Thursday 4 October 2012

நட்சத்திர பதிவர் இல்லாமல் தவிக்கும் தமிழ்மணம்

சார், உங்க பிள்ளைகள் மீது எத்தனை அக்கறை வைத்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? என்றே ராஜ் வீட்டின் உள்ளே வந்தார் ராம்.

அமருங்கள், வந்ததும் வராதுமாக என்ன கேள்வி இது. என்ன விசயம்? என்றே கேட்டார் ராஜ்.

'நேற்று தற்செயலாக உங்களிடம் பேசியபோது, உங்கள் பிள்ளைகள் எப்படி வேண்டுமெனில் இருக்கட்டும் என்று பேசினீர்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. மேற்கொண்டு அதுகுறித்து நான் பேச வேண்டும் என சொன்ன போது வீட்டிற்கு வாருங்கள் பேசலாம், இப்போது நேரமில்லை என சொல்லிவிட்டு சென்றுவிட்டீர்கள். எனக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லை. அதுதான் அவசர அவசரமாக உங்களைத் தேடி வந்துவிட்டேன்''

''அவர்களின் சுதந்திரம் தான் நமது சுதந்திரம். அவர்கள் சுயமாக எல்லாம் தெரிந்து கொண்டு போராடி வளரட்டும், அப்போதுதான் வாழ்வின் அர்த்தம் புரியும் என்ற கோணத்தில் தான் நான் அவ்வாறு சொன்னேன்''

''ஒரு நல்ல பாதையை நாம் தான் காட்ட வேண்டும், அந்த பொறுப்பு எல்லா பெற்றோர்களுக்கும் உள்ளது. பிள்ளைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டாத பெற்றோர்களால்தான் பெரும்பாலான பிள்ளைகள் தடம் மாறி போய்விடுகின்றன''

''அப்படி எப்படி நீங்கள் சொல்லலாம்? எனது பிள்ளைகள் அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்''

''உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகளின் விசயத்தில் எப்படி?, ஆமாம் மனைவி, பிள்ளைகள் எங்கே?''

''அவள்  கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள் , ஆனால் முழு கண்டிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. மனைவி அவளது தோழி வீட்டிற்கு சென்று இருக்கிறாள். பையனும், பொண்ணும் அவர்கள் நண்பர்களோடு விளையாட சென்று இருப்பார்கள்''

''உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் எல்லாம், அதுவும் பள்ளிகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற விசயங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் தலையிடுவது உண்டா?''

''அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நிறைய அலுவல்கள் உண்டு, அவளுக்கும் நிறைய அலுவல்கள் உண்டு''

''இதைத்தான் சொல்கிறேன், பிள்ளைகளின் மீதான அக்கறை என்பது மிகவும் குறைவு. எல்லா பிள்ளைகளும் கேட்டுப் போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இப்போதெல்லாம் இ மெயில், பேஸ்புக், டிவிட்டர் என சோசியல் நெட்வொர்க் என பெருகிக் கொண்டே போகிறது. இதில் அவர்கள் ஈடுபாடு கொண்டு தங்களது வாழ்வில் அக்கறை செலுத்தாமல் போகலாம்''

''நீங்கள் எதற்கு இப்படி என்னை பயமுறுத்துகிறீர்கள்? நானோ அவர்கள் மிகவும் நேர்மையாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்றே இருக்கிறேன். இதை எல்லாம் எனக்கு சொல்ல நீங்கள் யார் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது''

''எதிர்கால சந்ததியினர், எதிர்கால சந்ததியினர் என சொல்லி நமது சந்ததியினர் பொறுப்பின்மையுடன்  நடந்து கொண்டால் எப்படி எதிர்கால சந்ததியினர் முன்னேற இயலும். எதற்கும் நான் அடுத்த வாரம் வருகிறேன். உங்கள் பையன், பெண் இருவரது பள்ளி நடவடிக்கைகள், உங்களிடம் உண்மை பேசுகிறார்களா, எப்படி நடந்து கொள்கிறார்கள் என அறிந்து எனக்கு சொல்லுங்கள். நான் இதுகுறித்து கட்டுரை எழுதி தமிழ் திரட்டி ஒன்றில் இணைக்க வேண்டும். அந்த திரட்டி நட்சத்திர பதிவர் இன்றி திணறிக் கொண்டு இருக்கிறது''

'' சரி சொல்கிறேன், வந்த உங்களுக்கு ஒரு காபி கூட தரவில்லை''

''பரவாயில்லை, அடுத்த முறை எனக்கு விருந்து வைத்துவிடுங்கள்''

ஒரு வாரம் ஒரு வினாடியில் கழிந்து போனது. ராம் ராஜுவை ஒரு பூங்காவில் சந்திக்க வேண்டும் என பிரியப்பட்டு அழைக்கிறார். ராஜ் சம்மதம் தெரிவித்து வருகிறார்.

''நீங்கள் சொன்னது சரிதான், என் பிள்ளைகள் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த ஒரு வாரத்தில் ஊர்ஜிதம் செய்து கொண்டேன்''

''இதற்குதான் உங்களை நான் பூங்காவிற்கு வர சொன்னேன். வீட்டில் வைத்து பேச இயலாது. சரி, தெரிந்ததும் என்ன செய்தீர்கள்''

''காட்டு கத்தல் கத்தினேன். இரண்டு அறை கூட அறைந்துவிட்டேன். இனிமேல் இப்படி நடக்கமாட்டோம் என அழுதார்கள்''

''சரியாகி விடும் என நினைக்கிறீர்களா''

''ஆமாம்''

''இதுதான் பொறுப்பின்மை. அது எப்படி ஒரு நாளில் சரியாகும். நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். பிள்ளைகள் இனி சாமர்த்தியமாக நடந்து கொள்ளப் பார்ப்பார்கள். உங்களுக்கு இதமான விசயங்களை மட்டுமே சொல்லி உங்களை மேலும் ஏமாற்றப் பார்ப்பார்கள். வயது நிலை அப்படி, அவர்களின் பழக்கங்கள் அப்படி. நிதானமாக மாற்றப் பாருங்கள்''

''கவனமாக இருக்கப் பார்க்கிறேன்''

''நீங்கள் உங்கள் பிள்ளைகளின் குருநாதர். உங்களைப் பார்த்தே உங்கள் பிள்ளைகள் வளரும். சரி போனால் போகட்டும், பாவம் என்றெல்லாம் இருக்காதீர்கள். அதிக கண்டிப்பும் அவசியமற்றது. விசயங்களை மிகவும் தெளிவாக பேசுங்கள். என்ன சொல்கிறீர்களோ அதன்போல நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்று சொல்லி, நீங்கள் வேறு விதமாக நடந்தால் உங்கள் பிள்ளைகள் நம்ம பெற்றோர்களே இப்படி என இறுமாப்பு கொள்வார்கள்''

''விருந்து ஒன்று ஏற்பாடு செய்கிறேன்''

''அதெல்லாம் வேண்டாம். ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது அதுவே போதும்''

''எனது கண்களைத் திறந்து விட்டீர்கள்''

''தயவு செய்து ஒருபோதும் மூடிவிடாதீர்கள்''. 

5 comments:

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள அருமையான பதிவு
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

வவ்வால் said...

ரா.கி,

கொக்கு தலையில் வெண்ணை, அப்படின்னு ஒரு கதை நான் எழுதலாமான்னு பார்க்கிறேன் :-))

--------

திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை உங்களுது :-))

பகிர்வுக்கு,நன்றி,தொடருங்கள்.

த.ம.2012

Radhakrishnan said...

நன்றி கந்தசாமி ஐயா.

நன்றி ரமணி ஐயா.

நன்றி வவ்வால். நீங்க கொக்கு தலையில் வெண்ணை கதை எழுதினா, நான் காக்கா உட்கார பனம்பழம் கதை எழுதுறேன்.