Sunday 7 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 23

23. பாரதியின் குறிக்கோள்

பாரதியும் கிருத்திகாவும் மிகவும் சிறப்பாக படித்து வந்தார்கள். வருட இறுதித் தேர்வு சிறப்பாக எழுதினார்கள். இம்முறைத் தேர்வு விடுமுறையில் பாரதி வழக்கம்போல நலகாப்பகம் ஒன்றில் வேலைக்கு இணைந்துவிட்டாள். கிருத்திகா கவிதைகளையும், கதைகளையும் எழுதுவதில் ஈடுபாடு கொண்டாள். பாரதி தனது மரபியல் மருத்துவத்தில் உள்ள ஈடுபாட்டினை முறைப்படி கொண்டு செல்ல அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தாள். 

அவள் குறிப்பிலிருந்து ஒரு டி என் ஏ உருவாக எந்த மூலக்கூறுகள் அவசியம் என்பதை வரைந்து வைத்து இருந்தாள். ஆனால் அது குறித்து குறிப்புகளை எழுதாமல் வெறும் மூலக்கூறுகளை மட்டும் வரைந்து இருந்தது புரியாமலிருந்தது. 

அன்று மாலையில் கிருத்திகா பாரதி வரைந்து வைத்து இருந்த மூலக்கூறுகளைப் பார்த்து விட்டவள் காட்டுமாறு கேட்டாள். பாரதி காட்ட மறுத்துவிட்டாள். ஆனால் கிருத்திகா கட்டாயம் காட்ட வேண்டும் என சொன்னதும் மறுக்கமுடியாமல் காட்டினாள். 






படத்தைப் பார்த்த கிருத்திகா விளக்கம் சொல்லுமாறு கேட்டாள். அதற்கு பாரதி நீ படித்ததுதானே, அதுவும் இது விடுமுறை, எனக்கு காலையில் இருந்து வேலை செய்தது சோர்வாக இருக்கிறது, பிறகு சொல்கிறேன் என சமாளித்தாள். ஆனால் கிருத்திகா சொல்லித்தான் தீர வேண்டும் என கட்டாயப்படுத்தினாள். ஆனால் பாரதி ஒரு வாரம் கழித்து நிச்சயம் முழு விபரங்களும் எழுதியபிறகு சொல்வதாக கூறியதும் பாரதி ஓய்வெடுக்கட்டும் என சுந்தரன் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்ல ஆரம்பித்தாள் கிருத்திகா. பாரதி கேட்கும் மனநிலையில் இல்லாதவளாய் வாசனைப் பற்றிய நினைவுகள் வந்து போயின. பெரியவர் செடி கொண்டு வந்த விசயம் முதற்கொண்டு மொட்டு வந்திருப்பதுவரை பாரதியிடம் சொல்லியிருந்தார். சிலநாட்கள் குளத்தூர் சென்று வந்தால் என்ன என பாரதிக்கு மனதில் தோன்றியது. பாரதியின் கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை உணர்ந்த கிருத்திகா அமைதியானாள். பின்னர் கிருத்திகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவள் பாரதிக்காக ஆரஞ்சு சாறினை எடுத்துச் சென்று தந்தாள். பாரதி புன்முறுவலிட்டாள். 

நீ எல்லாம் எழுதனப்பறம் எனக்கு விளக்கமா சொல்லனும் என சொல்லிவிட்டு கிருத்திகா பாரதியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாள். பாரதி குளத்தூர் செல்வதென முடிவெடுத்தாள். அன்று இரவே அம்மாவிடமும் அப்பாவிடமும் அனுமதி கேட்டவள் தான் வேலைப் பார்க்கும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டும் அனுமதி பெற்றுக்கொள்வது என முடிவுடன் நிம்மதியாக உறங்கினாள். இதமான காற்று மேலும் இதமாக வீசத் தொடங்கியது.

அதிகாலை எழுந்த பாரதி வேலைக்குத் தயாரானாள். அவளது வேலையிடத்துக்குச் சென்றதும் அங்கே மேலாளாரிடம் தனக்கு நான்கு நாட்கள் விடுமுறை வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மேலாளர் 

''தாராளமா போய்ட்டு வாம்மா, நீங்க இங்க வந்து வேலைப் பார்க்குறதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, இப்ப எல்லாம் சமூக நல நோக்கத்தோட வாழறவங்க ரொம்பவே குறைஞ்சிப் போய்ட்டாங்க, அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்குறதுக்கே நேரம் போதறதில்லை. அவங்களையும் குறை சொல்ல முடியாது, அவங்க எடுத்துக்கிட்ட வாழ்க்கை அப்படி, நீங்க கிடைக்கிற நேரத்திலும் விடுமுறையிலும் இங்கு வந்து எங்களுக்கு உதவியா இருக்கறது மனசுக்கு நிறைவா இருக்கும்மா''

என சொல்லியதும் பாரதிக்கு சந்தோசமாகவும் அதேவேளையில் கவலையாகவும் இருந்தது. தன்னலம் கருதாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அனைவருமே தன்னலம் கருதாமல் இருந்துவிட்டால் பொதுநலத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடத்தான் கூடுமோ என நினைத்துக்கொண்டாள். மதிய வேளையில் அங்கிருந்து கிளம்பினாள். 

வீட்டில் வந்து தனக்குத் தேவையான துணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். மரபியல் பாடம் கண்ணுக்கு முன்னால் சுற்றியது. குளத்தூருக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மரபியல் பற்றி எழுத ஆரம்பித்தாள். 

அடினைன் மற்றும் குவானைன் எனப்படும் மூலக்கூறுகளானது புயூரின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறிலிருந்து இருந்து உருவானதாகும். சைட்டோசின் மற்றும் தைமின் எனப்படும் மூலக்கூறுகளானது பிரிமிடின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறில் இருந்து உருவானதாகும்.

என எழுதி வைத்துவிட்டு புயூரின் மற்றும் பிரிமிடின் படங்களை வரைந்தாள். பின்னர் எழுதத் தொடங்கினாள்.



இந்த புயூரின் வகை மூலக்கூறுதான் நாம் அருந்தும் தேநீரிலும் காஃபியிலும் உள்ள கஃபின் எனப்படும் மூலக்கூறாகும். மேலும் சாந்தின், தியோபுரோமின் இந்த புயூரின் வகையில் உள்ளடங்கும். நியூக்ளிக் அமிலங்கள் உருவாக மூலமாக அடினைன், குவானைன், தைமின் சைட்டோசின் மற்றும் யுராசில் மூலக்கூறுகளே பெருமளவு பங்கு வகிக்கின்றன. 

இந்த புயூரின் அல்லது பிரிமிடின் மூலக்கூறுகளுடன் ரிபோஸ் அல்லது டி-ஆக்ஸ்ரிபோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இனிப்பானது இணையும்போது நியூக்ளியோசைடு உருவாகிறது. புயூரின் அல்லது பிரிமிடினுடன் இணைந்த கார்போஹைட்ரேட்டுடன் ஒரு பாஸ்போரிக் அமிலம் இணையும் போது நியூக்ளியோடைடு உருவாகிறது. இப்படி பல நியூக்ளியோடைடுகள் இணையும்போது டி என் ஏ அல்லது ஆர் என் ஏ உருவாகிறது. டி என் ஏ வில் அடினைன் தைமின் குவானைன் சைட்டோசினும், டி ஆக்ஸ்ரிபோஸும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது. ஆர் என் ஏ வில் தைமின் பதில் யுராசிலும், டி ஆக்ஸிரிபோஸ் பதிலாக ரிபோஸும் உள்ளது. டி என் ஏ வில் அடினைன் தைமினுடனும் குவானைன் சைட்டோசினும் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் அமைந்து உள்ளது. 


தன்னுடன் இருந்த புத்தகங்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டாள். தான் எழுதிய விபரங்களை தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் சென்று தான் மாலையில் குளத்தூர் செல்வதாக கூறியதாகவும், கிருத்திகாவும் தானும் உடன் வருவதாக சொன்னாள். பாரதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாரதியின் பதிலை எதிர்பார்க்காமல் தனது தாயிடம் சென்று அனுமதி கேட்டாள். தமிழரசி அனுமதி தந்தார். தந்தையும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. பாரதிக்கு மறுக்க இயலாமல் போனது அதே வேளையில் மிகவும் சந்தோசமாக இருந்தது. பாரதியுடன் கிருத்திகா செல்வது குறித்து பாரதி வீட்டில் சந்தோசப்பட்டார்கள். அன்று இரவே பேருந்து ஒன்றில் குளத்தூர் கிளம்பினார்கள். கிருத்திகா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். 


வழிநெடுக உறங்காமல் கிருத்திகா பேசிக்கொண்டே வந்தாள். பாரதியும் பதில் சொல்லிக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்தாள். காலையில் மதுரையை வந்தடைந்தார்கள். மதுரையில் நாணல்கோட்டை செல்லும் பேருந்துக்கு அருகில் வ்ந்தார்கள். அந்த பேருந்தில் சன்னல் ஓரத்தில் மாதவி அமர்ந்து இருப்பதை கண்டாள். முன்புறமாக ஏறாமல் பின்புறமாக ஏறினார்கள். ஆனால் திடீரென திரும்பிப் பார்த்த மாதவி பாரதியைப் பார்த்து 'பாரதி' என கண்கள் மலர்ந்தாள். தேவகியும் திரும்பி பாரதியை பாரதி என்றாள். அவர்களின் அருகில் இருந்த இருக்கையில் இவர்கள் அமர்ந்தார்கள்.


கிருத்திகாவுக்கு மாதவியையும் தேவகியையும் பாரதி அறிமுகம் செய்தாள். பேருந்து கிளம்பியது. மாதவி அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்தாள். மதிய வேளை பேருந்தில் குளத்தூர் வந்தடைந்தார்கள். பாரதியின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார் பெரியவர். வாசன் பெருமாள் கோவிலில் இருந்து மந்தையை அப்போது வந்தடைந்தான். பேருந்தில் இருந்து இவர்களுடன் பலர் இறங்கினார்கள். 


அவர்தான் பெரியப்பா, அதோ அதுதான் வாசன் என பாரதி கிருத்திகாவிடம் சொன்னாள். வாசன் பெரியவருடன் சேர்ந்து அவர்களை வரவேற்றான். பாரதியும் கிருத்திகாவும் பெரியவர் வீட்டிற்குச் சென்றார்கள். மாதவி தனது வீட்டிற்குச் சென்றாள். தேவகி வாசனுடன் நடந்தாள். 'பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கியா, என்ன இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்திட்டீங்க' என்றான் வாசன். 'ம் நல்லா எழுதி இருக்கோம், அடுத்த பேருந்துல கிளம்பிருவோம்ணே' என்றாள் தேவகி. 'பெட்டி கனமா இருக்கே' என்றான் வாசன். 'இந்த விடுமுறைக்கு இங்கதான் இருக்கப்போறோம்ணே' என தேவகி சொன்னதும் வாசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


(தொடரும்)


Thursday 4 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 22

22. நெகாதம் செடி 

வாசன் பூங்கோதையிடம் உண்மையைச் சொல்வதென முடிவெடுத்தான். பூங்கோதையும் ஆவலுடன் அமர்ந்தாள். பின்னர் என்ன நினைத்தானோ, பூங்கோதையிடம் சில மாதங்கள் பின்னர் சொல்கிறேன் என சொன்னதும் பூங்கோதை பிடிவாதமாக இப்பொழுதே சொல்ல வேண்டும் என சொன்னாள். வாசன் திருமால் வந்த விபரங்கள், பெருமாள் தாத்தாவின் விருப்பம், விஷ்ணுப்பிரியனின் முயற்சி என எல்லாம் சொல்லி முடித்தான். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பூங்கோதை வாசனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.

''
அண்ணா, இரண்டு குழந்தைகளுமே பையனா பொறந்துட்டா அதுல யாரு பெருமாள் தாத்தானு எப்படி கண்டுபிடிக்கிறது?''

''
டி என் ஏ வைச்சி கண்டுபிடிச்சிரலாம்''

''
ஆனா எனக்கு யாரு பெருமாள் தாத்தானு தெரிய வேணாம்''

''
இரண்டுமே பையனா பொறந்தது போல பேசறீங்க பூங்கோதை''

''
பையனாத்தான் பொறப்பாங்க''

''
அதுதான் சொன்னேன் கொஞ்சநாள் பொறுத்து இருங்க, உங்களுக்கு இரட்டைக்குழந்தையானு தெரிஞ்சிக்கலாம், அவசரப்பட வேண்டாமே''

''
இரட்டைக் குழந்தைதான் அண்ணா''

வாசன் பூங்கோதையின் நம்பிக்கையைக் கண்டு வியந்தான். பூங்கோதையிடம் விஷ்ணுப்பிரியன் முதன்முதலில் பெருமாள் தாத்தாவை வைக்கவில்லை என சொன்னபோது என்ன நினைத்தாள் எனக் கேட்டபோது பூங்கோதை மெல்லியதாய் சிரித்துக்கொண்டே நம்மை அவர் ஏமாத்த முடியுமா அண்ணா என சொன்னபோது வாசன் ஒருநிமிடம் என்ன பூங்கோதை சொன்னாள் என யூகிக்க முடியாமல் திருப்பிச் சொல்லச் சொன்னான். பூங்கோதை திருப்பிச் சொன்னதையே சொன்னாள்.

''
அப்படின்னா உங்களுக்கு முன்னமே தெரியுமா?''

''
தெரியாது அண்ணா''

''
ஏன் அப்படி சொன்னீங்க இப்போ''

''
ஒரு விசயம் நடக்கனும்னா அது நடந்தே தீரும்ண்ணா, அந்த பகவான் நினைச்சிட்டா யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுண்ணா''

''
பகவான் எந்த பகவான்?''

''
நாராயணன்''

''
நாம செஞ்சாத்தானே''

''
நாம செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தன்னால உருவாகும்ண்ணா''

''
தன்னால எப்படி உருவாகும், நாம உருவாக்குறதுதான்''

''
அப்படினு நீங்க நினைக்கிறீங்கண்ணா, ஆனா எல்லாம் அந்த நாராயணன் தான் நடத்தி வைக்கிறார்''

''
பூங்கோதை நீங்க சொல்றது எல்லாம் நம்பறமாதிரி இல்லை''

''
நம்ப வேண்டாம்ண்ணா, நீங்க நாராயணனை நம்பித்தானே செடி எடுக்க வந்தீங்க''

''
இல்லை, பெரியவரை நம்பி வந்தேன்''

''
அவர் நாராயணனை நம்பி வந்தார், நீங்க நாராயணனை நம்பாம வந்திருக்கீங்க''

''
அதனால''

''
உங்களால மலை அடிவாரத்துக்கு மட்டும் தான் போக முடியுது''

''
யார் சொன்னா?''

''
என் மாமா சொன்னார்''

''
அதுக்கும் நாராயணனுக்கும் சம்பந்தம் இல்லை, நான் பெரியவரால மேல எப்படி ஏறி வரமுடியும்னு ஏதாவது பேசிட்டு வந்துருவேன், நாளைக்கு மலையில ஏறுவேன் அவரை கீழ நிற்கச் சொல்லிட்டு''

''
அவர் கீழ நிற்கமாட்டாருண்ணா, நான் வேணும்னா அங்க வந்து நிற்கவா''

''
வேண்டாம் பூங்கோதை, நீங்க என்ன அர்த்தத்தோட பேசறீங்கனு புரியலை''

''
அண்ணா நம்பிக்கையோட செயல்படுங்கண்ணா, நடக்காத விசயத்தைக் கூட நடக்க வைச்சிரலாம்''

வாசன் அமைதியானான். நாராயணனை நம்புவது என்றால் எப்படி நம்புவது? எங்கே இருக்கிறான் நாராயணன்? உடம்பில் நிறுத்த முடியாத நாராயணனை எப்படி உணர்வது? அகிலத்துக்கெல்லாம் ஒரே நாராயணன்? அவரவரின் தேவைக்கு ஏற்ப மாறிப்போன நாராயணன்? இல்லாமல் கூடப் போன நாராயணன்? வாசனின் யோசனையை பூங்கோதை கலைத்தாள்.

''
நீங்கதான் அண்ணா நாராயணன்''

''
மாதவி சொன்னாளா?''

''
இல்லை அண்ணா, நானே சொன்னேன்''

''
பூங்கோதை, நான் வாசன் மட்டுமே''

''
உங்களுக்குள் இருக்கும் நாராயணனை நீங்கள் உணருங்கள் அண்ணா, காலம் தாழ்த்த வேண்டாம்''

''
எனக்குப் பழக்கமில்லை, தேவையுமில்லை''

''
ம்ம் சரி அண்ணா, நான் நாளை உங்களுடன் மலைக்கு வருவேன்''

பூங்கோதை சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனாள். வாசன் நோட்டினை எடுத்தான். செடி கண்ணுக்கு நன்றாகவே தெரிந்தது. 

அதிகாலையில் எழுந்ததும் பூங்கோதை மலைக்குச் செல்வதற்குத் தயாரானாள். கேசவனிடம் இரவே தனது விருப்பம் குறித்துச் சொல்லி இருந்தாள். கிழமை ஞாயிறு எனினும் கேசவன் தான் வழக்கம்போல பார்த்தசாரதியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தமானான். பார்த்தசாரதிக்கு கேசவனின் ஆர்வமும் உழைப்பும் மனமகிழ்வைத் தந்தது. 

வாசன் பெரியவருடன் இன்றைய திட்டம் குறித்து பேசலானான். ஒரு செடியை பாதுகாக்க, விதையினை பாதுகாக்க என்னவெல்லாம் வேண்டும் என்பதை தான் எடுத்து வைத்திருப்பதாக கூறினான். பெரியவரும் கவனமாகக் கேட்டுக்கொண்டார். வாசன் தனது விருப்பப்படி பெரியவர் மலை அடிவாரத்திலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். பெரியவரும் சிரித்துக்கொண்டே சரியென சம்மதம் சொன்னார். 

காலையிலே சாப்பிட்டுவிட்டு வாசனும் பெரியவரும் கிளம்பினார்கள். பூங்கோதையும் உடன் கிளம்பினாள். பெரியவருக்கு பூங்கோதை வருவதை தடை சொல்ல விருப்பமில்லை. மலைப்பகுதியை அடைந்தார்கள். வாசன் தனது நோட்டினை எடுத்து திசைகள் எல்லாம் மிகவும் கவனத்துடன் குறித்துக்கொண்டான். 

‘’
அய்யா, நான் மலை மேல ஏறிப் போறேன்’’

‘’
ம்ம்’’

‘’
நீங்க நான் வரவரைக்கும் இங்கேயே இருங்க அய்யா, பூங்கோதை நீங்க நேரமாச்சுன்னா வீட்டுக்குப் போங்க’’

‘’
நாங்களும் அங்க இங்க தேடிப் பார்க்கிறோம், நீ எங்களுக்கு முன்னரே வந்துட்டா இங்க வந்து இரு தம்பி’’

‘’
ம்ம் சரி ஐயா’’

தாங்கள் நிற்கும் இடத்தினை மூவரும் குறித்துக்கொண்டார்கள். மீண்டும் அங்கேயே சந்திப்பது என முடிவு செய்து வாசன் தண்ணீர், உணவு, பை எல்லாம் எடுத்துக்கொண்டு மலையின் மேல் ஏறத் தொடங்கினான். மரங்களும் செடிகளும் அடர்ந்து இருந்தது. பாதையென்று எதுவும் மனிதர்களால் போடப்படவில்லை. தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு ஏறத் தொடங்கினான். சில தூரம் வந்ததும் சற்று நேரம் நின்றான். தண்ணீர் குடித்துக் கொண்டான். நோட்டினை எடுத்துப் பார்த்தான். இன்னும் சற்று தொலைவில் சென்றால் செடி தென்படலாம் என ஏறினான். 

சின்ன சின்ன பூச்சிகள், புழுக்கள் எல்லாம் இலையில் தஞ்சம் கொண்டிருந்தன. மழை விழுந்திருந்ததால் தரையெல்லாம் ஈரமாக இருந்தது. வாசன் மலையின் ஓரிடத்தில் திகைத்து நின்றான். நிறைய தொலைவு ஏறிவிட்டதுபோல் உணர்ந்தான். நெகாதம் செடியை தேடினான். சில செடிகள் நெகாதம் செடி போலவே கண்ணுக்குப் பட்டது. ஆனால் அவை நெகாதம் செடிகளில்லை என்பதை உறுதி செய்தான். மரமாக வளரமுடியாமல் செடியாக முடங்கிப்போவதன் அவசியம் என்ன? தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். 

வித்தியாசமான ஓசைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. மனிதர்கள் இங்கெல்லாம் வருவதில்லை என்பதுபோல் வெட்டப்படாத மரங்கள்! வாசன் வேறு திசையில் மேலும் ஏறத் தொடங்கினான். நேரம் வெகுவேகமாக கடந்தது. மாலைப் பொழுது வந்து சேர்ந்தது.

சற்று தொலைவு சென்றதும் குளுகுளுவென அடிக்கும் காற்றில், மர இடைவெளியில் மெல்லிய கதிர்களை பாய்ச்சும் சூரிய ஒளியில் சில செடிகளின் மேல் அப்படியே அமர்ந்தான். தனது உடலில் ஒருவித புத்துணர்வை ஏற்படுவதை உணர்ந்த வாசன் எழுந்தான். தான் அமர்ந்து இருந்த செடிகளில் ஒரு செடியை உற்று நோக்கினான். நோட்டினை எடுத்தான். நோட்டில் வரையப்பட்ட செடியையும் தான் நேரில் பார்த்த செடியையும் பார்த்தான். எல்லாம் மிகச்சரியாக இருந்தது. ஒரே ஒரு செடி?! சுற்றியுள்ள செடிகள் எல்லாம் வேறு விதமாக இருந்தது.

வாசன் நெகாதம் செடியை வேருடன் பறித்தான். தான் கொண்டு வந்து இருந்த பையில் செடியை பத்திரப்படுத்தினான். அந்த பகுதியிலே சுற்றி சுற்றிப் பார்த்தான். அதைப்போன்று வேறு எந்த செடியும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மேலும் மேலே நடந்தான். ஒரு சிறு பகுதியில் நெகாதம் செடிக் கூட்டமாக இருந்தது. அருகிலே சென்று பார்த்தான். 

தான் வைத்து இருந்த செடியுடன் அந்த செடிகளை ஒப்பிட்டுப் பார்த்தான். ஒரேமாதிரியாகவே இருந்தது. செடிகளை எண்ணினான். நாற்பத்தி இரண்டு செடிகள் மட்டுமே இருந்தது. எல்லா செடிகளுமே ஒரே வயதுடையவை போன்றே காணப்பட்டது. எந்த ஒரு செடியிலும் மலர்களோ, காய்களோ இல்லாதது வாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அனைத்துச் செடிகளையும் வேர்களுடன் பறித்தான். அங்கிருந்த மண்ணை பல பிரிவுகளாகத் தோண்டி சில பைகளில் போட்டுக்கொண்டு குறித்துக்கொண்டான். இருள் சூழத் தொடங்கியது. வாசன் கீழிறங்கத் தொடங்கினான். வெகுவேகமாக இறங்கினான். 

பெரியவர் மட்டும் அதே இடத்தில் கல்லில் அமர்ந்து இருந்தார். பெரியவரின் கையில் ஒரே ஒரு செடி மட்டும் இருந்தது. வாசன் செடிகளுடன் பெரியவரை உற்சாகத்துடன் சந்தித்தான். பூங்கோதை சென்றுவிட்டதை அறிந்தான். பெரியவரிடம் வாசன் தான் சேகரித்த செடிகளையும் மண்ணையும் காட்டினான். பெரியவர் வைத்திருந்த செடியும் வாசன் கொண்டு வந்த செடிகளும் ஒரே மாதிரியாக இருந்தது. வாசன் ஆச்சரியமாகப் பெரியவரைப் பார்த்தான். பூங்கோதையுடன் தான் மலையின் ஒரு பகுதிக்குச் சென்றதாகவும், சிறிது தொலைவு மலையின் மேல் ஏறிச்சென்று பூங்கோதைப் பறித்துக்கொண்டு வந்ததாக பெரியவர் சொன்னதும் வாசன் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என சொன்னான். ஆனால் பெரியவர் இரவாகிவிட்டதால் வேண்டாம் என வாசனுடன் வீடு திரும்பினார். எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் எப்படி பூங்கோதை பறித்துக்கொண்டு வந்தாள் என வாசன் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டான். 
(தொடரும்)

Wednesday 3 November 2010

கம்யூனிசமும் கருவாடும் - 5

கிராக்கஸ் பெபியுப். இவருடைய வாழ்நாள் காலம் முப்பத்தி ஏழு வருடங்கள் மட்டுமே. இவருடைய சிந்தனைகள் எல்லாம் கம்யூனிசம் என்றோ சோசியலிசம் என்றோ இவரது காலத்தில் குறிக்கப்படவில்லை. இந்த கம்யூனிசம் என்ற வார்த்தை பின்னாளில் தான் வந்தது. ஆனால் இந்த கம்யூனிச சிந்தனைகள் பல்லாண்டு காலமாக மனிதர்களில் மனதில் உலவிக் கொண்டுதான் இருந்தது.

 உடோபியா எனும் ஒரு கற்பனை சமூகத்தை, நிலப்பரப்பை  தாமஸ் மோர் எழுதிய வருடம் 1516. இந்த சமுதாயம் அமையக்கூடிய சாத்தியமற்ற சூழலே இப்போது மட்டுமல்ல, எப்போதும் நிலவுகிறது. இந்த தாமஸ் மோர் எனக்கு அறிமுகமானது எனது தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் தாரா கணேசன் அவர்கள் பேசியதை கேட்டபோதுதான்.  உடோபியா என்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் என்னுள் எழுந்த சிந்தனைகளில் சில உடோபியாவில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தது உண்டு. இதே போல் பலரும் உலகில் சிந்தித்து கொண்டிருக்க கூடும். தாமஸ் மோர் எழுத்தில் வைத்தார், பலர் எண்ணங்களை தங்களுடன் புதைத்து கொண்டார்கள் என்றே கருதுகிறேன். தாமஸ் மோர் அவர்களுக்கு முன்னாலேயே இதே சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்திருக்கிறார்கள், அவருக்கு பின்னால் வந்தவர்களும் அதே சிந்தனைகளை கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிலர் எழுதவும் செய்து இருக்கிறார்கள்.

உலகம் எல்லாம் ஒரே நாணயம். உலகம் எல்லாம் ஒரே மதம். உலக நாடுகள் எல்லாம் ஒன்றே ஒன்று என்கிற கற்பனை கோட்பாடு, எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லாது இருத்தல், உலக நாடுகள் பிரிவினை பாராட்டாது ஒன்றாகவே இருத்தல் போன்ற பல கற்பனைகள் மனதில் வைத்தும் அதை எப்படியாவது உலகில் நிலைநிறுத்திட வேண்டும் எனும் முயற்சி அற்ற  எண்ணங்கள் என்னுள் எழுவது உண்டு. ஆனால் இவை எல்லாம் சாத்தியமற்று போய்விடும் என்கிற நிதர்சன எண்ணங்களும் என்னுள் இருப்பதுண்டு. இனி வரப்போகிற உலகத்தில் இதுபோன்ற எண்ணங்கள் எல்லாம் சாத்தியமா? காலம் பதில் சொல்லும் என சொல்வது அவசியமற்றதாகிறது. உலகம் தோன்றியபோது எந்த நாகரிகம் வீட்டினை கட்டி இருந்தது? எந்த நாகரிகம் பணத்தை அறிந்து இருந்தது? எந்த நாகரிகம் தங்களை பிரித்து வைத்து கொண்டிருந்தது? காடுகளில் சுற்றி திரிந்தவர்கள் தானே இந்த மனிதர்கள். இன்று கம்யூனிச சிந்தனைகளை உலகில் நிலை நிறுத்த நினைப்பவர்கள் காடுகளில்தான், காடுகளில் மட்டுமேதான் சுற்றி திரிய வேண்டும். இவர்களுக்கு நாடு, நகரம் என்பதெல்லாம் அவசியமில்லாத ஒன்று. அப்படி பார்த்தால் சந்நியாசம் என காடுகளை நோக்கி பயணித்தவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள் என சத்தமிட்டு சொல்லிவிடலாம். புரட்சி என வன்முறைகளை கையாளும் இந்த சிந்தனைவாதிகள் எல்லாம் பேசாமல் தவம் செய்துவிட செல்வது சால சிறந்தது.

இத்தனை தொழில் நுட்ப வளர்ச்சியும், சமுதாய மாற்றங்களும் ஏற்பட்ட பின்னர் கம்யூனிசம் என்கிற அழகிய சிந்தனையை நோக்கி மனிதம் செல்லும் என்பதெல்லாம் வீணான கற்பனை சித்திரங்களாகவே வரையப்படும்.

பெபியுப் சொல்கிறார் 'ஒரு சமூகமானது, மனிதர்கள் தாங்கள் பிறரை விட பணக்காரர்களாகவோ, அறிவுடையவர்களாகவோ, பலம் பொருந்தியவர்களாகவோ உருவாவதை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் உருவாகவேண்டும்'

இந்த வாசகம் திடுக்கிட செய்யும் வண்ணம் இருந்தாலும் இதனுடைய நோக்கம் என்னவெனில் 'ஈடு இணையற்ற ஒரு சமுதாயம் என்பது, அதாவது ஏற்ற தாழ்வுகள் அற்ற, அனைவரும் பணத்திலும், அறிவிலும், பலத்திலும் சமம் பொருந்தியவர்களாக இருப்பதுதான் என்கிறது' இது எப்படி சாத்தியம்? அன்றைய கால கட்ட சிந்தனைகளில் மரபியல் விசயங்கள் முதலான பிற அறிவியல் விசயங்கள் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

சாத்தியமற்ற விசயங்களை, விபரங்களை உலகின் உயிர்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் ஒரு சமூகம் வேண்டும் என விரும்பினால் அது எப்படி சாத்தியம். முன்னர் எழுதிய பதிவினில் குறிப்பிட்டதுதான். வீட்டினில் கம்யூனிசத்தை நிலைநிறுத்த திராணியற்றவர்கள் சமூகத்தில் கம்யூனிசத்தை நிலைநிறுத்துவது பற்றி பேசுவது அறிவீனம்.

உயிரினங்களின் தேவை என்ன? வாழ்வது என்பதுதான் குறைந்த பட்ச ஆசையாக இருக்கக் கூடும். உயிரினங்கள் இருப்பிடத்திற்காக, உணவுக்காக, கலவிக்காக போராடும் தன்மை உடையவை. தனது நிலையை நிலை நிறுத்தி கொள்ள தனக்கு போட்டியாக இருப்பவைகளை அடிமைபடுத்தும் குணம் உயிரினங்களிடம் உண்டு. இந்த போட்டி தன்மையை ஒழித்து கட்ட வேண்டும் என கூக்குரல் இடுவதுதான் கம்யூனிசம் என்றால் அந்த கம்யூனிசத்தை எந்த உயிரினம் ஏற்று கொள்ள தயாராக இருக்கும். ஆனால் இதுவல்ல கம்யூனிசம் என்றால், எதுதான் கம்யூனிசம்?

கம்யூனிசம் என்ற வார்த்தையை முதலில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் குட்வின் பாம்பி என்பவரே என சொல்லப்படுவதுண்டு. இவர் பெபியுப் கொள்கையை பின்பற்றியவர்கள் பிரெஞ்ச்சு மொழியில் உபயோகித்த கம்யூனிஸ்டே என்ற வார்த்தையை இரவலாக பெற்று கொண்டார். இவர் தான் இங்கேல்ஸ் அவர்களை கம்யூனிஸ்டேவிற்கு அறிமுகப்படுத்தியவர். இவர்தான் கம்யூனிஸ்ட் போராட்ட அமைப்பினை 1841ல் உருவாக்கினார். அந்த வருடமே உலக கம்யூனிஸ்ட் அமைப்பும் தோன்றியது.

நிலச்சுவான்தார்கள் மனிதர்களை கொத்தடிமைகளாக நடத்தியது கண்டு, அரசர்கள் மக்களை அடிமைகளாக நடத்தியது கண்டு பொங்கி எழுந்த மக்கள்தான் புரட்சிக்காரர்கள் என அறியப்பட்டார்கள். ஆனால், அவர்கள் புரட்சியை கையாண்ட விதம் வன்முறை! இவர்களை அரசு படைகள் ஒடுக்கிவிடுவது வாடிக்கையாக நடந்துவருவதுதான். மக்களிடம் புரட்சி ஏற்படாதவரை, தனி அமைப்புகளில் ஏற்படும் புரட்சி நசித்து போவதுண்டு. உண்மையான கம்யூனிசம் உலகில் நிலவிட மக்கள் போராட்டத்தில் முழுமையாக தங்களை அர்பணித்து கொள்ள வேண்டும். இது எவ்வகையில் சாத்தியம் என்பதை போராளிகளும், புரட்சியாளர்களும் தான் சொல்ல வேண்டும்.

மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் போன்றோர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் அலசப் போவதில்லை இந்த கட்டுரை. அது தேவையில்லாத விசயங்களும் கூட. ஆனால் சில விசயங்கள் மட்டும் இங்கே கட்டுரையின் பொருட்டு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். மார்க்ஸ் கூலி தொழிலாளி நிலையில் இருந்தவர். இங்கேல்ஸ் பணக்கார வர்க்கத்தை சார்ந்தவர். இங்கேல்ஸ் மார்க்ஸ் அவர்களுக்கு நிறைய உதவிகள் புரிந்தார். இப்படி ஒரு தனி மனிதன் மற்றொரு மனிதனுக்கு உதவும் பட்சத்தில் எதற்கு ஒரு சமூகமே அப்படி இருக்கக் கூடாது எனும் சிந்தனை மார்க்ஸ் அவர்களுக்கு வந்திருந்ததில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்த சிந்தனையை உலகெங்கும் நிலைநிறுத்த வேண்டும் என நினைத்ததுதான் தவறாகிப் போனது. இங்கேல்ஸ் போன்ற மனிதர்கள் உலகம் எல்லாம் நிறைந்திருந்தால் மட்டுமே மார்க்ஸ் போன்ற மனிதர்கள் சுகமாக இருந்திருக்க இயலும். இங்கேல்ஸ்களை உருவாக்குவது எப்படி? என்பதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால் புரட்சிகள் எனும் பெயரில் நாச வேலைகள் உலகில் நடப்பது இயல்புதான். மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் உருவாக்கிய கம்யூனிச சித்தாந்தம் பிரசித்து பெற்றது என சொல்ல இயலாது.

கம்யூனிச கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே இந்த கம்யூனிச சித்தாந்த சிந்தனைகளை பற்றி அறிந்து இருக்கிறார்கள் என அறிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்.

கம்யூனிச சித்தாந்தம் 1848l ல், முன்னர் குறிப்பிட்டது போல பிரெஞ்ச்சு தொழிலார்களால் 1836ல் கம்யூனிச அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் விருத்தியாக உருவான கம்யூனிச அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதில் முக்கிய விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் எப்படிபட்ட கம்யூனிச அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதை பற்றி இந்த சித்தாந்தம் எதுவும் சொல்லவில்லை என்பதுதான் சிறப்பு. அதன் காரணமாகவே கம்யூனிச சித்தாந்த அடிப்படை என சொல்லிக் கொண்டு லெனினிசம் முதற்கொண்டு எல்லாம் உருவாகின.

இனி கம்யூனிச சித்தாந்தம் பற்றி இங்க்கேல்சும், மார்க்சும் என்னதான் சொன்னார்கள் என்பதை பார்ப்போம். இந்த கம்யூனிச சித்தாந்தம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதலில் ஒரு முகப்புரையுடன் தொடங்குகிறது. அந்த முகப்புரை மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இந்த தொடரில் இனி வரும் சில  பதிவுகள் கார்ல் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் எனும் அற்புத மனிதர்களுக்கு சமர்ப்பணம்.

(தொடரும்)