Showing posts with label நாவல் - 2. Show all posts
Showing posts with label நாவல் - 2. Show all posts

Sunday 7 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 24


 24. உருவமில்லா உருவம்
பெரியவரும், வாசனும் குளத்தூர் வருமுன்னர் நடந்தவைகள்... 


பூங்கோதையிடம் வாசன் எவ்வாறு செடியைப் பறித்தாள் என்று அன்று இரவே கேட்டான். பூங்கோதை பெரியவர் சொன்ன குறிப்பை அறிந்து கொண்டு தான் பறித்ததாக கூறினாள். வாசன் அது எவ்வாறு சாத்தியம் என கேட்டபொழுது பூங்கோதை சாத்தியமாகிவிட்டது அல்லவா என சொல்லிவிட்டு அமைதியானாள். இந்த செடிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள ஒரு தாவர ஆராய்ச்சி மையத்தில் நாளை சென்று தந்து சோதித்துப் பாதித்துவிடலாம் என பூங்கோதை சொன்னாள். வாசன் பெரியவரிடம் இதுகுறித்து கேட்கவேண்டும் என சொன்னான்.


பூங்கோதை தான் பெரியவரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறியதும் வாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த செடிகளை நாம் ஊருக்கு எடுத்துச் சென்று வளர்ப்பதுதானே திட்டம். அதற்குள் இந்த செடிகளை ஆராய்ச்சிக்கூடத்தில் கொடுத்து அதுபற்றிய அனைத்து விபரங்களையும் அறிவது என்பது எதற்கு என வாசன் யோசித்தான். பூங்கோதையிடம் விபரங்களைக் கேட்டான் வாசன். 


அனைத்துச் செடிகளையும் காய வைத்து இலைகள், வேர், தண்டு என பிரித்து அதனை இரசாயனத்தில் மூழ்க வைத்து அதில் இருந்து மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்துச் செய்வார்கள் என பூங்கோதை கூறியதும் வாசன் தலையை ஆட்டினான். 


''இல்லைங்க பூங்கோதை, நம்மகிட்ட இருக்கறதோ கொஞ்சம்தான் இதைப் போய் நாமக் கொடுத்துட்டா நாங்க வளர்க்கறதுக்குனு எதுவும் இல்லாம போயிரும், நாங்க இந்த செடிகளைப் போய் வளர்த்துட்டு காய், கனினு எல்லாம் கொண்டு வறோம் அப்புறமா சோதனையெல்லாம் பண்ணிக்கிரலாம், தயவு செய்து இந்த விசயத்தை இப்படியே விட்டுருங்க''


''சரி அண்ணா, நான் ஆராய்ச்சிக்கூடத்துல போய்க் கொடுக்கலை''


''இந்த செடிகள் கிடைக்கிறதே அபூர்வமா இருக்குங்க பூங்கோதை, நீங்க பறிச்ச இடத்துக்கு மேலே ஏறிப் போனீங்களா''


''இல்லை அண்ணா''


''இன்னும் கொஞ்ச தூரம் ஏறிப்போனா கொஞ்ச செடிகள் கிடைக்கலாம்னு தோணுது''


''அண்ணா இந்த செடிகளை திசு வளர்ப்பு முறையில வளர்த்தா நிறைய செடிகளை உருவாக்கலாம் அண்ணா, நீங்க கொஞ்ச செடிகளை நான் சொல்ற மாதிரி வெட்டி வெட்டி ஒன்னா இருக்கற செடியை பல செடிகளாக மாத்திரலாம்''


''ஓ எப்படி செய்றது''


''நான் அந்த விபரத்தை நான் நாளைக்குத் தரேன் அண்ணா''


வாசன் பூங்கோதையிடம் பேசிவிட்டு பெரியவரைச் சந்தித்தான். வந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. பெரியவரிடம் நாளை ஒரே ஒரு இடத்தினை மட்டும் பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டும் என கூறினான். பூங்கோதை கூறியதை பெரியவரிடம் கேட்டான் வாசன். தனக்கு ஆராய்ச்சிக்கூடத்தில் தர விருப்பமில்லை எனக் கூறியதை பெரியவர் சரியெனக் கேட்டுக்கொண்டார். மேலும் பூங்கோதையின் ஆலோசனையைக் கூறினான். பெரியவர் சம்மதம் சொன்னார்.


அடுத்த நாள் பூங்கோதையிடம் திசு வளர்ப்பு முறை விபரங்களைப் பெற்றுக்கொண்டான் வாசன். பெரியவரும் வாசனும் மலைப்பகுதியை அடைந்தனர். பூங்கோதை செடி பறிக்கச் சென்ற வழியைக் காட்டினார். வாசன் மலை மீது ஏறினான். அதிக தொலைவு சென்றதும் செடிக்கூட்டம் அங்கு இருந்தது. செடிகளை எண்ணினான். சரியாக 64 செடிகள் இருந்தது. மொத்தம் 108 செடிகள் என கணக்கிட்டுக் கொண்டான். இந்த 108 செடிகளை ஆறு கூறுகளாக வெட்டினால் 648 செடிகள் வந்து சேரும் என அங்கேயே குறிப்பு எழுதினான். எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு செடியைக் கூட விட்டுச் செல்லக்கூடாது என முடிவெடுத்தான். தானே அனைத்துச் செடிகளையும் ஆறு கூறுகளாக வெட்டி நட்டுவிடுவது என முடிவு செய்தான். மேலும் தேடினால் செடிகள் கிடைக்கும் என யோசித்தான். ஆனால் இனிமேலும் தாமதிப்பதில்லை எனவும் ஊருக்குச் செல்வதுதான் சிறந்தது என யோசித்து மலையிலிருந்து கீழிறங்கினான். 


பெரியவர் வாசன் தனது திட்டம்தனை சொன்னான். பெரியவர் சிரித்துக்கொண்டே சரியென சொன்னார். அன்று இரவு அமைதியாக கழிந்தது. பெரியவரும் வாசனும் செடிகளுடன் குளத்தூர் செல்ல தயாரானார்கள். கேசவனும், பூங்கோதையும் சில வாரங்களில் குளத்தூருக்கு வருவதாக கூறினார்கள். 


பூங்கோதைக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என சுபா அன்றே வந்து அழைத்தார். ஆனால் பூங்கோதை தான் கல்லூரிக்குச் செல்வதாலும் தேர்வுகள் முடித்தபின்னர் வருவதாகவும் கூறிவிட்டாள். பார்த்தசாரதி முன்னர் சோதனைகள் வேண்டாம் என சொன்னவர் தற்போது உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது சரியென சம்மதம் தந்து இருந்தார்.


பெரியவரும் வாசனும் திருமலையை விட்டு கிளம்பினார்கள். பெரியவர் மனதில் எல்லையில்லா சந்தோசம் அடைந்தார். வாசன் பெரியவரிடம் கனவில் நாராயணன் ஒளியாய் தோன்றியது உண்மையா? என்றான். பெரியவர் புன்னகையுடன் இதோ செடிக்கு உருவமிருக்கிறது கண்டுகொண்டாய் செடியும் கனவில்தானே சொல்லப்பட்டது என்றார். இருளில் கூட ஒளி இருக்கும் அது ஒளிந்து இருக்கும், ஒளி இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை அப்படித்தான் அந்த நாராயணன் என்றார் பெரியவர் மேலும். வாசன் கண்களில் கண்ணீர் நிரம்பியது. 


உடலில் நிறுத்தமுடியாதா? எங்கும் நிரம்பியிருப்பவன், உருவமில்லாதவன் அந்த அந்த உருவம் எடுத்துக் கொள்பவன். 


உயிரற்றதில் உயிரற்றதாய்
உயிருள்ளதில் உயிராய்
இருப்பதில் இல்லாததாய்
இல்லாததில் இருப்பதாய்
எங்குமிருக்கும் உன்னை
பங்குபோடவும் கூடுமோ!

இருவரும் குளத்தூர் வந்ததும் நடந்தவைகள். 


குளத்தூரில் அன்று இரவு அவர்கள் இறங்கியதும் ஊர் மக்கள் எல்லாம் ஓடி வந்தார்கள். எங்கே செடி எங்கே செடி என கேட்டு வந்தவர்கள் செடியைப் பார்த்ததும் அட இது என்ன வித்தியாசமா இருக்கு, நம்ம தோடத்துல காட்டுல இப்படி ஒரு செடி வந்ததில்லையே, எப்படி இந்த மண்ணுல முளைக்கும்! என அவர்கள் வருத்தமாகப் பார்க்கையில் வாசன் மனதில் பெரும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டான். 


''இந்த செடி நம்ம ஊரு கரிசலுல கட்டாயம் வளரும்'' 


வாசன் சத்தமாக சொன்னது பெரியவருக்கு ஸ்ரீமன் நாராயணா என கேட்டது!

அனைத்துச் செடிகளையும் அன்றேத் தோட்டத்தில் கொண்டுச் சேர்த்தார்கள். பெற்றோர்களுடன் திருமலை மற்றும் திருவில்லிபுத்தூர் பற்றி விபரமாகக் கூறினான் வாசன். பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அருளப்பன் அன்றே அனைத்து கணக்கு விபரங்களையும் வாசனிடம் கொண்டு கொடுத்துவிட்டுப் போனார். எந்த ஒரு பிரச்சினையுமின்றி ஊர் கட்டுப்பாட்டிலே இருந்தது என மகிழ்வுடன் சொல்லிவிட்டுச் சென்றார். வாசனுக்கு சந்தோசமாக இருந்தது. முத்துராசு தோட்டத்தில் செடிகளுடன் படுத்து உறங்கினார். 


இரவில் வாசனுக்கு யோசனைத் தோன்றியது. இந்த செடிகளை வெட்டி நடுவதைவிட அப்படியே வேருடன் நட்டு வைத்தால் என்ன என எண்ணம் வந்தது. வெட்டி நடுவதைப் பற்றி எங்குமே நோட்டில் குறிப்பிடவில்லை. இந்த வேளையில் செடிகளை வெட்டி நடப்போய் ஏதாவது தவறு நடந்துவிட்டால் மீண்டும் செடிகளைத் தேடச் செல்ல வேண்டும். வாசன் பூங்கோதையின் யோசனையை இறுதியாக நிராகரித்துக்கொண்டான். 


அடுத்தநாள் அதிகாலையிலே தோடத்துக்குச் சென்று செடிகளை வேருடன் நட்டு வைத்தான். கட்டப்பட்ட பாத்தியில் ஆறு செடிகள் வீதம் நட்டு வைத்தான். முத்துராசு வாசனுக்கு உதவியாக செயல்பட்டார். அனைத்து செடிகளையும் வைத்தபோது மணி ஒன்பது ஆகியிருந்தது. பெரியவர் தோட்டத்துக்கு வந்துப் பார்த்தபொழுது செடிகள் நடப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு கொண்டிருப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 


வாசன் பெரியவரிடம் தான் செய்த செயல் குறித்து எந்தவித விளக்கமும் தரவில்லை. பெரியவர் அதுகுறித்து எதுவும் கேட்கவும் இல்லை. 


''எல்லா செடிகளும் நல்லபடியா நட்டு வைச்சாச்சா''


''ஆமாம், தம்பி காலையிலே நாலு மணிக்கு வந்து என்னை எழுப்பி விட்டுருச்சு''


''ரொம்ப சந்தோசம், நல்லபடியா செடி வளரட்டும்''


''நல்லா வரும்யா, அங்கிருந்து கொண்டு வந்த கொஞ்ச மண்ணை இங்கே போட்டுருக்கோம்''


''வாசா, முத்துராசு பாத்துக்கிரட்டும் நீ உன் தோட்ட வேலையைப் போய் பாரு''


''இருக்கட்டும் ஐயா, முத்துராசு அண்ணே இப்போ போயிருவாரு நானே எல்லாத்துக்கும் தண்ணீ பாய்ச்சிட்டு போயிருரேன்''


''செடியை கொண்டு வந்து நட்டாச்சு, எப்போ ஆஸ்ரமம் தொடங்கப் போற''


''கொஞ்ச நாள் ஆகட்டும்யா''


''இந்த செடி எத்தனை மாசம் ஆகி இருக்கும்''


''தெரியலைய்யா, பூ எல்லாம் வந்தா ஒரு கணக்கு சொல்லலாம்''


''பாதுகாப்பா வளர்க்க வேண்டியது நம்ம பொறுப்பு, யாரும் பறிச்சிட்டுப் போயிராம''


''சுத்தி கல்லு நட்டுருக்கோம், எதுவும் பிரச்சினை வராதுய்யா''


வாசன் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே பேசினான். முத்துராசு கிளம்பிச் சென்றார். பெரியவர் வாசனிடம் ஊர் மக்களின் எண்ணம் குறித்துக் கேட்டார். ஊர் மக்கள் இந்த செடியை விநோதமாக பார்ப்பதாக தனக்குப் படுவதாக கூறினான். ஆனால் இதனால் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றான். 


நாட்கள் நகரத்தொடங்கின. செடிக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. நன்றாகவே இருந்தது. எப்பொழுது பூக்கள் வரும் என ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வாசனும் பெரியவரும். ஒருநாள் காலையில் வாசன் பெரியவரின் தோட்டத்துக்குச் சென்றுப் பார்க்கையில் அனைத்துச் செடிகளிலும் ஒரு சேர மொட்டுகள் வந்திருந்தன. வாசன் அளவில்லா ஆனந்தம் கொண்டான். பெரியவரிடம் ஓடிச்சென்று விசயம் கூறினான். பெரியவரும் ஆர்வத்துடன் வந்துப் பார்த்தார். மொட்டுகள் உடனே மலராமல் மொட்டுகளாகவே இருந்தது. ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். மாலை நேரத்திலும் சென்று பார்த்தான் வாசன். மொட்டுகளாகவே இருந்தது. மந்தைக்குச் சென்றான் வாசன். அப்பொழுது மாலை நேர பேருந்து ஊருக்குள் வந்தது. பேருந்தில் இருந்து பூங்கோதையும் கேசவனும் பூங்கோதையின் பெற்றோர்களும் வந்திறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் வாசனின் சித்தப்பா, சித்தியும் ரோஹினியும் இறங்கினார்கள். இவர்களைப் பார்த்ததும் வாசன் அளவில்லா மகிழ்ச்சி கொண்டான். 


அவர்களை அன்புடன் வரவேற்றான். கேசவனை பின்னர் சந்திப்பதாக கூறிவிட்டு சித்தப்பா சித்தி மற்றும் ரோஹினியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான். அனைவரும் சந்தோசமாக காணப்பட்டார்கள். வேலன் சித்தப்பாவும் சித்தி, பொன்னுராஜ் மாமா , அத்தை என அனைவரும் வந்துவிட்டார்கள். வாசன் அவர்களை அழைத்துக்கொண்டு புதிய வீட்டினைக் காட்டினான். அனைத்து ஏற்பாடுகளும் முன்னரே செய்யப்பட்டு இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார்கள்.


பின்னர் கேசவனை சந்திக்கச் சென்றான் வாசன். பூங்கோதை வாசனிடம் செடிகளைப் பற்றிக் கேட்டாள். வாசன் தான் செய்த விபரத்தை கூறினான். பூங்கோதை ஏன் தான் சொன்னவாறு செய்யவில்லை என கேட்கவில்லை. நீங்கள் செய்தது சரியாகவே இருக்கும் என சொன்னாள். வாசன் பூங்கோதையை ஆச்சரியமாகப் பார்த்தான். கேசவனிடம் பேசியபொழுது பரிசோதனைகள் மூலம் பூங்கோதை தாய்மை அடைந்த நிலையை ஊர்ஜிதம் செய்ததாக கூறினான். ஆனால் ஸ்கேன் என எதுவும் செய்யவில்லை எனவும் இரட்டை குழந்தைதானா என தெரியாது என கூறினான். வாசன், தாய்மை அடைந்ததை பரிசோதித்து தெரிந்து கொள்ளாமலே வயிற்றைப் பார்த்தாலே தெரியுமல்லவா என்றான். கேசவன் புன்முறுவலிட்டான். ஸ்கேன் எதுவும் எடுக்க வேண்டாம் என பூங்கோதை சொல்லிவிட்டதாக கூறினான் கேசவன். இரட்டை குழந்தையா என பிறந்தபின்னரே தெரியும் என கேசவன் சொன்னபோது வாசன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தான். 


அடுத்த நாள் காலையில் ரோஹிணியும் பூங்கோதையும் பெரியவரின் தோட்டத்தில் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் பரிச்சயமானார்கள். தாவரத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள் பூங்கோதை. தாவரத்தில் உள்ளிருக்கும் மூலக்கூறுகளைப் பற்றிச் சொன்னாள் ரோஹிணி. 


''வாசு அண்ணாகிட்ட சொல்லி நமக்கு இங்கேயே ஒரு ஆய்வகம் பண்ணித்தரச் சொல்லிரலாம், நாம உழைச்ச மாதிரி இருக்கும், உலகத்துக்கு உதவின மாதிரி இருக்கும், என்ன சொல்ற பூங்கோதை''


''ம்ம் நல்ல யோசனைதான், ஆனா ஆஸ்ரமம் கட்டப்போறதா சொன்னாரே''


''ஆஸ்ரமத்தோட ஆய்வகமும் கட்டித்தரட்டும், கிராமத்துல ஆய்வகம் இருக்கக்கூடாதுனு எதுவும் இருக்கா''


பெரியவர் அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார். ரோஹிணி தனது யோசனையை சற்றும் யோசிக்காமல் பெரியவரிடம் சொன்னாள். பெரியவரும் சம்மதம் சொன்னார். நிலத்தில் ஒரு சிறுபகுதியானது ஆய்வகத்துக்கு ஒதுக்குவதாக அப்போதே அவர்களிடம் உறுதி அளித்தார். பூங்கோதைக்கும் ரோஹிணிக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ரோஹிணி யோசித்தவள் தான் அவசரப்பட்டு கேட்டதாக கூறினாள். ஆனால் பெரியவர் தான் நிதானமாகவே உறுதி அளித்ததாக கூறினார். 

(தொடரும்)

நுனிப்புல் (பாகம் 2) 23

23. பாரதியின் குறிக்கோள்

பாரதியும் கிருத்திகாவும் மிகவும் சிறப்பாக படித்து வந்தார்கள். வருட இறுதித் தேர்வு சிறப்பாக எழுதினார்கள். இம்முறைத் தேர்வு விடுமுறையில் பாரதி வழக்கம்போல நலகாப்பகம் ஒன்றில் வேலைக்கு இணைந்துவிட்டாள். கிருத்திகா கவிதைகளையும், கதைகளையும் எழுதுவதில் ஈடுபாடு கொண்டாள். பாரதி தனது மரபியல் மருத்துவத்தில் உள்ள ஈடுபாட்டினை முறைப்படி கொண்டு செல்ல அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தாள். 

அவள் குறிப்பிலிருந்து ஒரு டி என் ஏ உருவாக எந்த மூலக்கூறுகள் அவசியம் என்பதை வரைந்து வைத்து இருந்தாள். ஆனால் அது குறித்து குறிப்புகளை எழுதாமல் வெறும் மூலக்கூறுகளை மட்டும் வரைந்து இருந்தது புரியாமலிருந்தது. 

அன்று மாலையில் கிருத்திகா பாரதி வரைந்து வைத்து இருந்த மூலக்கூறுகளைப் பார்த்து விட்டவள் காட்டுமாறு கேட்டாள். பாரதி காட்ட மறுத்துவிட்டாள். ஆனால் கிருத்திகா கட்டாயம் காட்ட வேண்டும் என சொன்னதும் மறுக்கமுடியாமல் காட்டினாள். 






படத்தைப் பார்த்த கிருத்திகா விளக்கம் சொல்லுமாறு கேட்டாள். அதற்கு பாரதி நீ படித்ததுதானே, அதுவும் இது விடுமுறை, எனக்கு காலையில் இருந்து வேலை செய்தது சோர்வாக இருக்கிறது, பிறகு சொல்கிறேன் என சமாளித்தாள். ஆனால் கிருத்திகா சொல்லித்தான் தீர வேண்டும் என கட்டாயப்படுத்தினாள். ஆனால் பாரதி ஒரு வாரம் கழித்து நிச்சயம் முழு விபரங்களும் எழுதியபிறகு சொல்வதாக கூறியதும் பாரதி ஓய்வெடுக்கட்டும் என சுந்தரன் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்ல ஆரம்பித்தாள் கிருத்திகா. பாரதி கேட்கும் மனநிலையில் இல்லாதவளாய் வாசனைப் பற்றிய நினைவுகள் வந்து போயின. பெரியவர் செடி கொண்டு வந்த விசயம் முதற்கொண்டு மொட்டு வந்திருப்பதுவரை பாரதியிடம் சொல்லியிருந்தார். சிலநாட்கள் குளத்தூர் சென்று வந்தால் என்ன என பாரதிக்கு மனதில் தோன்றியது. பாரதியின் கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை உணர்ந்த கிருத்திகா அமைதியானாள். பின்னர் கிருத்திகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவள் பாரதிக்காக ஆரஞ்சு சாறினை எடுத்துச் சென்று தந்தாள். பாரதி புன்முறுவலிட்டாள். 

நீ எல்லாம் எழுதனப்பறம் எனக்கு விளக்கமா சொல்லனும் என சொல்லிவிட்டு கிருத்திகா பாரதியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாள். பாரதி குளத்தூர் செல்வதென முடிவெடுத்தாள். அன்று இரவே அம்மாவிடமும் அப்பாவிடமும் அனுமதி கேட்டவள் தான் வேலைப் பார்க்கும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டும் அனுமதி பெற்றுக்கொள்வது என முடிவுடன் நிம்மதியாக உறங்கினாள். இதமான காற்று மேலும் இதமாக வீசத் தொடங்கியது.

அதிகாலை எழுந்த பாரதி வேலைக்குத் தயாரானாள். அவளது வேலையிடத்துக்குச் சென்றதும் அங்கே மேலாளாரிடம் தனக்கு நான்கு நாட்கள் விடுமுறை வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மேலாளர் 

''தாராளமா போய்ட்டு வாம்மா, நீங்க இங்க வந்து வேலைப் பார்க்குறதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, இப்ப எல்லாம் சமூக நல நோக்கத்தோட வாழறவங்க ரொம்பவே குறைஞ்சிப் போய்ட்டாங்க, அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்குறதுக்கே நேரம் போதறதில்லை. அவங்களையும் குறை சொல்ல முடியாது, அவங்க எடுத்துக்கிட்ட வாழ்க்கை அப்படி, நீங்க கிடைக்கிற நேரத்திலும் விடுமுறையிலும் இங்கு வந்து எங்களுக்கு உதவியா இருக்கறது மனசுக்கு நிறைவா இருக்கும்மா''

என சொல்லியதும் பாரதிக்கு சந்தோசமாகவும் அதேவேளையில் கவலையாகவும் இருந்தது. தன்னலம் கருதாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அனைவருமே தன்னலம் கருதாமல் இருந்துவிட்டால் பொதுநலத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடத்தான் கூடுமோ என நினைத்துக்கொண்டாள். மதிய வேளையில் அங்கிருந்து கிளம்பினாள். 

வீட்டில் வந்து தனக்குத் தேவையான துணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். மரபியல் பாடம் கண்ணுக்கு முன்னால் சுற்றியது. குளத்தூருக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மரபியல் பற்றி எழுத ஆரம்பித்தாள். 

அடினைன் மற்றும் குவானைன் எனப்படும் மூலக்கூறுகளானது புயூரின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறிலிருந்து இருந்து உருவானதாகும். சைட்டோசின் மற்றும் தைமின் எனப்படும் மூலக்கூறுகளானது பிரிமிடின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறில் இருந்து உருவானதாகும்.

என எழுதி வைத்துவிட்டு புயூரின் மற்றும் பிரிமிடின் படங்களை வரைந்தாள். பின்னர் எழுதத் தொடங்கினாள்.



இந்த புயூரின் வகை மூலக்கூறுதான் நாம் அருந்தும் தேநீரிலும் காஃபியிலும் உள்ள கஃபின் எனப்படும் மூலக்கூறாகும். மேலும் சாந்தின், தியோபுரோமின் இந்த புயூரின் வகையில் உள்ளடங்கும். நியூக்ளிக் அமிலங்கள் உருவாக மூலமாக அடினைன், குவானைன், தைமின் சைட்டோசின் மற்றும் யுராசில் மூலக்கூறுகளே பெருமளவு பங்கு வகிக்கின்றன. 

இந்த புயூரின் அல்லது பிரிமிடின் மூலக்கூறுகளுடன் ரிபோஸ் அல்லது டி-ஆக்ஸ்ரிபோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இனிப்பானது இணையும்போது நியூக்ளியோசைடு உருவாகிறது. புயூரின் அல்லது பிரிமிடினுடன் இணைந்த கார்போஹைட்ரேட்டுடன் ஒரு பாஸ்போரிக் அமிலம் இணையும் போது நியூக்ளியோடைடு உருவாகிறது. இப்படி பல நியூக்ளியோடைடுகள் இணையும்போது டி என் ஏ அல்லது ஆர் என் ஏ உருவாகிறது. டி என் ஏ வில் அடினைன் தைமின் குவானைன் சைட்டோசினும், டி ஆக்ஸ்ரிபோஸும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது. ஆர் என் ஏ வில் தைமின் பதில் யுராசிலும், டி ஆக்ஸிரிபோஸ் பதிலாக ரிபோஸும் உள்ளது. டி என் ஏ வில் அடினைன் தைமினுடனும் குவானைன் சைட்டோசினும் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் அமைந்து உள்ளது. 


தன்னுடன் இருந்த புத்தகங்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டாள். தான் எழுதிய விபரங்களை தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் சென்று தான் மாலையில் குளத்தூர் செல்வதாக கூறியதாகவும், கிருத்திகாவும் தானும் உடன் வருவதாக சொன்னாள். பாரதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாரதியின் பதிலை எதிர்பார்க்காமல் தனது தாயிடம் சென்று அனுமதி கேட்டாள். தமிழரசி அனுமதி தந்தார். தந்தையும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. பாரதிக்கு மறுக்க இயலாமல் போனது அதே வேளையில் மிகவும் சந்தோசமாக இருந்தது. பாரதியுடன் கிருத்திகா செல்வது குறித்து பாரதி வீட்டில் சந்தோசப்பட்டார்கள். அன்று இரவே பேருந்து ஒன்றில் குளத்தூர் கிளம்பினார்கள். கிருத்திகா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். 


வழிநெடுக உறங்காமல் கிருத்திகா பேசிக்கொண்டே வந்தாள். பாரதியும் பதில் சொல்லிக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்தாள். காலையில் மதுரையை வந்தடைந்தார்கள். மதுரையில் நாணல்கோட்டை செல்லும் பேருந்துக்கு அருகில் வ்ந்தார்கள். அந்த பேருந்தில் சன்னல் ஓரத்தில் மாதவி அமர்ந்து இருப்பதை கண்டாள். முன்புறமாக ஏறாமல் பின்புறமாக ஏறினார்கள். ஆனால் திடீரென திரும்பிப் பார்த்த மாதவி பாரதியைப் பார்த்து 'பாரதி' என கண்கள் மலர்ந்தாள். தேவகியும் திரும்பி பாரதியை பாரதி என்றாள். அவர்களின் அருகில் இருந்த இருக்கையில் இவர்கள் அமர்ந்தார்கள்.


கிருத்திகாவுக்கு மாதவியையும் தேவகியையும் பாரதி அறிமுகம் செய்தாள். பேருந்து கிளம்பியது. மாதவி அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்தாள். மதிய வேளை பேருந்தில் குளத்தூர் வந்தடைந்தார்கள். பாரதியின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார் பெரியவர். வாசன் பெருமாள் கோவிலில் இருந்து மந்தையை அப்போது வந்தடைந்தான். பேருந்தில் இருந்து இவர்களுடன் பலர் இறங்கினார்கள். 


அவர்தான் பெரியப்பா, அதோ அதுதான் வாசன் என பாரதி கிருத்திகாவிடம் சொன்னாள். வாசன் பெரியவருடன் சேர்ந்து அவர்களை வரவேற்றான். பாரதியும் கிருத்திகாவும் பெரியவர் வீட்டிற்குச் சென்றார்கள். மாதவி தனது வீட்டிற்குச் சென்றாள். தேவகி வாசனுடன் நடந்தாள். 'பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கியா, என்ன இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்திட்டீங்க' என்றான் வாசன். 'ம் நல்லா எழுதி இருக்கோம், அடுத்த பேருந்துல கிளம்பிருவோம்ணே' என்றாள் தேவகி. 'பெட்டி கனமா இருக்கே' என்றான் வாசன். 'இந்த விடுமுறைக்கு இங்கதான் இருக்கப்போறோம்ணே' என தேவகி சொன்னதும் வாசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


(தொடரும்)


Thursday 4 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 22

22. நெகாதம் செடி 

வாசன் பூங்கோதையிடம் உண்மையைச் சொல்வதென முடிவெடுத்தான். பூங்கோதையும் ஆவலுடன் அமர்ந்தாள். பின்னர் என்ன நினைத்தானோ, பூங்கோதையிடம் சில மாதங்கள் பின்னர் சொல்கிறேன் என சொன்னதும் பூங்கோதை பிடிவாதமாக இப்பொழுதே சொல்ல வேண்டும் என சொன்னாள். வாசன் திருமால் வந்த விபரங்கள், பெருமாள் தாத்தாவின் விருப்பம், விஷ்ணுப்பிரியனின் முயற்சி என எல்லாம் சொல்லி முடித்தான். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பூங்கோதை வாசனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.

''
அண்ணா, இரண்டு குழந்தைகளுமே பையனா பொறந்துட்டா அதுல யாரு பெருமாள் தாத்தானு எப்படி கண்டுபிடிக்கிறது?''

''
டி என் ஏ வைச்சி கண்டுபிடிச்சிரலாம்''

''
ஆனா எனக்கு யாரு பெருமாள் தாத்தானு தெரிய வேணாம்''

''
இரண்டுமே பையனா பொறந்தது போல பேசறீங்க பூங்கோதை''

''
பையனாத்தான் பொறப்பாங்க''

''
அதுதான் சொன்னேன் கொஞ்சநாள் பொறுத்து இருங்க, உங்களுக்கு இரட்டைக்குழந்தையானு தெரிஞ்சிக்கலாம், அவசரப்பட வேண்டாமே''

''
இரட்டைக் குழந்தைதான் அண்ணா''

வாசன் பூங்கோதையின் நம்பிக்கையைக் கண்டு வியந்தான். பூங்கோதையிடம் விஷ்ணுப்பிரியன் முதன்முதலில் பெருமாள் தாத்தாவை வைக்கவில்லை என சொன்னபோது என்ன நினைத்தாள் எனக் கேட்டபோது பூங்கோதை மெல்லியதாய் சிரித்துக்கொண்டே நம்மை அவர் ஏமாத்த முடியுமா அண்ணா என சொன்னபோது வாசன் ஒருநிமிடம் என்ன பூங்கோதை சொன்னாள் என யூகிக்க முடியாமல் திருப்பிச் சொல்லச் சொன்னான். பூங்கோதை திருப்பிச் சொன்னதையே சொன்னாள்.

''
அப்படின்னா உங்களுக்கு முன்னமே தெரியுமா?''

''
தெரியாது அண்ணா''

''
ஏன் அப்படி சொன்னீங்க இப்போ''

''
ஒரு விசயம் நடக்கனும்னா அது நடந்தே தீரும்ண்ணா, அந்த பகவான் நினைச்சிட்டா யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுண்ணா''

''
பகவான் எந்த பகவான்?''

''
நாராயணன்''

''
நாம செஞ்சாத்தானே''

''
நாம செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தன்னால உருவாகும்ண்ணா''

''
தன்னால எப்படி உருவாகும், நாம உருவாக்குறதுதான்''

''
அப்படினு நீங்க நினைக்கிறீங்கண்ணா, ஆனா எல்லாம் அந்த நாராயணன் தான் நடத்தி வைக்கிறார்''

''
பூங்கோதை நீங்க சொல்றது எல்லாம் நம்பறமாதிரி இல்லை''

''
நம்ப வேண்டாம்ண்ணா, நீங்க நாராயணனை நம்பித்தானே செடி எடுக்க வந்தீங்க''

''
இல்லை, பெரியவரை நம்பி வந்தேன்''

''
அவர் நாராயணனை நம்பி வந்தார், நீங்க நாராயணனை நம்பாம வந்திருக்கீங்க''

''
அதனால''

''
உங்களால மலை அடிவாரத்துக்கு மட்டும் தான் போக முடியுது''

''
யார் சொன்னா?''

''
என் மாமா சொன்னார்''

''
அதுக்கும் நாராயணனுக்கும் சம்பந்தம் இல்லை, நான் பெரியவரால மேல எப்படி ஏறி வரமுடியும்னு ஏதாவது பேசிட்டு வந்துருவேன், நாளைக்கு மலையில ஏறுவேன் அவரை கீழ நிற்கச் சொல்லிட்டு''

''
அவர் கீழ நிற்கமாட்டாருண்ணா, நான் வேணும்னா அங்க வந்து நிற்கவா''

''
வேண்டாம் பூங்கோதை, நீங்க என்ன அர்த்தத்தோட பேசறீங்கனு புரியலை''

''
அண்ணா நம்பிக்கையோட செயல்படுங்கண்ணா, நடக்காத விசயத்தைக் கூட நடக்க வைச்சிரலாம்''

வாசன் அமைதியானான். நாராயணனை நம்புவது என்றால் எப்படி நம்புவது? எங்கே இருக்கிறான் நாராயணன்? உடம்பில் நிறுத்த முடியாத நாராயணனை எப்படி உணர்வது? அகிலத்துக்கெல்லாம் ஒரே நாராயணன்? அவரவரின் தேவைக்கு ஏற்ப மாறிப்போன நாராயணன்? இல்லாமல் கூடப் போன நாராயணன்? வாசனின் யோசனையை பூங்கோதை கலைத்தாள்.

''
நீங்கதான் அண்ணா நாராயணன்''

''
மாதவி சொன்னாளா?''

''
இல்லை அண்ணா, நானே சொன்னேன்''

''
பூங்கோதை, நான் வாசன் மட்டுமே''

''
உங்களுக்குள் இருக்கும் நாராயணனை நீங்கள் உணருங்கள் அண்ணா, காலம் தாழ்த்த வேண்டாம்''

''
எனக்குப் பழக்கமில்லை, தேவையுமில்லை''

''
ம்ம் சரி அண்ணா, நான் நாளை உங்களுடன் மலைக்கு வருவேன்''

பூங்கோதை சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனாள். வாசன் நோட்டினை எடுத்தான். செடி கண்ணுக்கு நன்றாகவே தெரிந்தது. 

அதிகாலையில் எழுந்ததும் பூங்கோதை மலைக்குச் செல்வதற்குத் தயாரானாள். கேசவனிடம் இரவே தனது விருப்பம் குறித்துச் சொல்லி இருந்தாள். கிழமை ஞாயிறு எனினும் கேசவன் தான் வழக்கம்போல பார்த்தசாரதியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தமானான். பார்த்தசாரதிக்கு கேசவனின் ஆர்வமும் உழைப்பும் மனமகிழ்வைத் தந்தது. 

வாசன் பெரியவருடன் இன்றைய திட்டம் குறித்து பேசலானான். ஒரு செடியை பாதுகாக்க, விதையினை பாதுகாக்க என்னவெல்லாம் வேண்டும் என்பதை தான் எடுத்து வைத்திருப்பதாக கூறினான். பெரியவரும் கவனமாகக் கேட்டுக்கொண்டார். வாசன் தனது விருப்பப்படி பெரியவர் மலை அடிவாரத்திலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். பெரியவரும் சிரித்துக்கொண்டே சரியென சம்மதம் சொன்னார். 

காலையிலே சாப்பிட்டுவிட்டு வாசனும் பெரியவரும் கிளம்பினார்கள். பூங்கோதையும் உடன் கிளம்பினாள். பெரியவருக்கு பூங்கோதை வருவதை தடை சொல்ல விருப்பமில்லை. மலைப்பகுதியை அடைந்தார்கள். வாசன் தனது நோட்டினை எடுத்து திசைகள் எல்லாம் மிகவும் கவனத்துடன் குறித்துக்கொண்டான். 

‘’
அய்யா, நான் மலை மேல ஏறிப் போறேன்’’

‘’
ம்ம்’’

‘’
நீங்க நான் வரவரைக்கும் இங்கேயே இருங்க அய்யா, பூங்கோதை நீங்க நேரமாச்சுன்னா வீட்டுக்குப் போங்க’’

‘’
நாங்களும் அங்க இங்க தேடிப் பார்க்கிறோம், நீ எங்களுக்கு முன்னரே வந்துட்டா இங்க வந்து இரு தம்பி’’

‘’
ம்ம் சரி ஐயா’’

தாங்கள் நிற்கும் இடத்தினை மூவரும் குறித்துக்கொண்டார்கள். மீண்டும் அங்கேயே சந்திப்பது என முடிவு செய்து வாசன் தண்ணீர், உணவு, பை எல்லாம் எடுத்துக்கொண்டு மலையின் மேல் ஏறத் தொடங்கினான். மரங்களும் செடிகளும் அடர்ந்து இருந்தது. பாதையென்று எதுவும் மனிதர்களால் போடப்படவில்லை. தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு ஏறத் தொடங்கினான். சில தூரம் வந்ததும் சற்று நேரம் நின்றான். தண்ணீர் குடித்துக் கொண்டான். நோட்டினை எடுத்துப் பார்த்தான். இன்னும் சற்று தொலைவில் சென்றால் செடி தென்படலாம் என ஏறினான். 

சின்ன சின்ன பூச்சிகள், புழுக்கள் எல்லாம் இலையில் தஞ்சம் கொண்டிருந்தன. மழை விழுந்திருந்ததால் தரையெல்லாம் ஈரமாக இருந்தது. வாசன் மலையின் ஓரிடத்தில் திகைத்து நின்றான். நிறைய தொலைவு ஏறிவிட்டதுபோல் உணர்ந்தான். நெகாதம் செடியை தேடினான். சில செடிகள் நெகாதம் செடி போலவே கண்ணுக்குப் பட்டது. ஆனால் அவை நெகாதம் செடிகளில்லை என்பதை உறுதி செய்தான். மரமாக வளரமுடியாமல் செடியாக முடங்கிப்போவதன் அவசியம் என்ன? தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். 

வித்தியாசமான ஓசைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. மனிதர்கள் இங்கெல்லாம் வருவதில்லை என்பதுபோல் வெட்டப்படாத மரங்கள்! வாசன் வேறு திசையில் மேலும் ஏறத் தொடங்கினான். நேரம் வெகுவேகமாக கடந்தது. மாலைப் பொழுது வந்து சேர்ந்தது.

சற்று தொலைவு சென்றதும் குளுகுளுவென அடிக்கும் காற்றில், மர இடைவெளியில் மெல்லிய கதிர்களை பாய்ச்சும் சூரிய ஒளியில் சில செடிகளின் மேல் அப்படியே அமர்ந்தான். தனது உடலில் ஒருவித புத்துணர்வை ஏற்படுவதை உணர்ந்த வாசன் எழுந்தான். தான் அமர்ந்து இருந்த செடிகளில் ஒரு செடியை உற்று நோக்கினான். நோட்டினை எடுத்தான். நோட்டில் வரையப்பட்ட செடியையும் தான் நேரில் பார்த்த செடியையும் பார்த்தான். எல்லாம் மிகச்சரியாக இருந்தது. ஒரே ஒரு செடி?! சுற்றியுள்ள செடிகள் எல்லாம் வேறு விதமாக இருந்தது.

வாசன் நெகாதம் செடியை வேருடன் பறித்தான். தான் கொண்டு வந்து இருந்த பையில் செடியை பத்திரப்படுத்தினான். அந்த பகுதியிலே சுற்றி சுற்றிப் பார்த்தான். அதைப்போன்று வேறு எந்த செடியும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மேலும் மேலே நடந்தான். ஒரு சிறு பகுதியில் நெகாதம் செடிக் கூட்டமாக இருந்தது. அருகிலே சென்று பார்த்தான். 

தான் வைத்து இருந்த செடியுடன் அந்த செடிகளை ஒப்பிட்டுப் பார்த்தான். ஒரேமாதிரியாகவே இருந்தது. செடிகளை எண்ணினான். நாற்பத்தி இரண்டு செடிகள் மட்டுமே இருந்தது. எல்லா செடிகளுமே ஒரே வயதுடையவை போன்றே காணப்பட்டது. எந்த ஒரு செடியிலும் மலர்களோ, காய்களோ இல்லாதது வாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அனைத்துச் செடிகளையும் வேர்களுடன் பறித்தான். அங்கிருந்த மண்ணை பல பிரிவுகளாகத் தோண்டி சில பைகளில் போட்டுக்கொண்டு குறித்துக்கொண்டான். இருள் சூழத் தொடங்கியது. வாசன் கீழிறங்கத் தொடங்கினான். வெகுவேகமாக இறங்கினான். 

பெரியவர் மட்டும் அதே இடத்தில் கல்லில் அமர்ந்து இருந்தார். பெரியவரின் கையில் ஒரே ஒரு செடி மட்டும் இருந்தது. வாசன் செடிகளுடன் பெரியவரை உற்சாகத்துடன் சந்தித்தான். பூங்கோதை சென்றுவிட்டதை அறிந்தான். பெரியவரிடம் வாசன் தான் சேகரித்த செடிகளையும் மண்ணையும் காட்டினான். பெரியவர் வைத்திருந்த செடியும் வாசன் கொண்டு வந்த செடிகளும் ஒரே மாதிரியாக இருந்தது. வாசன் ஆச்சரியமாகப் பெரியவரைப் பார்த்தான். பூங்கோதையுடன் தான் மலையின் ஒரு பகுதிக்குச் சென்றதாகவும், சிறிது தொலைவு மலையின் மேல் ஏறிச்சென்று பூங்கோதைப் பறித்துக்கொண்டு வந்ததாக பெரியவர் சொன்னதும் வாசன் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என சொன்னான். ஆனால் பெரியவர் இரவாகிவிட்டதால் வேண்டாம் என வாசனுடன் வீடு திரும்பினார். எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் எப்படி பூங்கோதை பறித்துக்கொண்டு வந்தாள் என வாசன் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டான். 
(தொடரும்)

Monday 1 November 2010

நுனிப்புல் பாகம் 2 (21)

21. ஆணும் பெண்ணும்

நாட்கள் நகரத் தொடங்கின. தினமும் காலையில் மலையடிவாரத்திற்குச் செல்வதும் மலையின் மேல் ஏறிச் செல்லாமல் அங்கே கீழேயே அமர்ந்து பேசுவதுமாக பெரியவருக்கும் வாசனுக்கும் நாட்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் வாசனுக்கு ஏதாவது அறிவுரை ஒன்றை சொல்வதை கடமையாக்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 

மழையில் நனைந்த நோட்டினை வாசன் இப்பொழுதெல்லாம் எடுத்து வருவதில்லை. பெரியவர் தன்னுடன் எந்த நோட்டையும் கொண்டு வருவதில்லை. வாசனுக்கு அம்மா அப்பாவின் ஞாபகமும் ஊரின் ஞாபகமும் வந்திருந்தது. எப்பொழுது செடி கிடைக்கும், விதை கிடைக்கும் என வாசன் பரபரப்புடன் இருந்தாலும் பெரியவர் மிகவும் நிதானமாகவே காணப்பட்டார். 

அன்றைய தினம் வழக்கம்போல மாலையில் பார்த்தசாரதியின் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். வந்தவுடன் நேராக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வாசன் சென்றுவிடுவது வழக்கம். சிறிது நேரம் அனைவருடன் பேசினாலும் அவரவர் வேலை என இருப்பதால் வாசனின் நேரம் பெரியவருடனே கழிந்தது. 

அன்று வாசன் விஷ்ணுப்பிரியனைச் சந்திக்கச் சென்றான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் நலம் விசாரித்தார். சுபாவும் வரவேற்றார். வாசன் நேரடியாகவேக் கேட்டான். 

''
எப்படி குளோனிங் எல்லாம் பண்றது?''

''
இப்ப பண்றதில்லை''

''
எப்படி பண்ணினீங்க''

''
சிரமமான காரியமாத்தான் இருந்தது, ஆண்டாள் மேல பாரத்தைப் போட்டு பண்ணிட்டேன்''

''
பையனாகவே இருக்குமா குழந்தை''

''
ஆமாம்''

''
பொண்ணாக மாறிச்சினா''

''
அப்படியெல்லாம் மாறாது''

''
அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க''

''
குளோனிங்கல் எந்த நியூக்ளியஸை வைக்கிறோமோ அதோ நியூக்ளியஸ் தன்மையுள்ள குழந்தைதான் பிறக்கும், இப்போ பெருமாளோட நியூக்ளியஸ் பெருமாளாவே பிறக்கும்''

''
பூங்கோதை?''

''
பூங்கோதை கருவைச் சுமக்கிற தாய், அவங்க நியூக்ளியஸ் இதுல இல்லை, ஆமா நியூக்ளியஸ் எல்லாம் தெரியுமா வாசன் உங்களுக்கு, எந்த குழந்தை பிறக்கும்னு தெரியுமா?''

''
ஜனவரி மாசம் கருத்தரிச்சா ஆண் குழந்தைப் பிறக்கும்னு ஐதீகம் தெரியும்''

வாசன் சொன்னதைக் கேட்டதும் விஷ்ணுப்பிரியன் சத்தம் போட்டு சிரித்தார். வாசன் தொடர்ந்தான். விஷ்ணுப்பிரியனின் சிரிப்பொலி கேட்டு சுபா என்னவென சமையல் அறையில் இருந்து வந்தார். 

''
கருவாகி நிற்கிறவங்க கையை வயித்துக்கு மேலே வைச்சா அது பொண்ணு, வயித்துக்கு கீழே வைச்சா அது ஆணு அப்படிங்கிற பாட்டிக் கதையும் தெரியும்''

விஷ்ணுப்பிரியன் தொடர்ந்து சிரித்தார். சுபா வாசன் சொன்னதைக் கேட்டு புன்முறுவலிட்டுக் கொண்டவாறே சமையலைறைக்குள் சென்றார். வாசன் நிறுத்தினான். 

''
வாசன், நீங்க இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை'' 

விஷ்ணுப்பிரியன் சிரித்துக்கொண்டே சொன்னார். வாசன் தலையை குனிந்து கொண்டான். விஷ்ணுப்பிரியன் படம் எடுத்து காண்பித்தார். ஒவ்வொன்றாக விளக்கினார். 

''இதோ பாருங்க வாசன், செல்கள் பொதுவா மைட்டாசிஸ் அப்படிங்கிற முறையில இரண்டாப் பிரியும். அப்படிப் பிரியறப்போ இரண்டா இணைஞ்சிருக்க குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டாப் பிரியும். இப்படி இரண்டாப் பிரியற குரோம்சோம்கள் தனக்கு தனக்குனு ஒரு புது குரோம்சோம்களை உருவாக்கிக்கிரும், இப்போ அந்த குரோம்சோம்கள் ஒவ்வொரு துருவத்துக்கும் போகும். செல் பக்கவாட்டில பெரிசாகி நடுவுல பிரியறப்போ ஒரு புது குரோம்சோம்கள் புதுசா உருவாகின இரண்டு செல்லுக்கும் கிடைச்சிரும். இப்படி உருவாகிறதுதான் நம்ம உடம்புல நடக்கிறது. ஆனா விந்து செல்லும், அண்ட செல்லும் உருவாகிற விதமே தனி. இந்த இரண்டு செல்லுக்கும் அது அதுக்கு ஒரே ஒரு குரோம்சோம்தான் இருக்கும். இந்த செல் பிரிவை மியாசிஸ் அப்படினு சொல்வாங்க.






இப்போ ஒரு செல்லிலிருந்து பிரியற குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டு செல்லுக்குப் போய் நிற்கும். குரோம்சோம்கள் எக்ஸ் ஒய் வடிவுல இருக்கும். ஆணுக்கு எக்ஸ் ஒய் குரோம்சோம்கள். பெண்ணுக்கு எக்ஸ் எக்ஸ் குரோம்சோம்கள். இப்படி நாலு குரோம்சோம்கள் தனித்தனியா இருக்கும். இப்போ ஆணோட எக்ஸ் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது பெண்ணாப் பிறக்கும், ஆணோட ஒய் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது ஆணாப் பிறக்கும் புரியுதா வாசன்?''

''பெருமாள் தாத்தா எப்படி பெருமாள் தாத்தாவாவே வருவார்?''

''
நான் வைச்சது பெருமாள் நியூக்ளியஸ் மட்டும்தான், இது உடல் செல்லிருந்து எடுத்தது அதனால எக்ஸ் தனியாகவோ, ஒய் தனியாகாவோ நான் பிரிச்சி வைக்கலை அப்படியேதான் வைச்சேன்''


படங்கள் : நன்றி கூகிள் 

''
எனக்கு எதுவுமேப் புரியலை, இந்த படத்தில் இருக்கிறத தமிழ்படுத்தினா நல்லா இருக்குமே''

''
உனக்கு ஜெனிடிக்ஸ் பத்தி முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும், தினமும் ஒன்பது மணிக்கு இங்க வா, ஒரு மணிநேரம் சொல்லித்தரேன்''

''அதெல்லாம் வேண்டாம். 
பூங்கோதைக்கும் கேசவனுக்கும் பெருமாள் தாத்தா இல்லாம வேற பிறக்கப்போற குழந்தை என்ன குழந்தையா இருக்கும்னு நினைக்கிறீங்க?''

''
பெண் குழந்தையாப் பிறக்கனும்னு ஆண்டாளை வேண்டிக்கிறேன்''

''
ஏன்?, நீங்க வேண்டிகிட்டா மட்டும் அப்படி பிறந்துரமா?''

''
சக்திக்கு அண்ணனாக வருவதுதானே பெருமாளுக்கு அழகு''

"அப்படி நடக்காது"

"நல்லாவே ஜோசியம் சொல்றோம் வாசன்"

விஷ்ணுப்பிரியன் சொல்லக் கேட்டதும் வாசனுக்கு தலை விண்ணென்று வலித்தது. குரோம்சோம்கள் மனதை குழப்பம் அடையச் செய்து இருந்தது. வாசன் தலைவலிப்பதாக கூறிவிட்டு ஹார்லிக்ஸ் அருந்திவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றான். உனக்கு எதுவுமே தெரியாதா வாசன் என அவனுக்குள் யாரோ கேள்வி கேட்பது போல் இருந்தது. 

அந்த இரவே பெரியவரிடம் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தைச் சொன்னான் வாசன். பெரியவர் புரிந்ததுபோல் சிரித்தார். வாசன் புரியாமல் பெரியவரிடம் அவன் சொன்னது புரிந்ததா எனக் கேட்டான். பெரியவர் இதை நிர்ணயிப்பவன் யார் எனத் தெரியுமா எனக் கேட்டார். வாசனுக்கு பேசாமல் தூங்கலாம் என இருந்தது. இதோடு பெரியவர் ஒவ்வொரு நாளும் கேட்ட கேள்விக்குத் தெரியாது என பதில் சொல்லியே பழகிக் கொண்டான் வாசன். பெரியவர் இன்றைய தேடலும் இன்றோடு முடிந்தது என்றார்.

மறுநாள் காலையில் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பூங்கோதை வீட்டிலே இருந்தாள். சாப்பிட வந்த வாசனிடம் பேச வேண்டும் என சொன்னாள். பெரியவர் இன்று மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சொன்னார். சிலநாட்கள் முன்னரே சொல்வதாக சொன்ன வாசனிடம் பூங்கோதை மீண்டும் திருமால் வந்திருந்தபோது என்ன நடந்தது எனக் கேட்டாள். வாசன் அதிர்ந்தான். 

(
தொடரும்)