Tuesday 2 February 2010

வித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)

பயணம் 6


துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தபோது வெயில் கொஞ்சம் வாட்டி எடுக்க ஆரம்பித்தது. இருபத்தி நான்கு வருடங்களாக பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமி. கடுமையான வெயில் எனப் பார்க்காமல் களத்து மேட்டுகளிலும், ஒவ்வொரு ஊரின் நிலங்களைத் தரிசு நிலங்களாக்கி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருந்த பூமி. 'வேகாத வெயிலுல இப்படியா விளையாடி கருத்துப் போவ' என அன்பினால் திட்டு வாங்கியும் சலிப்பு ஏதுமில்லாமல் சுற்றித் திரிந்த பூமி. வெயிலுக்கு உகந்த அம்மன் என மாரி வேண்டுமென மாரியம்மனிடம் மழைக்கஞ்சி கேட்டு திரிந்த பூமி. அம்மனை மனம் குளிரச் செய்ய ஐந்து நாட்கள் திருவிழா என அக்கினிச் சட்டியும், பூக்குழியும் கண்டு வணங்கி இருந்த பூமி. உடலில் சாட்டையால் அடித்துக் கொண்டு ஊரில் அக்கினிச் சட்டி ஏந்தி வரும் மனிதரைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்திருந்த பூமி. பழக்கப்பட்ட வெயில் ஒவ்வொரு முறையும் ஊரில் கால் வைக்கும்போது ஏதோ குளிர்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவன் போல நினைத்துக் கொண்டு அப்பப்பா வெயில்... என்னா வெயில்... என உடலும் மனமும் அலட்டிக்கொள்ளும்போதெல்லாம் கண்களில் நீர் பொங்கத்தான் செய்கிறது. இப்போதெல்லாம் உடல் உள்ளூர் வெயிலுக்குத் துவண்டு போகிறது. 

சென்னையில் இறங்கியதும் இலண்டனில் திட்டமிட்டபடி அன்றே திருவண்ணாமலை சென்றோம். எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான திருச்சுழியிலிருந்து திருவண்ணாமலை சென்ற இரமணரின் பூர்விக இடமான திருச்சுழியைச் சென்ற முறை இந்தியா சென்றபோது பார்த்தேன். இம்முறை திருவண்ணாமலை செல்லும் ஆர்வம் சகோதரி ஒருவரின் வலைப்பூவினைப் படித்ததும் மேலும் அதிகமானது, இந்தியா செல்ல முடிவெடுத்த பொழுதே திருவண்ணாமலை பற்றி முடிவு செய்தோம். அதன்படியே சென்றோம். அடியார்க்கெல்லாம் அடியார் கதை எழுதிக் கொண்டிருக்க உன் ஆலயம் பார்க்க என்னை வரச் செய்தாயோ என எண்ண வைத்தது. சிறப்பு தரிசனம் கிடைத்தது. ''பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'' என அவனிடம் அருள் பிச்சைக் கேட்டு வைக்க ஆலயத்தின் வெளியே பொருள் பிச்சை கேட்டு பலர். மனம் கனத்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ? 

ஆசை துறந்த, ஆடையும் துறந்த இரமணரின் ஆசிரமத்தில் பணம் வேண்டாம் எனச் சொன்ன இளைஞனைக் கண்டு மனம் மெச்சிய வேளையில் ஆடை வேண்டும் எனக் கேட்டு பின்னர் பணமும் அதே இளைஞன் கேட்டபோது சேவையுள்ளம் என்னுள் தேவையற்றுக் கிடந்தது. சென்னையில் இறங்கிய மறுகணமே ஏதுமே செய்யாமல் பணம் கேட்ட இருவரையும் இந்த இளைஞரையும் பார்த்த எனது மகன் என்னிடம் கேட்டான். ''அவர்கள் என்ன வேலை செய்தார்கள்? பணம் கேட்டு நின்றார்கள்?'' என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இருப்பவர் இல்லாதவருக்குத் தரவேண்டும் என நான் சொன்னால் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேள்வி வந்தாலும் வரும், எனவே அமைதியானேன். ''அவர்கள் ஏதாவது வேலை செய்ய வேண்டும், பணம் வரும்'' என தானாகவே பதில் சொன்னான். உழைத்தால் தான் ஊதியம் என அறிந்து வைத்திருக்கும் இச்சின்னஞ்சிறு சிறுவனே, சில வருடங்கள் முன்னர் ஒருமுறை உதவி என வீட்டின் வாசலில் வந்து நின்றவருக்கு ஓடிச்சென்று தனது சேமிப்பில் இருந்து ஒரு நாணயம் எடுத்துக் கொடுத்து இருக்கிறான். அன்றைய தின செய்தி கேட்டு கண்கள் கலங்கியது, இன்றைய தின சேதி கேட்டு மனம் விழித்தது. மிகவும் வித்தியாமான அனுபவத்தை அந்த திருவண்ணாமலைத் தந்ததோ இல்லையோ எனது மகன் தந்து கொண்டிருந்தான். 

வீட்டிற்கு வந்து சேர இரவு பத்து மணிக்கும் மேலாகியது. மறுநாள் காலை தம்பி முரளியையும், சுதாகர் அண்ணனையும் தொடர்பு கொண்டேன். சுதாகர் அண்ணனை அன்று சந்திக்கலாம் என இருந்தேன் ஆனால் சொந்த விசயங்களால் சந்திக்கமுடியாமல் போகும் என கொஞ்சமும் நினைக்கவில்லை. இரவு பத்து மணியானாலும் பார்க்கலாம் என மனம் நினைத்தது. 

முகப்பேர் சென்று அங்கிருந்து கிஷ்கிந்தாவில் விளையாடிவிட்டு சென்னை கடற்கரையில் சிறிது நேரம் கழிக்க மொத்த நாளும் கழிந்திருந்தது. அங்கிருந்து சுதாகர் அண்ணனின் வீட்டுக்குச் செல்லலாம் என நினைக்க ஐசிஎப் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட நான்கு மணிக்கெல்லாம் அழைக்க வேண்டிய சுதாகர் அண்ணாவை அழைக்கவே வழியின்றிப் போனது. ஒன்பது மணிக்கு மேல் சுதாகர் அண்ணன் சிரமப்பட்டு எங்கள் எண்ணைக் கண்டுபிடித்துப் பேச இனிமேல் சந்திக்க காலதாமதமாகிவிடும் என அவர் சொல்ல, 16ம் தேதி நிச்சயம் சந்திக்கலாம் என சூழ்நிலை புரிந்து கொண்டு அவர் சொன்னபோது அந்த நாளை மனதில் அச்சடித்து வைத்தேன். எப்படியாவது இந்த அன்புக்குரிய அண்ணனை சந்தித்துவிடுவது என்று மனதில் எண்ணிக்கொண்டேன். 

எனக்கே மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தது, எப்படி சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் யாரையுமே சந்திக்காமல் செல்கிறோம் என. இதற்கான ஒரு வித்தியாசமான விசயத்தைப் பின்னர் எழுதுகிறேன். அந்த ஒரு விசயம்தான் என் வாழ்வில் என்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது என்பதையும் அறிந்தேன், ஆனால் அதற்காக எந்த ஒரு வருத்தமும் இல்லை. 

காலை ஏழு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பியபோது கிரி அவர்களைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதை மறந்து இருந்தேன். அவருடன் அன்று தொடர்பு கொள்ள இயலவில்லை. வெயில் அதிகமாக இருந்தது. பலவருடங்கள் பின்னர் ஊரில் அதே ஐந்தாம் திருவிழா என மாரியம்மன் திருவிழா கொண்டாட்டத்தை அன்று இரவு கண்டது வித்தியாசமாக இருந்தது. முதல் இரண்டுநாள் கடும்வெயிலாக இருக்க அடுத்த இரண்டு நாள் நல்ல மழை பெய்தது. ஊருக்கு வரும்போதெல்லாம் மழை பெய்து மனம் மகிழச் செய்தது. 

தினா தொடர்பு கொண்டார், நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக பேசினார். அவரது மன உறுதி கண்டு அதிசயித்தேன். அவரது உடல்நலம் முழுதும் குணமாகிட இறைவனை வேண்டுகிறேன். சுதாகர் அண்ணனும் அவ்வப்போது பேசினார். கிரி அவர்களுடன் 'நான் கடவுள்' படம் உட்பட பல விசயங்கள் அலசினோம், இந்தமுறை கிரி அவர்களை சந்திக்க வாய்ப்பே ஏற்படுத்திக்கொள்ளாமல் போனேன். அங்கிருந்து கிளம்புவதற்கு முதல் நாளன்று அவரைத் தொடர்பு கொண்டு சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தலாம் என இருக்க அவரது செல்பேசி தனித்து விடப்பட்டுப் போக சந்திக்க வாய்ப்பின்றி போனது. இது ஒரு விசயத்தை உணர்த்தியது. நான் மேற்கொண்ட திருச்சி, நாமக்கல், சேலம் ஏற்காடு மற்றும் கோயம்புத்தூர் பயணம். 

ஒரு உறவினர் வீடு எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது. நடந்தால் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுக்கும். ஊர் வந்த அன்றே வீட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்கள், நாளை வருகிறேன் என சொல்லி இருந்தேன். ஊருக்குக் கிளம்புவரை அவர்கள் வீட்டிற்குச் செல்லவே இல்லை. கிளம்பும் முதல் நாள் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன் அதுவும் இரவு ஒன்பது மணிக்கு மேல். அப்பொழுது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தது மிகவும் சுவராஸ்யமாக இருந்தது. ஒன்றைச் செய்ய நினைத்தால் அதை உடனடியாகச் செய்ய வேண்டும், மேலும் ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்ய வேண்டிய அவசியமுமில்லை எனும் விசயம் மனதில் தோன்றியது. இப்படி மற்றவர்களைத் திருப்திபடுத்த வேண்டும் எனும் எண்ணம் இல்லாமல் போகும் காரணத்தினாலேயே நான் கொஞ்சம் தனிமையாகிறேன் என கருதுகிறேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணம் காட்டியே நமது வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழ்வதற்கு நிர்பந்தப்படுத்திக் கொள்கிறோம் ஏதேனும் ஒருவகையில். 

''நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் தவறாக நினைக்கமாட்டோம்'' என உறவினர் சொல்ல ''நீங்கள் தவறாக நினைத்துவிடுவீர்களோ என நான் வரவில்லை, இந்த நேரமும் என்னால் ஒதுக்க முடியாவிட்டால் நான் வந்திருக்கவும் மாட்டேன், இப்படிச் சொல்வதால் பிறர் என்னை வேறு விதமாக நினைக்கக் கூடும், அதற்காக நான் சொல்லாவிட்டாலும் நினைப்பது மாறாதுதானே'' என்றேன். புரிந்து கொள்ளும் நபர்களிடையேப் பிரச்சினை இல்லை, மேலும் முக்கியத்துவம் கொடுத்தால் எதையும் செய்யலாம் என கருத்து பரிமாறிக்கொண்டபோது பல விசயங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் முனைப்பாக இல்லாது போயிருக்கிறேன் என எண்ணம் மேலிட்டது. 

ஏழாம் தேதி செல்ல இருந்த திருச்சிப் பயணம் பன்னிரண்டாம் தேதி மாற்றம் ஆனது. கோயம்புத்தூரில் இருக்கும் எனது சொந்த சகோதரியை எப்படியாவது சென்றுப் பார்த்துவிட்டு வரவேண்டும் எனும் தீராத ஆர்வமே இந்தப் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது. இந்த பயணத்தின் காரணமாக தினாவையும், முரளியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வேணு ஐயாவை சந்திக்க வாய்ப்பின்றி போனது. அந்தப் பயணம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வித்தியாசமான பயணமாக அமைந்தது. 

காமம் - 2

காமம் - 1 படிக்க இங்கே அழுத்தவும்.

காமம் பற்றி எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதனை எழுதுவதன் மூலம் பிறருக்கு என்ன பயன் இருந்துவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது என என்னிடம் கேட்கப்பட்டபோது என்னால் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் என்பதை இப்போதைக்கு நீங்கள் யூகம் செய்து கொள்ளுங்கள்.

பலரின் கவனமானது மறைத்து வைத்திருக்கப்படும் விசயங்களில்தான் அதிகமிருக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள், அதாவது அது என்னவாக இருக்கக்கூடும், எப்படி இருக்கக்கூடும் என்கிற ஒருவித தேடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்களில் மனம் நாட்டம் கொள்கிறது.

ஆடைகளே இல்லாமல் எத்தனை பேர் உலகில் நிர்வாணமாக வாழத் தயார் எனக் கேட்கப்பட்டால் 'அடச் சீ, இதென்ன மானங்கெட்ட நினைப்பும், கேள்வியும்' என்றே பதில் வந்து சேரும். ஆனால் சமணர்கள், சில முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனும் கதை கேட்டதுண்டு,  நிர்வாணமாக வட இந்தியாவில் வாழும் 'சித்தர்கள்' என அழைக்கப்படும் மனிதர்கள் பற்றிய விசயத்தை, நிர்வாணமாகவே இருந்திட வேண்டும் என்கிற கட்டுப்பாடோடு கூடிய கடற்கரை பகுதிகள், வீட்டினுள் நிர்வாணமாகவே வாழ்ந்து வரும் 'இயற்கைவாதிகள்' என தொலைகாட்சியில் காட்டியது உண்டு.

இப்பொழுது மானம் என்பது அங்கங்களை மறைத்து வாழ்வது எனச் சொன்னால் மருத்துவ உலகத்தை கொஞ்சம் உற்று நோக்குங்கள். மருத்துவ உலகத்தில் காமம் என்கிற வார்த்தைக்கு கொஞ்சமும் இடம் கிடையாது. இந்தியத் திருநாட்டில் எப்படி எனத் தெரியவில்லை, ஆனால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எல்லாம் ஆண்களும் மருத்துவ தாதிகளாகப் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் எவரும் எந்த நாட்டிலும் நிர்வாணமாக செல்ல முடியாது. நிர்வாணமாக விளையாட்டு அரங்குகளில் ஓடித் திரிந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாணமாக எவரேனும் வாழ நினைத்தால் அவர்கள் மனநிலை பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கக் கூடும் என்கிறார்கள். கிழிந்த ஆடையில் தங்களை மறைத்துக் கொள்ள இயலாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனை பேர். உண்ணவே உணவின்றி உலகத்தில் ஒரு பகுதி தத்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.  எனினும் விலங்குகளின் நிர்வாணம், குழந்தைகளின் நிர்வாணம் நமது கண்களுக்கு ஏன் அருவெறுப்பாகத் தெரிவதில்லை! மனதில் எழுதப்பட்டது எல்லாம் தவறுதலாகவே எழுதப்பட்டு வந்திருக்கிறது. எதை எதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டுமோ அது மட்டுமே வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் எனப்படும் நாகரீகம் விதைத்தது மனிதர்களாகிய நாம் தான். மறுப்பதற்கில்லை.

நமக்குச் சொந்தம் அல்லாத பிறிதொரு பொருளின் மீது ஆசைப்பட்டாலே அங்கே நமது மானம் தொலைந்துவிடுகிறது என்கிறது நமது முன்னோர்களின் சொல்வளம். அப்படியெனில் எத்தனை பேர் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் கேள்வி எழுமெனில் கிராமத்து வழக்கச் சொல்லாகிய 'மானங்கெட்ட பொழப்பு' என எளிதாகச் சொல்லிவிடலாம்.

காமத்துப்பால்தனை இப்பொழுதெல்லாம் படிக்கும்போது மனதில் எவ்வித குற்ற உணர்வுகளும் ஏற்படவில்லை. காமம் பற்றிய திருவள்ளுவரின் பார்வை காதலைச் சார்ந்தே இருக்கிறது எனச் சொன்னால் அங்கே காதல் என்று அவர் எழுதியிருக்கலாம், ஆனால் காமம் என்றே எழுதப்பட்டு இருக்கிறது. காமத்தினால் பயன் எதுவெனின் எனச் சொல்லும்போது ஊடல், உணர்தல், புணர்தல் என்கிறார். காதலில் ஊடல் இல்லை, புணர்தல் இல்லை, காதலில் உணர்தல் மட்டுமே உண்டு. இதைத்தான் ஒரு கவிதையில் எழுதினேன், காதல் புரிந்து கொள்ளும் என. இதைப் படித்தவர்கள் காதல் புரிந்து கொல்லும் என்றார்கள். சில திருக்குறள்களைப் பார்வைக்கு இணைக்கிறேன்.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

எத்தனை பேர்தனை வேண்டுமெனிலும் காதல் செய்யலாம், ஆனால் காமம் ஒருவரின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியெனச் சொன்னால் காதலை கொச்சைப்படுத்தியதாகவேத் தோன்றும்.

இப்பொழுது கவிதையை நினைவுபடுத்துவோம், காதலில் ஆசை கடுகளவும் இல்லை, காதலில் காமம் தர்மம் இல்லை. காதல் ஒருபோதும் கொச்சைப்படுவதில்லை. மாறாக இச்சை கொண்ட காமம் கொச்சைப்பட வைக்கிறது.

முதன்முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதில் உலகில் எவருக்கேனும் எப்பொழுதேனும்  பயன் பெறும் என்கிற நோக்கத்தில்தான் எனது எழுத்துதனை அமைத்துக் கொண்டேன், அதில் காமம் மட்டும் விதிவிலக்கா?

(தொடரும்)

Monday 1 February 2010

வித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)

பயணம் 5


எங்களுடன் நார்வே நாட்டினைச் சார்ந்த வயதான தம்பதியர்களும் இணைந்து கொண்டார்கள். துபாய் நகரைவிட்டு சவுதி அரேபியா வரை செல்லும் சாலையில் வாகனம் பயணித்தது. இருபுறங்களிலும் பாலைவனங்கள் தென்பட பாலைவன செடிகளும் ஆங்காங்கே தனித்து நின்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான பிராயணத்திற்குப் பின்னர் ஓரிடத்தில் வாகனத்தின் சக்கரங்களில் காற்றழுத்தம் குறைக்கப்பட்டது. 

பின்னர் மேடு பள்ளங்கள் நிறைந்த பாலைவனத்தில் வாகனம் பிரயாணிக்க 'சரிதான்' என நினைத்துக்கொண்டிருக்க திடீரென மேடான பகுதிக்குச் சென்று பின்னர் கீழிறங்குவதும், மேலேறுவதுமாய் வாகனத்தில் வித்தை காண்பிக்க உடல் குலுங்கியதோடு வயிறும் கலங்கியது. உற்சாகத்தில், பயத்தில் ஆ ஓ என வயதான தம்பதியர்கள் அலறிய சப்தத்தை அசைபடம் போட்டு பார்த்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களை, கடவுளைப் பிரார்த்தனை செய்ய வைத்தது அந்த வாகன விளையாட்டு. நவீன் தன் பங்குக்கு வாந்தி வருவதாக இருமுறை கூறி வாகனம் நிறுத்தப்பட்டது. 

அந்த மணலில் இறங்கி நடந்து சுற்றிப் பார்த்திட மணலில் கோலம் இட வைக்கப்பட்ட புள்ளிகளாய் செடிகள். ஒட்டகங்கள் காட்சி கண்டோம். ஓட்டுநரிடம் தினமும் வருவீர்களா எனக் கேட்டபோது ஆம் என சொன்னவர், சில தினங்கள் மழை பெய்து இருந்ததால் நேற்றைய தினம் வாகனம் செலுத்த மிகவும் சிரமப்பட்டதாக வாகன ஓட்டி சொன்னார். மேலும் எங்கள் தொழில் இது என்பதால் சிரமம் இருப்பினும் செய்துதான் ஆகவேண்டும் என அவர் சொன்னபோது ஏதோ மனதில் இடைஞ்சல் செய்தது. இன்று அந்தப் பிரச்சினை இல்லை எனச் சிரித்துக் கொண்டார். 

பின்னர் சிறப்பு விருந்தினர்களாக ஓரிடம் சென்றோம். அது பாலைவனத்திலேயே அமைந்து இருந்தது. பலர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. உணவு மிகவும் சிறப்பாக இருந்தது. சைவம் அசைவம் என பிரித்து வைத்திருந்த விதமும், ஆண்கள், பெண்கள் என தனித்தனிப் பிரிவாக வைத்திருந்த விதமும் சிறப்பாகவே இருந்தது. பின்னர் நடன நிகழ்ச்சியை ஐம்பது வயதுமிக்க இளைஞியும், 25 வயது மிக்க இளைஞரும் ஆட அனைவரும் பார்வையாளர்களாக சென்று இருந்தோம் என்றால் தான் அது சரியாகும். நடனக் கலைஞர்களுடன் ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்டனர் பலர். சிலர் மேடையேறி ஆடவும் செய்தனர். 

இந்நிகழ்வுகளுக்கு முன்னர் ஒட்டக சவாரிதனை செய்ய விருப்பமில்லாமல் பாவமாக ஒட்டகத்தைக் கண்டுவிட்டு வந்தோம். சந்தோசமாக பலர் சவாரி செய்து மகிழ்ந்தார்கள். ஒட்டகமும் எங்கள் தொழில் இது என சொல்லி இருக்குமோ?! 

இரவு ஹோட்டல் வந்து சேர வழக்கம்போல பத்து மணி ஆகியிருந்தது. வழக்கம்போல வசந்தபவன். மறுநாள் காலையில் எழுந்து ஜுமிரா மால் சென்றோம். அது ஒரு தனி நகரமாக நிர்மாணிக்கப்பட்டதாக சொன்னார்கள். உள்ளே பல கலைபொருட்கள் வாங்கும்படியாய் இருந்தது. லதாவிடம் பேசினேன் அபுதாபிக்கு வர இயலாமல் இருப்பதாக. லதாவோ அவரது கணவர் நேற்று துபாய் வந்ததாகவும், தொடர்பு கொள்ள வசதியில்லாததால் அழைக்கமுடியவில்லை எனவும் கூறினார். பின்னர் தானே ஏர்போர்ட் வருவதாக சொல்ல நான் வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

அங்கிருந்து நேராக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். அங்கே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தோம். பின்னர் வைரமாளிகை சென்றோம். டிராகன் மால் சகோதரி சுந்தராவின் வீட்டில் அருகில் இருப்பதாக சொல்லி இருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று பின்னர் அங்கே செல்லலாம் என அவர் சொல்லி இருக்க எங்களுக்கோ பனிச்சறுக்கு விளையாட்டில் நேரம் ஆகி கொண்டிருக்க நேராக டிராகன் மால் சென்றோம். சீனா வசம் போல டிராகன் மால்!

அங்கிருந்து சகோதரியின் வீடு பக்கம் என நினைத்து டாக்ஸியில் செல்ல சகோதரியின் வீட்டினைக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறினோம். சகோதரி வழி சொல்லியும் டாக்ஸி டிரைவருக்குப் புரியவில்லை, எனக்கு பாதை கொஞ்சமும் தெரியவில்லை. கிருஷ்சிவா அவர்களை முன்னதாக அழைத்தேன், அவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார் என கூறினார். நல்லவேளை அவரைக் காத்திருக்க வைக்கவில்லை எனத் தோணியது. நேரத்தை, வீடு கண்டுபிடிக்கிறேன் என டாக்ஸி கொன்று கொண்டிருந்தது. ஆனால் ஆச்சரியம் இருபது நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் கொண்டு வந்து சேர்த்தார் அவர். வந்து கொண்டிருந்தபோதே புவனாவின் கணவர் எங்களுக்காகக் காத்திருப்பதாக புவனா தகவல் சொல்ல எனக்கோ 'அடடா' என ஆகிவிட்டது. 

பின்னர் புவனாவின் கணவரை ஹோட்டலில் சந்தித்துப் பேசினோம். மிகவும் நன்றாக பேசினார். பேருந்தில் தான் ஷார்ஜா செல்ல வேண்டும் எனவும் ஒரு மணி நேரம் மேல் ஆகும் என அறிந்தபோது வருத்தம் மேலிட்டாலும் அவரைப் பார்த்துப் பேசியதில் அளவில்லாத சந்தோசம் நிறைந்து இருந்தது. பின்னர் சகோதரி தனது குடும்பத்தோடு எங்களை வழியனுப்ப வந்திருந்தார். அன்று அவரின் அன்பால் 'சரவண பவன்' சென்று உணவருந்தினோம். அருமையான சொந்தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய துபாய் பயணம் ஒரு வித்தியாசமான பயணமாகவே இருந்தது. வியாபார நுணுக்கங்களைப் பற்றி அன்றும் பேசிக்கொண்டிருந்தோம், பல நல்ல விசயங்களை சகோதரியின் கணவர் சொல்லிக் கொடுத்தார். போராடி வாழ்வில் வெற்றி கண்டு கொண்டிருக்கும் ஒரு மாமனிதரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டேன். 

துபாயில் இன்னும் சிலநாட்கள் தங்கி இருக்கலாம் எனும் ஏக்கத்தை துபாய் நகரமும், அங்கே நான் கண்ட அன்பு உறவுகளும் மனதில் விதைத்ததை வாழ்வில் ஒரு பெரிய விசயமாகத்தான் கருதுகிறேன். என் மகன் என்னிடம் கேட்டது 'இங்கே யாரும் நம்மிடம் பணம் கேட்டு நிற்கவில்லையே, ஏன்?' எனக்கு மிகவும் யோசனையாகத்தான் இருந்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ? ஆனால் வாகன ஓட்டி சொன்ன ஒரு விசயம் சற்று அதிர்ச்சியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 



''துபாயில் உழைக்கும் வர்க்கத்தினர்க்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை, உழைக்கும் வரை அவர்களது உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை ஓட விரட்டிவிடும், எதையும் தந்து அழகுப் பார்க்காது. எப்பொழுது உழைக்கும் வர்க்கத்தினர்க்கு ஒரு நாடு மதிப்பைத் தரவில்லையோ அந்த நாடு ஒரு காலத்தில் தனது மொத்தச் செல்வத்தையும் இழந்து அனாதையாகிவிடும். அப்படித்தான் இப்போது 'அல்லா' இந்த துபாயினை தண்டித்துக் கொண்டிருக்கிறார், இனியாவது துபாய் திருந்தட்டும்'' என அந்த வாகன ஓட்டி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதற்கெடுத்தாலும் இறைவன் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என மனிதர்கள் நினைக்கிறார்கள்! 

''துபாயில் மட்டுமே சட்டத்தில் மற்ற அரபு எமிரேட்ஸ் நாடுகளைத் தவிர விதிவிலக்காக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்கள் இங்கே அனுமதிக்கப்படுகிறது. குடித்துக் கொண்டு ஒருவர் வாகனத்தை ஓட்டும்போது பிற உயிர்கள் பறிக்கப்படுகிறது என அறிந்தும் ஏன் ஒருவரை குடிக்க அனுமதிக்க வேண்டும், குடிப்பதைத் தடைசெய்து இருக்கும் மற்ற அரபு நாடுகள் போல இங்கும் தடை செய்ய வேண்டும்'' என சொன்ன வாகன ஓட்டி அடிக்கடி புகைபிடித்துக் கொண்டிருந்தது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. எப்படி மனிதர்கள் மட்டும் தங்களது செயல்களை மிகவும் அருமையாக பிறருக்கு எதுவும் தெரியாதது போல நியாயப்படுத்திவிடுகிறார்கள்! 



இனி சென்னை! 

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)

பயணம் 4
துபாய் மால் செல்வதா, மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்வதா என டாக்ஸி டிரைவரிடம் கேட்க அவர் மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்லுங்கள் என அறிவுரை சொல்லி அங்கேயே வாகனத்தைச் செலுத்தினார். அங்கு செல்லும் வழியில்தான் துபாய் மால் தெரிந்தது. வாகனத்தைத் திருப்பச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருக்க இருக்கட்டும் என ஒரே முடிவாக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். வாகன ஓட்டி அரபு மொழியில் அவ்வப்போது பிரார்த்தனைச் சொல்லிக் கொண்டே ஓட்டினார். ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முன் தினம் மழை பெய்ததாலோ என்னவோ வியர்க்கவும் இல்லை, வெயிலும் அதிகம் இல்லை. துபாய் மிகவும் அருமையாக இருந்தது. மழை விழாமல் இருக்க பயணம் சிறப்பாக இருந்தது. மால் ஆஃப் எமிரேட்ஸ் மிகவும் அற்புதமாக இருந்தது. அரபு பெண்களின் கைகளில் விலையுயர்ந்த பைகள் தென்பட்டன. பிரிட்டனை அலங்கரிப்பது போன்ற ஒரு தெருவும் அங்கே இருந்தது. இலண்டனில் பார்த்திருந்ததை விட அங்கே பார்த்த கடைகள் அதிகமே. ஒரு அரபு பெண் கடைக்குள் நுழைந்துவிட்டால் பொருள் வாங்காமல் வெளியே வரமாட்டார் என்பது எழுதப்படாத விதி போல! 

சீரான ஒழுங்கமைப்பு மனதை கொள்ளை கொண்டது. அங்கேயே பனி சறுக்கு விளையாட்டுத் திடல் அமைத்து இருந்தார்கள். நேரமின்மை காரணமாக அன்று மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது. 

இரவு நெருங்கிக் கொண்டிருக்க அங்கிருந்து நேராக கோல்ட் சவுக் எனும் தங்க ஊருக்குள் சென்றோம். அங்கே இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பல கடைகள் வைத்து இருந்தார்கள். விலை ஊர் ஊருக்கு வித்தியாசம் இல்லை, ஆனால் தங்கம் துபாயில் வித்தியாசமாக நன்றாக இருக்கும் என சொன்னார்கள். தங்கம், வைரம் வாங்கப் போய் விலைபார்த்து விலைமதிக்க முடியாத முத்துமாலை ஒன்றை வாங்கிக் கொண்டு ஹோட்டல் திரும்பினோம். 

சாப்பிட என்ன செய்யலாம் என, இரவு ஒன்பதரை மணி ஆகிவிட, யோசிக்கையில் வசந்த பவன் நினைவுக்கு வந்தது. வழிகேட்டு வழிமாறாது வசந்தபவன் சென்றடைந்தோம். இந்த ஹோட்டலிலும் தங்கலாம் என சகோதரி யோசனை தந்து இருந்தார்கள். ஹோட்டலைப் பார்த்ததும் நல்ல வேளை என மனதுக்குப் பட்டது. முகப்பு ஒருமாதிரியாக இருந்தாலும் சாப்பிடும் முதல் மாடி மிகவும் நன்றாக இருந்தது.

தோசை இட்லி என மிகவும் அருமையாக இருந்தது. உண்டு களித்தோம் பின்னர் ஹோட்டலுக்கு வந்து வரவேற்பறையில் பன்னிரண்டு மணிக்கும் மேலாக அமர்ந்திருந்து பேசிக் களித்திருந்தோம். 

அன்றுதான் மாலையில், ஏழு மணி இருக்கும், கிருஷ்சிவா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன் என நினைக்கிறேன். பரஞ்சோதியார் கிருஷ்சிவா எண்ணினைத் தனிமடலை முன்னரே எனக்குத் தந்து இருந்தார், பரஞ்சோதியாரிடம் பேசியபோதும் இவ்விசயத்தை நினைவுபடுத்தினார். நான் கிருஷ்சிவா அவர்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவல் கொண்டேன், அவரும் ஆவல் கொண்டார். அவர் தங்கியிருக்கும் இடமும் நான் இருந்த ஹோட்டலும் அதிக தூரம் இல்லை. ஆனால் நான் அங்கே இருந்தவரை அவரைச் சந்திக்க வாய்ப்பின்றி போனது, வாய்ப்பினை ஏற்படுத்தாமல் விட்டது வருத்தம் அளிக்கத்தான் செய்தது. துபாய் விட்டு கிளம்பும்வரை ஏன் அவரைப் பார்க்காமல் விட்டுவிட்டோம் என மனவருத்தம் மேலிட்டது எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், நல்ல உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர் என பழகாமலேயே மனதில் அவரைப் பற்றி ஒரு எண்ணம் உதித்தது. 

எமிரேட்ஸ் மால் செல்லும் முன்னர் அடுத்தநாள் திட்டம் குறித்து ஹோட்டலில் பேசியிருந்தோம். அடுத்த தினம் துபாய் ஊர்தனை டாக்ஸியில் சுற்றினோம். ஒரு இடத்தில் நான் புகைப்படம் பிடிக்க, அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாட்டி அவரைத்தான் புகைப்படம் பிடிக்கிறேன் என நினைத்து அரபு மொழியில் திட்டுவது தெரிந்தது. கிராமம் போன்று இருந்தது அப்பகுதி. கட்டிடங்கள் என பழையதாய் இருந்தது. 

ஒரு மசூதியில் 11 மணிக்கு முன்னதாக சென்றால் அனைத்து மதத்தினரும் செல்லலாம் என வாகன ஓட்டி சொல்ல மணியோ 11.30 ஆகி இருந்தது. வெறிச்சோடி வெயிலில் வாடிய கடற்கரையும் கண்டேன். நதியில் கால்கள் நனைத்தோம். பின்னர் அழகிய கலைகள் பொதிந்த இடத்தையும் கண்டோம். கடலுக்குள் அமைத்த பாதை, பிரும்மாண்டமான ஹோட்டல் என கண்டோம். பனைமர வடிவில் அமைக்கப்பட்ட நகரம் என பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கட்டிடங்களாலேயே தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது துபாய். மதிய உணவினை வசந்தபவனிலேயே உண்டு களித்தோம். 

துபாயில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் பாலைவன பாய்ச்சல்தனை வாகனத்தில் செய்வதற்கு ஆயத்தமானோம். 

Sunday 31 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)

பயணம் - 3

இரவு நன்றாக உறங்கினோம். காலை எட்டு மணி இருக்கும் என நினைக்கிறேன், தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என மறுமுனையில் கேட்க புவனா என சொல்லி சகோதரி சுந்தராவின் குரலை தவறாக புரிந்து கொண்டேன். 

சிறிது நேரம் பின்னர் சகோதரி சுந்தராவின் கணவர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வழியில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு சென்றோம். அடுத்தமுறை துபாய் வரும்போது வீட்டில்தான் தங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டது மகிழ்வைத் தந்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதி பர் துபாய் என அழைக்கப்படுகிறது. மற்றொரு பகுதி டேரா துபாய் என அழைக்கப்படுகிறது. சகோதரியின் வீடு ஹோட்டலில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. முன்னர் அவர்கள் இருந்த வீடு ஹோட்டலில் இருந்து வெகு அருகில் இருந்து இருக்கிறது. 

சகோதரியின் வீட்டில் புவனா, மஞ்சு, குழந்தைகள் பட்டாளம் என சின்ன திருவிழா போன்று கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் சிரமப்பட்டுதான் வந்து சேர்ந்தார்கள் என்பதை அறிந்தேன். சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். 



சகோதரியின் கணவருடன் வியாபார விசயங்கள், துபாய் வாழ்க்கை முறை என பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரைபடம் ஒன்று போட்டுத் தந்தார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே எல்லாம் இருப்பதாக வரைபடத்தில் காட்டினார். பின்னர் சகோதரியின் வீட்டினைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். பாரதியும், நந்தினியும் வீடுதனை சுற்றி காண்பித்தார்கள், நன்றாக பேசினார்கள். விஜய் நவீனுடன் விளையாடுவதிலேயே நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார். 

மிகவும் அழகிய வீடு. ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்த அமர்ந்தோம். பிரியாணி, சிக்கன், ரைதா, சப்பாத்தி, சாதம், இரசம், தயிர்ச்சாதம், வெஞ்சனம், ஊறுகாய், பாயாசம் என மிகவும் பிரமாதமாக இருந்தது. பொதுவாக அதிகமாகச் சாப்பிடும் நான் அன்று சற்று குறைவாகவே சாப்பிட்டு முடித்துக்கொண்டேன். நிறைய சாப்பிட்டு இருக்கலாம் என மனது சொன்னது. 

கிருஷ்ண பவன் என ஒரு உணவுக் கடை இருப்பதாகவும் அங்கே வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்கமாட்டார்கள் என சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. புவனா செய்த சமையலில் வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்காமல் செய்து இருந்தார்கள். செய்த விதமோ வித்தியாசம், ஆனால் மிகவும் ருசியாகத்தான் இருந்தது. அக்ஷயா அனுஷ்யா, நித்யாஸ்ரீ என மழலைகளின் பேச்சும் சுவாரஸ்யமாக இருந்தது. 

சாப்பிட்டு முடித்ததும் இலண்டன் வாழ்க்கை முறை பற்றி பேசினோம். வியாபார நுணுக்கம் எனக்குத் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்த நான், எனக்குப் பிரச்சினையே பேசுவதுதான் என சொன்னேன். அதற்கு சகோதரியின் கணவர் 'அரசியல்வாதி' மாதிரி பேசறீங்க என சொன்னார். அடடா நம்மைப் பற்றி அற்புதமாக கண்டுபிடித்துவிட்டாரே, இனிமேல் அடக்கம் கொள்ள வேண்டியதுதான் என நினைத்த சமயத்தில் புவனா பரஞ்சோதியாருக்கு அழைப்பு விடுத்தார். பரஞ்சோதியாரிடம் பல நிமிடங்கள் பேசினேன். ஊரில் சென்று வாழ வேண்டும் என எண்ணம் பரஞ்சோதியாரிடம் நிலை கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. 

பின்னர் புகைப்படங்கள், அசைபடங்கள் எடுத்துக்கொண்டோம். மிகவும் அழகான சிறப்பான பரிசுகள் தந்தார்கள். பின்னர் கேட்டபோது, புவனா அந்த அழகிய பரிசுகளை ஷார்ஜாவில் வாங்கியதாக சொன்னார். மிகவும் சிறப்பான உபசரிப்பும், அன்பும், பரிசுகளும் என சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அற்புதமான சொந்த உறவுகளுடன் உறவாடிய அந்த தருணங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். 

சகோதரியின் கணவர் எங்களை ஹோட்டலுக்கு திரும்ப வந்து விட்டுவிட்டுச் சென்றார்கள். அன்புடன் அவர் பழகியது, பேசியது பெரும் ஆனந்தத்தைத் தந்து இருந்தது. 

சில நிமிடங்களே ஹோட்டலில் இருந்த நாங்கள் அடுத்து எங்கு செல்லலாம் என ஒரு டாக்ஸியைப் பிடித்தோம். 



(தொடரும்)

Saturday 30 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)

பயணம் - 2
அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு துபாய் பயணத்திற்குத் தயாரானோம். பொதுவாக இங்கு யாராவது ஒருவர், ஊருக்கு செல்பவரை விமானநிலையம் சென்று அனுப்பி வைத்து வருவதும், அழைப்பதும்தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அன்று வேலை நாள் ஆனதால் பலருக்கு முடியாமல் இருந்தது. அப்பொழுதுதான் கெளரிபாலன் தொடர்பு கொண்டார். ''எங்கள் வீடு வரை உங்கள் வாகனத்தில் வாருங்கள், விமான நிலையம் ஐந்து நிமிடங்கள் தான், நான் ஏற்பாடு செய்கிறேன்'' என அவர் சொன்னபோது 'அட' என மனதுக்குள் தோன்றியது என்னவோ உண்மை. 

ஆனால் உறவினர் ஒருவருக்கு இரவு வேலை என்பதால் அவர் விமான நிலையம் வருவதாக சொல்ல கெளரிபாலனின் உதவியை நாட இயலாது போனது. துபாய் எப்படி இருக்குமோ? அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு சென்று விமானம் தரையிறங்குகிறது, எப்படி ஹோட்டல் சென்று அடைவோம் என நினைக்கையில் சற்று பயமாகத்தான் இருந்தது. சகோதரி சுந்தராவும், புவனாவும் விமானநிலையம் வருவதாக சொன்னார்கள், நான் தான் 'நள்ளிரவு என்பதால் வர வேண்டாம், நாங்கள் ஹோட்டல் சென்று விட்டு காலையில் சந்திப்போம்' என சொல்லி இருந்தேன். 

துபாய்க்கு கிளம்பும் சில நாட்கள் முன்னர் புவனா ஒரு திட்டம் பற்றி கூறினார். அதாவது புவனாவும், அவரது தோழி மஞ்சுவும், சுந்தரா சகோதரி வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் அங்கே சந்திக்கலாம் எனவும் அதனால் எனக்கு சிரமம் இருக்காது என சொன்னார். நான் உடனே சரி என சொன்னேன். அவர்களுக்கு சிரமம் இருக்கும் என கொஞ்சம் கூட யோசனை வரவில்லை!!! நான் எதிர்பார்த்த துபாய் வேறு! 

இங்கே நினைத்தவுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டோ, பேருந்திலோ, இரயிலிலோ சென்று பழக்கப்பட்டுப் போனதால் அங்கேயும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் 15-25 நிமிட பயணம் தான் என அறிந்து இருந்தேன், அதாவது போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தால்!

எனது மனைவிக்கும், மகனுக்கும் துபாய்தனை பார்க்க அதீத ஆர்வம் இருந்தது. ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். 

எமிரேட்ஸ் விமானத்தில் தான் பயணம் செய்தோம். நள்ளிரவு 12 மணியை துபாய் அடைந்தபோது விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமிட ஆரம்பித்தது. தரையிறங்க வாய்ப்பில்லாமல், மழை பெய்வதாக விமானி அறிவித்துக் கொண்டே இருந்தார். சுற்றிய சுற்றில் என் மகன் நவீனுக்கு வாந்தி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்ட பின்னர் தரையிறங்கியபோது மணி 1.20 ஆகிவிட்டது. 

யாரிடம் கேட்டு ஹோட்டல் செல்வது என எண்ணிக்கொண்டே பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தில் நடந்து சென்றேன். அற்புதமான கட்டிட அமைப்பு. மிகவும் அழகாக இருந்தது. சிலமுறை துபாய் வழியே பயணித்து இருந்தாலும் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிச் செல்ல நடந்தது இதுவே முதல் முறையாதலால் அற்புதம்தனை பார்க்க முடிந்தது.

விமான நிலையம்விட்டு வெளியே வர ஆச்சரியமூட்டும் வகையில் வரிசையாக 'டாக்ஸி' அணிவகுத்துக் கொண்டிருந்தது. அதை ஒழுங்குபடுத்தியும், வரிசையாக வந்த பயணிகளை 'டாக்ஸி' யில் ஏற்றி அனுப்பிய விதம் மிகவும் அருமை. 'டாக்ஸி' யில் நாங்கள் பதினைந்து நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். டாக்ஸி ஓட்டியவர் ஆங்கிலத்தில் பேசவில்லை, பொதுவாக பேசவே இல்லை. நான் காட்டிய முகவரி பார்த்தார், ஹோட்டலில் வந்து இறக்கினார். உரிய கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டுக் கிளம்பினார். ஹோட்டலில் ஆரஞ்சு பழச்சாறு தந்து வரவேற்றார்கள். வித்தியாசமாகத்தான் இருந்தது!

ஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்ததும் 'அப்பாடா' என இருந்தது. லதா குறிப்பிட்டபடி மிகவும் பிரமாதமான ஹோட்டலும் இல்லை, அதே வேளையில் மோசமானதும் இல்லை. துபாயில் முன் தினம் தான் நல்ல மழை எனவும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பப்பட்டதாகவும் பின்னர் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அறிந்தேன். வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்!!!



(தொடரும்)

Friday 29 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)

பயணம் - 1


இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் அதிகரிக்க ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் வாய்ப்பினை திடீரென ஜனவரியில் முடிவு செய்தோம். ஆனால் இம்முறை துபாய் சென்று மூன்று நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். 

துபாய்க்குச் செல்ல பல வருடங்கள் திட்டம் தீட்டினாலும் இம்முறை வாய்ப்பு அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் எப்பொழுதும் இரண்டு வாரங்களே பள்ளி விடுமுறை கிடைக்கும் என் மகனுக்கு இம்முறை மூன்று வாரங்கள் விடுமுறையாக அமைந்தது இந்த துபாய்-இந்தியா பயணத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. 



துபாய் செல்ல முடிவெடுத்ததும் சகோதரி சுந்தராவினைத் தொடர்பு கொண்டேன். விடுதியில் தங்க இருக்கிறோம் என சொன்னதும் ''வீட்டில் வந்து தங்கலாமே'' என அன்பு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அன்பு அழைப்பினை மறுக்க வேண்டியதாகிவிட்டது. அவரிடம் சில விடுதிகள் பற்றி விசாரித்தேன், அவரும் விபரங்கள் சொன்னார். திடீரென ஒரு நாள் இணையத்தின் மூலம் விடுதிகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்க ''லீ மெரிடியன்'' ஹோட்டல் பார்த்ததும் உடனே முன்பதிவு செய்தோம். விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது மட்டுமில்லாமல் விலை குறைவாக இருந்ததுதான் காரணம்.

இந்த ஹோட்டலைச் சுற்றி என்ன இருக்கிறது எனத் தேடினால் 'வசந்த பவன்' அருகில் இருப்பது பற்றி குறிப்பிட்டு இருந்தது. மனம் உற்சாகமானது. பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது சைவச் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது நினைவில் வந்தது. 

அந்த ஹோட்டலில் தங்கிச் சென்றவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் எனத் தேடிப் படித்ததில் பலர் 'நல்ல ஹோட்டல்' என்றே எழுதி இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் 'இப்படியொரு ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தது பெரும் தவறு எனவும் அங்கு சென்ற மறு தினமே வேறு ஹோட்டல் மாற்றியதாகவும் எழுதி இருந்தார், அதைப் படித்ததும் 'அடடா அவசரப்பட்டு விட்டோமோ' என எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க இயலவில்லை. 'நன்றாகவே இருக்கும்' என நம்பிக்கைக் கொண்டோம். 

பயணம் முடிவாக புவனாவிடமும் விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். ஷார்ஜா கட்டாயம் வரவேண்டும் என அழைப்பும் விடுத்தார். அரைமணி நேரம் தான் என சொன்னதும் அரைநாள் செலவழிக்க வேண்டும் என சொன்னார். இப்படியாக பயணத்திட்டம் தயார் ஆக பத்மஜா மற்றும் மோகனைச் சந்திக்கவும் எண்ணம் ஏற்பட்டது. பஹ்ரைன் துபாயிலிருந்து சற்று தொலைவாக இருப்பதால் பின்னர் வேண்டாம் என முடிவு எடுத்தோம். 

பத்மஜாவின் தோழி லதா அபுதாபியில் இடம் மாற்றலாகி இருந்தார். எனவே அபுதாபி செல்லலாம் என முடிவுடன் அவரையும் தொடர்பு கொண்டேன். அவரும் துபாய் பற்றி ஒரு கட்டுரையே எழுதி அனுப்பி விட்டார். 

இப்படியாக பயணத் திட்டம் தயாராகிக் கொண்டிருக்க நாட்களும் பறந்து கொண்டிருந்தது. 



(தொடரும்)

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 6


குரூப் (பிரிவு)  1 குரூப் 2 இது s வகையைச் சார்ந்தது. ஹைட்ரஜனும் s வகையில் இருந்தாலும் அது தனித்து காட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது. குரூப் 3 இல் இருந்து குரூப் 7 வரைக்கும் P வகை எனப்படுகிறது. இடைப்பட்ட வகை d எனச் சொல்வார்கள். லாந்தனைடுகள், ஆக்டினைடுகள் எல்லாம் f வகை. ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பவை உலோகங்கள், பச்சை வண்ணத்தில் இருப்ப்வை உலோகங்கள் அல்லாதவை, ம்ஞ்சளும், ஆரஞ்சு வண்ணத்திற்கு இடைப்பட்டவை உலோகங்களே, ஆனால் அவை மாற்றம் கொள்ளக்கூடியவை. 

அது என்ன வகை அப்படின்னு பார்த்தா முன்ன சொன்னமே, அதுபோல எலக்ட்ரான்கள் இங்க இங்க தான் போய் நிற்கும்னும், அதன்படி இவையெல்லாம் அமைஞ்சிருக்கு. உதாரணமாக சோடியம் எடுத்துக் கொள்வோம் அதனுடைய அணு எண் 11. இப்போ நாம சொன்ன விதிப்படி முதல் மாடி அதாவது K ல s அறையில 2 எலக்ட்ரான்கள் L ல s மற்றும் d ல சேர்த்து 8 ஆக மொத்தம் 10 எலக்ட்ரான்கள். இப்போ பதினொன்வாவது எலக்ட்ரான் M ல s அறையில போய் ஒரு எலக்ட்ரானா போய் நிற்கும் அதுதான் s வகையிகல சோடியம் முதல் குரூப். 

அட்டவணையில் கீழ்நோக்கி 2, 3 ,4 எழுதி இருக்கு இல்லையா அதன்படி சோடியம் 3 வது வரிசையில வரும் காரணம் K, L, ம என்பதில் M மூணாவது மாடி அதுல இருக்கிற அறையில தான் இந்த சோடியத்தோட கடைசி எலக்ட்ரான் இருக்கு. இதன்படிதான் எல்லா தனிமங்களும் இப்படி வரிசைப்படுத்தப்பட்டன. 

அணு சொல்றோம், தனிமம் சொல்றோம் என்ன வித்தியாசம்னா, ஒரு தனிமத்தில் ஒரே ஒரு அணுவானது பல அணுக்களாய் சேர்ந்து இருக்கும் அதனால்தான் அது தனிமம். வெவ்வேறு அணுக்கள் சேர்ந்து இருந்தால் அது மூலக்கூறு. பொதுவாக ஹைட்ரஜன், குளோரின், நைட்ரஜன் எல்லாம் இரு அணுக்களாக அதாவது இரண்டு ஹைட்ரஜன் சேர்ந்து இருக்கும் இதனை மூலக்கூறுனு சொல்வாங்க.

இந்த அட்டவணை புரிந்துவிட்டால் அதனுடைய பயன் எல்லாம் எளிதாகிவிடும். எலக்ட்ரான்கள் நிரம்பும் விதம் சக்தியின் அடிப்படையில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. உதாரணமாக 3d அறை (ஆர்பிட்டால்) 4s அறையை விட சக்தி அதிகமானது ஆகவே எலக்ட்ரான்கள் 3d அறைக்குச் செல்லாமல் 4s அறையினை முதலில் நிரப்புகின்றன. இது மிகவும் முரண்பாடான விசயம் என நினைக்க வேண்டாம். எல்லாம் வகுக்கப்பட்டது, இப்படித்தான் என சொல்லப்பட்டது. 

எலக்ட்ரான்கள் நிரம்பும் வரிசையை எழுதி விடுகிறேன். 

1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 

இதனை கொண்டுதான் ஒவ்வொரு அணுவும் நிர்ணயிக்கப்பட்டு அதனதன் இடத்தில் அமர்ந்துள்ளது. p பின்னர் s வரும்படி அமைந்து இருப்பது ஒரு சிறப்பு, எளிதாக மனதில் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்குள் கணக்கு போட்டு பாருங்கள் எப்படி எந்த எந்த அணு எப்படி அமர்ந்திருக்கிறது என.

எப்படியோ எலக்ட்ரான்கள் அந்த வரிசைப்படி நிரம்பிவிடுகின்றன. தனக்கென பாதை வகுத்துக் கொண்டு வாழப்பழகிக் கொண்டுவிட்டன. தனிமங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. பதினைந்துக்கும் குறைவான தனிமங்கள் மட்டுமே நமது மூதாதையர்களுக்கு தெரிந்து இருந்து இருக்கிறது. மற்றதெல்லாம் பின்னால் வந்த அறிஞர்களால் கண்டுபிடித்துச் சொல்லப்பட்டது. 

உலோகங்கள், உலோகங்கள் அற்றவை, வாயுக்கள் என ஒவ்வொன்றும் வரிசைப் படுத்தப்பட்டு அதன் அதனுடைய செயல்பாடுகளை பிரித்து வைத்து இன்றைய வேதியியல் நம்முடன் இரண்டற கலந்துவிட்டது. அறிவியலை தனியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் வைத்தே அதனுடைய செயல்முறைகள் விவரிக்கப்பட்டு விளக்கப்பட்டு வந்து இருக்கின்றன. 

நியூட்டன் சொன்னது போல் ஒரு விசயத்தைக் குறித்து அவருக்கு இருந்த அளவிலா ஆர்வம் ஒன்றுதான் அவரை உலகத்தில் மறக்க முடியாத மாபெரும் மனிதராக நிலைநாட்டியது அதற்கான அங்கீகாரமும் கிடைத்தது என்பது எவரும் மறக்க முடியாது. ஆர்வம் உள்ள மனிதர்கள் அதனை செயல்படுத்தி அங்கீகாரம் பெரும்போது சாதனையாளர்களாக கருதப்படுகிறார்கள். நாமும் அந்த பட்டியலில் விரைவில் இணையத் தயாராவோம். 

(தொடரும்)

மற்ற பாதைகள் காண பாதை 5தனை காணவும். 

Wednesday 27 January 2010

காமம் - 1

1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எழுதியதை ஒளித்து வைத்து இருப்பேனோ எனும் ஒரு தேடல் உங்களுக்குள் இப்போதைக்கு எழுந்து இருக்கலாம்.

'காமம்' என்ற சொல் மிகவும் அருவெறுப்பாகவேத் தெரிகிறது. காமம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் எனும் ஒரு தேடல் என்னுள் இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதேனும் தேவையெனின் நூலகங்களுக்கோ, அறிவிற்சிறந்தவர்களைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு செளகரியமாக இருக்கிறது.

காமம் என்ற சொல்லுக்கு ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல் எனவும்  காமம் என்பதின் விளக்கம் காம சூத்திரத்தில்

'ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'

எனும் சுலோகம் மூலம் சொல்லப்பட்டு அதற்கு விளக்கமாக காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது கண்டு அதிசயமாக இருந்தது.

இந்த காமசூத்திரத்தை வாத்சயானர் எனும் முனிவர் எழுதினார் என பலமுறைக் கேள்விபட்டதுண்டு. அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என இதுவரை படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. ஆனால் இந்த காமசூத்திரம் பலரால் பின்னர் தொகுத்து எழுதப்பட்டது என தமிழ்விக்கிபீடியா சொல்கிறது.

அதுவும் காமசூத்திரத்தின் முதல் வரிகள் 'தர்மார்த்த காமேப்யோ நம' அதாவது 'அறம் பொருள் இன்பமே போற்றி' எனவும் சொல்கிறதாம். அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் ஒவ்வொரு பருவகாலத்திலும் என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வதாகவும் ஒரு சுலோகம் அமைந்திருக்கிறது.

அந்த சுலோகத்தின் விளக்கமாக குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள் எனவும், இளமைப் பருவத்தில் காமம் எனவும் முதுமைப்பருவத்தில் தர்மம் செய்யவும் அதனால் மோட்சம் கிட்டும் என்பது போல் எழுதப்பட்டு இருக்கிறது.

ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

காமம் என்றாலே தலைதெறிக்க ஓடிய காலங்களும், காமம் பற்றி பேசினால் அவர்கள் தவறானவர்கள் எனும் எண்ணம் கொண்ட அந்த சிறு வயது முதலான இளமைப் பருவ காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு அறிவியல் நோக்கோடுப் பார்க்க வேண்டும் எனும் நிர்பந்தமோ, சொந்த அறிவோ இருந்திருக்கவில்லை.

திருக்குறளில் எழுதப்பட்ட காமத்துப்பால் பக்கம் எட்டி கூடப் பார்ப்பதற்கு அத்தனை அசெளகரியமாக இருந்தது. அசிங்கமான வார்த்தைகளாகக் எனக்குக் காட்டப்பட்டவைகள் என எதையுமே எப்போதும் பிரயோகம் செய்தது இல்லை. அப்படி பேசினால் நான் மோசமானவன் எனும் எண்ணம் என்னுள் ஆழ வேரூன்றியிருந்தது. எழுத்து நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு, 'கொச்சையான வார்த்தைகள் எல்லாம் அவற்றை கொச்சையாகப் பார்ப்பதில்தான் இருக்கிறது என பலர் உரக்கச் சொல்லிக்கொள்வதோடு எழுத்திலும் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருப்பாவை எழுதிய ஆண்டாள் எழுதவில்லையா எனவும் கேட்கிறார்கள். இலக்கியத்தரத்தோடு ஒரு விசயத்தை பார்க்க வேண்டும், வக்கிர புத்தியோடு பார்த்தால் எல்லாம் வக்கிரமாகத்தான் தெரியும் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருந்துவிடட்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நமது கலாச்சாரத்திற்கு அவையெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாகவே இன்றுவரை எனக்குத் தெரிகிறது. இலைமறை காயாகவே எல்லாம் உணர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாகவே கருதப்பட்டு வருகிறது. இனப்பெருக்கம் பற்றிய விசயங்களை பாடம் சொல்லித்தர  ஒருவித தயக்கமாகத்தான் இருக்கிறது. நிற்க.

'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' எனும் கவிதையை மனதில் பதிவு செய்தபோது 'மோகம்' என்றால் பெண் மோகம் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். மோகம் என்பதற்கான அர்த்தங்கள் நன்றாக தமிழ் தெரிந்ததும் பலவகையில் புரிந்து  போனது.

காமம் சம்பந்தமான விசயங்கள் எதுவெனினும் கெட்டவர்கள் செய்யக்கூடியது என்றும் 'நீலப்படம்' பார்ப்பவர்கள் அயோக்கியர்கள், அங்க அவயங்களை வெளிக்காட்டும் எந்த ஒரு இதழ்களையும் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்றெல்லாம் மனதில் சித்திரம் வரைந்து வைத்திருந்தேன்.

ஏன் அப்படி இருந்தேன், எதற்காக அப்படி இருந்தேன் என என்னுள் கேட்டுக் கொண்டபோது எனக்குள் ஒரே ஒரு விசயம் தெரிந்தது. என்னை எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான் அது. அதாவது நல்லவன் என்றால் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது போன்றவைதான் எனக்குத் தெரிந்தவைகள். கல்லூரிக் காலங்களில் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன். அவர்களாகவே நான் எழுதிய கவிதையைப் பாராட்டிய போது என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

இந்த காமம் வாழ்க்கையில் ஒருவர் அடைய வேண்டிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்பன ஒருவர் வாழ்வில் அடைய வேண்டிய செயல்களாகும்.

ஆனால் சமீபத்தில் எழுதிய 'காதல் மட்டும்' கவிதை ஒன்றில் இப்படியும் எழுதினேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

நான் காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்க்கிறேன். காதலை காமத்திலிருந்து விலக்கி வைத்திடவே விளைகிறேன். காதல் கொண்ட பார்வைக்கும், காமம் கொண்ட பார்வைக்கும் வேறுபாடு இருப்பதாகவேத்தான் நான் பார்க்கிறேன்.

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.

(தொடரும்)

Tuesday 26 January 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5

மெண்டலீவ் வேதியயில் பாடத்தில் விரிவுரையாளாராக பணியாற்றிக் கொண்டு இருந்தார். தான் படித்துச் சொல்லித்தர வேண்டி புத்தகங்கள் தேடினார். அவருக்கு எந்த புத்தகமும் திருப்தி அளிக்கவில்லை. தான் ஒரு புத்தகம் எழுதினால் என்ன என அவருக்குத் தோன்றியது. 

அந்த காலகட்டத்தில் அதற்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் 50 க்கு மேற்பட்ட தனிமங்களைக் கண்டறிந்து இருந்தனர். 

அனைத்து தனிமங்களையும் பார்த்த மெண்டலீவ் அதனை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடக்கினார். அவர் வரிசைப்படுத்த முயன்ற முறை அணுவின் எடையைப் பொறுத்துத்தான். அந்த கால கட்டத்தில் ஹைட்ரஜனை வைத்தே மற்ற அனுக்கள் எடைச் சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அணுவின் எடைக்கும் வேதியியல் தன்மைக்கும் தொடர்பு உண்டு என கருதியே அவ்வாறு செய்தார். அவர் செய்த ஒரு மாபெரும் பணியானது மேலும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டி உள்ளது என இடைவெளிகள் விட்டு வரிசைப்படுத்தினார். ஆனால் சோதனையாக கதிரியக்கத்தன்மையுள்ள சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனை முறையாகச் செய்யமுடியவில்லை, காரணம் அளவுச் சரியாகக் கிடைக்காததுதான்.மேலும் இது போன்று அணுவின் எடையைப் பொறுத்து வகைப்படுத்தியதன் பொருட்டு தனிமத்தின் வேதியியல் தன்மையானது ஒத்துவரவில்லை. ஆனால் இந்த அரிய சிந்தனைதான் இன்றைய தனிம அட்டவணையின் முன்னோடி எனச் சொன்னால் யார் மறுப்பார்கள். 

பின்னால் மோஸ்லி அணுவின் எண்களை வைத்து வரிசைப்படுத்தி உருவாக்கினால் சரிவரும் எனச் சொன்னார். முக்கியமாக எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டன, அதுவரை அணு எடை என்பது தான் அவர்களுக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றை வைத்துப் பின்னப்பட்ட விசயங்கள் பின்னாளில் வேறு கிடைத்ததும் மாற்றம் செய்ய ஏதுவாகின. 

பல பொருட்கள் ஒன்று என இருந்தவர்களுக்கு சில அறிவியல் சோதனைகள் அவைத் தனித்தனியான தனிமங்கள் ஒன்று சேர்ந்ததால் வந்தது எனக் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்து இருக்கக்கூடும். 



எங்கு எங்கு எப்படி இந்த எலெக்ட்ரான் செல்கிறது என கண்டு கொள்ள முடியும் அதுவும் குவாண்டம் கொள்கை கணிப்பினால். 

ஒரு பொருளானது எப்படி பார்க்கப்படுகிறது எனில் ஒளியானது பொருளின் மேல் பட்டு பிரதிபலித்து அந்த ஒளியானது நமது கண்களில் பட்டு நமக்கு அந்த பொருள் தெரிகிறது என்பது அறிந்ததே. நுண்ணிய பொருள்களை ஒளியினை குவித்து ஒளி நுண்ணோக்கியால் நாம் அதனை பெரிதுபடுத்தி காண்கிறோம் அதாவது அளவில் சிறியதை பெரிது படுத்துகிறோம், நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு எல்லைகள் உண்டு. 



நேனோ தொழில்நுட்பம் நுண்ணிய பொருள் பற்றி மிகவும் ஆராய்ந்து வருகிறது. இது தவிர்த்து எலெக்ட்ரான் நுண்ணோக்கியும் உண்டு. இதன் மூலம் மேலும் நுண்ணிய பொருள்கள் காணலாம். அணுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியால் தனிப்பட்ட அணுக்களை காணாலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை யாரும் எலெக்ட்ரானைப் பார்த்ததாக இல்லை, அதனுடைய போக்கினை இப்படித்தான் இருக்கும், இங்குதான் இருக்கும் என கணிக்கும் திறமை நம்மில் உண்டு. 


(தொடரும்)


பாதை 1


பாதை 2


பாதை 3


பாதை 4

Monday 25 January 2010

நாமும் தாவரம் ஆகிவிடலாம்

நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான் 
எத்தனை காலம் தான் அண்டி பிழைப்பது

இவ்வுலகத்தில் வாழ்ந்திட மாற்றம் ஒன்றே
மரபணுக்களில் ஏற்பட்டு வந்தது எனில்
நமது செல்களுக்கும் தானே உணவு
தயாரிக்க சொல்லித் தராதா மரபணுக்கள்

மரபணு முறைகொண்டு நம்மிலும்
ஏற்படுத்துவோம் புதிய மாற்றங்கள்

எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருப்பது
மரங்களை அழிக்க வேண்டாமென

எத்தனை மாநாடுதான் போடுவது
உலகம் வெப்பமாகி போகிறதென

மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்

உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்.

Friday 22 January 2010

சாலையோரம்

ஸ்டார்ஜன், தீபா, ஸ்ரீவித்யா, பலாபட்டறை சங்கர் அவங்க எல்லாம் சாலையோரம் பற்றி எழுதியதைப் படித்தேன். இது ஒரு தொடர் இடுகைனு இருந்தாலும் விருப்பப்பட்டவங்க எழுதலாம்னு சங்கர் அவரோட பதிவுல எழுதி இருந்ததால எனக்கும் இந்த சாலையோரம் பற்றி எழுதனும்னு ஒரு எண்ணம் வந்தது.

சின்ன வயசுல சாலையோரத்தில விளையாடலைன்னாலும் எங்களுக்குச் சொந்தமான களம் ஒன்றில் செங்கல் வைத்துக் கொண்டு பேருந்து போல் மணலில் ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டிக் கொண்டு போகும் போது ஒரு மாடு நின்று கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் செங்கல் வைத்து ஓட்டிய போது மாடு விட்ட ஒரு உதை இன்னமும் மறக்க முடியவில்லை. கவனக்குறைவு!

வரப்பு ஓரங்களில் பேருந்து ஓட்டுவது போல ஓடித் திரிந்த காலங்கள் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பேருந்து ஓட்டுநர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன். எங்க ஊருக்குள்ள ஒரே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் வரும், யார் முதலில் ஊருக்குள் வருவது என போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அப்படி தனியார் பேருந்து ஒருநாள் முன்னதாக வந்துவிட இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் போட்டுக்கொண்ட சண்டை இன்னமும் நினைவில் இருக்கிறது. இதே நிகழ்வு பல வருடங்கள் பின்னர் சென்னையில் பாரிமுனையில் பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இவர்களின் வேகத்திற்கு பலியாகும் மக்கள்!

மதுரையில் படித்தபோது நானும் என் தந்தையும் சாலையோரத்தில் நடந்து சென்றபோது பேருந்து ஒன்று என் தந்தையை உரசிவிட என் முன்னால் தள்ளிச் சென்று விழுந்த தந்தையை பார்த்தபோது நான் அடைந்த அதிர்ச்சி இன்னும் மறக்க முடியாதது. பேருந்து சற்று வேகம் குறைத்து வந்ததாலும், சாலையின் ஓரத்தில் கற்கள் ஏதும் இல்லாது போனதாலும் என் தந்தை அன்று எவ்வித காயமின்றி தப்பினார்.

மிதிவண்டி ஓட்டிப் பழக வேண்டும் என கஷ்டப்பட்டு மிதிவண்டி பழகிய பின்னர் சக்கரத்தில் காலை விட்டு காயப்பட்ட கால், வேகமாக ஓட்டிக்கொண்டு வருகிறேன் என சக்கரம் சறுக்கி விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயம் என மிதிவண்டி பயணம் சிரமம் சில முறை தந்தது. அந்த சிரமமே என்னை இந்தியாவில் இருந்தவரை வேறு இரு சக்கர வாகனங்களை பழகவிடவில்லை.

சென்னையில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது என் நண்பன் ஸ்ரீராம் என்னை அவனுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டச் சொன்னபோது பயமாகத்தான் இருந்தது. அவன் அநாயசமாக ஓட்டிச் செல்லும் விதம் கண்டு பிரமிப்புதான் மிஞ்சியது. தலைக்கவசம் இல்லாமல் அவன் பயணித்தது இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறும் வரை நான் எந்த வாகனங்களும் ஓட்டியது இல்லை, ஓட்டப் பழகியதும் இல்லை.

இலண்டன் வந்ததும் கார் (மகிழ்வுந்து) ஓட்ட வேண்டுமெனில் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும் என சொன்னார்கள். சாலை விதிகள் பற்றிய தேர்வு அது. அந்த சாலை விதிகள் தேர்வுதனில் முழு மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகினேன். ஆனால் செயல்முறைத் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்றாம் முறையே தேர்வாகினேன். இத்தனை சட்டதிட்டங்கள் உடைய இங்கே சட்டம்தனை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்களும் உண்டு.

ஒருமுறை எனக்கு முன்னால் மூன்று வாகனங்கள் நின்று கொண்டிருக்க, முன்னால் இடமிருக்கிறதே என மூன்று வாகனங்களை முந்திக்கொண்டு போய் நிற்க எனக்கு முன்னால் காவல் அதிகாரி வண்டி நின்று கொண்டிருந்தது. என்னை இறங்கச் சொல்லியவர், ஏன் இப்படி வந்தாய்? எனக் கேட்க இடமிருந்தது வந்தேன், என் தவறுதான் என்றேன். நீ வந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்குப் பிடிக்கவில்லை, ஏன் வந்தாய் என மறுபடியும் கேட்டார். இடமிருந்தது அதனால் வந்தேன், என் தவறுதான், இனி அவ்வாறு செய்யமாட்டேன் என சொன்னேன். எங்கே வேலை பார்க்கிறாய் என்றார், வேலை இடம் சொன்னதும், சென்று வா என அனுப்பி விட்டார். இத்தனைக்கும் நான் அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தவில்லை. இருப்பினும் பொறுமை அவசியம் என அந்நிகழ்வு எடுத்துகாட்டியது. ஆனால் நாளிதழ்கள் புரட்டினால் 30 மைல் வேகம் செல்ல வேண்டிய இடத்தில் 70 மைல் வேகத்தில் சென்றார் என்றெல்லாம் செய்திகள் பார்க்கலாம். பல சட்ட திட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாட்டில் கூட வாகன ஓட்டிகளின் செயல்பாடு எரிச்சல் தருவதாகவே இருக்கும். பலர் வாகனம் ஓட்டுவதற்கான அங்கீகாரம் இல்லாமல் வேறு நாடுகளில் எடுத்துக்கொண்ட அங்கீகாரம் வைத்து ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகமே.

புகைப்பட கருவி சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும், வாகன ஓட்டிகள் புகைப்பட கருவி இருக்குமிடம் மட்டும் வேகத்தை மட்டுப்படுத்துவார்கள், அதைத் தாண்டியதும் பறந்து செல்வார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்றே தோன்றும்,

ஒருமுறை நான் மஞ்சளிருந்து சிகப்பு விளக்கு வரும் முன்னர் செல்ல வேண்டுமென சென்றபோது மில்லி விநாடியில் எனது வாகனம் புகைப்படம் எடுக்கப்பட்டு 3 புள்ளிகளும் 60 பவுண்டுகளும் கட்டிய நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, பலமுறை வேகமாக செல்லும் வாகனங்களைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு, எங்கே இத்தனை வேகமாகச் செல்கிறார்கள் என! அதே வேளையில் நாம் வேகமாகச் செல்லும்போது அந்த எண்ணம் ஏன் நமக்கு வருவதில்லை எனும் சிந்தனையும் வருவதுண்டு.

30 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வாகனத்தை வெளியில் இருந்து இயக்க அந்த வாகனம் பின்னோக்கிச் செல்ல அருகிலிருந்த மற்றொரு வாகனத்துக்கும், இந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி அவர் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. கவனத்துடன் சென்றாலும், கவனமில்லாமல் வந்த லாரி ஒன்றினால் மரணமடைந்த ஒருவர் பற்றிய செய்தி அதிர்ச்சி தந்தது. முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி என்னை வெகுவாகவே பாதித்தது.

சாலையினைக் கடக்கும்போதும் கவனம் தேவை. சாலை விதிகளும், சாலையில் செல்வது பற்றிய எச்சரிக்கையும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. பல வசனங்கள் ஆங்காங்கே ஊரில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு 30 நிமிடத்தில் இரவு 10 மணிக்கு பயணித்த கார்! பேருந்து ஒன்று எதிரில் வந்தபோதும் அதன் அருகில் நேராக சென்று மின்னலென விலகிச் சென்ற கார் என சமீப காலத்தில் காரில் தமிழகத்தில் பயணித்தபோது ஏன் இப்படி இவ்வளவு வேகம் என ஓட்டுநர்களிடம் கேட்டபோது 'அப்படியே அணைச்சி போகனும்ணே' எனும் பதிலைக் கேட்டபோது சாலையோரம் மிகவும் பயங்கரமானதாகவே காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

விருப்பமுள்ளோர் தொடர வேண்டுகிறேன்.

Thursday 21 January 2010

கடவுள் யாருக்குச் சொந்தம்? திரு.சிவசக்திபாலன்

முழுவதும் படிக்க இங்கே அழுத்தவும். -----> கடவுள் யாருக்குச் சொந்தம்? - திரு சிவசக்திபாலன்.


1. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அத்வானியாலோ, அப்துல் சமதினாலேயோ ஏற்படுத்தப் படுவது அல்ல.

பள்ளி வாசல் - சர்ச் - கோவில், இதில் எங்காவது நின்று கொண்டு வருவோர் போவோரிடம் "நீங்கள் ஏன் கடவுளை நம்புகின்றீர்கள்?" என்று கேட்டுப் பாருங்கள். நோய் நொடி, பொருளாதாரச் சிக்கல், திருமணப் பிரச்னை, பிள்ளைப் பேறு, குடும்பத் தகராறு, நம்பிக்கைத் துரோகம், விபத்துக்கள் என்று மனித வாழ்வின் துயரங்களில் தன்னுடைய பிரார்த்தனைகள் மூலம் கடவுளின் அற்புதங்களைக் கண்டதாய் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாய்க் கூறுவதைக் கேட்கலாம்.

2. ஆதிசக்தி - அதிலிருந்து பிரம்மா - விஷ்ணு - சிவன், அவர்களுக்கு சரஸ்வதி - லட்சுமி - பார்வதி மற்றும் பிள்ளையார் - முருகன்.

இவர்களுக்குக் கீழே இந்திரன், நவக்கிரகங்கள், ஐம்பூதங்கள், இதற்கும் கீழே சொல்லப் போனால், குல தெய்வங்கள், மாரியம்மன்கள், எல்லையம்மன்கள், அய்யனார் கருப்பணன் போன்ற தெய்வங்கள்.

இது தான் ஆதியிலிருந்து இந்தியாவில் இருந்து வரும் தெய்வ நம்பிக்கை.

ரிக் வேதம், "ஏகம் சத்; விப்ர பஹூத வதந்தி" என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமாய்க் கூறுகின்றது. இதற்குக் கடவுள் ஒருவரே, ஞானிகள் அவரைப் பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். என்பது பொருள்.

இந்தப் பிரபஞ்சம் நாம் நினைக்கும்படி அவ்வளவு சிறியதல்ல. கடவுளின் சக்தி மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மார்க் போட்டு அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ தள்ளும் வாத்தியார் வேலை போன்று அவ்வளவு சிறியதல்ல.

3. நியூட்டனின் விதி ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சம விகிதத்தில் எதிர் செயலைத் தோற்றுவிக்கின்றது என்று கூறுகின்றது.

நாம் வாழ்கின்றோம், பேசுகின்றோம், பார்க்கின்றோம், கேட்கின்றோம், உண்ணுகின்றோம், உறங்குகின்றோம். எந்த நேரமும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டே இருக்கின்றோம். விஞ்ஞானம் கண்டறிந்த இயற்கையின் விதிப்படி, நமது ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சமமான எதிர் செயலை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் விஞ்ஞான விதியே தப்பு என்றல்லவா ஆகி விடும்?

இதைத் தான் நம் முன்னோர்கள் நாம் செய்யும் பாவம் புண்ணியம், அதற்குரிய பலனை நாம் அனுபவிப்போம் என்று கூறியுள்ளார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

4. இந்தக் கடவுள் எங்கே இருக்கின்றார்?

கடவுள் ஏதோ மேக மண்டலத்துக்கு அப்பால் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றால் அதை நம்பி விடாதீர்கள். அதே போல் மாய மந்திரம் செய்பவன் தான் கடவுள் என்று யாரேனும் நினைத்தால் அதை மூட்டை கட்டி வைத்து விடுங்கள்.

பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மாங்காய் கிடைக்கும். மந்திரத்தால் மாங்காய் வருவதில்லை.

இவ்வாறு கடவுளின் செயல்கள் அத்தனையும் நேர்த்தியாய் தீர்க்கமான செயல்பாடுகள் கொண்டிருப்பதால் கடவுளை விஞ்ஞான ரீதியாய் சுட்டிக் காட்ட முடியும். அது பாவச் செயலும் அல்ல.

5. யார் செய்த பாவமோ தெரியவில்லை, கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை மனித இனத்திற்கு ஏற்படவே இல்லை. ஒவ்வொருவரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல தத்தம் கொள்கைகளே உண்மையானவை என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

இது விஞ்ஞான யுகம். நம் முன்னோர்கள்-ஞானிகள், கடவுளைப் பற்றிக் கூறிய அனைத்துத் தத்துவங்களையும், அவை எந்த மதத்துக் கொள்கையாய் இருப்பினும் விஞ்ஞான ரீதியாய் அலசி ஆராய்ந்து கடவுளின் தன்மைகளைப் பற்றி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். இப்படியாக இருப்பவர் தான் கடவுள் என்று அறுதியிட்டுக் கூற வேண்டும்.

கடவுள் ஆதி அந்தம் இல்லாதவர். இதில் எந்த மதத்திற்கும் பேதம் இல்லை. ஆக, ஆதி அந்தமில்லாத ஒன்றைக் கடவுள் என்று கூறுவது தவறில்லை தானே!.

6. ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாம் நாமாக இருக்க மாட்டோம். நாமும் ஒளியாகவே மாறி விடுவோம். இதுவே சிருஷ்டி!

இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். மிரண்டு விடாதீர்கள். எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரம்பொருளாகவே மாறி விடுவோம்.

இத்தத்துவம் விஞ்ஞான பூர்வமானது. சும்மா எடுத்துக்காட்டி எழுதப்பட்டதல்ல. வேதங்கள் எடுத்த எடுப்பிலேயே - 'தத்வமசி' - நீயே அது என்று கூறுகிறது.

7. மரத்தடியில் படுத்திருந்த நியூட்டன் நெற்றியில் ஒரு ஆப்பிள் விழுந்தது. இக்கனி ஏன் மேல் நோக்கிச் செல்லாது கீழ் நோக்கி வந்தது என்று நியூட்டன் தன்னுள் கேள்வியை எழுப்பினார். முடிவு புவி ஈர்ப்பு சக்தியை அறிந்தார்.

அவர் கேள்விக்குப் பதில் எங்கிருந்து கிடைத்தது? வானத்திலிருந்து விழுந்ததா? அல்லது மண்ணுக்குள்ளிருந்து முளைத்ததா? நியூட்டன் கேள்வியை யாரிடம் கேட்டார்? யார் அவருக்குப் பதில் அளித்தார்கள்? அவர் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். பதில் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது.

8. ஆசை, கோபம், அஹங்காரம் என்ற சிருஷ்டியின் அனைத்து உணர்ச்சி வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்படக்கூடிய சந்தர்ப்பம் அமையப் பெற்றுள்ள அத்தனை இல்லறத்தாருக்கும் எதிர் நீச்சல் போட ஒரு எளிய படகை கடவுள் அளித்துள்ளான். நம் உள்ளத்தில் எழும் எல்லா ஆசைகளையும் அறுத்தெறிய இறைவன் ஒரு இலகுவான ஆயுதம் அளித்துள்ளன்.

அது தான் அன்பு, தூய அன்பு, பரந்த அன்பு.
9. பயம் மனிதனின் அடிப்படை உணர்ச்சி.

இந்த பய உணர்ச்சி இருப்பதால் தான் நம்மில் பல பேர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். தாய் தந்தைக்குப் பயந்து கீழ்ப்படிபவன் பண்புள்ளவனாய் வளர்கின்றான். கணவனுக்குப் பயந்து நடக்கும் மனைவியும் மனைவிக்குப் பயந்து நடக்கும் கணவனும் நாகரீகமான சமுதாயத்தைப் படைக்கின்றார்கள்.

நான் சொல்லும் பயம் அன்பினால் ஏற்படும் பயம். தன் உயிர் மேல் ஆசை - உடைமைகள் மீது ஆசை - எதிர்பார்க்கும் சுகத்தின் மீது ஆசை ஆகியவற்றால் ஏற்படும் பயத்தைச் சொல்லவில்லை. அன்பினால் ஏற்படும் பயம் பக்தி எனப்படும். ஆசையால் ஏற்படும் பயம் அடிமைத்தனம் எனப்படும்.

பக்தி, தன்னுடைய இன்ப - துன்ப - சுக - துக்கம் அத்தனையையும் இழந்து நிற்கத்தயாராய் இருக்கும்.

இந்த பக்தி இருக்கிறதே! அப்பப்பா. இதைச் சொல்லியோ எழுதியோ புரிய வைக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.

10. மூன்று ஆயுதங்களை இது வரை பார்த்தோம். மிஞ்சி இருப்பது ஒரே ஆயுதம். அதன் பெயர் தியானம். இதைத் தான் நம் பெரியவர்கள் ராஜயோகம் என்றார்கள்.

11. மதத் தீவிரவாதிகளே! உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனதை அடக்கி விட்டீர்களா? ஐம்புலன்களினால் ஏற்படும் ஆசையை வென்று விட்டீர்களா? அப்படியென்றால் மட்டுமே கடவுளைப் பற்றி பேசுங்கள். அவர்கள் தான் மக்களுக்கு ஆன்மீகத்தின் அற்புதத்தை உணர வைக்க முடியும்.

12. கடவுள் எண் குணங்களைக் கொண்டவர்.

ஆதி அந்தமில்லாதவர். எல்லையில்லாதவர். உருவமில்லாதவர். கால நேரங்களைக் கடந்தவர்.
அவரன்றி அண்டத்தில் வேறொன்றில்லை என்று வியாபித்திருப்பவர். பற்றற்றவர். இப்படித்தான் இருப்பார் என்று எடுத்துரைக்கத் தக்க தன்மைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிர்க்குணமாய் இருப்பவர். இடம், பொருள், காரண, காரியங்கள் இல்லாதவர்.

13. ஆதி சங்கரர் இங்கு அனைத்துமாய் காட்சியளிப்பது ஒரே பரம்பொருள் என்னும் அத்வைத கொள்கை கொண்டிருந்தார். ஸ்ரீராமானுஜரோ நாமெல்லாம் கடவுளின் அங்கங்கள் என்னும் விசிஷ்டாத்வைதக் கொள்கை கொண்டிருந்தார். மத்வாச்சாரியாரோ, கடவுள் வேறு, ஜீவன்கள் வேறு என்னும் த்வைதக் கருத்துகளைக் கொண்டிருந்தார். புத்தரோ, மறந்து கூட கடவுளைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவரையே கடவுளாக்கி நம்மவர்கள் கலவரங்களைச் செய்கிறார்கள்.

14. "பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை நிறுத்திக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்?"

சுக்கு நூறாய் உடைந்து போகும்? சிதறிப் போகும்? சூரியனில் போய் விழும்? எரிந்து விடும்? என்றெல்லாம் பதில் தந்தால் பூஜ்ஜியம் தான் உங்களுக்கு மதிப்பெண் போட முடியும்.

பதில் என்னவென்றால், "பூமி மாயமாய் மறைந்து விடும்"

திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட சூட்சும நிலையை அடைந்து விடும்.

15. அணுவைப் பற்றி படித்திருப்பீர்கள். புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் பற்றியும் தெரிந்திருப்பீர்கள். இதில் புரோட்டான் பாசிட்டிவ் எனவும், நியூட்ரான் நியூட்ரல் எனவும், எலக்ட்ரான் நெகடிவ் எனவும் தெரிந்திருப்பீர்கள். அணுக்களின் இயக்கம் இந்த முப்பெரும் சக்திகளாலேயே ஏற்படுகின்றது. அணுக்களின் பிளவு, சிதைவு, கலவை, கோர்வை, மூலக்கூறுகளின் தோற்றம், கூட்டுப் பொருட்களின் வெளிப்பாடு, அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பூமி, சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் இந்த முப்பெரும் சக்திகள் ஏற்படுத்தும் மின் காந்த அலைகளினால் மட்டுமே சாத்தியமாகின்றன.

இதைத்தான் மும்மூர்த்திகள் என்று கூறுகின்றேன். இவை முறையே, ஆக்கல், காத்தல், அழித்தல் பணிகளைச் செய்கின்றன.

16. ஒரே ஒரு செல்லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கி விடலாம் என்று உங்களுக்குத் தெரியும்.

17. "துன்பத்திற்குக் காரணம் ஆசையே" - புத்தர்.

துன்பம் என்றால் என்ன?

ஒரு குழந்தை தான் ஆசையாய் விளையாடிய பலூன் உடைந்து விட்டால் அளவில்லா துன்பத்தை அடைகிறது. ஆனால் சில நேரங்கள் சிலர் பலூன் உடைப்பதையே விளையாட்டாய் விளையாடுகின்றனர்.

18. அரைகுறை டிரைவிங் படித்தவர்கள் காரினை தாறுமாறாய் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்வது போல் நமது குணாதிசயங்களை தாறுமாறாய் பயன்படுத்தி நாம் ஆபத்தை வரவழைக்கிறோம்.

எனவே, நமக்கு எவ்வாறு வாழ்வது என்பது கற்றுத் தரப்பட வேண்டியதாகும்.

எனவே, பிச்சை புகினும் கற்கை நன்றே.

19. மரணத்தின் மூலம் இந்த இயக்கமற்ற நிலையை சாதிக்க இயலுமா? இயலாது. ஏனென்றால் ஜனனம், மரணம் என்னும் இந்த இரண்டுமே இயக்க நிலையாகிய சிருஷ்டியின் இரு பெரும் அத்தியாயங்கள்.

விரிந்து பரந்த அண்டமே மிகச்சிறிய பிண்டமாய் இந்த மனிதனாயும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

அண்டத்தின் விளைவே பிண்டம். பிண்டத்தை விட்டு தாண்டிக் குதித்தாலே அண்டத்தையே தாண்டிக் குதித்தது தான்.

எனவே, ஐம்புலன்கள், மனம், புத்தி, நான் என்னும் அகங்காரம் இவற்றை எவ்வழியாயினும், எம்மதத்தின் மூலமாகவேனும் அடக்கி ஆண்டு ஜெயித்துக் காட்டுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். கடவுளை உணருங்கள். கடவுளாய் உணருங்கள்.

Tuesday 19 January 2010

அறிவுரை

அறிவுரை என்பது எளிதாகக் கிடைப்பது என்பார்கள். எவர் வேண்டுமெனிலும் அறிவுரை சொல்லலாம் எனவும் சொல்வார்கள். அறிவுரை சொல்வோர் அதே அறிவுரைப்படி நடக்கிறார்களா என்பது பற்றி ஆராயவும் கூடாது எனவும் சொல்வார்கள். இதைச் சுருக்கமாக 'ஊருக்கு உபதேசம்' எனச் சொல்லப்படுவதும் உண்டு.

உட்கருத்து, வெளிக்கருத்து எனச் சொல்லிக் கொண்டே காரியத்தில் கருத்தாக இல்லாது இருப்போர் இவ்வுலகில் உண்டு. 'நான் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லும் யோக்கியதை எனக்கு உண்டு' என்பார் ஒரு கவிஞர்.

உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் நீங்கள் சொல்லிவிட்டு, அது எல்லோருக்கும் புரிய வேண்டும் என நினைப்பதும், அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதும் எத்தனை சிரமமான காரியம் தெரியுமா, எனவே எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்வதை உங்களது பணியாக வைத்துக் கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம் என அறிவுறுத்தும் அறிஞர் பெருந்தகைகளும் உண்டு.

நான் ஒன்றைச் சொல்வதற்கு முன் அதன்படி என்னால் வாழ முடிகிறதா என யோசித்து செய்துப் பார்த்து விட்டேச் சொல்வேன் என இருந்த ஞானிகளும் உண்டு. ஒரு கருத்தானது பிறருக்கு நன்மை விளைய வேண்டும் எனும் நோக்கில்தான் சொல்லப்படுவது, ஆனால் அதே கருத்தினை தீமை விளைவிக்கும் வகையில் வகைப்படுத்துவது எனும்போது கருத்துச் சிதைவு ஏற்படுகிறது.

தீபம் கொண்டு திருக்குறள் படிக்கலாம், கூரையையும் கொளுத்தலாம் என்பார் ஒரு கவிஞர். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை நீங்கள் எப்படி பயன்படுத்த நினைக்கிறீர்களோஅதன் பலன் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேகம். ஆயுதங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டிதான் உருவாக்கப்பட்டன என வைத்துக் கொண்டோமெனில் அதே ஆயுதம் பிறரைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாது போனோம்.

அவரவர் அறிந்த உண்மை அறிவே மிகும் எனும் நிலை இருப்பதினால், அவரவர் கருத்துப்படி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் சமாதானமும், அமைதியும், அன்பும், பணிவும், ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலும் என உலகைச் செம்மைப்படுத்த நாம் நம்மைச் செம்மைப்படுத்துவோம்.