எதுவும் வேண்டாம்'' என சொன்னாள் வைஷ்ணவி.

இத்தனை நாட்களில் ஈஸ்வரிக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிப் போனாள் வைஷ்ணவி. தினமும் மாலையில், வார விடுமுறையில் கதிரேசனின் வீட்டுக்குத் தவறாமல் வந்துவிடுவாள் வைஷ்ணவி. ஈஸ்வரியுடன் சில மணி நேரங்கள் பேசிவிட்டுச் செல்வாள். மாதங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ''எப்போ குழந்தை?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி. ''சிவன் மனசு வைக்கனுமே'' எனச் சிரித்தாள் ஈஸ்வரி. ''சிவன்?'' என வினாவுடன் பார்த்தாள் வைஷ்ணவி.  ''கொஞ்ச நாள் ஆகட்டும்'' என்றாள் ஈஸ்வரி. ''கதிரேசன் இன்னும் அப்படித்தான் இருக்கானா?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி.

வைஷ்ணவியின் கேள்வியை ஈஸ்வரி எதிர்பார்க்கவில்லை. ''என்ன அர்த்தம்?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''உடல் தொடுறது கள்ளம்னு நினைச்சான், காதல் இல்லைனு சொன்னான்'' என ஈஸ்வரியினைப் பார்த்தாள் வைஷ்ணவி. ''நீயும் அவரும் நெருக்கமா?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''ம் எனக்கு கதிரேசன்கிட்ட பேசறது ரொம்பப் பிடிக்கும், என்கிட்ட எல்லா விசயமும் பேசுவான் அப்போதான் உன்னைப் பத்தியும் சொன்னான், நான் கூட அறிவுரை சொன்னேன், கல்யாணத்துக்கப்பறம் என்கிட்ட முன்னைப் போல பேசறதில்லை, எப்பவும் ரொம்ப பிஸியாவே இருக்கான்'' என்றாள் வைஷ்ணவி. ''ம்ம் கதிரேசன் மாதிரி ஒருத்தர் உனக்கு கணவனா வாய்ச்சா என்ன பண்ணி இருப்ப?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''தெரியலை, அந்த சூழ்நிலையில எப்படி இருந்திருப்பேனோ, ஒருவேளை உன்னை மாதிரியே சந்தோசமாவே இருந்திருப்பேனோ என்னவோ?'' என பதில் சொன்னாள் வைஷ்ணவி.

''ஆமாம் எனக்கு முதல் ஒரு வாரம் என்ன இது அப்படினு இருந்திச்சி, ஆனா அதுக்கப்புறம் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லாமப் போக ஆரம்பிச்சிருச்சி. ரொம்பவே சந்தோசமா இருக்கேன். வீட்டுல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! கல்யாணம் பண்ணினா உடனே குழந்தை அப்படிங்கிற மனசுதான் எல்லோருக்கும், இல்லைன்னா புழுப் பூச்சி இல்லைன்னு பேசிருவாங்க'' என்றாள் ஈஸ்வரி. ''ஆச்சரியமா இருக்கு?'' என்றாள் வைஷ்ணவி. ''எதையும் ஏத்துக்கிறப் பக்குவம் வேணும், கிடைச்சா சரினும், கிடைக்கலைன்னா சரின்னும் இருந்தா இருக்கிறது எப்பவுமே இல்லாமப் போகாது'' என ஈஸ்வரி சொன்ன வேளையில் கதிரேசன் வீட்டினுள் நுழைந்தான். வைஷ்ணவி சில நிமிடங்களில் விடைபெற்றுச் சென்றாள்.

நாட்கள் நகரத் தொடங்கியது. வைஷ்ணவியின் வருகையும், அவளது பேச்சும் ஈஸ்வரியை வெகுவாகவே கவர்ந்தது.

கதிரேசன் அலுவலகத்தில் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் வழக்கம் போல ஒரு அறையில் தியானத்தில் அமர்ந்தான். சிவன் வழக்கம்போல மனதில் வட்டமிட்டார்.

வீட்டிற்கு வந்தான். ''வைஷ்ணவி வந்திருந்தா, உன்கிட்ட முக்கியமாப் பேசனுமாம்'' என்றாள் ஈஸ்வரி. ''ம்'' என சொல்லிவிட்டு வைஷ்ணவியைத் தொடர்பு கொண்டான் கதிரேசன். ''எப்போ ஃபிரீயா இருப்ப, உன்கிட்ட நேரில பேசனும்'' என்றாள் வைஷ்ணவி. ''நாளைக்கு வா'' என்றான் கதிரேசன்.

(தொடரும்)

Tuesday 2 November 2010

சிறந்த பதிவர் விருது - 2 (தமிழ் உதயம்)

சிறந்த வலைப்பதிவாளர் விருது - தமிழ் உதயம், மன உணர்வுகள் பிரிவு. 


மனித மன உணர்வுகளை பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை எனலாம்.  இந்த மன உணர்வுகளினால் ஏற்படும் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் தெள்ள தெளிவாக இருக்கிறது என வரையறுத்துவிட முடியாது. இந்த மனம் சம்பந்தப்பட்ட விசயங்கள் வாழ்வில் பெரிதும் முன் வகிக்கின்றன. 


'மனம் போல் வாழ்வு 

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

மனசு வைச்சா எல்லாம் நடக்கும்

எல்லாம் மனசுக்குள்ள இருக்கு

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள்

மனசுன்னு ஒன்னு இருந்தா இப்படி நடக்குமா

மனசு ஒரு குரங்கு 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் (நெஞ்சு என்பது மனது என பொருள்படும்) 

மனம் கல்லாகிப் போன மனிதர்கள் 

இரண்டு மனம் வேண்டும்' 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மனம் எதை குறிக்கிறது?  மனம் என்று ஒன்று உண்டா? 

எண்ணங்களைத்தான் மனம் என்று குறிப்பிடுகின்றனரா?. எண்ணங்களினால் ஏற்படும் சிந்தனைகளைத்தான்  மனம் என்று குறிப்பிடுகின்றனரா? எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி பல கேள்விகளை ஒரு மனிதனின் மூளை பரிசீலித்து கொண்டிருக்கிறது. இந்த மூளை தான் மனமா? இந்த மூளையில் இருக்கும் நரம்பு செல்கள் தான் மனதின் அடிப்படை நாதமா? இந்த மூளையின் வளர்ச்சியை பொருத்தே ஒரு மனதின் எண்ணங்கள், சிந்தனைகள் அமையுமா? அல்லது கற்று கொள்ளும் விசயங்கள் மூலம் இந்த மனதின் எண்ணங்கள் அமையுமா? 



இப்படிப்பட்ட மனதை தெரிந்து கொள்வது மிகவும் கடின காரியமாக இருக்கிறது. அதுவும் 'பெண் மனது மிகவும் விசித்திரமானது' என புலவர்கள் பாடி வைத்து இருக்கிறார்கள். ஆண் மனது, பெண் மனது என இரு வேறு மனங்கள் இருக்கிறதா? இந்த மனம் எதற்கு எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனம் எதற்காக ஒருவரை வெறுப்பாகவும், ஒருவரை அன்பாகவும் பார்க்கிறது. இந்த மனதின் செயல்பாடுதான் என்ன? அதை நிர்ணயிக்கும் காரண கர்த்தா யார்? சூழலா? அப்படியெனில் ஒரு சூழலில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரி எதற்கு இருப்பதில்லை? ஒரு சூழலில் ஒவ்வொருவரும் வெவ்வேறாக செயல்படுவதன் காரணம் யாது? 

எனக்கு தெரிந்து தனக்கு தானே பேசி கொள்ளாத மனிதர்கள் எவருமே இவ்வுலகில் இல்லை எனலாம். அதில் மனதை ஒரு தனி மனிதராக அதாவது மனசாட்சி என உருவகப்படுத்தி சுய பரிசோதனை செய்யும் சோதனைகள் நிச்சயம் அனைவரிடமும் உண்டு. ஆனால் மனம் என்பது ஒன்றுதானே. சிந்தனைகள் என்பது ஒன்றுதானே. இதில் சுய பரிசோதனை என வரும்போது அதென்ன மனம் என்பது முன்னிலை படுத்தப்பட்ட ஒன்றாக உருவகம் கொள்கிறது. 

இந்த மனம் சொல்லும் கதைகள் ஆயிரம். அந்த மனதை பற்றிய ஒரு கட்டுரையாக வெளிவந்தபோது 'அட' என எண்ண தோன்றியது. அப்பொழுதே மனதில் நினைத்தேன். நிச்சயம் இந்த கட்டுரை விருதுக்கு உரிய கட்டுரை என. 

சிறந்த பதிவர் விருது தமிழ் உதயம், விருதுக்குரிய கட்டுரை 

மனநிலையா... சூழ்நிலையா...


விருது சான்றிதழ்:



(தொடரும்) 

Monday 1 November 2010

நுனிப்புல் பாகம் 2 (21)

21. ஆணும் பெண்ணும்

நாட்கள் நகரத் தொடங்கின. தினமும் காலையில் மலையடிவாரத்திற்குச் செல்வதும் மலையின் மேல் ஏறிச் செல்லாமல் அங்கே கீழேயே அமர்ந்து பேசுவதுமாக பெரியவருக்கும் வாசனுக்கும் நாட்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் வாசனுக்கு ஏதாவது அறிவுரை ஒன்றை சொல்வதை கடமையாக்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 

மழையில் நனைந்த நோட்டினை வாசன் இப்பொழுதெல்லாம் எடுத்து வருவதில்லை. பெரியவர் தன்னுடன் எந்த நோட்டையும் கொண்டு வருவதில்லை. வாசனுக்கு அம்மா அப்பாவின் ஞாபகமும் ஊரின் ஞாபகமும் வந்திருந்தது. எப்பொழுது செடி கிடைக்கும், விதை கிடைக்கும் என வாசன் பரபரப்புடன் இருந்தாலும் பெரியவர் மிகவும் நிதானமாகவே காணப்பட்டார். 

அன்றைய தினம் வழக்கம்போல மாலையில் பார்த்தசாரதியின் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். வந்தவுடன் நேராக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வாசன் சென்றுவிடுவது வழக்கம். சிறிது நேரம் அனைவருடன் பேசினாலும் அவரவர் வேலை என இருப்பதால் வாசனின் நேரம் பெரியவருடனே கழிந்தது. 

அன்று வாசன் விஷ்ணுப்பிரியனைச் சந்திக்கச் சென்றான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் நலம் விசாரித்தார். சுபாவும் வரவேற்றார். வாசன் நேரடியாகவேக் கேட்டான். 

''
எப்படி குளோனிங் எல்லாம் பண்றது?''

''
இப்ப பண்றதில்லை''

''
எப்படி பண்ணினீங்க''

''
சிரமமான காரியமாத்தான் இருந்தது, ஆண்டாள் மேல பாரத்தைப் போட்டு பண்ணிட்டேன்''

''
பையனாகவே இருக்குமா குழந்தை''

''
ஆமாம்''

''
பொண்ணாக மாறிச்சினா''

''
அப்படியெல்லாம் மாறாது''

''
அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க''

''
குளோனிங்கல் எந்த நியூக்ளியஸை வைக்கிறோமோ அதோ நியூக்ளியஸ் தன்மையுள்ள குழந்தைதான் பிறக்கும், இப்போ பெருமாளோட நியூக்ளியஸ் பெருமாளாவே பிறக்கும்''

''
பூங்கோதை?''

''
பூங்கோதை கருவைச் சுமக்கிற தாய், அவங்க நியூக்ளியஸ் இதுல இல்லை, ஆமா நியூக்ளியஸ் எல்லாம் தெரியுமா வாசன் உங்களுக்கு, எந்த குழந்தை பிறக்கும்னு தெரியுமா?''

''
ஜனவரி மாசம் கருத்தரிச்சா ஆண் குழந்தைப் பிறக்கும்னு ஐதீகம் தெரியும்''

வாசன் சொன்னதைக் கேட்டதும் விஷ்ணுப்பிரியன் சத்தம் போட்டு சிரித்தார். வாசன் தொடர்ந்தான். விஷ்ணுப்பிரியனின் சிரிப்பொலி கேட்டு சுபா என்னவென சமையல் அறையில் இருந்து வந்தார். 

''
கருவாகி நிற்கிறவங்க கையை வயித்துக்கு மேலே வைச்சா அது பொண்ணு, வயித்துக்கு கீழே வைச்சா அது ஆணு அப்படிங்கிற பாட்டிக் கதையும் தெரியும்''

விஷ்ணுப்பிரியன் தொடர்ந்து சிரித்தார். சுபா வாசன் சொன்னதைக் கேட்டு புன்முறுவலிட்டுக் கொண்டவாறே சமையலைறைக்குள் சென்றார். வாசன் நிறுத்தினான். 

''
வாசன், நீங்க இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை'' 

விஷ்ணுப்பிரியன் சிரித்துக்கொண்டே சொன்னார். வாசன் தலையை குனிந்து கொண்டான். விஷ்ணுப்பிரியன் படம் எடுத்து காண்பித்தார். ஒவ்வொன்றாக விளக்கினார். 

''இதோ பாருங்க வாசன், செல்கள் பொதுவா மைட்டாசிஸ் அப்படிங்கிற முறையில இரண்டாப் பிரியும். அப்படிப் பிரியறப்போ இரண்டா இணைஞ்சிருக்க குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டாப் பிரியும். இப்படி இரண்டாப் பிரியற குரோம்சோம்கள் தனக்கு தனக்குனு ஒரு புது குரோம்சோம்களை உருவாக்கிக்கிரும், இப்போ அந்த குரோம்சோம்கள் ஒவ்வொரு துருவத்துக்கும் போகும். செல் பக்கவாட்டில பெரிசாகி நடுவுல பிரியறப்போ ஒரு புது குரோம்சோம்கள் புதுசா உருவாகின இரண்டு செல்லுக்கும் கிடைச்சிரும். இப்படி உருவாகிறதுதான் நம்ம உடம்புல நடக்கிறது. ஆனா விந்து செல்லும், அண்ட செல்லும் உருவாகிற விதமே தனி. இந்த இரண்டு செல்லுக்கும் அது அதுக்கு ஒரே ஒரு குரோம்சோம்தான் இருக்கும். இந்த செல் பிரிவை மியாசிஸ் அப்படினு சொல்வாங்க.






இப்போ ஒரு செல்லிலிருந்து பிரியற குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டு செல்லுக்குப் போய் நிற்கும். குரோம்சோம்கள் எக்ஸ் ஒய் வடிவுல இருக்கும். ஆணுக்கு எக்ஸ் ஒய் குரோம்சோம்கள். பெண்ணுக்கு எக்ஸ் எக்ஸ் குரோம்சோம்கள். இப்படி நாலு குரோம்சோம்கள் தனித்தனியா இருக்கும். இப்போ ஆணோட எக்ஸ் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது பெண்ணாப் பிறக்கும், ஆணோட ஒய் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது ஆணாப் பிறக்கும் புரியுதா வாசன்?''

''பெருமாள் தாத்தா எப்படி பெருமாள் தாத்தாவாவே வருவார்?''

''
நான் வைச்சது பெருமாள் நியூக்ளியஸ் மட்டும்தான், இது உடல் செல்லிருந்து எடுத்தது அதனால எக்ஸ் தனியாகவோ, ஒய் தனியாகாவோ நான் பிரிச்சி வைக்கலை அப்படியேதான் வைச்சேன்''


படங்கள் : நன்றி கூகிள் 

''
எனக்கு எதுவுமேப் புரியலை, இந்த படத்தில் இருக்கிறத தமிழ்படுத்தினா நல்லா இருக்குமே''

''
உனக்கு ஜெனிடிக்ஸ் பத்தி முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும், தினமும் ஒன்பது மணிக்கு இங்க வா, ஒரு மணிநேரம் சொல்லித்தரேன்''

''அதெல்லாம் வேண்டாம். 
பூங்கோதைக்கும் கேசவனுக்கும் பெருமாள் தாத்தா இல்லாம வேற பிறக்கப்போற குழந்தை என்ன குழந்தையா இருக்கும்னு நினைக்கிறீங்க?''

''
பெண் குழந்தையாப் பிறக்கனும்னு ஆண்டாளை வேண்டிக்கிறேன்''

''
ஏன்?, நீங்க வேண்டிகிட்டா மட்டும் அப்படி பிறந்துரமா?''

''
சக்திக்கு அண்ணனாக வருவதுதானே பெருமாளுக்கு அழகு''

"அப்படி நடக்காது"

"நல்லாவே ஜோசியம் சொல்றோம் வாசன்"

விஷ்ணுப்பிரியன் சொல்லக் கேட்டதும் வாசனுக்கு தலை விண்ணென்று வலித்தது. குரோம்சோம்கள் மனதை குழப்பம் அடையச் செய்து இருந்தது. வாசன் தலைவலிப்பதாக கூறிவிட்டு ஹார்லிக்ஸ் அருந்திவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றான். உனக்கு எதுவுமே தெரியாதா வாசன் என அவனுக்குள் யாரோ கேள்வி கேட்பது போல் இருந்தது. 

அந்த இரவே பெரியவரிடம் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தைச் சொன்னான் வாசன். பெரியவர் புரிந்ததுபோல் சிரித்தார். வாசன் புரியாமல் பெரியவரிடம் அவன் சொன்னது புரிந்ததா எனக் கேட்டான். பெரியவர் இதை நிர்ணயிப்பவன் யார் எனத் தெரியுமா எனக் கேட்டார். வாசனுக்கு பேசாமல் தூங்கலாம் என இருந்தது. இதோடு பெரியவர் ஒவ்வொரு நாளும் கேட்ட கேள்விக்குத் தெரியாது என பதில் சொல்லியே பழகிக் கொண்டான் வாசன். பெரியவர் இன்றைய தேடலும் இன்றோடு முடிந்தது என்றார்.

மறுநாள் காலையில் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பூங்கோதை வீட்டிலே இருந்தாள். சாப்பிட வந்த வாசனிடம் பேச வேண்டும் என சொன்னாள். பெரியவர் இன்று மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சொன்னார். சிலநாட்கள் முன்னரே சொல்வதாக சொன்ன வாசனிடம் பூங்கோதை மீண்டும் திருமால் வந்திருந்தபோது என்ன நடந்தது எனக் கேட்டாள். வாசன் அதிர்ந்தான். 

(
தொடரும்)